Unknown's avatar

About சொல்முகம் வாசகர் குழுமம்

கோவையில் செயல்படும் இலக்கிய வாசகர் குழுமம்

கூடுகை 2 – கடலுக்கு அப்பால் – வாசிப்பனுபவம் – விக்ரம்

ப. சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்‘ வாசிப்பனுபவம் – விக்ரம்

”கடவுள் நம்பிக்கை இருக்கா?” ஜெயகாந்தனிடம் கேட்கப்படும் கேள்வி.  இசைஞானி இளையராஜா தயாரித்த ஜெயகாந்தன் ஆவணப்படம் ஒன்றில்.

”கடவுள் நம்பிக்கை இருக்கா?”

”எதையாவது நம்பித் தொலை.  எதையுமே நம்பாம இருக்கிறது தப்பு” ஜெயகாந்தனின் பதில். அவர் போன்ற இலக்கியவாதிக்கே உரித்தானது இந்த பதில்,  என்னளவில் இது ஆன்மிகமானது.  எதையாவது நம்பத்தான் வேண்டும்,  மனித மனதிற்கு நம்பிக்கை இன்றியமையாதது, அதன் அடிப்படையிலேயே அது தன் வாழ்கையின் அர்த்தத்தை கற்பித்துக் கொள்கிறது.  அது தண்ணீர் மலையானாக இருக்கலாம், அல்லாவாக, புத்தனாக, ஏசுவாக, அல்லது பகுத்தறிவின் மீதான நம்பிக்கையாக.  தெய்வங்கள் குலஅறத்தை உவக்கின்றன என்பதாக அல்லது என் சொந்த மனசாட்சியின்படி தன்னறம் அல்லது கைக்கொண்ட கொள்கை என, தீர்மானித்துக் கொண்ட திசை என எதுவாகவும்.  மற்ற பிராணிகளைப் போலல்லாமல் மனிதனின் மனம் சிக்கலானதாக எளிதில் வரையறுத்துவிட முடியாததாக, ஒவ்வொருவருக்கும் அவருக்கே உரித்தான உலகை, வாழ்வை உருவாக்கித் தருவதாகவும் வாழ்வை துய்ப்பவனாகவும், அதுவே நடிப்பதாகவும் இருக்கிறது.

வயிரமுத்துப்பிள்ளைக்கு வாழ்கை என்பது அவரது தொழில், அவரது அறமும் தெய்வமும் கூட.  அது எல்லாவற்றினும் மேலானது.  அவரை விட அது அவருக்கு மேலானது,  அவரது மகளின் விருப்பதை விட, அவரது மகனை விட.

பர்மாகாரர்களிடம் அடி வாங்கியதும் எத்தனையோ அவமானங்களை தொழிலின் பொருட்டு அவர் பொறுத்துக்கொண்டதும் காட்டப்படுகிறது.

அவரது மகன் ஜப்பானியரின் குண்டுவீச்சில் பலியான போதும் ஜப்பானியரைக் கொன்று பாலம் கடந்த செல்லையாவின் செயலை அவர் ரசிக்கவில்லை.  ஜப்பான்காரன் எவ்ளோ பெரிய ஆள்.  இவன் என்ன நாயக்கரா என்பதே அவரது எண்ணம்.  தொழில்தானே எல்லாவற்றினும் முக்கியமானது எனக்கொள்ள வேண்டியதுதானே இவன் கொண்டிருக்க வேண்டிய அறம்?

மரகதம் செல்லையாவின் மீது காதல் கொண்டவள்தான்.  அவளும் கூட தன் தந்தையின் முடிவு சரியானது என்ற ஏற்பு உடையவள் என்றே எனக்குத் தோன்றுகிறது.  ஆனால் ஒரு கோண வேறுபாட்டுடன்.  இத்தொழிலுக்கும் என் மகளுக்கும் இவன் லாயக்குப்பட மாட்டான் என்ற வயிரமுத்துப்பிள்ளையின் கோணமல்ல அவளுடையது.  தன் நல்வாழ்வு குறித்து அவள் கவலை கொள்ளவில்லை.  தானும் தொழிலும் செல்லையாவின் கால்தூசுக்கும் சமமல்ல என்பது அவள் எண்ணம், அதை அவனிடமே தெரிவிக்கவும் செய்கிறாள்.  உங்களுக்கு நான் தகுந்தவளல்ல, எளியவள் என வணங்கி விலகுகிறாள்.

உண்மையில் நான் செல்லையாவின் தரப்பில்தான் நிற்கிறேன்.  தந்தைக்கும் மகளுக்கும் இருக்கும் லௌகீக விவேகம். செல்லையாவிற்கு அந்த அளவிற்கு இல்லைதான்.  இந்த வேலையில்லாவிட்டால் இன்னொன்று என்று எண்ணுகிறான்.  வயிரமுத்துப்பிள்ளையின் குலஅறம் என்பது அவனுக்குப் பொருட்டே அல்ல.  தன்னை தெய்வம் என்று நோக்கிய மரகத்தை அவன் தெய்வம் என்று நோக்கினானா என்று திட்டவட்டமாக சொல்லிவிட முடியாது. ஆனால், அவளது விருப்பம் எதுவாயினும் அதற்கு முழுமையாக மதிப்பளிக்கக்கூடிய உண்மையான காதல்கொண்டவன்.

செல்லையாவிற்கும் கூட அவளை கும்பிட்டு விலகிக்கொள்ள அவள் மீதான ஒரு நோக்கு நண்பன் மாணிக்கத்தின் வாயிலாக தரப்படுகிறது.

அது கண்ணகி வகைப் பெண்.  அப்படிப்பட்ட பெண்கள் இருப்பதால்தான் தமிழ்நாட்டில் இன்றுகூட, சங்க காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் மரபுச் சரடைக் காணமுடிகிறது. அவர்கள் மரபு, பண்பாடு பழக்க வழக்கங்களின் அடிமைகள் – காவலர்கள்.”

செல்லையாவும் மரகதமும் வாழ்வில் வெவ்வேறு திசைகளில் பிரிகிறார்கள்.

நாவலின் நிலம் கடலுக்கு அப்பாலானது.  மலாய்க்கார்கள், சீனர், தமிழரை பெரும்பான்மை கொண்ட இந்தியர் வாழும் நிலம்.  வர்த்தகம் சார்ந்து அமைந்த தமிழர்களின் வாழ்க்கையை முதன்மையாக எடுத்துக்கொண்டிருக்கிறது இந்த நாவல் என்றபோதும்.  ஐஎன்ஏவில் இருந்து பிரிந்து செல்லும் தமிழர்கள் சிலருக்கு அன்புடன் உதவவும் அடைக்கலம் அளிக்கவும் முன்வரும் ரப்பர் தோட்டத் தொழிலாளித் தமிழர் பற்றி தொட்டுணர்த்தவும் செய்கிறது.

மலாய் மொழி பேச்சு இனிமையானதாகவும் சீன மொழி இனிமையற்றதாக வயிரமுத்துப்பிள்ளைக்கு எரிச்சலூட்டுவதாகவும் இருக்கிறது.  யோசிக்க வேண்டியது என்று எண்ணுகிறேன்.

செல்லையா அழைத்ததை ஏற்று மரகதம் அவனுடன் சென்றிருந்தால் என்னவாகியிருக்கும்?. கடலுக்கப்பாலான மலேயாவில் வியாபாரம் செய்யச் சென்றவருள் ஒருவன் கதைநாயகன்.  வியாபாரத்திலிருந்து விலகி அவனும் அவன் நண்பர்கள் சிலரும் இந்திய விடுதலைக்காக ஜப்பானுடன் கூட்டமைத்திருக்கும் நேதாஜியின் படையில் சேர்கிறார்கள்.  ஜப்பான் வீழ்ச்சியடைய, நேதாஜியின் நிலைமை இன்னதென்று தெரியாதிருக்க, வென்றுவிட்ட பிரிட்டிஷ்காரர்களிடம் சிக்கிவிடாமல் தங்கள் பழைய தொழில்-வாழ்கைக்கு திரும்பிவிட முற்படுகிறார்கள்.  அதற்கான பயணத்தை இரு அணிகளாகப் பிரிந்து மேற்கொள்கிறார்கள்.  ஒரு அணியுடன் வடதிசை செல்கிறான் செல்லையா.  தடைசெய்யும் ஜப்பானியரைக் கொல்ல நேர்கிறது, சீனக் கொரில்லாக் குழு ஒன்றின் பாராட்டுதலையும் குறுகியகால நட்பையும் பெறுகிறார்கள்.  திரும்பும் செல்லையா தன் காதலி மரகதத்தை திருமணம் செய்ய அவளது தந்தை இடையூறு செய்ய அவன் அவளை ரகசியமாக அழைத்துச் சென்றுவிடுகிறான்.  அவர்கள் திருமணம் செய்துகொண்டு தொலைதூர ஊர் ஒன்றில் வாழ்கிறார்கள் என்று கதை முடிந்து இருந்தால் இந்த நாவல் என்ன இழந்திருக்கும்? முக்கியமான ஒன்றை இழந்திருக்கும்.  முதன்மைப் பாத்திரங்கள் தங்கள் விழுமியங்களில் குறைபட்டிருக்கும், அவ்வழி பின்னடைந்து நாவல் முழுமையை இழந்திருக்கக்கூடும் என்று எண்ணுகிறேன்.

சொல்முகம் கூடுகை 2

கூடுகை 2 – புயலிலே ஒரு தோணி – வாசிப்பனுபவம் – லோகமாதேவி

‘புயலிலே ஒரு தோணி’ வாசிப்பனுபவம் – லோகமாதேவி

இந்த புத்தகத்தை கடந்த 2 நாட்களில் கல்லூரியில் முக்கியமான ஒரு குழுமத்தின் வருகையின் இடையில் குறிப்புகள் எடுத்தவாறு 3 மணி நேரத்தில் வாசித்து முடித்தேன். வாசித்த பின்னரே ’கடலுக்கு அப்பாலை’ வாசித்தபின்னர் இதை வாசித்திருக்கனும் என்பதை தெரிந்துகொண்டேன்.

கிண்டில் பதிப்பில் இருக்கும் ப சி அவர்களின் இரண்டு முன்னுரைகளுமே சிறுகதையைப் போல உணர்வுப்பூர்வமாக இருந்தன. ந. முருகேசபாண்டியன் அவர்களின் உரையும் கதையைக்குறித்த , கதாசிரியரைக் குறித்த சுருக்கமான கருத்தை சொல்லியது

கதையை ஆழ்ந்து வாசிக்காது போனால் வெறும் தகவல் திரட்டு என்னும் பிம்பத்தை அளிக்கக்கூடியதும் மனமொன்றி வாசிக்கையில் அற்புதமான வாசிப்பனுபவத்தை தருமொன்றாகவும் இருக்கும் இந்தக் கதை.

யுத்தத்தை பின்னணியாகக் கொண்டு பாண்டியன் என்னும் ஒரு புனைவுக்கதாபாத்திரத்தின் வாழ்க்கையை அவனது பயணத்தை 4 பகுதிகளாக பிரித்துச்சொல்லி அதன்வழியே அக்காலத்தை, அப்போதைய வாழ்க்கை முறை, வாழ்வுத் தரம், குடும்ப வாழ்க்கை, வணிகம், பாலியல் தொழில், கடைவீதிகளின் அமைப்பு, போக்குவரத்து, தனி ஆளுமைகள், கரன்ஸி என்று பலவற்றைச் சொல்லி புலம்பெயர்ந்தவர்களின் வேதனையையும் சொல்லும் இந்தக் கதையின் தலைப்பு கதைமாந்தர்களின் வாழ்வும் புயலில் அகப்பட்ட தோணியைப்போல அல்லாட்டத்தில் தான் இருக்கிறது என்றுசொல்லுவதாக எடுத்துக்கொண்டேன்

நாவலில் பல மரங்கள் செடிகொடிகளின் பேரையும் மனதை மயக்கும் வெள்ளை மக்னோலியா மலர்கள் என்பது போன்ற பல  தாவரவியல் தகவல்களையும் ப சி தந்திருக்கிறார். அவர் சொல்லும் மரங்கள் எல்லாம் இன்றும் இருக்கின்றனவா என்று தேடனும். பல பெயர்கள் கேள்விப்பட்டதே இல்லை.

பழஞ்சொற்கள் பலதும் வார்த்தைகள் பலதும் மிகப்புதிதாக இருந்தன.

‘’நான் வாரேன் வாக்கப்பட என் தங்கச்சி வாரா புள்ளைய தூக்க’’

அடகுக்கு பதில் நம்பிக்கை

இவையெல்லாம் உதாரணங்கள்

தாசிகளை அவர்கள் தொழில்முறைகளை  விஸ்தாரமாக சொல்லுகிறார் ப. சி.

ஜாதிய அமைப்புகளையும் அப்படியேதான்.

பழந்தமிழ்ப்பாடல்களும் நிறைய இடையிடையே வருகின்றன. செருப்படி தண்டனையாக  தரப்பட்டிருப்பது, அதையும் விரும்பி வாங்கிக்கொள்வது, கட்டிச்சோறும் கருவாடும் உணவாக தரப்பட்டது, முதல் முதலாக மேசையில் சாப்பிடும் கிளப்புக்கடைகள் வந்தது போன்ற பல   யுத்த காலத்திலான  வியப்பான தகவல்கள்  இருக்கின்றன இதில்.  

முசோலினியும் ஹிட்லரும் இறந்ததை சாதாரணத்தகவலாக சொல்லுகிறார்.

’’இளங்காதலி’’ இந்த சொல் இனிதாய் இருந்தது. இதைப்படிக்கையில் ப.சி இன்னும் பல கதைகளை ரசமாக எழுதியிருக்கக் கூடியவர் என்று நினைத்துக்கொண்டேன்.

மிக எளிமையான சொல்லாட்சி எனினும் கதை பரந்துபட்ட களத்தில் எழுதப்பட்டிருப்பதும் கதை மாந்தர் பேசும் மலாய் மற்றும் கொச்சையான தமிழ், அப்போதைய வாழ்வு முறை, யுத்தம், பாண்டியன் வாழ்வு வழியே நாம் காணும் INAவின் சித்திரம், தமிழ்பாடல்கள் என்று நாவல் மிக சிறப்பானதாகி விடுகிறது.

வளவிக்காக அப்பனிடம் அடிவாங்கி அப்பன் திரும்பி வருவதற்குள் அம்மையில் உயிர்விட்ட அமிர்தம், கணவனின் பிறழுறவுகளைப் பொருட்படுத்தாமல் வீட்டில் லட்சுமிகரமாய் இருக்கும் ஆச்சி, குடலை உருவி உள்ளங்கையில் வைத்துக்காட்டினாலும் சோறு தராத இன்னொரு ஆச்சி, நாடாரா என்று கேள்வி கேட்கும் தாசி, சொத்தைக்கத்தரிக்காய் செட்டியார் என்று ப சி காட்டும் ஆளுமைகள் என்றென்றைக்கும் மறக்க முடியாதவர்கள்.

தேர்வுக்குப் படிப்பதுபோல் குறிப்பெழுதிக்கொண்டு வாசிக்காமல் மனதொன்றி  மீள் வாசிப்பு செய்யவேண்டிய நூல் இது.

 வாழும் வயதில் மனைவியையும் தலைச்சன் பிள்ளையையும் ஒரு சேர பறிகொடுத்துவிட்டு, மிச்ச காலத்தை தன்னந்தனியே கழித்து, தன் இறப்பை யாருக்கும் தகவல் சொல்லவேண்டாம் என்று முன்கூட்டியே சொல்லியபடி ஸ்கேன் எடுக்கச் செல்லுகையில் ஆம்புலன்சிலேயே உயிர்விட்ட ப. சிங்காரம் அவர்களின் வாழ்வும் புயலிலே அகப்பட்ட ஒரு தோணிதான்  இல்லையா?

சொல்முகம் – கூடுகை 2 – புயலிலே ஒரு தோணி – விவாதத்தின் போது

கூடுகை 2 – கடிதம் – லோகமாதேவி

எழுத்தாளர் சு.வேணுகோபால் மற்றும் கால.சுப்ரமணியம் அவர்களுடன் சொல்முகம் வாசகர் குழுமம்

சொல்முகம் இரண்டாவது கூடுகையில் இன்று கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. எல்லா மாதங்களிலும் கடைசி ஞாயிறு என் மகன்களை பள்ளி விடுதியிலிருந்து வெளியே கூட்டிச்செல்லும் நாளென்பதால் இதில் கலந்துகொள்ளவே முடியாதென்று நினைத்திருந்தேன். நேற்று மகனை பள்ளியில் ஒரு மாத விடுமுறையின் பின்னர்  கொண்டு விட்டுவிட்டு வந்ததால் இன்று கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

வடவள்ளியில் ஒவ்வொருவராக அலைபேசியில் குறுஞ்செய்தியனுப்பி அடையாளம் கண்டுகொண்டு  கைகுலுக்கிக்கொண்டு காஃபி அருந்தியபின்னர்  வழி விசாரித்து அந்த பண்னை வீடு வந்தோம். இலக்கிய கூடுகைகளுக்கெனவே கட்டியதுபோலிருந்தது அந்த ஏகாந்தமான வீடும்   தாராளமான அறையும். நகர சந்தடிகளிலிருந்து முற்றிலும் விலகி பெருமரமொன்றின் கீழிருந்த சிற்றாலயமும் கொஞ்சம் தள்ளியிருந்த வீட்டுத்திண்ணையில் அரட்டையடித்துகொண்டிருந்த  இரண்டு வெள்ளைச்சேலை பாட்டிகளையும் தவிர சஞ்சாரமேயில்லாமல் அமைதியாக இருந்தது தென்னைகள் சூழ இருந்த அந்த வீடு. 20 பேர் வந்திருந்தோம் பலர் எனக்கு இன்றுதான் அறிமுகமானார்கள், 2 கதைகளை 20 பேர் எத்தனை விதமாக இன்று விவாதித்தோம், கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம் என்று நினைக்கையில் மலைப்பாக இருந்தது.

60 களில் எழுதிய கதையை 2019ல் இத்தனை தீவிரமாக விவாதித்திருக்கிறோம்.

 எல்லா கதைகளையுமே அகம் புறம் என்றோ, கதை காட்டும் தரிசனங்களையோ, படிமங்களைக் குறித்தோ ஏதும் அறியாமல் வெகு நேரடியாக , வெகு எளிமையாக கதைகளை வாசித்துப்புரிந்துகொள்ளும் எனக்கு கதையைக்குறித்த பல திறப்புகள் கிடைத்தன  இன்று.

 நான் மிகவும் மதிக்கும் சு.வேணுகோபால் அவர்களை இத்தனை எளிமையானவராக எண்ணிப்பார்த்ததே இல்லை. அவரும் கால. சுப்ரமணியமும் பல முக்கிய கருத்துக்களை இடையிடையே பகிர்ந்து கொண்டிருந்தது விவாதத்தை இன்னும் செறிவாக்கியது.

திரு  நடராஜன் அவர்களை இதற்கு  முன்னர் சில சமயங்களில் ஜமீன்தாரும் எங்கள் கல்லூரி தலைவருமாகியவருடனேயேதான் பார்த்திருக்கிறேன் என்பதால் அவரைக்குறித்த  செல்வந்தர் , நிழக்கிழார்,  பண்ணை வீட்டு உரிமையாளர், கல்லுரித்தலைவருக்கு நெருக்கமானவர் என்பது போன்ற ஒரு உளச்சித்திரமே எனக்கிருந்தது. முற்றிலும் மாறாக அவர் மிக எளிமையானவராக மற்றவர்களுக்கு சிற்றுண்டிகளை எடுத்துக்கொடுத்தும் நாற்காலிகளை கொடுத்து உதவியும் கதை விவாதங்களில் ஆர்வமாக சிரித்தமுகமாக கலந்துகொண்டதுமாக இருந்தார். சு வே விடம் இந்த வீட்டை உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் இலக்கியக் கூடுகைகளுக்கு உபயோகித்துக்கொள்ளுங்கள் என்று வலிந்து சொல்லிக்கொண்டிருந்த, அவரது பெருந்தன்மைக்கு முன்னால் நான் கொண்டிருந்த  உளச்சித்திரம் கரைந்து காணாமல் போனது.

எங்கள் கிராமத்திலிருந்து கிளம்பும் போதே சாரல்மழை. இன்று கோவையிலும் நல்ல இளங்காற்றிருந்தது. அருமையான கூடுகை. மிக ஆரோக்கியமான விவாதம், பல நண்பர்களின் சந்திப்பு, கதைகளைப்பற்றிய புதிய புரிதல்கள் என வெகுகாலத்திற்குப் பிறகான மிக நிறைவான நாள் எனக்கு.

அனைவருக்கும் அன்பும் நன்றியும்

லோகமாதேவி

சொல்முகம் இலக்கிய குழுமம் – இனிய உதயம்

கோவையில் ஒரு “புக் ரீடர்ஸ் கிளப்” தொடங்குவதென்பது நீண்ட நாட்களாக மனதில் உருட்டிக் கொண்டிருந்த ஒரு எண்ணம். பல முறை இதைப் பற்றி பேசியும் செயல்படுத்த முடியாமல் போனது. நமது நண்பர்கள் சென்னையிலும் பாண்டியிலும் வெண்முரசு கூட்டங்களை மாதம்தோறும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கிறார்கள். ஆனால் விஷ்ணுபுர வாசக வட்டம் மையம் கொண்டிருக்கும் கோவையில் வாசிப்பை முன்வைத்து தொடர்ச்சியான கூட்டங்களை நடத்த முடியாமலாகிக் கொண்டிருந்தது.

இந்த முறை ஊட்டியிலிருந்து மலையிறங்கும்போதே வாசிப்பு கூட்டங்களை கோவையில் கட்டாயம் ஒருங்கமைக்க வேண்டும் என்று மீண்டும் முன்வைத்தபோது, க்விஸ் செந்தில், செல்வேந்திரன், விஜய சூரியனும் இதை தீவிரமாகக் கையிலெடுத்துக் கொண்டார்கள். கோவையில் இருக்கும் நமது நண்பர்களை முதலில் தொடர்பு கொண்டு ஒன்றாக திரட்டினோம். அனைவருமே தங்களை இதில் இணைத்துக் கொண்டார்கள். தாமதிக்காமல் முதல் கூட்டத்தை 26ம் தேதி ஞாயிறன்றே கூட்டுவதாக முடிவெடுத்தோம். டைனமிக் நடராஜன் தனது தொண்டாமுத்தூர் பண்ணை இல்லத்தில் இடமளித்து தேநீருக்கும் இடைஉணவுகளுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டார். குறுகிய கால அறிவிப்பென்பதால் முடிந்தவர்கள் மட்டும் வந்தாலும் பரவாயில்லை, பிரத்தியேக தயாரிப்பு இம்முறை தேவையில்லை என்று முடிவெடுத்தோம். அடுத்தடுத்த கூட்டங்கள் ஒரு மாதம் முன்னதாகவே திட்டமிடப்படும்.

திரு.டி. பாலசுந்தரம் அவர்கள் டைனமிக் நடராஜனின் அழைப்பின் பேரில் ஆர்வத்துடன் எங்களோடு முதல் கூடுகையில் கலந்துக் கொண்டார். கோவை நண்பர்கள் சுஷீல், வெங்கட், விக்ரம், ஜியார்ஜியா சுரேஷ், நவீன் சங்கு, பூபதி, சபரி, எல்வின், க்விஸ் செந்தில், செல்வேந்திரன் ஆகியோருடன் இன்று காலை கூடினோம். டி. பாலசுந்தரம் அவர்கள் உலகெங்கிலும் “புக் கிளப்” செயல்படும் முறைகள் பற்றியும் அவற்றின் அவசியத்தையும் முன் வைத்து ஒரு துவக்க உரை நிகழ்த்தினார். கோவையில் ஒரு சில வாசிப்பு கூட்டங்கள் உண்டென்றாலும் நாங்கள் அனைவரும் ஜெயமோகனின் கட்டுப்பாட்டிற்கு பழக்கப்பட்டு அதில் தேர்ச்சியும் கொண்டவர்கள் என்பதால் இக்கூட்டங்கள் சீராக அமையும் என்று கருதுவதாக கூறினார். உண்மையில் அதை நாங்களுமே உணர்ந்தோம். எந்த விதிகளையும் எடுத்துக் கூறாமலேயே நாங்கள் அனைவரும் ஒரு ஒழுங்கில் வந்து அமைந்தோம். அதாவது நமது கூட்டங்களின் வடிவங்களுக்கு ஒரு பெயரிட்டு சொன்னால் போதும் அதன் விதிகள் வார்த்தெடுத்து புரிந்து கொள்ளப்படுமென்பதைப் போல. விஷ்ணுபுர விருது விவாத அரங்க விதிகள் அல்லது ஊட்டி முகாம் அமர்வின் விதிகள் என்று மட்டுமே இனி அறிவித்துவிடலாம். இதன் பயனாக ஒரு நொடி கூட வீணடிக்கப்படாததை நாங்கள் இன்று மீண்டும் கண்டோம். நமது அமர்வுகளினாலும், விவாதப் பட்டறை போன்ற முன்னெடுப்புகளாலும் ஒரு புத்தகத்தின் மீதான தன் கருத்துகளை முன் வைக்கும் முறைமையும் எதிர் விவாதங்கள் அமைய வேண்டிய தன்மையும் ஒருவாறு பழக்கப்பட்டு வந்திருக்கிறது.

“சொல்முகம் வாசகர் குழுமம்” என்று பெயர் சூட்டிக் கொண்டு இக்கூட்டங்களுக்கான சில வழிமுறைகைளை இறுதி செய்தோம். மாதம் ஒரு செவ்விலக்கிய நாவல் தேர்வு செய்யப்படும். அதை வாசித்து அடுத்த கூடுகையில் பத்து நிமிடங்களுக்கு ஒவ்வொருவரும் தன் பார்வையினை சீராக முன் வைக்க வேண்டும். சுருக்காமாக ஊட்டி முகாமின் ஆய்வுரை விதிகள். கேள்விகளையோ கருத்துகளையோ கோர்வையாக முன்வைக்கும் பயிற்சியாகவும் இதை கொள்ளலாம். இவ்வுரைகளை சிறு கட்டுரை வடிவில் எழுதி பார்த்திருக்க வேண்டும். அக்கட்டுரைகள் ஒரு வலைப்பூவில் பதிவேற்றப்படும். இவ்வுரைகளின் மீதான விவாதங்கள் உரைகளுக்குப் பின் தொடரும். ஒரு நாவல் மீதான கவனத்தை குவித்து அதன் கட்டமைப்பு, அழகியல், வரலாற்றுப் பின்னணி என அத்தனை கோணங்களிலும் வாசிக்க இது வழி செய்யும். சில முக்கிய வசனங்களையோ, வர்ணனைகளையோ குறிப்பெடுத்து இங்கு கூட்டாக வாசிக்கும்போது அது மனதில் நிலைகொள்ளும். நட்பார்ந்த முறையிலேயே விவாதங்கள் நடக்க வேண்டுமென்பதும் அரட்டைகளுக்கோ புரட்டுகளுக்கோ இடமில்லையென்பதும் அடிப்படை விதிகள்.

முதல் கூட்டமென்பதால் கடந்த மாதத்தில் வாசித்தவற்றை பகிர்ந்துகொண்டோம். டி.பாலசுந்தரம் அவர்கள் பனைமரச் சாலை புத்தக வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்தார். புத்தகத்தை கையோடு கொண்டுவந்து அதிலிருந்து சில வரிகளை வாசித்து காட்டி அவற்றை தன் பார்வையில் விளக்கினார். உம்மாச்சி, ஓநாய் குலச் சின்னம், இடைவெளி, டால்ஸ்டாயின் குறுநாவல்கள், இ.ரா. முருகனின் 1975, சுரேஷ் ப்ரதிப்பின் சிறுகதைகள், பிரதமன் சிறுகதைத் தொகுப்பு என பலவாரியான புத்தகங்கள் மீதான வாசிப்பை விவாதித்தோம். அவற்றை கட்டுரை வடிவிலும் வலையேற்றும் வேலையை சுஷீல் எடுத்துக் கொண்டுள்ளார். அடுத்த மாதம் முதல் மேலும் சில இளம் வாசக நண்பர்கள் இணைந்து கொள்வதாக உறுதியளித்துள்ளார்கள்.

கோவையில் ஏதேனும் ஒரு இலக்கிய நிகழ்வுகளின்போதோ அல்ல எழுத்தாளர்களின் வருகையின்போது மட்டுமோ சந்தித்துக் கொள்ளும் இலக்கிய நண்பர்கள் இனி மாதந்தோறும் ஒன்று கூடப்போகிறோம் என்பதும் தீவிர இலக்கிய விவாதங்களாக அவை அமையப்போகிறதென்பதும் உவகையளித்தது. ஆனால் அதற்கான முறையான முதல் உந்துதலை இந்தக் காலை சந்திப்பு அளித்திருக்குமா என்று சந்தேகம் எழுந்தது. அடுத்த கூட்டம் ஜூன் 30 அன்று வைத்துக் கொள்வோம் என்றும் ப.சிங்காரத்தின் இரண்டு நாவல்களையும் வாசித்து வரவேண்டுமென்றும் முடிவெடுத்து அறிவித்த உடனேயே “எனக்கு ஓக்கே, நான் வருகிறேன்” என்று தன் மொபைலில் அட்டவணையை சோதித்தபடியே முதல் குரல் டி.பாலசுந்தரம் அவர்களிடமிருந்து எழுந்தது. இது ஒரு நல்தொடக்கம் என்ற நம்பிக்கைப் புன்னகையோடு கலைந்து சென்றோம்.

நரேந்திரன்

கோவை