அந்நியன் வாசிப்பனுபவம் – விக்ரம்

மனிதர்களின் மதிப்பீடுகள், விழுமியங்கள் அன்பு அல்லது மனிதாபிமானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்னும் பொதுக்கருத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது ஆல்பர்ட் காம்யுவின் “அந்நியன்.“ அது அப்படித்தான் இருக்கிறாதா, அப்படி ஒன்றும் இல்லை மனிதர்களே என்கிறது.  ஒருபக்கம் கிறிஸ்துவின் அன்பின் மீது கட்டப்பட்ட சமய மதிப்பீடுகளையும் மற்றொரு பக்கம் பிரெஞ்சு பண்பாட்டின அரசின் நீதிமுறையையும் – அபத்தமானவை என்ற விமர்சனத்தை இக்கதையின் மூலம் வைக்கிறது. 

கதை நாயகனின் எதற்கும் அதிகம் அலட்டிக்கொள்ளாத, அதிக உணர்ச்சிவசப்படாத, போகிறபோக்கில் வாழ்கிற, தனக்கென மதிப்பீடுகள் எதுவும் இல்லாத, அன்றாடம் எழும் புலன்சார் விருப்பங்களை மட்டும் நிறைவேற்றி வாழ்கிற ஒருவன் – இத்தன்மைகள் மட்டுமே அவன் கொடியவன்-தீயவன் என்று தீர்மானிக்கப் போதுமானவையா? என்ற கேள்வியை எழுப்புகிறது.  உண்மையில் அவன் கெட்டவன் அல்ல.  உள்நோக்கம் ஏதுமில்லாத, சூழலால் அமைந்துவிட்டதான கொலை ஒன்றை செய்து சிறை செல்லும் அவன் தன் தாயை உடன் வைத்திருக்காமல் விடுதியில் விட்டிருந்தான் என்பதையும் அவள் மரணத்திற்கு அங்கு சென்றபோது அவளுக்காக அழவில்லை எனபதையும் அத்துடன் அங்கு அவனது இயல்பான சுபாவத்தை ஒட்டிய சில நடத்தைகள் காரணமாகவும் கொடியவன் என்று தீர்மானிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்படுகிறான். 

தன் தரப்பு நியாயத்தை வாதிட அவன் விரும்புவதில்லை.  தனக்காக வாதிடும் வழக்கறிஞருக்கு ஒத்துழைப்பும் தருவதில்லை.  நிகழ்வுகளைக் கொண்டும் சூழலைக் கொண்டும் தன்னைப் பற்றி எதிர்தரப்பு உருவாக்கும் ”சித்தரிப்பை” மறுப்பதும் இல்லை.  அந்த சித்தரிப்பு உண்மையில்லை என்னும்போதும் ஆமாம் சரிதானே அப்படியும் சொல்ல முடியும் தானே என்று எண்ணுகிறான்.  எதிர்தரப்பு வழக்கறிஞர் பெற்றோரைக் கொலை செய்துவிட்ட மற்றொருவரி்ன் வழக்குடன் இவ்வழக்கை ஒப்பிட்டு அதைவிட இது மிகக்கொடியது என்கிறார்.  தன்மீது ஒருவித தனிப்பட்ட வன்மத்துடன் அவ்வழக்கறிஞர் நடந்துகொள்வது அவனுக்கு வியப்பளிக்கிறது.

பெரிதும் உணர்ச்சிவசப்படாதவனாகிய கதைநாயகன் இரண்டு இடங்களில் மட்டும் உணர்ச்சிவசப்படுகிறான்.  உணவுவிடுதி நடத்திவரும் அவனது நண்பன் – அவனுக்கு உணவும் மதுவும் அளிப்பவன், தன் பணியிடத்தில் அவன் எப்படிப்பட்டவன் (நன்கு உழைப்பவன்) என்று அறிந்திருப்பவன், அவனை உண்மையில் புரிந்துவைத்திருப்பவன் அவனுக்காக உணர்ச்சிப்பூர்வமாக பரிந்துபேசும் போது நெகிழ்ச்சி அடைகிறான்.  அவனை அணைத்து முத்தமிட விரும்புகிறான்.  இரண்டாவதாக, மரணதண்டனைக்கு முன்னதாக தன்னை சிறையில் வந்து சந்தித்து தனக்காக பிரார்தனை செய்ய வரும் பாதிரியாரிடம் எரிச்சலைடைகிறான்.  அவரை விரட்டுகிறான்.  அவருடைய அறிவுரைகள் அபத்தமானவை என்று கருதுகிறான்.

மொத்தத்தில் – நான் பேசாமல் இருந்தால், உள்ளதற்கு மாறாக உங்கள் மதிப்பீடுகளின் அடிப்படையில் நீங்களாகவே என்னைப்பற்றி ஒரு சித்தரிப்பை (மிகையாக அல்லது பொய்யாக) உண்டாக்கி தண்டித்து விடுவீர்களா என்பது அவனது கேள்வி.  இதை வெளிப்படையாக அவன் கேட்பதில்லை.   இது கேட்காமல் கேட்கப்படும் கேள்வி.  நானாக எதுவும் கேட்க மாட்டேன், என்மீது நீங்கள் சுமத்தும் எதையும் மறுக்கவும் மாட்டேன், தண்டணையை ஏற்றுக்கொள்வேன் என்பது அவனது நிலைப்பாடக உள்ளது.  ”எல்லோரும் என் சாவை ரசியுங்கள்” என்பதுபோல.

ஒருவகையில் இது அவனுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை என்பதைவிட அவன் செய்துகொள்ளும் தற்கொலை என்றே தோன்றுகிறது.  தற்கொலை செய்துகொள்ள விருப்பங்கள் நிறைவேறாதது, துன்பங்கள், விரக்தி இவைதான் காரணமாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை – எதற்காக வாழ வேண்டும் உயிரோடு இருப்பது அவ்வளவு முக்கியமானதா என்ன என்ற கேள்வியே போதுமானது என்று கூறுவதுபோலும் எண்ணத் தோன்றுகிறது.

சில இருத்தலியல்வாதிகள் இருத்தலியல் சிக்கல்களுக்கு தற்கொலையைத் தீர்வாகக் கண்டதுபோல் தோன்றுகிறது.  இங்கே கிழக்கே நமக்கும் பலநூற்றாண்டுகளாக அதுவேதான் தீர்வாக பல மெய்ஞானிகளால் சொல்லப்பட்டு வருகிறது.  என்ன வித்தியாசம் என்றால் இங்கே உடலின் தற்கொலை அல்லாமல் மனதின் அல்லது நான் என்னும் தன்முனைப்பின் தற்கொலை பரிந்துரைக்கப்படுகிறது.  துறந்தார் இறந்தார் அனையர் என்றும் மனோநாசம் என்றும்.

‘அந்நியன்’ வாசிப்பனுபவம் – பவித்ரா சக்திவேல்

என் அப்பாவின் மரணத்தினால் உண்டான வெறுமைக்குள் சிக்கிக் கொண்டிருந்த தருணத்தில்,  சொல்முகத்தின் மார்ச் மாத கூடுகைக்கான  ” The  Stranger” by Albert Camus புத்தகத்தை எடுத்தேன் .

நாவலின் தொடக்க வரியான  “அம்மா இறந்துவிட்டாள்”,  என்னை மீண்டும் வெறுமையின் ஆழத்திற்கு இட்டுச் சென்றது.  மக்கள் கூட்டம் சூழ்ந்திருந்தாலும், குழந்தையுடன் சிரித்துக்  கொண்டிருந்தாலும், சுற்றியும் இரைச்சலாக இருந்தாலும்,  நினைவின் பிம்பத்திலான தனித்த ஓர் இடம் வெறுமையின் உலகம் . வாழ்வின் அர்த்தத்திற்கான தேடல் தீவிரமடையும்.

ஆல்பர்ட் காம்யூ, இப்புத்தகத்தின் கதாநாயகனான மெர்சால்ட்டை கதைசொல்லியாகக் காண்பித்துள்ளார். மெர்சால்ட் தனது இருப்பை சூரியனால் வானில் தென்படும் நிற மாற்றங்களுக்கும், தன்னைச்  சுற்றியுள்ள பொருட்களால் உண்டான மணத்திற்கும் ஒவ்வொருமுறையும் தொடர்புபடுத்தி மெய்ப்பித்துக் கொள்கிறான்.  

இரண்டு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு  முதியோர் இல்லத்தில் இறந்த அம்மாவைக்  காணச்  செல்கிறான் மெர்சால்ட் . மூடிய சவப்பெட்டியில் உள்ள தன்  அம்மாவின் முகத்தைக் காண மறுத்துவிட்டான். எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த நிகழவே பின்பு அவன் சிக்கிய கொலை வழக்கில் தனக்கு எதிராக அமைந்தது. காரியங்கள் முடிந்த பின் அல்ஜிரியாவின் தலைநகரான அல்ஜெரிசில் உள்ள தனது வீட்டிற்குத்   திரும்புகிறான்.  சனிக்கிழமை என்பதாளும் வெப்பத்தின் காரணமாகவும் நீச்சலடிக்க கடலுக்கு சென்றபோது மேரியை சந்திக்கிறான். அந்நாளை  அவளுடன் கழிக்கிறான். சும்மாவே  உட்கார்ந்தும்  வேடிக்கை பார்த்தும் ஞாயிற்றுக்கிழமை கழிந்தது.  பின்பு அவன்  வேலைக்குத் திரும்பிய சிறுது நாட்களிலேயே வெளிநாடு செல்லும் வாய்ப்பைத் தருகிறார் தனது மேலாளர் .  தனது குறிக்கோளின்மையை நாசூக்காகச் சொல்லிச் சென்றுவிடுகிறான். மேரியும் தனது திருமண விருப்பத்தை கேட்டபோது பதில் சொல்ல முடியாமல் திண்டாடுகிறான் மெர்சால்ட். 

இங்கே நாம் கவனிக்க வேண்டியது மெர்சால்ட்டின் ஆழ்மனதின் ஓட்டத்தை. பாகம் ஒன்றில் மெர்சால்ட் பற்றிய ஒரு பிம்பத்தை நம்முள் உருவாக்குகிறார் ஆல்பர்ட். எதிலும் தீவிரமின்மையை உடையவன் மெர்சால்ட். ஒன்றையே செய்து, பெரிய லட்சியம் ஏதும் இல்லாமல், வருவதை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை நடுநிலைமையாய் ஓட்டிச்செல்பவன். அம்மாவின் மரணம் துக்கம் தருவது.  தூக்கமும்  ஒரு வகையான தலை பாரமும் மெர்சால்ட்டை நெருக்குகிறது. அவனால்  துக்கத்தை  ஏற்றுக்கொள்ள முடியாததால்  அம்மாவின் முகத்தையே பார்க்க மறுக்கிறான். ஆனால் அவன் அம்மா அவனிடம் பல சந்தர்ப்பங்களில் அவனிடம் கூறிய வரிகளை கடைசிவரை நினைப்படுத்திக் கொள்கிறான். 

மேரி தன் திருமண விருப்பத்தைக் கூறியபோதுதான்  திருமணத்தைப் பற்றிச் சிந்திக்கிறான். தனது நண்பனான மஸான் குடும்பத்தை சந்தித்த பிறகுதான் திருமணத்தின் தேவையை உணர்கிறான். மெர்சால்ட் பொதுவாக தான் வாழும் அந்தத்  தருணத்தை அப்படியே கடத்திச் செல்பவன் . நேற்றைய சிந்தனையோ நாளைய சிந்தனையோ அதிகம் இல்லாதவன். அனால் அவன் சிறையில் இருந்த போது நேரத்தைக்  கடத்திச்செல்ல அவன் வாழ்ந்த நாட்களையும், வரவிருக்கும் மரணத்தைப் பற்றியுமே சிந்திக்கிறான்.  

மெர்சால்ட் தன் நண்பர்களுடன் நீச்சலடிக்க சென்ற போது தன்னையும் ரேமாண்டையும் காப்பாற்ற நினைத்திக் கொண்டிருந்தபோது கொலை நடந்துவிடுகிறது. பின்பு அவனது இயல்பே அவனுக்கு கடும் எதிராகத் திரும்பி மரண தண்டனையை பெற்றுத்தருகிறது. சிறைச்சாலையில் அவனது எண்ண  ஓட்டங்களை தத்துவரீதியாகவும் தர்கரீதியாகவும் பாகம் இரண்டில் நம்முன் காட்சியாக முன்வைக்கிறார்  அல்பெர்ட் காம்யூ . பாகம் இரண்டின் தத்துவத்தை நீட்டி ஒரு புத்தகமே எழுதலாம். மரணத்தையும் வாழ்வையும் பற்றிய சிந்தனைக்கு இட்டுச் செல்கிறது.  மரணம் தேடி வரும் பொழுது, அது முப்பது வயதானாலும் அறுபது வயதானாலும் , இன்னும் சில ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற ஆழ் மன ஏக்கத்தை அப்பட்டமாக கண் முன் காட்டுகிறான் மெர்சால்ட்.

யார் இறந்தாலும் பிறந்தாலும் சூரியன் உதித்துக்கொண்டுதான் இருக்கும், காற்று வீசிக்கொண்டுதான் இருக்கும், உலகம் இயங்கிக்கொண்டுதான் இருக்கும்.  ஒவ்வொரு மணித்துளியையும் கழிக்கும் சுதந்திரம் நம் எல்லோரிடமும் உண்டு. எப்படிக் கழிக்கிறோம் என்பதே வித்யாசத்தை உருவாக்குகிறது.  உலகம், மனிதன், கடவுள் ஆகிவற்றைப் பற்றி நம்மை சிந்திக்க வைக்கும் தைத்திரீய உபநிடதம் என் நினைவுக்கு வருகிறது.

சிறைச்சாலையில் மெர்சல்ட்டை ஏசுவை ஏற்கச் செய்துவிடவேண்டும் என்று போராடுகிறார் பாதிரியார். இறந்த பின் எதுவும் இல்லை என்னும் கிறிஸ்துவத்தின் கொள்கையை போதிக்க முயல்கிறார் .ஆனால் செங்கல்களில் அவன் காண்பது தன் காதலி மேரியின் முகம் மட்டுமே என்றதும் பாதிரியார் உடைந்துவிடுகிறார். கில்லட்டின் இயந்திரம் பற்றிய வர்ணனை மிக அசாத்தியமானது. மரணம் இதோ இங்கே என்று உறுதி செய்கிறது இந்த கில்லட்டின் . 

எப்பொழுது இறந்தாலும் சிறிது நாட்களில் இந்த உலகம் நம்மை மறந்து விடும்  . வாழ்க்கை ஒன்றும் அர்த்தமானது இல்லை . அதனால் மரணத்தை  ஏற்றுக்கொள் என்று கறாராக மெர்சால்ட் கதாபாத்திரத்தின் மூலம் ஆல்பர்ட் முன்வைக்கிறார்.

ஒரு நாள் இவ்வுலகில்  வாழ்ந்தவன் சிறைச்சாலையில் (அல்லது தனிமையில்) நூறு ஆண்டுகளைக் கழிக்கும் நினைவுகளைக் கொண்டவனாகிறான் என்கிறான் மெர்சால்ட். 

 மரணத்திற்கு பின்னால் ஆன்மா எஞ்சுகிறது என்று கூறுகிறது கட உபநிடதம். காண முடியாததால் இல்லை என்றாகிவிடாது. அதுபோல்  இன்றைய நிகழ்வுகள்  நாளைய நினைவுகள். நினைவுகளும் நிஜமானவை ஒரு வகையில். மரணத்திற்கு பின்னல் நினைவுகள் எஞ்சுகிறது.

பவித்ரா சக்திவேல்

உப்புக் கடலை குடிக்கும் பூனை, வாசிப்பனுபவம் – விஜயகுமார் சம்மங்கரை

க.சீ.சிவகுமார் கருத்தரங்கில் விஜயகுமார் சம்மங்கரை ஆற்றிய சிற்றுரை.

//எனது இந்த வாசிப்பனுபவம் “உப்புக்கடலை குடிக்கும் பூனை” யை மட்டும் உள்ளடக்கியது. //

கருத்தரங்கு என்ற சொல்லின் நேரடி ஆங்கில சொல் செமினார். செமினார் என்றவுடன் அதற்கு எப்படியோ அகடமிசியா அர்த்தம் வந்துவிடுகிறது.

கருத்தரங்கில் என்ன நடக்கிறது.. அது அடிப்படையில் வாசிப்பனுபவத்தை முன்வைப்பது என்பதாகும்.  வாசிப்பனுபவம் என்றவுடன் ஒரு படைப்பை அனைத்து கோணத்திலும் பார்ப்பது. அதன் ஒரு பகுதியாக படைப்பை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது. 

ஆய்வுக்கு அளவைகள் தேவைப் படுகின்றன. அப்படியானால் இலக்கியத்துக்கு அளவைகள் இருக்கின்றனவா?

பொதுவாக இலக்கியத்தின் பயன் மதிப்பு என்ன என்று பார்க்கையில். அது நேர்கோடான மனித வாழ்வில், இலக்கிய கற்பனை மூலம்  நடக்கும் பக்கவாட்டு அனுபவங்களினால் சாத்தியமாகும் அனுபவ அடர்த்தி என்று இலக்கிய ஆசான்கள் சொல்கிறார்கள். ஆகையால் ஒரு வாசகனுக்கு இலக்கியம் தரும் அனுபவ அடர்த்தி மட்டும் தான் அளவையாக இருக்க முடியும். இது அகநிலை அளவை.

ஆனால் ஒரு கருத்தரங்கிற்கு, ஒரு படைப்பு ஆய்படு பொருளாக இருக்கும் போது இம்மாதிரியான அகநிலை அளவை உதவாது. புறவைய அளவைகள் தேவை.

புறவைய அளவைகள் நிறைய உள்ளன என்ற போதிலும், அவைகளை இரு வகையாக பிரித்து பொதுமைப்படுத்தி கொள்ளலாம்.

  1. வடிவம்  (Story structure), அழகியல். 
  2. உட்பொருள் (பாடு பொருள்)

வடிவம் : → அழகியலாளர்களின் கோட்பாடாக இது அமைகிறது.

சிறுகதை என்று நாம் உத்தேசிப்பது அடிப்படையில் ஒரு முரண்பாட்டைத் தான். “உடன்பாடு” பெரும்பாலும் சிறுகதை ஆவதில்லை. 

இலக்கிய வடிவங்கள் பல உள்ள போதிலும், சிறுகதைக்கு 1) எடுப்பு 2) தொடுப்பு 3) முடிப்பு என்ற  ஒரு செவ்வியல் வடிவம் உருவாகி வந்துள்ளது. அவற்றை இன்னும் விரிவு படுத்தினால் 

  1. Exposition 
  2. Inciting Incident 
  3. Progressive complexity through multiple pinch point 
  4. Point of no return
  5. Climax
  6. Resolution/Revelation

க சீ சிவகுமார் அவர்களது சிறுகதை இப்படியான கச்சிதத்தன்மையை எங்கோ நிராகரிக்கிறார் என்றே தோன்றுகிறது. அப்படி நிராகரித்தும் அந்த கதைகள் வெற்றி பெறுகின்றன. அப்படி வெற்றி பெறுவதற்கு காரணம் அவர் தனக்கே உண்டான சில உத்திகளை பயன்படுத்துகிறார்.

  1. நகைச்சுவை 
  2. ஸ்டைலிஸ்ம் 

நகைச்சுவை → எடுத்துக்காட்டாக : 

  1. எனக்கும் ஒரு வாழ்த்து 
  2. ஹலோ 
  3. ஒரு நாள் 
  4. குகை 
  5. புதிர் வீட்டு ஜன்னல் 
  6. கட்டு சேவல் மனிதர்கள் 
  7. மஞ்சம் மகிமை 
  8. ஒரு ஊர்ல ஒரு தேர்தல்.

ஸ்டைலிஸ்ம் → சில வாக்கியங்கள் 

  1. மனதில் மௌனக்குளிர் அப்பியது 
  2. சில தப்படிகளில் சிவப்பை தவறவிட்ட நிறம் 
  3. தெருவெல்லாம் வெளிச்ச காளான்கள் 
  4. வயிறு அலை எழும்பாமல் தலை தரை தொடாமல் விரைத்திருந்தது.

இவரது கதைகள் இலக்கற்று திரிகிறது என்றே முதலில் தோன்றுகிறது. ஆனால் அப்படி வெவ்வேறு திசைகளில் விரிந்து செல்லும் கிளைகள் அனைத்தும் கதையின் கடைசி பத்தியில் வந்து குவிந்து வாசகனுக்கு சிறுகதை அனுபவத்தை நிறைவு செய்கிறது. 

இங்கே சிறுகதை அனுபவம் என்று சொல்வது, கதை முடிந்த பின்னரும் வாசகன் மனதில் கதை வளர்ந்து செல்வதை. அதாவது- இல்லாத பக்கங்களில் கதை தன்னை தானே எழுத்திச் செல்கிறது. 

கதை முடிந்த பின்னரும் வாசகன் மனதில் எண்ணற்ற பல சாத்தியங்களாக விரிந்து செல்லும் வாய்ப்பினையும் ஆசிரியர் மறுக்கிறார். அவரது கதைகளில் கடைசி வரி அந்த சத்தியத்தை முறித்து விடுகிறது. கதைகளுக்கு ஒற்றை முடிவு என்று முடித்து விடுகிறார்.

வீடு : அந்த புள்ளியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பயணம் செல்ல 

தமிழரசி: எனக்கு பிறந்த வீட்டுக்கு வந்து செத்துப் போகிற பெண்கள் நினைவுக்கு வந்தார்கள்.

பலூன்: உள்ளே காற்றுள்ள எதுவும் உறங்குவதில்லை.

தன்வினை: ராத்திரி உணர்ச்சிமயமா தின்னியே 

தி நேம் ஐஸ் மணி : அடிபடாமல் நீண்டநாள் வாழனும் என்றால் கொஞ்சம் கட்டுக்குள் இருக்க வேண்டும் 

கதையின் மொத்தப் பரப்பையும்  ஆசிரியர் தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதினால் வாசக இடைவெளி சற்று சுணக்கமாகவே இருக்கின்றன. அதற்கெல்லாம் ஈடுகட்டுவது போல் அவரது ஸ்டாலிசம் கதையெங்கும் விரவிக்கிடக்கிறது. 

கடைசி வரி கச்சிதமாக அமைந்திருக்கும் கதைகளும் இருக்கின்றன.

  1. குகை 
  2. சீற்றம் → revelation 
  3. கடல்கள் காய்வதில்லை 
  4. ஆர்வலரும் இல்லை அடைக்குந்தாழ் 
  5. இயல்பிகந்த கின்னாரம் 
  6. கறி 

கதையின் உடலை மறுக்கும் கடைசி வாக்கியம் என்ற முறைமையை கைவிட்டு. கதையின் உடலை மேலும் விளக்கும் கடைசி வாக்கியம் என்பதாக உள்ளது.

இதை எப்படி புரிந்துகொள்வது என்று யோசிக்கையில். சிறுகதையின் செவ்வியல் வடிவத்தின் சட்டாம்பிள்ளைத் தனத்துக்கு எதிரான செயல்பாடு என்று நான் புரிந்துகொள்கிறேன்.

மேலும் நகைச்சுவை சிந்திக்க வைக்குமா என்ற கலாதித்த கேள்விக்கு தன் பங்கு பதிலையும் நியாயத்தையும் செய்திருக்கிறார். 

உட்பொருள் : → முற்போக்காளர்கள், லட்சியலாளர்களின் கோட்பாடாக இது அமைகிறது.

காக்கா வடை திருடிய கதையை நல்ல சிறுகதை வடிவுக்குள் கொண்டு வந்து விட முடியும். அறம் மழுங்கியிருக்கும் இந்த இக்கட்டான கால கட்டத்தில் அழகியல் கோட்பாடுகள் இலக்கிய தகுதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று லட்சியவாதிகளின் கூற்றாக இருக்கும். 

ஆகையால் கதையின் பேசு பொருள் உயர் விழுமியங்களால் ஆனதாக இருக்க  வேண்டும்.அதுவே நல்ல கதையின் அளவையாக இருக்க முடியும்.

What is your crisis என்று ஒரு கதாபாத்திரத்திடம் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். 

இந்த வரையறையையும் ஆசிரியர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்றே தோன்றுகிறது. அதாவது சிறிய விஷயங்களின் முரண்பாடும் உடன்பாடும் இலக்கியங்கள் பேசியாக வேண்டும் என்கிறார். 

அதாவது காலை காபியில் சீனி போதவில்லை என்ற ரப்ச்சரும் இங்கு முக்கியம். → crisis 

இன்றைய இலக்கியத்தை நடுத்தர வர்க்கத்தின் கலை வெளிப்பாடு என்று சொல்லலாம். இன்னும் சொல்லப் போனால் நடுத்தர வர்க்கத்தின் ஆன்மீக வெளிப்பாடாகவும் இலக்கியத்தை கொள்ளலாம். சாமானியர்களின் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டு மீண்டும் அசாதாரணங்களையும் வீரநாயகர்களையும் உயர் விழுமியங்களையும் எழுதிக்கொண்டு இருக்கிறோம். 

அசாதாரணத்தின் அதிகாரத்துக்கு எதிர் விசையில் ஆசிரியர் செயல் படுகிறார் என்றே நான் புரிந்துகொள்கிறேன்.

இவரது எழுத்தை //அசாதாரணங்கள் அற்ற கலை // என்றே எனக்கு படுகிறது.

இதுவரையில் இலக்கிய அளவைகளை இரு வகையாக 

1) Story structure 

 2) Content 

என்று பொதுமைப் படுத்தி பார்த்தோம்.

அது போக இன்னொன்று இருக்கிறது. மிக சிறந்த சிறுகதைகள் அனைத்தும் இதை நாம் உணர முடியும்.

→ Emotional/Intellectual Pay off – கதை நம்முள் செலுத்தும் அறிவுசார் உணர்வெழுச்சி. இந்த அளவையை கொண்டு ஆசிரியரின் சிறுகதையை பார்க்க முடியுமா? தெரியவில்லை. 

ஏனோ தெரியவில்லை “இயல்பிகந்த கின்னாரம் “ சிறுகதையின் கடைசி வரி நெஞ்சில் அப்பிக்கொண்டது. அந்த வரி → “ உன் கல்லறை வாக்கியம்தான் என்ன?”

ஆமாம்,  உன் கல்லறை வாக்கியம்தான் என்ன?
 

– விஜயகுமார் சம்மங்கரை

சொல்முகம் 50 – அருணாதேவி

நான் என்னுடைய வாழ்வில் இதுநாள் வரை பள்ளிப்படிப்பு, கல்லூரி, வேலை, திருமணம், குழந்தை பிறப்பு என்று அன்றாடத்தில் அடித்து செல்லப்பட்டுக்கொண்டிருந்தேன். அதில் சிறிய மாற்றமாய் புத்தக வாசிப்பு என்னுடைய கணவரின் மூலமாக நிகழ்ந்தது. தமிழ் வாசிக்கத்தெரியும் என்னும் ஒரே தகுதியுடன் நான் எனது வாசிப்பை தொடங்கினேன். குழந்தைகளுக்கான கதைகளை படித்து இரவு நேரம் தூங்கும் முன்பு என்னுடைய மகளுக்கும் மகனுக்கும் கூறுவேன். அப்பொழுது என் கணவர் வெண்முரசு கதைகளை கூறுவார். நானும் அக்கதைகளை ஆர்வமுடன் கேட்பேன். ஒருநாள் நான் வெண்முரசு வாசிப்பை துவங்கினேன். சவாலுடன் கூடிய மிகப்பெரிய உழைப்பு தேவைப்பட்டது. இந்திரநீலத்தில் தொடங்கி முன்னும் பின்னும் வாசித்து சிலமாதங்களில் ஜெ அவர்களின் தளத்தில் வந்து கொண்டிருக்கும் நிகழ்கால பகுதியுடன் இணைந்துகொண்டேன்.

அச்சமயம் கோவையில் சொல்முகம் என்கின்ற வாசகர் குழுமம் ஒன்றை ஜெயமோகன் அவர்களின் வாசகர்கள் உருவாக்கி உள்ளனர் என்ற தகவல் வந்தது. எனது கணவர் அந்த குழுவில் இணைந்து மாதந்தோறும் நிகழும் கூடுகையில் கலந்துகொண்டிருந்தார். எனக்கோ அதில் கலந்துகொள்வதற்கு சிறு தடங்கல் இருந்தது. வெண்முரசைத் தொடர்ந்து வாசித்து கொண்டிருந்த எனக்கு இதனுடைய தனித்த மொழிநடை மற்றும் கதைக்களம் மட்டுமே  பழகியிருந்தது. அப்போது சொல்முகத்தில் வெண்முரசு வாசிப்பை தொடங்கியபோது நான் அதில் இணைந்து கொண்டேன். முதற்கனலில் தொடங்கி மீண்டும் வாசிக்கத்துவங்கினேன். ஒவ்வொரு கூடுகையிலும் கதைக்களமும், கதை மாந்தர்களும் வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு கருத்துக்களாக முன்வைக்கப்பட்டன. எனக்கு இது மிகப்பெரிய அறிவுத் திறப்பாக இருந்தது. மேலும் எனது வாசிப்பை கூர்மைப்படுத்த ஆர்வமூட்டியது. கூடுகையில் முதல் அமர்வில் வெண்முரசு முடிந்தவுடன் இரண்டாவது அமர்வில் குறிப்பிட்ட நாவல்கள் குறித்த கலந்துரையாடல் இருக்கும். ஆரம்பத்தில் இதில் நான் பார்வையாளராகவே இருந்தேன். எனக்கு நாவல்கள் வாசிப்பதில் பெரிய தடை இருந்தது. அதற்கு காரணம் அக்கதைகளில் இருந்த எனக்கு தெரியாத கதைக்களம், நிலம், பண்பாடு போன்றவை. அவை அனைத்தையும் கடந்து எவ்வாறு வாசிக்க வேண்டும், எவ்வாறு தொகுத்துக் கொள்ளவேண்டும் என்பதை தொடர்ந்து வந்த கூடுகையில் தெரிந்து கொண்டேன். அப்பயணம் ஒரு அறிவார்ந்த பாதையாக இருந்தது. அதில் அடுத்த கட்ட நகர்வாக கருத்தரங்கம் ஒன்றில் ஒரு இருபது நிமிட உரையை ஆற்ற வாய்ப்பு கிடைத்தது என் வாசிப்பை இன்னமும் விரிவாக்கியது. அக்கருத்தரங்கிற்கு என்னைத் தயார்படுத்திக்கொண்டது பதட்டத்துடன் கூடிய ஒரு இனிய அனுபவமாக இருந்தது.

சொல்முகம் 50ஐ கொண்டாடும் அதே நேரத்தில், இந்த அறிவுப்பாதையில் தொடர்ந்து பயணிக்க மிகுந்த ஆர்வமுடன் உள்ளேன். இதுநாள் வரை வாசித்த நாவல்களின் மூலமாக வெவ்வேறு நிலப்பரப்பு, கதைமாந்தர்கள், கதைச்சம்பவங்கள், தத்துவங்கள் ஆகியவற்றை காட்டிய மிக நீண்ட ஆசிரியர் நிரையை வணங்குகிறேன்.

இந்த தொடர்வாசிப்பு மற்றும் கலந்துரையாடலை சாத்தியமாக்கிய சொல்முகம் வாசகர் குழுமம், இதை வாசகர் குழுமம் என்பதைவிட நண்பர்கள் குழுமம் என்று சொல்லி அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

அருணாதேவி,

கோவை.

எட்டிக்கசப்பில் எஞ்சும் துளித் தேன் – காளீஸ்வரன்

எழுத்தாளர் சு.வேணுகோபால் கருத்தரங்கில் ‘வெண்ணிலை’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட சிற்றுரை

சமீபகாலமாக அடிக்கடி ஒரு காணொளியைக் காண நேர்கிறது. தின்பண்ட பாக்கெட்டுகளால் நிரம்பியுள்ள ஒரு பெரிய இடத்தில், கிரேன் போன்ற அமைப்பின் உதவியுடன் ஒரு மனிதன் உள்ளிறக்கப்பட்டு, சில நிமிட இடைவெளியில் மீண்டும் வெளியெடுக்கப்படுகிறான். கிடைத்த சில நிமிட அவகாசத்தில், தன்னால் இயன்ற அளவுக்கு தின்பண்டங்களைத் திறனுக்கேற்ப சேகரித்துக் கொள்ளலாம். மலை போல குவிந்திருப்பினும், எடுத்து வரக்கூடிய அளவென்பது அவனது திறனைப் பொருத்தது மட்டுமே. மொத்தம் 23 சிறுகதைகள் கொண்ட வெண்ணிலை எனும் இத்தொகுப்பைப் பற்றிய என்னுடைய வாசிப்பனுபவமும் மேற்ச்சொன்ன சம்பவத்துக்கு இணையானதே.

தொகுப்பின் பெரும்பாலான கதைகள், மாறிவரும் காலசூழலினால் விவசாய சூழலில் ஏற்படும் மாறுதல்களைப், அதனூடே மனித மனதின் இருமையை, வாழ்க்கைப்பாடுகளை. எதையுமே செய்யவியலாத கையறு நிலையை, உறவுச்சிக்கல்களை இவை எல்லாவற்றுக்கும் மேலாக மானுடத்தின் மேன்மை வெளிப்படும் தருணங்களை, துளிர்விடும் சிறு நம்பிக்கையின் ஒளிக்கீற்றை பேசுபவை. 

ஒரு நிலப்பரப்பின் தன்மை, நிலவும் தட்பவெப்ப சூழல், வாழ்க்கைமுறை அதில் வாழும் மனிதர்களின் குணாதிசயத்தில் கொஞ்சம் செல்வாக்கு செலுத்தக்கூடும். செழிப்பான காலகட்டத்தில் நாமே மறந்துபோன நம் மனதின் இருண்ட பகுதியை (Grayness) வறுமை வெகு சுலபத்தில் வெளிக்கொண்டுவந்துவிடும். ஓரிரு கதைகள் தவிர எல்லாக் கதைகளுமே தென் தமிழக, குறிப்பாக மதுரை, போடியைச் சுற்றியுள்ள விவசாய கிராமங்களைக் களமாகக் கொண்டவை. போலவே வறண்டு போன பூமியை அதன் வாழ்வைச் சித்தரிப்பவை. குறிப்பாக சில கதைகளின் மையப்பொருளாகவே அவை அமைந்துள்ளன.

தொகுப்பின் முதல் கதையான உயிர்ச்சுனை, மறுபோர் ஓட்டியும், நீர் கிடைக்கப்பெறாத கண்ணப்பரின் ஆற்றாமையைப் பேசுகிறது. கோக கோலா குளிர்பான நிறுவனம் சுற்றுவட்டார வேளாண் நிலங்களின் நீரையும் உறிஞ்சிக்கொண்ட கயமை கூறப்பட்டாலும், கண்ணப்பரின் பேரன் நிதின் குறித்த விவரணைகள், மறைமுகமாக அவனது பங்கு நீரும் சேர்ந்தே களவுபோயிருக்கும் வலியைச் சொல்கின்றன. முதல் மகளிடம் தான் பட்டிருக்கும் கடன், இரண்டாம் மகளின் திருமணம் இவை எல்லாவற்றையும் தாண்டி கண்ணப்பர் “எம் பேரன்” எனச்சொல்லி உடையும் இடம் இக்கதைக்கு இன்னொரு பரிமாணத்தைக் கொடுக்கிறது.

இத்தொகுப்பின் ஆகச்சிறந்த கதைகளுல் ஒன்றான புத்துயிர்ப்பு வறட்சி நேரடியாக சம்சாரியின் வாழ்க்கையில் நிகழ்த்தும் அவலங்களைப் பேசுகிறது.  நல்லவனாகவும் திறமைசாலியாகவும் அறியப்பட்ட கோபால் வீட்டில் இரு நிறைமாத கர்ப்பிணிகள். ஒன்று அவன் மனைவி சாந்தா. இன்னொருவள் அவன் மகளைப் போலக் கருதும் பசுமாடு லட்சுமி. காடு மலை என எங்கு அலைந்தாலும் தீவனம் கிடைக்காத சூழலிலும் மாட்டை விற்க மறுக்கும் கோபால், தன் மனைவியின் வளையல்களை அடமானம் வைத்து பணம் புரட்டிய போதும் எங்கும் தீவனம் வாங்க முடியாமல் போகிறது. வேறுவழியில்லாமல் பக்கத்து வீட்டு ராமசாமி கவுடரின் தொழுவத்திலிருந்து சில கட்டு தீவனங்களைத் திருடும்போது அவர்களிடம் சிக்கிக்கொள்கிறான். அடுத்த நாள் நடக்கவிருக்கும் அவமானமும், எதுவுமே செய்யவியலாத கையறு நிலையும் அவனை தற்கொலை நோக்கித் தள்ளுகின்றன. பணம் புரட்ட முடிந்த பின்னரும் தீவனம் கிடைக்காத கொடுமையை இக்கதை பேசுகிறது. இதைப் போலவே, மெய்பொருள்காண்பதுஅறிவு கதையில், பரமசிவம் வேளாண் கூலி வேலையினால் படும் பாடு வறட்சியின் கோரத்தைச் சுட்டுகிறது.

தன் கதைகளில் திரு.சு.வே. கட்டமைக்கும் பாத்திரங்கள் வலுவான நம்பகத்தன்மை கொண்டிருக்கின்றன. வெகுசுலபமாக நாம் பார்த்திருக்கக்கூடிய ஒரு விவசாயக்கூலியை, வயதான பாட்டியை, தனித்திருக்கும் மாணவனை நம் நினைவில் மீட்டெடுக்க உதவும் வலுவான சித்தரிப்புகள் ஒவ்வொன்றும்.

கூருகெட்டவன் கதையின் உடையாளியும், வயிற்றுப்புருசன் கதையின் பொம்மையாவும் இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்தவர்கள். இருவருமே ஊருக்கென நேர்ந்துவிடப்பட்டவர்கள். ஆனால், உடையாளிக்கு ஒரு குடும்பமும், தான் ஏய்க்கப்படுவது பற்றிய பிரக்ஞையும் இருக்கிறது. ஆனால் அதுவும் அற்றவன் பொம்மையா. அவனைப் பொருத்தமட்டில் அது அவன் ஊர், அவ்வூரின் தோட்டமோ வெள்ளாமையோ எதுவாகிலும் அது அவன் பொறுப்பு. கதையில், பொம்மையா மனம் உடைந்து கண்ணீர் விடுவது ”நீ யாரு?” எனக் கேட்கப்பட்ட பதில் தெரியாத கேள்வியால் மட்டுமே. அதைத் தவிர வேறெந்த வசவுகளும், பேச்சுகளும் அவனைத் தீண்டுவதேயில்லை. மாறாக, உடையாளி தன் மனைவியுடன் ஜெயக்கிருஷ்ணன் கொண்டிருக்கும் உறவினால் பெரிதும் பாதிக்கப்படுகிறான். அடுத்த நாள் அதைக் கடக்கும் மனதோ அல்லது சூழலோ மட்டுமே அவனுக்கு வாய்த்திருக்கிறது. ஒருவகையில் இவ்விருவருக்கும் இடையே நிற்கும் கதாப்பாத்திரமாக திரு. நாஞ்சில் நாடன் அவர்களின் எடலக்குடி ராசாவைச் சொல்லலாம்.

தொகுப்பின் பெரும்பாலான பெண்கள் தாய்மையின் குறியீடாகவே இருக்கிறார்கள். விதிவிலக்கான ஒருவர் பேரிளம்பெண் கதையின் ஈஸ்வரி. கர்ப்பிணியான தன்னுடைய மகள் வீட்டில் இருக்கும்போது, ஈஸ்வரி ஒரு சீர் வீட்டுக்குச் செல்கிறாள். அவ்விசேஷ வீட்டில் அனைவரையும் ஈர்க்கும்படியான ஆடை அலங்காரங்கள், பாவனைகளை மேற்கொள்கிறாள். அதன் தொடர்ச்சியை மண்டபத்திலும் நிகழ்த்தும் ஆசைக்கு ஒரு தடை வருகையில், அந்தத் தடையின் வலியைக் காட்டிலும் பொய்த்துப்போன தன் ஆசை ஈஸ்வரிக்கு துன்பமளிக்கிறது. இதே இடத்தில் ஒரு ஆண் இருப்பின் அவன் சந்திக்க வேண்டியிராத சங்கடங்கள் இவை எனும்போது ஈஸ்வரியின் மீது கொஞ்சம் பரிவு எழுகிறது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவன் வெளிக்காட்ட விரும்பாத அல்லது அவனுக்கே தெரியாத ஒரு முகம் இருக்கும். அதை இக்கட்டான ஒரு சந்தர்ப்பம் எளிதில் வெளியே கொண்டுவந்துவிடும். அப்படி சந்தர்ப்பங்கள் மனிதனை தங்கள் கையில் எடுத்துக்கொள்ளும் கதைகளும், சந்தர்ப்பங்களின் இக்கட்டுகளால் நேரும் உறவுச் சிக்கல்களின் பரிமாணங்களும் இத்தொகுப்பில் உண்டு.

சந்தர்ப்பம் கதையில் இரண்டு விதமான மாணவர்கள் காட்டப்படுகின்றனர். துவக்கம் முதலே கெத்தாக வளையவரும் ஜீவா, நண்பர்களால் புள்ளப்பூச்சி என்றழைக்கப்படும் கதிரேசன். நீச்சல் தெரியாத ஜீவா, படிக்கட்டுகளைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் மிதப்பதும், பேருத்து நிலையத்தில் ஒரு பெண்ணின் மானம் பங்கப்படும்போது கதிரேசன் முதல் எதிர்ப்பைக் காட்டுவதும் இயல்பில் வெளிப்படும் அவர்களின் குணாதிசயத்தின் நேரெதிர் நிலையாகும்.

தங்கைகளுக்காக தன் வாழ்வை அழித்துக்கொண்ட அண்ணன் அவனது தங்கைகளால் தெய்வமாகவே மதிக்கப்படுகிறான். ஒவ்வொரு தங்கைக்கும் திருமணம் முடித்துவைக்கும் அண்ணன் தன் திருமணத்தைப் பற்றிய எண்ணமே இல்லாதிருக்கிறான். இறுதியாய் மிஞ்சும் தங்கையிடம் மூத்தவர்கள் திரும்பத்திரும்பச் சொல்லும் வாக்கியம் அண்ணனை நல்லாப் பாத்துக்க என்பதாகவே இருக்கிறது. நள்ளிரவு சீண்டலில் விழிக்கும் தங்கையை நோக்கி அண்ணன் கேட்கும் ”அக்கா அவுங்க ஒண்ணும் சொல்லலியா?” எனும் கேள்வியில் முடிகிறது கதை. இப்படி சரி / தவறு, முறை / பிறழ்வு எனும் இருமைகளுக்குள் அடக்கிவிட முடியாத கோணங்களைக் கொண்ட கதை உள்ளிருந்துஉடற்றும்பசி.

உறவுச்சிக்கல்களின் இன்னொரு எல்லையில் நிற்கும் கதை கொடிகொம்பு. கணவன் விஜயன், ஒரு குடிகாரன். காமம் மட்டுமல்ல காதலும் அவனிடமிருந்து மறுக்கப்படும் மனைவி வாணி. ஆறுதல் கொள்ள ஏதுமற்ற உறவே வாணியை மாற்றம் தேட வைக்கிறது. ஒன்றுவிட்ட கொழுந்தனார் பாஸ்கர் மீதான அவளது ஈர்ப்பு, “ஹேமாச் சிறுக்கியால்” தடைபடுகிறது. இந்த வயதிலும் ஒயில் கும்மியில் இளவட்டங்களுக்கு சரிக்கு சரியாய் நின்று விளையாடும் மாமனார் பொன்னய்யா, அவரை ரசிக்கும் கனகத்தின் மீது வாணி கொள்ளும் எரிச்சல், என கொஞ்சம் கொஞ்சமாய் தனக்கான மாற்றுப்பாதையைக் கண்டடையும் வாணி தன் ஆசையை வெளிப்படுத்தும் விதம் மிக அருமையாகக் கையாளப்பட்டுள்ளது.  

இவ்விரு கதைகளும், கையாளும் பிரச்சனையின் தீவிரம் உறைக்காத வண்ணம் அடங்கிய குரலில் வெறுமனே சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனாலும், பாத்திரங்களின் செயலுக்கான நியாயம் மிக வலுவாக வெளிப்பட்டிருக்கும் கதைகள் இவை. ஆண்-பெண் உறவுகளுக்குள் இயல்பாக நிகழும் சிக்கல்கள் கிடந்தகோலம் கதையிலும், பெண்களுக்கு இந்த சமூகத்தில் இருக்கும் இடம் புற்று கதையிலும் சொல்லப்பட்டிருக்கின்ற போதிலும் என் மனதில் ஆழ்ந்த பாதிப்பை இக்கதைகள் உருவாக்கவில்லை.   

இத்தனை சிக்கல்களை, வறட்சியை, மனித மனதின் இருமைகளை, வாழ்க்கை நம்மைக் கொண்டு நிறுத்தும் கையறு நிலையை இக்கதைகள் பேசினாலும், வெண்ணிலை எனும் இத்தொகுப்பை மிகமுக்கியமான ஒன்றென நான் கருதும் அம்சம், இத்தொகுப்பின் கதைகள் வாயிலாக திரு. சு.வே. நமக்குக் காட்டும் மானுடத்தின் சின்ன ஒளிக்கீற்று, போலவே வாழ்க்கை மீது சிறு நம்பிக்கை கொள்வதற்கான சாத்தியக்கூறுகள்.

உதாரணமாக, புத்துயிர்ப்பு கதையில் மிகக்கொடும் வறட்சியினால் தற்கொலைக்கு முயற்சிக்கும் கோபால் பிழைக்க இருக்கும் சிறு வாய்ப்பையும், பசியால் தவிக்கும் அவனது பசு லட்சுமிக்கு, கனகராஜின் அம்மா மூலம், குறைந்தபட்சம் அன்றைக்காவது கிடைத்த தீவனத்தையும் சொல்லமுடியும். ஆனால், வாழ்வின் மீதான் நம்பிக்கையின் ஓர் உச்ச தருணம் கோபாலின் மனைவிக்கு பிறக்கும் பெண்குழந்தையை வறட்சியால் தவிக்கும் அக்கிராமமக்கள் “வான் பொழிய மண் செழிக்க வாழையடி வாழையென வந்தது குழந்தை” என வரவேற்பது. இம்முடிவு தரும் மன எழுச்சி அதற்கு முந்தைய கணங்களின் துயரங்களை கடக்கச்செய்வது. தனிப்பட்டமுறையில் எவரையும் தெரியாத நகரத்துக்கு வந்த சில மாதங்களிலேயே, தன் தகப்பனின் மரணத்தை எதிர்கொள்ளும் இளம்பெண்ணுக்கும் ஏதோவொரு ரூபத்தில் மானுடத்தின் கடைப்பார்வை கிடைப்பதற்கான சாத்தியத்தைப் பேசுகிறது வெண்ணிலை கதை. 

இவ்வகைக்கதைகளின் இன்னுமோர் உச்சம் என சொல்லத்தக்க கதை அவதாரம்”. உடல் குறைபாடுள்ள குழந்தையை அவமானத்தின் சின்னமாகக் கருதும் நாகரீகத்துக்கு எதிரிடையாக, அதைபோன்றதொரு குழந்தையை குலதெய்வமென கொண்டாடும் காடர்களைக் காட்டுகிறது இக்கதை. அதன் நீட்சியாக, உப்புச்சப்பில்லாத பிணக்குகளை மறந்து கர்ப்பவதியான தன் மனைவியின் வயிற்றை முத்தமிட என்னும் கணவனின் மனதில் ஏற்படும் மாற்றத்தில் அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்துவிடக்கூடும். 

இறுதியாக, இத்தொகுப்பில் இருந்து நான் எடுத்துக்கொள்வதென்ன எனும் வினாவுக்கு நிரூபணம்கதையிலிருந்து விடை சொல்லமுடியும். தன் மகன் எபி நன்றாகப் படிக்கவேண்டும் என தேவாலயத்துக்கு அழைத்துப்போகிறாள் கிறிஸ்டி. பிராத்தனையில் லயித்திருக்கும் அன்னையிடமிருந்து நழுவி காணிக்கைப் பணத்துக்கு பிஸ்கட் வாங்கி பிச்சைக்காரனுக்குத் தருகிறான் எபி. யாரும் சுலபத்தில் கண்டுகொள்ளமுடியாத மறைவான இடத்தில் இருக்கும் அப்பிச்சைக்காரன் இரு சொற்றொடர்களை ஆங்கிலத்தில் கூறுவான். இரண்டாவது சொற்றொடர் “He Lives with Children”. அவன் கூறும் முதல் சொற்றொடர் நமக்கானது, “Jesus Christ never fails to feed His followers”.

 நன்றி!

வாழ்வெனும் மாயப் புரவி – விக்ரம்

‘களவு போகும் புரவிகள்’ சிறுகதைத் தொகுப்பு குறித்து சொல்முகம் – சு. வேணுகோபால் கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட சிற்றுரை.

நம் அன்றாட வாழ்வில் சற்று அறிந்திருக்கக் கூடிய, கேள்விப்பட்டிருக்கக் கூடிய, மேலோட்டமாக கவனித்திருக்கக் கூடிய அல்லது நம் தீவிர கவனத்தை ஈர்த்திருக்கக் கூடிய மனிதர்கள் என பலதரப்பட்டவர்களை தன் பாத்திரங்களாக உள்ளடக்கியது சு. வேணுகோபால் அவர்களின் களவு போகும் புரவிகள் சிறுகதைத் தொகுப்பு.  அப்பாத்திரங்களில் சிலராக நம்மை நாம் உணரவும் கூடும்.  தன் குழந்தையை தெருவில் மற்ற சிறுவர் சிறுமியரோடு விளையாடக்கூடாது என்று சொல்லும் அம்மா, பூங்காவில் பேருந்து நிலையங்களில் அல்லது வேறு எங்கேனும் தன் வாடிக்கையாளரை கண்டுகொள்ளும் விலைமகள், போதைப் பொருளுக்கு அடிமையாகி வேறொன்றாகி விட்ட இளைஞன், என்ன ஆனபோதும் விடாப்பிடியாக விவசாயத்தைக் காதலிக்கும் விவசாயி, மக்களிடம் எரிச்சல்படுகிற அல்லது சிரித்துக் கொண்டே தம் சக ஊழியர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே வேலை பார்க்கும் வங்கி ஊழியர்கள், காதல் திருமணம் செய்து உறவினர் தொடர்புகள் இன்றி தனித்து வாழும் இளம் தம்பதியர், காவலரின் கடுமையை எதிர்கொள்ளும் எளியவர், செம்பட்டைத் தலையுடன்  கிழிந்த அழுக்கு உடையுடன் காலில் பாலிதீன் கவர்களை செருப்பாக கட்டிக்கொண்டு கடும் வெயிலில் தனக்குத்தானே பேசிக்கொண்டு செல்லும் மனநலம் பாதிக்கப்பட பெண், உங்களுக்கு குத்துமதிப்பாக வைத்தியம் செய்யக்கூடிய பெயர் தெரிந்த டாக்டர், மனிதர்கள் மட்டுமல்ல நீங்கள் பார்த்திருக்கக் கூடிய பெரிய வேப்ப மரம், கால்நடைகள்,  என இத்தொகுப்பின் கதாபாத்திரங்கள் வெவ்வேறு வகையினர்.  வெவ்வேறு வகையினர் எனினும் அவர்களில் பலருக்கும் பொதுவான ஒரு ஒற்றுமையை உணர்த்துகிறது களவு போகும் புரவிகள்.  அவர்கள் தங்கள் புரவிகளை வாழ்வின் மாயங்களுக்கு பறிகொடுத்தவர்கள்.  தம் உண்மையுடனும் தீவிரத்துடனும் மட்டுமல்லாமல் இக்கதைகள் நடையிலும் கூட தேவைக்கு ஏற்ப புரவியைப் போலேவே செல்கின்றன என்று தோன்றுகிறது.

களவு போகும் புரவி கதையில் சௌடம்மன் கோவில் திருவிழாவையொட்டிய ஒரு தொன்மைக் கதை கூறப்படுகிறது.  அரச குதிரை லாய அதிகாரியான கதிரய்யாவிடம் தன் குதிரையை இளைப்பாற்றிக் கொள்ள  ஒருநாள் மட்டும் இடம் கேட்டு வருகிறான் யதுசா என்ற அந்நியன்.  அவன் குதிரைக்கு லாயத்தில் இடம் மறுக்கும் கதிரய்யா தன் எஜமானருக்கு இருக்கும் வழக்கம் ஒன்றைச் சொல்கிறார்.  லாயத்தின் நான்கு மூலைகளிலும் அமைந்திருக்கும் மேடைகளில் எந்த ஒன்றில் ஏறிநின்று பார்த்தாலும் அவர் கண்களுக்கு பன்னிரண்டு குதிரைகள் தெரிய வேண்டும்.  அவ்வாறே தான் வைத்திருப்பதாகச் சொல்கிறார் கதிரய்யா. யதுசா அதைப் பற்றி தான் பார்த்துக் கொள்வதாக கூறுகிறான்.  அவனது மரியாதையான பேச்சிற்காகவும் அவன் தரும் சன்மானத்திற்காகவும் அவன் மீது தோன்றும் பரிவினாலும் அவனது குதிரையை லாயத்தில் இருத்திக்கொள்ள அனுமதி அளிக்கிறார் கதிரய்யா.  தன் குதிரையை லாயத்தில் சேர்க்கும் அவன் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் பன்னிரண்டு குதிரைகள் கண்ணில் தெரியும்படி அமைக்கிறான்.  அவன் மாயவித்தைகளை அறிந்தவனாக இருக்கிறான்.  பின்னர் மலைப்பாதையில் திரும்பிச் செல்லும் யதுசா எட்டு குதிரைகளை கொண்டு செல்கிறான் யதுசா.  கெஞ்சும் கதிரய்யாவிடம் லாயத்தில் சென்று மூலை மேடைகளில் நின்று பார்த்து விட்டு வரச்சொல்கிறான்  அதுவரை தான் காத்திருப்பதாக சொல்கிறான்.  கதிரய்யா சென்று ஒவ்வொரு மூலையில் இருந்தும் பார்க்க பன்னிரண்டு குதிரைகள் தெரிகின்றன.  யதுசாவிடம் சென்று தெரிவிக்கும், அஞ்சும்  கதிரய்யாவிடம் தன் பையிலிருந்து வெள்ளிக் காசுகளை அள்ளி வீசிச் செல்கிறான் யதுசா.  நரிதனை பரியாக்கி தன் அடியவனைக் காத்தருளும் பொருட்டு ஆணவம் நீங்கும் பொருட்டு இறைவன் செய்தது போன்றதல்ல இம்மாயம்.   இடமளித்தவனை, அவன் பலகீனங்களைக் கொண்டு கொள்ளையடித்த அந்நியன் செய்த மாயம்.  

இத்தொகுப்பின் சில கதைகளிலும் அவற்றின் மையக் கதைமாந்தர்களுக்கேயான புரவிகளை மாயம் காட்டி பறித்து செல்ல அவர்களுக்கேயான யதுசா இருக்கிறார்.  அந்த யதுசா ஒவ்வொருவருக்கும் தனி ஒருவனாக அல்லது சில நபர்களாக, உறவுகளாக, தனிப்பட்ட சூழ்நிலைகளாக, தன் முனைப்பாக, சமூக பொருளாதார காரணிகளாக, மொத்தமாக வாழ்வின் மாயமாக இருக்கிறான்.  அவர்கள் பறிகொடுத்த புரவிகள் எங்கோ இருக்கின்றன அல்லது அவர்களுக்கு இறந்துவிட்ட அவை அவர்களது நினைவில் மட்டும் வாழ்கின்றன.  அம்மாவின் விருப்பங்கள் சிறுகதையில் வரும் நவீன் என்ற சிறுவனுக்கு அவன் தன் நண்பர்களுடன் தெருவில் விளையாடும் இன்பத்தைப் பறித்து பொம்மைகள் நிறைத்து வீட்டிலே விளையாடச் சொல்கிறாள் அவன் அம்மா.  அவள்தான் அவனது யதுசா.

மண்ணைத் தின்றவன் கதையில் விவசாயத்தை பெரும் காதலுடன் மேற்கொள்ளும் அதன் நாயகனுக்கு விவசாயம் செய்பவர்களை பெரும்பாலும் நட்டமடையவே செய்யும், இங்குள்ள பொருளியல் சிஸ்டம் யாதுசாவகிறது.  மண்தான் காரணம் என்று அபாண்டம் கூற எனக்கு விருப்பமில்லை.  காரணம் அவன் மண்ணை நேசிப்பதை, விளையும் வெங்காயத் தாள்களை அவன் முத்தமிடுவதை, அவன் காதலை ஆசிரியர் கூறும் விதம் – அவன் படும் பாடுகள் – இடும் உரங்கள், மருந்துகள். பயிரிடும் நுணுக்கங்கள் என விவரிப்பு  எக்காரணம் முன்னிட்டும் மண்ணைப் பழிக்கக் கூடாது என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.  அவன் விவசாய வெற்றிக் கனவுகள் உண்மையில் மாயப் புரவிகளாகி காற்றில் மறைகின்றன.

உருமாற்றம் கதையின் நாயகர் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி.  அந்நாளின் நாட்டுப்பற்றின் அசலான ஒரு மனிதர்.  சில ஆண்டுகள் சிறையில் கழித்தவர்.  காமராசரின் அணுக்கம் பெற்றவர்.  சுத்திரத்தின் பின் வழங்கப்பட்ட தியாகிகளுக்கான சலுகைகைள் அனைத்தையும் மறுத்தவர்.  வயதானபோது  காலத்தின் சூழலின் மாற்றங்களை வெளியே நாட்டின் அரசியலிலும் குடும்பத்தில் மகன் மருமகள் பேரன் பேத்தி என அடுத்த தலைமுறைகளிலும் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பவர்.  அவரது லட்சியங்கள் கடந்த காலத்தவை ஆகிவிட்டன.  அவர்களது ஆர்வங்களும் ஆசைகளும் வேறு.  அவரது நீலவாணன் என்ற பேரன் தன் பெயரை ஸ்டயிலாக இருக்க வேண்டும் என்று ஆகாஷ் என்று மாற்றிக் கொள்கிறான்.  சினிமாவில் சேர்ந்துவிட ஆர்வம் கொண்டிருக்கிறான்.  பேத்தி ஆங்கில உச்சரிப்பு சரியில்லை என்று தன்னை பெண்பார்க்க வரும் பையனை நிராகரிக்கும் அளவிற்கு ஆங்கிலத்தின் மீது அக்கறை கொண்டவளாக இருக்கிறாள்.  அவர் எந்த கட்சியில் இருந்து நாட்டு விடுதலைக்கு பாடுபாட்டாரோ அதே கட்சி அவருக்கு உவப்பில்லாத உலகமயமாக்கலைச் செய்கிறது.  மனத் தவிப்பும் குழப்பமும் என அவர் நாட்கள் செல்கின்றன.  அவர் சுந்தரதினத்தில் தியாகி என்ற முறையில் தொலைகாட்சிக்காக நேர்காணல் செய்யப்படுகிறார்.  அதன் வாயிலாக ஒரு பிரபல சினிமா இயக்குனரின் அறிமுகத்தையும் நன்மதிப்பையும் அவர் பெற நேர்கிறது.  அவரை  அந்த  இயக்குனர் விருந்துக்கு அழைக்கிறார்.  விருந்து முடிந்து புறப்படும் சமயம் ஒரு உதவி வேண்டும் என்று கேட்க, ஆர்வமுடன் முன்வரும் இயக்குனரிடம் அவர் தன் பேரனுக்காக சினிமா வாய்ப்பு கேட்க, இயக்குனரின் முகம் மாறுபடுகிறது.  பல ஆண்டுகளின் லட்சியவாதத்தின், தன்னல மறுப்பின் அவரது புரவியை காலமாற்றத்தின் மாயம் என்னும் யதுசா களவாடிச் செல்கிறது.

போலவே ‘சங்கிலி’ என்னும் கதை அதன் நாயகன் தன் தந்தையின் அதிக பவுன் வேண்டும் என்ற ஆசையால் காலதாமதமான திருமணத்தால் தன் சிற்றின்பத்தை அதற்கான வயதைத் தொலைக்கிறான்.  வட்டத்திற்குள்ளே என்ற கதையின் நாயகி சுரண்டல் புத்தியும் அற்பத்தனமும் கொண்ட அவள் கணவனால் அவள் கைத்திறன் கலைத்திறன் வெளிப்படும் வேலையை கூடுதல் சம்பளத்திற்காக விடுகிறாள்.  அலைச்சலும் சுவாரஸ்யம் இல்லாததுமான வேலைக்கு செல்கிறாள்.  தன் மட்டமான இரக்க மற்ற கணவனையும் வேலையையும் சகித்துத் கொண்டு தன் பழைய வேலையை எண்ணி ஏக்கம் கொள்கிறாள்.  சாப நினைவுகள் கதையின் நாயகி மனநலம் பாதிக்கப்பட்டவளாக எச்சில் இலைகளின் உணவைதின்று தனக்குத்தானே  ஓயாது பேசி சுற்றித் திரியும் ஒரு பெண்.  அவள் மிகவும் திறமையான ஒரு, முன்னாள்  ஆராய்ச்சி படிப்பு மாணவி.  அவளது கல்லூரி நண்பர்கள் அதிர்ச்சியுடன் அவளை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.  ஒரு நண்பனின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்கள்.  பின் அவளது வீட்டை அவளது உறவினரை கண்டுபிடிக்க முடியாமல் மனநல காப்பகத்திற்கு அனுப்புகிறார்கள்.  புத்திசாலி மாணவியான அவளது  எதிர்காலத்தை களவாடியது யார்? அது சொல்லப்படவில்லை யாரோ சிலர் அல்லது அவளது குடும்ப சூழல் அல்லது அவளது தன்னைப்பற்றி எவரிடமும் சொல்லாத தன்முனைப்பு.  

‘மாயக்கல்’ கதை பன்றி வளர்க்கும் மூக்கம்மாவை அவளது மகன் பெத்தண்ணணை போலீசால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் அவர்கள் துயரைச் சொல்கிறது.  தற்கொலை செய்துகொள்ளும் பெத்தண்ணணை மாயக்கல்லாக அவளின் கற்பனைக்குத் தருகிறது. அவன் ஒரு தொன்மமாக அநீதி அழிக்கும் தெய்வமாக எழக்கூடும்.  அது அவளது விருப்பமும்  கூட.  எளிய மக்களின் அன்றாட வாழ்வையும் அபகரித்துச் செல்லும்  ஈவிரக்கமற்றதன்மை எவ்வாறு தோன்றுகிறது.   வேம்பு கதை பேடண்ட் ரைட் மூலமாக வெளிநாடு கவர்ந்து கொள்ளும் உள்ளூர் மக்களின் உரிமையை மெல்லிய அங்கதத்துடன் பேசுகிறது.  அமெரிக்கா இந்தியாவை ஐநா மூலமாக நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுகிறது.  சிறிய அந்த கிராமத்திற்கு தன் அதிகாரிகளை அனுப்புகிறது.

வேம்பு – கீழாநெல்லி மட்டுமல்ல வேறு பலவும் இருக்கலாம்.  யோகாசனங்களும் மூச்சுப் பயிற்சியும் வேறு பெயரில் வெளிநாட்டு பிராண்ட் ஆகலாம்.  இந்தியர்களுக்கு தங்களுக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லத் தெரியவில்லை என்று பழைய பேச்சு ஓன்று உண்டு.  இன்று  இந்தியர்களுக்கு தங்களை உரியமுறையில் உலக சந்தைப்படுத்திக்கொள்ள இன்னும் தெரியவில்லை என்று சொல்லத் தோன்றுகிறது.  

‘வெகுதூரம் விலகி’ ஒரு டாக்டரின் கதையை சுவாரஸ்யமாக சொல்கிறது.  அவர் தன்னளவில் எதையும் தொலைக்கவில்லை.  ஆனால் அக்கதை நாம் அனைவருக்கும் தொலைத்து வெகுதூரம் விலகி வந்துவிட்ட  நமது பழங்குடி மருத்துவ முறைகளைச் சொல்கிறது.  வெற்றிகரமான நமது பூர்விக மருத்துவத்தின் செல்வங்களை இழந்து மூர்க்கமாக திணித்துக் கொண்டுவிட்ட ஆங்கில மருத்துவத்தை – அதன் பேரில் நிறுவப்பட்ட சுரண்டலை சுட்டிக் காண்பிக்கிறது.  அதே சமயம், எளிய பொருளைப் பெற்றுக்கொண்டு அரிய தொண்டினைச் செய்யும் அந்த மலைக்குடி மருத்துவர் மனம் கவர்கிறார்.  இந்த சிறுகதைத் தொகுப்பின் எல்லாக் கதைகளிலும் என் ரசனையின் அடிப்படையில் சொல்வதென்றால் வெகுதூரம் விலகி சிறுகதையைச் சொல்வேன்.  சரி எல்லா கதைகளுமே ஏதோவொரு வகையில் புரவிகளைத் தொலைத்தவர்களுடையது தானா என்றால் அப்படியில்லை. 

இங்கு வேறு இரண்டு அம்சங்களையும் குறிப்பிட வேண்டும்.  மாயமும் நகைச்சுவை உணர்வும்.  தருணம் கதையில் வரும் கஞ்சா அடிமையாகி கோமாவில் இரண்டாண்டுகள் கழிக்கும் இளைஞன் கோமாவில் இருந்து வெளிவந்த பின் தன் அனுபவத்தில் காலத்தின் இரண்டு பக்கங்களில் எட்டிப்பார்க்கிறான் எதிர்காலத்தில் நடக்க இருப்பவற்றின் ஒத்த நிகழ்வுகளை நிகழ்காலத்தில் காண்கிறான்.  பின் ஊரில் மதக்கலவரம் நடந்து கொண்டு இருக்கும் சூழலில் நூற்றாண்டுகள் முந்தைய நிகழ்வுகளில் தன்னைக் காண்கிறான்.  வேம்பு கதையின் வைடூரிய வண்டு தன் அழகின் மாயத்தால் மண்ணை விண்ணுலகுடன் பிணைக்கிறது.

‘உடம்பு’ கதையில் ஜெர்மன் ஊசியால் வயிற்றுக்குள்ளேயே பெரிதாக வளர்ந்துவிட்ட கன்றை பிரசவிக்க முடியாமல் வலியால் துடிக்கும் பசுவை – அதன் வயிற்றிலேயே இறந்துவிடும் கன்றின் காலில் கயிறு கட்டி இழுத்து எடுக்கப்படும் காட்சியை.  அப்பசுவின் வேதனையை வாசிப்பவர்கள் பதறும் விதத்தில் சொல்லும் ஆசிரியர் சங்கிலி கதையில் – அப்பாவின் பொன் ஆசையால் தன் வயதைத் தொலைத்த கதைநாயகன் -அவன் சோகத்திற்குள் அங்கத்ததை இழையோடவிட்டிருக்கிறார்.  கதை முதலிரவின் முயக்கத்தில் தொடங்குகிறது.  தன் தோல்விகரமான அந்த முயக்கத்தின் சோகத்துடன்  பின்னிரவில் மொட்டை மாடியில் மல்லாக்கப்படுத்து விண்மீன்களைப் பார்த்தவாறே எண்ணங்களை அசைபோடுகிறான்.  முன்பு திருணம் முடிந்து பார்ட்டி தந்த நண்பன் ஒருவனை நினைவு கூறுகிறான்.  நண்பர்களுடன் போதையில் அரட்டை அடிக்கும்போது கூட தவறியும் தன் முதலிரவு பற்றி வாய்திறக்காத அவனை எண்ணுகிறான்.  அவர்களது மற்றும் தன்னுடைய சிற்றன்பம் குறித்த பில்டப்கள்.  பிற தருணங்கள் – கடும் வற்புறுத்தலுக்குப்பின் பசுவை கூடிவிட்டு சோர்ந்த வயதான அந்த காளை நினைவுக்கு வருகிறது, கூடவே பசுவை துரத்திச் செல்லும் இளம் காளைகள் இரண்டு.  அவன் நிற்கும் பேருந்து நிறுத்தத்தின் புளியமரம் இலைகள் மிக குறைந்து காய்ந்து வயதானதாக இருக்கிறது.  பேருந்தில் ஏறிய பின் கவனிக்கிறான் அவன் ஏறிய பேருந்து மிகவும் புகை கக்கிக்கொண்டு நிதானமாக பயணிக்கும் தள்ளாத வயதான பேருந்து பிற இளம் பேருந்துகள் அதை சத்தமிட்டு ஒதுக்கி பாய்ந்து கடந்து செல்கின்றன.

வெகுதூரம் விலகி கதையில் தான் உண்மையிலே ஒரு டாக்டர் தானா என்று தனக்கே சந்தேகப்படும் டாக்டர்.  அவரது முதல் அறுவை சிகிச்சை – ஒன்றுமே இல்லாமல் நெஞ்சில் ஏற்பட்ட சாதாரண காயத்திற்காக வந்தவனை இதய வால்வு கோளாறு என்று பலநாள் அட்மிஷன் போட்டு பிறகு நெஞ்சு பிளந்து பிறகு மூடி அவனது உயிர் காத்த கடவுளாக அவர் அவனது உறவினரால் நோக்கப்படுவது.  எக்ஸ்-ரே எடுக்க இரண்டு முறை வேறு வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு எக்ஸ்-ரேயில் நுரையீரலே இல்லாமல் இருக்கும் நோயாளி – ஒருவேளை சிவபெருமான் தான் தன்னை சோதிக்க நோயாளி வடிவில் வந்திருக்கிறாரோ என்று அஞ்சி – தனக்கு அப்படி ஒன்றும் அவ்வளவு பக்தி கிடையாதே என்று அவர் எண்ணுவது என புன்முறுவலுடன் வாசிக்கச் செய்கிறது.  சவாலான கேஸ்களை கையாண்டதன் சுவாரஸ்யங்களை பகிர்ந்துகொள்ளும் டாக்டர் நண்பர்கள் – விபத்தில் வயிறு சற்று கிழிந்து குழந்தையின் நான்கு விரல்கள் வெளியே வந்து நீட்டிக்கொண்டிருக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணி பெண்ணின் சவாலான அந்த கேஸைக் கையாண்ட சம்பவத்தை பற்றி ஒரு டாக்டர் கூறுவது.  குழந்தையை எப்படி விரல்களை உள்ளிழுக்கச் செய்வது என்று பல மருத்துவர்கள் போராடிக்கொண்டிருக்க வெளியே புகை பிடித்துக் கொண்டே சீரியசாக யோசித்தவாறே நடமாடிக்கொண்டிருக்கும் தலைமை மருத்துவர் சட்டென்று உள்ளே வந்து குழந்தையின் விரல்களில் தன் சிகரெட்டால் சூடு வைக்க குழந்தை தன் விரல்களை சட்டென்று உள்ளிழுத்துக் கொண்டு விடுகிறது.  இதை பெருமிதத்துடன் ஒரு மருத்துவர் கூற பிற மருத்துவ நண்பர்கள் எல்லா மருத்துவ தர்க்கங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு வியந்து புல்லரிப்பது என  சிரிக்காமல் இக்கதையைக்  கடக்க முடியாது.

விரைந்தும் தீவிரத்துடனும் உண்மையான உணர்ச்சியுடன் மனிதரின், உயிர்களின்  வலிகளை, பசியை, துயரை சொற்களால் உணர்த்தும் ஆசிரியர் சு.வேணுகோபால் அவர்களின் கதைகள் கருணையின் ஈரநிலத்தில் தம் வேர்களைக் கொண்டவை.  அத்துடன்  மாயாஜாலம் நிகழ்த்தக் கூடிய (யதுசா அல்ல பரிதனை நரியாக்கிய கருணையின் தலைவன் போன்ற) வண்ணமிக்க நகைச்சுவை உணர்வு ததும்பும் அவரது மற்றொரு முகத்தையும் களவுபோகும் புரவிகள் தொகுப்பு வெளிப்படுத்துகிறது.  எங்களுக்கு அவரும் வேண்டும்.  இதை ஒரு வேண்டுகோளாக அவரிடம் வைக்கிறோம்.  களவுபோகும் புரவிகளை பின் தொடர்ந்த இந்த அனுபவத்திற்காகை அவருக்கு நன்றிகள்.

விக்ரம்

     விஷ்ணுபுரம், ஒரு ஆன்மிக அனுபவம் – விக்ரம்

ஒரு நாவல் வாசிப்பு தியான அனுபவத்தை அளிக்க முடியுமா? எல்லா நாவல்களாலும் அல்ல.  அரிதான சிலவற்றால் அவ்வாறு அளிக்க முடியும் விஷ்ணுபுரத்தைப் போல.  கனவுகள் நம்மை மெய்மையின் கரையில் கொண்டு நிறுத்த முடியுமா? ஏன் முடியாது? மொத்த உலகை, வாழ்வை கனவுக்கு ஒப்பிட்டுதானே மெய்மையை சுட்டுகிறார்கள்? ஆனால் எல்லா கனவுகளும் அல்ல விஷ்ணுபுரத்தைப் போல ஒருசில மட்டுமே.  அவை மெய்மைக்கு மிக அருகில் செல்பவை அங்கு தம்மை கலைத்துக் கொள்பவை.  ஞானிகள் கலைஞர்களை, காவியங்கள் படைக்கும்  மகத்தான எழுத்தாளர்களை பெரும் கவிஞர்களை பேணுகிறார்கள்.   ஏனெனின் இக்கனவுகளின் முக்கியத்துவம் அவர்கள் நன்கறிந்தது.  இவை நம் சாதாரண விழிப்புக்கும் உறக்கத்திற்கும் இடையே வரும் கனவுகள் அல்ல, மாறாக நாமறிந்த அனைத்தையும் உறக்கம் எனக்கொண்டு மெய்மையை விழிப்பு எனக்கொண்டு அவ்விரண்டிடையேயான கனவுகள்.  ஒருவேளை விழித்தாலும் விழித்துக்கொள்ளலாம் அல்லது உறங்கிவிடலாம்.  மெய்மையின் எந்தவொரு வாய்ப்பும் இங்கு அங்கீகரிக்கப்படாமல் எவ்வாறேனும் பேணப்படாமல் இருந்ததில்லை.  எந்தவொரு வாய்ப்பிலும் போலவே இதிலும் தவறவிடும் சாத்தியமும் உள்ளது.  அது ஊழ் எனலாம் அல்லது உங்களுக்கான கதவு வேறொரு இடத்திலிருக்கிறது.

விஷ்ணுபுரம் உலகியல் உறக்கத்தைத் திரட்டி ஒரு கனவினை எழுப்புகிறது.  அக்கனவினை மெய்மையை நோக்கி செலுத்துகிறது.  கனவு எப்படியும் கலைய வேண்டியதுதான்.  எனினும் எச்சரிக்கை மேற்கொள்கிறது.  கனவு இடையில் கலைந்து விடக்கூடாது.  அது உரிய திசை சென்று கலைய வேண்டும்.  அது இப்புறம் முற்றிலும் உலகியலில் விழுந்துவிடக் கூடாது அதேசமயம் தானே மெய்மை என்று அது சொல்லவும் கூடாது.  தானும் உலகியலே என்று தனக்கே சொல்லிக்கொண்டு அப்பால் சென்று மறைய வேண்டும்.  கௌஸ்துபம் – முழுவதும் – ஞான சபை விவாதங்கள் அதன் தர்க்கங்கள் – உரத்துப் பேசுவதில்லை.  கௌஸ்துபம் ஆம் இது உலகியல் தான் ஆனால் விஷயம் அதுவல்ல என்கிறது.  ஸ்ரீபாதம், கௌஸ்துபம் – இவ்விரண்டோடு ஒருவேளை நிறுத்தபட்டிருந்தாலும் விஷ்ணுபுரம் மகத்தான நாவல்தான்.  ஸ்ரீபாதத்தில் மலைமீது ஏறிச்சென்று அங்கு காஸ்யபரைக் காண்கிறார் சிற்பி.  அங்கிருந்து அழிக்கப்பட வேண்டிய விஷ்ணுபுரம் சுட்டிக் காண்பிக்கப்படுகிறது.  கௌஸ்துபத்தில் நிலத்தின் அடியில் இருந்து பிரதிபலிப்பாக காட்சிகள் பிறழ்ந்த விஷ்ணுபுரத்தை (ஞான சபையை) சித்தன் தன் சீடன் காஸ்யபனுக்குக் காண்பிக்கிறான்.  அது கடந்த காலத்தின் விஷ்ணுபுரம்.  மணிமுடி மிச்ச மீதம் இன்றி விஷ்ணுபுரத்தை முழுவதுமாக அழிக்கிறது.  அம்மாபெரும் கோபுரங்களை மட்டுமல்ல அனைத்துவிதமான தன்முனைப்பின் கட்டுமானங்களையும்.

பலவிதங்களில் பலகோணங்களில் நோக்க முடியும்.  ஹரிததுங்கா மலைக்காக அதன் முகில்களுக்காக பொன்னிறம் பொழியும் வானுக்காக செந்நிற சோனாவிற்காக அதன் மீன்களுக்காக கோபுரத்தில் மோதிச் சரியும் பறவைகளுக்காக வைஜயந்தி என்னும் வெண்புரவிக்காக விண்ணுலகம் தொடும் கோபுரங்களுக்காக ஆலயத்தின் சிற்பங்களுக்காக மரமல்லி மரத்திற்காக மிருகநயனிக்காக மலர்களுக்காக  – என இதன் அழகியலுக்காக – கவிதைக்காக இசைக்காக அங்கததிற்காக வாசிக்கமுடியும்.  இதன் தத்துவ விவாதத்தின் வழியாக இங்கு கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும், நோக்கப்படுபவற்றிக்காக – மெய்காண் வழிமுறைகளுக்காக என அக்கோணத்தில் நோக்க முடியும்.  உலகின் நிலையாமை கூறுவது எனச் சொல்லமுடியும் அமைப்புகளின் அதிகாரங்களின் தனிமனிதர்களின் அநீதி சுட்டுவது என கூறமுடியும்.  மிக சாதாரணமானவர்கள் அசாதாரணமானவர்கள் ஆக்கப்படும் புராணங்களின் கட்டுடைப்பு எனச் சொல்லமுடியும்.  வைணவம், தொல்குடி சமயம், பௌத்தம் அல்லது அதெல்லாம் அப்படியொன்றுமில்லை இது தாந்த்ரீகம் தாந்த்ரீகமே என முடியும் – நான் அப்படித்தான் சொல்லுவேன் அதுவும் சைவ யோக தாந்த்ரீகம் 

புணர்ச்சியுள் ஆயிழை மேல் அன்பு போல

உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லாருக்கு

உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி

அணைத்தலும் இன்பம் அது இது ஆமே.

பெற்ற சிற்றின்பமே பேரின்பமாம் ஆங்கே

முற்ற வரும் பரிசு உந்தீ பற

முளையாது மாயை என்று உந்தீ பற 

விஷ்ணுபுரத்தின் கதாபாத்திரங்கள் அஜிதன், சுடுகாட்டு சித்தன், காஸ்யபன், பவதத்தர், நீலி, பிங்கலன், பாவகன், யோகாவிரதர், சந்திரகீர்த்தி, சங்கர்ஷ்ணன், லட்சுமி என பலர் அல்லது அவருள் சிலர் நம்மிடம் நம் உள்ளத்தில் தமக்குரிய இடத்தை பெற்று அமரக்கூடும்.  ஏராளம் அப்படி வந்து விட்டார்கள்.  சமீபத்தில் போரும் அமைதியும் பியர் அப்படி வந்து நிரந்தரமாக தங்கிவிட்டார்.  இத்தனைக்கும் அவர் நட்டாஷாவைத் திருமணம் செய்துகொண்டது எனக்கு பிடிக்கவில்லை என்று அவரிடம் நான் சொல்லிவிட்டபோதும்.

ஒன்றுமட்டும் – உலகியலை (காமம் உள்ளிட்ட அனைத்தையும்)  முற்றாக புறக்கணித்து மெய்மையை எட்டமுடியாது.  உலகியலை முற்றாக கடக்காமலும் மெய்மையை எட்டமுடியாது.  விஷ்ணுபுரம் அதன் தியான அனுபவம் என்பது உங்களைப் பொறுத்தது.  ஓஷோவால் மிகவும் புகழ்ந்துரைக்கப்படும் மிக்கேல் நைமியின் “மிர்தாதின் புத்தகம்” – உண்மையில் அது அவ்வாறு தகுந்தது எனினும் என்னளவில் விஷ்ணுபுரம் அதைவிட மேலானது.   நைமியின் மிர்தாத் அற்புதமாக போதனைகளாக கவித்துமாக அன்பை பெருங்கருணையை மெய்மையை உணர்த்தும் விதமாக பேசுகிறார்.  ஆனால் அவர் ஒருவரது பேச்சாக ஒரு ,மகானின் சொற்பெருக்காகவே அது இருக்கிறது.  முற்றிலும் ஏற்புடன் அன்புடன் வாசித்து அதை உணரமுடியும்.  விஷ்ணுபுரத்தில் வாழ்கை இருக்கிறது.  போதனைகள் இல்லை.  ஏற்பு-மறுப்பு, பரிசீலனை என்று சென்று மறுத்து மறுத்து சென்று சொற்களால் தொடமுடியாத அந்த இடத்தை நெருங்கி சொல்ல முற்படாமல் மௌனம் கொள்கிறது.

முதற்கனல் 2 – ஆர். ராகவேந்திரன்

தீச்  சாரல் , தழல் நீலம் ,வேங்கையின் தனிமை, அடியின் ஆழம், வாழிருள் ஆகிய பகுதிகளை முன்வைத்து ஆர். ராகவேந்திரன் ஆற்றிய சிறப்புரை:

“எதனையும் விட வேகம் கொண்டவன் என்று தன்னை ஒளி நினைத்துக் கொள்கிறது.  ஆனால்  அது தவறு. எவ்வளவு விரைவாக ஒளி சென்றாலும் தனக்கு முன்னே அங்கே சென்றடைந்து தனக்காகக் காத்துக்  கொண்டிருக்கும் இருளைக் காண்கிறது.”

டெர்ரி பிரச்சட்டின்  ரிப்பர் மேன் நாவலில்  வரும் இந்த பிரமிப்பூட்டும் வரிகளை முதற்கனலுக்கு முத்தாய்ப்பாகச் சொல்லலாம் 

 முதற்கனலின் அத்தியாயம் 27 முதல் 50 வரையிலான பகுதிகள் அம்பையின் தீப் புகுதலையும்,  பீஷ்மர், வியாசர், சிகண்டியின் நெடும் பயணங்களையும்  திருதராஷ்டிரன், பாண்டு, விதுரரின் பிறப்புகளையும் பேசுகின்றன.

சுருதி, ஸ்மிருதி, புராணங்களின் கலவையாகத் தோன்றுகிறது முதற்கனல் . சாந்தோக்கிய உபநிடத்தின் ஆப்த வாக்கியமாகிய “நீயே அது’ அக்னிவேசரால் சிகண்டிக்கு அளிக்கப் படுகிறது.  காலத்திற்கேற்ப மாறிவரும் அறங்களை எம ஸ்மிருதி , சுக்ர ஸ்ருதி  முதலாய நீதி  நூல்களை வைத்து அரசியல் – உளவியல் சிக்கல்களை   உசாவுகிறது. யயாதி  போன்ற புராணக் கதைகள் மூலம் பீஷ்மரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல்கிறது. 

  குஹ்ய சிரேயஸ் ( மறைக் காப்புத் திறலோன் என்று பொருள் கொள்கிறேன்)  என்னும் கழுதைப்புலி க்ஷத்ரியர்கள்  ஒவ்வொரு குலத்திலும் உருவாகும் விதத்தைச் சொல்கிறது. வைச்வானரன் என்னும் நெருப்பு படைப்பின் உயிரின் ஆற்றலாக பிறவி தோறும் தலைமுறை தோறும் கடந்து வரும் சத்து என்பதை உணர்ந்து கொண்ட சித்ரகர்ணி- கழுதைப்புலிகள் மற்றும் வியாசர் உரையாடல் அழகிய பஞ்ச தந்திரக் கதையாக அமைகிறது.  

சாந்தோக்ய உபநிடததத்தில்  வைச்வானர வித்யை என்னும் தியான முறையை  அஸ்வபதி கைகேயன் என்னும் அரசன்   உத்தாலக  ஆருணி  முதலிய கற்றறிந்த பண்டிதர்களுக்கு உபதேசிக்கிறான். அவர்கள் தியானம் செய்யும் முறையானது பிரபஞ்சத்தின் தனித்தனியான பகுதிகளாக  கவனம் செலுத்தி வந்தது.  அனைத்தும் ஒன்றே என்னும் அறிவை அவர்களுக்கு வழங்குகிறான். வயிற்றில் உறையும் வைச்வானரன் என்னும் செரிக்கும் நெருப்பு எப்படி உணவை உடல் முழுவதும் ஆற்றலாக மாற்றித்  தருகிறதோ  அது போல இந்த அறிவும்  முழு நிறைவை வழக்கும் என்று சொல்லப்படுகிறது. 

அந்த வித்தை யின் பருவடிவமாக இந்த நெருப்பு எப்படி உண்டும் வழங்கியும் உயிர்க்குலங்களின் வழியே கொண்டு செல்லப்படுகிறது என்பதை இறந்து கொண்டே தத்துவம் பேசும் சித்ரகர்ணி என்னும் சிம்மம் சொல்கிறது. பெயர் வைத்தலில் அழகிய பொருத்தம் உள்ளது. க்ஷத்திரியனின் பிரதிநிதியாக குஹ்ய சிரேயஸ் ரகசியத்தின் உருவமாக இருக்கிறது. குலம் காக்கும் – குருதி கொள்ளும் ரகசியம். விநோதச் செவியன் என்று சித்ரகர்ணியை எடுத்துக் கொண்டால் ‘கேட்டலின்’ மூலம் ஞானம் பெற்றவன் அவன். வியாசரின் குடிலை வேவு பார்க்கும் போது எத்தனையோ கேட்டிருப்பான்.

அத்வைதம் தரும் அமைதி நிலையை பல்வேறு பாதைகளின் மூலமாக வியாசருக்கும் பீஷ்மருக்கும் இயற்கையும் சூதர்களும்  வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். 

காலத்திற்கேற்ப ஸ்மிருதிகள் மாறுவதை ஸ்வேதகேது தனது தந்தையை எதிர்த்து தாய்க்கு உதவி செய்யும் பகுதி விளக்குகிறது . சட்டம் நெகிழக்கூடிய பகுதிகளையும் அது நிகழக்கூடிய வகைகளையும் சொல்லி வைத்திருக்கிறது. 

புராணத்தின்   அலகுகளான  காவியம், கண்ணீர், வம்ச  கதை  திரண்டுள்ளன முதற்கனலில். 

பாத்திரங்களின் குண மாற்றம் இதை ஒரு தனிப் புதினமாக ஆக்குகின்றன 

ராஜோ குணத்தின் செயலூக்கத்தில் துவங்கி, பின் தமோ குணத்தில் பித்தியாக அலையும் அம்பை இறுதியில் சத்துவ குணத்தில்  நிறைகிறாள். அன்னையின் நிழலில், உண்பதே வாழ்க்கையாக துவங்கும் சிகண்டினி, பின்னர் பழி என்னும் ஒற்றை இலக்கிற்காக ரஜோ குணத்தில் நிற்கிறாள் . அம்பைக்குப் படகோட்டிய நிருதன் தூய காத்திருத்தலில் அசையாமல் படகில் இருப்பது தமோகுணமாக மயக்கும் சத்வம் தான் பின் அம்பையை விண்ணேற்றவும் ஏற்றியபின் முதல் பூசகனாகவும் உருமாறி ராஜசத்தில் சேருகிறான், பீஷ்மர் வெளித்தோற்றத்தில் ராஜசமும் உள்ளே மாறாத் தேடலில் சத்வத்திலும் உறைகிறார். சத்யவதி மட்டும் குணமாற்றமின்றி இருப்பதாகத் தோன்றுகிறது. 

சுக முனிவரும் பீஷ்மரும் தந்தைக்கு முறையே சொல்லாலும் செயலாலும் மீட்பளிக்கிறார்கள். வியாசர் அறத்தையும் சந்தனு இன்பத்தையும் மகன்களிடம் கொடையாகப் பெறுகிறார்கள். 

யயாதி கதை பீஷ்மருக்கு சொல்லப் படுகிறது. ராஜாஜியின் யயாதியிலிருந்து வெண்முரசின் யயாதி வேறுபாடும் இடம் சிறப்பானது. கால மாற்றத்திற்கேற்ப யதார்த்தமானது. “வியாசர் விருந்தில் ” இச்சையை அடைந்து தணிப்பது என்பது நெருப்பை நெய் விட்டு அணைக்க முயல்வது போன்றது ” என்ற அறிவைப் பெற்று விடுகிறான். முதற்கனலில் வரும் யயாதி மகனுக்கு இளமையை அளித்து விண்ணேகிய பின்னும் அகந்தையால் வீழ்த்தப்படும் யயாதியாக நெருப்பிலும் பயன் பெற உரிமை இன்றி, தனது மகளைக் கண்ட கனிவில் முழுமை அடைகிறான் 

பீஷ்மர் தேர்ந்தெடுத்திருக்கக் கூடிய ஒரு வாய்ப்பை யயாதி கதை மூலம் அவருக்கு சொல்கிறார் சூதர் . 

முதற்கனல் பெண்டிரையும் ஒடுக்கப்பட்டவர்களையும்  பீடத்தில் ஏற்றுகிறது. பீஷ்மரை இழிவு செய்து பாடும் சூதர், சால்வனை தீச்சொல்லிட்டுவிட்டு, நகர் நீங்கும் சூதர், மந்திரங்கள் மூலம் அரசியரின் மனங்களை கட்டுப்படுத்தும் நாகினி, காவியமும் சீர் மொழியும் கற்றுத்தேர்ந்த சிவை போன்ற அடிமைப் பெண்கள் வரவிருக்கும் கால மாற்றத்தைக் குறிக்கிறார்கள். 

குல அறங்கள், கால அறங்கள், தேச அறங்கள் ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தி நிற்கும் சரடுகளின் இறுக்கத்தின் மேல்  மைய அரசின் அரியணை நிற்கிறது. க்ஷத்திரியர் ஆவதற்கு வாள்முனையும் மறைச்சொல்லும் குலங்களுக்குத் தேவைப்படுகின்றன. பிறகு புதிய போட்டியாளர் உருவாகாமல் தடுக்க வேண்டி உள்ளது 

சிறிய நிகழ்வுகளை பெரிய இயக்கங்களுடன் தொடர்புறுத்துவதே வெண்முரசின் பிரம்மாண்டம்.    

நியோக முறையில் குழந்தைகள் பிறக்கும் முன் சொல்லப் படும் கதைகள்  இதற்கு நல்ல உதாரணம். 

நூறு   பறவைகளின் நிழல்களை வீழ்த்திய திருதராஷ்ட்டிரன் என்னும் கந்தர்வன் அதே பெயரில் கண்ணில்லாதவனாக  பிறக்கிறான். அவன் பார்ப்பதெல்லாம் இருளே. அவன் தேடுவதெல்லாம் நிழலாகவே அமையப் போகின்றன . தனது குஞ்சுகளைப்  பிரிந்த ஏக்கத்தில் இறந்த சாதகப் பறவை மீண்டும் பாண்டுவாய்ப் பிறந்து மைந்தரைப் பிரியும் துயரை அடைகிறது. அறத்தின் தலைவனே விதுரனாக வருகிறான். 

வில்வித்தை பிரம்மவித்தையின் ஒரு சிறு பகுதியே என்கிறார் அக்நிவேசர். ஒவ்வொரு சிறு  அறிவும் சொல்லும் ஊழ் வரை, புடவி அளவு காலம் அளவிற்கு விரிந்த ஒன்றின் துளி என்னும் ஞானம் கதை வழியே பயணிக்கிறது. 

பிஷ்மரின் சப்த -சிந்து  சிபி நோக்கிய பயணங்கள் அவருக்கு மனவிரிவை  அளிக்கின்றன. பாலையில் காணும் விதைகளைக் கண்டு  வியக்கிறார். வானும் மண்ணும் கருணை செய்தால் வேறு ஒரு வகை காடு உருவாகி இருக்கும் என்று எண்ணுகிறார். கோடிக்கணக்கான நிகழ்தகவுகளின்  ஒரு தேர்வு தான் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலம் என்றுணரும் இடம் அதிர்ச்சி அளிப்பது      .  ஒரு வேளை  கால – நிகழ்வுகளின்  வேறு வகையான  வாய்ப்பில் அவரும் விதை முளைக்கும் சாதாரண தந்தையாகி இருந்தால், பெண்ணின் கருணை அவருக்கு கிட்டி இருந்தால் தனித்த வேங்கையின் பொறுப்புகள்  அவரிடமிருந்திருக்காது. 

தென் மதுரைச் சாத்தன் வியாசருக்கே வழி காட்டுகிறார். கருமையும் வெண்மையும் இணைந்ததே ஒளி என்கிறார் . 

 மானசாதேவி தன் மகன் ஆஸ்திகனுக்கு ஒரு கடமையை அளித்ததில் துவங்கும் முதற்கனல் அவன் தனது வேசர நாட்டிற்கு திரும்பி வருவதுடன் நிறைகிறது, இருள் என்பது இகழப்  படவேண்டியதில்லை , தமோ குணம் முற்றும் ஒழிக்கப் படவேண்டிதில்லை என்ற அறிவை ஜனமேஜனுக்கு அளித்து பாம்பு வேள்வியை தடுத்த வெற்றியாளன் ஒரு வருடம் கழித்து நாக பஞ்சமி  அன்று தனது குலத்திற்கு வந்து தான் இன்னும் நாகன் தான் என்று அறிவிக்கிறான். 

ஆஸ்திகனால் காக்கப்பட்ட தட்சன் தட்சகியுடன் காரிருள் நீண்ட பெரு வானம் நிறைத்து இணைந்து படைப்பை நிகழ்த்துகிறான். இருள் இணைந்து ஒளியைக் குழவியாகப் பெற்றுத்  தாலாட்டுகிறது. சத்வகுணம் என்னும் முத்து ராஜசம் என்னும் சிப்பிக்குள் தாமசம் என்னும்  ஆழிருள் கடலில் பாதுகாப்பாக இருக்கிறது.  இருளற்ற ஒளியில்லை. இதுவே இந்தியாவின் அனுபவ ஞானம் . 

இருள் ஒளி இரண்டிற்கும் ஒன்றிடம் என்று அருள் தரும் ஆனந்தத்தை அடைய அனைத்திலும் ஒன்றைக் காண்பதே வழி என்கிறது முதற்கனல். பல ஆயிரம் ஆண்டுகளாக  பாரத வர்ஷம் கண்ட வாழ்வனுபவம் புல்லும் புழுவும் நம்பி வாழும் அறத்தை நிலைநிறுத்தச் செய்யும் முயற்சியாக முதற்கனல் எரிகிறது.

உவமைகள் / உருவகங்கள் 

1 செம்புல்  பரவிய குன்று போன்ற சிம்மம் 

2 நெல்மணி பொறுக்கும் சிறு குருவி போல அம்பாலிகையிடம் பதற்றம் இருந்தது 

3 வாய்திறந்த அரக்கக் குழந்தைகள் போல வட்ட   வடிவ இருளுடன் நின்ற செம்புப் பாத்திரங்கள் 

4  வலசைப்  பறவைகளுக்கு வானம் வழி சொல்லும் 

5  பாரத வர்ஷம் ஞானியர் கையில் கிடைத்திருக்கும் விளையாட்டுப் பாவை 

6 வந்தமரும் நாரைகள் சிறகு மடக்குவது போல பாய்  மடக்கும் நாவாய்கள் 

7 சிகண்டி கழுத்தில் குருதி வழியும் குடல் போல காந்தள் மாலை கிடந்தது 

தத்துவங்கள்  

 கருணை கொண்ட செயல்கள் அனைத்தும் ஒழுக்கமே (சுகர் வியாசரிடம் சொல்வது) 

இசை  நுணுக்கங்கள் 

புரவிப்படை மலையிறங்கும் தாளம்.

ஆர்  ராகவேந்திரன் 

கோவை

அசடன், நாவல் அனுபவம் – நவீன் சங்கு

தாஸ்தாவெஸ்கி சொன்ன ‘Beauty Will Save The World’ என்ற மாபெரும் உண்மையை , தூய கிருஸ்து மனம் கொண்ட மிஷ்கின் மூலம் ரஷ்ய மேல்தட்டு மக்கள் மத்தியில் ஆராயும் நாவல் அசடன்.

தாஸ்தாவெஸ்கியின் கண்கள் நேராக நம்மை நோக்கியவாறு இருக்கும் புகைப்படம்


அசடன் நாவல் குற்றமும் தண்டனையும்,கமரசோவ் சகோதரர்கள் நாவல்களின் உணர்ச்சிமிக்க கதை ஓட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. காரணம், அதன் நீண்ட உரையாடல்கள் மற்றும் யதார்த்தமான நாவல் தன்மையிலிருந்து திடீரென நாடக தன்மைக்கு மாறுவது.நாம் வாசித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென(இப்போது பின்னணி இசை உச்சத்தில் கலவரமாக) திரைக்குப் பின்னாலிருந்து ஒரு கூட்டம் வந்து அமர்க்களம் செய்துவிட்டு மொத்தமாக திரைக்குப் பின்னே ஓடிவிடுகிறது. நாம் முகம் சுருங்கி குழப்பத்துடன் மேடையை உற்று நோக்குகிறோம், பிறகு மீண்டும் நீண்ட உரையாடல்கள் தொடங்குகிறது.

நாவல் வடிவத்தின் சட்டகத்திலிருந்து அசடன் முற்றிலும் மீறி செல்கிறது என்கின்றனர் விமர்சகர்கள். கதையாகப் பார்த்தால் ஒரு குறுநாவல் அளவுக்குச் சிறியது. நாவலுக்கே உரித்தான கதாபாத்திரங்களின் பரிணாமம் இங்கே இல்லை, பயணம் இல்லை (கதை நகர்வு) ஆனால் நீண்ட உரையாடல்கள் மட்டுமே. எல்லா கதாபாத்திரங்களும் அதன் தன்மையில் ஏற்கனவே முழுமையாக உள்ளது.

தாஸ்தாவெஸ்கி தான் அடைந்த போலி மரண தண்டனை(Mock Punishment) அனுபவத்தையே, இபோலிட் கதாபாத்திரம் மூலம் மரண தண்டனை பெற்ற ஒருவன் அடையும் மன பிறழ்வை காண்பிக்கிறார். கொடூரமான வன்முறையால் தண்டனை பெற்ற ஒருவன் அல்லது ஒரு கொலைகாரனால் கழுத்து அறுபட்ட நிலையில் இருக்கும் ஒருவனை விட மரண தண்டனை பெற்றவனின் மன வேதனை உச்சமானது என்கிறான் மிஷ்கின். காரணம், மரண தண்டனை பெற்ற ஒருவன் சென்றடையும நம்பிக்கையின்மை, அவன் ஆன்மாவை சுருக்கி பித்தடைய வைக்கிறது.

சுவிட்சர்லாந்தில் மேரி என்ற பெண்ணை கிராம மக்களிடமிருந்து காப்பாற்றுகிறான்.தொடர்ந்து தன்னிடம் மனம் விட்டு பேசுபவர்களை‌ ஆறுதல் வார்த்தை கூறுகிறான், பண உதவி புரிகிறான்.

அசல் ரஷ்யர்களை எங்குமே காணோம், சிறந்த பொறியாளர்கள் இல்லை, இரயில்கள் பாதி வழியிலேயே சிக்கி மாத கணக்கில் நகர முடியாமல், அதில் உள்ள உணவு பொருட்கள் அழுகி வீணாகிறது. ஆனால் எங்கும் போலி பாவனையுடன் தளபதிகள், அரசாங்க ஊழியர்கள். இந்த Materialistic ஆன போலி பாவனையை, இவால்ஜின் கதாபாத்திரம் மூலம் கடுமையாக சாடுகிறார் தாஸ்தாவெஸ்கி.

ரோகோஸின் வீட்டில் மிஷ்கின் காணும் Holbien’s முகம் சிதைந்து சித்திரவதைக்கு உள்ளான வயதான கிருஸ்துவின் படம் அவனை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒரு வகையில் இந்த புகைபடம் புத்துயிர்ப்பை (Ressurection) மறுக்கிறது. தாஸ்தாவெஸ்கி பார்த்த இந்த புகைபடமே, தான் முதலில் எழுத நினைத்த மிஷ்கினிலிருந்து மாற்றி அழகான தூய மிஷ்கினை எழுத தூண்டியிருக்கலாம்.

அழகிற்கு ஒரு வலிமை உள்ளது. உலகத்தை தலைகீழாக மாற்றக் கூடிய வலிமை என நாஸ்டஸியாவின் அழகு குறித்து மிஷ்கின் கூறுகிறான்.
மிஷ்கின் நம்புகிற இந்த தரிசனத்தை, பல்வேறு எதார்த்தங்கள் வழியாக நவீன ரஷ்யாவின் பண்பாட்டு தளத்தில், சிந்தனை தளத்தில் ஏற்பட்ட மாற்றம் மூலம் நிராகரிக்கிறார் தாஸ்தாவெஸ்கி.

சுவிட்சர்லாந்தில் ஒரு மலையைப் பார்த்து தான் அடைந்த பரவசத்தை விவரிக்கிறான் மிஷ்கின். மனிதனை கடந்த ஒன்றை பிரபஞ்சத்தை அல்லது கடவுளை உணர்வதற்கான ஒரு கருவியாக அழகைப் பார்க்கிறான். உலகில் உள்ள அனைத்து அழகிலும் (Authentic Beauty) ஒரு தன்மை உள்ளது, அது மனித இதயத்தை நேரடியாக ஊடுருவி சலனம் ஏற்படுத்தவல்லது, அங்கிருந்து வேறொன்றை நோக்கி மனிதனை நகர்த்துகிறது.

இந்த அழகியலை ஒவ்வொரு கலையும்(Art) தன்னுள் கொண்டதாலே ,Holbien’s painting மக்களிடம் அதிகம் தாக்கம் ஏற்படுத்தும் கிருஸ்துவை நோக்கி அவர்களை நகர்த்தும் என நம்புகிறான் மிஷ்கின்.

இயற்கையிலேயே இந்த அழகுணர்ச்சி(Beauty) தன்னுள் நல்லதையும் (Good), சத்தியத்தையும்(Truth) கொண்டுள்ளது. இதனாலயே ஹெர்மன் ஹெஸ்ஸே “Art by it’s Nature is religious” என்கிறார்.

மிஷ்கின் ஜீஸஸ், புத்தர் போல் வாழ்க்கையின் இக்கட்டுகளை கடந்து ஞானம் பெற்றவன் அல்ல. மாறாக துளி கரையில்லாத ஒரு அழகான மனிதன் (the positively good and beautiful man). இந்த அழகான மனிதனை ஏற்றுக் கொள்ள எது தடுக்கிறது. அது ரஷ்யா தனது வேர்களை இழந்து முழுக்க முழுக்க Materialist ஆன ‌ஐரோப்பா மீது கொண்ட மோகத்தால். ரோமன் கத்தோலிக்க திருச்சபை ரோமா புரி மன்னர் ஆட்சியின் மாறிய வடிவம் என்கிறான் மிஷ்கின். ஆக்டோபஸ் போல தனது கரங்களால் ஐரோப்பா முழுக்க அதிகாரம் செலுத்தி அரசியல் ஆதாயம் அடையும் அமைப்பு அது. அதுவே Atheism, Communism போன்ற சிந்தாந்தங்கள் உருவாகுவதற்கு காரணமாக அமைந்தது என்கிறான் மிஷ்கின்.

உலகிற்கே ஆன்மிக வழி காட்டக் கூடிய தன்மை ரஷ்யாவிற்கு உண்டு, அது எந்தவொரு ரஷ்யாவின் ஏழை விவசாயிடமும் (Peasant Christ) உள்ளது என தாஸ்தாவெஸ்கி நம்பினார்.அதையே தாஸ்தாவெஸ்கியும், டால்ஸ்டாயும் தங்கள் எழுத்திலிருந்து முன்வைத்தனர் (Russian Christ).

தனது பண்பாட்டை இழப்பதால் ஒரு தேசம் அடையும் இழப்பை, அசடன் நாவலிருந்து ரஷ்யாவின் வீழ்ச்சி வரை ஒரு கோடு வரைந்து பார்க்க முடியும்.

‘இடியட்’ வாசிப்பு – ஆர். ராகவேந்திரன்

தஸ்தவ்யாஸ்கியின்   ‘இடியட்’  கதைமாந்தர்களின் உளவியல்  நமக்கு மிகவும் பரிச்சயமாக இருக்கின்றன. சில இடங்களில்  நம் உள  அமைப்பையே காட்டுவதாக மலைப்பை  தருகின்றன. 

 குழந்தைப் பருவ நினைவுகள்  வெளிவரும்போது எப்போதும் நம்  அசலான  ஆளுமையுடன் நெருக்கமாக உணர்கிறோம்.   நம்மையும் உலகையும் அன்பு மயமாக  ஆக்கவல்லவை இந்நினைவுகளைத் தூண்டும் படைப்புகள்.

 உலகின் கண்ணீரை துடைத்து விடுபவன் உலகிற்கு ஒரே நேரத்தில் அன்னையாகவும் குழந்தையாகவும் ஆகிறான். பிறிதின் நோயை  தன்  நோய் போல் போற்றும் அறிவு , முயற்சியினால் அடையப் படுவதல்ல; அது இயல்பான அன்பிலிருந்து வருவது.  அசடனான மிஷ்கின்  தூய அறிவின்மையின் வெளிப்பாடு.  

எம் ஏ சுசீலாவின்  சீரான மொழிபெயர்ப்பில் நாணிக்கோணிக் கொண்டு      நம்முன் வருகிறான் அசடன்.  தனது வலிக்கும் பிறரது வலிக்கும் வேறுபாடு தெரியாத தூய்மை சில  வரலாற்று மாந்தர்களின் நினைவுகளைக் கொண்டுவருகிறது. 

ஒரு பெரிய குழந்தை சிறியதை  அடிக்கும்போது இன்னும் சிறிய குழந்தை ஒன்று அழுகிறது.  புல்வெளி மீது நடக்கும் மனிதனைப் பார்த்த ராமகிருஷ்ணர்  இதயம் பிசையைப்படும் வலியை உணர்கிறார். பிஜி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டு மனிதர்கள் இறந்து கொண்டிருந்த இரவில் விவேகானந்தருக்கு பெரும் துயர் உண்டாகி விடுகிறது. பயிர் வாடும்போது தன்  உயிரும் வாடிய வள்ளலார் அறிவுச்  செயல்பாடாக வோ  சிந்திப்பதன் மூலமாகவோ துயரைப்பெறவில்லை.  விளக்க முடியாத  ஒரு இணைப்பு இங்கே இருக்கிறது.

நஸ்டாஸியாவின் குழந்தை போன்ற முகத்தைக் காணும்போதும் அக்லேயாவின் ஒளிவு மறைவற்ற அக்கறையை  உணரும்போதும் மிஷ்கின் கொள்ளும் பேரன்பு உடல் தளத்தைக் கடந்தது. 

துளித்துளியாக, பொறுமையாக மிஷ்கினின் பாத்திரத்தை வார்த்தெடுக்கும்  ஆசிரியர்  அவனை முழுமையாக்குகிறார். ‘விசுவாத்ம புத்தி’ என்று சொல்லப்படும் ‘உலகில் கரைந்த’ ஆளுமையை இயேசுவின் படிமம் போல செதுக்குவதற்கு இவ்வளவு பெரிய பின்புலமும் நுண்ணிய காட்சி விவரிப்புகளும் தேவைப்பட்டிருக்கின்றன. 

இயல்பான , சிறிது சுயநலமும் சாமானிய ‘நல்ல’ தன்மையும் கொண்ட நாகரிக மனிதன் போன்ற சராசரி வாழ்வை மிஷ்கின் போன்றவர்கள் மேற்கொள்ள முடிவதில்லை. சிறிது சிறிதாக பித்து நிலையை அடைகிறார்கள்.  அல்லது சற்று மூளை  கலங்கியதால் தான் இந்த நேயம் தோன்றுகிறதோ?

மிஷ்கின் பொது இடத்தில் அவை நாகரிகத்தை பின்பற்றுவதில்லை. பூச்சாடிகளை  தனது உணர்ச்சி வசப் பதட்டத்தால் உடைத்து விடக்கூடியவன்.  தஸ்தவ்யாஸ்கியின்   வாழ்வில் அவருக்கு ராணுவ சீருடை பிடிக்கவுமில்லை. பொருந்தவும் இல்லை. அடிக்கடி இழுப்பு வரக்கூடியவர். பழமை வாத  கிறித்துவமும் சோஷலிசமும் ஆசிரியரைக் கவர்ந்திருக்கின்றன.  மிஷ்கின் இந்த குணங்களுடன் வளர்ந்து வருகிறான். 

ஆணவம் கொண்ட பெரிய மனிதர்கள் மிஷ்கின் போன்றவர்களை ஏளனம் செய்கிறார்கள்.  எடை போடும் அறிவாளிகளின் அடிமனதில் கயமை இருட்டில் ஒளிந்து கொண்டு எட்டிப் பார்க்கிறது. மிஷ்கின்கள் பெரும்பாலும் இவர்களை  புரிந்து கொண்டிருக்கிறார்கள். கபடங்களை எளிதில் கடந்து செல்வதன் மூலமும்  அவர்களுக்கு வென்று விட்டோ ம் என்ற  இறுமாப்பை அளிப்பதன் மூலமும் தங்கள் மைய இயல்பை  பாதுகாத்துக் கொள்கிறார்கள்.  மனநிலை பிறழ்ந்தவர்களுக்கு  வாழ்வின் இறுதி கணத்தில் சுய நினைவு திரும்பி விடும் என்ற  நம்பிக்கை உண்டு.   ‘தான் ‘ யார் என்று உண்மையில் ஆரோக்கிய மனம் கொண்டவர்களும் அறிந்து கொள்ளாத நிலையில் ,  நிலையான சுய அறிவு என்பது என்ன என்ற கேள்வியை அசடன் முன்வைக்கிறான். 

மிஷ்கின் போன்ற ‘இளிச்சவாய’ தன்மை கொண்ட தேசங்களும் சமுதாயங்க ளும் கூட இருக்கின்றன .  தான்  ஏமாற்றப்படுவது தெரிந்திருந்தும் பிறருக்கு  மகிழ்ச்சி தருவதற்காக  ஏமாந்தது போல நடிக்கும் ‘அப்பாவிகள் ‘ நின்றிருக்கும் உலகை இலக்கியவாதிகளால் படைக்க முடிகிறது 

மனிதன் இறைத்தன்மையை  பூரணமாக வெளிக்காட்டுவதில் அடையும் தடுமாற்றங்களின்  கதையே அசடன் 

பெரிய கப்பல் ஒன்று முனகலுடன் கிளம்புவது போல கதை துவங்குகிறது. ஒவ்வொரு  இயந்திரமாக சுழலத் துவங்க,  கதைமாந்தர்களி ன்   விவாதங்களின் ஊடே அசைவு நிகழ்கிறது. நகர்வதே தெரியாமல் கதை வெகு தூரம் வந்து விட்டிருக்கிறது. 

சுவிசர்லாந்தின் மன நோய் சிகைச்சை  முடிவதற்கு முன்னரே  தனது தாய்நாடாகிய  ரஷ்யாவிற்கு ஒரு துணி மூட்டையை மட்டும் உடைமையாக எடுத்துக் கொண்டு மிஷ்கின் வருகிறான். திடீர் செல்வந்தனாகி , அன்பை சுற்றிலும் தெளித்து , எல்லோரையும் நம்பி , குறுக்கு மனது கொண்டவர்களையும் ஆட் கொண்டு  அவர்களே  அவனுக்கு செய்த சூழ்ச்சிகளையும் அவனிடமே  சொல்லவைத்து அதையும் மனதில்  ஏற்றிக்  கொள்ளாமல் காதலில் விழுந்து அடிபட்டு, ஒரு கொலை நிகழ்விற்கு தார்மிக காரணமாகவும்  சாட்சியாகவும்   இருந்து, மூளை  மீண்டும் கலங்கி தனது மருத்துவ சிகிச்சைக்கே திரும்புகிறான்.

பெற்றோரை இழந்து குழந்தையாக இருக்கும்போதே எதிர்கால உருவாய் பொலிவின்  அடையாளங்களைக்கொண்ட நஸ்டாசியா,  டாட்ஸ்கி என்னும்  கீழ்மைகொண்ட செல்வந்தனால் வளர்க்கப் பட்டு கையாளப்படுகிறாள்.  தனது நிலைக்கு பொறுப்பாளி தானே என்றும்   தன்னைப் பாவி என்றும் எண்ணிக் கொண்டு சுயவதை செய்து கொள்கிறாள்.  உண்மையான அன்புடன் அவளுக்கு மீட்பை  அளிக்க  மிஷ்கின் முன்வருகிறான். அவனை கீழே இறக்கக் கூடாது என்ற குற்ற உணர்வுடன் தன்னைக் கீழே இறக்கிக் கொண்டு ரோகோஸின் என்னும் தாதாவை மணக்க முடிவு செய்து  ஒவ்வொரு முறையும் திருமண சமயத்தில் ஓடிப் போய்விடுகிறாள். 

அவளைப்போலவே கலைத்திறனும் மென் மனமும் கொண்ட  அக்லேயாவுடன் மிஷ்கினை  மணமுடித்து வைக்க முயற்சி செய்து ஒரு கட்டத்தில்  இரு பெண்களுக்கும் நடைபெறும் ஆதிக்கப் போட்டியில் மிஷ்கினை திருமணம் செய்துகொள்ள நஸ்டாசியா முடிவெடுக்க, மீண்டும் ஓடிப்போதல் நடைபெறுகிறது. அவளை அழைத்துக் கொண்டு செல்லும் ரோகோஸின் அவளைக் கொன்று விடுதலை தந்து விடுகிறான். மிஷ்கினுக்கும் ஆறுதலைத் தந்து  சைபீரிய தண்டனையை பெறுகிறான்.

மிஷ்கின் உலகில் அழகினால் அமைதியைக் கொண்டு வர முடியும் என்று நினைக்கிறான் . அவன் உண்மையில் அன்பைத்தான் அப்படி எண்ணி இருப்பான் போல இருக்கிறது. 

உருண்டு வரும் அழகிய கண்ணாடிக் குடுவையைப் பக்குவமாக எடுக்கத் தெரியாமல் போட்டு உடைத்து விடுவது போல அக்லேயா தனது வாழ்வை குலைத்துக் கொள்கிறாள்.

அசையாத நீரோடை போன்ற நாவலில் சிரிப்பைத் தரும் சுழிகள் தளபதி இபான்சின் வரும் இடங்கள்.  

குடிப்பதற்கு காசில்லாமல் கடன் கேட்பதும் தனது பழம் பெருமையை  பறை சாற்றிக்  கொள்வதும்    பொய்  சொல்லிச் சொல்லியே அதைத் தானே நம்ப ஆரம்பிப்பதும் கிடைத்த புட்டியை   ஊற்றிக்  கொண்டு அதே இடத்தில் உறங்கி விடுவதும்  தனது சாகசக் கதைகளைத் பிறர் நம்பாத  போது  கோபித்துக் கொண்டு சண்டை இடுவதும்  – உணர்ச்சிகளின் உச்சமான இந்த இபான்சின் போன்ற ஆத்மாக்கள் வாசகர் மனதில் பல பரிச்சயமான முகங்களை எழுப்புகின்றன.

நாவலின் உச்சமாகக் கருதுவது  நஸ்தாசியா கொல்லப்பட்ட பின் அந்த இருட்டு அறையில் மிஷ்கின் ரோகோஸின்னுடன் தங்குவது தான் . ஆன்மாவின் இருட்டில் குற்ற உணர்வின் துயரில் இருக்கும் கொலைகாரனுக்கு தேறுதல் தரும் மிஷ்கின் இயேசுவின் வடிவம் ஆகிறான். .

நஸ்டாசியாவின் விருந்தில் கலந்து கொண்டவர்கள்  தாங்கள்  செய்த அவமானம் தரும் குற்றங்களைச்L சொல்லும் இடமும்  மிஷ்கினின் சுழலையும் உடல் நிலையையும் வைத்து அவனது  உளவியலை பாவ்லோவிச் ‘விளக்குவதும்’ ஆய்விற்கு உரியன. 

குழந்தைகள்  ரகசியங்களை விரும்புகின்றன. சத்தம் போடாதே என்று மெதுவாகச் சொல்லிக் கொண்டே    கதவுக்கு இடுக்கில் நின்று கொண்டு  கள் ளச் சிரிப்புடன் வாய்மேல்  ஆள் காட்டி விரலை  வைத்து சிரித்துக் கொண்டிருக்கின்றன .  யாரிடமும் சொல்லாதே என்று மிக மெதுவாக உச்சரிக்கும்போதே அந்த ஒலி பெரிதாகக் கேட்டு விடுகிறது.  நாஸ்டாசியா கொல்லப் பட்டதும் மிஷ்கின் ரகசியமாக ‘எப்படிச் செய்தாய்? பாவ்லோவ்ஸ்க்கிற்கு வரும்போதே கத்தியுடன் தான் வந்தாயா ‘ என்றெல்லாம் கொலை செய்தவனிடம் கேட்க்கிறான்.  தானும் மாட்டிக் கொள்வோம் என்று சிந்திக்காமலேயே ரோகோஸினுக்காக கவலைப் பட ஆரம்பிக்கிறான். பளிங்கு போல அருகில் இருப்பவரைப் பிரதிபலிக்கும் மனம். ஊரைக் கூட்டிவிடாமல் ரோகோஸின் அருகில் படுத்துக் கொள்கிறான். அவனது கண்ணீர் கொலைசெய்தவன் மீது விழுந்து கழுவுகிறது

மிஷ்கின் முன் எல்லோரும் உண்மையையே பேசுகிறார்கள். எதற்கு இவ்வளவு சிக்கலாக வாழ்கிறீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறது  அவன் வாழ்வு 

மிஷ்கின் முன்னால் எல்லோரும் குழந்தைகள் ஆகிவிடுகிறார்கள். குழந்தையால் அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடிவதில்லை. கண்களை மூடிக் கொண்டு தந்தை முன் வந்து நிற்கிறது. தந்தையும் தன் கண்களை மூடிக்கொண்டு  தவிப்பதாகவும் பின் கண்டு பிடிக்கப் படடவராகவும் நடிக்கிறார்.  பின் இறைவன் பதட்டத்துடன் தன்னை வெளிப் படுத்திக்க கொள்கிறார்.  

ஒரே ஒரு தூயவன்   இருந்தான் அவன் கிறிஸ்து என்று சொல்லும் தஸ்தயேவ்ஸ்கி  அவனை  மீண்டும் மனிதர்களில் தேடிச் சலித்து வடிகட்டி எடுத்த கிறித்து நிகர் ஆளுமை  மிஷ்கின் 

அன்பின் தூய்மையை மறந்து விட்ட அசட்டு உலகில் மிஷ்கின் தன்மையை அடையும் முயற்சியே இலக்கியம் என்று தோன்றுகிறது. அந்த நிலையை ஒரு சிலர் அடையும் போது புவியின் பளு குறைகிறது. அப்போது சுகதேவா என்று வியாசர் அழைக்கையில் கானகத்தின் எல்லாப் பறவைகளும் இங்கிருக்கிறேன் தந்தையே என்று பாடுகின்றன.

ஆர் ராகவேந்திரன் 

கோவை