நயங்கள்- ராகவேந்திரன்

கொரானா கால சந்திப்புகள் – 2

அகநானூறுபாடல் 84- நயங்கள்

இஸ்தான்புல் காட்சியகத்தில் நூற்றுக்கணக்கான சுட்ட களிமண் பலகைகள் உள்ளன. அவற்றில் ஒரு பலகையில் உலகின் முதலில் எழுதியதாகச் சொல்லப்படும் கவிதை  உள்ளது. ஸு ஷின் என்னும் அரசனை அவன் திருமணம் நடைபெறும் நாளில் மணமகள் பாடியது. என்று சுமேரிய மொழி வல்லுனர்கள் தவிர யாருக்குமே அதன் மொழி புரியாது. இதே போல தொன்மை எகிப்து மொழியையும் சொல்லலாம். 

ஆனால் கி மு 150 வாக்கில் எழுதப்பட்ட சங்க இலக்கியப் பாடல்களை பெரிய சிரமங்கள் இல்லாமல் நம்மால் படித்துப் புரிந்து கொள்ளப் படுகிறது. தொடர்ச்சியாக அறுபடாமல் வரும் இந்த மரபுக்கு அகம்  – புறம் என வாழ்வை வகுத்துக் கொண்டதையும் அகத்திணை குடும்பம் என்னும் சமுதாயத்தின் அடிப்படை அலகை வலுப்படுத்தியதையும் நாம் காரணமாகக் கொள்ளலாம்.

 ஏகேராமானுஜன் சங்கப் பாடல்கள் மொழிபெயர்ப்பு  நூலுக்கு “The Interior Landscape” என்று பெயரிட்டுள்ளார்.  சங்கப் பாடல்கள் ஆழமான மனித உள்ளத்தின்  அசைவுகளையும் ஆடல்களையும் விரிந்த இயற்கைப் பின்புலத்தில் வைக்கின்றன.  மக்கள் தொகையும் புழங்கு பொருட்களும்  குறைவாக இருந்த காலம். மனிதன்  அன்றாடம் காண்பது பெரும் நிலப்பரப்புகள் தான். அழகிய மலை, காட்டுக் காட்சிகளும் அவை உருவாக்கும் மனநிலைகளும் இந்தப் பரப்பில் நிரம்பி இருக்கின்றன. . எனவே குறிஞ்சியும் முல்லையும் தான் புற அழகில் நம்மைக் கொள்ளை கொள்ளும் திணைகளாக உள்ளன. 

மலையும் மரமும் இல்லாத பாலைத்திணை உடலும், உள்ளமும் வறண்ட துயரைப் பாடுகிறது. நெய்தலில் கடலினுக்குள் செல்லும் வாழ்வு பேசப்படுவதில்லை. (புலவரைக் கலத்திலேற்றி அனுப்புவது யார்?). மருதம், வயல் சார்ந்தது.

வேளாண்மையில் தன்னிறைவு பெற்றவுடன்  பொருளியல் நிலைத்தன்மை கொண்டு விடுகிறது சமூகத்தில் ஒழுக்கக் கேடும் வந்து விடுகிறது. தலைவி , எதையும் தாங்குவாள், ஆனால் தலைவனின் கூடா ஒழுக்கத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டாள்.  ; ஊடல் நிமித்தம்  உள்ளே வருகிறது.  ஆனால் சமூகத்தின் ஒரு சிறு பகுதியே இந்தச் சிக்கலில் மாட்டி இருக்கவேண்டும். மருதத் திணைப் பாடல்கள்  மிகவும் குறைவானவை என்பதை வைத்து இந்தக் கருத்துக்கு வருகிறார் பேராசிரியர் அ ச ஞாநசம்பந்தன். ஒப்புநோக்க மலைகள் பொதிந்த குறிஞ்சியும் அடர் காடுகளைக் காட்டும் முல்லையும் அதிகம் இயற்கையுடன் ஒட்டியும் அதிகம் இனிமையான மனநிலையையும் அளிக்கின்றன. 

இயற்கை வளம் நம் முன்னோருக்கு சிந்தனை வளத்தைக் கொடுத்து விட்டிருக்கிறது.  . 2000 ஆண்டுகளுக்கு முன் உலகின்  வரலாற்று வரைபடத்தைப் பார்த்தால் பெரும்பகுதி கற்கால மற்றும் வேட்டைச் சமுதாயமாக இருந்திருக்கிறது. வெகு சில இடங்களிலேயே நெறிகள் கொண்ட வாழ்க்கை நிகழ்கிறது. அதிலும் மிகக் குறைவான மக்கள் தொகை.    விரிந்தெழுந்தாக வேண்டும் மானுடத் தொகை. அதற்கு அறம் சார் இல்வாழ்வு அவசியத் தேவை.

அகம் புறம்  என மனித வாழ்வைப் பிரித்துக் கொண்டு ஆண்- பெண் வாழ்வியல் நெறிகளை வகுத்துக் கொண்டதே  தமிழ்ச் சமூகமும் மொழியும் அழியாது தொடர்வதன் ஒரு காரணம் என்று அ ச ஞானசம்பந்தன் கூறுகிறார்.  புறத்திணைகளுக்கு ஒதுக்கியதை விட அதிகப் பாடல்களும் நூல்களும் அகத்திணைக்கு வழங்கப் பட்டுள்ளன. 

குடும்பம்  சமூகத்தின் அடிப்படை அலகு. அதை நடத்துபவர்களின் அன்புதான் வாழ்க்கை இயந்திரத்தின் உயவுப்பொருளாக இருக்கிறது. தமக்குள் நிறைவாழ்வும் இன்பமும் அடைந்த பெற்றோரே நல்மக்கட்பேறும் விருந்தோம்பலும் சமூக நலமும் கொண்டு விளங்க முடிகிறது.

சங்கப் பாடல்கள் மூலம் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நோக்கக் கூடிய ஒரு தொலை நோக்கி கிடைத்திருக்கிறது. அது அளிக்கும்  காட்சி தெளிவானது. ஆனால் மிகக் குறைவான நேரம் ஓடுவது. வாழ்வின் உணர்ச்சி உச்சங்களை  மட்டும் சாறு பிழிந்து உலர வைத்து , மாறாத மணத்துடன் காலம் கடந்து காட்டும் தைலப்புட்டிகளே இப்பாடல்கள். 

இந்தப் புட்டிகளில் அகநானூறு 84ஆம் பாடலை எழுதி இருப்பவர் மதுரை எழுத்தாளன் என்னும் புலவர். சங்க இலக்கியம் கிறக்கம் தருவதன் முக்கியக் காரணம் அவற்றின் முழுச் சூழலையும் ஆழத்தையும் அறிய முடியாமையும் ஆகும்.  

இந்தப் பாடலையே எடுத்துக் கொள்வோம். மதுரை என்றால் குமரிக்கோடு  ஒட்டி இருந்த கடல் கொண்ட தென் மதுரையா அல்லது தற்போதைய மதுரையா? எழுத்தாளன் என்பது தனிப் புலவரின் பெயரா அல்லது ஒரு குலக்குழுவின் பெயரா? கேரளத்தில் பின்னாளில் துலங்கிய எழுத்தச்சன் போல ஓர் ஆசிரியர் குலம் இங்கே இருந்ததா ? இவை போன்ற வினாக்கள் நம் மனதை விட்டு நீங்காது. அதனால் அவர் பெயரில் இருக்கும் ஒரே ஒரு பாடலும் நிலைத்திருக்கும். 

ஒரு கோட்டை இருக்கிறது.  மண்ணும் சுண்ணமும் சேர்ந்து செய்திருக்கவேண்டும். அதை முற்றுகை இட்டு வென்று விட்டான் பாண்டியமன்னன். அவன் கழுத்தில் வேப்பம்பூ மாலை. தோற்று விட்ட நிலத்தின் தலைவன் கப்பமும் கொடுக்கத் தயார்.  . 

ஆனாலும் மன்னனுக்கு  ஏதோ நிறைவில்லை. வெற்றி பெற்ற பிறகு வரும் வெறுமையா? அல்லது வெற்றி பெற்ற விதம் வேறு வடிவில் இருந்திருக்க வேண்டுமா? எதிர்பார்த்த உச்சம் வருவதற்குள் போர் முடிந்து விட்டதா? ஏனோ தெரியவில்லை. சினத்தில் சிறந்து பாசறையிலேயே தங்கி விட்டான். அவனுடன் வந்த சிறுகுடித் தலைவன் தான் இந்தப் பாடலின் தலைவன். 

மழைக்காலம் தொடங்கும் போது வந்து விடுகிறேன் என்று தன் மனைவியிடம் வாக்குக் கொடுத்து விட்டு வந்துள்ளான். இல்லத்தைக் காத்து, விருந்தினரையும் அருளி காத்துக் கொண்டிருப்பாள். அவளுக்கு செய்தி சொல்ல ஒரு தூதனைப் பிடிக்கிறான். தூதனுக்கு செய்தியும் , முகவரியும் , மனநிலையும் சரியாகக் கடத்தவேண்டும்.

அவள் யார்? ஒளிவீசும் நெற்றியை உடையவள் (எவ்வளவு தெளிவான அடையாளம் ! )

முகவரி;

நெருப்பு போன்ற கண்களை உடைய பன்றி ஒன்று. ,நுண்ணிய மணல் செறிந்த புழுதியில் உறங்கிக் கொண்டிருக்கும். அதன் முதுகு மறையும்படி முல்லை மலர்கள் விழுந்து மூடி இருக்கும். அத்தகைய காட்டின் வெளியே இருக்கும் சீரான  ஊர். 

அவள் அங்கே. 

நான் (தலைவன் ) இருக்கும் இடமெது?:  கோட்டைக்கு வெளியே அறுவடை முடிந்து விட்டது. சுமை தூக்கிகள் பெரிய நெல் கட்டுகளைத் தூக்கிக் கொண்டு செல்கிறார்கள். அவர்கள் மது அருந்தி இருக்கிறார்கள். நெல் கட்டுகளுடன் தாமரை போன்ற  மலர்த்தண்டுகளும் சேர்த்துக் கட்டி இருக்கிறார்கள். நான் இங்கே. 

இங்கே காட்சி எப்படி?: 

மலையின் உச்சியில் வானவில் உட்கார்ந்திருக்கிறது. முரசு போல இடிக்கிறது மேகம். கடல் நீரைக் குடித்துப் பெருத்து தாழ்வாக ஊர்ந்து பூமியை வளைத்துக் கொண்டு  திசைகள் மறையும்படிப் பெய்கிறது மழை.  இப்படியாக அழகிய முல்லை நிலத்தில் மாரிக்காலம் வந்துவிட்டது. 

தூதுவன் போய்ச் சொல்லி இருப்பான். மன்னனும் ஒரு சலிப்பான கணத்தில் முற்றுகையை முடித்திருப்பான். தலைவனும் விரைவான தேரில் பறந்து வீட்டிற்கு வந்திருப்பான். அய்யனும் ஆச்சியும் மகிழ்ந்து, மக்கட்செல்வம் நிறைந்து, விருந்தோம்பி ,இனியவை கூறி  , தீவினை அஞ்சி ஒப்பரவறிந்து , புகழீட்டி, மூத்து, நிலம் நீங்கி இருப்பார்கள். அந்த மன்னனும், தூதனும் இதை எழுதிய எழுத்தாளனும் இன்று இயற்கையுடன் தனிமங்களாகக் கலந்து விட்டிருப்பார்கள். அவர்கள் நடந்த நிலமும் , ஊர்ந்த தேரும் , உருக்கிய பொன்னும் உருமாறி விட்டிருக்கும்.  

இறவாத இந்தப் பாடல் இரண்டாயிரம் ஆண்டுகளாக உருவாக்கி வரும் அழகு எண்ண எண்ணப் பொலிந்து கொண்டிருக்கும். வாசிக்குந்தோறும் காட்சிகள் கோர்த்துத் தெளிந்து கொண்டே போகும். இந்த அனுபவமும் மொழியும் இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் எந்த மொழிக்கும் அல்லது சமுதாயத்திற்கும் கிடைக்காதது. 

குறிப்புப் பொருள்

ஒரு செய்தியைச் சொல்வதற்கு கவிதை வேண்டாம். ஒலை நறுக்கு போதும். வரிகளைக் கவிதையாக்குவது அதில் எது நேரடியாகச் சொல்லப்படாததோ அது தான். இப்பாடல் உருவாக்கும் மனநிலையும் குறிப்புப் பொருளும் அழகானவை. குறிப்பால் உணர்த்துவது மொழியின் ஆழத்தையும் பழக்கத்தையும் பொருத்தது. 

‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்ற தொல்காப்பியர் சூத்திரத்தில் ‘ குறித்தனவே’ என்பதே கவனிக்கவேண்டியது. சொற்கள் பொருளைக் குறிக்கத் தான் முடியும். ஒரு சொல் தான் குறிக்கும் பொருளிற்கான பிரதி மட்டுமே. அதன் சூழல், மன அமைப்பு, நோக்கம் மாறுவதற்கேற்ப, அது தரும் காட்சியும்  மாறிக்கொண்டிருக்கும். 

இறைச்சிப் பொருள், உள்ளுறை உவமம் என்னும் அழகுகள் அகத்துறையின் சிறப்பு. இந்தப் பாடலில் இரண்டு உள்ளுறை உவமங்கள் வருகின்றன. 

முதலில் தலைவியின் ஊரில் உள்ள காட்சி. 

முல்லை மலர்கள் வெண்மையும் நறுமணமும் கொண்டவை. இது தலைவியின் குணம் குன்றா மணவாழ்வைக் குறிக்கிறது. முல்லைப்பூக்கள்  விழுவதால் சேற்றுமணலில் உறங்கிக் கொண்டிருக்கும் பன்றி மறைக்கப் பட்டு விடுகிறது. இங்கே பருப்பொருள் ஒப்பீட்டிலும் மன ஓட்டத்திலும் ஒரு முரண் காண்பிக்கப் படுகிறது. பன்றியும் உறக்கமும்  தமோகுணத்தின் அடையாளம். முல்லையின் வெண்மை, மென்மை, நறுமணம் சத்வ குணத்தைக் குறிக்கின்றன. 

ஆழ்ந்துறங்கும் பன்றி அறியாது தன்மீது விழுந்த மலரின் சிறப்பை. மூர்க்கத்தால் போர் புரியும் மன்னன் அறியமாட்டான் தலைவன் தலைவியிடம் நிலவும் மெல்லியல்பை என்று விரித்தால் ஒரு ‘mindscape’ கிடைக்கிறது. 

இன்னொரு ஒப்பீட்டில், ஒளி பொருந்திய நெற்றியின் புற அமைதி கொந்தளிக்கும் மனத்தை மூடி இருக்கிறது, பன்றியை மூடிய முல்லையைப் போல. 

ஒண்ணுதல் என்ற ஒரு சொல் மட்டுமே அவளைப் பற்றிக் குறிக்கப் படுகிறது. 

நறுவீ முல்லை நாண்மலர் உதிர்வது ஒரு கரிய காட்டில் நடக்கும் கனவை எழுப்புகிறது. மலர்களில் பல நிலைகள் உள்ளன. அரும்பு , முகை, போது, வீ, செம்மல்.  வீ என்பது முதிர்ந்த , உதிரப்போகும் மலர்.  

இன்னுமொரு உள்ளுறை வயலில் காணப்படுகிறது. நெற்கதிர்களை அடுக்கிக் கட்டும்போது , நிறைய செந்தாமரைத் தண்டுகளும் பிற மலர்க்காம்புகளும் சேர்ந்து கட்டப் படுகின்றன. உழவர் நெல் அறுவடையில் இருக்கிறார்கள். இது வயிற்றுப்பாடு சேர்ந்தது. அதனால் உணவாகும் (நெல்) பூக்களே இங்கு முக்கியம். இதயத்தின் உணர்வுகளுக்கான இடமில்லை இது. தானியங்களுடன்  அழகுப் பூக்களும் சேர்ந்து கட்டப் படுகின்றன. 

மலர் பிறழ வாங்கிக் கட்டுவது மலர்தொடுப்பது போல இருக்காது. மாலையில் உட்கார்ந்து சிரிக்க வேண்டிய தாமரை சுமையைக் கட்டித் துன்பமடைகிறது. மலரின் துயர் வாளுக்குத் தெரியாது. முற்றுகையிட்டிருக்கும் மன்னனுக்குத் தெரியாது தன் தளபதியும் அவள் மனையாட்டியும் படும் துயர். 

உலக வாழ்வில் வெளியில் நடக்கும் சம்பவங்கள் மனதினுள் நடக்கும் பெரும் நாடகத்தின் ஒரு துளியே. உள்ளே நடப்பதே அடிப்படை விசைகள். ஆணவமே போரென்றும் காமமென்றும் வெளிப்படுகிறது. மலரின் முனையிலும் வாளின் ஒளியிலும் திகழ்கிறது. காமமும் ஒரு போரின்றி வேறென்ன? போரின் பெரும்பகுதி வெளியிலா நடக்கிறது?

எல்லாக் காலங்களிலும் மாறாத அடிப்படை உணர்வுகளை மென்மையான மணத்தில் நிறைத்துத் தந்துள்ளது இந்த அகநானூற்றுப் பாடல். 

மலைமிசைக் குலைஇய உறுகெழு திருவில்
பணைமுழங் கெழிலி பெளவம் வாங்கித்
தாழ்பெயற் பெருநீர் வலனேர்பு வளைஇ
மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர
இருநிலங் கவினிய ஏமுறு காலை         5
நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி
அயிர்க்கண் படாஅர்த் துஞ்சுபுறம் புதைய
நறுவீ முல்லை நாண்மலர் உதிரும்
புறவடைந் திருந்த அருமுனை இயவில்
சீறூ ரோளே ஒண்ணுதல் யாமே         10
எரிபுரை பன்மலர் பிறழ வாங்கி
அரிஞர் யாத்த அலங்குதலைப் பெருஞ்சூடு
கள்ளார் வினைஞர் களந்தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடிநுடங் காரெயில்
அருந்திறை கொடுப்பவுங் கொள்ளான் சினஞ்சிறந்து         15
வினைவயிற் பெயர்க்குந் தானைப்
புனைதார் வேந்தன் பாசறை யேமே.
        —- மதுரை எழுத்தாளன்.

ஒள் நுதல்- ஒள்ளிய நெற்றியினையுடைய நங் காதலியானவள்; மலைமிசை குலைஇய உருகெழு திருவில் பணை முழங்கு எழிலி – மலையின் உச்சியில் வளைந்துள்ள நிறம் பொருந்திய இந்திரவில்லையும் முரசம் போன்ற முழக்கத்தையும் உடைய; முகில்; பௌவம் வாங்கி தாழ்பெயல் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ- கடலின்கண் நீரைப் பருகித் தாழ்ந்து பெய்தற்குரிய மிக்க நீரோடு வானத்தின்கண் வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுச்சியுற்று உலகத்தை வளைத்துக்கொண்டு; மாதிரம் புதைப்பப் பொழிதலின் – திசைகள் மறையும்படி மழையைச் சொரிதலாலே; காண்வர இருநிலம் ஏம் உறு காலை- இனிய காட்சியுண்டாகும்படி கவினிய பெரிய முல்லைநிலத்தில் வாழ்வோர் இன்பம் எய்துதற்குக் காரணமான கார்ப்பருவத்திலே; நெருப் பின் அன்ன சிறுகண் பன்றி அயிர்க்கண் படாஅர் துஞ்சுபுறம் புதைய நறுவீ முல்லை நாள்மலர் உதிரும் – நெருப்புப்போன்ற சிறிய கண்களையுடைய பன்றியானது நுண்ணிய மணலின்கண்ணுள்ள சிறிய தூற்றிலே உறங்குகின்ற பொழுது அதன் முதுகு மறைந்து போகும்படி நறுமணங்கமழும் மலர்களையுடைய முல்லையினது புதிய மலர்கள் உதிருகின்ற; புறவு அடைந்திருந்த அருமுனை இயவில் சீறூரோள் – காடு சார்ந்திருக்கும் அரிய முனை களையுடைய வழியிலுள்ள சிறிய ஊரினிடத்தே பிரிவாற்றாது பெரிதும் வருந்தி இருப்பாளாக; என்க.

(வி-ம்) குலைஇய- வளைந்த. உரு- நிறம். திருவில்- வானவில். (இந்திரவில்) பணை- முரசு -பணைபோல முழங்கும் எழிலி என்க. பெயல்- பெய்தல் தொழில். ஏர்பு- எழுச்சியுற்று. மாதிரம் -திசை. எழிலி வாங்கி ஏர்பு வளைஇப் புதைப்பப் பொழிதலின் என்க. காண்- காட்சி. ஏம்- ஏமம் என்பதன் விகாரம். அயிர்- நுண்மணல். படாஅர்- சிறு தூறு. துஞ்சுபுறம் புதைய- துஞ்சுங்கால் அதன் முதுகு மறைய என்க. புறவு- முல்லைப்பரப்பு. இயவு- வழி.

10-17: யாமே…..பாசறையேமே.

(இ-ள்) யாமே- அவளைக் கைவிட்டு வந்த வன்கண்மையையுடைய யாம் இப்பொழுது; எரிபுரை பல் மலர் பிறழ வாங்கி அரிஞர் யாத்த அலங்கு தலைப்பெருஞ்சூடு- தீப்பிழம்பையொத்த செந்தாமரை முதலிய பல்வேறு மலர்களும் தலைமாறும்படி அள்ளி நெல் அரிகின்ற உழவர் கட்டிய அசைகின்ற தலையையுடைய பெரிய கதிர்க்கட்டுகளை; கள்ஆர் வினைஞர் களந்தொறும் மறுகும்-கள்ளைக்குடித்த தொழிலாளர்கள் சுமந்துகொண்டு களந்தோறும் செல்லுதற்கிடனான ; தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் அருந்திறை கொடுப்பவும் கொள்ளான்- மருதநிலம் சூழ்ந்த வெற்றிக்கொடி அசைகின்ற மதிலமைந்த இந்த ஊராகிய கொடுத்தற்கரிய திறைப்பொருளைப் பகை மன்னர்கள் வணங்கிக் கொடுப்பவும் ஏற்றுக்கொள்ளானாய்; சினம் சிறந்து வினைவயின் பெயர்க்கும் தானைபுனைதார் வேந்தன்- வெகுளிமிக்குப் பின்னரும் போர்த் தொழிலின்கண் செலுத்தப்படுகின்ற சேனைகளையும் அணிந்த வாகைமாலையினையும் உடைய நம்மரசனது; பாசறையேம்- பாசறை இடத்து அவளை நினைந்து வருந்தி இருக்கின்றேம், அவள் நிலை என்னையோ? என்பதாம்

சூடு- கதிர்க்கட்டு. வினைஞர் என்றது கூலிக்கு வேலைசெய்பவரை. தண்ணடை- மருதநிலம். மருதநிலம் சூழ்ந்த தமது அரண்மனையையே பகைவர் திறையாகக் கொடுப்பவும் கொள்ளான் என்றது, அரசனது மிகையாய மறப்பண்பினைக் குறைகூறி தன்னுள் நொந்துரைத்தவாறு. அவள் நிலை என்னையோ என்பது குறிப்பு.

நன்றி: மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்

https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0490_02.html

பாட்டில் நெக்! – செல்வேந்திரன்

கொரானா கால சந்திப்புகள் – 2

திட்டமிட்டபடி ஏப்ரல் 26 அன்று இரண்டாவது ஸ்கைப் சந்திப்பு. விவாதத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சிறுகதை – ஹூலியோஸ் கொத்தசாரின் ‘தெற்கு நெடுஞ்சாலை’. செல்வாவின் தேர்வு இது. இக்கதையை முன்வைத்து செல்வா ஒரு அறிமுக உரை வழங்கினார். அதை தொடர்ந்து மிக விரிவான விவாதம் நண்பர்களால் முன்னெடுக்கப்பட்டது. அகநானூற்று பாடலொன்றை ராகவேந்திரன் தேர்வு செய்து மிகச் செறிவான உரை ஒன்றை நிகழ்த்தினார். சுஷீல் நரனின் நவீன கவிதைகள் இரண்டின் மீது தன் வாசிப்பு கோணத்தைப் பகிர்ந்தார்.

செல்வேந்திரனின் உரை:

பாட்டில் நெக்! – செல்வேந்திரன்

ஹூலியோ கொர்த்தசார் எழுதிய The Southern Thruway (1967) எனும் சிறுகதை தமிழில் எம்.எஸ் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. All fires the fire தொகுப்பில் இடம்பெற்றிருந்த கதை. தெற்கு பிரான்ஸிலிருந்து பாரிஸூக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் – ஆறு வரிசைகளாக வாகனங்கள் நகருமளவிற்கு அகலமுள்ள சாலை – ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் பல்லாயிரக்கணக்கான கார்கள் சிக்கிக்கொள்கின்றன. 

விதம் விதமான கார்களில் விதம் விதமான மனிதர்கள். ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களுக்காகப் பாரிஸூக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். ஒரு காரில் காத்திருக்கும் எஞ்சீனியரின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. காத்திருப்பு நாட்கணக்காக நீடிக்கிறது. பருவ காலங்கள் மாறுகின்றன. நெருக்கடி மானுட அகத்திலும் புறத்திலும் உருவாக்கும் மாற்றங்கள் நுட்பமாகச் சித்தரிக்கப்படுகின்றன. புதிய உறவுகள் தழைக்கின்றன. ஒரு தற்கொலை நிகழ்கிறது. ஒருவர் நோயுற்று மடிகிறார். காதல் உருவாகிறது. கலவி நடக்கிறது. புதிய வாழ்க்கையின் கனவுகள் கொப்பளிக்கின்றன. சிறுவர்கள் வினோதமாக நடந்துகொள்கிறார்கள். புதுப்புது வதந்திகள் காற்றில் அலை போல கிளம்பி வந்துகொண்டே இருக்கிறது. 

ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் பொருட்டு குழுக்கள் அமைக்கப்படுகின்றன. தலைமை உருவாகிறது. ஒரு தற்காலிக சமுதாயம் உருப்பெற்று எழுதுகிறது. தனக்கென்று எதுவும் தக்கவைத்துக்கொள்ளாத சமதர்ம சமுதாயம். குழந்தைகள், பெரியவர்கள், விவசாயிகள், விற்பனையாளர்கள், மருத்துவர், ராணுவ வீரன், பொறியாளன் என அனைத்து சாம்பிள்களும் கொண்ட ஒரு சமுதாயம். ஆனால், மெல்ல குழுக்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்கின்றன. அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கப்படுகின்றன. அநியாய விலைக்கு விற்கப்படுகின்றன. பதுக்குபவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். தாக்கப்படுகிறார்கள். எங்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. அருகிலிருக்கும் கிராமத்து விவசாயிகள் உதவ மறுக்கிறார்கள். காரிலும் சாலையிலும் படுத்துறங்குகிறார்கள். சில நாட்களுக்குப் பின் நிலைமை சீரடைந்ததும் அவரவர் கார்களுக்குப் பாய்ந்தேறி திசைக்கொன்றாய் பறக்கிறார்கள். பந்தயம் போல பாய்கிறார்கள். உறவுகளும் கனவுகளும் சிதறுகின்றன. அதுகாறும் அவர்களைப் பிணைத்த சாலை இப்போது அனைத்தையும் தனித்தனித் துளிகளாக்குகிறது. மானுடம் எப்போதும் தற்காலிகமானப் பாவனைகளை உருவாக்கி பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க எத்தனிக்கிறது. மறுகணம் தன் குரூர இயல்புக்குத் திரும்புகிறது. சென்னை பெருவெள்ள நாட்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டவர்களெல்லாம் நிலைமை சீரான சின்னாட்களிலேயே அற்ப அரசியல் நிலைப்பாடுகளுக்காக ஃபேஸ்புக்கில் ரத்தவெறியுடன் அடித்துக்கொண்டதைக் கண்டிருக்கிறேன். 

ஹூலியோ கொர்த்தசார் பெல்ஜியத்தில் அர்ஜென்டினிய தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். உலகப்போருக்குப் பின் அவரது பெற்றோர்கள் அர்ஜென்டினாவிற்குத் திரும்பினார்கள். அங்கு கொர்த்தசார் புனைவிலக்கியம் பயின்று ஆசிரியராகப் பணியாற்றினார். அமெரிக்க ஐரோப்பிய எழுத்தாளர்களின் பல படைப்புகளை மொழிபெயர்த்தார். அரசியல் நிலைப்பாட்டினால் அவருக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய பதவி உயர்வுகள் மறுக்கப்பட்டன. பிரான்ஸூக்குப் பெயர்ந்தார். வாழ்வின் பெரும்பகுதி பாரீஸ் நகரில் கழித்தார். போர்ஹேஸின் புனைவுலகமும், கீட்ஸின் கவிதைகளும் இவரில் ஆதிக்கம் செலுத்தின. நூல்களுக்குக் கிடைத்த பரிசுத்தொகையை அரசியல் புரட்சிப் போராட்டங்களுக்கு அளித்தார். மிகச் சாதாரணமான கதைக்களன்களைக் கொண்டு அசாத்தியமான உணர்வெழுச்சியை உண்டாக்கும் கதைகளைப் படைத்தார். தாய்மொழியான ஸ்பானிஷ் மொழியில் படைப்புகளை எழுதினார். சர்ரிலியஸத்தின் கூறுகள் அதிகம் கொண்ட இவரது படைப்புகள் மாயா யதார்த்தவாதம் எனும் வகைமையை நெருங்கிவருபவை. பல கதைகளின் கட்டுமானத்தில் ஜாஸ் இசையின் வெளிப்பாட்டுத்தன்மையை  கைக்கொண்டுள்ளார். ஜாஸ், குத்துச்சண்டை, புகைப்படக் கலை, பயணங்கள் ஆகியவை இவரது பிறதுறை ஆர்வங்களாக இருந்தன. அசப்பில் சேகுவேராவை நினைவூட்டும் வசீகர அழகுடன் குறிப்பிடத்தக்க லத்தீன் அமெரிக்க எழுத்தாளராகத் திகழ்ந்தார். 

நூற்றுக்கணக்கான பாத்திரங்கள் உலவும் இந்தக் கதைவெளியில் எவருக்கும் பெயர் கிடையாது. அவரவர் கார் வகைமைகள் மற்றும் தொழிலின் பெயராலேயே இப்பெயரிலிகள் விளிக்கப்படுகிறார்கள். கார்கள் தனித்தனி குகைகளாக உருவகம் கொள்கின்றன. மோட்டார் தொழில்கள் உலகை வென்று கொண்டிருந்த காலகட்டத்தில் அந்தஸ்தின் அடையாளங்களாக கார்கள் வெறிகொண்டு வாங்கப்பட்டன. உரிமையாளரின் வாழ்க்கைப் பின்புலத்தைச் சுட்டுவதாக கார்கள் அமைந்தன. பற்றியிருக்கும் ஸ்டீயரிங்கின் இயல்பே மனிதர்களின் இயல்பாகவும் ஆயிற்று. 

சில ஆண்டுகளுக்கு முன் வாசித்த இச்சிறுகதை இந்தக் கொரானா நாட்களில் பல்வேறு அர்த்தங்களை அளித்துக்கொண்டே இருந்தது. அன்றாடம் கிளம்பிவரும் வதந்திகள். அரசு காப்பாற்றும் எனும் நம்பிக்கைகள். உருவாகும் புதிய விழுமியங்கள். ஒத்தாசை கூட்டணிகள். மலரும் உறவுகள். அத்தியாவசியப் பொருட்களுக்கான மோதல்கள். பதுக்கல்கள். எங்கெங்கிலும் அவநம்பிக்கைகள். காருக்குள் அடைபட்டிருப்பதைப் போன்ற காலஎல்லைகளைக் கடந்த காத்திருப்புகள். அங்கலாய்ப்புகள். மரணங்கள். 

உடலிலிருந்து கெட்ட ஆவியை வெளியேற்றுவதுப் போல கதைகளை வெளியேற்றுகிறேன் என்பது கொர்த்தசாரின் புகழ்மிக்க வாக்கியங்களுள் ஒன்று. கெட்டிக்காரத்தனமான அறிவுப்பூர்வமான கதைகளுக்கு எதிரான அங்கலாய்ப்பை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருந்தவர். எளிமையான கதைக்களத்தின் மீது அசாதாரணத்தன்மை வந்து மோதும் கதைகளில் தன் ஆழ்மனதின் கனவுத்தன்மையை கதைகளுக்குள் சுதந்திரமாக உலவவிட்டவர். கதையோட்டத்தில் எப்போதும் ஒரு லயம் நீடிக்கும். 

விதம் விதமாய் கிளம்பிவரும் வதந்திகள், தனிநபர்களுக்கு விளைபொருட்களை விற்க மறுக்கும் விவசாயிகள், காரணமின்றி கிராமங்களிலிருந்து பறந்து வந்து கார்களின் மீது விழும் கற்கள்,  தற்காலிகமான ஆம்புலன்ஸாக மாறிய வண்டியில் சிறுவர்கள் மாட்டும் செஞ்சிலுவை கொடியும், நாற்புறமும் உணர்ச்சிகள் மறைந்து வெறிகொள்ளும் தருணத்தில் செஞ்சிலுவை கொடி அபத்தமாக அசைவதும், கன்னியாஸ்திரீக்கு ஏற்படும் திடீர் சன்னதம், வாய்ஜால விற்பனைப்பிரதியாளனிடமிருந்து யுவதியை மீட்டு தன் காதலியாக்கிக்கொள்ளும் எஞ்சினீயரின் கனவுகளும், இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் காரில் ஒரு சிறுமி பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருப்பதும், பெரியவரின் தற்கொலைக் குறிப்பும் கதையின் மிக நுண்ணிய தருணங்களாக விரிவு கொள்கின்றன. டிராஃபிக் ஜாமில் காத்திருக்கும் ஒரு அமெரிக்கன் எதனுடனும் பட்டுக்கொள்வதில்லை. ஏதாகிலும் நிகழ்ந்து நிலைமை உடனே சீரானால் போதும் அவனுக்கு. 

3 நிமிடத்திற்குள் மிகச்சிறந்ததை நல்ல இசைஞன் தந்து விடவேண்டும். இலக்கியத்திற்கும் இது பொருந்தும் என்கிறார் கொர்த்தசார். கொரானாவிற்கும் இப்படி ஒரு கால எல்லை இருக்குமானால் எத்தனை நன்றாக இருக்கும்?

கொரானா கால சந்திப்புகள் – 1, செல்வேந்திரனின் பதிவு

https://selventhiran.blogspot.com/2020/04/blog-post_12.html

ஒரு புக் க்ளப் ஆரம்பிக்கலாம் எனும் யோசனையை மொழிபெயர்ப்பாளர் நரேன்தான் முதலில் சொன்னார். அமெரிக்காவில் பல காலம் வாழ்ந்தவர். அங்கே புத்தகச் சங்கங்கள் பலவற்றில் செயலூக்கத்துடன் ஈடுபட்டவர். ஜெயமோகனின் வாசக நண்பர்கள் ஏற்கனவே பாண்டிச்சேரி, சென்னை, காரைக்குடி, ஈரோடு உள்ளிட்ட பல நகரங்களில் மாதாமாதம் சந்தித்துக் கொண்டிருந்தார்கள். கோவையிலும் கூடுகைகள் நிகழலலாம் என்பது நரேனின் எண்ணமாக இருந்தது. 


 ‘கோயம்புத்தூர் புக் க்ளப்’ என்பது இந்தியாவின் புராதன வாசக அமைப்புகளுள் ஒன்று. 1966-ல் துவங்கி இன்றளவும் மாதாமாதம் முதல் ஞாயிறு அன்று சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதிகமும் ஆங்கிலத்தில் வாசிப்பவர்கள். இவை தவிர இலக்கியச் சந்திப்பு உள்ளிட்ட சில அமைப்புகளின் கூடுகைகள் மாதம் தவறாமல் நடந்துகொண்டுதானிருந்தன.
எதிலும் உடனடியாக சலித்துவிடுவது என்னுடைய இயல்பு. எம்போன்ற மண்குதிரைகளை நம்பி  ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்பட்டு விரைவில் தேய்ந்தழிந்து விடக் கூடாது என்பது என் எண்ணமாக இருந்தது. ஆனால், நண்பர்கள் தீவிரமாக இருந்தார்கள். நான் சுரா துவங்கி நடத்திய  காகங்கள் கூட்டத்தொடர் பற்றி வாசித்திருந்தேன். ஞாநியின் கேணிக்கும் அவ்வப்போது சென்றதுண்டு. ஆகவே யாரெல்லாம் உறுப்பினராக இருக்கலாம், சந்திப்பின் நோக்கம், எதை வாசிக்கப்போகிறோம், விவாதத்தின் நெறிமுறைகள், நிகழ்முறை ஆகியவற்றைப் பற்றிய நெறிகள் துல்லியமாக வகுத்துக்கொள்ளும்படி நரேனிடம் கேட்டுக்கொண்டேன்.
தமிழிலும், இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் உள்ள செவ்விலக்கிய நாவல்களை வாசிப்பது,  அவரவர் வாசிப்பை தலா பத்து நிமிடங்கள் முன் வைத்து விவாதிப்பது, படைப்பின் அத்தனை நுட்பங்களையும் கூடுமானவரை அள்ளிக்கொள்ள முயற்சிப்பது, பல்கோண வாசிப்பின் வழியாகத் தவறவிட்டவற்றை நிரப்பிக்கொள்வது என்றும் தீர்மானமாகியது. தேர்ந்தெடுக்கப்படும் நூல் முன்னரே அறிவிக்கப்படும். வாசிக்காதவர்கள் கூட்டத்திற்கு வரக்கூடாது. ஜெயமோகன் ஒருங்கிணைக்கும் கூடுகைகளுக்கென்று ஆகிவந்த விதிகளும் விழுமியங்களும் கடைப்பிடிக்கப்படவேண்டும் என முடிவாகிற்று. தத்தம் வாசிப்பை கட்டுரையாக்கி ஒரே இணையதளத்தில் தொகுப்பது பிற்காலத்தில் அந்நூல்களைப் பற்றி தேடுபவர்களுக்குப் பயனளிக்கும் என்றும் முடிவு செய்தோம். 
அதன்படி சொல்முகம் வாசகர் குழுமம் உருவாகியது. டைனமிக் நடராஜனுக்குச் சொந்தமான தோட்டம் தொண்டாமுத்தூரில் இருந்தது. அங்கே ஒரு கெஸ்ட் ஹவுஸூம் உண்டு. அங்கு சந்திப்பை நடத்திக்கொள்ள மனமுவந்தார். ஓரொரு மாதமும் இறுதி ஞாயிறென்று முடிவாகியது. காலையில் பத்து மணிக்குத் துவங்கி மதியம் ஒரு மணி வரை. கொறிக்க கடிக்க இனிய தின்பண்டங்களை ஓரொரு மாதமும் ஒருவர் பொறுப்பேற்றுக்கொள்வது. மேமாதம் நடந்த முதல் கூட்டத்தில் தொழிலதிபரும் இலக்கிய ஆர்வலருமான டி. பாலசுந்தரம் கலந்துகொண்டு உலகளவில் புக் ரீடர்ஸ் க்ளப்புகள் எங்ஙனம் செயல்படுகின்றன என துவக்க உரையாற்றினார். அதன் பிறகு, கொரானா வீடடங்கு வரை மாதம் தவறாமல் சந்திப்புகள் நிகழ்ந்து வருகின்றன. துவக்கம் முதலே 15 முதல் 25 நபர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். ராமேஸ்வரத்தில் இருந்து கூட ஒருவர் மாதாமாதம் வந்து கொண்டிருக்கிறார். 
படைப்பு உருவான சூழல், அதன் வரலாற்றுப் பின்னணி, எழுத்தாளரின் ஆளுமை மற்றும் பிற  படைப்புகள் குறித்த குறிப்புகள், இலக்கிய வகைமை, நுட்பங்கள், நுண்ணிய உள்மடிப்புகள்,  நாடகீயமான தருணங்கள், ஆன்மீகமான கேள்விகள், பாத்திர உருமாற்றம், பாத்திரங்களுக்கிடையேயான ஒப்புமைகள், நூல் முன் வைக்கும் தரிசனங்கள், விவாதிக்கும் நூலையொட்டி வாசிக்க வேண்டிய துணை நூல்கள் என ஒரு வைரக்கல்லின் அத்தனைப் பட்டைகளின் வழியாகவும் ஊடறுத்துச் செல்லும் ஒளியை உள்வாங்கிக்கொள்ளும் முயற்சி. 
இதுகாறும் புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால், ஓநாய் குலச் சின்னம், மண்ணும் மனிதரும், மதகுரு, மீசான் கற்கள், அக்னி நதி, என் பெயர் சிவப்பு, குழந்தைகள் பெண்கள் ஆண்கள் உள்ளிட்ட நாவல்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. மார்ச் மாதத்திற்கு கோரா, ஏப்ரலுக்கு கொற்றவை என முடிவு செய்திருந்தோம். கொரானாவினால் சந்திக்க இயலாமற் போய் விட்டது.  
நண்பர்கள் சந்தித்து நெடுநாட்களாகி விட்டதால் இன்று ஸ்கைப்பில் சந்தித்து உரையாடலாம் என முடிவு செய்தோம். கொரானா தினங்களில் நண்பர்கள் வாசித்த நூல்களைப் பற்றிய விவாதமாக அமைத்தோம். ஜெயமோகனின் புனைவுக்களியாட்டு கதைகள், நாஞ்சில் நாடனின் சங்கிலி பூதத்தான், சுதந்திரத்தின் நிறம், சுமித்ரா, கங்கை கொண்ட சோழ புரம், புன்னகைக்கும் பிரபஞ்சம், பின் தொடரும் நிழலின் குரல், தாய் மண் (குட் எர்த்), சம்ஸ்காரா, கதை கேட்கும் சுவர்கள், ஹிஸ்டரி ஆஃப் தி வேர்ல்டு பை சிக்ஸ் க்ளாஸஸ், ரினாய்சன்ஸ் ஆஃப் இந்தியா, வரப்புகள், நைவேத்யம், வண்ணநிலவன் கதைகள் என அவரவர் வாசித்த நூல்களைப் பற்றிய அபிப்ராயத்தை 12 பேர் விவாதித்தோம்.  ஆச்சர்யகரமாக எவ்வித இடையூறுமின்றி விவாதங்கள் துல்லியமான தொழில்நுட்பத் தரத்துடன் இணைந்திருந்தது. ஒருவர் பேசுகையில் பிறர் தங்களது வீடியோ மற்றும் ஆடியோக்களை அணைத்து வைக்கும் வழக்கம் இருந்தால் இது போல பயனுள்ள விவாதங்களை மேற்கொள்ள முடியும். 
சுராவின் காகங்கள் 77-ல் துவங்கி 83ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. மொத்தம் 88 கூட்டங்கள். ஒருவர் கட்டுரை வாசிக்க அதன் மேல் பிறர் விவாதங்களை முன்வைக்க எனும் வடிவில். பெரும்பாலான கூட்டங்களைப் பற்றி அ.கா. பெருமாள் குறிப்பெடுத்து வைத்துள்ளார். காகங்களின் கதை என அக்குறிப்புகள் நூல்வடிவம் பெற்றுள்ளன. இத்தகையச் சந்திப்புகளின் பயன்மதிப்பு என்ன என்பதை அங்கிருந்து உருவாகி வரும் மதிப்பீடுகளும், படைப்பாளிகளுமே காலத்திற்கு காட்டிச் செல்கிறார்கள். சொல் முகத்தின் முதல் கூட்டத்தில் தன் அபிப்ராயங்களைத் தயங்கித் தயங்கி முன் வைத்தவர்கள், உதிரி உதியாக சொற்களை உதித்தவர்கள் பலரும் இன்று தீவிரமாக எழுதத் துவங்கியுள்ளார்கள் என்பது மகிழ்வளிக்கக் கூடியது. 
சொல்முகம் இணையதளம்: https://solmugam.home.blog/
இலக்கியத்தில் தீவிரம் கொண்ட, கோவையைச் சேர்ந்த எவரும் சொல் முகத்தின் அங்கத்தினராக முடியும். ஆர்வம் உள்ளவர்கள் தங்களைப் பற்றிய சுய அறிமுகத்தை இந்த எண்ணிற்கு வாட்ஸாப் செய்து குழுமத்தில் இணைந்து கொள்ளலாம்: 7339055954

கொரானா கால சந்திப்புகள் – 1

மே மாதம் 2019 லிருந்து இடைவிடாது தொடர்ந்து நடந்த சொல்முகம் சந்திப்புகள் கொரானா ஊரடங்கால் மார்ச் மாதம் தடைபட்டது. மார்ச் மாத வாசிப்பாக தாகூரின் ‘கோரா’ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. கூடுகை நடக்கவிருந்த வாரம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மக்கள் வீடடங்கத் தொடங்கிய பின்னர், இதுவரை அறிந்திராத ஒரு பரபரப்பு வீடுகளுக்குள்ளிருந்து எதிரொலிக்கத் தொடங்கியது. எலெக்ட்ரானிக் மீடியாவின் வசம் மக்கள் முழுமையாய் தஞ்சம் புகுந்துக் கொண்டனர். பக்கத்து தெருவில் இருந்த நண்பனை கண்டு பேசியிராதவன் கூட ‘ஜூம் டவுன்லோடு பண்ணிட்டியா’ என்று அத்தனை பேரையும் அழைத்து தொந்தரவு செய்தான். கலையார்வங்களும் படைப்பூக்கமும் பீறிட்டு பொங்கின. இந்த இருபது நாளை முழு மூச்சாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் தவறேதும் இல்லை ஆனால் இது ஒரு வருடத்திற்கு நீடிக்கும் பட்சத்தில் தாக்கு பிடிக்க முடியுமா என்ற கேள்வி பெரும்பாலோனோர் மனதிற்குள் நுழையவில்லை. உள்ளிருந்து உள்ளுக்குள் விரிந்து செல்வதற்கு பதிலாக உரக்க கத்தி வெளியே தம் இருப்பை அறியச் செய்யும் அவசரம்தான் அதிகமானதாக தோன்றியது.

சொல்முகம் என்ற பெயர் கொண்டதாலோ என்னவோ நண்பர்கள் அனைவரும் முகம் பார்த்து பேசுவதையே விரும்பினர். ஊரடங்கு முடிவிற்கு வந்தவுடன் வழக்கம் போல சந்தித்து உரையாடலாம் என்பதே நண்பர்களின் எண்ணமாக இருந்தது. அதனால், ஏப்ரல் மாதம் – ஒரு வருடம் நிறைவு – வாசிப்பிற்காக தேர்வு செய்திருந்த ஜெயமோகனின் ‘கொற்றவை’ மற்றும் ‘கோரா’ இரண்டையும் ஒரே நாளில், ஏப்ரல் இறுதியில், கலந்துரையாடலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இருப்பினும், கொரானா செய்திகளும் செய்திகளைத் தவிர வேறெதையும் கவனிக்காத மனதும் கொஞ்சம் இறுகிப் போயிருந்தது. நட்பு கூடலாகவோ அல்ல சற்றேனும் இலக்கியம் பேசவோ இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்கைப்பின் மூலம் சந்திக்கலாம் என்று நண்பர்கள் எண்ணினர். முதல் வாரம் – ஏப்ரல் 12 அன்று நண்பர்கள் கூடி அவரவர் வாசித்தவற்றை பகிர்ந்துக் கொண்டோம். இனிய நிகழ்வாக அமைந்தது அது. இதை தொடரவேண்டும் என்று முடிவு செய்தோம். இனிவரும் சந்திப்புகளில் கலந்துரையாடுவதற்கு ஒரு சிறுகதை அல்லது குறுநாவல், ஒரு சங்கப் பாடல், ஒரு நவீன கவிதை தேர்வு செய்யப்படும். தேர்வு செய்தவர் அப்படைப்புகளின் மீது ஒரு சிற்றுரை நிகழ்த்துவார், அதன் பின் விவாதங்கள் தொடரும். இரண்டாவது ஸ்கைப் சந்திப்பு – ஏப்ரல் 26ம் தேதி.

நரேன்

மதகுரு – நாவல் – வாசிப்பனுபவம் – உமா மகேஸ்வரி

எல்லா நாவல்களுக்கும் ஒரு காட்சித் தோற்றம் கற்பனையில் விரிவதுண்டு. இந்நாவலிலோ எனக்கு சாயங்கால மங்கிய நீல வண்ணமும், இளஞ்சிவப்பு விடியலுமாக ஒரு மங்கிய இளகிய இருள் முளைக்கும் அந்தி வண்ணம் தோன்றியது. அந்திக்கே உரிய ஏக்கம், கனவு, களிவிரக்கம் என அதற்கான உணர்வுkazhum கூட.
லாங்பென் ஏரியின் அழகான, மிக நுண்ணிய விவரிப்புகளுடன் அதை சுற்றிய பண்ணைகள் என கதைக்களம் விரிகிறது.
கதை மாந்தவர்கள் நிரம்பி வழிகின்றனர். வாழ்வின் meimaiyai எதன் மூலம் அறிய முடியும். இசையால், வீரத்தால், மதத்தால், காதலால், அழகிய குடும்பத்தால், அறிவால், இவற்றின் உச்சம் தொட்டும், verumaiyal துரத்தப்படும் உல்லாசப் புருஷர்களும், காதலை தவறவிட்ட, விட்டுக் காடுத்து ஏற்க முடியாது தவிக்கும் பெண்களின் கோபம், தியாகம், கழிவிரக்கம், என தொடரும் மார்கரீட்டா, அன்னா, எலிசபெத் என முக்கிய பெண் கதை மாந்தவர்களுடன், இந்நாவல் தொடர்கிறது.


கட்டமைக்கப்பட்ட சமுதாயத்தின் அஸ்திவாரமாக இருக்கக் கூடிய மத உணர்வுகள், கலாச்சாரம் போன்றவற்றால் நசுக்கப்பட்ட உணர்வுகளுக்காக மனிதனின் முக்கியமாக பெண்களின் தரப்பில் நின்று மதக்கோட்பாடுகளையும், ஞானம், அறிவின் தேடல்கள் மூலம் கிடைக்காத வாழ்வின் மெய்மையை மனித குலத்தின் அறியாமையின், கள்ளங்கபடமற்ற அன்பின் மூலம் உல்லாச புருஷர்களான ஞானிகளிடமும் கேள்வி கேட்கிறது இந்நாவல்.
உண்மையில் வாழ்வின் சாரம் என்ன என்ற கேள்விகளுடன் முன்னகர்கிறது நாவல்.
எல்லா தேனீக்களும் திரும்பி வரவில்லை என்றாலும், இறுதி அழைப்பை எதிர்நோக்கும் ராணி தேனீக்கும் அதன் வாயிலின் உண்மைக்கும் இடையே ஆன பாதை என நீள்கிறது வாழ்வு. அதில் கலை, அறிவு, காதல், உழைப்பு, இறை என எதை வேண்டுமானாலும் இட்டு நிரப்பிக் கொள்ளலாம்….

நிற்பவர்களில் இடமிருந்து இரண்டாவதாக உமா மகேஸ்வரி

உமா மகேஸ்வரி, கோவை

மதகுரு – நாவல் – வாசிப்பனுபவம் – ராகவேந்திரன்

உதகைக்குச் சென்று திரும்பும்போதெல்லாம்  தோன்றுவது ஒன்று உண்டு. ‘இங்கேயே நிரந்தரமாகத் தங்கி இயற்கையில் குளித்துக் கொண்டே இருந்தால்  நன்று ‘ என்று; நண்பர் ஒருவர் சொன்னார் ‘எல்லோருக்கும் அங்கே தங்கி இருத்தல் இயலாது ‘ என்று. மனிதன் சமதளத்தின் சொகுசுகளுக்கு அடிமையாகி விட்டவன். குளிரை நேசிக்கும் குணச்சிறப்பு கொண்டவர்களுக்கானது உதகை ; உதகை போன்ற ஊர்கள்.

ஸெல்மா லாகர்லெவ்- வின் “கெஸ்டா பெர்லிங்” உதகையை விட பல பாகைகள் கீழே குளிரெடுக்கும் ஸ்வீடன் நாட்டின் கிராமிய வாழ்வையும் மனிதர்க்கிடையே நிலவும் குளிர்த் தருணங்களையும் பேசுகிறது.

குளிர் தேசத்திற்கென்று சில பழக்கங்களும் சில மனநிலைகளும் உண்டு. புதினம் படிக்கும் போது நமது உள்மன வெப்பமானி கீழே இறங்கிக் கொண்டே இருக்கிறது .

 கிடைக்கும் தரிசனங்கள்

மது போதை தருவது; இசையும் கவிதையும் போதையின் எல்லை.

உழைப்பின்மை வீழ்ச்சி தருவது; அதனுடன் குளிரும் சேர்ந்தால் மாறாச் சோம்பலும் உறுதியான தோல்வியும். மேலும் உட்கார்ந்திருக்கும் உடலில் காளான் வளர்ந்துவிடும்.

சூதாட்டம் நிகழும் இடத்தில் சாத்தன் களி கொள்கிறான்.

முன்னாள் போர் வீரர்களும் சாகசக் காரர்களும் ஏக்பி என்னும் தோட்ட மாளிகையில் ஓய்வுதியம் பெற்றுத் தங்குகிறார்கள். இசையும் மதுவும் ஊறி, கொண்டாட்டமே நாட்களாக கடத்துகிறார்கள். அவர்களை ஆதரிக்கும் ஏக்பி சீமாட்டி ஆற்றலின் வடிவமாக வருகிறாள். கதையின் அனைத்துப் பெண்களுமே ஆற்றல் நிறைந்தவர்கள் (உலகில் பெண் சுதந்திரத்தில் முதலிடம் பெறுவது ஸ்வீடன்)

சும்மா இருத்தலில் சுகம் கண்டு வாழ்ந்ததால், அவர்களிடையே ஒருவனில் சாத்தான் புகுந்து விடுகிறான், சின்ட்ரம் என்ற பெயரில்.

அடைக்கலம் கொடுப்பவளை விரட்டி மாளிகையின் உரிமையைப் பெற்று விடுகிறார்கள் உல்லாச புருஷர்கள். சீமாட்டி துரத்தப்படுவது ஒரு பெரும் நாடகீயக் காட்சியாக , ஒரு குளிரும் கிறிஸ்துமஸ் இரவு விருந்தின் பின் புலத்தில் நிகழ்கிறது. காவிய , புராண நாயகிகள் வீழ்த்தப் பட்ட அதே பழைய காரணம் – அலர்.

இன்றும் ஆட்சிகள் அஞ்சுவது செய்திகளுக்கு அல்ல, வதந்திகளுக்குத் தான் என்பது சமூக மனத்தின் ரகசிய செய்தித் தொடர்பின் வலிமையைக் காட்டுகிறது

‘Revellers’, ‘Bachelors’, ‘ Pensioners’ என்று மூலத்தில் அழைக்கப் படுபவர்களை

க நா சு “உல்லாச புருஷர்கள்” என்று விளிக்கிறார். அழகிய மணிப்பிரவாளம்.  புதினத்தின் மிக முக்கிய குறிப்புச் சொல் . தற்போது தூய தமிழில் ஒருவர் முயற்சி செய்தால் ஒருவேளை ‘கொண்டாடிகள்’, ‘மகிழ்நர்கள்’, ‘இன்பம் துய்ப்போர்’ என்று பெயர்க்கலாம்.

உல்லாசிகளின் தலைவன் கெஸ்டா பெர்லிங். உலகிலேயே மிகப் பலமானவன் ஆனால் (அதனாலேயே ?) மிகப் பலவீனமானவனும். தொடர்ந்து காதலிக்கிறான். தனது கேளிக்கைச் செயல்களால்  பிறரைத் துன்புறுத்துகிறான். தொடர்ந்து தியாகம் செய்கிறான்.  தனது மன மாற்றத்தால் பிறர்க்காக மானத்தையும் உயிரையும் பிணை வைக்கிறான்.

ஒவ்வொரு உல்லாசிக்கும் பின்னால் ஒரு கதை உண்டு.

வில்லியக்ரோனாவின் கதை தனித்து நிற்கிறது. தனது அழகிய வீட்டையும் மனைவி, குழந்தைகளையும் நினைத்துக் கொண்டு ஏக்பி மாளிகையை விட்டுக் கிளம்புகிறான். இசை மீட்டிக் கொண்டே வருகிறான். வீட்டைச் சுற்றிலுமுள்ள அழகிய மரங்களையும் பாத்திகளையும் (குழந்தைகள் வெட்டிய கோணலான அழகிய பாத்திகளை அடையாளம் கண்டு கொள்கிறான்) பார்க்கிறான். இசை கேட்டு சிரித்துக் கொண்டே எழும் மனைவி தனித்துயர்ந்து நிற்கிறாள். கணவனை வரவேற்கிறாள்.

 சில நாட்கள் மகிழ்ந்துவிட்டு அமைதியான ஆனந்தம் சலித்துவிடுவதால் மீண்டும் ஏக்பி மாளிகைக்குப் போய்விடுகிறான் அவன் மனைவி மீண்டும் தன் அழகிய வீட்டையும்  குழந்தைகளையும் பேணத்துவங்கி விடுகிறாள்.

கதை வளர்கையில் , கற்பனாவாதம் இலட்சியவாதமாக பரிமாணம் அடைந்து வருகிறது. முடிவு ஒரு தேவதைக் கதை போல உள்ளது. ஏக்பி சீமாட்டி மாளிகை திரும்புகிறாள், நோயுடன் மரணத்தையும் எதிர்நோக்கி.

உல்லாசிகள்  உழைக்கத் துவங்கி விட்டிருக்கிறார்கள். மாளிகையை விட்டுக் கிளம்பவும் தயாராகி விட்டார்கள். சம்மட்டியின் ஓசை கேட்டு சீமாட்டியின் உயிர் பிரிகிறது.   ஆண்டவருக்கும் சாத்தானுக்கும் இடையே மனித மனத்தில் நடக்கும் ஓயாத மற்றுமொரு போர் நிறைவுக்கு வருகிறது

எந்தத் தத்துவமும் கரைத்துவிட முடியாத தூய இயற்கையின் விரிவுக்காக, பனி நிலப் பரப்புக்காக, மதகுரு மறக்கமுடியாமல் நிற்கிறது.

பனி, நாவலில் ஒரு தொடர் படிம்ம் எனத் தோன்றுகிறது

 நீரை உள்ளே வைத்து வெளியே உறுதியாக நிற்றல், எதிர்பாராத தருணங்களில் உடைந்து, நடப்போரை விழ வைத்தல், நெடுங்காலம் காத்திருந்து கதிரின் ஒரு முதல் தொடுகையின் உடைவுக்காக தவமிருத்தல், உருகாமலேயே நேரடியாக ஆவியாகிப் போதல், அனைத்தையும் ஊடுருவி உறங்க வைத்தல் – என மனித மனத்தின் தன்மைகளுக்கு பனியின் காட்சி ஒத்து வருகிறது

ஆண்டு முழுவதும் உறங்கி முதற்கதிரில் எழும் கரடி, வில்லோப் புதர்கள், ஆஷ், செர்ரி , பர்ச், எலுமிச்சை மரங்கள், லிங்க்ஸ் புலி, ஆந்தை மற்றும், காடுகளில் இருட்டில் பூத்திருக்கும் பீதி என்ற  சூனியக்காரி – இவர்களைக் காட்சிப் படுத்தியுள்ள அழகு, நம்மை வெள்ளிப் பனிமலையில் உட்காரவைத்து விடுகிறது

கனவு காணும் வயதான (முன்னாள் போர்க்) குதிரைகள், அவற்றின் வண்டிகள், வழுக்கும் ஈல் மீன்கள் , பனிக்கட்டி உடைய வரும் வசந்தம் மூலம் ஒரு திரைப்படத்தைக் காண்கிறோம். ஒவ்வொரு வாசகனுக்குமான தனியான ஒளி  – வண்ணக் கலவைகளில்

மனத்தின் அழகுவேறுபாடுகளை தோல்வியில் கம்பீரம், சாத்தானின் சூதை வெல்லும் தியாகம், தொடர்ந்து மன்னித்தல் வழியே வழியவிட்டுள்ளார்.

கஞ்சன் என்ற பெயர் வாங்கி எல்லோராலும் வெறுக்கப் படும்  போர்பி மதகுருவுக்கு கெஸ்டா பெர்லிங் வழிகாட்டுகிறான். பஞ்சம் தீர பிரார்த்தித்து கடவுளின் ஏற்பினால் மழை வந்துவிடவே, அந்த மகிழ்ச்சியாலேயே இறந்து விடுகிறான் போர்பி மதகுரு (கெஸ்டாவும் மதகுருதான்; குடிப் பழக்கத்தால் அடித்து விரட்டப் பட்ட மதகுரு)

லோவன் போர்க் என்னும் உல்லாசி மனதிற்குள் பாடிக்கொண்டே பீதோவன் இசையை காற்றில் கைகளால் போலிப் பியானோவில் இசைக்கிறான். அது கெஸ்டாவை துயரிலிருந்து மீட்கிறது. இசை என்பது ஒலியில்லாத போது வலிமை வாய்ந்ததாக உள்ளது  இசை கருவிகளிலும் குரலிலும் இல்லை, காற்றிலும் உள்ளத்திலும் இருப்பது

தவறு செய்பவர்கள், துரத்தப் பட்டவர்கள் தரப்பு நியாயத்தைப் பேசுவதால் புதினம் சமநிலை கொள்கிறது

கனவான் ஜூலியஸ் பதினேழு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஏக்பியை விட்டுக் கிளம்புகிறான், தன் கிழத் தாயைப் பார்ப்பதற்கு . வழியில் இசையும் பூக்களும் கொண்டாடும் பெண்களை சந்திக்கிறான். அவர்களுடன் பூப்பந்து விளையாடி, மாலைகள் சூடிக்கொண்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு மாளிகைக்கு வந்து விடுகிறான்.  அவனை வழியனுப்ப பிற உல்லாசிகள் செய்யும் ஏற்பாடுகள் ஒரு நகைச்சுவை நாடகம். 

உலகமும் குடும்பமும் தன் மீது சுமத்தும் கடமைகளை எதிர்த்துப் போராடும் குழந்தைகள் ‘சமூகமயம்’ ஆக்கப் படாமலேயே வளர்ந்து விட்டால் அவர்கள் இந்த உல்லாசிகளைப் போல ஆவார்கள் என்று தோன்றுகிறது.  நம்முன்  ஒரு குழந்தை தெரிகிறது.  வாசற்படியில் அமர்ந்து கால்களுக்கிடையில் முகத்தைப் பொத்தி வைத்துள்ளது. கையில் திணிக்கப் பட்ட பற்பசை பிரஷ். முந்திய இரவு கேட்ட கதையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கனவை எரித்து விடும் உலகியல் கடமைகள் – பள்ளி, புத்தகம், குளித்தல் என குழந்தையின் கூம்புதல் ஒவ்வொரு நாளாக அதை மெலியச் செய்கின்றன. அப்படி மெலிந்த பல கோடிக் குழந்தைகளின் மொத்தக் கனவாக விரியுமிடம் கனவான் ஜூலியசின் கதை. வில்லியக்ரோனாவையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். அவன் தன் குழந்தைகளையும் விட்டுக் கிளம்பிவிடுவது அவர்கள் மீது அன்பில்லாததால் அல்ல – அவனும் ஒரு குழந்தை அவ்வளவுதான்

கடவுளின் பிரயாணி லென்னர்ட் , தான் செய்யாத தவறுக்கு தண்டனை பெறுகிறான். நண்பர்களான உல்லாசிகளின் விளையாட்டால் மனைவியால் அடையாளம் காணப்படாமல் வீட்டை விட்டுத் துரத்தப் படுகிறான். ஆனால் அந்த நிகழ்வை தெய்வ அழைப்பாக ஏற்று அன்பு, அமைதியின் தூதனாக ஆகிறான். நடமாடும் ஆண்டிகள் – பக்கிரிகளின் வாழ்வே அழகு; ஒரு சந்தையில் முரடனிடமிருந்து அப்பாவிகளைக் காப்பாற்ற உயிர்த்தியாகம் செய்கிறான்

மாமா பெர்னார்டு இறை மறுப்புப் புத்தகம் எழுதியவன். அதன் கருத்துக்கள் தன் மகள் போன்ற பெண்ணுக்கு துன்பம் தரும் என்று தெரிந்தவுடன் அதை வெளியிடாமல் பூட்டி வைத்து விடுகிறான். அறிவை அன்பு வெல்லும் இடம். உலகின் மொத்த சராசரி அறிவு குழந்தைப் பருவத்தைத் தாண்டும் போது தான் அடுத்த கட்ட , இரக்கமற்ற உண்மைக்குத் தயாராகும் போல

கெவன் ஹெல்லரின் கதை, மக்களுக்கு உதவாத அறிவு பயனற்றது என்கிறது; மேதை புதியதை பரிசோதனை செய்து கொண்டே இருக்கவேண்டியவன் என்கிறது. அவன் ஏக்பி மாளிகையைத் தீமூட்டி விடுகிறான் . ஒரு லங்கா தகன நிகழ்வு – ஏக்பி மாளிகை தமோகுணத்தின் குறியீடாக உள்ளது.

அத்தான் கிறிஸ்டோபர் பெரும் வீரன் . பல காலமாக மாளிகையின் கணப்பருகே அடைக்கலம் புகுந்து சும்மா இருப்பவன்.  அவனுக்குத் திடீரென காதல் முளைக்கிறது. தன் பழைய அங்கீகாரக் கடிதத்தை எடுத்துக் கொண்டு ஆவலுடன் வெளியேறுகிறான். சிறிது நேரத்தில் திரும்பி வந்து கடிதத்தை எரியும் ஈஸ்டர் சூனியக்காரி கொடும்பாவியில் வீசி விடுகிறான் மீண்டும் கணப்பின் அருகில் சும்மா உட்கார்ந்து விடுகிறான். துன்பியலும் நகையும் கலந்த தருணங்கள்.

பெண்ணை வைத்துச் சூதாடுவது, தீமையைக் கொளுத்தி போகி/ சொக்கப் பனை கொண்டாடுவது, மது ஊற்றி இசையைக் கிளப்புவது இவை மானுடம் முழுமைக்கும் பயின்றுவரும் சமூக – வாழ்வியல் பழக்கங்கள் – ஆதி முன்னோர்களின் ‘நாகரிகப் படுத்தப் பட்ட’ மிச்சங்கள்

சாத்தான் – கடவுள் இருமையை இந்தியத் தத்துவம் , வெகுகாலம் முன்னே ஒருங்கிணைத்து , சமன்வயப் படுத்தி, விளங்கிக் கொண்டு விட்டது.

போக நாட்டம் துயர்தருவது – அதுவே சாத்தானை விலக்கி வைக்கிறது ; சாத்தானுடைய வில்லிலும் கோடிக்கணக்கான நாண்கள்; எனவே இருமைகளை அறிந்து கடக்கும் வழியை – பொன்மயமான நடுவழியை கண்டடைந்தது.

இரண்டின்மைத் தத்துவம் இங்கே சமரசத்தை ஏற்படுத்த முயன்றது.  . நஞ்சு உண்ட பேரழகன் இங்கே நிலை கொண்டு விட்டான். வறுமையும் வளமையும் , துய்த்தலும் துறத்தலும் ஒரே நிறையில் நிகழ்ந்து விட்டன. குறிஞ்சித்திணையும் காஞ்சித்திணையும் ஒருங்கே பாடப் பெற்றன.

‘கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண் தொடி கண்ணே உள “ என்ற காமத்துப்பால் குறளும் (1101)

“அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்

வேண்டிய எல்லாம் ஒருங்கு” என்ற துறவறவியல் குறளும் (343) ஒரே நூலில் உள்ளன

உள்ளுக்குள்ளே ஊறும் மது ஒன்று உண்டு.  அது குழந்தை உள்ளம் கொண்டவர்களுக்குக் கிடைப்பது. புற இயற்கையின் வண்ண வேறுபாடுகளும் அகத்தின் காரணமற்ற ஆனந்த ஊற்றும் ஒன்று என்று காண்பவர்களுக்குரியது.

“கற்பனையூரென்ற நகருண்டாம் ; அங்கே

கந்தர்வர் விளையாடுவராம்” என்ற பாரதியின் ஊரில் அந்த மது வழிந்தோடுகிறது.

“மது “ என்ற பாரதியின் மற்றொரு தனிப்பாடலில் யோகியும் போகியும் சொற்போர் புரிகிறார்கள் – பிரவிருத்தி  நிவ்ருத்தி மார்க்கங்களுக்கிடையே; சமன்வயும் செய்கிறான் ஞானி . “மதுநமக்கு மதுநமக்கு மதுநமக்கு விண்ணெலாம்” என்று முடித்து வைக்கிறான்.

‘மதுவாதா ருதாயதே’ என்று தொடங்கும் ரிக்வேத கீதம் தென்றலும், கடலும் மழையும் கால்நடைகளும் புவியின் தூய புழுதியும் வயலின் கதிர்களும், காலையும் இரவும் விண்ணும் இனியதாகட்டும்; வானத்திலிருக்கும் எம் தந்தையர் எமக்கு இனியவராகட்டும்” என்று பிரார்த்திக்கிறது. இது நீத்தோருக்கான நினைவேந்தல் நிகழ்வாக வருகிறது. மரணித்தோரிடம் அன்புடன் மகிழ்ச்சியைக் கையேந்தும் நிலை  குற்ற உணர்வற்ற குழந்தைகளுக்கானது. மதகுரு காட்டும் மாந்தர் அந்தக் குழந்தைச் சமுதாயத்தை நினைவூட்டுகிறார்கள்.  ஏனென்றால், தூய இயற்கையின் அழகு, குற்ற உணர்வுகள் அற்றது.

நிற்பவர்களில் வலமிருந்து ஐந்தாவதாக ராகவேந்திரன்

ஆர் ராகவேந்திரன்

கோவை

மதகுரு – நாவல் – வாசிப்பனுபவம் – காளீஸ்வரன்

நன்மை-தீமை, உண்மை-பொய், இருள்-ஒளி என அனைத்தையும் இருவேறு துருவங்களாக வகைப்படுத்தி புரிந்துகொள்வது வெகு சுலபம். ஆனால், மனிதர்களை முழு முற்றாக நல்லவன் என்றோ, ஆதியோடந்தம் தீயவன் என்றோ வகைப்படுத்துவது சரியானதல்ல. இருளுக்கு முழுவதும் பழகிப்போன விழிகள், அதனுள் ஒளிந்திருக்கும் வெளிச்சத்தை, அது எவ்வளவு சிறியதேயானாலும் கண்டடைந்தே தீரும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஒரு கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவில் துவங்கி, அடுத்த வருட கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவுக்கு இடைப்பட்ட ஒரு வருடத்தில், ஒரு நிலப்பரப்பு, அதன் மக்களில் சிலரின் மாற்றங்களை விவரிக்கும் ஸ்காண்டினேவிய நாவல் மதகுரு (தமிழில்:க.நா.சு). வார்ம்லாந்தில் உள்ள ஏக்பி பண்ணை, அதன் உரிமையாளரான மேஜர், அவரது மனைவி, அதன் உல்லாச புருஷர்கள், அவர்களுடன் சம்பந்தப்பட்ட மக்கள், குறிப்பாக பெண்கள் இவர்களின் ஒரு வருட வாழ்கையையும் அதனூடே முன்னாள் மதகுருவான கெஸ்டா பெர்லிங்கின் மனமாற்றத்தையும் பேசுகிறது ”மதகுரு”.

*

தீம்புனல் நாவல் வெளியீட்டு விழாவில் ஆசான். திரு.ஜெயமோகன் அவர்களுடைய உரையைக் கேட்டேன். அந்நாவலில், பழமைவாதம் vs நவீன மனதுக்கு இடைப்பட்ட போட்டியாகத் துலங்கி வரக்கூடிய ஒரு சித்திரமாக நாய்கள் vs ஓநாய்க்கு இடைப்பட்ட ஒரு சண்டையைப் பற்றி பேசியிருப்பார். அந்தச் சண்டையில், நவீன நாய்களிடம், பழமை மிளிரும் ஓநாய் தாக்குப்பிடிக்க முடியாமல் தோற்றுப்போகிறது. மதகுரு நாவலிலும் என்னால் அப்படி ஒரு ஒப்புமையைக் கண்டறிய முடிந்தது. கெஸ்டா பெர்லிங், பெர்டிணாண்டின் காதலியான அன்னாவை அவன் பொருட்டு கவர்ந்து வருகையில், வரும் வழியிலேயே அன்னாவுக்கும், கெஸ்டாவுக்கும் காதல் மலர்கிறது. அவர்கள் இருவரும் பெர்டிணாண்டை மறந்து ஏக்பிக்கு செல்வதை ஒரு ஓநாய்க்கூட்டம்தான் தடுக்கிறது. முடிவில் “இதுதான் கடவுளின் விருப்பம் போலும்” என்ற சமாதானத்துடன் அக்காதல் கைவிடப்படுகிறது. அப்பயணத்தில் அவர்களுடன் (துணையாக?) ”பின்கிரட்” என்ற வேட்டை நாயும் இருக்கிறது. இதையே, இன்னுமொரு கோணத்தில், பழங்காலத்துக் கதையான மதகுருவில் ஜெயித்துவிட்ட ஓநாய்கள், தற்காலத்தில் நவீனத்திடம் தோற்று ஓடுகின்றன என்பதாகப் புரிந்துகொள்கிறேன்.  

இந்நாவல் முழுவதிலும், எப்பா, அன்னா, மரியாள், எலிஸபெத் (சின்னச் சீமாட்டி) என பெண்களின் பங்களிப்பு முக்கியமானதாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றிலும் தனித்துத் தெரியக்கூடிய ஒரு கதாப்பாத்திரம் “ஏக்பி சீமாட்டியாக” வரும் மார்கரீடா. அல்டிரிங்கருடான காதல், கால சூல்நிலையால், ஏக்பி உரிமையாளரை மணந்துகொள்ள நேர்தல், அதன் பின்னும் தொடரும் அல்டிரிங்கருடனான உறவு, உல்லாஸ புருஷர்களுடனான களிப்பு, கிறிஸ்துமஸ் விருந்தில் அந்த உறவு (கிறிஸ்டியன் பெர்க்கால்) வெளிப்படும் சந்தர்ப்பம் என பல இடங்களில் மார்கரீடாவின் கதாப்பாத்திரம் நம்மை வசீகரிக்கிறது. குறிப்பாக, தன்னுடனான உறவின் பொருட்டு, அவளுக்கென அல்டிரிங்கரால் வழங்கப்பட்ட சொத்துக்களை விட்டு மார்கரீடா வெளியேற நேர்கையிலும் “தன் சுயம்” பாதிக்கவிடாமலே அவள் வெளியேற்றம் நிகழ்கிறது. அவளால் ஏக்பியின் உல்லாச புருஷர்களாக தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொருவருமே அவரவர் துறைகளில் உச்சம் தொட்டவர்கள் என்பதும் மார்கரீடாவின் ஆளுமைக்கான சான்றாக அமைகிறது.

*

நாவலில் பொது மக்களின் “திரள்” மனப்பான்மையை மிகச்சரியாக காட்சிப்படுத்திய சில இடங்கள் உள்ளன. குறிப்பாகப் பிராத்தனைகள். கதையின் துவக்க அத்தியாயத்தில், கடவுளை நோக்கி கெஸ்டா பெரிலிங்கால் செய்யப்படும் ஒரே உண்மையான பிராத்தனை அவன் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளையும் மக்கள் மன்னிப்பதற்குக் காரணமாக அமைகிறது. அதைப்போலவே வாழ்நாளெல்லாம், பேர் பெற்ற கருமியாக வாழ்ந்து வெறுப்புக்கு உள்ளான ப்ரோபி மதகுரு, தன் மனம் வருந்தி செய்யும் பிராத்தனையும், அதன் விளைவாகப் பெய்யும் மழையும், அவன் மீதான, மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் கரையச் செய்கின்றன. றீகார்டு குடியானவப் பெண்ணுக்கு நியாயம் வேண்டி ஏக்பி மாளிகையை அழிக்கும் ஆவேசத்துடன் வரும் மக்கள் கூட்டத்தின் கோபம், மாளிகையில் நடக்கும் விருந்தால் நீர்த்துப்போவதும்; பின்னர், ஒரு சின்ன உரசலிலேயே கோபம் மீண்டும் மூள்வதும் மக்களின் ”திரள்” மனப்பான்மையை சரியாகக் காட்சிப்படுத்திய தருணங்கள்.

மாமா பெல்ஹார்டுக்கும், சின்னச் சீமாட்டிக்குமான உரையாடல், இந்நாவலின் முக்கியமான உரையாடல்களுல் ஒன்று. கடவுள் நம்பிக்கைக்குப் பதில் தான் கண்டறிந்த உண்மையாக, பல்லாயிரம் பக்களில் நிறுவப்பட்ட உண்மையாக பெல்ஹார்டு முன்வைப்பது உழைப்பை. ஆனால், சின்னச் சீமாட்டிக்கோ அதை ”அன்பு / காதல்” என்பதன்றி பிற எதையும் நம்புவதில் தயக்கம் உள்ளது. அவளது வார்த்தைகளிலேயே சொல்வதானால் “ நீ நம்புகிறமாதிரி நம்பினால் எனக்கு வாழ்வே சாத்தியமில்லாது போய்விடும்”. முடிவில் தன்னுடைய அற்புத நூலை, அதன் மூலம்தான் கண்டறிந்த உண்மையை பூட்டி வைத்து புகழைத் துறக்கிறான் “மாமா பெல்ஹார்டு”. அவனது இந்த மனமாற்றத்துக்கு முக்கியமான காரணம், தன் பெண் போல நேசித்த சின்னச் சீமாட்டி அதனால் துன்பப்படக் கூடாது என்பதே. அவ்வகையில் காதலே (அன்பே) முடிவில் வெல்லும் என்பதற்கு தானே ஒரு உதாரணமாக நிற்கிறான் ”மாமா பெல்ஹார்டு”.   

*

இந்நாவலின் முக்கியமான அம்சம், இதில் தொடர்ந்து வரக்கூடிய ”நாட்டாரியல்” கூறுகள். கருமி ப்ரோபி மதகுருவின் பிராத்தனைக்குப் பின் மழை வருதல், பெருகிவரும் வெள்ளத்தினூடே மக்கள் திரளை ஒன்றிணைத்து பழுதான பாலத்தை சரி செய்யும் முயற்சி, மரணித்துப்போன ஜோஹனின் கல்ல்றையுடன் அவன் நண்பர்கள் ஆடும் சீட்டாட்டம், அதில் ஒவ்வொரு முறையும் ஜோஹனே வெல்லுதல், சாத்தான் ஸிண்ட்ரோமின் விவரிப்புகள், சொல்லிவைத்தாற் போல் உல்லாசத்திலிருந்து உழைப்பை நோக்கித் திரும்பும் மக்கள் – உள்ளிட்ட சம்பவங்கள் என கதை நெடுகிலும் இந்த “நாட்டார்”கதைத் தன்மை வருகிறது. ஆனால், இந்த அம்சம், கதை என்பது கூறுமுறையின் வெற்றிதான்.

*

பெர்டினாண்டின் மரணச்சடங்குகளில் அவன் மீதான தன் காதலை அன்னா வெளிக்காட்டி, அதன் மூலம் பெர்டினாண்டின் அன்னைக்கு மீட்பளிப்பது, மனைவி குஸ்தாவாவை கொடுமைப்படுத்தும் மெல்கியாரில் ஏற்படும் மனமாற்றம், தன்னை நேசித்த பெண்கள் மீதெல்லாம் பெருங்காதல் கொண்ட கெஸ்டா, எலிஸபெத்தை அவள் குழந்தையின் பொருட்டு திருமணம் செய்து கொள்வது, ஏக்பியின் ஆலைகள், அதன் வளம் உல்லாஸ புருஷர்களால் நாசமடைவது, பின்னர் அவர்களின் மனமாற்றத்தால் ஏக்பி மீள்கட்டமைப்பு செய்யப்படுவது என நாவல் நெடுகிலும் மனித மனதின் சாத்தியமான சாத்தான் அம்சங்களும், அதற்கிணையாகவே, அதை ஈடுசெய்யும் வண்ணம் அவர்களில் தேவதை எழும் தருணங்களும் திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன. நம்முடைய நல்லவன் – கெட்டவன் வகைப்படுத்தலை இந்நாவல் கேள்விக்குள்ளாக்குகிறது. அதைப்போலவே ஒருவனுக்கு நல்லவனாகத் தோன்றும் மனிதன் எல்லோருக்கும் அப்படித் தோன்ற வேண்டிய அவசியம் இல்லைதானே. ஊரே வெறுக்கும் கருமியான ப்ரோபி ”மதகுரு” வுக்குள் இருந்து பெருங்காதலன் எழுந்துவரும் தருணம் அத்தகையது.

*

இது வெறுமனே ஏக்பியின் கதை மட்டுமல்ல. கெஸ்டா பெர்லிங்கோ, உல்லாஸ புருஷர்களோ ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பையோ காலகட்டத்தையோ சார்ந்தவர்கள் மட்டுமல்ல என்பதை உறுதியாகக் கூறமுடியும். அவ்வெண்ணமே, இந்நாவலை மிகவும் முக்கியமான ஒன்றாக்குகிறது.

*

ஆடும் ஊஞ்சல், எவ்வளவு தூரம் பின்புறமாக பயணிக்கிறதோ, அதே அளவு தூரத்தை முன் நோக்கியும் பயணித்தே ஆகவேண்டிய கட்டாயம் கொண்டது. ஊசலாட்டங்களுக்குப் பெயர் போன மனித மனமும் அவ்வியல்பினதே. நன்மை தீமை என்ற இரு எல்லைகளுக்கு மத்தியிலான பயணமாய் அமைகிறது பெரும்பாலானோர் வாழ்க்கை.

நிற்பவர்களில் வலமிருந்து மூன்றாவதாக காளீஸ்வரன்

காளீஸ்வரன், கோவை

மானுடம் வெல்லும் – வாசிப்பனுபவம் – ராகவேந்திரன்

இந்தியர்கள் வரலாற்று உணர்வுகுறைந்தவர்கள். பழங்காலம் என்ற ஒன்று உண்டு என்ற எண்ணம் பெரிதாக இல்லாமலேயே பலநூற்றாண்டுகள் கழித்து விடடவர்கள்.  வரலாற்றின் பதிவுகள் மிகவும் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. அதனாலேயே கிடைக்கும் பதிவுகள்  அரியவை ஆகின்றன

ஆனந்த ரங்கம் பிள்ளையின்  நாட்குறிப்பு நமது எல்லாச் சுவடிகளையும்போல தலைமுறைகளால் உதாசீனப் படுத்தப் பட்டு, புதுச்சேரியின் மேயராகவும் கிழக்கத்திய மொழிகளின் நிபுணராகவும் இருந்த ஒரு பிரெஞ்சு அதிகாரியின் முயற்சியால் கண்டெடுக்கப் பட்டது . 

பிரபஞ்சன் அவர்கள் நாட்குறிப்பை அடிப்படையாக வைத்து அழகிய மெய் – புனைவை அமைத்திருக்கிறார்.  முன்னுரையில் சொல்வது போல இது அரசர்கள் அதிகாரிகளின் கோணத்தில் வரலாற்றை எழுதுவதை மாற்றி சாமானியர்கள், ஏழைகள், தொண்டுசெய்யும் அடிமைகளின் வாழ்க்கையை வரலாற்றாகப் புனைந்துள்ளது.

புதுச்சேரியின் பிரெஞ்ச் கவர்னர் துமாயின் பல நிறபேதங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. பொதுவாக மக்களுக்கு அதிக துன்பத்தைத் தராதவர். பிற அதிகாரிகள் போலவே தன் நாட்டுக்காக வணிகத்தை கவனித்துக் கொள்பவர். கூடவே தனக்கென ஒரு தனியான வியாபாரத்தையும் செய்து கொள்பவர் (இன்றும் பல அரசு/ தனியார் அதிகாரிகள் வேறு பெயரில் வர்த்தகம் செய்வதற்கு முன்னோடி?) அரசியல் காரணங்களுக்காக நண்பராக ஆகிவிட்ட சந்தா சாகிப்பின் மனைவி அத்தர் பேகத்திற்கு அடைக்கலம் தருகிறார். மராத்தியர்கள் அவளது செல்வத்திற்காக மிரட்டும் போதும் அடைக்கலம் வந்தவரைக்காப்பதற்கு உயிரையும் விடுவான் பிரெஞ்சி என்று சொல்லும் இடத்தில் மானுடம் வெல்லும் என்னும் நம்பிக்கை பிறக்கிறது

 ஆர்காட்டு தளபதி கர்னாடகப் போர்களில் முக்கியப் புள்ளி. சந்தாசாகிப் தான் திருச்சியை ஆண்டு வந்த மதுரை அரசி ராணி மீனாட்சியை ஏமாற்றி அவள் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுகிறான். தன் கணவர் விஜயரங்க சொக்கநாத நாயக்கருக்குப்பின்  ஆள்பவள் மீனாட்சி. அவள் பாட்டிதான் ராணி மங்கம்மாளின்.   ராணி மீனாட்சியின் மரணம் புனைவில் தொடர்ந்து துயரத்தை எழுப்பியபடியே நம்மைத் தொடர்கிறது. அடுத்த முறை மதுரை மீனாட்சியை தரிசிக்கும் போது பக்தியுடன் பெரும் துயரும் எழும். (அந்த மீனாட்சி வேறு, இவள் வேறு என்று சொல்பவர்கள் மூதன்னையின், பாட்டியின் அணுக்கத்தை உணராதவர்கள்)

ஆனந்தரங்கம் பிள்ளை எல்லா மானுடரையும் போல கலவை ஆளுமை ஆனால் புத்திசாலி. மராத்தா வீரர்களால் துரத்தப்பட்டு புதுச்சேரியில் அடைக்கலமாயினர் சுற்றியுள்ள ஊர்மக்கள்.

அவர்களில் ஒரு குடும்பம் பிள்ளையின் வீட்டெதிரே மரத்தடியில் தஞ்சம் அடைந்தது. பிள்ளை அவர்களுக்கு அன்புடன் உதவிசெய்கிறார். ஆனால் தனக்கு கிடைக்க வேண்டிய துபாஷ் பதவியை அடைந்துவிட்ட கனகராய முதலி (கிறித்துவராக மாறி பதவியைப் பிடித்தவர்)  மீது கடும் வெறுப்பும் கொள்கிறார். அவரது மரணப் படுக்கை பிள்ளைக்கு ஆனந்தம் தருகிறது

பெண்கள் நிலையும் ஒடுக்கப் பட்ட ஏழைகள் நிலையும் வரலாற்றில் நம்மைத் தலைகுனியச் செய்பவை. அவை நீங்காமல் நினைவில் இருப்பது மானுடம் வெல்வதற்கு அவசியம். ஒருவேளை கீழ்மையான விலங்கு நிலை வாழ்வைப் பதிவு செய்யவேண்டா என்று தான் இந்தியர்கள் எவரும் பதியவில்லையோ?

நமது வரலாறு நேர்கோடாக இருக்கவில்லை. மராத்திய வீர்ர்களில் பலர் இசுலாமியர்கள். மதமும் சாதியும் இரண்டு சக்திகளாக ஊடாடியும் முரண்பட்டும் வாழ்வின் வெவ்வேறு முடிவுகளை எடுத்திருக்கின்றன. அரசுத் தெருவில் பல்லக்கில் வந்துவிட்டார் என்பதற்காக இடங்கை- வலங்கை எனப் பிரிந்து சாதிகளால் பிணக்கு கொண்டு கவர்னர் வரை செல்கிறார்கள். ஆனால் சில நாட்களிலேயே மதத்திற்கு  பிரச்னை வரும்போது ஒன்று சேர்ந்து நிற்கின்றனர். இதை பிரெஞ்ச் கவர்னரால் புரிந்துகொள்ள முடியவில்லை

பண்ணை அடிமைகள் விற்கப்படுவதும் கூடவே அவர்களை அடிப்பதற்கான சாட்டையும் தரப்படுவதும் வெறும் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த  நம் சமூக வாழ்க்கையின் அறவீழ்ச்சியைக் காட்டுகிறது.

மோகனாம்பாள் என்னும் தஞ்சை மராத்திய தளபதியின்  மனைவி பிரெஞ்சு மதுவிற்கு அடிமை ஆகிறாள். அவள் தன் கணவனைத்தூண்டி மேலும் மது கேட்டு தூது அனுப்பச் செய்கிறாள்.  போரைத் தவிர்க்கும் உத்தியாக இந்த விண்ணப்பம் உதவும் என்கிறாள்.  தளபதி அவமானம் பிடுங்க பண்டிதரை தூது அனுப்புகிறான். உண்மையிலேயே மோகனா போரைத் தடுக்க மதுவைப் பயன்படுத்தினாளா அல்லது மதுகிடைக்கவேண்டி  அரசியல் பேச்சுவார்த்தையைப் பயன்படுத்தினாளா என்பதில் வாசகர்  சுதந்திரம் உள்ளது.

வடநூலும் தமிழும் பயிலும் பிராமணர்கள் அமைச்சர் பதவிக்கான வாய்ப்பைப் பெறுகின்றனர். குருவின் வீட்டில் ராம சப்தம் பயிலும் மாணவனுக்கு குருவின் மகளை சகோதரியாக ஆக்குகிறார் குரு (சமஸ்கிருத்த்தில் ஏழு வேற்றுமைகள் – மூன்று எண்ணிக்கைகளில் – ஒருமை, இருமை பன்மை பெயர்ச்சொற்களின் பட்டியலின் முதல் சொல்). வீட்டில் தங்கிப் படிக்கையில் கல்விமட்டுமே கவனத்தில் இருக்க ஒரு சமூகவிதி பரிணாமம் அடைந்து வந்திருக்கிறது போலும்.

கழிவறை எப்போதும் பிரச்னையாகவே இருந்திருக்கிறது. இன்றும் திறந்தவெளிக் கழிவறைகள் இல்லாத மாவட்டங்களாக பெருமையுடன் அறிவித்துக் கொண்டிருக்கிறோம்.  கடற்கரையில்  அசுத்தம் செய்யக்கூடாது என்று கவர்னர் அறிவிக்கிறார். ஆடிப் போய் விடுகிறார்கள் பொதுமக்கள். வீட்டில் கழிவறை கட்டிக் கொள்வது பிராமணர்களுக்கு பெரும் ஆசார வீழ்ச்சியாகத் தெரிகிறது. கூட்டம் கொந்தளிக்கிறது. எங்கே புரட்சி செய்துவிடுவார்களோ என்ற நிலை வரும்போது ஆதார விதியாகிய உயிர் மற்றும் உணவு பயம் வருகிறது. வீட்டிலெயே குழி எடுத்து குச்சிகளைப் போட்டு கழிவறை தயாரித்து விடுகிறார்கள். மொத்த வீடே ஒரு அறை என்றிருக்கும் ஏழைகளின் நிலை மிகவும் பரிதாபம் ஆகி விடுகிறது

பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரின் அமுதமொழிகள் மூன்று தொகுதிகளாக தமிழில் வந்துள்ளன. மகேந்திர நாத் குப்தர் வங்கத்தில் எழுதியது மூலம். அவர் தனது நாட்குறிப்பில் குருதேவர் உரையாடியதை பல ஆண்டுகளாக எழுதி வைத்தது.  ஆன்மிகத்தை இலக்கியமாக ஆக்குவது. ஓர் இடத்தில் குருதேவர்  கழிவு மூலம் பொதுமக்கள் குளத்தை அசுத்தம் செய்வதைப் பற்றிச் சொல்கிறார்.  யார் சொல்லியும் கேட்காத பொதுமக்கள் கம்பெனி (பிரிட்டிஷ் கிழக்கிந்திய) உத்தரவுப் பலகை வைத்ததும் அடங்கி விடுகின்றனர்) . 

கூட்டு வர்த்தகக் கம்பெனிகள் அரசாங்கத்தை அமைத்தபோது பல புதிய விழுமியங்கள் உள்ளே நுழைந்திருக்கின்றன. அரசர்களுக்குக் கிடைக்காத ஏதோ ஒரு அதிகாரக் கோணம் இவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன. அது வெடிமருந்தாக இருக்கக் கூடுமா? அல்லது ஜனநாயகம் பரிணமித்து வந்த பாதை அதுவா?  ஒருவேளை இந்த முன்னூறாண்டு ஐரோப்பிய ஆட்சி நம்மைத் தயார்செய்யவும் இந்தியா திரண்டு வரவும் இயற்கை ஆடிய கொடிய விளையாட்டா?

எல்லா அடிமைத்தனங்களுக்கிடையிலும் துமாயும், பிள்ளையும் , வீர வன்னியன் காளியும், ‘ பூமி இருக்கு சாமி ; உசுரு போறவரைக்கும் கொத்திட்டு இருக்கவேண்டும்’ என்று சூளுரைக்கும் மண்ணோடு வாழும் எளிய விவசாயியும்,  தனது கலையும் அறிவும் அரசனின் மங்களவிலாசத்தில் அழிந்து கொண்டிருக்கும்போதும் நம்பிக்கையை விடாமல் பிடித்திருக்கும் கோகிலா போன்ற தேவதாசிகளும்  , அடிமையாக விற்கப்பட்டும் விலங்கைவிட இழிவாக நடத்தப்பட்டபோதும் தலைமுறைத் தொடர்ச்சிகளுக்கு மானுடத்தை வெறுக்காமல் அறத்தினைக் கடத்தும் ஒடுக்கப்பட்ட புனிதர்களும்  வாசித்து முடிக்கையில் உரக்க ஒலிக்கிறார்கள்  – மானுடம் வெல்லும்.

ஏதாயினும்  மானுடம் வெல்லும் கம்பனின் உச்சக் கனவாகிய ‘மானுடம் வென்றதம்மா’ என்ற அறைகூவலில் இருந்து கீழே இறங்கி யதார்த்த நிலையை சொல்கிறது. ஆனால் அதில் வெல்லும் என்னும் நம்பிக்கையும் அதற்கான குறிப்புகளும் உள்ளன.

ஆர் ராகவேந்திரன்

கோவை

மானுடம் வெல்லும் – வாசிப்பனுபவம் – காளீஸ்வரன்

பெரும்பாலான முதலாளித்துவ நாடுகள், தங்கள் காலனி நாடுகளில் நிகழ்த்திய ஆட்சி என்பது கிட்டத்தட்ட ஒரு Outsourcing போன்றதுதான். தங்களுடைய காலனி நாட்டு மக்களின் மூடப்பழக்கங்கள் போன்றவற்றையோ, சாதி, இன, மத பேதங்களையோ, நியாயமற்ற போக்குகளையோ பெரும்பாலும் “காணாத” கண்களையே கொண்டிருந்தனர். தங்கள் நோக்கம் வியாபாரமோ, சுரண்டலோ, எப்பெயர் கொண்டு அழைப்பினும் பணம் சேர்ப்பது மட்டுமே.

ஆனால், குவர்னர் துய்மா, தனக்கு முந்தய ஆட்சியாளர்களிடமிருந்து இவ்விசயங்களில் கொஞ்சம் மாறுபட்டுத் தெரிகிறார். கோகிலாம்பாளிடம் தகாது நடக்க முயலும் ஒரு ஸோல்ஜருக்குத் தண்டனை தருவதிலும், வலங்கை இடங்கை சாதிப் பிரிவினரிடையே நிகழும் ராஜ வீதி நுழைவு சம்பந்தமான பிரச்சனையில் அனைவரும் அத்தெருவைப் பயன்படுத்த ஆணை பிறப்பிப்பதிலும் ஒரு குறைந்தபட்ச நீதியை அவர் உறுதிசெய்கிறார். ஆனால், வருமானம் வருவதற்கான வழிமுறைகள் ஏதேனும் இருப்பின் அதன்பொருட்டு எந்த எல்லைக்கும் செல்வதற்கும் அவர் தயங்குவதில்லை. குறிப்பாக போர்க்காலத்தில் விதிக்கப்படும் புதிய / அதிக வரிகளை சொல்லாம். இக்குணமே துய்மாவை ஒரு முழு மனிதாபிமானியாக எண்ணுவதற்குத் தடையாக அமைகிறது.

நாவலின் பிற பாத்திரப்படைப்புகளில் இருந்து தனித்துத் தெரியும் ஒரு முகமாக கோகிலாம்பாளைச் சொல்லலாம். கோவில் தாசி என்றபோதும் தன்னுடைய சுயத்தை இழக்காதிருக்க அவள் நிகழ்த்தும் போராட்டங்கள், அதனால் ஏற்படும் சிக்கல்களை அவள் சமாளிப்பது, ஒரு போரைத் தவிர்ப்பதற்கான யோசனையை “மோஹனா”வுக்கு சொல்வது, மதமாற்ற பிரச்சாரம் மேற்கொள்ளும் பாதிரியுடனான விவாதம் என தனித்து ஒலிக்கும் ஒரு கலகக் குரல் கோகிலாம்பாளுடையது.

இந்த நாவலுக்குள் வரும் பல சந்தர்ப்பங்கள் தாமே தனித்த கதையாக கூறப்படுவதற்குறிய சாத்தியக் கூறுகள் கொண்டவை. உதாரணமாக, விளைந்து நிற்கும் “வெள்ளைப் பூண்டின்” நிலம் மராட்டிய படை கடந்து போனதால் சீரழிந்து போனதையும், அதனால், விளைச்சலைக் கொண்டு தன் மகள் செம்பருத்தியின் திருமணத்தை நடத்த எண்ணியிருக்கும் வெள்ளைப் பூண்டின் ஆசை நிராசையான சம்பவத்தை சொல்லலாம்.

இந்நாவலில் காட்டப்படும் சாமானியரின் வாழ்க்கை மிகவும் முக்கியமானது. குறிப்பாக சாதியின் பெயரால் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குழந்தைக்கு வைக்கப்பட்ட முருகன் பெயரை மாற்றுதல், தியாகராஜ முதலியார் தன் சம்பந்தி முதலியார் மூலம் அடிமைகள் வாங்குவது, அதற்கான கிரயசாசனப்பத்திரம், உயர் ஜாதி மாடுகளை கவனித்துக்கொள்ள வழங்கப்படுவது குறிப்புகள், அதே சமயம் அடிமைகளாக கருதப்பட்டவர்களை “கவனித்துக்கொள்ள” வழங்கப்படுவதோ சவுக்கு என பல சம்பவங்கள் நம் வரலாற்றின் கொடுமைகளைப் பேசுபவை.

ஒரு பெரும் போர் சில மதுக்குப்பிகளால் தவிர்க்கப்படுதல், சித்துஜியை வீழ்த்தி, அரியணை அமரும் சாயாஜிக்கும் பிரதாப சிம்மரால் அதே முடிவு நேர்தல், அரசனுக்கு மிகவும் நெருங்கியிருக்கும் பலரும், உண்மையில் அந்தப் பதவிக்கே விசுவாசமாக இருக்கும் நிலை, கவிராயைத் தவிக்க விடும் அனவரதம் பிள்ளை, அவரிடம் பேரம் பேசி காரியம் சாதிக்கும் நிலையில் இருக்கும் அரசு என பல சம்பவங்கள் மூலமாக அக்காலகட்ட அரசாங்க நிலை தெளிவாகிறது.

இந்நாவலின் முக்கிய அம்சமாக நான் கருதுவது பகடி. சின்னச் சின்ன விவரணைகள், குறிப்புகள் பலவும் நம்மை பெரும் சிரிப்பில் ஆழ்த்துபவை. மோஹனாவுக்கு கொய்யாப்பழம் தின்ன ஏற்பட்ட ஆசையை நிறைவேற்ற படாதபட்டு கொண்டு வரப்படும் கொய்யாப்பழங்களுக்கு நேர்ந்த கதி, “சீந்துவார் அற்று மெலிந்த இறைவர், அவரை நம்பி மேலும் இளைத்துப்போன இறைவி” போன்ற விவரணைகள் அவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.  

தமிழில் காணக்கிடைக்கும் பெரும்பாலான வரலாற்று நாவல்கள், இருந்திராத பொற்காலத்தை பேசுபவை. மேலும், ”இந்திர”, “சந்திர” அம்சம் கொண்ட மன்னர்களின் பெருமையை கூறுபவை. ஆனால், “மானுடம் வெல்லும்” நாவல் ஒரு காலகட்டத்திய வரலாற்று ஆவணமாக கருதப்படக்கூடியது. அதிகாரத்தில் இருப்பவர்களும், அவரை அண்டிப் பிழைப்பவர்களும் ஒரு “பெருவாழ்வு” வாழ்ந்த அதே காலகட்டத்தில், சாதியின் பெயரால், பழமையின் பெயரால் எவ்வித அடிப்படை அறமும் இன்றி ஒடுக்கப்பட்ட மக்களும் இருந்தார்கள் என்பதை இந்நாவல் சிறப்பாகக் கூறுகிறது.

இந்நாவலின் பெரும்பாலான கதை மாந்தர்கள் (துய்மா, ஆனந்தரங்கப்பிள்ளை, கனகராய முதலி, சந்தா சாயிப் etc), வரலாற்றில் தடம் பதித்த உண்மை மனிதர்கள் என்பதும், நாவலின் பிரதான சம்பங்களுக்கான ஆதாரமாக ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்புகள் இருப்பதும், மற்ற வரலாற்று புனைவு நாவல்களில் இருந்து “மானுடம் வெல்லும்” ஐ தனித்துக் காட்டுகிறது.

பலவகைகளில் வரலாற்றின் நாம் அறியாத பக்கங்களைப் பேசும் “மானுடம் வெல்லும்” ஒரு முக்கியமான நாவல்.

காளீஸ்வரன், கோவை

மானுடம் வெல்லும் – வாசிப்பனுபவம் – நவீன் சங்கு

“மானுடம் வெல்லும்” பாண்டிச்சேரியை மையமாக வைத்து, பிரெஞ்சு ஆளுநர் டூமாஸின் ஆட்சி காலத்தை பற்றி பேசும் நாவல்.ஆனந்த ரங்கம் பிள்ளை என்ற அரசு அலுவலரின் நாட்குறிப்பைக் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டதால் மற்ற வரலாற்று நாவல்களிருந்து இது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த நாவலை மூன்று பிரிவுகளில் அணுகலாம். 

*1. அழகியல் பார்வை      2.வரலாற்றுப் பார்வை 3.போதாமைகள் அல்லது குறைகள்.* 

 _அழகியல் பார்வை_ , _ஒரு தாசி மேலே  நோக்கியவாறு, தனது கையால்  வானத்தைபிடிக்க பார்க்கிறாள்!_  என நாவல் தொடங்குகிறது.வாழும் காலத்திலே பதிவு செய்யப்பட்ட நாட்குறிப்பை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டதே, இந்த நாவலின் பலம் மற்றும் பலவீனம் என கொள்ளலாம்.அதாவது இந்த நாட்குறிப்பே நம்மை வரலாற்றுக்கு நெருக்கமாக கொண்டு செல்கிறது அதுவே அதன் இலக்கிய தன்மைக்கு(கவித்துவம், படிமம், தரிசனம்) தடையாக இருந்ததோ என எண்ணத் தோன்றுகிறது.அதனால்தான் என்னவோ “தாசி வானத்தை பிடிக்க பார்கிறாள்” போன்ற படிமங்களை, பிற்பாடு நாவலில் அதிகமாக காணமுடியவில்லை. இந்த எழுத்து முறையை எதார்த்த வாதம்(சில இடங்களில் இயல்புவாதம் போல் வெளிப்பட்டது) என கொள்ளலாம்.நாவலின் Authenticity மட்டும் இல்லாமல், அதன் உள்ளடக்கத்தின் செறிவும் தானாகவே அதன் அழகியலின் போதாமைகளை காண்பிக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.  

 _வரலாற்று நோக்கு_ –  _இரண்டு பண்பாடுகளின் மோதலால் ஏற்படும் சிக்கல்கள், அதனால் ஏற்பட்ட மாற்றங்கள்; அரசு அமைப்புகள் அதில் உள்ள உயர் சாதிகளின் வலிமைகள் மற்றும் விளிம்பு நிலை மக்கள் (விவசாயிகள், தாசிகள், வாயிற் காவலன், விசிறி வீசுபவன்) என தொகுத்து கொள்ளலாம்_. 

விளிம்பு நிலை மக்கள் என சொல்லும் போதே அவை பெரும்பாலும் அரசியல் கேள்வியாகவே பார்க்க படுகிறது.ஒரு வரலாற்று நாவல் ஏதாவதொரு தத்துவத்தைப் பற்றியோ அல்லது தனிப்பட்ட மனிதனைப் பற்றியோஅல்லது ஒரு குறிப்பிட்ட விசயத்தை பற்றியோ மையமாக வைத்து எழுதப்படாமல்,வரலாற்றையே நாவலின் மையமாக வைத்து எழுதும்போது, இப்படிப்பட்ட கேள்விகள் நியாயமாகவே படுகிறது.காலத்தால் அழிந்து போன முகமில்லாத ஒரு விளிம்பு நிலை மனிதனை உருவாக்குவது , புனைவுலகில் எழுத்தாளனுக்கு ஒரு சவால் என்றே கருதுகிறேன்.

முதன்முதலாக கழிப்பறையை அறிமுகம் செய்யும் போது மக்களின் மனநிலையில் ஏற்படும் ஒவ்வாமை,ஒரு வாயில் காவலன் ஃப்ரெஞ்ச் அதிகாரி போல் பாவனை செய்வது ,தாசிகளை சீண்டும் ஃப்ரெஞ்ச் காவலாளியின் காதை அறுத்து சிறையில் அடைக்கும் ஃப்ரெஞ்ச் அரசு;அதே தாசிகளிடம் அத்து மீறி நடக்கும் உயர் சாதிகள் (தாசி இல்லாத ஊரில் மழைஎப்படி பெய்யும் என சொல்லும் ஒரு கும்பல்),சாதி என்று வரும் போது பிரிந்து சண்டைபோடுவதும் மதப் பிரச்சினை என்றால் ஒன்றாக சேர்வதும் இதை கண்டு ஃப்ரெஞ்ச் அரசு குழப்பம் அடைவதும் போன்ற முரண்பட்ட சமூக பண்பாட்டு  சிக்கல்களை காணலாம்.

அரியணையை சுற்றி நிகழும் அரசியல் நிகழ்வுகள் சமகால அரசியலுடன் பொருந்திப் போகின்றது.சூழ்ச்சி செய்து அரசை கவிழ்த்து அரியணை ஏறும் மன்னர்கள் பின்பு போகத்தில் திளைக்கின்றனர்.பல மன்னர்கள் சூழ்ச்சியால் மாற்றப்பட்டாலும் உயர் சாதி அதிகாரிகள் தொடர்ந்து நீடித்தனர். அவர்களை பகைத்துக் கொள்ள எந்த அரசும் விரும்பவில்லை.அரசுகளுக்கிடையேயான முக்கிய தகவல்கள், பேரங்கள் இவர்கள் வழியாகவே நடை பெற்றது.

*ஃப்ரெஞ்ச் அரசு மராட்டிய அரசுக்கு ஒயின் பாட்டில்கள் அனுப்பி போரை நிறுத்தி சமரசம் செய்வதை முக்கிய குறியீடாக காணலாம்.*

இந்த நாவல் ஃப்ரெஞ்ச் அரசு செய்த கொடுமையான கால கட்டங்களையெல்லாம் தவிர்த்து,டூமாஸ் என்ற கனிந்த மனிதனின் ஆட்சி காலத்தை மட்டுமே பேசுவதால்,ஃப்ரெஞ்ச் அரசின் மேல் நமக்கு அபிப்பிராயமான பார்வையை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.இவருக்கு பின்பு வந்த டூப்லெக்ஸின் ஆட்சி காலம் மிக மோசமானது.

_ஒரு பெரிய இராணுவ படை சாதாரணமாக ஒரு வயலில் நடந்து செல்வதும்,அது ஒரு விவசாயியின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் விளைவு முக்கியமான படிமம்_.

_குருசு என்ற கதாபாத்திரத்தின் ஆரம்பம் , இறுதியில் அது மேற்கொள்ளும் வாழ்வும் கவனிக்க வேண்டியது_.

சில இடங்களில் வரும் முற்போக்கு கருத்துக்கள் கதை ஓட்டத்தை தடை செய்வது, தனியே தெரிகிறது.

கிட்டத்தட்ட  ஆவணமே இல்லாமல், வரலாறு என்பதே காணல் நீர் போன்று இருக்கும் நமது நாட்டில், வாழும் காலத்திலே ஆவணம் செய்யப்பட்ட நிகழ்வுகளை கொண்டு இந்த நாவல் எழுதப்பட்ட தால், அதன் Authenticityகாகவும் அதன் செறிவுக்காவும் இது ஒரு முக்கியமான நாவல் ஆகும்!

நவீன் சங்கு, கோவை