நெடுங்குருதி வாசிப்பனுபவம் – காளீஸ்வரன்

2007 ஜுலை மாதம், நள்ளிரவு, டெல்லிக்கருகில் நொய்டாவில் ஒரு விடுதியறையில் நான் படித்துக் கொண்டிருந்தேன். வெய்யிலோ மழையோ நானறிந்த அதிகபட்சம் என்பது நான் அங்கிருந்த இரண்டு மாதங்களில் கண்டதுதான். பெருமழை பொழிந்துகொண்டிருந்த அந்த நள்ளிரவில், நான் மட்டும் கடும் வெப்பத்தை உணர்ந்தேன். மட்டுமல்ல, மனதளவில் மிகவும் தனியனாக உணர்ந்திருந்த நாட்கள் அவை. அத்தனிமை உணர்ச்சியின் வலி அவ்விரவில் மென்மேலும் பெருகியது. இவ்விரண்டுக்கும் காரணம் ஒன்றே, அது நான் படித்துக்கொண்டிருந்த புத்தகம் “நெடுங்குருதி”. கதையின் இயல்பாலும், என்னுடைய அப்போதைய மனநிலையினாலும், எப்போது வேண்டுமானாலும் நான் அப்புத்தகத்தை விலக்கி விடுவதற்கான சாத்தியங்கள் அதிகமிருந்தது. ஆனால், படிக்கத்துவங்கிய பின்னர் கூறுமுறையிலிருந்த வசீகரம் என்னை கட்டிப்போட்டது. பகலில் IT நிறுவனத்தின் ஆரம்பநிலை ஊழியனாக நொய்டாவிலும், பின்னிரவுகளில், நாகுவாக, ரத்னாவதியாக, ஆதிலட்சுமியாக ”வேம்பலை”யின் தெருக்களிலும் வாழ்ந்துகொண்டிருந்த நாட்கள் அவை. இம்முறை மறுவாசிப்பு சொல்முகம் வாசகர் கூடுகைக்காக.

*

நாகு, அவனது பெற்றோர், நாகுவின் அடுத்த தலைமுறை என ஒரு குடும்பத்தின் கதையையும், அதனூடே, அதற்கிணையாக வெய்யிலுடன் நிரந்தர உறவேற்படுத்திக் கொண்ட வேம்பலை கிராமத்து மக்களின் வாழ்க்கையையும் பிண்ணிச் சொல்லப்பட்ட கதை “நெடுங்குருதி”. இந்நாவல், கோடை, காற்று, மழை, குளிர் என நான்கு பருவ காலங்களாக பிரிக்கப்பட்டிருந்தாலும், என்னைப் பொருத்தமட்டில், இந்நாவலின் களமும் காலமும் கோடை மட்டுமே. வேறு பருவ காலங்களில் சொல்லப்படும் கதையில் கூட, கதாப்பாத்திரங்களின் வாழ்வில் நாம் காண்பது கோடையின் வறட்சியையே. 

*

நாகுவின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் துவக்க அத்தியாயங்களிலே உண்டாகும் சண்டை கடும் கோடை ஏற்படுத்தும் எரிச்சல் அன்றாட வாழ்வில் நிகழ்த்தும் வன்முறைக்கான சரியான உதாரணம். நாகுவின் அப்பா உப்பை மிதித்ததால் உண்டான எரிச்சலாலும் கூடவே அதைக் கழுவக்கூட நீரில்லாத சூழலில் மீதான வெறுப்பினாலும் விளைகிறது அந்தச் சண்டை. நாவலின் பெரும்பாலான மாந்தர்களின் இயல்பிலேயே வெளிப்படும் எரிச்சல் வெயில் காயும் பூமியின் ஒரு கொடைதான்.

*

நாவலின் / வேம்பலையின் பெரும்பாலான ஆண்கள் சுயநலமிகளாக, சூல்நிலைக் கைதிகளாக காட்சிப்படுத்தப்பட்ட போதும், பெண்கள் எந்நிலையிலும் கருணையைக் கைக்கொள்பவர்களாகவே உள்ளனர். கோவிலின் வாசலின் வெள்ளரிப்பிஞ்சு விற்கும் தன் அண்ணியிடம் நாகுவின் அம்மா தன்னிடமுள்ள பணத்தை தருமிடம் அதற்கொரு உதாரணம். அந்த சந்தர்ப்ப்பத்தில் எழும் அவளது அண்ணியின் அழுகையை சுற்றிலுமிருப்பவர்கள் ஒரு பொருட்டாகவே கருதாமலிருப்பது அந்நில மக்கள் ஒவ்வொருவருக்குமே அப்படி அழுவதற்கான வாழ்க்கையே விதிக்கப்பட்டிருப்பதற்கான ஒரு அடையாளம். அடுத்தவர்களால் கவனிக்கப்படாமல் போகும் கண்ணீர்தான் பெரும் துரதிர்ஷ்டம் மிக்கது.

வெவ்வேறு சந்தர்ப்பங்களில், வாழ்வின் அலைக்கழிப்புக்கு ஆளாகி, ஊரை விட்டு வேறு ஊர் தேடிப்போகும் தன் மக்களை, விதியின் மாயக்கரங்களால் மீண்டும் மீண்டும் தன்னுள் இழுத்துக்கொள்கிறது வேம்பலை. நாகுவுக்குள், இறந்துபோன அவனுடைய இரண்டாவது அக்கா நீலாவின் நினைவுகள் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. போலவே அவனது அப்பாவுக்கும் நீலா மீது இருப்பது பெரும் வாஞ்சை. ரேகை சட்டத்தின் விதிகளுக்குட்பட்டு மீண்டும் வேம்பலைக்குத் திரும்பிய பின்னர் நாகுவின் அப்பா செய்யும் முதல் வேலை தன் மகளைப் புதைத்த இடத்தைத் திருத்துவதே. ஒரு மழைக்காலத்தில் மகளின் புதைகுழியிலிருந்து வரும் மண்புழுவை தன் வீட்டில் சேர்ப்பித்து கொஞ்சம் ஆறுதலடைகிறார் அவர்.

*

பகலில் வெய்யிலின் ஆளுமைக்கு சற்றும் குறைவில்லாதது வேம்பலையின் இரவுகள். இருளன்றி வேறெதுவும் அறியா இரவுகள் அவை. ஒருவகையில் பகலெல்லாம் வாட்டி வதக்கிய வெய்யிலுக்கான (வெளிச்சத்துக்கான) ஒரு பெரும் ஆசுவாசமே அவ்விருள். களவுக்குப் போகும் வேம்பர்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமானது என இருளையே சொல்ல முடியும். காயாம்பு அக்கிராமத்துக்கு முதன்முறையாக மின்சாரத்தை கொண்டுவரும் போது அக்கிராமமே அதை எதிர்ப்பதற்க்கு இவ்விரண்டும் காரணமாக அமையந்திருக்கக்கூடும் எனவும் எண்ணத் தோன்றுகிறது. மரித்துப்போனவர்கள் மீண்டும் வாழ்வதான ஒரு சாத்தியக்கூறை தன்னுள் கொண்டிருப்பது இருள் மட்டும்தான். இரவில் அப்பாவும் அவனும் மட்டும் உணவுண்ணும் போது, நாகு தன்னைச் சுற்றிலும் தன்னுடைய அம்மா, அக்கா என அனைவரையும் உணர நேர்வதும் இருளின் கருணையினால்தான்.

இந்நாவலின், முக்கியமான இன்னொரு அம்சம் நாவலின் போக்கிலேயே கலந்துள்ள நாட்டார் தன்மை. நடக்க முடியாத ஆதிலட்சுமி நாகுவிடம் கூறும் கதைகள், குறிப்பாக இறந்தவர்கள் பறந்து போனதை தான் கண்டதாக ஆதிலட்சுமி கூறுவது, தாழியில் வைத்து மூடப்பட்ட சென்னம்மாவின் தாகம் அவ்வூர் மக்கள் எடுத்து வரும் குடத்து நீரைக் காலி செய்வது, இறந்து போனவர்கள் வாழும் இன்னொரு வேம்பலை கிராமம், சிங்கிக் கிழவன் இறந்துபோன குருவனுடன் ஆடு-புலி ஆட்டம் ஆடுவது என விரித்தெடுக்க சாத்தியமுள்ள நாட்டார் கதைகள் நாவலினூடே நிறைந்துள்ளன.

வேம்பலை கிராமம் பற்றிய சித்திரங்களும், வேம்பர்களின் வாழ்க்கைமுறையும் மிகவும் குறைவாக, அதே சமயம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன். வெல்சி துரையால் 42 வேம்பர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போதிலும், அவர்களில் கூட்டத்திலிருந்து எவ்வித உணர்ச்சிகளும் வெளிப்படாதிருப்பது, தேடிவரும் காவலர்களிடமிருந்து தப்பிக்க நீர் நிரம்பிய கிணற்றுள் மறைந்திருப்பது, ரேகை சட்டம் அமுலுக்கு வந்த பின்னர் ஊரில் அமைக்கப்பட்ட காவல் நிலையத்தை எரிப்பது என பல சம்பவங்கள் வேம்பர்களின் மன உறுதியைக் காட்டுகின்றன. ஒருவகையில், வேம்பர்களின் அழுத்தமான பாத்திரப்படைப்பு எனக்கு நாவலில் கூறப்படும் ஊமைவேம்பினை நினைவூட்டியது.

வெய்யிலின் உக்கிரத்தை, வறட்சியை, கண்ணீரை, வலியைப் பேசும் நாவலின் ஒரே ஒரு இடம் மட்டும் கொஞ்சம் சிரிக்க வைத்தது. அது சிங்கிக்கிழவன் தன் வாலிபத்தில் மாட்டுவண்டியை மறித்து களவு செய்ய முயலுமிடம். சிறுமிகளிடமிருந்து அவன் களவு செய்வதில்லை என்பதைத் தெரிந்துகொண்ட வண்டிக்காரர்கள், தங்கள் நகைகளை வண்டியிலிருக்கும் சிறுமி கழுத்தில் அணிவிப்பதும் அதை தொடர்ந்து நடக்கும் சிறு உரையாடலும் கடும் வெய்யில் பயணத்தில் வாய்க்கப்பெற்ற சிறு நிழல் போன்றவை .(இதற்கிணையான காட்சி எஸ்.ரா. வசனமெழுதிய அவன் இவன் திரைப்படத்திலும் இருக்கும்)

நாவலின் கதை மாந்தருக்கிணையாக இன்னுமொரு பாத்திரமாக வெயில் வார்க்கப்பட்டுள்ள இடங்களும், வெய்யில் குறித்த வர்ணிப்புகளும் இந்நாவலின் கவித்துவம் மிளிருமிடங்கள். உதாரணங்களாக

  • கத்தியை சாணை பிடிப்பது போல, தெருவை வெயில் தீட்டிக் கொண்டிருந்தது.
  • கழுத்தடியில் ஒரு கையைக் கொடுத்து நெறிப்பதுபோல், வெயில் இறுக்கத்துவங்கியது.
  • விரியன் பாம்பைப் போல உடலை அசைத்து அசைத்து சீறியபடி போய்க் கொண்டிருந்தது வெயில்.
  • வகுந்துருவேன் வகுந்து. சூரியன்னா பெரிய மசிரா ? சங்கை அறுத்துப்புடுவேன் (சிங்கிக்கிழவன்)
  • கிணற்றுத் தண்ணீரில், வெயில் ஊர்ந்து ஊர்ந்து ஏதோ எழுதுவதும் அழிப்பதுமாக இருந்தது.

ஆகிய இடங்களைச் சொல்லலாம்.

வெயிலுக்கு நிரந்தரமாய் வாக்கப்பட்டு, நீரின்றி சபிக்கப்பட்ட எந்தவொரு இந்திய கிராமத்தின் சித்திரமும் வேம்பலை கிராமத்துக்கும் பொருந்தும். வரலாற்றின் கொடூரப் பக்கங்களில், கால சூழ்நிலைகளால் மைய மக்கள் கூட்டத்திலிருந்து விலக் நேர்ந்துவிட்ட இனக்குழுக்களுல் வேம்பர்களும் உண்டு. 

*

கடும் கோடையில் ஓரிரு குடங்கள் நீருக்காக சில கிலோமீட்டர்கள் அலைய நேரிட்ட என்னுடைய பாட்டிமார்கள், கடும் வெயிலில் புழுதி பறக்க விளையாடிய வடுகபாளையம், மணியம்பாளையம் கிராமத்து காடுகள், சூடு பிடித்துக் கொண்டு தூக்கம் தொலைத்த கோடைகால இரவுகள் என என் பால்யத்தின் நினைவுகளை கிளர்த்தெழச் செய்தது “நெடுங்குருதி”.

முதற்கனல் வாசிப்பனுபவம் – விக்ரம்

வேள்விமுகம் முதல் மணிச்சங்கம் வரை

சொல்முகத்தின் வெண்முரசு கூடுகையை முன்னிட்டு முதற்கனலை மறுவாசிப்பு செய்தது உள்ளம் நிறைத்த அனுபவமாக இருந்தது.  நாகர்குலத் தலைவி மானஸாதேவி தன் மகன் ஆஸ்திகனுக்கு புடவியின் தொடக்கம் முதல் தனக்கு அவன் பிறந்தது வரை நாகர்குல வழக்கில் கூறுவதில் தொடங்கி அஸ்தினபுரியில் பேரரசன் ஜனமேஜயன் நடத்தும் சர்ப்பசத்ரமென்னும் உலகின் மொத்த நாகங்களையும் அழித்துவிடும் பெருவேள்வியினை ஆஸ்திகன் நிறுத்துவதும் அதன் தொடர்ச்சியாக அவனுக்கும் ஜனமேஜயனுக்குமான கருத்து முரண்பாட்டை வியாசர் ஆஸ்திகன் தரப்பில் சரியே என்று தீர்ப்பளித்து தொடர்ச்சியாக மாபாரதமென்னும் அவரது ஸ்ரீஜய காவியம் வைசம்பாயனரால் பாடத்தொடங்கப்படுவது வரை சென்று அமைகிறது முதற்பகுதியான வேள்விமுகம்.  நாகங்களை இச்சை மற்றும் அகங்காரத்தின் குறீயீடாக கொண்டு அந்த அடிப்படை விசைகளே புடவின் உயிர் இயக்கத்திற்கு காரணமாக அமைவதும் அவையில்லாமல் உயிரோட்டமற்றதாக புவி வாழ்க்கை ஆகிவிடும் என்பதைக் கூறுகிறது.

அஸ்தினாபுரியென்னும் பிரமாண்ட நகரை அறிமுகம் செய்து அதன் பெருமைமிகு அரசர் நிரை கூறி இன்று அது எதிர்கொண்டிருக்கும் சிக்கலை அறிமுகம் செய்கிறது பொற்கதவம்.  பீஷ்மர் சத்தியவதியின் ஆணைப்படி விசித்திரவீரியனுக்காக காசி மன்னனின் புதல்விகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை கவர்ந்துவர அவர் உள்ளம் கொள்ளும் அறச்சிக்கலைக் கடக்க வியாசரின் விடையைத் தெரிவி்த்து அமைகிறது இப்பகுதி.  தீர்கசியாமர் என்னும் பெரும் சூதர் பீஷ்மருக்கு கூறுமுறைமையில் வியாசரின் துவக்கம் கூறப்படுகிறது.

காசியில் நடைபெறும் சுயம்வரமும் அங்கு சென்று பீஷ்மர் அக்கன்னியரைக் சிறையெடுப்பதில் தொடங்கி சால்வ மன்னனாலும் தந்தை பீமதேவனாலும் பீஷ்மராலும் புறக்கணிக்கப்பட்டு அம்பையென்னும் வடிவில் மாபெரும் எதிர்காலப் போர் ஒன்றிற்கான முதற்கனல் விழிகாணும் விதமாக எழுந்து துலங்குவதை கூறி மிகப்பொருத்தமாக எரியிதழ் என்று தலைப்பு கொள்கிறது அடுத்த பகுதி.  எரியின் இவ்விதழ் அதன் முதற்தொடக்கமாக தாட்சாயணியென்னும் சதிதேவியைத் காட்டுகிறது.  தட்சனென்னும் நாகத்தின் மகளாகப் பிறக்கும் அவள் இறைவனின் விண்ணின்பால் மீண்டுற தனக்கான சர்ப்பசத்திர வேள்விபோல் முன்னம் எரிபாய்ந்த இறைவியாவாள்.  அவ்விறைவியின் எரிதல் அணையாமை கூறி அம்பையின் அன்னை அம்பையையே கருதி நெருப்பின் காயமுற்று உயிர்துறப்பது வரை செல்கிறது அணையாச்சிதை.  சூதர்கள் அம்பையைக் குறித்து பாடுவதை அவள் சீற்றம் கொண்ட தெய்வ உருக்கொண்டதை அவளது கனலைப் பெற்றுக்கொள்ள, பெண்பழியின் கணக்கைத் தீர்க்க, உத்திர பாஞ்சாலத்தின் மன்னன் தவிர பிறர் பீஷ்மரை அஞ்சி தவிர்ப்பதை விசித்திரவீரயன் தன்னை முன்னிட்டு அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதியால் தவிப்புற்று அவளைத் தேடிச்சென்று பணிவதை அவள் அவன்பால் அருள் கொள்வதை கூறுகிறது.

புதிய பெருநகர் நுழையும் அம்பிகையும் அம்பாலிகையும் கொள்ளும் எண்ணங்களும் அச்சிறுமிகளின் நடத்தையும் சுவாரஸ்யமானவை, அவர்கள் விசி்த்திரவீரியனை மணமுடிப்பது முதலில் வெறுத்து பின் அவனை கனிந்து அம்பிகை ஏற்று காதல் கொள்வது அவன் மறைவது வரையிலான பகுதி மணிச்சங்கம்.  அம்பிகையும் அம்பாலிகையும் உண்மையில் அம்பையைவிட அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற பரிவு தோன்றுகிறது.  இப்பகுதியில் விசித்திரவீரியன் அவனது தந்தை சந்தனுவையும் தன் உடன்பிறந்த பீஷ்மரென்னும் மாமனிதனையும் தீர்க்கசியாமரின வாயிலாக உணர்ந்துகொள்கிறான்.  அம்பையின் கனல் எத்தகையது என்றபோதும் அதன் பழி தன்னைத் தொடாத உயரத்தில் இருப்பவர் பீஷ்மர் என்ற எண்ணம் ஏற்பட்டது.  அறத்திற்கும் அறமின்மைக்குமான இடத்தில் அல்ல அவர் முன்னம் பழம்பிறப்பில் சிபியென கூட அவர் அறத்திற்கும் அறத்திற்குமான எல்லையில் அல்லது அறத்திற்கும் பேரறத்திற்குமான சந்தியில் நிற்பவராகவே காண்கிறார்.
வியக்கத்தக்க வகையில் அல்லாமல் இங்கு பீஷ்மருக்கு பேரறத்தின் முன்னம் மனித அறத்தின் எல்லை உணர்த்தும் வியாசரே பின்னாளில் அதையே ஜனமேஜயனுக்கு உணர்த்துபவராகவும் இருக்கிறார்.  ஜனமேஜயனுக்கு மட்டுமல்ல ஜெயமோகனாக நமக்கும் அவரே இன்று வெண்முரசறைந்து உணர்த்துகிறார்.

எரியிதழ், அணையாச்சிதை, மணிச்சங்கம் என்ற இம்மூன்று பகுதிகளில் மைய ஓட்டத்திற்கு இணையாகச் செல்லும் புராணக்கதைகள் ஒன்றை ஒன்று பிரதிபலித்துக்கொள்ளும் ஆடிகள் போல.  பெண்ணின் துயரும் சீற்றமும் விதியும் என தாட்சாயணி, பெண்ணின் வெற்றி என மகிஷனை வென்ற இறைவி, ஆண்பால் கொள்ளும் கனிவு என சத்தியவானைத் தொடரும் சாவித்ரியின் கதை.  இதில் ஒரு படிநிலைபோன்ற அமைவு இருக்கிறது.
அம்பிகை விசித்திரவீரியன்பால் கொள்ளும் காதல், அவர்களது உரையாடலின் தருணங்கள் இனியவை.  அவன் தன் பேரன்னை சுனந்தையின் துயரமிக்க வாழ்வை அவளுக்குக் கூறுகிறான்.  அதேவிதமான மக்கட்பேறு என்ற ஒரு காரணத்தின் பொருட்டு துயர் திணிக்கப்பட்டவர்கள் தானே அவளும் அம்பாலிகையும்.

சித்திராங்கதன் இங்கு திகழாதவனாகவே செல்கிறான்.  விசித்திரவீரியன் குறுகிய ஆயுள்கொண்ட போதும் தன் இயல்பால் அனைவரையும் வெல்கிறான்.  அன்னை சத்தியவதியை மட்டும் அவன் வென்றானா என்பது என் அய்யமே.  அவனுக்கும் அமைச்சர் ஸ்தானகருக்குமான நட்பு சுவையானது.  அவனை இறைவன் என்றுகொள்ளும் நேசம் உடையவர் அவர்.  வேறு ஏதும் கடமை தந்துவிட வேண்டாம் இதுவே என் வாழ்வின் நிறைவு என்று அவன் மறைவில் துறவைத் தேர்ந்துகொள்கிறார் அவர்.

இங்கு பெண் உறும் துயர் என்றாலும் கூட அவை ஷத்திரியப் பெண்களுக்குரியவையாகவே இருக்கின்றன.  மீனவக் குலத்தவரான பேரரசி சத்தியவதியும் கங்கையும் எவ்வகையிலும் தங்கள் சுதந்திரத்தை இழந்தவர்கள் அல்ல.  தாட்சாயணி, சுனந்தை, அம்பை ஒரு நிரை என்றால் சீதையும் அதன் பிறிதொருவகை என்ற எண்ணம் தோன்றுகிறது.

எண்ணற்ற நுண்மைகள் கொண்டதாக இருக்கிறது முதற்கனல்.  பாலாழி கடையும் தேவர்கள்-அசுரரின் புராணக்கதை கூறப்படுகிறது.  நஞ்சு இல்லாமல் வாழ்க்கை இல்லை நஞ்சைக் கடக்காமல் மெய்மை இல்லை.  கடத்தற்கரிய நஞ்சை கடக்கத் தேடி நுழைபவர்களுக்கு அவர்களுக்கான நீலகண்டனை கண்டடைய பெரும் இணை வாழ்வைத்தரச் சித்தமாக இருக்கும் வெண்முரசின் திருஆல வாயிலாக இருக்கிறது மெய்மை நோக்கின் இந்த முதற்கனல்.

முதற்கனலின் முதல் உரசல் – ஆர். ராகவேந்திரன்

வெண்முரசு முதற்கனல் வாசிப்பு -வேள்விமுகம் முதல் மணிச்சங்கம் வரை

வெண்முரசு நூற் தொகையின் முதல் புத்தகமான முதற்கனல் வேசர  நாட்டில்  தொடங்குகிறது. நாக அன்னையான  மானசா தேவி தனது மகன் ஆஸ்திகனுக்கு  படைப்பின் துவக்கத்தை சொல்லி  அவனுக்கு ஒரு கடமையை சொல்லாமல் சொல்கிறாள். குழந்தைப் பருவத்தை  இன்னும் கடந்திராத நைஷ்டிக பிரம்மச்சாரியான ஆஸ்திகன்  வடக்கை நோக்கி நடக்கத் துவங்குகிறான். 

நாகங்கள் 

இந்தியா முழுவதும் நாகங்களுக்கு கோயில்கள் இருக்கின்றன. ஹரித்வாரில்  மலை மேல் மானசா அன்னைக்கு அமைந்துள்ள கோயில் புதருக்குள் புற்று போல வான் நோக்கி நிற்கிறது.   இவ்வன்னையின் வழிபாடு இந்தியாவில் எங்கும் பரவி உள்ளது. குறிப்பாக வங்கத்திலும் இன்றைய ஆந்திரத்திலும் . ஏன் பிற விலங்குகளை விட  நாகத்திற்கு அதிக வழிபாடு ? ஆதியில் தந்த அச்சம் மட்டும்தானா காரணம்  ?

 பொழுதிணைவு  வணக்கம் என்று ஜெயமோகன் குறிக்கும் சந்தியா வந்தனத்தின் ஒரு பிரார்த்தனை  நர்மதை நதியிடம் வேண்டுகிறது.  நாகங்களை ஜனமேஜய வேள்வியிலிருந்து காத்த ஆஸ்திகன் என்னை நச்சரவங்களில் இருந்து காக்கட்டும் என்கிறது.  நாகங்கள் இந்திய  மனத்தில் ஏற்படுத்திய தாக்கம் வரலாற்றின் அறியாத பக்கங்களில் இருக்கிறது.  அதை எளிய  மானுட ,உளவியல்  கொள்கைகளால் முழுதறிய முடியவில்லை.

குகையில் சொட்டும் தென் 

ஜரத்காரு முனிவர் குகையின் மேலிருந்து சொட்டும் தேனை மட்டும் பருகி தவம் புரிந்தார் என்பது மிக அழகிய உவமை . யோகத்தில் கேசரி முத்திரை செய்து நாவை உள்மடித்து கபாலத்தை தொடும்போது உள்ளே சொட்டும் தேனை குதம்பை  சித்தர்  

“ மாங்காய் ப் பாலுண்டு மலை மேல் இருப்பார்க்கு தேங்காய்ப் பால் ஏதுக்கடி” என்கிறார் 

நாகம்  – அகந்தை, காமத்தின் பரு உரு 

சர்ப்ப சத்ர யாகத்தில் ஜனமேஜயன்  ,போருக்கு அடிப்படையாக இருக்கும்  அகந்தை மற்றும் காமத்தை மொத்தமாக அழிக்கும் நோக்கம்  சொல்லப் பட்டிருக்கிறது .  வேள்விக்கு ஒரு காவலன், ஒரு ஹோதா, ஒரு எஜமான் , கார்மிகர்  தேவை.  பிற்காலத்த்தில் வேதாந்தம் உருவாகி வந்தபோது வேள்வி என்பதே மனிதன் புரியும் செயல்கள் என்று பரிணாமம் அடைகிறது. ஜனமேஜய னின்  யாகத்தில்  வேதம் புரிபவர்கள் தங்கள்  இச்சைகளையும்  அவியாக்க  கையால் சைகை செய்யும்போது அவை பாம்பின் அசைவுகளை   ஒத்திருப்பதாக  கற்பனை செய்கிறார். வெண்முரசின் சடங்கியல்   பற்றி அறிய ஒரு தனி வாசிப்பு வேண்டும்.  வாழ்நாள் பணியாகும் அது

அதர்வ வேதம் 

இந்து மதம் தன்னை ‘தூய்மை’ செய்து  கொண்டே வளர்ந்த போது  , நூற்றாண்டுகளில்  வழக்கு  ஒழிந்து போய்விட் ட  முறைமைகளை அவற்றின் அக்காலத்  தேவையைப் புரிந்து  கொள்ள முயற்சிப்பது  வெண்முரசின் ஒரு முக்கிய இழையாக  இருந்து வருகிறது. அதர்வ வேதத்தின் மந்திரங்களைக் கொண்டு யாகம் இயற்றப் படுகிறது.  ஒன்பது துளைகளையும் முறைப்படி அடைத்துக் கொல்லப் பட விலங்குகள் பலி  கொடுக்கப் படுகின்றன. வெண்முரசின் சடங்கியல் பற்றி தனியே ஒரு வாசிப்பு தேவைப்படுகிறது

  காசி இளவரசிகள் –   முக்குணங்கள்  

அம்பை, அம்பிகை, அம்பாலிகை மூவரும் சத்வ , ரஜஸ் , தமோ குணங்களின்  வெளிப்பாடாக  காட்டப்   படுகிறார்கள். அம்பை ரஜோ  குணத்தின் வடிவம். அவள் செந்நிறமாக உடையணிந்து பின்னர்  வாராஹி வாகனத்தில் பிடாரியாக உருவெடுப்பதன் அனைத்து உளவியல் விசை களையும்  துவக்கத்தில் கொண்டிருக்கிறாள். ஆயினும் பிற இளவரசிகளுக்கு சத்வ , தாமஸ குணங்கள் பொருந்துவது புரியவில்லை. தாமச குணத்தை புரிந்து கொள்வது கடினம் தான் . தமோ குண வடிவு கொண்ட அம்பிகை இசையிலும்  சத்வ குணம் மீதுற்ற  அம்பாலிகை  ஓவியத்திலும் திறன் கொண்டவர்கள் 

வேள்வியில் தடைகள் 

தொழில் பிரிவுகள் அவற்றுக்குரிய முழு அறிவில் செறிந்திருந்தன. பந்தல் சமைக்கும் வினைஞர்  தனது துறைசார் அறிவை காலம் கடந்த தேடலுடன் இணைத்துக் கொள்கிறார். வெண்முரசின் சூதர்கள் பணிப்பெண்கள் சமையல் புரிவோர், முடி திருத்துவோர் , கொல்லர், மருத்துவர்   காட்டும் அனுபவ அறமும் அதன் வழி வந்த  ஞானமும்  பாரத தேசத்தின் செயல்முறை வேதாந்தத்தின்  தரிசனத்தில் விளைந்தவை. காசி அரசனின் வினவிற்கு வேள்விப் பந்தல் அமைத்த முது கலைஞர்  சொல்லும் மறுமொழி தனது தன்னறத்தில்  தோய்ந்த எளிய பாரதியனி ன் அறிவுச்சுடர்.

பெயர்ச் சூடுதல் 

ஜெயமோகன் கோடடை மணிக்கு, கோடடைச் சுவருக்கு , விலங்குகளுக்கு உச்சமாக கங்கையின் சுழிக்கே பெயர் சூட்டுகிறார்.  வெண்முரசின் இசைக்கருவிகளுக்கே தனி ஆய்வு தேவை. படங்களுடன்  செவ்வியல்,  பண்ணியல் இசை  அறி வாண ர்கள்  இதை  முயல வேண்டும். 

தரிசனம்

நாகக்  கொலை வேள்வியைத் தடுத்து தட்சனைக் காக்கும்   ஆஸ்திகன் மூன்று குணங்களும் வாழ்விற்குத் தேவை  என்று நிறுவுகிறான் . அதை வியாசமுனி அனுமதித்து    அருள்கிறார். தந்தை வாக் கினாலும்  தேசியக் கடமையாலும்  மணத்துறவு கொண்ட பீஷ்மர் பாரதக் கதையின் சிக்கலின்  மைய முடிச்சாக அமைகிறார்.   முழுவதும் இச்சையை விட்டிருந்தால்  பிற முனிவர்களைப் போல   வனமே கி இருப்பார்.   ஆனால் அஸ்தினபுரியைக் காக்கவேண்டும் என்ற மெல்லிய சரடு அவரைக் கட்டி இருக்கிறது.

அடி மனத்தில் அவருக்கு ஆசை இருக்கிறதோ   என்ற அச்சம் அவருக்கும் உள்ளது. அம்பையுடன் அவர் புரியும் உரையாடல் இந்திய மனத்தால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடியது. 

ஆப்பிரிக்காவில் கிளம்பி அலை அலையாகப் புவியை நிறைத்துக் கொண்டு விரிந்த ஹோமோ  பேரினத்தின்   மத்திய ஆசியாவின் கங்கைச் சமவெளியில்  வந்து சேர்ந்த இந்தப் பிரிவினரில் , வேட் டையாடி வேளாண்மை ஆற்றி  துவக்க நிலை சமூகமாக பரிணாமம் அடைந்த  இந்தக் கூட்டம் காலத்தின் எந்தத் துளியில் “உள்ளது ஒன்றே” ‘நீயே அது” என்ற தாவலை  அடைந்தது என்பது ஒரு புதிர்  . சுவாமி விவேகானந்தர் இதை வியந்து பேசுகிறார்.  இச்சையைப்  பதங்கமாக்கி   பெண்ணுருவை அன்னையாக்கியது  இந்தியாவின்  இணையற்ற உளவியல் கண்டுபிடிப்பு  

அவமானம் அடைந்த அம்பை கொற்றவையாக கொதிக்கிறாள். பீஷ்மரின் உதிரம் வாங்காமல் அடங்காது இந்தப்  பிடாரி . இங்கே ஜெயமோகன் கொற்றவையை, இளங்கோவடிகளின்  கண்ணகியைக் காட்டுகிறார். பெயரில்லாது எரிந்தழிந்து போன பாரத தேசத்தின் வெயிலுகந்த, தீப்பாஞ்ச , சீ லைக்காரி , மா சாணி அம்மன்கள் வடிவில் அம்பை நெருப்பாகிறாள்

உடல் நமக்கு சொந்தமில்லை ; ஆன்மாவுக்கு சொதம் என்கிறாள் அம்பை.. பெண் என்பவள் வெறும் கருப்பை மட்டும்  தானா என்ற வினா இந்திய பெண்களின்   வினா. 

அழகியல் 

அம்பை தற்கொலை செய்யும் முடிவை எடுக்கும்போது ஆவலுடன் அவள் உள்ளத்தின் மூன்று அன்னையர்  பேசும் இடம் அற்புதமான து

மலரில்  தேன் நிறைக்கும்  , பெண் குழந்தைகள் கனவில் மலர் காட்டி சிரிக்க வைக்கும் சுவர்ணை ; 

அவள் சற்று அறியத் தொடங்கும் போது இசையில் துயரையும் கவிதையில் கனவையும்    நிறைக்கும்  சோபை ,

 அவளில் முதற் காதல் மலரும்போது  படைப்பின் இனிய கடனை ஆற்றும் விருஷடி    என்னும் தேவியர் அம்பையை பீஷ்மரை நோக்கி திரும்புகின்றனர். வெண்முரசின் தனிதத்துவத்தின் அதிசய இடம் இது.

அம்பையின் உணர்வு நிலையைச் சொல்லுமிடம்  :

அம்பை நிருதனின் படகில் பீஷ்மரை க் காண செல்கையில் அருகில் வீ ணை யை வைத்தால் அது தானாகவே இசைத்திருக்கும். விரல் பட்டால் கங்கை அதிரும் 

அம்பை படகில் செல்கையில் சூ ரியனுடன் கிழக்கு   முனையில் உதித்து  எழுகிறாள் 

 இரு தடைகள் 

கீதை , ஒரு செயலுக்கு மூன்று தடைகள் வரலாம் என்று பேசுகிறது. ஆதி பௌதிகம், ஆதி தைவிகம் மற்றும்  அத்யாத்மிகம் .  முறையே இயற்கையால், இறையால், தன்னால் வருவன. காசி அரசனின் கேள்விக்கு அமைச்சர்  தரும் பதிலில் வேள்விக்கு இரு தடைகள்  பற்றி உரைக்கிறார் . அத்யாத்மீகம் இதில் சேரவில்லை. காசி மன்னன்  தானே வருவித்துக் கொண்ட  தடை தானே இந்த வேள்வி முயற்சியே  என்று தோன்றுகிறது.

தமிழின் புதிய சொற்கள் 

இயல்பாக நாவிற்கு இசைந்து வரும் தமிழ் ச்  சொல்லிணைவுகளை உருவாக்குபவர்கள் சிந்தனையில் புதிய பாதைகளைத் துவங்குகிறார்கள்.

விசுவநாதன் – விசும்புக்கு அதிபன் 

விசாலாட்சி – அகல்விழி அன்னை 

உவமைகள் 

1அர்க்கியமிடக்  குவிந்த கரங்கள் போன்ற ….

2 பல்லக்கில் பிணம் இருப்பது போல என்னெஞ்சில்  நீயா இருந்தாய் 

3 கருப்பை எனும் நங் கூ ரம் 

4  சிதையில் இதயம் வேகும்  போது எழுந்தமரும் பிணம் போல (பீஷ்மர் மெல்ல அசைந்தார் )

5 அழு க்கு மீது குடியேறும்  மூதேவி என 

6 எய்யப் படும் அம்புக்குப் பின் அதிரும் நாண்  போல 

7 வெவ்வேறு சந்தஸ் களில்  இசைக்கும் பறவைகள் 

வடக்கு  தெற்கு ஒற்றுமை  

““ இந்தியா செக்கோஸ்லாவாகியாவைப் போல பல நாடுகளாக உடையும் ;  “

   “ பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன “ 

என்று இங்கு ஒரு அரசியல் தரப்பு உண்டு .

 எந்த நாடும் அப்படியே ஒரு தேசமாக புவியில் தோன்றவில்லை.  மனிதர்களின் ஒற்றுமையும் வாழ்க்கை முறைகளும் விழுமியங்களும் பரிணமித்து உருவாகின்றன தேசங்கள்.  பெரும் தலைவர்களும் இந்த நதியின் போக்கை அணைக்கட்டிடவோ   திசை  மாற்றவோ செய்தவர்கள் மட்டுமே.    எல்லா தரப்பினருக்கும் இடமிருக்கும் பண்பாடு சார்ந்த தேசிய  சிந்தனையில்  ஒரு தேசத்தின் அனைத்து உயிர்களும் பெரும் பரிணாமம் அடைந்து வந்திருக்கின்றன

 வரலாற்றில் பின் சென்று நீதியை நிலைநாட்டுபவன் கவியாசிரியன் . அவன் காலத்திற்கு மேலே இருந்து பார்க்கிறான் 

வெண்முரசு வட -தென் சமன்பாட்டை சரி செய்கிறது . சங்கரர்  தொடங்கி நாராயண குரு வரையிலான படிவ ர் ஞானத்தை பயன் படுத்திக் கொள்கிறது 

நாம் மறந்து விட்ட இந்தியாவின் கலாச்சார தேசியத்தை செயற்கையாக இல்லாமல் நினைவூட்டுகிறது 

அத்தககைய சில இடங்கள் 

1 வியாசர் குமரி முனையில் வழிபடுகிறரர் 

2 திருவிடத்தில் இருந்து அகத்தியரையே வரவழைக்கிறேன் (சத்தியவதி சொல்வது)

3 சோழம் , பாண்டியம் ,  கொங்கணம்  அரசர்கள் காசி மணத்தன்னேற்பில் கலந்து கொள்வது 

4 வேசரத்திலும்  அப்பால் திருவிடத்திலும் அம்பைக்கு ஆலயங்கள் 

5 கடலோர திராவிட நாடு சண்ட கர் ப்பர்  அதர்வ வேத அறிஞர் 

புனைவு      கொடுக்கும் கற்பனைச் சுதந்திரம் மட்டுமல்ல இக் கூற்றுக்கள்  .

வரலாறு  கனவுக்குள் புகுந்து எடு க்கப் பட வேண்டிய இடங்கள் சில உண்டு. எந்த அரசியல் நோக்கம் இல்லாமல் அதை உரிய செவிகள் இழுத்துக் கொள்ளும்.  இந்தியப் பெருநிலத்தில் எங்கோ நெடுந்தூரம் நடந்து    செல்லும்  பயணி இசைக்கும் பழம்பாடல்கள் இந்த தேசத்தைக் கட்டி வைத்திருக்கும் இழைகள் . முடியாது வளரும் இந்தச் சரடில் வெண்முரசு வலிமையான பொற்பட்டு நூலாடை . முதற்கனல் அதற்கு முதல் நூல்.

ஆர் ராகவேந்திரன் 

கோவை