மாடி வீட்டு கனவு நிறைவேறிய அந்த நாளில் பிடி சுவர் ஏரி அடிவானம் பார்த்திருப்பேன். அங்கே அப்பால் ஏதோ ஒரு உலகம் இருக்கலாம் அதற்கான கதைகளும். அங்கிருந்து எழுந்து வரும் ஏதோ ஒரு மாய கதைச் சொல்லிக்காக எப்போதும் தனித்திருந்திருக்கிறேன். அவனை கண்டுவிட்ட சிறுமியின் துள்ளல் கொண்டு, இப்போதுதான் உலகம் பார்க்கும் மழலையின் மாறா வியப்புடன் நான் ஒவ்வொரு பக்கத்தையும் கடக்கிறேன்.
தென் கடற்கரை நுனியில் தன்னந்தனிமையில் காத்திருப்பது அதற்காகவே. ஆம் கன்னி காத்திருப்பது அதற்காகவே.. காத்திருப்பது அதற்காகவே… என கண்ணகை கதைக்குள் நுழைகிறாள்.

கண்ணகி என சீதை என கற்பென பத்தினியென எத்தனை எத்தனை கதைகள். உண்மையில் பெண்களுக்கு பட்டாம்பூச்சி பருவத்திற்கு அடுத்துதான் கூட்டுப்புழு பருவம்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுவர் என கண்ணகியை படித்து பழக்கப்பட்ட நமக்கோ இங்கே உறைபவளின் கேள்வி பலரை திடுக்கிடச் செய்திருக்கும்.
கணவனை பிரிந்த பெண் உண்மையில் இழப்பது எதை? கணவன் என அவள் அடைவது எதை? சிறுமி என கன்னி என அன்னை என ஆனபின்பும் அவள் தேடும் அடையா ஆழம் எது?
பார்க்கும் பார்வைக்கு கொப்பளிக்கும் நீலவண்ண பரப்பையும், அடியில் விடியா கருமையையும் ஆன கடலைவிட மிகச் சிறந்த படிமம் பெண்களுக்கு இல்லை.
” நீலம் கருமைக்குள் ஒளி பரவும் வண்ணம்”. “புன்னகைக்கும் கருமை நீலம்” “அறியமுடியாமைகளின் நிறம் நீலம்” – கடக்க முடியா வரிகள்
கண்ணகி சொன்னாள் மண்புழு போல் மாந்தருக்கும் உண்டதெல்லாம் உடல் மீறி தெரியும் என்றால் அறிவர்கள் உண்டா? கற்பரசி உண்டா? சான்றோர் தான் உண்டா? என்ற கேள்வியுடன் தான் கண்ணகி பயணத்தை தொடங்குகிறாள்.
தேவந்தியின் வெறி குரலில் எழுந்து வரும் பெண்களின் பெரு விழைவு
“நான் தேடியது அவனை அல்ல ஆட்டனை அல்ல வாள் ஏந்திய வீரனை தேடினேன். தோல் திரண்ட மறவனை தேடினேன். ஆனால் நான் தேடுவது எல்லாம் அவ்வகையிலேயே அடைய வேண்டும் என்றனர் அறவோர் விழவிலும் புனலிலும் அவனை சுமந்தேன்” – ஆதிமந்தி
“நான் கற்பென்னும் பெருந்துயரில் கண்ணீருடன் வாழ்ந்தவள்”- நக்கண்ணை
ஐவகை நிலமும் எங்கள் பெருந்துயர் வெளியே மூவகை தமிழும் எங்கள் கடுந்துயர் மொழியை என தேவந்தியின் வரிகள் உள் ஒலிக்காத பெண் உண்டா.
அகச்சிறை என்ற சொல்லை மிக எளிதாக கடந்து விட முடியாது. அதன் ரகசியம் தேடி உள் செல்பவலாக கண்ணகி என்றால் அதன் கதவை முட்டி முட்டி நிலையழிபவலாக கோப்பெருந்தேவி.
நீரரமகளிர் உண்மையில் பெண்களின் கட்டற்ற விளைவுகளின் குறியீடு. உண்மையில் வெண்ணிக்கு கிடைத்த முத்துதான் அவளின் முடிவான கண்டடைதலா?
இரவின் கனவுகளில் தனித்திருப்பது எதற்காக? நீரில் மூழ்கி தன் உடல் மறந்து போகத்தானா? உலகியலின் நெறியெல்லாம் அவள் உடலில் இருந்து தொடங்குகிறது. அவள் உடலின் ரகசியம் தேடிய பயணத்தின் முடிவில் திறக்கிறது மெய்ம்மையின் பாதை. உடலை சிறை என உணர்பவர்கள் அலை என கொந்தளிக்கிறார்கள். அகம் நோக்கிய கேள்வியால் அதை கடந்து சென்றவர்கள் மெய்ம்மையை அடைகிறார்கள்.
உண்மையில் தொடுகை மண் சார்ந்தது என்றால் பார்வை விண் சார்ந்தது அல்லவா. மனதிற்கு முன் முழு முற்றாக தன்னை முன்வைக்கும் பெண்கள் தெய்வங்களுக்கு நிகரென அமைகிறார்கள். அவள் பேய் முகம் கொள் மெய்ம்மையையும் பெண் முகம் கொள்ளும் விழைவையும் ஒருசேர அருள்பவள். இங்கு அவள் நீலி.

அன்பு ஒவ்வொரு நாளும் புத்தளிரும் பூவும் விட்டு என்றும் இருக்க முடியும். அன்பு மட்டுமே, கற்போ பொறையோ இல்லை. மீண்டும் மீண்டும் பெண் அகம் மீற விரும்புவது எதனால்? எதை கடக்க இயலாது மீண்டும் சிறுமி என மீள முயல்கிறாள்?
மகதியின் ஒற்றை பதில் துறப்பதற்கு வீடு விட்டு இறங்க வேண்டியதில்லை. உண்மையில் பெண்மையை விட்டு பெரும் பாதை ஏது மெய்மைக்கு. அடியற்ற ஆழத்தை அவனால் வெறுமையால் மட்டுமே நிரப்ப முடியும், “ஒளி” என்று அவள் சொல்லும்வரை.
மெய்யென இங்கு நீண்டு கிடக்கும் வரிகள் முழுவதும் மீள மீள நான் அடைவது ஒன்றே. அவள் மனம் கடலின் ஆழம். நீலம் அவள் அரிதாரம். விண்ணால் அலைக்கழிக்கப்படுபவள், மண்மீது மாறா நெறியில் நிற்பவள். கன்னியென அன்னையென,பேராச்சி எனஅவள் பயணங்களில் பல ஒப்பனைகள். உண்மையில் மாறா கல்லென அவள் உறையும் ஆழம் இருள். இருளின் புன்னகையே நீலம்.
உமா