நிகர்வாழ்வு – திருதிராஷ்டிரர், பாண்டு, விதுரர்

மழைப்பாடல் வாசிப்பு-3 – விக்ரம்

தங்கள் புறம் எவ்வாறு இருப்பினும் தங்கள் விருப்பங்கள் அல்லது விருப்பமின்மைகள், நிறைவேற்றங்கள் அல்லது ஏமாற்றங்கள் இவற்றிற்கப்பால் தங்கள் அகம் என தங்களுக்கான ஒர் நிகர்வாழ்க்கை கொண்டவர்களாக உள்ளனர் திருதிராஷ்டிரரும், பாண்டுவும், விதுரரும்.

இசையால் அமைந்தது திருதிராஷ்டிரரின் உலகு.  அவர் இசையால் அறியவொண்ணாதது என்று ஒன்றில்லை.  தன் திருமணத்தின் பொருட்டான காந்தாரப் பயணத்தில் தான் அறிந்திரா நிலத்தை அதன் விரிவை, அமைதியை தன் செவிகளாலேயே அறிந்துகொள்கிறார் திருதிராஷ்டிரர்.  ஆழமற்ற பாலைவன நதியில் பிரதிபலிக்கும் விண்மீன்களைக் கூட அவர் அந்நிலத்திற்கு வரும் முன்னரே இசையால் கண்டுவிட்டவராக இருக்கிறார்.

”விஹாரி ராகம் பாடிக்கேட்டபோது அவற்றை நான் பார்த்தேன். பாலைவனத்தில் நதியில் விண்மீன்கள் விழுந்துகிடக்கும்” என்று விதுரரிடம் சொல்கிறார் அவர்.  திருதிராஷ்டிரரின் நிகர் வாழ்வில் தன்னை இணைத்துக்கொள்ள முடிந்த காந்தாரியின் அன்பை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். விழியற்றவரை மணம்முடிப்பது குறித்து மற்றவர் கருத்துகளுக்கு காந்தாரியின் பதில்களை கவனிக்க வேண்டும்.  எல்லா ஷத்திரியர்களும் விழியற்றவர்களே என்கிறார் அவர்.  

”அவளிடம் சொல், மலைக்கழுகுகள் கூடணைவதில்லை, கரும்பாறைகளையே தேர்ந்தெடுக்கின்றன என்று”

பின்னாளில் புத்திரசோகத்தில் தவிக்கும் திருதிராஷ்டிரரை அமைதிப்படுத்த காந்தாரியால் இயல்வது அவரது தனித்த உலகிலும் ஒர் அங்கமாக காந்தாரியால் ஆகிவிட முடிவதால்தான்.

பாண்டுவின் நிகர்வாழ்வு வேறொரு விதமானது.  குழந்தைகளைக் கொண்டு, குறிப்பாக தருமனைக் கொண்டு தன் உலகை அவர் உருவாக்கிக் கொள்கிறார்.

என் மைந்தனை தோளில் சுமந்துகொண்டிருக்கையில் நானடையும் மனமயக்குகள்தான் எத்தனை அழகியவை” என்றான் பாண்டு. “என் மூதாதையரை சுமந்துகொண்டிருக்கிறேன் என்று உணர்வேன்என் மூதாதையரின்ஊர்தியே நான்அவர்களுக்கு மண்ணைத்தொட்டு நடக்க ஊன்பொதிந்து உருவான கால்கள்அவர்களைதொட்டறிய தசைஎழுந்த கைகள்பின்பு நினைப்பேன்மண்ணாக விரிந்து கிடப்பவர்கள் என்மூதாதையரல்லவா எனஅவர்களில் ஒரு துளியை அல்லவா என் தோளில் சுமந்துசெல்கிறேன் என

பாண்டுவின் உலகினுள் குந்தி நுழைவதில்லை.

விதுரரின் நிகர்வாழ்வு வேறொரு வகையில்.  அதைப்பற்றி திருதிராஷ்டிரருடன் கருத்துப்பகிர்ந்து கொள்கிறார் அவர்.  புறத்தில் சூத அமைச்சர் எனப்படுவது, தன் எல்லைகள் அவருக்கு பொருட்டல்ல, எவ்விதமான தீவிர விழைவும் அவருக்கு அங்கில்லை.  மானுட உணர்வுகள் எதையும் நேரடியாகச் சுவைக்க முடியாத, அவற்றை அறிவாக உருமாற்றி அறிதலின் இன்பமாக மட்டுமே அனுபவிக்கும் தன் இயல்பை அவர் திருதிராஷ்டிரரிடம் கூறுகிறார்.  ஆனால் அவருக்கு பெரிதான நிகர்வாழ்வு காவியங்களின் வாசிப்பில் உள்ளது.

ஆனால் அரசேநான் அறியும் இன்னொன்று உள்ளதுஏடுகளில் நான் இன்னொரு முறை வாழ்கிறேன்அங்கேஇருப்பது அறிவுஆனால் அவ்வறிவு திரும்ப என்னுள் அனுபவங்களாக ஆகிவிடுகிறதுகாவியங்களில்தான் நான்மானுட உணர்வுகளையே அடைகிறேன் அரசேவெளியே உள்ள உணர்வுகள் சிதறிப்பரந்த ஒளி போன்றவைகாவியங்களின் உணர்வுகள் படிகக்குமிழால் தொகுக்கப்பட்டு கூர்மை கொண்டவைபிற எவரும் அறியாதஉணர்வின் உச்சங்களை நான் அடைந்திருக்கிறேன்பலநூறுமுறை காதல் கொண்டிருக்கிறேன்காதலைவென்று களித்திருக்கிறேன்இழந்து கலுழ்ந்திருக்கிறேன்இறந்திருக்கிறேன்இறப்பின் இழப்பில்உடைந்திருக்கிறேன்கைகளில் மகவுகளைப் பெற்று மார்போடணைத்து தந்தையும் தாதையும்முதுதாதையுமாக வாழ்ந்திருக்கிறேன்.”

புறத்தில் விழியற்ற திருதிராஷ்டிரர் நிகர்வாழ்வில் விழியுள்ளவர், புறத்தில் பெரிதும் துய்ப்பற்ற விதுரர் நிகர்வாழ்வில் பெருந்துய்ப்பாளர், புறத்தில் அதிகம் வாழ்நாள் பெறாத பாண்டு நிகர்வாழ்வில் நீடுவாழ்ந்தவர்.

அன்னையரின் ஆடல்களே பின்னாளில் கௌரவரிடமும் பாண்டவரிடமும் பேருருக்கொண்டன என்றாலும் அவற்றில் இம்மூவரது அகவாழ்வும் தமக்குரிய தாக்கத்தையும் செலுத்தின என்று எண்ணுகிறேன்.

திருதிராஷ்டிரர் – மழைப்பாடலின் சலுகைகள்

மந்தாரம் உந்து மகரந்தம்

மணந்தவாடை

செந்தாமரை வாள்முகத்திற் செறி

வேர்சிதைப்ப

தந்தாம்உலகத்திடை விஞ்சையர்

பாணிதள்ளும்

கந்தார வீணைக்களி செஞ்செவிக்

காது நுங்க

அனுமனின் இலங்கை நோக்கிய வான் பயணத்தில் வான்மீகி அவருக்கு வழங்கியதைக் காட்டிலும் அதிக சலுகைகள் வழங்குகிறார் கம்பர்.  அனுமனின் முகத்தின் வியர்வையை வாசம்வீசும் மந்தார மலர்களின் காற்று போக்குகிறது வானின் இசைவலரின் பிறழாத காந்தாரப் பண்ணின் வீணை இசை கேட்டு அவரது செவிகள் களிக்கின்றன.

மொத்த வெண்முரசும் அதன் முதன்மைப் பாத்திரங்களுக்கு, துணைப்பாத்திரங்களுக்கு வழங்கும் இடமும் சலுகைகளும் மிகப்பெரியவை.  அவற்றை மகாபாரதத்துடன் அல்லது பிற காவியங்களுடன் ஒப்புநோக்குவது அவசியமற்றது எனினும் ஒரு சுவாரஸ்யத்திற்காக மழைப்பாடலின் திருதிராஷ்டிரரை எடுத்துக்கொள்கிறேன்.  திருதிராஷ்டிரருக்கு ஜெயமோகன் அளிக்கும் இசை உலகு மிகப்பெரியது.  அத்துடன் பேரழகியான காந்தாரியுடன் திருதிராஷ்டிரரின் திருமணம் நிறைவேற பீஷ்மர் மீதான மதிப்பு, காந்தாரியின் கனிவு, சகுனியின் அரசியல் கணக்குகளுக்கு ஒத்து அமைவது எனப்பல காரணங்கள் இருப்பினும் திருதிராஷ்டிரரை பலரது பரிவுக்கு உரியவர் என்பதல்லாமல் ஒரு தகுதிமிக்க மாவீரராகவே நிறுத்துகிறது மழைப்பாடல்.  காந்தாரியைக் கைப்பற்றும் பொருட்டு லாஷ்கர்களுடன் ஒரு ஆக்ரோஷமான சண்டைக்காட்சி அவருக்கு வழங்கப்படுகிறது.  பொதுவாக வெண்முரசின் போர்காட்சிகள் ஒன்றை ஒன்று விஞ்சுபவை, ஒவ்வொரு நாயகருக்கும் எனப் பல அமைந்திருப்பினும் ஒவ்வொன்றும் தனித்தன்மையும் கொண்டவை.  திருதிராஷ்டிரரின் இவ்வெளிப்பாட்டில் திறனில் ஒரு சில நிமிடங்களுக்கு அவரை கம்பனின் சுந்தரகாண்டத்தின் அனுமனுக்கே நிகர்த்துகிறார் ஜெயமோகன்.

ஒடிந்தன உருண்டன உலந்தன புலந்த;

இடிந்தன எரிந்தன நெரிந்தன எழுந்த;

மடிந்தன மறிந்தன முறிந்தன மலைபோல்

படிந்தன முடிந்தன கிடந்தன பரிமா.

வெருண்டனர் வியந்தனர் விழுந்தனர் எழுந்தார்

மருண்டனர் மயங்கினர் மறிந்தனர் இறந்தார்;

உருண்டனர் உலைந்தனர் உழைத்தனர் பிழைத்தார்

சுருண்டனர் புரண்டனர் தொலைந்தனர் மலைந்தார்.

(அனுமன் நாற்படைகளையும் அழித்தல் – சம்புமாலி வதைப்படலம்)

விழிப்புலனுக்கு நல்அனுபவம் அளிப்பது பெருமழையை பெய்யக் காண்பது, பெய்யலினூடே விசைந்தாடும் மரங்கள், அதன் தழுவிப்படர்ந்து சிலிர்க்கும் கொடிகள், நனைந்த புற்கள்.  ஒரு பெருமழையின் அழகைக் காண்கையிலும் கொள்வன பல எனில் விழிகள் கொள்ளாமல் தவறவிடுவனவும் பல.  எனவேதான் ஒவ்வொரு மழையும் புதுமழை, காணதன காணப் பெறல் கண்டன புதுமை பெறல் என.  கொள்திறனுக்கு ஏற்ப முடிவிலி என தன்னை விரித்துக்கொண்டே செல்கிறது இயற்கை.  வெண்முரசின் வாசிப்பு –மழைப்பாடல் வாசிப்பும் அது போன்றதுதான்.

மழைப்பாடல் வாசிப்பு 2 – விக்ரம்

அம்பிகையும் அம்பாலிகையும் தம் குழந்தைகளை முதன்மைப்படுத்த விரும்பும் அன்னையர் மட்டுமே.  அரசியல் ஆடல்களில் கூர்மையும் நுட்பமும் கொண்டவர்கள் அல்ல.  அம்பிகையின் விருப்பம் திருதிராஷ்டிரனுக்கு செலுத்தப்பட்டது போல அம்பாலிகையின் விருப்பம் பாண்டுவிற்குள் செலுத்தப்படவில்லை.  அம்பிகை அம்பாலிகையின் அடுத்தநிலை என காந்தாரியும் குந்தியும் எனில் தன் கணவனின் இசைக்குள் நுழைந்துவிட்ட காந்தாரியை குந்திக்கு சமன்செய்ய முடியாது.  என்றபோதும் சகுனி அதை ஈடுசெய்கிறார்.  வேழம் நிகர்த்த துரியோதனனின் பிறப்பின் போதே வேழத்தை மத்தகம் பிளந்து கொல்லும் அனுமனின் கதையும் அகழ்ந்தெடுக்கப்படுகிறது.  பீமனின் பிறப்பு நிகழ்கிறது.  ஒவ்வொன்றும் எதிர்விசையால் சமன்செய்யப்பட்டு கூர்கொள்கிறது.  பாலையின் விழைவினை எதிர்கொள்ளத் தயாராகிறது கங்கைச் சமவெளியின் விழைவு.

பாரதப்பெருநிலத்தின் மீதான காந்தாரப் பாலையின் விசை இன்றுவரை மீள நிகழும் ஒன்றாகவே தோன்றுகிறது.  பாண்டவப்பிரஸ்தம் என்னும் பெயர் பின்னாளில் பானிபட் என ஆனது இங்கு வரலாற்றுக்கு புவியியல் வகுத்தளித்த பாதையை உணர்த்துகிறது.  நிலம், நீர் – கடல் என்பது கடந்து காற்றிலேறி விண்ணில் என இனி மனிதரை வைத்தாடும் விசைகள் புதிய களங்கள் வகுக்கும்போலும்.  மீண்டும் தொடங்கிய இடத்திலேயே தம் ஆடலை முடிப்பார்கள் போலும் இந்திரனும் சூரியனும்.

கர்ணனின் பிறப்பை பாண்டுவிடம் சொல்லிவிடப் போவதாக சொல்லும் குந்தி பாண்டு அதை ஏற்கும் மனநிலையில் இல்லை என்பதை அறிந்தவுடன் அதை மறைத்துவிடுகிறார்.  பின்னாளில் கான்வாழ்வில் தந்தையாகும் விருப்பத்துடன் பாண்டவரின் பிறப்பை ஏற்கும் பாண்டுவிடம், பின்னர் அவர்களிடம் பேரன்பு கொண்டவராக விளங்கும் பாண்டுவிடம் கர்ணனைப் பற்றி குந்தி சொல்லியிருக்க முடியும்.  அதை அவர் மகிழ்வுடன் ஏற்பவராகவே இருந்திருப்பார்.  எனினும் குந்தி அவ்வாறு செய்வதில்லை அதற்கான அரசியல் காரணங்கள் குந்தியிடம் உள்ளன.

குந்தியிடம் திருமணம் நிகழ்ந்த பின்னான முதல் இரவிலேயே பாண்டு தன்னுள் இருக்கும் ஆறு பாண்டுக்களைப் பற்றி சொல்கிறார்.  பாண்டுவின் ஏக்கத்தின் விழைவான அக்கனவை நிறைவேற்றி வைத்தவர் ஆகிறார் குந்தி.  எனினும் பாண்டவர் பிறப்பில் விசித்திரவீரியனைப் ஒத்தவரான பாண்டுவின் ஏக்கத்தின் விழைவிற்கும் குந்தியின் பெரும் அரசியல் விழைவிற்கும் வேறுபாடு உள்ளது.  பாண்டவர்களை அரசியல் திட்டத்திற்கான ஆற்றல்களாக பார்க்கிறார் குந்தி.  உயிர் ஏக்கத்திற்கு அருள்கிறது வான் அவ்வருளின் வரங்களைப் பெருவிழைவு தன் கரங்களில் கொள்ளும் நேரம் யாவும் திரிபடையத் துவங்கின்றன என்று தோன்றுகிறது.

பாண்டு அரசியல் விழைவுகள் அற்றவரா என்றால் ஆம் அவர் அரசியல் விழைவுகள் அற்றவர்தான்.  ஆனால் முற்றிலும் அரசியலே அற்றவரா என்றால் அவ்வாறல்ல என்று எண்ணுகிறேன.  எப்போதும் தருமனைத் தன் தோளில் சுமந்தலையும் பாண்டு குந்தியின் அரசியலில் நோக்கற்றவர் போலத் தோன்றியபோதும் அதை அறிந்தே இருந்தார் என்று தோன்றுகிறது.  பின்னாளில் குந்தியே அச்சமடையும் தருமன் பாண்டுவின் தயாரிப்புதானே? ஒருவகையில் அதில் குந்திக்கான பாண்டுவின் செய்தி பொதிந்துள்ளது என்று தோன்றுகிறது.

இளைய வியாசரெனத் தோற்றம் கொண்ட விதுரர் பீஷ்மருக்கு பிடித்தமானவர்.  திருதிராஷ்டரனின் பேரன்பைப் பெற்றவர்.  சத்தியவதியால் வளர்க்கப்பட்டவர், நகையாடலில் அவர்தன் பேரரசியென்னும் வேடம் கலைத்து சிறுமியென உணரச்செய்பவர்.  விதுரருடனான சந்திப்பின் போது தான் கவலையற்றிருப்பதாகச் சொல்கிறார் சத்தியவதி.  பாட்டிக்கும் பேரனுக்குமான உறவு இவ்வாறிருக்க விதுரர் எவ்வகையிலும் தன் அன்னை சிவையைக் பொருட்டெனக் கருதியவர் அல்ல.  அம்பிகை அம்பாலிகை சிவை என்னும் வரிசையில் முன்னிருவரும் தம் கனவு கலைத்து கான்புகுகிறார்கள் எனில் சிவை விதுரரின் பொருட்டு தன் நிறைவேறாக் கனவினால் தன்னைத்தானே ஒடுக்கி சுருக்கி தனிமை கொள்கிறார்.  சத்தியவதிக்கும் சிவை ஒரு பொருட்டல்ல.  தன்னால் கவர்ந்துவரச் செய்யப்பட்ட அம்பிகை அம்பாலிகையின்பால் கொண்ட அளவிற்கு சிவையின் மீது அவர் கருத்து கொள்வதில்லை.

குந்தியும் தன் அன்னையின் மீது அணுக்கம் அற்றவர்.  அவ்வகையில் விதுரரை ஒத்தவர்.  விதுரருக்கும் குந்திக்குமான உறவு நுட்பமான ஒன்று.  நடுவுநிலை என்றபோதும் குந்திக்கு இசைவானதாகவே அஸ்தினபுரியில் அவரது அரசியலாடல்கள் இருக்கின்றன என்று எண்ணுகிறேன்.  விதுரர் புதிரானவராகவே தோன்றுகிறார்..  பீஷ்மருடனான தன் உரையாடலில் எதிர்காலத்தில் புதிதாக எழுச்சி பெறக்கூடிய மக்கள், எழக்கூடிய மௌரியப் பேரரசு உள்ளிட்ட அரசுகள் பற்றி கூறும் அவரது கணிப்பு, தீர்க்கதரினம் அவரது அறிவுத் திறனைக் காட்டுகிறது.  எனினும் சூதர் என்னும் தன் எல்லைக்குள் நிற்பவர் அவர்.

என்றுமுளது…

வெண்முரசு வாசிப்பு குறிப்பு – விக்ரம்

ஜெயமோகன் வெண்முரசில் இதையெல்லாம் திட்டமிட்டுச் செய்தாரா அல்லது இவையெல்லாம் தற்செயலானவைதானா என்றொரு கேள்வி முன்பு எழுவது உண்டு.  ஜெயமோகனின் வெண்முரசு தற்செயல்தான் ஆனால் திட்டமிட்ட தற்செயல் என்று அப்போது விடையளித்துக்கொள்வேன்.  திட்டமிட்டது அவரல்ல.  கடல்கள் எவ்வளவு நாள் கடல்களாக இருக்கவேண்டும் அவை எப்போது பனிமுடி சூடி பெரும் மலைகளாக ஆகவேண்டும், மலைகள் எப்போது பெருங்கடல்களாக ஆகவேண்டும், வனங்கள் எப்போது பாலைவேடம் பூணவேண்டும் பாலை எப்போது அடர்வனம் ஆகவேண்டும் என்றெல்லாம் திட்டமிடும் ஆற்றல் ஒன்றுள்ளது அதுவேதான் வெண்முரசைத் திட்டமிட்டது என்று உணர்கிறேன்.

எம்மொழியினர் ஆயினும் நுண்ணுணர்வுடையோர் அறிந்த ரகசியம் ஒன்றுள்ளது காவியங்கள் மொழிகளுக்கு ஆயுள் நீட்டிப்பு வழங்குகின்றன.  ராமாயணமும் மகாபாரதமும் இந்திய மொழிகளில் மீள நிகழ்த்தப்பட்டதில் வியப்பொன்றுமில்லை.  சமகாலத்தினை மட்டுமே உட்படுத்தி எழும் இலக்கியங்கள் காலத்தால் மதிப்பிழந்துவிடுகின்றன.  தன்காலத்தில் நிலவும் மொழியை அதுகாணும் பொருட்களை அதன் நிகழ்வுகளை எவற்றையும் அதற்குரிய காலத்திற்கு அப்பால் அதிகம் கொண்டுசெல்ல அவற்றால் இயல்வதில்லை.  பேரிலக்கியங்கள் மட்டுமே அந்த வல்லமை கொண்டவை.  அவை மனிதரிலும் இயற்கையிலும் “என்றுமுள்ளவற்றை”க் கொண்டு எழுகின்றன.  அத்துடன் இக்கணம் என்னும் உள்ளியல்பான மெய்மையையும் இணைத்துக்கொண்டு வண்ணங்கள் தொட்டு பெரும்காலத் திரைமீது தீட்டப்படுகின்றன.

நுண்ணறிவுடையோர் காவியங்களை மொழிக்கு ஊட்டம் எனக் கண்டுகொள்வது, அவை தம்மொழியிலும் நிகழவேண்டும் என்று விரும்புவது வியப்பல்ல.  சிற்றெறும்பின் வாழ்கைதான் நம் சொற்களும் வாழ்நாள் குறுகியவை ஆயின் பெரும்கலம் என காவியங்கள் புகுந்து காலத்தின் நீண்ட மறுகரை அவையும் சேர்கின்றன.  இன்றுள்ளது என்றுமுள்ளது அல்ல ஆனால் என்றுமுள்ளதன் சன்னதியில் நிறுத்தப்பெறுவதன் வாயிலாக என்றுமுள்ளதாக ஆவது விந்தை.

கம்பராமாயணம் தன்மொழியை இன்றுவரை பத்துநூற்றாண்டுகளுக்கு கடத்தியது.  ஜெயமோகனின் வெண்முரசு இதுகாறும் பயணித்த தமிழ்மொழியை அதன் அத்தனை வரங்களையும் இப்பெருநிலத்தின் அழியாச் செல்வங்களுடன் இனி பதினைந்து நூற்றாண்டுகளுக்கு கொண்டுசெலுத்த இருக்கிறது.

மானுடம் தழுவும் பேரிலக்கியங்களும் கவிதை என்று நுண்மொழியும் என இவையெல்லாம் இல்லாவிட்டால் மொழி என்பது வெறும் கருத்துப்பறிமாற்றக் கருவி என்பதற்கப்பால் என்ன இருக்கிறது? மொழி இனிது என்று எதனால் சொல்கிறோம்? அதன் உள்ளடக்கத்தைக் கொண்டுதானே? இல்லை அதெதுவும் இல்லாமலேயே ஓசைநயத்தால் மட்டுமே கூட இனிது என்றால் ஓசைநயம் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு வகையில் இருக்கத்தானே செய்யும்? அவரவர் மொழி அவரவர் காதுக்கு இனியது பொதுவில் அளவிடும் கருவி எங்குள்ளது? அவரைக்காய் பொறியல் ஈடுஇணையே இல்லாத சுவைமிக்கது என நான்சொல்ல கரப்பான்பூச்சி பொறியல் அதைவிட சுவையானது என்று இந்தோனேசியக்காரன் சொன்னால் எதைக்கொண்டு அதை நான் மறுப்பது? சீனமொழி கேட்க நன்றாக இல்லை மலாய் மொழி கேட்க இனிதாக இருக்கிறது என்று ப.சிங்காரத்தின் புயலிலே ஒருதோணியில் வரும் வயிரமுத்துபிள்ளை கருதுகிறார்.  வயிரமுத்துபிள்ளையின் சொற்கள் சீனனின் காதுகளுக்கு எப்படி இருக்குமோ?

மானுடப்பொதுமை கொண்டவை பெரியன சில அரியன சில பேராற்றலுடன் எழுந்து மொழிகளை உலகில் தூக்கி நிறுத்தவேண்டும்.  அப்படி ஒரு வரம் தமிழுக்கு அவ்வப்போது கிடைத்துக்கொண்டு இருக்கிறது, கம்பராமாயணம் திருக்குறள் என்று.  இன்று வெண்முரசு.  அது தன்னைத்தானே நிறுவிக்கொள்கிறது நூற்றாண்டுகளின் பரப்பில் விரவிக்கொள்கிறது.  கலிபோர்னியாவின் செம்மரங்களைப்போல அதன் காலப்பரப்பு வேறு.

தற்செயல்தான் ஆனால் திட்டமிடப்பட்டது என்று ஏன் கருதினேன் என்றால் இவ்வளவு பெரிய புனைவுத்தொடரில் அமைந்த ஒருங்கமைவுதான்.  இதை திட்டமிடாமல் நிகழ்த்த முடியாது திட்டமிட்டாலோ நிகழ்த்தவே முடியாது.  இங்கு ஒருங்கமைவு என்று நான் கூறுவது அதன் தகவல் பொருத்தங்களை அல்ல அதன் அகத்தை – உணர்வுகளை, இருமைகளை – கீழ்மைகளும் பெரியவையும் – பேருண்மைகளும் எனக் கோர்த்து ஒருமை என செலுத்தும் அந்த ஒருங்கமைவைக் கூறுகிறேன்.

வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு கோணங்களில் வாசிப்பு சாத்தியம் வழங்குகிறது வெண்முரசு.  நீ்ங்கள் யாராக இன்று இருக்கிறீர்களோ அதற்கேற்ப உங்களுக்கு இன்று அதில் ஒரு பயண வழி துலங்குகிறது.  அவ்வழியே பயணிக்க பின்னர் நீங்கள் உங்களை வேறு ஒருவராக வேறோர் இடத்தில் கண்டு வியக்க நேர்கிறது.  ஒவ்வொரு நதியாகவும் தனைக்கண்டு பின்னர் ஒரே கடல் நான் என முறுவலித்து – மோனவாரிதி என்கிறார்களே அத்தகைய ஒரு சாத்தியம் இங்குள்ளது.  வெண்முரசு வாசிப்பில் ஒவ்வொருமுறையும் அருளியல் என்றுகருதாமல் என்னால் இருக்க இயல்வதில்லை.

வெண்முரசு மூன்று சொற்களில் – என்றுமுள்ள மனித இயல்புகள், பெரும்புடவி, மெய்மை.  இரண்டு சொற்களில் – உலகியல், மெய்மை.  ஒரே சொல்லில் என்றால் வாழ்க்கை.

எனக்கே இப்படி என்றால் ஒரு மெய்ஞானி வாசிக்க வெண்முரசின் எல்லா பாதைகளினூடாகவும் அவருக்கு அந்த நிலவு தென்படக் கூடும்.  புன்னகைக்கக் கூடும்.

விக்ரம்

மழைப்பாடல் 1 – ஆர். ராகவேந்திரன்

மழைப்பாடல் வாசிப்பு ( 1 முதல் 25 அத்தியாயங்கள்)

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட-பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்-களித்
தாடுங் காளீ! சாமுண்டீ! கங் காளீ!

  • பாரதியார் (ஊழிக்கூத்து)

அன்னையும் அத்தனும் ஆடும் பகடைகள் தான் யுகங்கள் எனக் காலக்கடலில் விரிகின்றன.
பகடையின் வீச்சில் பகை கொள்ளும் இந்திரனும் கதிரவனும் தங்கள் விளையாட்டை மண்ணில் தொடர முடிவு செய்கிறார்கள். மரணமும் உதிரமும் வலியும் துயரும் விளையாட்டின் பகுதிகளே புவியின் சுமையைக் குறைக்க இயற்கை நிகழ்த்தும் .தூய்மைப்பணி

பீஷ்மர் வடமேற்குப் பாலையில் தொடர்ந்து அலைகிறார். காந்தாரி திருதராஷ்ட்ரனை மணந்து
ஹஸ்தினாபுரம் வருகையில் உதிர மழை பொழிகிறது. சிரவண மாதத்தில் கடைசி வரும் மழை
ஜூலை மாதத்தில் வட இந்தியாவில் பொழியும் தென்மேற்குப் பருவக் காற்றின் கொடையாகி
வருகிறது

வேழாம்பல் பறவை மழை நீருக்குக் காத்திருப்பது போல அஸ்தினபுரி பீஷ்மரின் கருணைக்கு
வாய்பிளந்து நிற்கிறது. பதினெட்டு ஆண்டுகள் கழித்து நகர் புகும் மாமழையாக பீஷ்மர். அந்த
மழையில் நனைந்து மதர்த்து நிற்பவன் திருதராஷ்ட்ரன். உடலாகவே வாழ்ந்தவன் பீஷ்மரிடம்
மற்போரில் தோற்றவுடன் உருகிப் பணிகிறான். விழி தவிர அனைத்துப் புலன்களாலும்
இசையைத் துய்ப்பவன். அவனுடன் மற்போரில் அவன் உடலை அறியும் பீஷ்மர் அவனுள்
ஓடும் அதிர்வை அறிகிறார். விதுரன் சொற்கள் மூலம் திருதனை அறிகிறான்.

விதுரன் உற்சாகம் நிறைந்த ராஜ தந்திர – சட்ட – அயலுறவு நிபுணனாகத் தன்னை
ஆர்வத்துடன் தயார் செய்து கொள்கிறான். அவனது பிறப்பு அவனுக்கு பெரும் தடையாக
இருப்பதை உணர்ந்து அறிவாலும் சொற்களாலும் தனது இடத்தை உருவாக்கிக் கொள்கிறான். விதுரன் ஆயுதங்களை மேற்பார்வையிட்டு கோட்டைத் தலைவனிடம் உரையாடுவது அமைச்சருக்கும் ராணுவத்தலைவருக்கும் எல்லா நவீன அரசுகளிலும் தொடரும் பூசலை குறிக்கிறது. ராணுவத்தை ஒரு ஐயத்துடன்தான் ஜனநாயக நாடுகளிலும் ஆட்சியாளர்கள் வைத்திருக்கின்றனர். நேரு – திம்மையா உறவு வரை வரலாறு பதிவு செய்துள்ளது. விதுரன் கோட்டை மேல் தயாராக நிறுத்தியுள்ள ஆயுதங்களை ஏன் துடைக்கவில்லை என்கிறான். பகலில் விபத்து ஏற்படலாம் என்கிறான் கோட்டைத் தலைவன். இரவில் செய்யலாமே என்கிறான் விதுரன். முறுமுனையில் பதில் ஏதும் வருவதில்லை. விதுரரின் துணிவு பீஷ்மர் என்னும் கார்மேகம் அஸ்தினபுரியை கவிந்து கொண்டிருப்பதால் வருகிறதோ?

போர் மழை போன்றது. பல முனைப் பூசல்களை அடித்துச் சென்று புதிய விதைப்புக்கு
புவியைத் தயார் செய்கிறது. போர் குறித்த பொருளியல் உரையாடல்கள் மெதுவாகத்
துவங்குகின்றன.

பீஷ்மர் கருணை மிகுந்து வடமேற்கே மாறி வீசிய மாரியாக காந்தாரம் செல்கிறார்.பாரத
வர்ஷத்தின் பசுமையான வரலாறெனும் வயலில் வடமேற்கு ரத்தம் கலக்க வழி செய்கிறார்.

எதிர்கால அரசியல் கணக்குகள் நிறைந்த சத்யவதி பீஷ்மரை காந்தாரம் அனுப்பி வைக்க
முயல்கிறாள் . அதற்கு விருப்பமில்லாத பீஷ்மரை பேருரு கொண்ட விழியிலா மன்னன் தாள்
பணிந்து விழும்போது மனம் மாறுகிறார் . இன்னொரு மனமாற்றம் சகுனியிடம் நிகழ்கிறது.
பீஷ்மரை அளக்க முடிந்து தோற்றபோது தனது ஆணவமும் கணக்குகளும் இழுக்க,
காந்தாரியை மகற்கொடை மறுக்கிறான் சகுனி. ஆனால் காந்தாரியின் நிமிர்வும் கனிவும்
நிறைந்த பேச்சு சகுனியின் மனதை மாற்றுகிறது.

சிறு சிறு நிகழ்வுகள் உலக நடப்பை மாற்றி விடுகின்றன. மகதத்தில் இருந்து சமாதான ஓலை
சகுனிக்கு வருகிறது. அதைக் கொண்டு வந்த செங்கழுகை ஒரு பசித்த ஓநாய் பிடித்துத் தின்று
விடுகிறது. அந்தக் கழுகை அம்பால் அடித்தது சகுனி. இரவில் துயிலாது இருந்த சகுனியை
தனது ஓலத்தின் மூலம் வெளியே வரச் செய்தது அந்த ஓநாய் . சகுனிக்கு துயில் வராமல் இருந்த
காரணம் பீஷ்மரின் மண வேட்பு தூது. ஒருவேளை கழுகின் செய்தி கிடைத்திருந்தால் காந்தாரம்
மகதத்துடன் மண உறவு கொண்டிருக்கும். மகாபாரதம் வேறு மாதிரி இருந்திருக்கும்

வேறு மாதிரி போகக் கூடிய பல்வேறு சாத்தியங்களின் விதைகள் காலமெனும் மணல் பரப்பில்
கொட்டிக் கிட க்கின்றன.

பாலைப் பயணத்தில் பீஷ்மர் கண்ட எண்ணற்ற விதைகள் ஒவ்வொன்றும் ஒரு நிகழ்தகவு.
தொடர் நிகழ்வில் ஒரு கண்ணி மாறினாலும் உருவாகும் காடு முற்றிலும் வேறாக இருக்கும்.

சத்தியவதி பீஷ்மரை தூது அனுப்பும் பகுதி கானல் வெள்ளி . காந்தாரி வெண்மணல் அனுப்பும்
அரிய வெள்ளி. அல்லது இந்த மொத்த நிகழ்வும் மயக்கும் பொய்த் தேர்.

பருவ மழையின் பரிசுதான் பாரதத்தின் வாழ்வும் பண்பாடும். புயல் உருவாக
பாலைவனங்களும் பங்களிக்கின்றன என்கிறார்கள் புவியியல் அறிஞர்கள்.
நிலத்தைக் காய்த்து காற்றை இலேசாக்கி அழுத்தத்தில் பேதமிட்டு விளையாடி கடல் நீரை
உறிஞ்சி முகிலில் நிரப்பி வீசிப் பொழிகின்றன தென் மேற்குக் காற்றுகள். மணலைக்
காற்றில் ஏற்றி விளையாடுகின்றன நெருப்பு தெய்வங்கள் . சகுனி என்னும் வெந்த காற்று
பாரதத்தின் மீது மழையைப் பொழிவிக்க காந்தாரம் தொட்டிலாக உள்ளது. ஆனால்
பொழிவது உதிரமழை .

பீலிப்பனையில் காந்தாரிக்கு தாலிச்சுருள் செய்ய பாலை எங்கும் அலைகிறார்கள், இறுதியில்
வெம்மையின் அனைத்து வீச்சுகளையும் தாங்கிய பேரன்னையான தனித்து நிற்கும் பூத்த
பனையைக் காண்கிறார்கள் கடினமான சூழலில் பெருகும் உயிர்த்தொகையின் அடையாளம்
பனை. காந்தாரியின் தங்கைகள் விழியிலா வேந்தனை மணக்கத் தயார் ஆகிறார்கள்.

திருதனின் உள்ளே ஓடிக் கொண்டிருந்த இசையைத் தானும் கேட்கிறாள் காந்தாரி . அந்த
இசைக்கணம் மிகக் குறுகிய மின்னல் அந்தக் கணத்தைப் பிடித்து வைத்துக் கொள்ளக்
கண்களைக் கட்டிக் கொண்டு விடுகிறாள். திருதன் வாழ்வில் முதல் முறையாக மழையில்
நனைகிறான்.

திருதராஷ்ட்டிரன் காற்றின் இசையில் மந்திர ஸ்தாயில் ஒலிக்கும் செவ்வழிப் பண்ணைக்
கேட்கிறான். அவனுக்கு என்றோ ஒருநாள் திருவிடத்து கலைஞர் இசைத்த சாமவேத பாடல்
இசை மட்டும் நினைவுக்கு வருகிறது. சொற்களை விதுரன் எடுத்துத் தருகிறான்

சாமவேதம் ஐந்தாம் காண்டம் ஒன்றாம் பாகம் ஐந்தாம் பாடல் பவமானன் என்னும் சோமனுக்கு
உரியது. பொங்கும் நதிகள்போல, கூரம்புகள்போல துள்ளி வரும் நெருப்பின் மகன் –
கதிரவனின் நண்பன். இந்திரன் வயிற்றில் சோமச் சாற்றை நிறைப்பவன். இரு பெரும்
சக்திகளின் மோதல் இனிய கல்லாக இசையாக ஆவியாக திருதனின் செவிக்குள் காற்றும்
நெருப்பும் போலக் கரைகின்றன.

அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச் செய்தாள் என்னை.

ஆர் ராகவேந்திரன்
கோவை

முதற்கனல் 2 – ஆர். ராகவேந்திரன்

தீச்  சாரல் , தழல் நீலம் ,வேங்கையின் தனிமை, அடியின் ஆழம், வாழிருள் ஆகிய பகுதிகளை முன்வைத்து ஆர். ராகவேந்திரன் ஆற்றிய சிறப்புரை:

“எதனையும் விட வேகம் கொண்டவன் என்று தன்னை ஒளி நினைத்துக் கொள்கிறது.  ஆனால்  அது தவறு. எவ்வளவு விரைவாக ஒளி சென்றாலும் தனக்கு முன்னே அங்கே சென்றடைந்து தனக்காகக் காத்துக்  கொண்டிருக்கும் இருளைக் காண்கிறது.”

டெர்ரி பிரச்சட்டின்  ரிப்பர் மேன் நாவலில்  வரும் இந்த பிரமிப்பூட்டும் வரிகளை முதற்கனலுக்கு முத்தாய்ப்பாகச் சொல்லலாம் 

 முதற்கனலின் அத்தியாயம் 27 முதல் 50 வரையிலான பகுதிகள் அம்பையின் தீப் புகுதலையும்,  பீஷ்மர், வியாசர், சிகண்டியின் நெடும் பயணங்களையும்  திருதராஷ்டிரன், பாண்டு, விதுரரின் பிறப்புகளையும் பேசுகின்றன.

சுருதி, ஸ்மிருதி, புராணங்களின் கலவையாகத் தோன்றுகிறது முதற்கனல் . சாந்தோக்கிய உபநிடத்தின் ஆப்த வாக்கியமாகிய “நீயே அது’ அக்னிவேசரால் சிகண்டிக்கு அளிக்கப் படுகிறது.  காலத்திற்கேற்ப மாறிவரும் அறங்களை எம ஸ்மிருதி , சுக்ர ஸ்ருதி  முதலாய நீதி  நூல்களை வைத்து அரசியல் – உளவியல் சிக்கல்களை   உசாவுகிறது. யயாதி  போன்ற புராணக் கதைகள் மூலம் பீஷ்மரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல்கிறது. 

  குஹ்ய சிரேயஸ் ( மறைக் காப்புத் திறலோன் என்று பொருள் கொள்கிறேன்)  என்னும் கழுதைப்புலி க்ஷத்ரியர்கள்  ஒவ்வொரு குலத்திலும் உருவாகும் விதத்தைச் சொல்கிறது. வைச்வானரன் என்னும் நெருப்பு படைப்பின் உயிரின் ஆற்றலாக பிறவி தோறும் தலைமுறை தோறும் கடந்து வரும் சத்து என்பதை உணர்ந்து கொண்ட சித்ரகர்ணி- கழுதைப்புலிகள் மற்றும் வியாசர் உரையாடல் அழகிய பஞ்ச தந்திரக் கதையாக அமைகிறது.  

சாந்தோக்ய உபநிடததத்தில்  வைச்வானர வித்யை என்னும் தியான முறையை  அஸ்வபதி கைகேயன் என்னும் அரசன்   உத்தாலக  ஆருணி  முதலிய கற்றறிந்த பண்டிதர்களுக்கு உபதேசிக்கிறான். அவர்கள் தியானம் செய்யும் முறையானது பிரபஞ்சத்தின் தனித்தனியான பகுதிகளாக  கவனம் செலுத்தி வந்தது.  அனைத்தும் ஒன்றே என்னும் அறிவை அவர்களுக்கு வழங்குகிறான். வயிற்றில் உறையும் வைச்வானரன் என்னும் செரிக்கும் நெருப்பு எப்படி உணவை உடல் முழுவதும் ஆற்றலாக மாற்றித்  தருகிறதோ  அது போல இந்த அறிவும்  முழு நிறைவை வழக்கும் என்று சொல்லப்படுகிறது. 

அந்த வித்தை யின் பருவடிவமாக இந்த நெருப்பு எப்படி உண்டும் வழங்கியும் உயிர்க்குலங்களின் வழியே கொண்டு செல்லப்படுகிறது என்பதை இறந்து கொண்டே தத்துவம் பேசும் சித்ரகர்ணி என்னும் சிம்மம் சொல்கிறது. பெயர் வைத்தலில் அழகிய பொருத்தம் உள்ளது. க்ஷத்திரியனின் பிரதிநிதியாக குஹ்ய சிரேயஸ் ரகசியத்தின் உருவமாக இருக்கிறது. குலம் காக்கும் – குருதி கொள்ளும் ரகசியம். விநோதச் செவியன் என்று சித்ரகர்ணியை எடுத்துக் கொண்டால் ‘கேட்டலின்’ மூலம் ஞானம் பெற்றவன் அவன். வியாசரின் குடிலை வேவு பார்க்கும் போது எத்தனையோ கேட்டிருப்பான்.

அத்வைதம் தரும் அமைதி நிலையை பல்வேறு பாதைகளின் மூலமாக வியாசருக்கும் பீஷ்மருக்கும் இயற்கையும் சூதர்களும்  வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். 

காலத்திற்கேற்ப ஸ்மிருதிகள் மாறுவதை ஸ்வேதகேது தனது தந்தையை எதிர்த்து தாய்க்கு உதவி செய்யும் பகுதி விளக்குகிறது . சட்டம் நெகிழக்கூடிய பகுதிகளையும் அது நிகழக்கூடிய வகைகளையும் சொல்லி வைத்திருக்கிறது. 

புராணத்தின்   அலகுகளான  காவியம், கண்ணீர், வம்ச  கதை  திரண்டுள்ளன முதற்கனலில். 

பாத்திரங்களின் குண மாற்றம் இதை ஒரு தனிப் புதினமாக ஆக்குகின்றன 

ராஜோ குணத்தின் செயலூக்கத்தில் துவங்கி, பின் தமோ குணத்தில் பித்தியாக அலையும் அம்பை இறுதியில் சத்துவ குணத்தில்  நிறைகிறாள். அன்னையின் நிழலில், உண்பதே வாழ்க்கையாக துவங்கும் சிகண்டினி, பின்னர் பழி என்னும் ஒற்றை இலக்கிற்காக ரஜோ குணத்தில் நிற்கிறாள் . அம்பைக்குப் படகோட்டிய நிருதன் தூய காத்திருத்தலில் அசையாமல் படகில் இருப்பது தமோகுணமாக மயக்கும் சத்வம் தான் பின் அம்பையை விண்ணேற்றவும் ஏற்றியபின் முதல் பூசகனாகவும் உருமாறி ராஜசத்தில் சேருகிறான், பீஷ்மர் வெளித்தோற்றத்தில் ராஜசமும் உள்ளே மாறாத் தேடலில் சத்வத்திலும் உறைகிறார். சத்யவதி மட்டும் குணமாற்றமின்றி இருப்பதாகத் தோன்றுகிறது. 

சுக முனிவரும் பீஷ்மரும் தந்தைக்கு முறையே சொல்லாலும் செயலாலும் மீட்பளிக்கிறார்கள். வியாசர் அறத்தையும் சந்தனு இன்பத்தையும் மகன்களிடம் கொடையாகப் பெறுகிறார்கள். 

யயாதி கதை பீஷ்மருக்கு சொல்லப் படுகிறது. ராஜாஜியின் யயாதியிலிருந்து வெண்முரசின் யயாதி வேறுபாடும் இடம் சிறப்பானது. கால மாற்றத்திற்கேற்ப யதார்த்தமானது. “வியாசர் விருந்தில் ” இச்சையை அடைந்து தணிப்பது என்பது நெருப்பை நெய் விட்டு அணைக்க முயல்வது போன்றது ” என்ற அறிவைப் பெற்று விடுகிறான். முதற்கனலில் வரும் யயாதி மகனுக்கு இளமையை அளித்து விண்ணேகிய பின்னும் அகந்தையால் வீழ்த்தப்படும் யயாதியாக நெருப்பிலும் பயன் பெற உரிமை இன்றி, தனது மகளைக் கண்ட கனிவில் முழுமை அடைகிறான் 

பீஷ்மர் தேர்ந்தெடுத்திருக்கக் கூடிய ஒரு வாய்ப்பை யயாதி கதை மூலம் அவருக்கு சொல்கிறார் சூதர் . 

முதற்கனல் பெண்டிரையும் ஒடுக்கப்பட்டவர்களையும்  பீடத்தில் ஏற்றுகிறது. பீஷ்மரை இழிவு செய்து பாடும் சூதர், சால்வனை தீச்சொல்லிட்டுவிட்டு, நகர் நீங்கும் சூதர், மந்திரங்கள் மூலம் அரசியரின் மனங்களை கட்டுப்படுத்தும் நாகினி, காவியமும் சீர் மொழியும் கற்றுத்தேர்ந்த சிவை போன்ற அடிமைப் பெண்கள் வரவிருக்கும் கால மாற்றத்தைக் குறிக்கிறார்கள். 

குல அறங்கள், கால அறங்கள், தேச அறங்கள் ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தி நிற்கும் சரடுகளின் இறுக்கத்தின் மேல்  மைய அரசின் அரியணை நிற்கிறது. க்ஷத்திரியர் ஆவதற்கு வாள்முனையும் மறைச்சொல்லும் குலங்களுக்குத் தேவைப்படுகின்றன. பிறகு புதிய போட்டியாளர் உருவாகாமல் தடுக்க வேண்டி உள்ளது 

சிறிய நிகழ்வுகளை பெரிய இயக்கங்களுடன் தொடர்புறுத்துவதே வெண்முரசின் பிரம்மாண்டம்.    

நியோக முறையில் குழந்தைகள் பிறக்கும் முன் சொல்லப் படும் கதைகள்  இதற்கு நல்ல உதாரணம். 

நூறு   பறவைகளின் நிழல்களை வீழ்த்திய திருதராஷ்ட்டிரன் என்னும் கந்தர்வன் அதே பெயரில் கண்ணில்லாதவனாக  பிறக்கிறான். அவன் பார்ப்பதெல்லாம் இருளே. அவன் தேடுவதெல்லாம் நிழலாகவே அமையப் போகின்றன . தனது குஞ்சுகளைப்  பிரிந்த ஏக்கத்தில் இறந்த சாதகப் பறவை மீண்டும் பாண்டுவாய்ப் பிறந்து மைந்தரைப் பிரியும் துயரை அடைகிறது. அறத்தின் தலைவனே விதுரனாக வருகிறான். 

வில்வித்தை பிரம்மவித்தையின் ஒரு சிறு பகுதியே என்கிறார் அக்நிவேசர். ஒவ்வொரு சிறு  அறிவும் சொல்லும் ஊழ் வரை, புடவி அளவு காலம் அளவிற்கு விரிந்த ஒன்றின் துளி என்னும் ஞானம் கதை வழியே பயணிக்கிறது. 

பிஷ்மரின் சப்த -சிந்து  சிபி நோக்கிய பயணங்கள் அவருக்கு மனவிரிவை  அளிக்கின்றன. பாலையில் காணும் விதைகளைக் கண்டு  வியக்கிறார். வானும் மண்ணும் கருணை செய்தால் வேறு ஒரு வகை காடு உருவாகி இருக்கும் என்று எண்ணுகிறார். கோடிக்கணக்கான நிகழ்தகவுகளின்  ஒரு தேர்வு தான் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலம் என்றுணரும் இடம் அதிர்ச்சி அளிப்பது      .  ஒரு வேளை  கால – நிகழ்வுகளின்  வேறு வகையான  வாய்ப்பில் அவரும் விதை முளைக்கும் சாதாரண தந்தையாகி இருந்தால், பெண்ணின் கருணை அவருக்கு கிட்டி இருந்தால் தனித்த வேங்கையின் பொறுப்புகள்  அவரிடமிருந்திருக்காது. 

தென் மதுரைச் சாத்தன் வியாசருக்கே வழி காட்டுகிறார். கருமையும் வெண்மையும் இணைந்ததே ஒளி என்கிறார் . 

 மானசாதேவி தன் மகன் ஆஸ்திகனுக்கு ஒரு கடமையை அளித்ததில் துவங்கும் முதற்கனல் அவன் தனது வேசர நாட்டிற்கு திரும்பி வருவதுடன் நிறைகிறது, இருள் என்பது இகழப்  படவேண்டியதில்லை , தமோ குணம் முற்றும் ஒழிக்கப் படவேண்டிதில்லை என்ற அறிவை ஜனமேஜனுக்கு அளித்து பாம்பு வேள்வியை தடுத்த வெற்றியாளன் ஒரு வருடம் கழித்து நாக பஞ்சமி  அன்று தனது குலத்திற்கு வந்து தான் இன்னும் நாகன் தான் என்று அறிவிக்கிறான். 

ஆஸ்திகனால் காக்கப்பட்ட தட்சன் தட்சகியுடன் காரிருள் நீண்ட பெரு வானம் நிறைத்து இணைந்து படைப்பை நிகழ்த்துகிறான். இருள் இணைந்து ஒளியைக் குழவியாகப் பெற்றுத்  தாலாட்டுகிறது. சத்வகுணம் என்னும் முத்து ராஜசம் என்னும் சிப்பிக்குள் தாமசம் என்னும்  ஆழிருள் கடலில் பாதுகாப்பாக இருக்கிறது.  இருளற்ற ஒளியில்லை. இதுவே இந்தியாவின் அனுபவ ஞானம் . 

இருள் ஒளி இரண்டிற்கும் ஒன்றிடம் என்று அருள் தரும் ஆனந்தத்தை அடைய அனைத்திலும் ஒன்றைக் காண்பதே வழி என்கிறது முதற்கனல். பல ஆயிரம் ஆண்டுகளாக  பாரத வர்ஷம் கண்ட வாழ்வனுபவம் புல்லும் புழுவும் நம்பி வாழும் அறத்தை நிலைநிறுத்தச் செய்யும் முயற்சியாக முதற்கனல் எரிகிறது.

உவமைகள் / உருவகங்கள் 

1 செம்புல்  பரவிய குன்று போன்ற சிம்மம் 

2 நெல்மணி பொறுக்கும் சிறு குருவி போல அம்பாலிகையிடம் பதற்றம் இருந்தது 

3 வாய்திறந்த அரக்கக் குழந்தைகள் போல வட்ட   வடிவ இருளுடன் நின்ற செம்புப் பாத்திரங்கள் 

4  வலசைப்  பறவைகளுக்கு வானம் வழி சொல்லும் 

5  பாரத வர்ஷம் ஞானியர் கையில் கிடைத்திருக்கும் விளையாட்டுப் பாவை 

6 வந்தமரும் நாரைகள் சிறகு மடக்குவது போல பாய்  மடக்கும் நாவாய்கள் 

7 சிகண்டி கழுத்தில் குருதி வழியும் குடல் போல காந்தள் மாலை கிடந்தது 

தத்துவங்கள்  

 கருணை கொண்ட செயல்கள் அனைத்தும் ஒழுக்கமே (சுகர் வியாசரிடம் சொல்வது) 

இசை  நுணுக்கங்கள் 

புரவிப்படை மலையிறங்கும் தாளம்.

ஆர்  ராகவேந்திரன் 

கோவை

முதற்கனல் வாசிப்பு 2 – விக்ரம்

தீச்சாரல், தழல்நீலம், வேங்கையின் தனிமை, ஆடியின் ஆழம், வாழிருள் ஆகிய பகுதிகளை முன்வைத்து

ஆதியில் அறிவுப் பழம் தின்றதன் பாவத்தினால் மண்ணில் வீழ்ந்தனர் ஆதாமும் ஏவளும்.  அறம் கொண்ட காரணத்தால் அன்னை கத்ருவின் தீச்சொல் பெற்று பறக்கும் திறன் இழந்து நெளிகின்றன மண்ணின் நாகங்கள்.  முன்னதில் அகந்தையில் கிளைத்தது அறிவு என்று கருதினார் கடவுள் பின்னதில் கிளைப்பது அறம்.  காமமும் அகங்காரமுமென தீர்ப்பிட்டு உங்கள் செயல்களம் மண் என வகுக்கிறது விண்.  அன்னை கத்ரு அவ்வாறு நாகங்களுக்கு நியாயந் தீர்க்கிறாள்.  இச்சையும் தன்முனைப்பும் இன்றி இங்கு அறிவும் அறமும் சாத்தியமே இல்லை என்பது விண்ணகத்தின் தீர்ப்பு.  அவை இல்லாமலேயே அயோக்கியத்தனம் செய்வது அறத்தைக் கையாள்வது என விண்ணின் சாத்தியங்கள் வேறு.

கத்ருவின் நிழல் போல் சத்தியவதி தோன்றுகிறார்.  சத்தியவதியை வில்லியாகக் கருதவிழையும் என் எண்ணம் ரத்து செய்ய வேண்டியதாகிறது.  மொத்த முதற்கனலில் கதாநாயகனாக இக்கணத்தில் பீஷ்மர் நிற்கிறார்.

குலம் பெருக்கி அரசாள வேண்டிய பீஷ்மருக்கு பிரம்மச்சரியத்தை திணித்தவளாக ரிஷி வியாசரை குலம் பெருக்கச் செய்தவளாக சத்தியவதி.  அவள் ஷத்ரியரையும் பிராமணரையும் சுட்டிக்காட்டி பீஷ்மரிடம் சொல்லும் நியாயங்கள் ஏற்புடையவையாக இல்லை எனினும் மாற்றுத் தாயின் புதல்வனை ஏற்கமுடியாத எளிய பெண் என்றும் அவளை வகுத்துவிட முடியாது.  பெரும் புகழ் கங்கையை யமுனை ஆள்கிறது.  அது இன்று வரை பாரதத்தில் அப்படித்தான்.

பீஷ்மர் வியாசரின் எதிர்முனையில் நிற்கிறார்.  அழகானது என ரசித்து வாசித்த எண்ணற்ற வெண்முரசு வெளியில் ஓர் இடம் பீஷ்மர் தனக்கு முன்பிறந்து இறந்துவிட்ட குழந்தைகளை சுமந்தே இருக்கிறார் என்பது.  முன் தேவாபியைச் சுமந்த பால்ஹிகர் பின்னாளில் தன் உடன்பிறந்தாரை சுமக்கப்போகும் பீமன் என ஒரு தொடர்ச்சி.  இதில் ஒரு படிநிலையும் இருக்கிறது.  ஒரு கோணத்தில் பால்ஹிகரைக் காட்டிலும் மேலெழுந்தவராக பீஷ்மர் பீஷ்மரைக் காட்டிலும் மேலெழுந்தவனாக பீமன்.  பிரம்ம ஞானமும் பெண்ணின் அன்பும் இரண்டிற்குமே தகுதியற்றவராக தன்னை கூறிக்கொள்ளும் முதற்கனலின் பீஷ்மரைப் போல் அல்லாமல் பிரம்ம ஞானம் ஒருபக்கம் கிடக்கட்டும் என பெண்ணின் அன்பை பெற்றவன் திரௌபதியின் அன்பில் திளைக்கும் வரம் பெற்றவன் பீமன்.

பிரம்மச்சரியம் பெருவலிமை என்ற இரண்டை எடுத்துக்கொண்டு பீஷ்மரை ராமாயணத்தின் அனுமனோடு ஒப்பிட்டு வியக்கிறேன்.  ராமன் மீதான பெரும் பக்தியை அளித்து அனுமனை சிக்கலில்லாமல் பார்த்துக்கொண்டார் ஆதிகவி.  சிக்கல்கள் ராமனுடயவை அவன்மீது பேரன்பு கொண்ட உதவும் வலிமை வாய்ந்த பிரம்மச்சாரி அனுமன் அவ்வளவுதான்.  பிரம்மச்சரியம், பெருவலிமை, ஆனந்த பரவசம், அறிவு, அருள்நிறை என அனுமனைப் பேணிக்கொண்டார்.  அவ்வாறல்லாமல் பீஷ்மருக்கு சிக்கல்களை அளித்து பெருநதியின் வேகம் தடுத்துநிறுத்தி அனுமன்போல் விண் எழவும் வாய்ப்பு மறுத்து வேங்கையை சிறையெடுத்து தனிமையில் ஆழ்த்துகிறார் வியாசர்.

சுவையான மற்றொரு இடம் சூதர் பீஷ்மரின் கதையை பீஷ்மரிடமே (அவர் பீஷ்மர் என அறியாமல்) கேலியுடன் கூற கேட்டு ரசித்து பின்னர் பொற்காசுகளை உறங்கும் சூதரின் காலடியில் பீஷ்மர் வைத்துச்செல்வது.  கடக்க முடியாத, வகுக்கப்பட்ட எல்லையில் தன்னை தன்னிலிருந்து விலக்கிக்கொள்ளும் விவேகி அவர்.  மலைமுகட்டில் அமர்ந்து தவம் செய்பவன் அனுமன் அவன் விடுதலை பெற்றவன் நினைத்த கணத்தில் விண்ணில் தாவ அவனால் இயலும்.  பீஷ்மர் மலையின் கீழ் இருட்குகையில் சிலந்திவலைப் பின்னலுக்குள் அமர்ந்து தவமிருப்பவர்.

முதற்கனல் கனன்று எழுந்த பின் பிற்பகுதியில் கனிந்து அருட்சுடர் என நிலைகொள்கிறது.  மூர்க்கம் மிக்க பன்றியென சிகண்டியாக தன் சினத்தை பீஷ்மர் மீது செலுத்தும் அம்பை பின் கனிவுகொண்டு ஊர்வரையாக அவரைக் காவல்செய்யவும் விழைகிறாள்.  அதுவிதியின் பாற்பட்டு நிகழாது வேறுவழியில்லை என்றிறுக்க தன் வெஞ்சின நோய் தீர்க்க மருந்ததென அவர் உயிரை அவர் பாதம் பணிந்து பெற்றுவர சிகண்டியைப் பணிக்கிறாள் என்னும் எண்ணம் எழுகிறது.  பீஷ்மரை வீழ்த்த அவரிடமே கற்றுக்கொள்கிறான் சிகண்டி.  அம்பையின் இக்கனிவு வெண்முரசின் பிற்பகுதியில் திரௌபதி கொள்ளும் கனிவை நினைவூட்டுகிறது.

இக்கணம் முதல் வியாசரைக் கதாநாயகனாகக் கொள்கிறேன்.  அவரது மகன் சுகமுனிவருக்கு வாய்த்தபேறு, தென்மதுரை பெருஞ்சாத்தன் கொண்ட பேறு வியாசருக்கு அமையாததல்ல ஆனால் காத்திருக்க வேண்டும் அவரால் நிகழவேண்டியவை நிகழ்ந்தாக வேண்டும்.  மெய்மை நோக்கில் பயணப்படுபவருக்கு சந்ததி பெருக்கி அவற்றின் வாழ்வை அதன் விழைவுகளை ஆணவங்களை அன்பை அறம் அறமின்மைகளை வீரத்தை இறுதியில் வீழ்ச்சியை எனக் குலக்கதையை காவியமியற்றும் பணி அமைகிறது.  அவரது மெய்மையை அவர் அப்படிச் சென்றுதான் அடையமுடியும்.  சுகமுனியும் பெருஞ்சாத்தனென்னும் தென்முனியும் அப்படித்தான் அவரது வழியென்கிறார்கள்.  ஒருவகையில் அரசியல் கலப்பற்ற ஆன்மீகம் வியாசருக்கு சாத்தியமல்ல என்று கூட தோன்றுகிறது.  இளைய யாதவர் என்பது அவர்தான் என்றபோதும்.  விஷ்ணுவே அவர்தான் என்றபோதும்.

இங்கு யமுனைக்கும் கங்கைக்கும் காவிரிக்கும் மட்டுமல்ல மெய்மைக்கும் புவியியல்தான் பாதைவகுத்து அளிக்கிறது.  அரசியல் பண்பாடு வரலாறு அகம் புறம் உளவியல் உடலியல் மெய்யியல் என எல்லாவற்றிற்கும்.  ஆஸ்திகனும் பீஷ்மரும் வியாசரும் மேற்கொள்ளும் பெரும் பயணங்கள் அந்த எண்ணத்தை ஏற்படுத்துகின்றன.  பெரும்பாலை சிபிநாடு கங்கர் நிலம் கங்கை நீர்வழிப்பயணம் விந்தியக்காடுகள் எனப் பல.

ஆஸ்திகன் அஸ்தினபுரி சென்று சர்ப்பசத்ர வேள்வி நிறுத்தி மீள்வது, கிருஷ்ணை நதிக்கரை நாகர்களைக் காக்க அஸ்தினபுரியுடன் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கை எனக் குறியீடாகக் கொள்ளவும் இடமளிக்கிறது.  தவிர்க்கமுடியாமல் நிகழ்ந்துவிட்ட பேரழிவுகளில் இருந்து மீண்டும் மீண்டும் பாடம் கற்றுக்கொள்வது கலைத்து கலைத்து அடுக்கிக்கொள்வது அனைவருக்குமான பொதுநலன்களைப் பேணிக்கொள்வது தனிநலன்களைப் பாதுகாத்துக்கொள்வது என இப்பெருநிலத்தின் அரசியல் வரலாற்றுப் பாதைகளை வெண்முரசு வழங்கும் அகக்கண்களின் வழியாக கண்டுகொள்ளமுடியும்.

வெப்பநாட்டில் முக்தியை நிர்வாணம் எனத் தருபவளும் குளிர்நாட்டிற்கு கதகதப்பான சொர்கத்தை வகுப்பவளும் புவியன்னைதான்.  யமுனையின் வியாசரையும் சுகசாரி சுகமுனியையும் தென்மதுரை பெருஞ்சாத்தனையும் இங்கு கண்முன் நிறுத்துபவள்.  சித்தார்த்தனை போதிமரத்தடியில் அமர்த்தி புத்தனாக்கியதும் ஏசுவை சிலுவையில் அறைந்து விண்ணேற்றியதும் அவள்தான்.

இம்மண்ணை, இதன் அருகமைந்த நிலங்களை, மொத்தபுவியை புறத்தில் கண்டு அகத்திற்கென அள்ளியெடுத்தக் கொள்ளும் பேராவலாக இருக்கிறது வெண்முரசு.  முதற்கனலில் துவங்கும் அது தன்னை அவ்வாறே நிறைவேற்றிக்கொள்வதில் வெற்றி அடைந்திருக்கிறது.

முதற்கனல் வாசிப்பனுபவம் – விக்ரம்

வேள்விமுகம் முதல் மணிச்சங்கம் வரை

சொல்முகத்தின் வெண்முரசு கூடுகையை முன்னிட்டு முதற்கனலை மறுவாசிப்பு செய்தது உள்ளம் நிறைத்த அனுபவமாக இருந்தது.  நாகர்குலத் தலைவி மானஸாதேவி தன் மகன் ஆஸ்திகனுக்கு புடவியின் தொடக்கம் முதல் தனக்கு அவன் பிறந்தது வரை நாகர்குல வழக்கில் கூறுவதில் தொடங்கி அஸ்தினபுரியில் பேரரசன் ஜனமேஜயன் நடத்தும் சர்ப்பசத்ரமென்னும் உலகின் மொத்த நாகங்களையும் அழித்துவிடும் பெருவேள்வியினை ஆஸ்திகன் நிறுத்துவதும் அதன் தொடர்ச்சியாக அவனுக்கும் ஜனமேஜயனுக்குமான கருத்து முரண்பாட்டை வியாசர் ஆஸ்திகன் தரப்பில் சரியே என்று தீர்ப்பளித்து தொடர்ச்சியாக மாபாரதமென்னும் அவரது ஸ்ரீஜய காவியம் வைசம்பாயனரால் பாடத்தொடங்கப்படுவது வரை சென்று அமைகிறது முதற்பகுதியான வேள்விமுகம்.  நாகங்களை இச்சை மற்றும் அகங்காரத்தின் குறீயீடாக கொண்டு அந்த அடிப்படை விசைகளே புடவின் உயிர் இயக்கத்திற்கு காரணமாக அமைவதும் அவையில்லாமல் உயிரோட்டமற்றதாக புவி வாழ்க்கை ஆகிவிடும் என்பதைக் கூறுகிறது.

அஸ்தினாபுரியென்னும் பிரமாண்ட நகரை அறிமுகம் செய்து அதன் பெருமைமிகு அரசர் நிரை கூறி இன்று அது எதிர்கொண்டிருக்கும் சிக்கலை அறிமுகம் செய்கிறது பொற்கதவம்.  பீஷ்மர் சத்தியவதியின் ஆணைப்படி விசித்திரவீரியனுக்காக காசி மன்னனின் புதல்விகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை கவர்ந்துவர அவர் உள்ளம் கொள்ளும் அறச்சிக்கலைக் கடக்க வியாசரின் விடையைத் தெரிவி்த்து அமைகிறது இப்பகுதி.  தீர்கசியாமர் என்னும் பெரும் சூதர் பீஷ்மருக்கு கூறுமுறைமையில் வியாசரின் துவக்கம் கூறப்படுகிறது.

காசியில் நடைபெறும் சுயம்வரமும் அங்கு சென்று பீஷ்மர் அக்கன்னியரைக் சிறையெடுப்பதில் தொடங்கி சால்வ மன்னனாலும் தந்தை பீமதேவனாலும் பீஷ்மராலும் புறக்கணிக்கப்பட்டு அம்பையென்னும் வடிவில் மாபெரும் எதிர்காலப் போர் ஒன்றிற்கான முதற்கனல் விழிகாணும் விதமாக எழுந்து துலங்குவதை கூறி மிகப்பொருத்தமாக எரியிதழ் என்று தலைப்பு கொள்கிறது அடுத்த பகுதி.  எரியின் இவ்விதழ் அதன் முதற்தொடக்கமாக தாட்சாயணியென்னும் சதிதேவியைத் காட்டுகிறது.  தட்சனென்னும் நாகத்தின் மகளாகப் பிறக்கும் அவள் இறைவனின் விண்ணின்பால் மீண்டுற தனக்கான சர்ப்பசத்திர வேள்விபோல் முன்னம் எரிபாய்ந்த இறைவியாவாள்.  அவ்விறைவியின் எரிதல் அணையாமை கூறி அம்பையின் அன்னை அம்பையையே கருதி நெருப்பின் காயமுற்று உயிர்துறப்பது வரை செல்கிறது அணையாச்சிதை.  சூதர்கள் அம்பையைக் குறித்து பாடுவதை அவள் சீற்றம் கொண்ட தெய்வ உருக்கொண்டதை அவளது கனலைப் பெற்றுக்கொள்ள, பெண்பழியின் கணக்கைத் தீர்க்க, உத்திர பாஞ்சாலத்தின் மன்னன் தவிர பிறர் பீஷ்மரை அஞ்சி தவிர்ப்பதை விசித்திரவீரயன் தன்னை முன்னிட்டு அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதியால் தவிப்புற்று அவளைத் தேடிச்சென்று பணிவதை அவள் அவன்பால் அருள் கொள்வதை கூறுகிறது.

புதிய பெருநகர் நுழையும் அம்பிகையும் அம்பாலிகையும் கொள்ளும் எண்ணங்களும் அச்சிறுமிகளின் நடத்தையும் சுவாரஸ்யமானவை, அவர்கள் விசி்த்திரவீரியனை மணமுடிப்பது முதலில் வெறுத்து பின் அவனை கனிந்து அம்பிகை ஏற்று காதல் கொள்வது அவன் மறைவது வரையிலான பகுதி மணிச்சங்கம்.  அம்பிகையும் அம்பாலிகையும் உண்மையில் அம்பையைவிட அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற பரிவு தோன்றுகிறது.  இப்பகுதியில் விசித்திரவீரியன் அவனது தந்தை சந்தனுவையும் தன் உடன்பிறந்த பீஷ்மரென்னும் மாமனிதனையும் தீர்க்கசியாமரின வாயிலாக உணர்ந்துகொள்கிறான்.  அம்பையின் கனல் எத்தகையது என்றபோதும் அதன் பழி தன்னைத் தொடாத உயரத்தில் இருப்பவர் பீஷ்மர் என்ற எண்ணம் ஏற்பட்டது.  அறத்திற்கும் அறமின்மைக்குமான இடத்தில் அல்ல அவர் முன்னம் பழம்பிறப்பில் சிபியென கூட அவர் அறத்திற்கும் அறத்திற்குமான எல்லையில் அல்லது அறத்திற்கும் பேரறத்திற்குமான சந்தியில் நிற்பவராகவே காண்கிறார்.
வியக்கத்தக்க வகையில் அல்லாமல் இங்கு பீஷ்மருக்கு பேரறத்தின் முன்னம் மனித அறத்தின் எல்லை உணர்த்தும் வியாசரே பின்னாளில் அதையே ஜனமேஜயனுக்கு உணர்த்துபவராகவும் இருக்கிறார்.  ஜனமேஜயனுக்கு மட்டுமல்ல ஜெயமோகனாக நமக்கும் அவரே இன்று வெண்முரசறைந்து உணர்த்துகிறார்.

எரியிதழ், அணையாச்சிதை, மணிச்சங்கம் என்ற இம்மூன்று பகுதிகளில் மைய ஓட்டத்திற்கு இணையாகச் செல்லும் புராணக்கதைகள் ஒன்றை ஒன்று பிரதிபலித்துக்கொள்ளும் ஆடிகள் போல.  பெண்ணின் துயரும் சீற்றமும் விதியும் என தாட்சாயணி, பெண்ணின் வெற்றி என மகிஷனை வென்ற இறைவி, ஆண்பால் கொள்ளும் கனிவு என சத்தியவானைத் தொடரும் சாவித்ரியின் கதை.  இதில் ஒரு படிநிலைபோன்ற அமைவு இருக்கிறது.
அம்பிகை விசித்திரவீரியன்பால் கொள்ளும் காதல், அவர்களது உரையாடலின் தருணங்கள் இனியவை.  அவன் தன் பேரன்னை சுனந்தையின் துயரமிக்க வாழ்வை அவளுக்குக் கூறுகிறான்.  அதேவிதமான மக்கட்பேறு என்ற ஒரு காரணத்தின் பொருட்டு துயர் திணிக்கப்பட்டவர்கள் தானே அவளும் அம்பாலிகையும்.

சித்திராங்கதன் இங்கு திகழாதவனாகவே செல்கிறான்.  விசித்திரவீரியன் குறுகிய ஆயுள்கொண்ட போதும் தன் இயல்பால் அனைவரையும் வெல்கிறான்.  அன்னை சத்தியவதியை மட்டும் அவன் வென்றானா என்பது என் அய்யமே.  அவனுக்கும் அமைச்சர் ஸ்தானகருக்குமான நட்பு சுவையானது.  அவனை இறைவன் என்றுகொள்ளும் நேசம் உடையவர் அவர்.  வேறு ஏதும் கடமை தந்துவிட வேண்டாம் இதுவே என் வாழ்வின் நிறைவு என்று அவன் மறைவில் துறவைத் தேர்ந்துகொள்கிறார் அவர்.

இங்கு பெண் உறும் துயர் என்றாலும் கூட அவை ஷத்திரியப் பெண்களுக்குரியவையாகவே இருக்கின்றன.  மீனவக் குலத்தவரான பேரரசி சத்தியவதியும் கங்கையும் எவ்வகையிலும் தங்கள் சுதந்திரத்தை இழந்தவர்கள் அல்ல.  தாட்சாயணி, சுனந்தை, அம்பை ஒரு நிரை என்றால் சீதையும் அதன் பிறிதொருவகை என்ற எண்ணம் தோன்றுகிறது.

எண்ணற்ற நுண்மைகள் கொண்டதாக இருக்கிறது முதற்கனல்.  பாலாழி கடையும் தேவர்கள்-அசுரரின் புராணக்கதை கூறப்படுகிறது.  நஞ்சு இல்லாமல் வாழ்க்கை இல்லை நஞ்சைக் கடக்காமல் மெய்மை இல்லை.  கடத்தற்கரிய நஞ்சை கடக்கத் தேடி நுழைபவர்களுக்கு அவர்களுக்கான நீலகண்டனை கண்டடைய பெரும் இணை வாழ்வைத்தரச் சித்தமாக இருக்கும் வெண்முரசின் திருஆல வாயிலாக இருக்கிறது மெய்மை நோக்கின் இந்த முதற்கனல்.

முதற்கனலின் முதல் உரசல் – ஆர். ராகவேந்திரன்

வெண்முரசு முதற்கனல் வாசிப்பு -வேள்விமுகம் முதல் மணிச்சங்கம் வரை

வெண்முரசு நூற் தொகையின் முதல் புத்தகமான முதற்கனல் வேசர  நாட்டில்  தொடங்குகிறது. நாக அன்னையான  மானசா தேவி தனது மகன் ஆஸ்திகனுக்கு  படைப்பின் துவக்கத்தை சொல்லி  அவனுக்கு ஒரு கடமையை சொல்லாமல் சொல்கிறாள். குழந்தைப் பருவத்தை  இன்னும் கடந்திராத நைஷ்டிக பிரம்மச்சாரியான ஆஸ்திகன்  வடக்கை நோக்கி நடக்கத் துவங்குகிறான். 

நாகங்கள் 

இந்தியா முழுவதும் நாகங்களுக்கு கோயில்கள் இருக்கின்றன. ஹரித்வாரில்  மலை மேல் மானசா அன்னைக்கு அமைந்துள்ள கோயில் புதருக்குள் புற்று போல வான் நோக்கி நிற்கிறது.   இவ்வன்னையின் வழிபாடு இந்தியாவில் எங்கும் பரவி உள்ளது. குறிப்பாக வங்கத்திலும் இன்றைய ஆந்திரத்திலும் . ஏன் பிற விலங்குகளை விட  நாகத்திற்கு அதிக வழிபாடு ? ஆதியில் தந்த அச்சம் மட்டும்தானா காரணம்  ?

 பொழுதிணைவு  வணக்கம் என்று ஜெயமோகன் குறிக்கும் சந்தியா வந்தனத்தின் ஒரு பிரார்த்தனை  நர்மதை நதியிடம் வேண்டுகிறது.  நாகங்களை ஜனமேஜய வேள்வியிலிருந்து காத்த ஆஸ்திகன் என்னை நச்சரவங்களில் இருந்து காக்கட்டும் என்கிறது.  நாகங்கள் இந்திய  மனத்தில் ஏற்படுத்திய தாக்கம் வரலாற்றின் அறியாத பக்கங்களில் இருக்கிறது.  அதை எளிய  மானுட ,உளவியல்  கொள்கைகளால் முழுதறிய முடியவில்லை.

குகையில் சொட்டும் தென் 

ஜரத்காரு முனிவர் குகையின் மேலிருந்து சொட்டும் தேனை மட்டும் பருகி தவம் புரிந்தார் என்பது மிக அழகிய உவமை . யோகத்தில் கேசரி முத்திரை செய்து நாவை உள்மடித்து கபாலத்தை தொடும்போது உள்ளே சொட்டும் தேனை குதம்பை  சித்தர்  

“ மாங்காய் ப் பாலுண்டு மலை மேல் இருப்பார்க்கு தேங்காய்ப் பால் ஏதுக்கடி” என்கிறார் 

நாகம்  – அகந்தை, காமத்தின் பரு உரு 

சர்ப்ப சத்ர யாகத்தில் ஜனமேஜயன்  ,போருக்கு அடிப்படையாக இருக்கும்  அகந்தை மற்றும் காமத்தை மொத்தமாக அழிக்கும் நோக்கம்  சொல்லப் பட்டிருக்கிறது .  வேள்விக்கு ஒரு காவலன், ஒரு ஹோதா, ஒரு எஜமான் , கார்மிகர்  தேவை.  பிற்காலத்த்தில் வேதாந்தம் உருவாகி வந்தபோது வேள்வி என்பதே மனிதன் புரியும் செயல்கள் என்று பரிணாமம் அடைகிறது. ஜனமேஜய னின்  யாகத்தில்  வேதம் புரிபவர்கள் தங்கள்  இச்சைகளையும்  அவியாக்க  கையால் சைகை செய்யும்போது அவை பாம்பின் அசைவுகளை   ஒத்திருப்பதாக  கற்பனை செய்கிறார். வெண்முரசின் சடங்கியல்   பற்றி அறிய ஒரு தனி வாசிப்பு வேண்டும்.  வாழ்நாள் பணியாகும் அது

அதர்வ வேதம் 

இந்து மதம் தன்னை ‘தூய்மை’ செய்து  கொண்டே வளர்ந்த போது  , நூற்றாண்டுகளில்  வழக்கு  ஒழிந்து போய்விட் ட  முறைமைகளை அவற்றின் அக்காலத்  தேவையைப் புரிந்து  கொள்ள முயற்சிப்பது  வெண்முரசின் ஒரு முக்கிய இழையாக  இருந்து வருகிறது. அதர்வ வேதத்தின் மந்திரங்களைக் கொண்டு யாகம் இயற்றப் படுகிறது.  ஒன்பது துளைகளையும் முறைப்படி அடைத்துக் கொல்லப் பட விலங்குகள் பலி  கொடுக்கப் படுகின்றன. வெண்முரசின் சடங்கியல் பற்றி தனியே ஒரு வாசிப்பு தேவைப்படுகிறது

  காசி இளவரசிகள் –   முக்குணங்கள்  

அம்பை, அம்பிகை, அம்பாலிகை மூவரும் சத்வ , ரஜஸ் , தமோ குணங்களின்  வெளிப்பாடாக  காட்டப்   படுகிறார்கள். அம்பை ரஜோ  குணத்தின் வடிவம். அவள் செந்நிறமாக உடையணிந்து பின்னர்  வாராஹி வாகனத்தில் பிடாரியாக உருவெடுப்பதன் அனைத்து உளவியல் விசை களையும்  துவக்கத்தில் கொண்டிருக்கிறாள். ஆயினும் பிற இளவரசிகளுக்கு சத்வ , தாமஸ குணங்கள் பொருந்துவது புரியவில்லை. தாமச குணத்தை புரிந்து கொள்வது கடினம் தான் . தமோ குண வடிவு கொண்ட அம்பிகை இசையிலும்  சத்வ குணம் மீதுற்ற  அம்பாலிகை  ஓவியத்திலும் திறன் கொண்டவர்கள் 

வேள்வியில் தடைகள் 

தொழில் பிரிவுகள் அவற்றுக்குரிய முழு அறிவில் செறிந்திருந்தன. பந்தல் சமைக்கும் வினைஞர்  தனது துறைசார் அறிவை காலம் கடந்த தேடலுடன் இணைத்துக் கொள்கிறார். வெண்முரசின் சூதர்கள் பணிப்பெண்கள் சமையல் புரிவோர், முடி திருத்துவோர் , கொல்லர், மருத்துவர்   காட்டும் அனுபவ அறமும் அதன் வழி வந்த  ஞானமும்  பாரத தேசத்தின் செயல்முறை வேதாந்தத்தின்  தரிசனத்தில் விளைந்தவை. காசி அரசனின் வினவிற்கு வேள்விப் பந்தல் அமைத்த முது கலைஞர்  சொல்லும் மறுமொழி தனது தன்னறத்தில்  தோய்ந்த எளிய பாரதியனி ன் அறிவுச்சுடர்.

பெயர்ச் சூடுதல் 

ஜெயமோகன் கோடடை மணிக்கு, கோடடைச் சுவருக்கு , விலங்குகளுக்கு உச்சமாக கங்கையின் சுழிக்கே பெயர் சூட்டுகிறார்.  வெண்முரசின் இசைக்கருவிகளுக்கே தனி ஆய்வு தேவை. படங்களுடன்  செவ்வியல்,  பண்ணியல் இசை  அறி வாண ர்கள்  இதை  முயல வேண்டும். 

தரிசனம்

நாகக்  கொலை வேள்வியைத் தடுத்து தட்சனைக் காக்கும்   ஆஸ்திகன் மூன்று குணங்களும் வாழ்விற்குத் தேவை  என்று நிறுவுகிறான் . அதை வியாசமுனி அனுமதித்து    அருள்கிறார். தந்தை வாக் கினாலும்  தேசியக் கடமையாலும்  மணத்துறவு கொண்ட பீஷ்மர் பாரதக் கதையின் சிக்கலின்  மைய முடிச்சாக அமைகிறார்.   முழுவதும் இச்சையை விட்டிருந்தால்  பிற முனிவர்களைப் போல   வனமே கி இருப்பார்.   ஆனால் அஸ்தினபுரியைக் காக்கவேண்டும் என்ற மெல்லிய சரடு அவரைக் கட்டி இருக்கிறது.

அடி மனத்தில் அவருக்கு ஆசை இருக்கிறதோ   என்ற அச்சம் அவருக்கும் உள்ளது. அம்பையுடன் அவர் புரியும் உரையாடல் இந்திய மனத்தால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடியது. 

ஆப்பிரிக்காவில் கிளம்பி அலை அலையாகப் புவியை நிறைத்துக் கொண்டு விரிந்த ஹோமோ  பேரினத்தின்   மத்திய ஆசியாவின் கங்கைச் சமவெளியில்  வந்து சேர்ந்த இந்தப் பிரிவினரில் , வேட் டையாடி வேளாண்மை ஆற்றி  துவக்க நிலை சமூகமாக பரிணாமம் அடைந்த  இந்தக் கூட்டம் காலத்தின் எந்தத் துளியில் “உள்ளது ஒன்றே” ‘நீயே அது” என்ற தாவலை  அடைந்தது என்பது ஒரு புதிர்  . சுவாமி விவேகானந்தர் இதை வியந்து பேசுகிறார்.  இச்சையைப்  பதங்கமாக்கி   பெண்ணுருவை அன்னையாக்கியது  இந்தியாவின்  இணையற்ற உளவியல் கண்டுபிடிப்பு  

அவமானம் அடைந்த அம்பை கொற்றவையாக கொதிக்கிறாள். பீஷ்மரின் உதிரம் வாங்காமல் அடங்காது இந்தப்  பிடாரி . இங்கே ஜெயமோகன் கொற்றவையை, இளங்கோவடிகளின்  கண்ணகியைக் காட்டுகிறார். பெயரில்லாது எரிந்தழிந்து போன பாரத தேசத்தின் வெயிலுகந்த, தீப்பாஞ்ச , சீ லைக்காரி , மா சாணி அம்மன்கள் வடிவில் அம்பை நெருப்பாகிறாள்

உடல் நமக்கு சொந்தமில்லை ; ஆன்மாவுக்கு சொதம் என்கிறாள் அம்பை.. பெண் என்பவள் வெறும் கருப்பை மட்டும்  தானா என்ற வினா இந்திய பெண்களின்   வினா. 

அழகியல் 

அம்பை தற்கொலை செய்யும் முடிவை எடுக்கும்போது ஆவலுடன் அவள் உள்ளத்தின் மூன்று அன்னையர்  பேசும் இடம் அற்புதமான து

மலரில்  தேன் நிறைக்கும்  , பெண் குழந்தைகள் கனவில் மலர் காட்டி சிரிக்க வைக்கும் சுவர்ணை ; 

அவள் சற்று அறியத் தொடங்கும் போது இசையில் துயரையும் கவிதையில் கனவையும்    நிறைக்கும்  சோபை ,

 அவளில் முதற் காதல் மலரும்போது  படைப்பின் இனிய கடனை ஆற்றும் விருஷடி    என்னும் தேவியர் அம்பையை பீஷ்மரை நோக்கி திரும்புகின்றனர். வெண்முரசின் தனிதத்துவத்தின் அதிசய இடம் இது.

அம்பையின் உணர்வு நிலையைச் சொல்லுமிடம்  :

அம்பை நிருதனின் படகில் பீஷ்மரை க் காண செல்கையில் அருகில் வீ ணை யை வைத்தால் அது தானாகவே இசைத்திருக்கும். விரல் பட்டால் கங்கை அதிரும் 

அம்பை படகில் செல்கையில் சூ ரியனுடன் கிழக்கு   முனையில் உதித்து  எழுகிறாள் 

 இரு தடைகள் 

கீதை , ஒரு செயலுக்கு மூன்று தடைகள் வரலாம் என்று பேசுகிறது. ஆதி பௌதிகம், ஆதி தைவிகம் மற்றும்  அத்யாத்மிகம் .  முறையே இயற்கையால், இறையால், தன்னால் வருவன. காசி அரசனின் கேள்விக்கு அமைச்சர்  தரும் பதிலில் வேள்விக்கு இரு தடைகள்  பற்றி உரைக்கிறார் . அத்யாத்மீகம் இதில் சேரவில்லை. காசி மன்னன்  தானே வருவித்துக் கொண்ட  தடை தானே இந்த வேள்வி முயற்சியே  என்று தோன்றுகிறது.

தமிழின் புதிய சொற்கள் 

இயல்பாக நாவிற்கு இசைந்து வரும் தமிழ் ச்  சொல்லிணைவுகளை உருவாக்குபவர்கள் சிந்தனையில் புதிய பாதைகளைத் துவங்குகிறார்கள்.

விசுவநாதன் – விசும்புக்கு அதிபன் 

விசாலாட்சி – அகல்விழி அன்னை 

உவமைகள் 

1அர்க்கியமிடக்  குவிந்த கரங்கள் போன்ற ….

2 பல்லக்கில் பிணம் இருப்பது போல என்னெஞ்சில்  நீயா இருந்தாய் 

3 கருப்பை எனும் நங் கூ ரம் 

4  சிதையில் இதயம் வேகும்  போது எழுந்தமரும் பிணம் போல (பீஷ்மர் மெல்ல அசைந்தார் )

5 அழு க்கு மீது குடியேறும்  மூதேவி என 

6 எய்யப் படும் அம்புக்குப் பின் அதிரும் நாண்  போல 

7 வெவ்வேறு சந்தஸ் களில்  இசைக்கும் பறவைகள் 

வடக்கு  தெற்கு ஒற்றுமை  

““ இந்தியா செக்கோஸ்லாவாகியாவைப் போல பல நாடுகளாக உடையும் ;  “

   “ பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன “ 

என்று இங்கு ஒரு அரசியல் தரப்பு உண்டு .

 எந்த நாடும் அப்படியே ஒரு தேசமாக புவியில் தோன்றவில்லை.  மனிதர்களின் ஒற்றுமையும் வாழ்க்கை முறைகளும் விழுமியங்களும் பரிணமித்து உருவாகின்றன தேசங்கள்.  பெரும் தலைவர்களும் இந்த நதியின் போக்கை அணைக்கட்டிடவோ   திசை  மாற்றவோ செய்தவர்கள் மட்டுமே.    எல்லா தரப்பினருக்கும் இடமிருக்கும் பண்பாடு சார்ந்த தேசிய  சிந்தனையில்  ஒரு தேசத்தின் அனைத்து உயிர்களும் பெரும் பரிணாமம் அடைந்து வந்திருக்கின்றன

 வரலாற்றில் பின் சென்று நீதியை நிலைநாட்டுபவன் கவியாசிரியன் . அவன் காலத்திற்கு மேலே இருந்து பார்க்கிறான் 

வெண்முரசு வட -தென் சமன்பாட்டை சரி செய்கிறது . சங்கரர்  தொடங்கி நாராயண குரு வரையிலான படிவ ர் ஞானத்தை பயன் படுத்திக் கொள்கிறது 

நாம் மறந்து விட்ட இந்தியாவின் கலாச்சார தேசியத்தை செயற்கையாக இல்லாமல் நினைவூட்டுகிறது 

அத்தககைய சில இடங்கள் 

1 வியாசர் குமரி முனையில் வழிபடுகிறரர் 

2 திருவிடத்தில் இருந்து அகத்தியரையே வரவழைக்கிறேன் (சத்தியவதி சொல்வது)

3 சோழம் , பாண்டியம் ,  கொங்கணம்  அரசர்கள் காசி மணத்தன்னேற்பில் கலந்து கொள்வது 

4 வேசரத்திலும்  அப்பால் திருவிடத்திலும் அம்பைக்கு ஆலயங்கள் 

5 கடலோர திராவிட நாடு சண்ட கர் ப்பர்  அதர்வ வேத அறிஞர் 

புனைவு      கொடுக்கும் கற்பனைச் சுதந்திரம் மட்டுமல்ல இக் கூற்றுக்கள்  .

வரலாறு  கனவுக்குள் புகுந்து எடு க்கப் பட வேண்டிய இடங்கள் சில உண்டு. எந்த அரசியல் நோக்கம் இல்லாமல் அதை உரிய செவிகள் இழுத்துக் கொள்ளும்.  இந்தியப் பெருநிலத்தில் எங்கோ நெடுந்தூரம் நடந்து    செல்லும்  பயணி இசைக்கும் பழம்பாடல்கள் இந்த தேசத்தைக் கட்டி வைத்திருக்கும் இழைகள் . முடியாது வளரும் இந்தச் சரடில் வெண்முரசு வலிமையான பொற்பட்டு நூலாடை . முதற்கனல் அதற்கு முதல் நூல்.

ஆர் ராகவேந்திரன் 

கோவை