அந்நியன் வாசிப்பனுபவம் – விக்ரம்

மனிதர்களின் மதிப்பீடுகள், விழுமியங்கள் அன்பு அல்லது மனிதாபிமானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்னும் பொதுக்கருத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது ஆல்பர்ட் காம்யுவின் “அந்நியன்.“ அது அப்படித்தான் இருக்கிறாதா, அப்படி ஒன்றும் இல்லை மனிதர்களே என்கிறது.  ஒருபக்கம் கிறிஸ்துவின் அன்பின் மீது கட்டப்பட்ட சமய மதிப்பீடுகளையும் மற்றொரு பக்கம் பிரெஞ்சு பண்பாட்டின அரசின் நீதிமுறையையும் – அபத்தமானவை என்ற விமர்சனத்தை இக்கதையின் மூலம் வைக்கிறது. 

கதை நாயகனின் எதற்கும் அதிகம் அலட்டிக்கொள்ளாத, அதிக உணர்ச்சிவசப்படாத, போகிறபோக்கில் வாழ்கிற, தனக்கென மதிப்பீடுகள் எதுவும் இல்லாத, அன்றாடம் எழும் புலன்சார் விருப்பங்களை மட்டும் நிறைவேற்றி வாழ்கிற ஒருவன் – இத்தன்மைகள் மட்டுமே அவன் கொடியவன்-தீயவன் என்று தீர்மானிக்கப் போதுமானவையா? என்ற கேள்வியை எழுப்புகிறது.  உண்மையில் அவன் கெட்டவன் அல்ல.  உள்நோக்கம் ஏதுமில்லாத, சூழலால் அமைந்துவிட்டதான கொலை ஒன்றை செய்து சிறை செல்லும் அவன் தன் தாயை உடன் வைத்திருக்காமல் விடுதியில் விட்டிருந்தான் என்பதையும் அவள் மரணத்திற்கு அங்கு சென்றபோது அவளுக்காக அழவில்லை எனபதையும் அத்துடன் அங்கு அவனது இயல்பான சுபாவத்தை ஒட்டிய சில நடத்தைகள் காரணமாகவும் கொடியவன் என்று தீர்மானிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்படுகிறான். 

தன் தரப்பு நியாயத்தை வாதிட அவன் விரும்புவதில்லை.  தனக்காக வாதிடும் வழக்கறிஞருக்கு ஒத்துழைப்பும் தருவதில்லை.  நிகழ்வுகளைக் கொண்டும் சூழலைக் கொண்டும் தன்னைப் பற்றி எதிர்தரப்பு உருவாக்கும் ”சித்தரிப்பை” மறுப்பதும் இல்லை.  அந்த சித்தரிப்பு உண்மையில்லை என்னும்போதும் ஆமாம் சரிதானே அப்படியும் சொல்ல முடியும் தானே என்று எண்ணுகிறான்.  எதிர்தரப்பு வழக்கறிஞர் பெற்றோரைக் கொலை செய்துவிட்ட மற்றொருவரி்ன் வழக்குடன் இவ்வழக்கை ஒப்பிட்டு அதைவிட இது மிகக்கொடியது என்கிறார்.  தன்மீது ஒருவித தனிப்பட்ட வன்மத்துடன் அவ்வழக்கறிஞர் நடந்துகொள்வது அவனுக்கு வியப்பளிக்கிறது.

பெரிதும் உணர்ச்சிவசப்படாதவனாகிய கதைநாயகன் இரண்டு இடங்களில் மட்டும் உணர்ச்சிவசப்படுகிறான்.  உணவுவிடுதி நடத்திவரும் அவனது நண்பன் – அவனுக்கு உணவும் மதுவும் அளிப்பவன், தன் பணியிடத்தில் அவன் எப்படிப்பட்டவன் (நன்கு உழைப்பவன்) என்று அறிந்திருப்பவன், அவனை உண்மையில் புரிந்துவைத்திருப்பவன் அவனுக்காக உணர்ச்சிப்பூர்வமாக பரிந்துபேசும் போது நெகிழ்ச்சி அடைகிறான்.  அவனை அணைத்து முத்தமிட விரும்புகிறான்.  இரண்டாவதாக, மரணதண்டனைக்கு முன்னதாக தன்னை சிறையில் வந்து சந்தித்து தனக்காக பிரார்தனை செய்ய வரும் பாதிரியாரிடம் எரிச்சலைடைகிறான்.  அவரை விரட்டுகிறான்.  அவருடைய அறிவுரைகள் அபத்தமானவை என்று கருதுகிறான்.

மொத்தத்தில் – நான் பேசாமல் இருந்தால், உள்ளதற்கு மாறாக உங்கள் மதிப்பீடுகளின் அடிப்படையில் நீங்களாகவே என்னைப்பற்றி ஒரு சித்தரிப்பை (மிகையாக அல்லது பொய்யாக) உண்டாக்கி தண்டித்து விடுவீர்களா என்பது அவனது கேள்வி.  இதை வெளிப்படையாக அவன் கேட்பதில்லை.   இது கேட்காமல் கேட்கப்படும் கேள்வி.  நானாக எதுவும் கேட்க மாட்டேன், என்மீது நீங்கள் சுமத்தும் எதையும் மறுக்கவும் மாட்டேன், தண்டணையை ஏற்றுக்கொள்வேன் என்பது அவனது நிலைப்பாடக உள்ளது.  ”எல்லோரும் என் சாவை ரசியுங்கள்” என்பதுபோல.

ஒருவகையில் இது அவனுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை என்பதைவிட அவன் செய்துகொள்ளும் தற்கொலை என்றே தோன்றுகிறது.  தற்கொலை செய்துகொள்ள விருப்பங்கள் நிறைவேறாதது, துன்பங்கள், விரக்தி இவைதான் காரணமாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை – எதற்காக வாழ வேண்டும் உயிரோடு இருப்பது அவ்வளவு முக்கியமானதா என்ன என்ற கேள்வியே போதுமானது என்று கூறுவதுபோலும் எண்ணத் தோன்றுகிறது.

சில இருத்தலியல்வாதிகள் இருத்தலியல் சிக்கல்களுக்கு தற்கொலையைத் தீர்வாகக் கண்டதுபோல் தோன்றுகிறது.  இங்கே கிழக்கே நமக்கும் பலநூற்றாண்டுகளாக அதுவேதான் தீர்வாக பல மெய்ஞானிகளால் சொல்லப்பட்டு வருகிறது.  என்ன வித்தியாசம் என்றால் இங்கே உடலின் தற்கொலை அல்லாமல் மனதின் அல்லது நான் என்னும் தன்முனைப்பின் தற்கொலை பரிந்துரைக்கப்படுகிறது.  துறந்தார் இறந்தார் அனையர் என்றும் மனோநாசம் என்றும்.

‘அந்நியன்’ வாசிப்பனுபவம் – பவித்ரா சக்திவேல்

என் அப்பாவின் மரணத்தினால் உண்டான வெறுமைக்குள் சிக்கிக் கொண்டிருந்த தருணத்தில்,  சொல்முகத்தின் மார்ச் மாத கூடுகைக்கான  ” The  Stranger” by Albert Camus புத்தகத்தை எடுத்தேன் .

நாவலின் தொடக்க வரியான  “அம்மா இறந்துவிட்டாள்”,  என்னை மீண்டும் வெறுமையின் ஆழத்திற்கு இட்டுச் சென்றது.  மக்கள் கூட்டம் சூழ்ந்திருந்தாலும், குழந்தையுடன் சிரித்துக்  கொண்டிருந்தாலும், சுற்றியும் இரைச்சலாக இருந்தாலும்,  நினைவின் பிம்பத்திலான தனித்த ஓர் இடம் வெறுமையின் உலகம் . வாழ்வின் அர்த்தத்திற்கான தேடல் தீவிரமடையும்.

ஆல்பர்ட் காம்யூ, இப்புத்தகத்தின் கதாநாயகனான மெர்சால்ட்டை கதைசொல்லியாகக் காண்பித்துள்ளார். மெர்சால்ட் தனது இருப்பை சூரியனால் வானில் தென்படும் நிற மாற்றங்களுக்கும், தன்னைச்  சுற்றியுள்ள பொருட்களால் உண்டான மணத்திற்கும் ஒவ்வொருமுறையும் தொடர்புபடுத்தி மெய்ப்பித்துக் கொள்கிறான்.  

இரண்டு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு  முதியோர் இல்லத்தில் இறந்த அம்மாவைக்  காணச்  செல்கிறான் மெர்சால்ட் . மூடிய சவப்பெட்டியில் உள்ள தன்  அம்மாவின் முகத்தைக் காண மறுத்துவிட்டான். எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த நிகழவே பின்பு அவன் சிக்கிய கொலை வழக்கில் தனக்கு எதிராக அமைந்தது. காரியங்கள் முடிந்த பின் அல்ஜிரியாவின் தலைநகரான அல்ஜெரிசில் உள்ள தனது வீட்டிற்குத்   திரும்புகிறான்.  சனிக்கிழமை என்பதாளும் வெப்பத்தின் காரணமாகவும் நீச்சலடிக்க கடலுக்கு சென்றபோது மேரியை சந்திக்கிறான். அந்நாளை  அவளுடன் கழிக்கிறான். சும்மாவே  உட்கார்ந்தும்  வேடிக்கை பார்த்தும் ஞாயிற்றுக்கிழமை கழிந்தது.  பின்பு அவன்  வேலைக்குத் திரும்பிய சிறுது நாட்களிலேயே வெளிநாடு செல்லும் வாய்ப்பைத் தருகிறார் தனது மேலாளர் .  தனது குறிக்கோளின்மையை நாசூக்காகச் சொல்லிச் சென்றுவிடுகிறான். மேரியும் தனது திருமண விருப்பத்தை கேட்டபோது பதில் சொல்ல முடியாமல் திண்டாடுகிறான் மெர்சால்ட். 

இங்கே நாம் கவனிக்க வேண்டியது மெர்சால்ட்டின் ஆழ்மனதின் ஓட்டத்தை. பாகம் ஒன்றில் மெர்சால்ட் பற்றிய ஒரு பிம்பத்தை நம்முள் உருவாக்குகிறார் ஆல்பர்ட். எதிலும் தீவிரமின்மையை உடையவன் மெர்சால்ட். ஒன்றையே செய்து, பெரிய லட்சியம் ஏதும் இல்லாமல், வருவதை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை நடுநிலைமையாய் ஓட்டிச்செல்பவன். அம்மாவின் மரணம் துக்கம் தருவது.  தூக்கமும்  ஒரு வகையான தலை பாரமும் மெர்சால்ட்டை நெருக்குகிறது. அவனால்  துக்கத்தை  ஏற்றுக்கொள்ள முடியாததால்  அம்மாவின் முகத்தையே பார்க்க மறுக்கிறான். ஆனால் அவன் அம்மா அவனிடம் பல சந்தர்ப்பங்களில் அவனிடம் கூறிய வரிகளை கடைசிவரை நினைப்படுத்திக் கொள்கிறான். 

மேரி தன் திருமண விருப்பத்தைக் கூறியபோதுதான்  திருமணத்தைப் பற்றிச் சிந்திக்கிறான். தனது நண்பனான மஸான் குடும்பத்தை சந்தித்த பிறகுதான் திருமணத்தின் தேவையை உணர்கிறான். மெர்சால்ட் பொதுவாக தான் வாழும் அந்தத்  தருணத்தை அப்படியே கடத்திச் செல்பவன் . நேற்றைய சிந்தனையோ நாளைய சிந்தனையோ அதிகம் இல்லாதவன். அனால் அவன் சிறையில் இருந்த போது நேரத்தைக்  கடத்திச்செல்ல அவன் வாழ்ந்த நாட்களையும், வரவிருக்கும் மரணத்தைப் பற்றியுமே சிந்திக்கிறான்.  

மெர்சால்ட் தன் நண்பர்களுடன் நீச்சலடிக்க சென்ற போது தன்னையும் ரேமாண்டையும் காப்பாற்ற நினைத்திக் கொண்டிருந்தபோது கொலை நடந்துவிடுகிறது. பின்பு அவனது இயல்பே அவனுக்கு கடும் எதிராகத் திரும்பி மரண தண்டனையை பெற்றுத்தருகிறது. சிறைச்சாலையில் அவனது எண்ண  ஓட்டங்களை தத்துவரீதியாகவும் தர்கரீதியாகவும் பாகம் இரண்டில் நம்முன் காட்சியாக முன்வைக்கிறார்  அல்பெர்ட் காம்யூ . பாகம் இரண்டின் தத்துவத்தை நீட்டி ஒரு புத்தகமே எழுதலாம். மரணத்தையும் வாழ்வையும் பற்றிய சிந்தனைக்கு இட்டுச் செல்கிறது.  மரணம் தேடி வரும் பொழுது, அது முப்பது வயதானாலும் அறுபது வயதானாலும் , இன்னும் சில ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற ஆழ் மன ஏக்கத்தை அப்பட்டமாக கண் முன் காட்டுகிறான் மெர்சால்ட்.

யார் இறந்தாலும் பிறந்தாலும் சூரியன் உதித்துக்கொண்டுதான் இருக்கும், காற்று வீசிக்கொண்டுதான் இருக்கும், உலகம் இயங்கிக்கொண்டுதான் இருக்கும்.  ஒவ்வொரு மணித்துளியையும் கழிக்கும் சுதந்திரம் நம் எல்லோரிடமும் உண்டு. எப்படிக் கழிக்கிறோம் என்பதே வித்யாசத்தை உருவாக்குகிறது.  உலகம், மனிதன், கடவுள் ஆகிவற்றைப் பற்றி நம்மை சிந்திக்க வைக்கும் தைத்திரீய உபநிடதம் என் நினைவுக்கு வருகிறது.

சிறைச்சாலையில் மெர்சல்ட்டை ஏசுவை ஏற்கச் செய்துவிடவேண்டும் என்று போராடுகிறார் பாதிரியார். இறந்த பின் எதுவும் இல்லை என்னும் கிறிஸ்துவத்தின் கொள்கையை போதிக்க முயல்கிறார் .ஆனால் செங்கல்களில் அவன் காண்பது தன் காதலி மேரியின் முகம் மட்டுமே என்றதும் பாதிரியார் உடைந்துவிடுகிறார். கில்லட்டின் இயந்திரம் பற்றிய வர்ணனை மிக அசாத்தியமானது. மரணம் இதோ இங்கே என்று உறுதி செய்கிறது இந்த கில்லட்டின் . 

எப்பொழுது இறந்தாலும் சிறிது நாட்களில் இந்த உலகம் நம்மை மறந்து விடும்  . வாழ்க்கை ஒன்றும் அர்த்தமானது இல்லை . அதனால் மரணத்தை  ஏற்றுக்கொள் என்று கறாராக மெர்சால்ட் கதாபாத்திரத்தின் மூலம் ஆல்பர்ட் முன்வைக்கிறார்.

ஒரு நாள் இவ்வுலகில்  வாழ்ந்தவன் சிறைச்சாலையில் (அல்லது தனிமையில்) நூறு ஆண்டுகளைக் கழிக்கும் நினைவுகளைக் கொண்டவனாகிறான் என்கிறான் மெர்சால்ட். 

 மரணத்திற்கு பின்னால் ஆன்மா எஞ்சுகிறது என்று கூறுகிறது கட உபநிடதம். காண முடியாததால் இல்லை என்றாகிவிடாது. அதுபோல்  இன்றைய நிகழ்வுகள்  நாளைய நினைவுகள். நினைவுகளும் நிஜமானவை ஒரு வகையில். மரணத்திற்கு பின்னல் நினைவுகள் எஞ்சுகிறது.

பவித்ரா சக்திவேல்