மனிதர்களின் மதிப்பீடுகள், விழுமியங்கள் அன்பு அல்லது மனிதாபிமானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்னும் பொதுக்கருத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது ஆல்பர்ட் காம்யுவின் “அந்நியன்.“ அது அப்படித்தான் இருக்கிறாதா, அப்படி ஒன்றும் இல்லை மனிதர்களே என்கிறது. ஒருபக்கம் கிறிஸ்துவின் அன்பின் மீது கட்டப்பட்ட சமய மதிப்பீடுகளையும் மற்றொரு பக்கம் பிரெஞ்சு பண்பாட்டின அரசின் நீதிமுறையையும் – அபத்தமானவை என்ற விமர்சனத்தை இக்கதையின் மூலம் வைக்கிறது.
கதை நாயகனின் எதற்கும் அதிகம் அலட்டிக்கொள்ளாத, அதிக உணர்ச்சிவசப்படாத, போகிறபோக்கில் வாழ்கிற, தனக்கென மதிப்பீடுகள் எதுவும் இல்லாத, அன்றாடம் எழும் புலன்சார் விருப்பங்களை மட்டும் நிறைவேற்றி வாழ்கிற ஒருவன் – இத்தன்மைகள் மட்டுமே அவன் கொடியவன்-தீயவன் என்று தீர்மானிக்கப் போதுமானவையா? என்ற கேள்வியை எழுப்புகிறது. உண்மையில் அவன் கெட்டவன் அல்ல. உள்நோக்கம் ஏதுமில்லாத, சூழலால் அமைந்துவிட்டதான கொலை ஒன்றை செய்து சிறை செல்லும் அவன் தன் தாயை உடன் வைத்திருக்காமல் விடுதியில் விட்டிருந்தான் என்பதையும் அவள் மரணத்திற்கு அங்கு சென்றபோது அவளுக்காக அழவில்லை எனபதையும் அத்துடன் அங்கு அவனது இயல்பான சுபாவத்தை ஒட்டிய சில நடத்தைகள் காரணமாகவும் கொடியவன் என்று தீர்மானிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்படுகிறான்.
தன் தரப்பு நியாயத்தை வாதிட அவன் விரும்புவதில்லை. தனக்காக வாதிடும் வழக்கறிஞருக்கு ஒத்துழைப்பும் தருவதில்லை. நிகழ்வுகளைக் கொண்டும் சூழலைக் கொண்டும் தன்னைப் பற்றி எதிர்தரப்பு உருவாக்கும் ”சித்தரிப்பை” மறுப்பதும் இல்லை. அந்த சித்தரிப்பு உண்மையில்லை என்னும்போதும் ஆமாம் சரிதானே அப்படியும் சொல்ல முடியும் தானே என்று எண்ணுகிறான். எதிர்தரப்பு வழக்கறிஞர் பெற்றோரைக் கொலை செய்துவிட்ட மற்றொருவரி்ன் வழக்குடன் இவ்வழக்கை ஒப்பிட்டு அதைவிட இது மிகக்கொடியது என்கிறார். தன்மீது ஒருவித தனிப்பட்ட வன்மத்துடன் அவ்வழக்கறிஞர் நடந்துகொள்வது அவனுக்கு வியப்பளிக்கிறது.
பெரிதும் உணர்ச்சிவசப்படாதவனாகிய கதைநாயகன் இரண்டு இடங்களில் மட்டும் உணர்ச்சிவசப்படுகிறான். உணவுவிடுதி நடத்திவரும் அவனது நண்பன் – அவனுக்கு உணவும் மதுவும் அளிப்பவன், தன் பணியிடத்தில் அவன் எப்படிப்பட்டவன் (நன்கு உழைப்பவன்) என்று அறிந்திருப்பவன், அவனை உண்மையில் புரிந்துவைத்திருப்பவன் அவனுக்காக உணர்ச்சிப்பூர்வமாக பரிந்துபேசும் போது நெகிழ்ச்சி அடைகிறான். அவனை அணைத்து முத்தமிட விரும்புகிறான். இரண்டாவதாக, மரணதண்டனைக்கு முன்னதாக தன்னை சிறையில் வந்து சந்தித்து தனக்காக பிரார்தனை செய்ய வரும் பாதிரியாரிடம் எரிச்சலைடைகிறான். அவரை விரட்டுகிறான். அவருடைய அறிவுரைகள் அபத்தமானவை என்று கருதுகிறான்.
மொத்தத்தில் – நான் பேசாமல் இருந்தால், உள்ளதற்கு மாறாக உங்கள் மதிப்பீடுகளின் அடிப்படையில் நீங்களாகவே என்னைப்பற்றி ஒரு சித்தரிப்பை (மிகையாக அல்லது பொய்யாக) உண்டாக்கி தண்டித்து விடுவீர்களா என்பது அவனது கேள்வி. இதை வெளிப்படையாக அவன் கேட்பதில்லை. இது கேட்காமல் கேட்கப்படும் கேள்வி. நானாக எதுவும் கேட்க மாட்டேன், என்மீது நீங்கள் சுமத்தும் எதையும் மறுக்கவும் மாட்டேன், தண்டணையை ஏற்றுக்கொள்வேன் என்பது அவனது நிலைப்பாடக உள்ளது. ”எல்லோரும் என் சாவை ரசியுங்கள்” என்பதுபோல.
ஒருவகையில் இது அவனுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை என்பதைவிட அவன் செய்துகொள்ளும் தற்கொலை என்றே தோன்றுகிறது. தற்கொலை செய்துகொள்ள விருப்பங்கள் நிறைவேறாதது, துன்பங்கள், விரக்தி இவைதான் காரணமாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை – எதற்காக வாழ வேண்டும் உயிரோடு இருப்பது அவ்வளவு முக்கியமானதா என்ன என்ற கேள்வியே போதுமானது என்று கூறுவதுபோலும் எண்ணத் தோன்றுகிறது.
சில இருத்தலியல்வாதிகள் இருத்தலியல் சிக்கல்களுக்கு தற்கொலையைத் தீர்வாகக் கண்டதுபோல் தோன்றுகிறது. இங்கே கிழக்கே நமக்கும் பலநூற்றாண்டுகளாக அதுவேதான் தீர்வாக பல மெய்ஞானிகளால் சொல்லப்பட்டு வருகிறது. என்ன வித்தியாசம் என்றால் இங்கே உடலின் தற்கொலை அல்லாமல் மனதின் அல்லது நான் என்னும் தன்முனைப்பின் தற்கொலை பரிந்துரைக்கப்படுகிறது. துறந்தார் இறந்தார் அனையர் என்றும் மனோநாசம் என்றும்.
என் அப்பாவின் மரணத்தினால் உண்டான வெறுமைக்குள் சிக்கிக் கொண்டிருந்த தருணத்தில், சொல்முகத்தின் மார்ச் மாத கூடுகைக்கான ” The Stranger” by Albert Camus புத்தகத்தை எடுத்தேன் .
நாவலின் தொடக்க வரியான “அம்மா இறந்துவிட்டாள்”, என்னை மீண்டும் வெறுமையின் ஆழத்திற்கு இட்டுச் சென்றது. மக்கள் கூட்டம் சூழ்ந்திருந்தாலும், குழந்தையுடன் சிரித்துக் கொண்டிருந்தாலும், சுற்றியும் இரைச்சலாக இருந்தாலும், நினைவின் பிம்பத்திலான தனித்த ஓர் இடம் வெறுமையின் உலகம் . வாழ்வின் அர்த்தத்திற்கான தேடல் தீவிரமடையும்.
ஆல்பர்ட் காம்யூ, இப்புத்தகத்தின் கதாநாயகனான மெர்சால்ட்டை கதைசொல்லியாகக் காண்பித்துள்ளார். மெர்சால்ட் தனது இருப்பை சூரியனால் வானில் தென்படும் நிற மாற்றங்களுக்கும், தன்னைச் சுற்றியுள்ள பொருட்களால் உண்டான மணத்திற்கும் ஒவ்வொருமுறையும் தொடர்புபடுத்தி மெய்ப்பித்துக் கொள்கிறான்.
இரண்டு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு முதியோர் இல்லத்தில் இறந்த அம்மாவைக் காணச் செல்கிறான் மெர்சால்ட் . மூடிய சவப்பெட்டியில் உள்ள தன் அம்மாவின் முகத்தைக் காண மறுத்துவிட்டான். எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த நிகழவே பின்பு அவன் சிக்கிய கொலை வழக்கில் தனக்கு எதிராக அமைந்தது. காரியங்கள் முடிந்த பின் அல்ஜிரியாவின் தலைநகரான அல்ஜெரிசில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்புகிறான். சனிக்கிழமை என்பதாளும் வெப்பத்தின் காரணமாகவும் நீச்சலடிக்க கடலுக்கு சென்றபோது மேரியை சந்திக்கிறான். அந்நாளை அவளுடன் கழிக்கிறான். சும்மாவே உட்கார்ந்தும் வேடிக்கை பார்த்தும் ஞாயிற்றுக்கிழமை கழிந்தது. பின்பு அவன் வேலைக்குத் திரும்பிய சிறுது நாட்களிலேயே வெளிநாடு செல்லும் வாய்ப்பைத் தருகிறார் தனது மேலாளர் . தனது குறிக்கோளின்மையை நாசூக்காகச் சொல்லிச் சென்றுவிடுகிறான். மேரியும் தனது திருமண விருப்பத்தை கேட்டபோது பதில் சொல்ல முடியாமல் திண்டாடுகிறான் மெர்சால்ட்.
இங்கே நாம் கவனிக்க வேண்டியது மெர்சால்ட்டின் ஆழ்மனதின் ஓட்டத்தை. பாகம் ஒன்றில் மெர்சால்ட் பற்றிய ஒரு பிம்பத்தை நம்முள் உருவாக்குகிறார் ஆல்பர்ட். எதிலும் தீவிரமின்மையை உடையவன் மெர்சால்ட். ஒன்றையே செய்து, பெரிய லட்சியம் ஏதும் இல்லாமல், வருவதை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை நடுநிலைமையாய் ஓட்டிச்செல்பவன். அம்மாவின் மரணம் துக்கம் தருவது. தூக்கமும் ஒரு வகையான தலை பாரமும் மெர்சால்ட்டை நெருக்குகிறது. அவனால் துக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாததால் அம்மாவின் முகத்தையே பார்க்க மறுக்கிறான். ஆனால் அவன் அம்மா அவனிடம் பல சந்தர்ப்பங்களில் அவனிடம் கூறிய வரிகளை கடைசிவரை நினைப்படுத்திக் கொள்கிறான்.
மேரி தன் திருமண விருப்பத்தைக் கூறியபோதுதான் திருமணத்தைப் பற்றிச் சிந்திக்கிறான். தனது நண்பனான மஸான் குடும்பத்தை சந்தித்த பிறகுதான் திருமணத்தின் தேவையை உணர்கிறான். மெர்சால்ட் பொதுவாக தான் வாழும் அந்தத் தருணத்தை அப்படியே கடத்திச் செல்பவன் . நேற்றைய சிந்தனையோ நாளைய சிந்தனையோ அதிகம் இல்லாதவன். அனால் அவன் சிறையில் இருந்த போது நேரத்தைக் கடத்திச்செல்ல அவன் வாழ்ந்த நாட்களையும், வரவிருக்கும் மரணத்தைப் பற்றியுமே சிந்திக்கிறான்.
மெர்சால்ட் தன் நண்பர்களுடன் நீச்சலடிக்க சென்ற போது தன்னையும் ரேமாண்டையும் காப்பாற்ற நினைத்திக் கொண்டிருந்தபோது கொலை நடந்துவிடுகிறது. பின்பு அவனது இயல்பே அவனுக்கு கடும் எதிராகத் திரும்பி மரண தண்டனையை பெற்றுத்தருகிறது. சிறைச்சாலையில் அவனது எண்ண ஓட்டங்களை தத்துவரீதியாகவும் தர்கரீதியாகவும் பாகம் இரண்டில் நம்முன் காட்சியாக முன்வைக்கிறார் அல்பெர்ட் காம்யூ . பாகம் இரண்டின் தத்துவத்தை நீட்டி ஒரு புத்தகமே எழுதலாம். மரணத்தையும் வாழ்வையும் பற்றிய சிந்தனைக்கு இட்டுச் செல்கிறது. மரணம் தேடி வரும் பொழுது, அது முப்பது வயதானாலும் அறுபது வயதானாலும் , இன்னும் சில ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற ஆழ் மன ஏக்கத்தை அப்பட்டமாக கண் முன் காட்டுகிறான் மெர்சால்ட்.
யார் இறந்தாலும் பிறந்தாலும் சூரியன் உதித்துக்கொண்டுதான் இருக்கும், காற்று வீசிக்கொண்டுதான் இருக்கும், உலகம் இயங்கிக்கொண்டுதான் இருக்கும். ஒவ்வொரு மணித்துளியையும் கழிக்கும் சுதந்திரம் நம் எல்லோரிடமும் உண்டு. எப்படிக் கழிக்கிறோம் என்பதே வித்யாசத்தை உருவாக்குகிறது. உலகம், மனிதன், கடவுள் ஆகிவற்றைப் பற்றி நம்மை சிந்திக்க வைக்கும் தைத்திரீய உபநிடதம் என் நினைவுக்கு வருகிறது.
சிறைச்சாலையில் மெர்சல்ட்டை ஏசுவை ஏற்கச் செய்துவிடவேண்டும் என்று போராடுகிறார் பாதிரியார். இறந்த பின் எதுவும் இல்லை என்னும் கிறிஸ்துவத்தின் கொள்கையை போதிக்க முயல்கிறார் .ஆனால் செங்கல்களில் அவன் காண்பது தன் காதலி மேரியின் முகம் மட்டுமே என்றதும் பாதிரியார் உடைந்துவிடுகிறார். கில்லட்டின் இயந்திரம் பற்றிய வர்ணனை மிக அசாத்தியமானது. மரணம் இதோ இங்கே என்று உறுதி செய்கிறது இந்த கில்லட்டின் .
எப்பொழுது இறந்தாலும் சிறிது நாட்களில் இந்த உலகம் நம்மை மறந்து விடும் . வாழ்க்கை ஒன்றும் அர்த்தமானது இல்லை . அதனால் மரணத்தை ஏற்றுக்கொள் என்று கறாராக மெர்சால்ட் கதாபாத்திரத்தின் மூலம் ஆல்பர்ட் முன்வைக்கிறார்.
ஒரு நாள் இவ்வுலகில் வாழ்ந்தவன் சிறைச்சாலையில் (அல்லது தனிமையில்) நூறு ஆண்டுகளைக் கழிக்கும் நினைவுகளைக் கொண்டவனாகிறான் என்கிறான் மெர்சால்ட்.
மரணத்திற்கு பின்னால் ஆன்மா எஞ்சுகிறது என்று கூறுகிறது கட உபநிடதம். காண முடியாததால் இல்லை என்றாகிவிடாது. அதுபோல் இன்றைய நிகழ்வுகள் நாளைய நினைவுகள். நினைவுகளும் நிஜமானவை ஒரு வகையில். மரணத்திற்கு பின்னல் நினைவுகள் எஞ்சுகிறது.
க.சீ.சிவகுமார் கருத்தரங்கில் விஜயகுமார் சம்மங்கரை ஆற்றிய சிற்றுரை.
//எனது இந்த வாசிப்பனுபவம் “உப்புக்கடலை குடிக்கும் பூனை” யை மட்டும் உள்ளடக்கியது. //
கருத்தரங்கு என்ற சொல்லின் நேரடி ஆங்கில சொல் செமினார். செமினார் என்றவுடன் அதற்கு எப்படியோ அகடமிசியா அர்த்தம் வந்துவிடுகிறது.
கருத்தரங்கில் என்ன நடக்கிறது.. அது அடிப்படையில் வாசிப்பனுபவத்தை முன்வைப்பது என்பதாகும். வாசிப்பனுபவம் என்றவுடன் ஒரு படைப்பை அனைத்து கோணத்திலும் பார்ப்பது. அதன் ஒரு பகுதியாக படைப்பை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது.
ஆய்வுக்கு அளவைகள் தேவைப் படுகின்றன. அப்படியானால் இலக்கியத்துக்கு அளவைகள் இருக்கின்றனவா?
பொதுவாக இலக்கியத்தின் பயன் மதிப்பு என்ன என்று பார்க்கையில். அது நேர்கோடான மனித வாழ்வில், இலக்கிய கற்பனை மூலம் நடக்கும் பக்கவாட்டு அனுபவங்களினால் சாத்தியமாகும் அனுபவ அடர்த்தி என்று இலக்கிய ஆசான்கள் சொல்கிறார்கள். ஆகையால் ஒரு வாசகனுக்கு இலக்கியம் தரும் அனுபவ அடர்த்தி மட்டும் தான் அளவையாக இருக்க முடியும். இது அகநிலை அளவை.
ஆனால் ஒரு கருத்தரங்கிற்கு, ஒரு படைப்பு ஆய்படு பொருளாக இருக்கும் போது இம்மாதிரியான அகநிலை அளவை உதவாது. புறவைய அளவைகள் தேவை.
புறவைய அளவைகள் நிறைய உள்ளன என்ற போதிலும், அவைகளை இரு வகையாக பிரித்து பொதுமைப்படுத்தி கொள்ளலாம்.
வடிவம் (Story structure), அழகியல்.
உட்பொருள் (பாடு பொருள்)
வடிவம் : → அழகியலாளர்களின் கோட்பாடாக இது அமைகிறது.
சிறுகதை என்று நாம் உத்தேசிப்பது அடிப்படையில் ஒரு முரண்பாட்டைத் தான். “உடன்பாடு” பெரும்பாலும் சிறுகதை ஆவதில்லை.
இலக்கிய வடிவங்கள் பல உள்ள போதிலும், சிறுகதைக்கு 1) எடுப்பு 2) தொடுப்பு 3) முடிப்பு என்ற ஒரு செவ்வியல் வடிவம் உருவாகி வந்துள்ளது. அவற்றை இன்னும் விரிவு படுத்தினால்
Exposition
Inciting Incident
Progressive complexity through multiple pinch point
Point of no return
Climax
Resolution/Revelation
க சீ சிவகுமார் அவர்களது சிறுகதை இப்படியான கச்சிதத்தன்மையை எங்கோ நிராகரிக்கிறார் என்றே தோன்றுகிறது. அப்படி நிராகரித்தும் அந்த கதைகள் வெற்றி பெறுகின்றன. அப்படி வெற்றி பெறுவதற்கு காரணம் அவர் தனக்கே உண்டான சில உத்திகளை பயன்படுத்துகிறார்.
நகைச்சுவை
ஸ்டைலிஸ்ம்
நகைச்சுவை → எடுத்துக்காட்டாக :
எனக்கும் ஒரு வாழ்த்து
ஹலோ
ஒரு நாள்
குகை
புதிர் வீட்டு ஜன்னல்
கட்டு சேவல் மனிதர்கள்
மஞ்சம் மகிமை
ஒரு ஊர்ல ஒரு தேர்தல்.
ஸ்டைலிஸ்ம் → சில வாக்கியங்கள்
மனதில் மௌனக்குளிர் அப்பியது
சில தப்படிகளில் சிவப்பை தவறவிட்ட நிறம்
தெருவெல்லாம் வெளிச்ச காளான்கள்
வயிறு அலை எழும்பாமல் தலை தரை தொடாமல் விரைத்திருந்தது.
இவரது கதைகள் இலக்கற்று திரிகிறது என்றே முதலில் தோன்றுகிறது. ஆனால் அப்படி வெவ்வேறு திசைகளில் விரிந்து செல்லும் கிளைகள் அனைத்தும் கதையின் கடைசி பத்தியில் வந்து குவிந்து வாசகனுக்கு சிறுகதை அனுபவத்தை நிறைவு செய்கிறது.
இங்கே சிறுகதை அனுபவம் என்று சொல்வது, கதை முடிந்த பின்னரும் வாசகன் மனதில் கதை வளர்ந்து செல்வதை. அதாவது- இல்லாத பக்கங்களில் கதை தன்னை தானே எழுத்திச் செல்கிறது.
கதை முடிந்த பின்னரும் வாசகன் மனதில் எண்ணற்ற பல சாத்தியங்களாக விரிந்து செல்லும் வாய்ப்பினையும் ஆசிரியர் மறுக்கிறார். அவரது கதைகளில் கடைசி வரி அந்த சத்தியத்தை முறித்து விடுகிறது. கதைகளுக்கு ஒற்றை முடிவு என்று முடித்து விடுகிறார்.
வீடு : அந்த புள்ளியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பயணம் செல்ல
தமிழரசி: எனக்கு பிறந்த வீட்டுக்கு வந்து செத்துப் போகிற பெண்கள் நினைவுக்கு வந்தார்கள்.
பலூன்: உள்ளே காற்றுள்ள எதுவும் உறங்குவதில்லை.
தன்வினை: ராத்திரி உணர்ச்சிமயமா தின்னியே
தி நேம் ஐஸ் மணி : அடிபடாமல் நீண்டநாள் வாழனும் என்றால் கொஞ்சம் கட்டுக்குள் இருக்க வேண்டும்
கதையின் மொத்தப் பரப்பையும் ஆசிரியர் தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதினால் வாசக இடைவெளி சற்று சுணக்கமாகவே இருக்கின்றன. அதற்கெல்லாம் ஈடுகட்டுவது போல் அவரது ஸ்டாலிசம் கதையெங்கும் விரவிக்கிடக்கிறது.
கடைசி வரி கச்சிதமாக அமைந்திருக்கும் கதைகளும் இருக்கின்றன.
குகை
சீற்றம் → revelation
கடல்கள் காய்வதில்லை
ஆர்வலரும் இல்லை அடைக்குந்தாழ்
இயல்பிகந்த கின்னாரம்
கறி
கதையின் உடலை மறுக்கும் கடைசி வாக்கியம் என்ற முறைமையை கைவிட்டு. கதையின் உடலை மேலும் விளக்கும் கடைசி வாக்கியம் என்பதாக உள்ளது.
இதை எப்படி புரிந்துகொள்வது என்று யோசிக்கையில். சிறுகதையின் செவ்வியல் வடிவத்தின் சட்டாம்பிள்ளைத் தனத்துக்கு எதிரான செயல்பாடு என்று நான் புரிந்துகொள்கிறேன்.
மேலும் நகைச்சுவை சிந்திக்க வைக்குமா என்ற கலாதித்த கேள்விக்கு தன் பங்கு பதிலையும் நியாயத்தையும் செய்திருக்கிறார்.
உட்பொருள் : → முற்போக்காளர்கள், லட்சியலாளர்களின் கோட்பாடாக இது அமைகிறது.
காக்கா வடை திருடிய கதையை நல்ல சிறுகதை வடிவுக்குள் கொண்டு வந்து விட முடியும். அறம் மழுங்கியிருக்கும் இந்த இக்கட்டான கால கட்டத்தில் அழகியல் கோட்பாடுகள் இலக்கிய தகுதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று லட்சியவாதிகளின் கூற்றாக இருக்கும்.
ஆகையால் கதையின் பேசு பொருள் உயர் விழுமியங்களால் ஆனதாக இருக்க வேண்டும்.அதுவே நல்ல கதையின் அளவையாக இருக்க முடியும்.
What is your crisis என்று ஒரு கதாபாத்திரத்திடம் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
இந்த வரையறையையும் ஆசிரியர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்றே தோன்றுகிறது. அதாவது சிறிய விஷயங்களின் முரண்பாடும் உடன்பாடும் இலக்கியங்கள் பேசியாக வேண்டும் என்கிறார்.
அதாவது காலை காபியில் சீனி போதவில்லை என்ற ரப்ச்சரும் இங்கு முக்கியம். → crisis
இன்றைய இலக்கியத்தை நடுத்தர வர்க்கத்தின் கலை வெளிப்பாடு என்று சொல்லலாம். இன்னும் சொல்லப் போனால் நடுத்தர வர்க்கத்தின் ஆன்மீக வெளிப்பாடாகவும் இலக்கியத்தை கொள்ளலாம். சாமானியர்களின் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டு மீண்டும் அசாதாரணங்களையும் வீரநாயகர்களையும் உயர் விழுமியங்களையும் எழுதிக்கொண்டு இருக்கிறோம்.
அசாதாரணத்தின் அதிகாரத்துக்கு எதிர் விசையில் ஆசிரியர் செயல் படுகிறார் என்றே நான் புரிந்துகொள்கிறேன்.
இவரது எழுத்தை //அசாதாரணங்கள் அற்ற கலை // என்றே எனக்கு படுகிறது.
இதுவரையில் இலக்கிய அளவைகளை இரு வகையாக
1) Story structure
2) Content
என்று பொதுமைப் படுத்தி பார்த்தோம்.
அது போக இன்னொன்று இருக்கிறது. மிக சிறந்த சிறுகதைகள் அனைத்தும் இதை நாம் உணர முடியும்.
→ Emotional/Intellectual Pay off – கதை நம்முள் செலுத்தும் அறிவுசார் உணர்வெழுச்சி. இந்த அளவையை கொண்டு ஆசிரியரின் சிறுகதையை பார்க்க முடியுமா? தெரியவில்லை.
ஏனோ தெரியவில்லை “இயல்பிகந்த கின்னாரம் “ சிறுகதையின் கடைசி வரி நெஞ்சில் அப்பிக்கொண்டது. அந்த வரி → “ உன் கல்லறை வாக்கியம்தான் என்ன?”
நான் என்னுடைய வாழ்வில் இதுநாள் வரை பள்ளிப்படிப்பு, கல்லூரி, வேலை, திருமணம், குழந்தை பிறப்பு என்று அன்றாடத்தில் அடித்து செல்லப்பட்டுக்கொண்டிருந்தேன். அதில் சிறிய மாற்றமாய் புத்தக வாசிப்பு என்னுடைய கணவரின் மூலமாக நிகழ்ந்தது. தமிழ் வாசிக்கத்தெரியும் என்னும் ஒரே தகுதியுடன் நான் எனது வாசிப்பை தொடங்கினேன். குழந்தைகளுக்கான கதைகளை படித்து இரவு நேரம் தூங்கும் முன்பு என்னுடைய மகளுக்கும் மகனுக்கும் கூறுவேன். அப்பொழுது என் கணவர் வெண்முரசு கதைகளை கூறுவார். நானும் அக்கதைகளை ஆர்வமுடன் கேட்பேன். ஒருநாள் நான் வெண்முரசு வாசிப்பை துவங்கினேன். சவாலுடன் கூடிய மிகப்பெரிய உழைப்பு தேவைப்பட்டது. இந்திரநீலத்தில் தொடங்கி முன்னும் பின்னும் வாசித்து சிலமாதங்களில் ஜெ அவர்களின் தளத்தில் வந்து கொண்டிருக்கும் நிகழ்கால பகுதியுடன் இணைந்துகொண்டேன்.
அச்சமயம் கோவையில் சொல்முகம் என்கின்ற வாசகர் குழுமம் ஒன்றை ஜெயமோகன் அவர்களின் வாசகர்கள் உருவாக்கி உள்ளனர் என்ற தகவல் வந்தது. எனது கணவர் அந்த குழுவில் இணைந்து மாதந்தோறும் நிகழும் கூடுகையில் கலந்துகொண்டிருந்தார். எனக்கோ அதில் கலந்துகொள்வதற்கு சிறு தடங்கல் இருந்தது. வெண்முரசைத் தொடர்ந்து வாசித்து கொண்டிருந்த எனக்கு இதனுடைய தனித்த மொழிநடை மற்றும் கதைக்களம் மட்டுமே பழகியிருந்தது. அப்போது சொல்முகத்தில் வெண்முரசு வாசிப்பை தொடங்கியபோது நான் அதில் இணைந்து கொண்டேன். முதற்கனலில் தொடங்கி மீண்டும் வாசிக்கத்துவங்கினேன். ஒவ்வொரு கூடுகையிலும் கதைக்களமும், கதை மாந்தர்களும் வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு கருத்துக்களாக முன்வைக்கப்பட்டன. எனக்கு இது மிகப்பெரிய அறிவுத் திறப்பாக இருந்தது. மேலும் எனது வாசிப்பை கூர்மைப்படுத்த ஆர்வமூட்டியது. கூடுகையில் முதல் அமர்வில் வெண்முரசு முடிந்தவுடன் இரண்டாவது அமர்வில் குறிப்பிட்ட நாவல்கள் குறித்த கலந்துரையாடல் இருக்கும். ஆரம்பத்தில் இதில் நான் பார்வையாளராகவே இருந்தேன். எனக்கு நாவல்கள் வாசிப்பதில் பெரிய தடை இருந்தது. அதற்கு காரணம் அக்கதைகளில் இருந்த எனக்கு தெரியாத கதைக்களம், நிலம், பண்பாடு போன்றவை. அவை அனைத்தையும் கடந்து எவ்வாறு வாசிக்க வேண்டும், எவ்வாறு தொகுத்துக் கொள்ளவேண்டும் என்பதை தொடர்ந்து வந்த கூடுகையில் தெரிந்து கொண்டேன். அப்பயணம் ஒரு அறிவார்ந்த பாதையாக இருந்தது. அதில் அடுத்த கட்ட நகர்வாக கருத்தரங்கம் ஒன்றில் ஒரு இருபது நிமிட உரையை ஆற்ற வாய்ப்பு கிடைத்தது என் வாசிப்பை இன்னமும் விரிவாக்கியது. அக்கருத்தரங்கிற்கு என்னைத் தயார்படுத்திக்கொண்டது பதட்டத்துடன் கூடிய ஒரு இனிய அனுபவமாக இருந்தது.
சொல்முகம் 50ஐ கொண்டாடும் அதே நேரத்தில், இந்த அறிவுப்பாதையில் தொடர்ந்து பயணிக்க மிகுந்த ஆர்வமுடன் உள்ளேன். இதுநாள் வரை வாசித்த நாவல்களின் மூலமாக வெவ்வேறு நிலப்பரப்பு, கதைமாந்தர்கள், கதைச்சம்பவங்கள், தத்துவங்கள் ஆகியவற்றை காட்டிய மிக நீண்ட ஆசிரியர் நிரையை வணங்குகிறேன்.
இந்த தொடர்வாசிப்பு மற்றும் கலந்துரையாடலை சாத்தியமாக்கிய சொல்முகம் வாசகர் குழுமம், இதை வாசகர் குழுமம் என்பதைவிட நண்பர்கள் குழுமம் என்று சொல்லி அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.
2019 ஜீன் மாதம் முதல் வாரம் – மூன்றாவது முறையாக, தமிழின் தலைசிறந்த இரண்டு நாவல்கள் கொண்ட அந்தப் புத்தகத்தை எடுத்து படிக்கத் துவங்கினேன். இதற்கு முன்பாக எடுத்த இரண்டு முறையும், பத்து பக்கங்களைக் கூட படிக்க முடியாமல் மூடிவைத்த அனுபவம் தந்த தயக்கம் ஒருபுறம். மறுபுறம், இம்முறை படித்தே ஆகவேண்டும் என்ற ஒரு உந்துதல். இத்தனைக்கும் தமிழின் ஆகச்சிறந்த செவ்வியல் நாவல்கள் என போடப்படும் பெரும்பான்மையான பட்டியல்களில் இவ்விரு நாவல்களுக்கும் இடமுண்டு. பல வருடங்களுக்கு முன்னரே வாங்கியிருந்த போதும், படிக்கவேண்டும் என்ற ஆவல் இருந்த போதும் அப்புத்தகம் கோரிய உழைப்பை / கவனத்தை தரமுடியாமல் இவ்வளவு நாட்களாக படிக்கமுடியாதிருந்த அப்புத்தகத்தை, இம்முறை வாசித்து முடித்தேன். அதற்கு முக்கியமான காரணம் “சொல்முகம் வாசகர் வட்டம்”. அந்தப் புத்தகம், திரு.ப.சிங்காரம் அவர்கள் எழுதிய “புயலிலே ஒரு தோணி” மற்றும் “கடலுக்கு அப்பால்” ஆகிய இரண்டு நாவல்களைக் கொண்டது.
அந்த நாவல்கள் மட்டுமல்லாது, தொடர்ந்து தமிழிலும், இந்திய மொழிகளிலும், உலக அளவிலும் வெளிவந்த பல செவ்வியல் நாவல்களை நான் வாசித்ததற்கு சொல்முகம் வாசகர் வட்டம்தான் காரணம். இதுவரை நடைபெற்ற 50 கூடுகைகைகளில், கலந்துரையாடிய பெரும்பாலான புத்தகங்களை வாசித்தே தீரவேண்டும் என்கின்ற கட்டாயமே, என்னுடைய துவக்க கால தயக்கத்தை, கடினமான புத்தகங்களை வாசிக்கும் போது ஏற்படக்கூடிய சலிப்பை வெல்லப் போதுமானதாக இருந்தது. சொல்முகம் கூடுகைகளுக்குப் பிறகு, எந்தவொரு கடினமான புத்தகத்தையும் இறுதிவரை வாசிப்பதற்கான உழைப்பை, கவனத்தை தருவதில் என்னிடம் ஒரு மாற்றத்தை நான் உணர்கின்றேன். தனிப்பட்ட முறையில், என்னுடைய வாசிப்பில், இது ஒரு மிகப்பெரிய முன்னேற்றம்.
இரண்டாவதாக, எந்தவொரு புத்தகத்துக்குள்ளும் சாத்தியப்படக்கூடிய நமக்கான தனிப்பிரதி எனும் அம்சம். ஒரு நாவலைப் பற்றி ஒரு வாசகர் அவரின் கருத்துக்களை முன்வைக்குந்தோறும், அந்தக் கருத்தை ஒட்டி, சொல்வதற்க்கும் பகிர்வதற்குமான எண்ணங்கள், ஒவ்வொரு கருத்திலிருந்தும் தொட்டு தொட்டு விரிவடைந்த அனுபவங்கள் என கலந்துரையாடல்களின் அதிகபட்ச சாத்தியக்கூறுகளை கண்ணுற்றோம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நேரமாகிவிட்டது என்பதால் மட்டுமே கலந்துரையாடலை நிறுத்திக்கொள்ளும் அளவுக்குத் தீவிரமான உரையாடல்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றின் விளைவாக, அடுத்தடுத்த நாவல்கள் வாசிக்கும் போது சென்ற நாவலில் கவனிக்க மறந்த அம்சங்கள், மறைந்திருந்த விசயங்கள், இயல்பாக மேலேழுந்து வந்தன. போலவே, ஒரு செவ்வியல் நாவல், அதன் சில கூறுகள் மற்றொரு செவ்வியல் நாவலை நினைவூட்டும் அம்சம். சில சந்தர்ப்பங்களில் நாவலின் பேசுபொருளில் கூட வலுவான ஒப்புமையைக் காண முடிந்தது. மொழியோ, பிராந்தியமோ இந்தப் பொதுவான பேசுபொருள் எனும் அம்சத்துக்கு தடையாக இருப்பதில்லை என்பதும், செவ்வியல் என்பதன் முக்கியமான அம்சமே காலமோ, தேசமோ எல்லைகளை கடந்தது (எல்லோருக்கும், எப்போதைக்கும்) என்பதும் கலந்துரையாடல்கள் மூலம் மீண்டும் நிரூபணமானது.
மூன்றாவதும் மிகவும் முக்கியமானதுமான விசயம், ஒரு நாவலைப் படித்து அதிலிருந்து நாம் பெற்றுக்கொண்டவற்றை ஒரு கலந்துரையாடலில் முன்வைக்கக்கூடிய திறன். இயல்பாகவே என்னுள் இருக்கக்கூடிய ஒரு தயக்கத்தைக் கடந்து கருத்துக்களை முன்வைப்பதில் சொல்முகம் கூடுகைகள் பெரும் பங்காற்றின. இறுக்கமில்லாத நட்பு சார்ந்த கூடுகைகள் அளிக்கும் ஆசுவாசம்தான் இதற்குக் காரணம். கலந்துரையாடல்களின் எண்ணிக்கை கூடக் கூட, என்னுடைய கருத்துக்களை முன்வைப்பதில் இருக்கும் நம்பிக்கையும் கூடிவந்ததை என்னால் கண்கூடாக உணரமுடிந்தது.
ஆரம்பகால கூடுகைகளில் விவாதிக்கப்பட்ட பெரும்பாலான நாவல்களைக் குறித்த எண்ணங்களை ஒவ்வொருவரும் கட்டுரையாக எழுதி அனுப்பி அது சொல்முகம் வாசகர் வட்ட வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இக்கட்டுரைகள், அந்நாவலை அதன் முக்கியமான கூறுகளை முன்வைத்து எழுதப்பட்டவை மட்டுமல்லாது வாசகர்களின் தனிப்பட்ட அறிதல்களையும் உள்ளடக்கியவை. துவக்க காலத்தில் விவாதிக்கப்பட்ட பெரும்பாலான செவ்வியல் நாவல்கள், பொதுவெளியில் அரிதாக விவாதிக்கப்பட்டவை என்பதால், ஒருவகையில் அந்நாவல்கள் குறித்த சொல்முகம் கட்டுரைகள் பெரும் முக்கியத்துவம் பெருகின்றன.
சொல்முகம் வாசகர் வட்டத்தின் கருத்தரங்கங்கள் வாசிப்பின் மற்றொரு எல்லையை நான் புரிந்துகொள்ள வழிவகுத்தன. ஒரு படைப்பாளியின் அத்தனை படைப்புகளையும் வாசிப்பது. அப்படைப்புகள் குறித்த தன் எண்ணவோட்டங்களை இருபது நிமிட சிற்றுரையாக கருத்தரங்கத்தில் நிகழ்த்துவது. அவ்வாறாக ஒரு படைப்பாளியைப் பற்றி, அவரது படைப்புகளைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரம் அந்தக் கருத்தரங்கத்தின் முடிவில் நமக்குக் கிடைக்கின்றது. இக்கருத்தரங்கங்களில் அப்படைப்பாளிகளும் இருப்பதும், வாசகர்களின் உரைகள் மீதான மேலதிக தகவல்களை தங்கள் ஏற்புரையில் குறிப்பிடுவதும் முக்கியமான அம்சங்கள். ஒரு சம்பிரதாயமான ஏற்புரையாக இல்லாமல், ஒரு படைப்பு உருவான விதம், அது எழுதப்பட்ட காலகட்டத்திய மனவோட்டம், இன்று எழுதப்பட்டால் அதில் தான் செய்ய விரும்பும் மாற்றங்கள் என படைப்பாளிகளின் ஏற்புரையும் வாசகனுக்கான பெரும் அறிதல்களை உள்ளடக்கியவையாக இருந்தன.
தனிப்பட்ட முறையில் என்னுள் நான் உணர்ந்த மாற்றங்களுக்கிணையாகவே சொல்முகம் குழுமத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் மாதத்துக்கு மாதம் மேம்பட்டுக்கொண்டே வந்திருக்கின்றன. கருத்துக்களை முன்வைப்பதில், மறுப்பதில், மாற்றுக்கருத்துக்களை எதிர்கொள்வதில் என எல்லாவற்றிலும் ஒரு நேர்மறை அணுகுமுறையே அனைவராலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு உரையாடலிலும் எவருக்கும் தனிப்பட்ட முறையில் கசப்பான ஒரு அனுபவம் கூட ஏற்பட்டதில்லை என்பதே அதற்குச் சான்றாகும். அதுவே, இக்கூடுகைக்கு தொடர்ந்து வரும் வாசகர்கள் மத்தியில் இலக்கியத்தை முன்வைத்தும் அதைத் தாண்டியும் ஒரு நல்ல நட்புறவு நிலவுவதன் சாரமாகும். கருத்தின் மீது வைக்கப்படும் விமர்சனத்தின் சாராம்சம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது அடுத்தடுத்த கூடுகைகளின் உரையாடல்களில் வெளிப்படுகின்றது.
வாசிப்பின்பம் என்பதைப் போலவே சக வாசகர்களுடன் பகிர்தலில் இருக்கக்கூடிய நிறைவை “கோவை சொல்முகம் வாசகர் வட்டம்” உணரவைத்தது.
மாத்வ மடத்தின் அதிகாரத்திலிருக்கும் ஒரு அக்ரஹாரம். அதில் தன்னை சார்வாகன் என்று அறிவித்துக்கொண்டு மதுவும் மாமிசமும் உட்கொண்டு சந்திரி என்கிற தாசியையும் அதே அக்ரஹாரத்தில் கொண்டு வைத்திருந்த நாரணப்பாவின் இறப்பிலிருந்து துவங்குகிறது நாவல்.
ஆசாரங்களையும் நெறிகளையும் கடைபிடித்து அதை மற்றவர்களுக்கும் போதிக்கும் இடத்தில் பிராணேஸாச்சாரியார் இருக்கிறார். நாரணப்பா பிராமண நெறிகளின்படி வாழவில்லை எனினும் பிராமணியத்திலிருந்து விலக்கி வைக்கப்படவில்லை. எனவே பிராமணனுக்கான எரியூட்டலே நிகழவேண்டும் என்று அவர் சொல்கிறார். ஆனால் அவனுக்கு வாரிசு இல்லாததால் அவனுடைய சடலத்தை எவர் எரியூட்டுவது எனும் சிக்கல் எழுகிறது. சந்திரி தனது நகைகளை தகனச்செலவிற்கு எடுத்துக்கொள்ளுமாறு அளிக்கும்போது அந்த நகையின் மீது ஆசையும் அதே நேரத்தில் அது வெளிப்படக்கூடாதென்றும் அடுத்தவனுக்கும் அது கிடைக்கக்கூடாதென்ற எண்ணமும் முடிவுகளைக் குழப்புகிறது.
பல்வேறு தர்க்கங்களில் வென்று பண்டிதன் என்று பெயரெடுத்திருந்த பிராணேஸாச்சாரியார் சாஸ்திரங்களின்படி இதற்கொரு முடிவு சொல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார். சுவடிகளை ஆராய்ந்து அதில் தீர்வு காண இயலாத பிராணேஸாச்சாரியார் மடத்தில் சென்று கேட்பது தன் பெருமைக்கு இழுக்கு என்று நினைக்கிறார். அக்ரஹாரத்தில் பிணம் இருக்கும் வரையில் எவரும் உணவு உண்ண முடியாது. அவர் வணங்கும் மாருதியிடம் உபவாசமிருந்து பதில் கேட்க செல்கிறார். அங்கு எதுவும் நிகழாததால் மனமுடைந்து வரும் வழியில் அவரை வணங்கும் சந்திரியிடம் தன்னை மீறி உறவு கொள்கிறார்.
நாரணப்பாவுடன் இருந்த சந்திரிக்கு குழந்தை இல்லை. தன் குல வழக்கப்படி ஞானியான பிராணேஸாச்சாரியாரின் மூலமாக தனக்கு ஒரு வாரிசு அமைய வேண்டும் என்று விரும்புகிறாள். அது நிகழும் சந்தர்ப்பத்தில் அவள் அவரை முழுதேற்கிறாள். சந்திரியை அடைந்த பின் இல்லம் செல்லும் பிராணேஸாச்சாரியர் அதை தன் குலத்துக்கு அறிவித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அவர்மீது மற்றவர்கள் வைத்திருக்கும் மதிப்பை இழக்க அவரால் இயலவில்லை. நாரணப்பாவுக்கும் தனக்கும் நிகழ்ந்த உரையாடல்களை மீண்டும் மீண்டும் நினைவு கூர்கிறார்.
சிறுவயதிலேயே நோயாளியான மனைவியை தன் காம ஒறுப்பு நோன்பிற்கு துணையாக இருக்குமென்று எண்ணியே மணக்கிறார். சந்திரியை அடைந்த பின் அவளது இயலாமையும் அவலட்சணத்தையும் அவர் உணர்கிறார். காளிதாசனின் வர்ணனைகளை அவர் சொல்லக்கேட்டு உணர்வெழுச்சிக்கு ஆட்பட்டு அக்ரஹாரத்தில் ஒருவன் புலையப்பெண்ணுடன் கூடுகிறான். சந்திரியை அடையும் வரை பிராணேஸாச்சாரியருக்கு தான் போதித்த அனைத்தும் வெற்று வார்த்தைகளாகவே தெரிகின்றன.
தன்னுள்ளிருக்கும் நாரணப்பாவை சந்திரியை அடைவதன் மூலமாக பிராணேஸாச்சாரியார் கண்டு கொள்கிறார். நாரணப்பா இறப்பின்போது நாராயணனை விளித்ததை சந்திரி சொல்கிறார். நாரணப்பாவின் நண்பர்கள் இருக்கும் பக்கத்து ஊருக்குச் சென்று தகனத்துக்கான உதவி கேட்கிறார்கள். அவர்கள் ஸ்மார்த்தர்கள் என்றும் மாத்வர்களைவிட மதிப்பு குறைந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
பின் அவர்களது உதவியையும் ஏற்க முடியாமல் திரும்புபவர்களிடம் அவர்களையே மடத்திற்குச் சென்று வழி கேட்கும்படி பிராணேஸாச்சாரியார் சொல்கிறார். இதற்கிடையில் பிராணேஸாச்சாரியாரின் மனைவி நோய்வாய்ப்பட்டு இறக்கிறாள். அவளது தகனம் முடிந்தபின் அங்கிருந்தே பிராணேஸாச்சாரியார் ஊரைவிட்டு செல்கிறார்.
நாரணப்பாவின் ஸ்நேகிதன் அவனைச் சந்திக்க வருகிறான். எலிகள் செத்துவிழுந்து நாரணப்பாவும் இறந்துகிடப்பதைக்கண்டு அலறி ஓடுகிறான். அக்ரஹாரத்தில் வசிக்கும் விதவையான லக்ஷ்மியம்மா அவனை பேய் என்று எண்ணி அலறுகிறாள்.
ஊர் முழுவதிலும் புலைச்சேரியிலும் எலிகள் பெருகி இறந்து கிடக்கின்றன. அவற்றை உண்ண பிணந்தின்னி கழுகுகள் வந்து சேர்கின்றன. காகங்களை விரட்டும் கழுகுகள். மணியும் சேகண்டியும் அடித்து கழுகுகளை விரட்டும் அக்ரஹாரம். ஒரு பெருந்தொற்று தங்களை வந்து சேர்ந்ததை அறியாமல் இறந்தவர்களை குடும்பமாக குடிசையோடு எரிக்கிறது புலை சேரி.
நாரணப்பாவின் நாறும் பிணத்தை அவனது நண்பர்களான சில முஸல்மான்களைக்கொண்டு சந்திரி எரித்துவிடுகிறாள். பின் தன் ஊருக்கு சென்றுவிடுகிறாள்.
ஊர்முழுவதையும் வெளியேற்றியபின் மடத்துக்குச் சென்றவர்கள் இரண்டு இடங்களில் தங்கி மூவரை காய்ச்சல் கொண்டதனால் விட்டு விட்டு தகனத்துக்கான ஒப்புதலுடனும் நாரணப்பாவின் சொத்தை மடத்திற்கு கொடுக்கும்படியான உத்தரவையும் பெற்று சென்றவர்கள் மீள்கிறார்கள். நாரணப்பாவின் சடலத்தை எரிக்கத் தேவையான விறகுடன் அவன் வீட்டு வாசலில் பிராணேஸாச்சாரியாருக்காக காத்திருக்கிறார்கள்.
பக்கத்து ஊரிலுள்ளவர்கள் இவ்வூரின் இறப்புகளையும் சிவமொக்கேயிலிருந்து பரவிய பிளேக்கையும் அறிந்து குணப்படுத்த மருத்துவ உதவி தேடிச்செல்கிறார்கள்.
ஊரை விட்டு சென்ற பிராணேஸாச்சாரியார் வழியில் புட்டா எனும் சம்சாரியுடன் பயணிக்க நேர்கிறது. அன்றாட இன்பங்களின் எல்லைகளில் திளைத்திருக்கும் புட்டாவுடன் அந்த சந்தையில் சென்று சேர்கிறார் பிராணேஸாச்சாரியார்.
சந்திரியை மீண்டும் மீண்டும் நினைவு கூறும் பிராணேஸாச்சாரியார் அவளுடனான ஒரு வாழ்க்கையை தான் வாழ முடியுமா என்று கேட்டுக்கொள்கிறார். சேவல் சண்டையை காணும்போது அது அவளுடனான வாழ்க்கையின் ஒரு பகுதி என்று எண்ணுகிறார்.
தன் சிறுவயது தோழனான மஹாபலன் அனைத்து கல்விகளையும் புறந்தள்ளி காசியில் ஒரு தாசியுடன் வாழும் வாழ்க்கையை தேர்ந்ததை எண்ணிப்பார்க்கிறார். சந்தையில் நிகழும் சேவல் சண்டையை பார்க்கும்போது சந்திரியுடனான வாழ்க்கை அதைப்போன்ற அசுர வாழ்க்கையாகவே இருக்க முடியும் என்று எண்ணிக்கொள்கிறார்.
புட்டாவை விட்டு விலக இயலாமல் அவன் போக்கில் உடன் செல்லும் பிராணேஸாச்சாரியார் அவனுடன் ஒரு பூக்கட்டிப்பெண் வீட்டுக்கும் செல்கிறார். உணவுக்குப்பின் வருவதாகச் சொல்லி கோயிலில் உணவருந்தச் செல்லும் அவர் மனைவி இறந்த தீட்டு கழியாமல் கோவிலில் உணவருந்த அமரும் தன்னை எவரேனும் அடையாளம் கண்டுவிடுவார்கள் என்று அஞ்சுகிறார். அடையாளம் காணப்படும்போது அங்கிருந்து விலகி வந்து மீண்டும் புட்டாவிடமே வந்து சேர்கிறார்.
முழுவதும் நெறிகளின் படி மட்டுமே வாழ்ந்தவரும் அதற்காக பெருமை கொண்டிருந்தவருமான பிராணேஸாச்சாரியார் கொண்டிருந்தது அனைத்தின் மீதும் ஒரு பக்தி பாவம் மட்டுமே. அறிந்து கடந்தது அல்ல, கற்றதை ஏற்றது மட்டுமே. நாரணப்பா அவருடனான உரையாடல்களில் வெளிப்படுத்தியது அதையே. கலையில் இன்பத்தில் காமத்தில் திளைக்கும் நாரணப்பா அதை எவ்வகையிலும் மறைக்கவில்லை. காண்பதே உண்மை, அடைவதே இன்பம் என்றும் சார்வாகன் என்றும் தன்னை அறிவித்துக்கொள்கிறான். கலை என்பது இறைவனை அடைவதற்கே என்று விருப்புகளை ஒடுக்கி வாழும் ப்ராணேஸாச்சாரியார் தன் பிறழ்தலை ஒப்புக்கொள்ளவே தயங்குகிறார். தான் ஞானவான் என்ற பிம்பத்தின் காவலனாகவே பிராணேஸாச்சாரியார் இருக்கிறார்.
தற்செயலாக அடைய நேர்ந்த ஒரு இன்பம் முற்றாக பிறிதொரு வாழ்க்கைக்கான விழைவென உருவெடுக்கிறது. அதுகாறும் அவர் கைக்கொண்டிருந்த அத்தனை சாத்திரங்களுக்கும் மேலாக ஒரு அனுபவம் எழுந்து வருகிறது. அந்த அனுபவத்திற்குப்பிறகு அப்படி ஒரு வாழ்க்கையை தன்னால் வாழ்ந்துவிட முடியுமா என்ற கேள்விதான் சந்தையில் புட்டப்பாவுடன் அலையும் முழு நேரமும் பிராணேஸாச்சாரியார் கேட்டுக்கொள்வது. இறுதியில் அப்படி ஒரு வாழ்க்கையை முழுதேற்க இயலாதென்றோ அல்லது தன் வாழ்க்கையை மீண்டும் கற்று வாழ்வதற்கென்றோ தன் ஊர் திரும்புகிறார் பிராணேஸாச்சாரியார். அதன் இறுதி முடிவுக்கான குறிப்புகள் எதுவும் ஆசிரியரால் கொடுக்கப்படவில்லை.
நெறிகளின் படி வாழ்ந்து பரமாத்மாவின் பாதங்களை அடையும்படி போதிக்கிறது மாத்வ தத்துவமான த்வைதம். நெறிகளின் படி வாழும் பிராணேஸாச்சாரியர் நெறிகளை மீறி வாழும் நாரணப்பா, மஹா பலன் இவர்களுக்கிடையேயான மதிப்பீட்டை நாவல் முன்வைப்பதாக நான் காண்கிறேன். அத்வைதத்தை நெறியாகக் கொண்ட மற்ற தெய்வங்களை வணங்கும் ஸ்மார்த்தர்கள் ஒரு படி கீழாகவே பார்க்கப்படுகிறார்கள். இவர்களுடனான தத்துவ உரையாடல் எதுவும் நாவலுக்குள் இல்லை. மேலும் நெறிகளை மட்டும் கடைபிடித்து அதனால் வைராக்கியம் கொண்டு தன்னை மேல்நிலைக்கு ஏற்றிக்கொள்வது அனேகமாக சாத்தியம் இல்லை என்றும் இந்நாவல் வாதிடுவதாக நான் கருதுகிறேன்.
சமூக ஏற்பு மத ஏற்புக்காக ஆசாரங்களை ஒழுகி வாழும் ஒரு வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கும் நாவல் என்றே சம்ஸ்காராவை நான் நினைக்கிறேன். இன்று சமூக ஏற்பு ஆசாரங்களை கைக்கொள்ளுதல் மத ஏற்பு போன்ற தேவைகள் இரண்டாம் பட்சமாக அமைந்துவிட்ட சமூக சூழ்நிலையில் இந்நாவலின் பேசுபொருள் காலத்தால் புறந்தள்ளப்பட்ட ஒன்று என்றே எண்ணுகிறேன்.
எழுத்தாளர் சு.வேணுகோபால் கருத்தரங்கில் ‘வெண்ணிலை’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட சிற்றுரை
சமீபகாலமாக அடிக்கடி ஒரு காணொளியைக் காண நேர்கிறது. தின்பண்ட பாக்கெட்டுகளால் நிரம்பியுள்ள ஒரு பெரிய இடத்தில், கிரேன் போன்ற அமைப்பின் உதவியுடன் ஒரு மனிதன் உள்ளிறக்கப்பட்டு, சில நிமிட இடைவெளியில் மீண்டும் வெளியெடுக்கப்படுகிறான். கிடைத்த சில நிமிட அவகாசத்தில், தன்னால் இயன்ற அளவுக்கு தின்பண்டங்களைத் திறனுக்கேற்ப சேகரித்துக் கொள்ளலாம். மலை போல குவிந்திருப்பினும், எடுத்து வரக்கூடிய அளவென்பது அவனது திறனைப் பொருத்தது மட்டுமே. மொத்தம் 23 சிறுகதைகள் கொண்ட வெண்ணிலை எனும் இத்தொகுப்பைப் பற்றிய என்னுடைய வாசிப்பனுபவமும் மேற்ச்சொன்ன சம்பவத்துக்கு இணையானதே.
தொகுப்பின் பெரும்பாலான கதைகள், மாறிவரும் காலசூழலினால் விவசாய சூழலில் ஏற்படும் மாறுதல்களைப், அதனூடே மனித மனதின் இருமையை, வாழ்க்கைப்பாடுகளை. எதையுமே செய்யவியலாத கையறு நிலையை, உறவுச்சிக்கல்களை இவை எல்லாவற்றுக்கும் மேலாக மானுடத்தின் மேன்மை வெளிப்படும் தருணங்களை, துளிர்விடும் சிறு நம்பிக்கையின் ஒளிக்கீற்றை பேசுபவை.
ஒரு நிலப்பரப்பின் தன்மை, நிலவும் தட்பவெப்ப சூழல், வாழ்க்கைமுறை அதில் வாழும் மனிதர்களின் குணாதிசயத்தில் கொஞ்சம் செல்வாக்கு செலுத்தக்கூடும். செழிப்பான காலகட்டத்தில் நாமே மறந்துபோன நம் மனதின் இருண்ட பகுதியை (Grayness) வறுமை வெகு சுலபத்தில் வெளிக்கொண்டுவந்துவிடும். ஓரிரு கதைகள் தவிர எல்லாக் கதைகளுமே தென் தமிழக, குறிப்பாக மதுரை, போடியைச் சுற்றியுள்ள விவசாய கிராமங்களைக் களமாகக் கொண்டவை. போலவே வறண்டு போன பூமியை அதன் வாழ்வைச் சித்தரிப்பவை. குறிப்பாக சில கதைகளின் மையப்பொருளாகவே அவை அமைந்துள்ளன.
தொகுப்பின் முதல் கதையான உயிர்ச்சுனை, மறுபோர் ஓட்டியும், நீர் கிடைக்கப்பெறாத கண்ணப்பரின் ஆற்றாமையைப் பேசுகிறது. கோக கோலா குளிர்பான நிறுவனம் சுற்றுவட்டார வேளாண் நிலங்களின் நீரையும் உறிஞ்சிக்கொண்ட கயமை கூறப்பட்டாலும், கண்ணப்பரின் பேரன் நிதின் குறித்த விவரணைகள், மறைமுகமாக அவனது பங்கு நீரும் சேர்ந்தே களவுபோயிருக்கும் வலியைச் சொல்கின்றன. முதல் மகளிடம் தான் பட்டிருக்கும் கடன், இரண்டாம் மகளின் திருமணம் இவை எல்லாவற்றையும் தாண்டி கண்ணப்பர் “எம் பேரன்” எனச்சொல்லி உடையும் இடம் இக்கதைக்கு இன்னொரு பரிமாணத்தைக் கொடுக்கிறது.
இத்தொகுப்பின் ஆகச்சிறந்த கதைகளுல் ஒன்றான “புத்துயிர்ப்பு” வறட்சி நேரடியாக சம்சாரியின் வாழ்க்கையில் நிகழ்த்தும் அவலங்களைப் பேசுகிறது. நல்லவனாகவும் திறமைசாலியாகவும் அறியப்பட்ட கோபால் வீட்டில் இரு நிறைமாத கர்ப்பிணிகள். ஒன்று அவன் மனைவி சாந்தா. இன்னொருவள் அவன் மகளைப் போலக் கருதும் பசுமாடு லட்சுமி. காடு மலை என எங்கு அலைந்தாலும் தீவனம் கிடைக்காத சூழலிலும் மாட்டை விற்க மறுக்கும் கோபால், தன் மனைவியின் வளையல்களை அடமானம் வைத்து பணம் புரட்டிய போதும் எங்கும் தீவனம் வாங்க முடியாமல் போகிறது. வேறுவழியில்லாமல் பக்கத்து வீட்டு ராமசாமி கவுடரின் தொழுவத்திலிருந்து சில கட்டு தீவனங்களைத் திருடும்போது அவர்களிடம் சிக்கிக்கொள்கிறான். அடுத்த நாள் நடக்கவிருக்கும் அவமானமும், எதுவுமே செய்யவியலாத கையறு நிலையும் அவனை தற்கொலை நோக்கித் தள்ளுகின்றன. பணம் புரட்ட முடிந்த பின்னரும் தீவனம் கிடைக்காத கொடுமையை இக்கதை பேசுகிறது. இதைப் போலவே, மெய்பொருள்காண்பதுஅறிவு கதையில், பரமசிவம் வேளாண் கூலி வேலையினால் படும் பாடு வறட்சியின் கோரத்தைச் சுட்டுகிறது.
தன் கதைகளில் திரு.சு.வே. கட்டமைக்கும் பாத்திரங்கள் வலுவான நம்பகத்தன்மை கொண்டிருக்கின்றன. வெகுசுலபமாக நாம் பார்த்திருக்கக்கூடிய ஒரு விவசாயக்கூலியை, வயதான பாட்டியை, தனித்திருக்கும் மாணவனை நம் நினைவில் மீட்டெடுக்க உதவும் வலுவான சித்தரிப்புகள் ஒவ்வொன்றும்.
கூருகெட்டவன் கதையின் உடையாளியும், வயிற்றுப்புருசன் கதையின் பொம்மையாவும் இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்தவர்கள். இருவருமே ஊருக்கென நேர்ந்துவிடப்பட்டவர்கள். ஆனால், உடையாளிக்கு ஒரு குடும்பமும், தான் ஏய்க்கப்படுவது பற்றிய பிரக்ஞையும் இருக்கிறது. ஆனால் அதுவும் அற்றவன் பொம்மையா. அவனைப் பொருத்தமட்டில் அது அவன் ஊர், அவ்வூரின் தோட்டமோ வெள்ளாமையோ எதுவாகிலும் அது அவன் பொறுப்பு. கதையில், பொம்மையா மனம் உடைந்து கண்ணீர் விடுவது ”நீ யாரு?” எனக் கேட்கப்பட்ட பதில் தெரியாத கேள்வியால் மட்டுமே. அதைத் தவிர வேறெந்த வசவுகளும், பேச்சுகளும் அவனைத் தீண்டுவதேயில்லை. மாறாக, உடையாளி தன் மனைவியுடன் ஜெயக்கிருஷ்ணன் கொண்டிருக்கும் உறவினால் பெரிதும் பாதிக்கப்படுகிறான். அடுத்த நாள் அதைக் கடக்கும் மனதோ அல்லது சூழலோ மட்டுமே அவனுக்கு வாய்த்திருக்கிறது. ஒருவகையில் இவ்விருவருக்கும் இடையே நிற்கும் கதாப்பாத்திரமாக திரு. நாஞ்சில் நாடன் அவர்களின் எடலக்குடி ராசாவைச் சொல்லலாம்.
தொகுப்பின் பெரும்பாலான பெண்கள் தாய்மையின் குறியீடாகவே இருக்கிறார்கள். விதிவிலக்கான ஒருவர் பேரிளம்பெண் கதையின் ஈஸ்வரி. கர்ப்பிணியான தன்னுடைய மகள் வீட்டில் இருக்கும்போது, ஈஸ்வரி ஒரு சீர் வீட்டுக்குச் செல்கிறாள். அவ்விசேஷ வீட்டில் அனைவரையும் ஈர்க்கும்படியான ஆடை அலங்காரங்கள், பாவனைகளை மேற்கொள்கிறாள். அதன் தொடர்ச்சியை மண்டபத்திலும் நிகழ்த்தும் ஆசைக்கு ஒரு தடை வருகையில், அந்தத் தடையின் வலியைக் காட்டிலும் பொய்த்துப்போன தன் ஆசை ஈஸ்வரிக்கு துன்பமளிக்கிறது. இதே இடத்தில் ஒரு ஆண் இருப்பின் அவன் சந்திக்க வேண்டியிராத சங்கடங்கள் இவை எனும்போது ஈஸ்வரியின் மீது கொஞ்சம் பரிவு எழுகிறது.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவன் வெளிக்காட்ட விரும்பாத அல்லது அவனுக்கே தெரியாத ஒரு முகம் இருக்கும். அதை இக்கட்டான ஒரு சந்தர்ப்பம் எளிதில் வெளியே கொண்டுவந்துவிடும். அப்படி சந்தர்ப்பங்கள் மனிதனை தங்கள் கையில் எடுத்துக்கொள்ளும் கதைகளும், சந்தர்ப்பங்களின் இக்கட்டுகளால் நேரும் உறவுச் சிக்கல்களின் பரிமாணங்களும் இத்தொகுப்பில் உண்டு.
சந்தர்ப்பம் கதையில் இரண்டு விதமான மாணவர்கள் காட்டப்படுகின்றனர். துவக்கம் முதலே கெத்தாக வளையவரும் ஜீவா, நண்பர்களால் புள்ளப்பூச்சி என்றழைக்கப்படும் கதிரேசன். நீச்சல் தெரியாத ஜீவா, படிக்கட்டுகளைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் மிதப்பதும், பேருத்து நிலையத்தில் ஒரு பெண்ணின் மானம் பங்கப்படும்போது கதிரேசன் முதல் எதிர்ப்பைக் காட்டுவதும் இயல்பில் வெளிப்படும் அவர்களின் குணாதிசயத்தின் நேரெதிர் நிலையாகும்.
தங்கைகளுக்காக தன் வாழ்வை அழித்துக்கொண்ட அண்ணன் அவனது தங்கைகளால் தெய்வமாகவே மதிக்கப்படுகிறான். ஒவ்வொரு தங்கைக்கும் திருமணம் முடித்துவைக்கும் அண்ணன் தன் திருமணத்தைப் பற்றிய எண்ணமே இல்லாதிருக்கிறான். இறுதியாய் மிஞ்சும் தங்கையிடம் மூத்தவர்கள் திரும்பத்திரும்பச் சொல்லும் வாக்கியம் அண்ணனை நல்லாப் பாத்துக்க என்பதாகவே இருக்கிறது. நள்ளிரவு சீண்டலில் விழிக்கும் தங்கையை நோக்கி அண்ணன் கேட்கும் ”அக்கா அவுங்க ஒண்ணும் சொல்லலியா?” எனும் கேள்வியில் முடிகிறது கதை. இப்படி சரி / தவறு, முறை / பிறழ்வு எனும் இருமைகளுக்குள் அடக்கிவிட முடியாத கோணங்களைக் கொண்ட கதை ”உள்ளிருந்துஉடற்றும்பசி”.
உறவுச்சிக்கல்களின் இன்னொரு எல்லையில் நிற்கும் கதை “கொடிகொம்பு”. கணவன் விஜயன், ஒரு குடிகாரன். காமம் மட்டுமல்ல காதலும் அவனிடமிருந்து மறுக்கப்படும் மனைவி வாணி. ஆறுதல் கொள்ள ஏதுமற்ற உறவே வாணியை மாற்றம் தேட வைக்கிறது. ஒன்றுவிட்ட கொழுந்தனார் பாஸ்கர் மீதான அவளது ஈர்ப்பு, “ஹேமாச் சிறுக்கியால்” தடைபடுகிறது. இந்த வயதிலும் ஒயில் கும்மியில் இளவட்டங்களுக்கு சரிக்கு சரியாய் நின்று விளையாடும் மாமனார் பொன்னய்யா, அவரை ரசிக்கும் கனகத்தின் மீது வாணி கொள்ளும் எரிச்சல், என கொஞ்சம் கொஞ்சமாய் தனக்கான மாற்றுப்பாதையைக் கண்டடையும் வாணி தன் ஆசையை வெளிப்படுத்தும் விதம் மிக அருமையாகக் கையாளப்பட்டுள்ளது.
இவ்விரு கதைகளும், கையாளும் பிரச்சனையின் தீவிரம் உறைக்காத வண்ணம் அடங்கிய குரலில் வெறுமனே சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனாலும், பாத்திரங்களின் செயலுக்கான நியாயம் மிக வலுவாக வெளிப்பட்டிருக்கும் கதைகள் இவை. ஆண்-பெண் உறவுகளுக்குள் இயல்பாக நிகழும் சிக்கல்கள் “கிடந்தகோலம்” கதையிலும், பெண்களுக்கு இந்த சமூகத்தில் இருக்கும் இடம் “புற்று” கதையிலும் சொல்லப்பட்டிருக்கின்ற போதிலும் என் மனதில் ஆழ்ந்த பாதிப்பை இக்கதைகள் உருவாக்கவில்லை.
இத்தனை சிக்கல்களை, வறட்சியை, மனித மனதின் இருமைகளை, வாழ்க்கை நம்மைக் கொண்டு நிறுத்தும் கையறு நிலையை இக்கதைகள் பேசினாலும், வெண்ணிலை எனும் இத்தொகுப்பை மிகமுக்கியமான ஒன்றென நான் கருதும் அம்சம், இத்தொகுப்பின் கதைகள் வாயிலாக திரு. சு.வே. நமக்குக் காட்டும் மானுடத்தின் சின்ன ஒளிக்கீற்று, போலவே வாழ்க்கை மீது சிறு நம்பிக்கை கொள்வதற்கான சாத்தியக்கூறுகள்.
உதாரணமாக, புத்துயிர்ப்பு கதையில் மிகக்கொடும் வறட்சியினால் தற்கொலைக்கு முயற்சிக்கும் கோபால் பிழைக்க இருக்கும் சிறு வாய்ப்பையும், பசியால் தவிக்கும் அவனது பசு லட்சுமிக்கு, கனகராஜின் அம்மா மூலம், குறைந்தபட்சம் அன்றைக்காவது கிடைத்த தீவனத்தையும் சொல்லமுடியும். ஆனால், வாழ்வின் மீதான் நம்பிக்கையின் ஓர் உச்ச தருணம் கோபாலின் மனைவிக்கு பிறக்கும் பெண்குழந்தையை வறட்சியால் தவிக்கும் அக்கிராமமக்கள் “வான் பொழிய மண் செழிக்க வாழையடி வாழையென வந்தது குழந்தை” என வரவேற்பது. இம்முடிவு தரும் மன எழுச்சி அதற்கு முந்தைய கணங்களின் துயரங்களை கடக்கச்செய்வது. தனிப்பட்டமுறையில் எவரையும் தெரியாத நகரத்துக்கு வந்த சில மாதங்களிலேயே, தன் தகப்பனின் மரணத்தை எதிர்கொள்ளும் இளம்பெண்ணுக்கும் ஏதோவொரு ரூபத்தில் மானுடத்தின் கடைப்பார்வை கிடைப்பதற்கான சாத்தியத்தைப் பேசுகிறது “வெண்ணிலை” கதை.
இவ்வகைக்கதைகளின் இன்னுமோர் உச்சம் என சொல்லத்தக்க கதை “அவதாரம்”. உடல் குறைபாடுள்ள குழந்தையை அவமானத்தின் சின்னமாகக் கருதும் நாகரீகத்துக்கு எதிரிடையாக, அதைபோன்றதொரு குழந்தையை குலதெய்வமென கொண்டாடும் காடர்களைக் காட்டுகிறது இக்கதை. அதன் நீட்சியாக, உப்புச்சப்பில்லாத பிணக்குகளை மறந்து கர்ப்பவதியான தன் மனைவியின் வயிற்றை முத்தமிட என்னும் கணவனின் மனதில் ஏற்படும் மாற்றத்தில் அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்துவிடக்கூடும்.
காளீஸ்வரன்
இறுதியாக, இத்தொகுப்பில் இருந்து நான் எடுத்துக்கொள்வதென்ன எனும் வினாவுக்கு “நிரூபணம்” கதையிலிருந்து விடை சொல்லமுடியும். தன் மகன் எபி நன்றாகப் படிக்கவேண்டும் என தேவாலயத்துக்கு அழைத்துப்போகிறாள் கிறிஸ்டி. பிராத்தனையில் லயித்திருக்கும் அன்னையிடமிருந்து நழுவி காணிக்கைப் பணத்துக்கு பிஸ்கட் வாங்கி பிச்சைக்காரனுக்குத் தருகிறான் எபி. யாரும் சுலபத்தில் கண்டுகொள்ளமுடியாத மறைவான இடத்தில் இருக்கும் அப்பிச்சைக்காரன் இரு சொற்றொடர்களை ஆங்கிலத்தில் கூறுவான். இரண்டாவது சொற்றொடர் “He Lives with Children”. அவன் கூறும் முதல் சொற்றொடர் நமக்கானது, “Jesus Christ never fails to feed His followers”.
‘களவு போகும் புரவிகள்’ சிறுகதைத் தொகுப்பு குறித்து சொல்முகம் – சு. வேணுகோபால் கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட சிற்றுரை.
நம் அன்றாட வாழ்வில் சற்று அறிந்திருக்கக் கூடிய, கேள்விப்பட்டிருக்கக் கூடிய, மேலோட்டமாக கவனித்திருக்கக் கூடிய அல்லது நம் தீவிர கவனத்தை ஈர்த்திருக்கக் கூடிய மனிதர்கள் என பலதரப்பட்டவர்களை தன் பாத்திரங்களாக உள்ளடக்கியது சு. வேணுகோபால் அவர்களின் களவு போகும் புரவிகள் சிறுகதைத் தொகுப்பு. அப்பாத்திரங்களில் சிலராக நம்மை நாம் உணரவும் கூடும். தன் குழந்தையை தெருவில் மற்ற சிறுவர் சிறுமியரோடு விளையாடக்கூடாது என்று சொல்லும் அம்மா, பூங்காவில் பேருந்து நிலையங்களில் அல்லது வேறு எங்கேனும் தன் வாடிக்கையாளரை கண்டுகொள்ளும் விலைமகள், போதைப் பொருளுக்கு அடிமையாகி வேறொன்றாகி விட்ட இளைஞன், என்ன ஆனபோதும் விடாப்பிடியாக விவசாயத்தைக் காதலிக்கும் விவசாயி, மக்களிடம் எரிச்சல்படுகிற அல்லது சிரித்துக் கொண்டே தம் சக ஊழியர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே வேலை பார்க்கும் வங்கி ஊழியர்கள், காதல் திருமணம் செய்து உறவினர் தொடர்புகள் இன்றி தனித்து வாழும் இளம் தம்பதியர், காவலரின் கடுமையை எதிர்கொள்ளும் எளியவர், செம்பட்டைத் தலையுடன் கிழிந்த அழுக்கு உடையுடன் காலில் பாலிதீன் கவர்களை செருப்பாக கட்டிக்கொண்டு கடும் வெயிலில் தனக்குத்தானே பேசிக்கொண்டு செல்லும் மனநலம் பாதிக்கப்பட பெண், உங்களுக்கு குத்துமதிப்பாக வைத்தியம் செய்யக்கூடிய பெயர் தெரிந்த டாக்டர், மனிதர்கள் மட்டுமல்ல நீங்கள் பார்த்திருக்கக் கூடிய பெரிய வேப்ப மரம், கால்நடைகள், என இத்தொகுப்பின் கதாபாத்திரங்கள் வெவ்வேறு வகையினர். வெவ்வேறு வகையினர் எனினும் அவர்களில் பலருக்கும் பொதுவான ஒரு ஒற்றுமையை உணர்த்துகிறது களவு போகும் புரவிகள். அவர்கள் தங்கள் புரவிகளை வாழ்வின் மாயங்களுக்கு பறிகொடுத்தவர்கள். தம் உண்மையுடனும் தீவிரத்துடனும் மட்டுமல்லாமல் இக்கதைகள் நடையிலும் கூட தேவைக்கு ஏற்ப புரவியைப் போலேவே செல்கின்றன என்று தோன்றுகிறது.
களவு போகும் புரவி கதையில் சௌடம்மன் கோவில் திருவிழாவையொட்டிய ஒரு தொன்மைக் கதை கூறப்படுகிறது. அரச குதிரை லாய அதிகாரியான கதிரய்யாவிடம் தன் குதிரையை இளைப்பாற்றிக் கொள்ள ஒருநாள் மட்டும் இடம் கேட்டு வருகிறான் யதுசா என்ற அந்நியன். அவன் குதிரைக்கு லாயத்தில் இடம் மறுக்கும் கதிரய்யா தன் எஜமானருக்கு இருக்கும் வழக்கம் ஒன்றைச் சொல்கிறார். லாயத்தின் நான்கு மூலைகளிலும் அமைந்திருக்கும் மேடைகளில் எந்த ஒன்றில் ஏறிநின்று பார்த்தாலும் அவர் கண்களுக்கு பன்னிரண்டு குதிரைகள் தெரிய வேண்டும். அவ்வாறே தான் வைத்திருப்பதாகச் சொல்கிறார் கதிரய்யா. யதுசா அதைப் பற்றி தான் பார்த்துக் கொள்வதாக கூறுகிறான். அவனது மரியாதையான பேச்சிற்காகவும் அவன் தரும் சன்மானத்திற்காகவும் அவன் மீது தோன்றும் பரிவினாலும் அவனது குதிரையை லாயத்தில் இருத்திக்கொள்ள அனுமதி அளிக்கிறார் கதிரய்யா. தன் குதிரையை லாயத்தில் சேர்க்கும் அவன் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் பன்னிரண்டு குதிரைகள் கண்ணில் தெரியும்படி அமைக்கிறான். அவன் மாயவித்தைகளை அறிந்தவனாக இருக்கிறான். பின்னர் மலைப்பாதையில் திரும்பிச் செல்லும் யதுசா எட்டு குதிரைகளை கொண்டு செல்கிறான் யதுசா. கெஞ்சும் கதிரய்யாவிடம் லாயத்தில் சென்று மூலை மேடைகளில் நின்று பார்த்து விட்டு வரச்சொல்கிறான் அதுவரை தான் காத்திருப்பதாக சொல்கிறான். கதிரய்யா சென்று ஒவ்வொரு மூலையில் இருந்தும் பார்க்க பன்னிரண்டு குதிரைகள் தெரிகின்றன. யதுசாவிடம் சென்று தெரிவிக்கும், அஞ்சும் கதிரய்யாவிடம் தன் பையிலிருந்து வெள்ளிக் காசுகளை அள்ளி வீசிச் செல்கிறான் யதுசா. நரிதனை பரியாக்கி தன் அடியவனைக் காத்தருளும் பொருட்டு ஆணவம் நீங்கும் பொருட்டு இறைவன் செய்தது போன்றதல்ல இம்மாயம். இடமளித்தவனை, அவன் பலகீனங்களைக் கொண்டு கொள்ளையடித்த அந்நியன் செய்த மாயம்.
இத்தொகுப்பின் சில கதைகளிலும் அவற்றின் மையக் கதைமாந்தர்களுக்கேயான புரவிகளை மாயம் காட்டி பறித்து செல்ல அவர்களுக்கேயான யதுசா இருக்கிறார். அந்த யதுசா ஒவ்வொருவருக்கும் தனி ஒருவனாக அல்லது சில நபர்களாக, உறவுகளாக, தனிப்பட்ட சூழ்நிலைகளாக, தன் முனைப்பாக, சமூக பொருளாதார காரணிகளாக, மொத்தமாக வாழ்வின் மாயமாக இருக்கிறான். அவர்கள் பறிகொடுத்த புரவிகள் எங்கோ இருக்கின்றன அல்லது அவர்களுக்கு இறந்துவிட்ட அவை அவர்களது நினைவில் மட்டும் வாழ்கின்றன. அம்மாவின் விருப்பங்கள் சிறுகதையில் வரும் நவீன் என்ற சிறுவனுக்கு அவன் தன் நண்பர்களுடன் தெருவில் விளையாடும் இன்பத்தைப் பறித்து பொம்மைகள் நிறைத்து வீட்டிலே விளையாடச் சொல்கிறாள் அவன் அம்மா. அவள்தான் அவனது யதுசா.
மண்ணைத் தின்றவன் கதையில் விவசாயத்தை பெரும் காதலுடன் மேற்கொள்ளும் அதன் நாயகனுக்கு விவசாயம் செய்பவர்களை பெரும்பாலும் நட்டமடையவே செய்யும், இங்குள்ள பொருளியல் சிஸ்டம் யாதுசாவகிறது. மண்தான் காரணம் என்று அபாண்டம் கூற எனக்கு விருப்பமில்லை. காரணம் அவன் மண்ணை நேசிப்பதை, விளையும் வெங்காயத் தாள்களை அவன் முத்தமிடுவதை, அவன் காதலை ஆசிரியர் கூறும் விதம் – அவன் படும் பாடுகள் – இடும் உரங்கள், மருந்துகள். பயிரிடும் நுணுக்கங்கள் என விவரிப்பு எக்காரணம் முன்னிட்டும் மண்ணைப் பழிக்கக் கூடாது என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. அவன் விவசாய வெற்றிக் கனவுகள் உண்மையில் மாயப் புரவிகளாகி காற்றில் மறைகின்றன.
உருமாற்றம் கதையின் நாயகர் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி. அந்நாளின் நாட்டுப்பற்றின் அசலான ஒரு மனிதர். சில ஆண்டுகள் சிறையில் கழித்தவர். காமராசரின் அணுக்கம் பெற்றவர். சுத்திரத்தின் பின் வழங்கப்பட்ட தியாகிகளுக்கான சலுகைகைள் அனைத்தையும் மறுத்தவர். வயதானபோது காலத்தின் சூழலின் மாற்றங்களை வெளியே நாட்டின் அரசியலிலும் குடும்பத்தில் மகன் மருமகள் பேரன் பேத்தி என அடுத்த தலைமுறைகளிலும் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பவர். அவரது லட்சியங்கள் கடந்த காலத்தவை ஆகிவிட்டன. அவர்களது ஆர்வங்களும் ஆசைகளும் வேறு. அவரது நீலவாணன் என்ற பேரன் தன் பெயரை ஸ்டயிலாக இருக்க வேண்டும் என்று ஆகாஷ் என்று மாற்றிக் கொள்கிறான். சினிமாவில் சேர்ந்துவிட ஆர்வம் கொண்டிருக்கிறான். பேத்தி ஆங்கில உச்சரிப்பு சரியில்லை என்று தன்னை பெண்பார்க்க வரும் பையனை நிராகரிக்கும் அளவிற்கு ஆங்கிலத்தின் மீது அக்கறை கொண்டவளாக இருக்கிறாள். அவர் எந்த கட்சியில் இருந்து நாட்டு விடுதலைக்கு பாடுபாட்டாரோ அதே கட்சி அவருக்கு உவப்பில்லாத உலகமயமாக்கலைச் செய்கிறது. மனத் தவிப்பும் குழப்பமும் என அவர் நாட்கள் செல்கின்றன. அவர் சுந்தரதினத்தில் தியாகி என்ற முறையில் தொலைகாட்சிக்காக நேர்காணல் செய்யப்படுகிறார். அதன் வாயிலாக ஒரு பிரபல சினிமா இயக்குனரின் அறிமுகத்தையும் நன்மதிப்பையும் அவர் பெற நேர்கிறது. அவரை அந்த இயக்குனர் விருந்துக்கு அழைக்கிறார். விருந்து முடிந்து புறப்படும் சமயம் ஒரு உதவி வேண்டும் என்று கேட்க, ஆர்வமுடன் முன்வரும் இயக்குனரிடம் அவர் தன் பேரனுக்காக சினிமா வாய்ப்பு கேட்க, இயக்குனரின் முகம் மாறுபடுகிறது. பல ஆண்டுகளின் லட்சியவாதத்தின், தன்னல மறுப்பின் அவரது புரவியை காலமாற்றத்தின் மாயம் என்னும் யதுசா களவாடிச் செல்கிறது.
போலவே ‘சங்கிலி’ என்னும் கதை அதன் நாயகன் தன் தந்தையின் அதிக பவுன் வேண்டும் என்ற ஆசையால் காலதாமதமான திருமணத்தால் தன் சிற்றின்பத்தை அதற்கான வயதைத் தொலைக்கிறான். வட்டத்திற்குள்ளே என்ற கதையின் நாயகி சுரண்டல் புத்தியும் அற்பத்தனமும் கொண்ட அவள் கணவனால் அவள் கைத்திறன் கலைத்திறன் வெளிப்படும் வேலையை கூடுதல் சம்பளத்திற்காக விடுகிறாள். அலைச்சலும் சுவாரஸ்யம் இல்லாததுமான வேலைக்கு செல்கிறாள். தன் மட்டமான இரக்க மற்ற கணவனையும் வேலையையும் சகித்துத் கொண்டு தன் பழைய வேலையை எண்ணி ஏக்கம் கொள்கிறாள். சாப நினைவுகள் கதையின் நாயகி மனநலம் பாதிக்கப்பட்டவளாக எச்சில் இலைகளின் உணவைதின்று தனக்குத்தானே ஓயாது பேசி சுற்றித் திரியும் ஒரு பெண். அவள் மிகவும் திறமையான ஒரு, முன்னாள் ஆராய்ச்சி படிப்பு மாணவி. அவளது கல்லூரி நண்பர்கள் அதிர்ச்சியுடன் அவளை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். ஒரு நண்பனின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்கள். பின் அவளது வீட்டை அவளது உறவினரை கண்டுபிடிக்க முடியாமல் மனநல காப்பகத்திற்கு அனுப்புகிறார்கள். புத்திசாலி மாணவியான அவளது எதிர்காலத்தை களவாடியது யார்? அது சொல்லப்படவில்லை யாரோ சிலர் அல்லது அவளது குடும்ப சூழல் அல்லது அவளது தன்னைப்பற்றி எவரிடமும் சொல்லாத தன்முனைப்பு.
‘மாயக்கல்’ கதை பன்றி வளர்க்கும் மூக்கம்மாவை அவளது மகன் பெத்தண்ணணை போலீசால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் அவர்கள் துயரைச் சொல்கிறது. தற்கொலை செய்துகொள்ளும் பெத்தண்ணணை மாயக்கல்லாக அவளின் கற்பனைக்குத் தருகிறது. அவன் ஒரு தொன்மமாக அநீதி அழிக்கும் தெய்வமாக எழக்கூடும். அது அவளது விருப்பமும் கூட. எளிய மக்களின் அன்றாட வாழ்வையும் அபகரித்துச் செல்லும் ஈவிரக்கமற்றதன்மை எவ்வாறு தோன்றுகிறது. வேம்பு கதை பேடண்ட் ரைட் மூலமாக வெளிநாடு கவர்ந்து கொள்ளும் உள்ளூர் மக்களின் உரிமையை மெல்லிய அங்கதத்துடன் பேசுகிறது. அமெரிக்கா இந்தியாவை ஐநா மூலமாக நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுகிறது. சிறிய அந்த கிராமத்திற்கு தன் அதிகாரிகளை அனுப்புகிறது.
வேம்பு – கீழாநெல்லி மட்டுமல்ல வேறு பலவும் இருக்கலாம். யோகாசனங்களும் மூச்சுப் பயிற்சியும் வேறு பெயரில் வெளிநாட்டு பிராண்ட் ஆகலாம். இந்தியர்களுக்கு தங்களுக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லத் தெரியவில்லை என்று பழைய பேச்சு ஓன்று உண்டு. இன்று இந்தியர்களுக்கு தங்களை உரியமுறையில் உலக சந்தைப்படுத்திக்கொள்ள இன்னும் தெரியவில்லை என்று சொல்லத் தோன்றுகிறது.
‘வெகுதூரம் விலகி’ ஒரு டாக்டரின் கதையை சுவாரஸ்யமாக சொல்கிறது. அவர் தன்னளவில் எதையும் தொலைக்கவில்லை. ஆனால் அக்கதை நாம் அனைவருக்கும் தொலைத்து வெகுதூரம் விலகி வந்துவிட்ட நமது பழங்குடி மருத்துவ முறைகளைச் சொல்கிறது. வெற்றிகரமான நமது பூர்விக மருத்துவத்தின் செல்வங்களை இழந்து மூர்க்கமாக திணித்துக் கொண்டுவிட்ட ஆங்கில மருத்துவத்தை – அதன் பேரில் நிறுவப்பட்ட சுரண்டலை சுட்டிக் காண்பிக்கிறது. அதே சமயம், எளிய பொருளைப் பெற்றுக்கொண்டு அரிய தொண்டினைச் செய்யும் அந்த மலைக்குடி மருத்துவர் மனம் கவர்கிறார். இந்த சிறுகதைத் தொகுப்பின் எல்லாக் கதைகளிலும் என் ரசனையின் அடிப்படையில் சொல்வதென்றால் வெகுதூரம் விலகி சிறுகதையைச் சொல்வேன். சரி எல்லா கதைகளுமே ஏதோவொரு வகையில் புரவிகளைத் தொலைத்தவர்களுடையது தானா என்றால் அப்படியில்லை.
இங்கு வேறு இரண்டு அம்சங்களையும் குறிப்பிட வேண்டும். மாயமும் நகைச்சுவை உணர்வும். தருணம் கதையில் வரும் கஞ்சா அடிமையாகி கோமாவில் இரண்டாண்டுகள் கழிக்கும் இளைஞன் கோமாவில் இருந்து வெளிவந்த பின் தன் அனுபவத்தில் காலத்தின் இரண்டு பக்கங்களில் எட்டிப்பார்க்கிறான் எதிர்காலத்தில் நடக்க இருப்பவற்றின் ஒத்த நிகழ்வுகளை நிகழ்காலத்தில் காண்கிறான். பின் ஊரில் மதக்கலவரம் நடந்து கொண்டு இருக்கும் சூழலில் நூற்றாண்டுகள் முந்தைய நிகழ்வுகளில் தன்னைக் காண்கிறான். வேம்பு கதையின் வைடூரிய வண்டு தன் அழகின் மாயத்தால் மண்ணை விண்ணுலகுடன் பிணைக்கிறது.
‘உடம்பு’ கதையில் ஜெர்மன் ஊசியால் வயிற்றுக்குள்ளேயே பெரிதாக வளர்ந்துவிட்ட கன்றை பிரசவிக்க முடியாமல் வலியால் துடிக்கும் பசுவை – அதன் வயிற்றிலேயே இறந்துவிடும் கன்றின் காலில் கயிறு கட்டி இழுத்து எடுக்கப்படும் காட்சியை. அப்பசுவின் வேதனையை வாசிப்பவர்கள் பதறும் விதத்தில் சொல்லும் ஆசிரியர் சங்கிலி கதையில் – அப்பாவின் பொன் ஆசையால் தன் வயதைத் தொலைத்த கதைநாயகன் -அவன் சோகத்திற்குள் அங்கத்ததை இழையோடவிட்டிருக்கிறார். கதை முதலிரவின் முயக்கத்தில் தொடங்குகிறது. தன் தோல்விகரமான அந்த முயக்கத்தின் சோகத்துடன் பின்னிரவில் மொட்டை மாடியில் மல்லாக்கப்படுத்து விண்மீன்களைப் பார்த்தவாறே எண்ணங்களை அசைபோடுகிறான். முன்பு திருணம் முடிந்து பார்ட்டி தந்த நண்பன் ஒருவனை நினைவு கூறுகிறான். நண்பர்களுடன் போதையில் அரட்டை அடிக்கும்போது கூட தவறியும் தன் முதலிரவு பற்றி வாய்திறக்காத அவனை எண்ணுகிறான். அவர்களது மற்றும் தன்னுடைய சிற்றன்பம் குறித்த பில்டப்கள். பிற தருணங்கள் – கடும் வற்புறுத்தலுக்குப்பின் பசுவை கூடிவிட்டு சோர்ந்த வயதான அந்த காளை நினைவுக்கு வருகிறது, கூடவே பசுவை துரத்திச் செல்லும் இளம் காளைகள் இரண்டு. அவன் நிற்கும் பேருந்து நிறுத்தத்தின் புளியமரம் இலைகள் மிக குறைந்து காய்ந்து வயதானதாக இருக்கிறது. பேருந்தில் ஏறிய பின் கவனிக்கிறான் அவன் ஏறிய பேருந்து மிகவும் புகை கக்கிக்கொண்டு நிதானமாக பயணிக்கும் தள்ளாத வயதான பேருந்து பிற இளம் பேருந்துகள் அதை சத்தமிட்டு ஒதுக்கி பாய்ந்து கடந்து செல்கின்றன.
வெகுதூரம் விலகி கதையில் தான் உண்மையிலே ஒரு டாக்டர் தானா என்று தனக்கே சந்தேகப்படும் டாக்டர். அவரது முதல் அறுவை சிகிச்சை – ஒன்றுமே இல்லாமல் நெஞ்சில் ஏற்பட்ட சாதாரண காயத்திற்காக வந்தவனை இதய வால்வு கோளாறு என்று பலநாள் அட்மிஷன் போட்டு பிறகு நெஞ்சு பிளந்து பிறகு மூடி அவனது உயிர் காத்த கடவுளாக அவர் அவனது உறவினரால் நோக்கப்படுவது. எக்ஸ்-ரே எடுக்க இரண்டு முறை வேறு வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு எக்ஸ்-ரேயில் நுரையீரலே இல்லாமல் இருக்கும் நோயாளி – ஒருவேளை சிவபெருமான் தான் தன்னை சோதிக்க நோயாளி வடிவில் வந்திருக்கிறாரோ என்று அஞ்சி – தனக்கு அப்படி ஒன்றும் அவ்வளவு பக்தி கிடையாதே என்று அவர் எண்ணுவது என புன்முறுவலுடன் வாசிக்கச் செய்கிறது. சவாலான கேஸ்களை கையாண்டதன் சுவாரஸ்யங்களை பகிர்ந்துகொள்ளும் டாக்டர் நண்பர்கள் – விபத்தில் வயிறு சற்று கிழிந்து குழந்தையின் நான்கு விரல்கள் வெளியே வந்து நீட்டிக்கொண்டிருக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணி பெண்ணின் சவாலான அந்த கேஸைக் கையாண்ட சம்பவத்தை பற்றி ஒரு டாக்டர் கூறுவது. குழந்தையை எப்படி விரல்களை உள்ளிழுக்கச் செய்வது என்று பல மருத்துவர்கள் போராடிக்கொண்டிருக்க வெளியே புகை பிடித்துக் கொண்டே சீரியசாக யோசித்தவாறே நடமாடிக்கொண்டிருக்கும் தலைமை மருத்துவர் சட்டென்று உள்ளே வந்து குழந்தையின் விரல்களில் தன் சிகரெட்டால் சூடு வைக்க குழந்தை தன் விரல்களை சட்டென்று உள்ளிழுத்துக் கொண்டு விடுகிறது. இதை பெருமிதத்துடன் ஒரு மருத்துவர் கூற பிற மருத்துவ நண்பர்கள் எல்லா மருத்துவ தர்க்கங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு வியந்து புல்லரிப்பது என சிரிக்காமல் இக்கதையைக் கடக்க முடியாது.
விக்ரம்
விரைந்தும் தீவிரத்துடனும் உண்மையான உணர்ச்சியுடன் மனிதரின், உயிர்களின் வலிகளை, பசியை, துயரை சொற்களால் உணர்த்தும் ஆசிரியர் சு.வேணுகோபால் அவர்களின் கதைகள் கருணையின் ஈரநிலத்தில் தம் வேர்களைக் கொண்டவை. அத்துடன் மாயாஜாலம் நிகழ்த்தக் கூடிய (யதுசா அல்ல பரிதனை நரியாக்கிய கருணையின் தலைவன் போன்ற) வண்ணமிக்க நகைச்சுவை உணர்வு ததும்பும் அவரது மற்றொரு முகத்தையும் களவுபோகும் புரவிகள் தொகுப்பு வெளிப்படுத்துகிறது. எங்களுக்கு அவரும் வேண்டும். இதை ஒரு வேண்டுகோளாக அவரிடம் வைக்கிறோம். களவுபோகும் புரவிகளை பின் தொடர்ந்த இந்த அனுபவத்திற்காகை அவருக்கு நன்றிகள்.
ஒரு நாவல் வாசிப்பு தியான அனுபவத்தை அளிக்க முடியுமா? எல்லா நாவல்களாலும் அல்ல. அரிதான சிலவற்றால் அவ்வாறு அளிக்க முடியும் விஷ்ணுபுரத்தைப் போல. கனவுகள் நம்மை மெய்மையின் கரையில் கொண்டு நிறுத்த முடியுமா? ஏன் முடியாது? மொத்த உலகை, வாழ்வை கனவுக்கு ஒப்பிட்டுதானே மெய்மையை சுட்டுகிறார்கள்? ஆனால் எல்லா கனவுகளும் அல்ல விஷ்ணுபுரத்தைப் போல ஒருசில மட்டுமே. அவை மெய்மைக்கு மிக அருகில் செல்பவை அங்கு தம்மை கலைத்துக் கொள்பவை. ஞானிகள் கலைஞர்களை, காவியங்கள் படைக்கும் மகத்தான எழுத்தாளர்களை பெரும் கவிஞர்களை பேணுகிறார்கள். ஏனெனின் இக்கனவுகளின் முக்கியத்துவம் அவர்கள் நன்கறிந்தது. இவை நம் சாதாரண விழிப்புக்கும் உறக்கத்திற்கும் இடையே வரும் கனவுகள் அல்ல, மாறாக நாமறிந்த அனைத்தையும் உறக்கம் எனக்கொண்டு மெய்மையை விழிப்பு எனக்கொண்டு அவ்விரண்டிடையேயான கனவுகள். ஒருவேளை விழித்தாலும் விழித்துக்கொள்ளலாம் அல்லது உறங்கிவிடலாம். மெய்மையின் எந்தவொரு வாய்ப்பும் இங்கு அங்கீகரிக்கப்படாமல் எவ்வாறேனும் பேணப்படாமல் இருந்ததில்லை. எந்தவொரு வாய்ப்பிலும் போலவே இதிலும் தவறவிடும் சாத்தியமும் உள்ளது. அது ஊழ் எனலாம் அல்லது உங்களுக்கான கதவு வேறொரு இடத்திலிருக்கிறது.
விஷ்ணுபுரம் உலகியல் உறக்கத்தைத் திரட்டி ஒரு கனவினை எழுப்புகிறது. அக்கனவினை மெய்மையை நோக்கி செலுத்துகிறது. கனவு எப்படியும் கலைய வேண்டியதுதான். எனினும் எச்சரிக்கை மேற்கொள்கிறது. கனவு இடையில் கலைந்து விடக்கூடாது. அது உரிய திசை சென்று கலைய வேண்டும். அது இப்புறம் முற்றிலும் உலகியலில் விழுந்துவிடக் கூடாது அதேசமயம் தானே மெய்மை என்று அது சொல்லவும் கூடாது. தானும் உலகியலே என்று தனக்கே சொல்லிக்கொண்டு அப்பால் சென்று மறைய வேண்டும். கௌஸ்துபம் – முழுவதும் – ஞான சபை விவாதங்கள் அதன் தர்க்கங்கள் – உரத்துப் பேசுவதில்லை. கௌஸ்துபம் ஆம் இது உலகியல் தான் ஆனால் விஷயம் அதுவல்ல என்கிறது. ஸ்ரீபாதம், கௌஸ்துபம் – இவ்விரண்டோடு ஒருவேளை நிறுத்தபட்டிருந்தாலும் விஷ்ணுபுரம் மகத்தான நாவல்தான். ஸ்ரீபாதத்தில் மலைமீது ஏறிச்சென்று அங்கு காஸ்யபரைக் காண்கிறார் சிற்பி. அங்கிருந்து அழிக்கப்பட வேண்டிய விஷ்ணுபுரம் சுட்டிக் காண்பிக்கப்படுகிறது. கௌஸ்துபத்தில் நிலத்தின் அடியில் இருந்து பிரதிபலிப்பாக காட்சிகள் பிறழ்ந்த விஷ்ணுபுரத்தை (ஞான சபையை) சித்தன் தன் சீடன் காஸ்யபனுக்குக் காண்பிக்கிறான். அது கடந்த காலத்தின் விஷ்ணுபுரம். மணிமுடி மிச்ச மீதம் இன்றி விஷ்ணுபுரத்தை முழுவதுமாக அழிக்கிறது. அம்மாபெரும் கோபுரங்களை மட்டுமல்ல அனைத்துவிதமான தன்முனைப்பின் கட்டுமானங்களையும்.
பலவிதங்களில் பலகோணங்களில் நோக்க முடியும். ஹரிததுங்கா மலைக்காக அதன் முகில்களுக்காக பொன்னிறம் பொழியும் வானுக்காக செந்நிற சோனாவிற்காக அதன் மீன்களுக்காக கோபுரத்தில் மோதிச் சரியும் பறவைகளுக்காக வைஜயந்தி என்னும் வெண்புரவிக்காக விண்ணுலகம் தொடும் கோபுரங்களுக்காக ஆலயத்தின் சிற்பங்களுக்காக மரமல்லி மரத்திற்காக மிருகநயனிக்காக மலர்களுக்காக – என இதன் அழகியலுக்காக – கவிதைக்காக இசைக்காக அங்கததிற்காக வாசிக்கமுடியும். இதன் தத்துவ விவாதத்தின் வழியாக இங்கு கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும், நோக்கப்படுபவற்றிக்காக – மெய்காண் வழிமுறைகளுக்காக என அக்கோணத்தில் நோக்க முடியும். உலகின் நிலையாமை கூறுவது எனச் சொல்லமுடியும் அமைப்புகளின் அதிகாரங்களின் தனிமனிதர்களின் அநீதி சுட்டுவது என கூறமுடியும். மிக சாதாரணமானவர்கள் அசாதாரணமானவர்கள் ஆக்கப்படும் புராணங்களின் கட்டுடைப்பு எனச் சொல்லமுடியும். வைணவம், தொல்குடி சமயம், பௌத்தம் அல்லது அதெல்லாம் அப்படியொன்றுமில்லை இது தாந்த்ரீகம் தாந்த்ரீகமே என முடியும் – நான் அப்படித்தான் சொல்லுவேன் அதுவும் சைவ யோக தாந்த்ரீகம்
புணர்ச்சியுள் ஆயிழை மேல் அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லாருக்கு
உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அது இது ஆமே.
பெற்ற சிற்றின்பமே பேரின்பமாம் ஆங்கே
முற்ற வரும் பரிசு உந்தீ பற
முளையாது மாயை என்று உந்தீ பற
விஷ்ணுபுரத்தின் கதாபாத்திரங்கள் அஜிதன், சுடுகாட்டு சித்தன், காஸ்யபன், பவதத்தர், நீலி, பிங்கலன், பாவகன், யோகாவிரதர், சந்திரகீர்த்தி, சங்கர்ஷ்ணன், லட்சுமி என பலர் அல்லது அவருள் சிலர் நம்மிடம் நம் உள்ளத்தில் தமக்குரிய இடத்தை பெற்று அமரக்கூடும். ஏராளம் அப்படி வந்து விட்டார்கள். சமீபத்தில் போரும் அமைதியும் பியர் அப்படி வந்து நிரந்தரமாக தங்கிவிட்டார். இத்தனைக்கும் அவர் நட்டாஷாவைத் திருமணம் செய்துகொண்டது எனக்கு பிடிக்கவில்லை என்று அவரிடம் நான் சொல்லிவிட்டபோதும்.
ஒன்றுமட்டும் – உலகியலை (காமம் உள்ளிட்ட அனைத்தையும்) முற்றாக புறக்கணித்து மெய்மையை எட்டமுடியாது. உலகியலை முற்றாக கடக்காமலும் மெய்மையை எட்டமுடியாது. விஷ்ணுபுரம் அதன் தியான அனுபவம் என்பது உங்களைப் பொறுத்தது. ஓஷோவால் மிகவும் புகழ்ந்துரைக்கப்படும் மிக்கேல் நைமியின் “மிர்தாதின் புத்தகம்” – உண்மையில் அது அவ்வாறு தகுந்தது எனினும் என்னளவில் விஷ்ணுபுரம் அதைவிட மேலானது. நைமியின் மிர்தாத் அற்புதமாக போதனைகளாக கவித்துமாக அன்பை பெருங்கருணையை மெய்மையை உணர்த்தும் விதமாக பேசுகிறார். ஆனால் அவர் ஒருவரது பேச்சாக ஒரு ,மகானின் சொற்பெருக்காகவே அது இருக்கிறது. முற்றிலும் ஏற்புடன் அன்புடன் வாசித்து அதை உணரமுடியும். விஷ்ணுபுரத்தில் வாழ்கை இருக்கிறது. போதனைகள் இல்லை. ஏற்பு-மறுப்பு, பரிசீலனை என்று சென்று மறுத்து மறுத்து சென்று சொற்களால் தொடமுடியாத அந்த இடத்தை நெருங்கி சொல்ல முற்படாமல் மௌனம் கொள்கிறது.