உப்புக் கடலை குடிக்கும் பூனை, வாசிப்பனுபவம் – விஜயகுமார் சம்மங்கரை

க.சீ.சிவகுமார் கருத்தரங்கில் விஜயகுமார் சம்மங்கரை ஆற்றிய சிற்றுரை.

//எனது இந்த வாசிப்பனுபவம் “உப்புக்கடலை குடிக்கும் பூனை” யை மட்டும் உள்ளடக்கியது. //

கருத்தரங்கு என்ற சொல்லின் நேரடி ஆங்கில சொல் செமினார். செமினார் என்றவுடன் அதற்கு எப்படியோ அகடமிசியா அர்த்தம் வந்துவிடுகிறது.

கருத்தரங்கில் என்ன நடக்கிறது.. அது அடிப்படையில் வாசிப்பனுபவத்தை முன்வைப்பது என்பதாகும்.  வாசிப்பனுபவம் என்றவுடன் ஒரு படைப்பை அனைத்து கோணத்திலும் பார்ப்பது. அதன் ஒரு பகுதியாக படைப்பை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது. 

ஆய்வுக்கு அளவைகள் தேவைப் படுகின்றன. அப்படியானால் இலக்கியத்துக்கு அளவைகள் இருக்கின்றனவா?

பொதுவாக இலக்கியத்தின் பயன் மதிப்பு என்ன என்று பார்க்கையில். அது நேர்கோடான மனித வாழ்வில், இலக்கிய கற்பனை மூலம்  நடக்கும் பக்கவாட்டு அனுபவங்களினால் சாத்தியமாகும் அனுபவ அடர்த்தி என்று இலக்கிய ஆசான்கள் சொல்கிறார்கள். ஆகையால் ஒரு வாசகனுக்கு இலக்கியம் தரும் அனுபவ அடர்த்தி மட்டும் தான் அளவையாக இருக்க முடியும். இது அகநிலை அளவை.

ஆனால் ஒரு கருத்தரங்கிற்கு, ஒரு படைப்பு ஆய்படு பொருளாக இருக்கும் போது இம்மாதிரியான அகநிலை அளவை உதவாது. புறவைய அளவைகள் தேவை.

புறவைய அளவைகள் நிறைய உள்ளன என்ற போதிலும், அவைகளை இரு வகையாக பிரித்து பொதுமைப்படுத்தி கொள்ளலாம்.

  1. வடிவம்  (Story structure), அழகியல். 
  2. உட்பொருள் (பாடு பொருள்)

வடிவம் : → அழகியலாளர்களின் கோட்பாடாக இது அமைகிறது.

சிறுகதை என்று நாம் உத்தேசிப்பது அடிப்படையில் ஒரு முரண்பாட்டைத் தான். “உடன்பாடு” பெரும்பாலும் சிறுகதை ஆவதில்லை. 

இலக்கிய வடிவங்கள் பல உள்ள போதிலும், சிறுகதைக்கு 1) எடுப்பு 2) தொடுப்பு 3) முடிப்பு என்ற  ஒரு செவ்வியல் வடிவம் உருவாகி வந்துள்ளது. அவற்றை இன்னும் விரிவு படுத்தினால் 

  1. Exposition 
  2. Inciting Incident 
  3. Progressive complexity through multiple pinch point 
  4. Point of no return
  5. Climax
  6. Resolution/Revelation

க சீ சிவகுமார் அவர்களது சிறுகதை இப்படியான கச்சிதத்தன்மையை எங்கோ நிராகரிக்கிறார் என்றே தோன்றுகிறது. அப்படி நிராகரித்தும் அந்த கதைகள் வெற்றி பெறுகின்றன. அப்படி வெற்றி பெறுவதற்கு காரணம் அவர் தனக்கே உண்டான சில உத்திகளை பயன்படுத்துகிறார்.

  1. நகைச்சுவை 
  2. ஸ்டைலிஸ்ம் 

நகைச்சுவை → எடுத்துக்காட்டாக : 

  1. எனக்கும் ஒரு வாழ்த்து 
  2. ஹலோ 
  3. ஒரு நாள் 
  4. குகை 
  5. புதிர் வீட்டு ஜன்னல் 
  6. கட்டு சேவல் மனிதர்கள் 
  7. மஞ்சம் மகிமை 
  8. ஒரு ஊர்ல ஒரு தேர்தல்.

ஸ்டைலிஸ்ம் → சில வாக்கியங்கள் 

  1. மனதில் மௌனக்குளிர் அப்பியது 
  2. சில தப்படிகளில் சிவப்பை தவறவிட்ட நிறம் 
  3. தெருவெல்லாம் வெளிச்ச காளான்கள் 
  4. வயிறு அலை எழும்பாமல் தலை தரை தொடாமல் விரைத்திருந்தது.

இவரது கதைகள் இலக்கற்று திரிகிறது என்றே முதலில் தோன்றுகிறது. ஆனால் அப்படி வெவ்வேறு திசைகளில் விரிந்து செல்லும் கிளைகள் அனைத்தும் கதையின் கடைசி பத்தியில் வந்து குவிந்து வாசகனுக்கு சிறுகதை அனுபவத்தை நிறைவு செய்கிறது. 

இங்கே சிறுகதை அனுபவம் என்று சொல்வது, கதை முடிந்த பின்னரும் வாசகன் மனதில் கதை வளர்ந்து செல்வதை. அதாவது- இல்லாத பக்கங்களில் கதை தன்னை தானே எழுத்திச் செல்கிறது. 

கதை முடிந்த பின்னரும் வாசகன் மனதில் எண்ணற்ற பல சாத்தியங்களாக விரிந்து செல்லும் வாய்ப்பினையும் ஆசிரியர் மறுக்கிறார். அவரது கதைகளில் கடைசி வரி அந்த சத்தியத்தை முறித்து விடுகிறது. கதைகளுக்கு ஒற்றை முடிவு என்று முடித்து விடுகிறார்.

வீடு : அந்த புள்ளியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பயணம் செல்ல 

தமிழரசி: எனக்கு பிறந்த வீட்டுக்கு வந்து செத்துப் போகிற பெண்கள் நினைவுக்கு வந்தார்கள்.

பலூன்: உள்ளே காற்றுள்ள எதுவும் உறங்குவதில்லை.

தன்வினை: ராத்திரி உணர்ச்சிமயமா தின்னியே 

தி நேம் ஐஸ் மணி : அடிபடாமல் நீண்டநாள் வாழனும் என்றால் கொஞ்சம் கட்டுக்குள் இருக்க வேண்டும் 

கதையின் மொத்தப் பரப்பையும்  ஆசிரியர் தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதினால் வாசக இடைவெளி சற்று சுணக்கமாகவே இருக்கின்றன. அதற்கெல்லாம் ஈடுகட்டுவது போல் அவரது ஸ்டாலிசம் கதையெங்கும் விரவிக்கிடக்கிறது. 

கடைசி வரி கச்சிதமாக அமைந்திருக்கும் கதைகளும் இருக்கின்றன.

  1. குகை 
  2. சீற்றம் → revelation 
  3. கடல்கள் காய்வதில்லை 
  4. ஆர்வலரும் இல்லை அடைக்குந்தாழ் 
  5. இயல்பிகந்த கின்னாரம் 
  6. கறி 

கதையின் உடலை மறுக்கும் கடைசி வாக்கியம் என்ற முறைமையை கைவிட்டு. கதையின் உடலை மேலும் விளக்கும் கடைசி வாக்கியம் என்பதாக உள்ளது.

இதை எப்படி புரிந்துகொள்வது என்று யோசிக்கையில். சிறுகதையின் செவ்வியல் வடிவத்தின் சட்டாம்பிள்ளைத் தனத்துக்கு எதிரான செயல்பாடு என்று நான் புரிந்துகொள்கிறேன்.

மேலும் நகைச்சுவை சிந்திக்க வைக்குமா என்ற கலாதித்த கேள்விக்கு தன் பங்கு பதிலையும் நியாயத்தையும் செய்திருக்கிறார். 

உட்பொருள் : → முற்போக்காளர்கள், லட்சியலாளர்களின் கோட்பாடாக இது அமைகிறது.

காக்கா வடை திருடிய கதையை நல்ல சிறுகதை வடிவுக்குள் கொண்டு வந்து விட முடியும். அறம் மழுங்கியிருக்கும் இந்த இக்கட்டான கால கட்டத்தில் அழகியல் கோட்பாடுகள் இலக்கிய தகுதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று லட்சியவாதிகளின் கூற்றாக இருக்கும். 

ஆகையால் கதையின் பேசு பொருள் உயர் விழுமியங்களால் ஆனதாக இருக்க  வேண்டும்.அதுவே நல்ல கதையின் அளவையாக இருக்க முடியும்.

What is your crisis என்று ஒரு கதாபாத்திரத்திடம் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். 

இந்த வரையறையையும் ஆசிரியர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்றே தோன்றுகிறது. அதாவது சிறிய விஷயங்களின் முரண்பாடும் உடன்பாடும் இலக்கியங்கள் பேசியாக வேண்டும் என்கிறார். 

அதாவது காலை காபியில் சீனி போதவில்லை என்ற ரப்ச்சரும் இங்கு முக்கியம். → crisis 

இன்றைய இலக்கியத்தை நடுத்தர வர்க்கத்தின் கலை வெளிப்பாடு என்று சொல்லலாம். இன்னும் சொல்லப் போனால் நடுத்தர வர்க்கத்தின் ஆன்மீக வெளிப்பாடாகவும் இலக்கியத்தை கொள்ளலாம். சாமானியர்களின் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டு மீண்டும் அசாதாரணங்களையும் வீரநாயகர்களையும் உயர் விழுமியங்களையும் எழுதிக்கொண்டு இருக்கிறோம். 

அசாதாரணத்தின் அதிகாரத்துக்கு எதிர் விசையில் ஆசிரியர் செயல் படுகிறார் என்றே நான் புரிந்துகொள்கிறேன்.

இவரது எழுத்தை //அசாதாரணங்கள் அற்ற கலை // என்றே எனக்கு படுகிறது.

இதுவரையில் இலக்கிய அளவைகளை இரு வகையாக 

1) Story structure 

 2) Content 

என்று பொதுமைப் படுத்தி பார்த்தோம்.

அது போக இன்னொன்று இருக்கிறது. மிக சிறந்த சிறுகதைகள் அனைத்தும் இதை நாம் உணர முடியும்.

→ Emotional/Intellectual Pay off – கதை நம்முள் செலுத்தும் அறிவுசார் உணர்வெழுச்சி. இந்த அளவையை கொண்டு ஆசிரியரின் சிறுகதையை பார்க்க முடியுமா? தெரியவில்லை. 

ஏனோ தெரியவில்லை “இயல்பிகந்த கின்னாரம் “ சிறுகதையின் கடைசி வரி நெஞ்சில் அப்பிக்கொண்டது. அந்த வரி → “ உன் கல்லறை வாக்கியம்தான் என்ன?”

ஆமாம்,  உன் கல்லறை வாக்கியம்தான் என்ன?
 

– விஜயகுமார் சம்மங்கரை