நிகர்வாழ்வு – திருதிராஷ்டிரர், பாண்டு, விதுரர்

மழைப்பாடல் வாசிப்பு-3 – விக்ரம்

தங்கள் புறம் எவ்வாறு இருப்பினும் தங்கள் விருப்பங்கள் அல்லது விருப்பமின்மைகள், நிறைவேற்றங்கள் அல்லது ஏமாற்றங்கள் இவற்றிற்கப்பால் தங்கள் அகம் என தங்களுக்கான ஒர் நிகர்வாழ்க்கை கொண்டவர்களாக உள்ளனர் திருதிராஷ்டிரரும், பாண்டுவும், விதுரரும்.

இசையால் அமைந்தது திருதிராஷ்டிரரின் உலகு.  அவர் இசையால் அறியவொண்ணாதது என்று ஒன்றில்லை.  தன் திருமணத்தின் பொருட்டான காந்தாரப் பயணத்தில் தான் அறிந்திரா நிலத்தை அதன் விரிவை, அமைதியை தன் செவிகளாலேயே அறிந்துகொள்கிறார் திருதிராஷ்டிரர்.  ஆழமற்ற பாலைவன நதியில் பிரதிபலிக்கும் விண்மீன்களைக் கூட அவர் அந்நிலத்திற்கு வரும் முன்னரே இசையால் கண்டுவிட்டவராக இருக்கிறார்.

”விஹாரி ராகம் பாடிக்கேட்டபோது அவற்றை நான் பார்த்தேன். பாலைவனத்தில் நதியில் விண்மீன்கள் விழுந்துகிடக்கும்” என்று விதுரரிடம் சொல்கிறார் அவர்.  திருதிராஷ்டிரரின் நிகர் வாழ்வில் தன்னை இணைத்துக்கொள்ள முடிந்த காந்தாரியின் அன்பை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். விழியற்றவரை மணம்முடிப்பது குறித்து மற்றவர் கருத்துகளுக்கு காந்தாரியின் பதில்களை கவனிக்க வேண்டும்.  எல்லா ஷத்திரியர்களும் விழியற்றவர்களே என்கிறார் அவர்.  

”அவளிடம் சொல், மலைக்கழுகுகள் கூடணைவதில்லை, கரும்பாறைகளையே தேர்ந்தெடுக்கின்றன என்று”

பின்னாளில் புத்திரசோகத்தில் தவிக்கும் திருதிராஷ்டிரரை அமைதிப்படுத்த காந்தாரியால் இயல்வது அவரது தனித்த உலகிலும் ஒர் அங்கமாக காந்தாரியால் ஆகிவிட முடிவதால்தான்.

பாண்டுவின் நிகர்வாழ்வு வேறொரு விதமானது.  குழந்தைகளைக் கொண்டு, குறிப்பாக தருமனைக் கொண்டு தன் உலகை அவர் உருவாக்கிக் கொள்கிறார்.

என் மைந்தனை தோளில் சுமந்துகொண்டிருக்கையில் நானடையும் மனமயக்குகள்தான் எத்தனை அழகியவை” என்றான் பாண்டு. “என் மூதாதையரை சுமந்துகொண்டிருக்கிறேன் என்று உணர்வேன்என் மூதாதையரின்ஊர்தியே நான்அவர்களுக்கு மண்ணைத்தொட்டு நடக்க ஊன்பொதிந்து உருவான கால்கள்அவர்களைதொட்டறிய தசைஎழுந்த கைகள்பின்பு நினைப்பேன்மண்ணாக விரிந்து கிடப்பவர்கள் என்மூதாதையரல்லவா எனஅவர்களில் ஒரு துளியை அல்லவா என் தோளில் சுமந்துசெல்கிறேன் என

பாண்டுவின் உலகினுள் குந்தி நுழைவதில்லை.

விதுரரின் நிகர்வாழ்வு வேறொரு வகையில்.  அதைப்பற்றி திருதிராஷ்டிரருடன் கருத்துப்பகிர்ந்து கொள்கிறார் அவர்.  புறத்தில் சூத அமைச்சர் எனப்படுவது, தன் எல்லைகள் அவருக்கு பொருட்டல்ல, எவ்விதமான தீவிர விழைவும் அவருக்கு அங்கில்லை.  மானுட உணர்வுகள் எதையும் நேரடியாகச் சுவைக்க முடியாத, அவற்றை அறிவாக உருமாற்றி அறிதலின் இன்பமாக மட்டுமே அனுபவிக்கும் தன் இயல்பை அவர் திருதிராஷ்டிரரிடம் கூறுகிறார்.  ஆனால் அவருக்கு பெரிதான நிகர்வாழ்வு காவியங்களின் வாசிப்பில் உள்ளது.

ஆனால் அரசேநான் அறியும் இன்னொன்று உள்ளதுஏடுகளில் நான் இன்னொரு முறை வாழ்கிறேன்அங்கேஇருப்பது அறிவுஆனால் அவ்வறிவு திரும்ப என்னுள் அனுபவங்களாக ஆகிவிடுகிறதுகாவியங்களில்தான் நான்மானுட உணர்வுகளையே அடைகிறேன் அரசேவெளியே உள்ள உணர்வுகள் சிதறிப்பரந்த ஒளி போன்றவைகாவியங்களின் உணர்வுகள் படிகக்குமிழால் தொகுக்கப்பட்டு கூர்மை கொண்டவைபிற எவரும் அறியாதஉணர்வின் உச்சங்களை நான் அடைந்திருக்கிறேன்பலநூறுமுறை காதல் கொண்டிருக்கிறேன்காதலைவென்று களித்திருக்கிறேன்இழந்து கலுழ்ந்திருக்கிறேன்இறந்திருக்கிறேன்இறப்பின் இழப்பில்உடைந்திருக்கிறேன்கைகளில் மகவுகளைப் பெற்று மார்போடணைத்து தந்தையும் தாதையும்முதுதாதையுமாக வாழ்ந்திருக்கிறேன்.”

புறத்தில் விழியற்ற திருதிராஷ்டிரர் நிகர்வாழ்வில் விழியுள்ளவர், புறத்தில் பெரிதும் துய்ப்பற்ற விதுரர் நிகர்வாழ்வில் பெருந்துய்ப்பாளர், புறத்தில் அதிகம் வாழ்நாள் பெறாத பாண்டு நிகர்வாழ்வில் நீடுவாழ்ந்தவர்.

அன்னையரின் ஆடல்களே பின்னாளில் கௌரவரிடமும் பாண்டவரிடமும் பேருருக்கொண்டன என்றாலும் அவற்றில் இம்மூவரது அகவாழ்வும் தமக்குரிய தாக்கத்தையும் செலுத்தின என்று எண்ணுகிறேன்.

திருதிராஷ்டிரர் – மழைப்பாடலின் சலுகைகள்

மந்தாரம் உந்து மகரந்தம்

மணந்தவாடை

செந்தாமரை வாள்முகத்திற் செறி

வேர்சிதைப்ப

தந்தாம்உலகத்திடை விஞ்சையர்

பாணிதள்ளும்

கந்தார வீணைக்களி செஞ்செவிக்

காது நுங்க

அனுமனின் இலங்கை நோக்கிய வான் பயணத்தில் வான்மீகி அவருக்கு வழங்கியதைக் காட்டிலும் அதிக சலுகைகள் வழங்குகிறார் கம்பர்.  அனுமனின் முகத்தின் வியர்வையை வாசம்வீசும் மந்தார மலர்களின் காற்று போக்குகிறது வானின் இசைவலரின் பிறழாத காந்தாரப் பண்ணின் வீணை இசை கேட்டு அவரது செவிகள் களிக்கின்றன.

மொத்த வெண்முரசும் அதன் முதன்மைப் பாத்திரங்களுக்கு, துணைப்பாத்திரங்களுக்கு வழங்கும் இடமும் சலுகைகளும் மிகப்பெரியவை.  அவற்றை மகாபாரதத்துடன் அல்லது பிற காவியங்களுடன் ஒப்புநோக்குவது அவசியமற்றது எனினும் ஒரு சுவாரஸ்யத்திற்காக மழைப்பாடலின் திருதிராஷ்டிரரை எடுத்துக்கொள்கிறேன்.  திருதிராஷ்டிரருக்கு ஜெயமோகன் அளிக்கும் இசை உலகு மிகப்பெரியது.  அத்துடன் பேரழகியான காந்தாரியுடன் திருதிராஷ்டிரரின் திருமணம் நிறைவேற பீஷ்மர் மீதான மதிப்பு, காந்தாரியின் கனிவு, சகுனியின் அரசியல் கணக்குகளுக்கு ஒத்து அமைவது எனப்பல காரணங்கள் இருப்பினும் திருதிராஷ்டிரரை பலரது பரிவுக்கு உரியவர் என்பதல்லாமல் ஒரு தகுதிமிக்க மாவீரராகவே நிறுத்துகிறது மழைப்பாடல்.  காந்தாரியைக் கைப்பற்றும் பொருட்டு லாஷ்கர்களுடன் ஒரு ஆக்ரோஷமான சண்டைக்காட்சி அவருக்கு வழங்கப்படுகிறது.  பொதுவாக வெண்முரசின் போர்காட்சிகள் ஒன்றை ஒன்று விஞ்சுபவை, ஒவ்வொரு நாயகருக்கும் எனப் பல அமைந்திருப்பினும் ஒவ்வொன்றும் தனித்தன்மையும் கொண்டவை.  திருதிராஷ்டிரரின் இவ்வெளிப்பாட்டில் திறனில் ஒரு சில நிமிடங்களுக்கு அவரை கம்பனின் சுந்தரகாண்டத்தின் அனுமனுக்கே நிகர்த்துகிறார் ஜெயமோகன்.

ஒடிந்தன உருண்டன உலந்தன புலந்த;

இடிந்தன எரிந்தன நெரிந்தன எழுந்த;

மடிந்தன மறிந்தன முறிந்தன மலைபோல்

படிந்தன முடிந்தன கிடந்தன பரிமா.

வெருண்டனர் வியந்தனர் விழுந்தனர் எழுந்தார்

மருண்டனர் மயங்கினர் மறிந்தனர் இறந்தார்;

உருண்டனர் உலைந்தனர் உழைத்தனர் பிழைத்தார்

சுருண்டனர் புரண்டனர் தொலைந்தனர் மலைந்தார்.

(அனுமன் நாற்படைகளையும் அழித்தல் – சம்புமாலி வதைப்படலம்)

விழிப்புலனுக்கு நல்அனுபவம் அளிப்பது பெருமழையை பெய்யக் காண்பது, பெய்யலினூடே விசைந்தாடும் மரங்கள், அதன் தழுவிப்படர்ந்து சிலிர்க்கும் கொடிகள், நனைந்த புற்கள்.  ஒரு பெருமழையின் அழகைக் காண்கையிலும் கொள்வன பல எனில் விழிகள் கொள்ளாமல் தவறவிடுவனவும் பல.  எனவேதான் ஒவ்வொரு மழையும் புதுமழை, காணதன காணப் பெறல் கண்டன புதுமை பெறல் என.  கொள்திறனுக்கு ஏற்ப முடிவிலி என தன்னை விரித்துக்கொண்டே செல்கிறது இயற்கை.  வெண்முரசின் வாசிப்பு –மழைப்பாடல் வாசிப்பும் அது போன்றதுதான்.

மழைப்பாடல் வாசிப்பு 2 – விக்ரம்

அம்பிகையும் அம்பாலிகையும் தம் குழந்தைகளை முதன்மைப்படுத்த விரும்பும் அன்னையர் மட்டுமே.  அரசியல் ஆடல்களில் கூர்மையும் நுட்பமும் கொண்டவர்கள் அல்ல.  அம்பிகையின் விருப்பம் திருதிராஷ்டிரனுக்கு செலுத்தப்பட்டது போல அம்பாலிகையின் விருப்பம் பாண்டுவிற்குள் செலுத்தப்படவில்லை.  அம்பிகை அம்பாலிகையின் அடுத்தநிலை என காந்தாரியும் குந்தியும் எனில் தன் கணவனின் இசைக்குள் நுழைந்துவிட்ட காந்தாரியை குந்திக்கு சமன்செய்ய முடியாது.  என்றபோதும் சகுனி அதை ஈடுசெய்கிறார்.  வேழம் நிகர்த்த துரியோதனனின் பிறப்பின் போதே வேழத்தை மத்தகம் பிளந்து கொல்லும் அனுமனின் கதையும் அகழ்ந்தெடுக்கப்படுகிறது.  பீமனின் பிறப்பு நிகழ்கிறது.  ஒவ்வொன்றும் எதிர்விசையால் சமன்செய்யப்பட்டு கூர்கொள்கிறது.  பாலையின் விழைவினை எதிர்கொள்ளத் தயாராகிறது கங்கைச் சமவெளியின் விழைவு.

பாரதப்பெருநிலத்தின் மீதான காந்தாரப் பாலையின் விசை இன்றுவரை மீள நிகழும் ஒன்றாகவே தோன்றுகிறது.  பாண்டவப்பிரஸ்தம் என்னும் பெயர் பின்னாளில் பானிபட் என ஆனது இங்கு வரலாற்றுக்கு புவியியல் வகுத்தளித்த பாதையை உணர்த்துகிறது.  நிலம், நீர் – கடல் என்பது கடந்து காற்றிலேறி விண்ணில் என இனி மனிதரை வைத்தாடும் விசைகள் புதிய களங்கள் வகுக்கும்போலும்.  மீண்டும் தொடங்கிய இடத்திலேயே தம் ஆடலை முடிப்பார்கள் போலும் இந்திரனும் சூரியனும்.

கர்ணனின் பிறப்பை பாண்டுவிடம் சொல்லிவிடப் போவதாக சொல்லும் குந்தி பாண்டு அதை ஏற்கும் மனநிலையில் இல்லை என்பதை அறிந்தவுடன் அதை மறைத்துவிடுகிறார்.  பின்னாளில் கான்வாழ்வில் தந்தையாகும் விருப்பத்துடன் பாண்டவரின் பிறப்பை ஏற்கும் பாண்டுவிடம், பின்னர் அவர்களிடம் பேரன்பு கொண்டவராக விளங்கும் பாண்டுவிடம் கர்ணனைப் பற்றி குந்தி சொல்லியிருக்க முடியும்.  அதை அவர் மகிழ்வுடன் ஏற்பவராகவே இருந்திருப்பார்.  எனினும் குந்தி அவ்வாறு செய்வதில்லை அதற்கான அரசியல் காரணங்கள் குந்தியிடம் உள்ளன.

குந்தியிடம் திருமணம் நிகழ்ந்த பின்னான முதல் இரவிலேயே பாண்டு தன்னுள் இருக்கும் ஆறு பாண்டுக்களைப் பற்றி சொல்கிறார்.  பாண்டுவின் ஏக்கத்தின் விழைவான அக்கனவை நிறைவேற்றி வைத்தவர் ஆகிறார் குந்தி.  எனினும் பாண்டவர் பிறப்பில் விசித்திரவீரியனைப் ஒத்தவரான பாண்டுவின் ஏக்கத்தின் விழைவிற்கும் குந்தியின் பெரும் அரசியல் விழைவிற்கும் வேறுபாடு உள்ளது.  பாண்டவர்களை அரசியல் திட்டத்திற்கான ஆற்றல்களாக பார்க்கிறார் குந்தி.  உயிர் ஏக்கத்திற்கு அருள்கிறது வான் அவ்வருளின் வரங்களைப் பெருவிழைவு தன் கரங்களில் கொள்ளும் நேரம் யாவும் திரிபடையத் துவங்கின்றன என்று தோன்றுகிறது.

பாண்டு அரசியல் விழைவுகள் அற்றவரா என்றால் ஆம் அவர் அரசியல் விழைவுகள் அற்றவர்தான்.  ஆனால் முற்றிலும் அரசியலே அற்றவரா என்றால் அவ்வாறல்ல என்று எண்ணுகிறேன.  எப்போதும் தருமனைத் தன் தோளில் சுமந்தலையும் பாண்டு குந்தியின் அரசியலில் நோக்கற்றவர் போலத் தோன்றியபோதும் அதை அறிந்தே இருந்தார் என்று தோன்றுகிறது.  பின்னாளில் குந்தியே அச்சமடையும் தருமன் பாண்டுவின் தயாரிப்புதானே? ஒருவகையில் அதில் குந்திக்கான பாண்டுவின் செய்தி பொதிந்துள்ளது என்று தோன்றுகிறது.

இளைய வியாசரெனத் தோற்றம் கொண்ட விதுரர் பீஷ்மருக்கு பிடித்தமானவர்.  திருதிராஷ்டரனின் பேரன்பைப் பெற்றவர்.  சத்தியவதியால் வளர்க்கப்பட்டவர், நகையாடலில் அவர்தன் பேரரசியென்னும் வேடம் கலைத்து சிறுமியென உணரச்செய்பவர்.  விதுரருடனான சந்திப்பின் போது தான் கவலையற்றிருப்பதாகச் சொல்கிறார் சத்தியவதி.  பாட்டிக்கும் பேரனுக்குமான உறவு இவ்வாறிருக்க விதுரர் எவ்வகையிலும் தன் அன்னை சிவையைக் பொருட்டெனக் கருதியவர் அல்ல.  அம்பிகை அம்பாலிகை சிவை என்னும் வரிசையில் முன்னிருவரும் தம் கனவு கலைத்து கான்புகுகிறார்கள் எனில் சிவை விதுரரின் பொருட்டு தன் நிறைவேறாக் கனவினால் தன்னைத்தானே ஒடுக்கி சுருக்கி தனிமை கொள்கிறார்.  சத்தியவதிக்கும் சிவை ஒரு பொருட்டல்ல.  தன்னால் கவர்ந்துவரச் செய்யப்பட்ட அம்பிகை அம்பாலிகையின்பால் கொண்ட அளவிற்கு சிவையின் மீது அவர் கருத்து கொள்வதில்லை.

குந்தியும் தன் அன்னையின் மீது அணுக்கம் அற்றவர்.  அவ்வகையில் விதுரரை ஒத்தவர்.  விதுரருக்கும் குந்திக்குமான உறவு நுட்பமான ஒன்று.  நடுவுநிலை என்றபோதும் குந்திக்கு இசைவானதாகவே அஸ்தினபுரியில் அவரது அரசியலாடல்கள் இருக்கின்றன என்று எண்ணுகிறேன்.  விதுரர் புதிரானவராகவே தோன்றுகிறார்..  பீஷ்மருடனான தன் உரையாடலில் எதிர்காலத்தில் புதிதாக எழுச்சி பெறக்கூடிய மக்கள், எழக்கூடிய மௌரியப் பேரரசு உள்ளிட்ட அரசுகள் பற்றி கூறும் அவரது கணிப்பு, தீர்க்கதரினம் அவரது அறிவுத் திறனைக் காட்டுகிறது.  எனினும் சூதர் என்னும் தன் எல்லைக்குள் நிற்பவர் அவர்.

மழைப்பாடல் வாசிப்பு 1 – விக்ரம்

கருணையில் அருளப்படும் வான்மழை”கெடுப்பதூஉம்” என்று எவ்வாறு திரிபுகொள்கிறது? செங்குருதியின் மழை என பெருவெள்ளம் என. வாழ்விக்கும் ஒன்றை அழிவின் கருவியாக மாற்றியது எது? தவளையின் பாடல் எக்கணத்தில் நாகங்களைத் தருவிக்கத் தொடங்குகிறது? முதற்கனல் நாகங்களை எனில் மழைப்பாடல் தவளைகளைக் குறீயீடக்குகிறது.  நீரிலும் நிலத்திலும் உரிமை கொண்டு விண்ணில் எழுகையில் நாகத்தின் வாய்க்குள் விழும் தவளை.

ஒருவேளை மகதத்துடன் இணைந்து கொண்டிருப்பின் நனவாகியிருக்கக் கூடிய காந்தாரத்து சகுனியின் பாரதப்பெருநிலம் கொள்ளும் பெருங்கனவு இளவரசன் பிருகத்ரதனின் செய்தியுடன் வரும் ”சுகோணன்” என்னும் பருந்தை அவரே அறியாமல் அம்பெய்து வீழ்த்திவிடும் – அது ஓநாய்க்கு உணவாகவும் ஆகிவிடும் ஊழால் திரிந்துவிடுகிறது.

சத்தியவதி தன் பெருங்கனவிற்கு என மகற்கொடை வாயிலாக விழைந்த காந்தார உறவென்னும் விசை பின்னர் அவருக்கே அச்சமூட்டுகிறது.  சகுனியைக் கண்டு அஞ்சுகிறார் சத்தியவதி.  பிழை இழைத்துவிட்டதாக அவர் கருதும் நேரம் அந்த விசையை சமன் செய்ய அதனை விஞ்சும் எதிர்பக்க விசையாக சகுனியே அஞ்சும் ஒருவராக எழுகிறார் குந்தி.

சத்தியவதியின் சகுனியின் பெருங்கனவிற்காக என அல்லாமல் பீஷ்மரும் காந்தாரியும் கொள்ளும் கனிவினால் ஏற்படுகிறது அஸ்தினபுரிக்கும் காந்தாரத்துக்குமான உறவு.  அவ்வாறல்லாமல் பெருவிழைவுடன் துவக்கம் முதலே திட்டமிட்டு அனைத்தையும் வெற்றிகரமாக நிகழ்த்தும் அச்சமூட்டும் அரசியல் சூழ்மதியாளராகத் திகழ்கிறார் மழைப்பாடலின் குந்தி.

கம்சனின் வீரர்களிடம் இருந்து தப்புவது, தன் சுயம்வரத்தின் போட்டியை தான் பாண்டுவை மணம்புரியும் வகையில் அமைப்பது பாண்டுவுடன் கான் வாழ்வில் இருக்கும்போதும் அஸ்தினபுரியில் அரசியல் ஆடல்புரிந்துகொண்டிருப்பது பாண்டவர்களின் பிறப்பை வகுப்பது பீமனின் பிறவிக் கணத்தைத் திரிப்பது என ஒவ்வொன்றிலும் முற்றும் அரசியலாளராகவே இருக்கிறார்.  ஒருவகையில் குந்தி இல்லாவிட்டால் சகுனியை கொண்டுவந்ததன் பொருட்டு சத்தியவதி கொண்டிருக்கக்கூடிய பெரும் குற்றவுணர்ச்சியிலிருந்து அவரை குந்திதான் காப்பாற்றுகிறார்.

பாண்டுவின் மரணத்தினால் தம் பகை என்னும் கனவிலிருந்து விழித்துக்கொள்கிறார்கள் அம்பிகையும் அம்பாலிகையும்.  அவர்கள் நாடு நீங்க அவர்களுக்கு அக்கனவை கைளித்திருந்த சத்தியவதியும் அவர்களுடன் இணைந்துகொள்கிறார்.  சத்தியவதியும் விழித்துக்கொண்டு விட்டவர்தான் – பாண்டுவின் மரணத்தினால் அல்ல மாறாக தன் போன்றே தன்னைவிட பெருவிழைவுடன் இளம்பெண்ணான குந்தி தன் இடத்தை நிரப்ப வந்துவிட்டதனால் பெரும் கனவுகள் ஊழால் திரிபடைந்துவிட அரசியல் ஆடல்களின் அபத்தத்தை உணர்ந்து கொண்டுவிட்டதனால். சகுனி மட்டும் தன் கனவைத் தொடர்ந்து செல்ல விதிக்கப்பட்டிருக்கிறார்.

திருதராஷ்டிரனுக்காகக் கனியும் பீஷ்மர், அரியணை விழைந்தபோதும் பாண்டுவின்பால் அன்பில் உயர்ந்து நிற்கும் திருதராஷ்டிரன், அரசியல் விழைவற்ற – பேரன்பு கொண்ட தந்தை என்று நிறைவடையும் பாண்டு, மணத்தூதில் அவமதித்தவர்களிடமும் பெருந்தன்மை காட்டும் – திருதராஷ்டிரனின் உலகில் தன்னை இணைத்துக்கொள்ளும் காந்தாரி, தன்முனைப்பு இல்லாமல் முற்றும் குந்திக்கு பணியும் மாத்ரி எனப் ஒருபுறம் சிறுமைகளில்லாதவர்கள் இருக்க அவர்களின் திசைகளை தம் பெருவிழைகளின் பொருட்டு அமைக்க முயல்பவர்களாக இருக்கிறார்கள் சத்தியவதியும் சகுனியும் குந்தியும்.  மூன்றாம் பெருவிசையாக மாமனிதர்களை திசை பெயர்க்கும் பெருவிழைவுகளை தன்போக்கில் திசை பெயர்க்கும்  பணியைத் துவக்குகிறது ஊழ்.