நிகர்வாழ்வு – திருதிராஷ்டிரர், பாண்டு, விதுரர்

மழைப்பாடல் வாசிப்பு-3 – விக்ரம்

தங்கள் புறம் எவ்வாறு இருப்பினும் தங்கள் விருப்பங்கள் அல்லது விருப்பமின்மைகள், நிறைவேற்றங்கள் அல்லது ஏமாற்றங்கள் இவற்றிற்கப்பால் தங்கள் அகம் என தங்களுக்கான ஒர் நிகர்வாழ்க்கை கொண்டவர்களாக உள்ளனர் திருதிராஷ்டிரரும், பாண்டுவும், விதுரரும்.

இசையால் அமைந்தது திருதிராஷ்டிரரின் உலகு.  அவர் இசையால் அறியவொண்ணாதது என்று ஒன்றில்லை.  தன் திருமணத்தின் பொருட்டான காந்தாரப் பயணத்தில் தான் அறிந்திரா நிலத்தை அதன் விரிவை, அமைதியை தன் செவிகளாலேயே அறிந்துகொள்கிறார் திருதிராஷ்டிரர்.  ஆழமற்ற பாலைவன நதியில் பிரதிபலிக்கும் விண்மீன்களைக் கூட அவர் அந்நிலத்திற்கு வரும் முன்னரே இசையால் கண்டுவிட்டவராக இருக்கிறார்.

”விஹாரி ராகம் பாடிக்கேட்டபோது அவற்றை நான் பார்த்தேன். பாலைவனத்தில் நதியில் விண்மீன்கள் விழுந்துகிடக்கும்” என்று விதுரரிடம் சொல்கிறார் அவர்.  திருதிராஷ்டிரரின் நிகர் வாழ்வில் தன்னை இணைத்துக்கொள்ள முடிந்த காந்தாரியின் அன்பை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். விழியற்றவரை மணம்முடிப்பது குறித்து மற்றவர் கருத்துகளுக்கு காந்தாரியின் பதில்களை கவனிக்க வேண்டும்.  எல்லா ஷத்திரியர்களும் விழியற்றவர்களே என்கிறார் அவர்.  

”அவளிடம் சொல், மலைக்கழுகுகள் கூடணைவதில்லை, கரும்பாறைகளையே தேர்ந்தெடுக்கின்றன என்று”

பின்னாளில் புத்திரசோகத்தில் தவிக்கும் திருதிராஷ்டிரரை அமைதிப்படுத்த காந்தாரியால் இயல்வது அவரது தனித்த உலகிலும் ஒர் அங்கமாக காந்தாரியால் ஆகிவிட முடிவதால்தான்.

பாண்டுவின் நிகர்வாழ்வு வேறொரு விதமானது.  குழந்தைகளைக் கொண்டு, குறிப்பாக தருமனைக் கொண்டு தன் உலகை அவர் உருவாக்கிக் கொள்கிறார்.

என் மைந்தனை தோளில் சுமந்துகொண்டிருக்கையில் நானடையும் மனமயக்குகள்தான் எத்தனை அழகியவை” என்றான் பாண்டு. “என் மூதாதையரை சுமந்துகொண்டிருக்கிறேன் என்று உணர்வேன்என் மூதாதையரின்ஊர்தியே நான்அவர்களுக்கு மண்ணைத்தொட்டு நடக்க ஊன்பொதிந்து உருவான கால்கள்அவர்களைதொட்டறிய தசைஎழுந்த கைகள்பின்பு நினைப்பேன்மண்ணாக விரிந்து கிடப்பவர்கள் என்மூதாதையரல்லவா எனஅவர்களில் ஒரு துளியை அல்லவா என் தோளில் சுமந்துசெல்கிறேன் என

பாண்டுவின் உலகினுள் குந்தி நுழைவதில்லை.

விதுரரின் நிகர்வாழ்வு வேறொரு வகையில்.  அதைப்பற்றி திருதிராஷ்டிரருடன் கருத்துப்பகிர்ந்து கொள்கிறார் அவர்.  புறத்தில் சூத அமைச்சர் எனப்படுவது, தன் எல்லைகள் அவருக்கு பொருட்டல்ல, எவ்விதமான தீவிர விழைவும் அவருக்கு அங்கில்லை.  மானுட உணர்வுகள் எதையும் நேரடியாகச் சுவைக்க முடியாத, அவற்றை அறிவாக உருமாற்றி அறிதலின் இன்பமாக மட்டுமே அனுபவிக்கும் தன் இயல்பை அவர் திருதிராஷ்டிரரிடம் கூறுகிறார்.  ஆனால் அவருக்கு பெரிதான நிகர்வாழ்வு காவியங்களின் வாசிப்பில் உள்ளது.

ஆனால் அரசேநான் அறியும் இன்னொன்று உள்ளதுஏடுகளில் நான் இன்னொரு முறை வாழ்கிறேன்அங்கேஇருப்பது அறிவுஆனால் அவ்வறிவு திரும்ப என்னுள் அனுபவங்களாக ஆகிவிடுகிறதுகாவியங்களில்தான் நான்மானுட உணர்வுகளையே அடைகிறேன் அரசேவெளியே உள்ள உணர்வுகள் சிதறிப்பரந்த ஒளி போன்றவைகாவியங்களின் உணர்வுகள் படிகக்குமிழால் தொகுக்கப்பட்டு கூர்மை கொண்டவைபிற எவரும் அறியாதஉணர்வின் உச்சங்களை நான் அடைந்திருக்கிறேன்பலநூறுமுறை காதல் கொண்டிருக்கிறேன்காதலைவென்று களித்திருக்கிறேன்இழந்து கலுழ்ந்திருக்கிறேன்இறந்திருக்கிறேன்இறப்பின் இழப்பில்உடைந்திருக்கிறேன்கைகளில் மகவுகளைப் பெற்று மார்போடணைத்து தந்தையும் தாதையும்முதுதாதையுமாக வாழ்ந்திருக்கிறேன்.”

புறத்தில் விழியற்ற திருதிராஷ்டிரர் நிகர்வாழ்வில் விழியுள்ளவர், புறத்தில் பெரிதும் துய்ப்பற்ற விதுரர் நிகர்வாழ்வில் பெருந்துய்ப்பாளர், புறத்தில் அதிகம் வாழ்நாள் பெறாத பாண்டு நிகர்வாழ்வில் நீடுவாழ்ந்தவர்.

அன்னையரின் ஆடல்களே பின்னாளில் கௌரவரிடமும் பாண்டவரிடமும் பேருருக்கொண்டன என்றாலும் அவற்றில் இம்மூவரது அகவாழ்வும் தமக்குரிய தாக்கத்தையும் செலுத்தின என்று எண்ணுகிறேன்.

திருதிராஷ்டிரர் – மழைப்பாடலின் சலுகைகள்

மந்தாரம் உந்து மகரந்தம்

மணந்தவாடை

செந்தாமரை வாள்முகத்திற் செறி

வேர்சிதைப்ப

தந்தாம்உலகத்திடை விஞ்சையர்

பாணிதள்ளும்

கந்தார வீணைக்களி செஞ்செவிக்

காது நுங்க

அனுமனின் இலங்கை நோக்கிய வான் பயணத்தில் வான்மீகி அவருக்கு வழங்கியதைக் காட்டிலும் அதிக சலுகைகள் வழங்குகிறார் கம்பர்.  அனுமனின் முகத்தின் வியர்வையை வாசம்வீசும் மந்தார மலர்களின் காற்று போக்குகிறது வானின் இசைவலரின் பிறழாத காந்தாரப் பண்ணின் வீணை இசை கேட்டு அவரது செவிகள் களிக்கின்றன.

மொத்த வெண்முரசும் அதன் முதன்மைப் பாத்திரங்களுக்கு, துணைப்பாத்திரங்களுக்கு வழங்கும் இடமும் சலுகைகளும் மிகப்பெரியவை.  அவற்றை மகாபாரதத்துடன் அல்லது பிற காவியங்களுடன் ஒப்புநோக்குவது அவசியமற்றது எனினும் ஒரு சுவாரஸ்யத்திற்காக மழைப்பாடலின் திருதிராஷ்டிரரை எடுத்துக்கொள்கிறேன்.  திருதிராஷ்டிரருக்கு ஜெயமோகன் அளிக்கும் இசை உலகு மிகப்பெரியது.  அத்துடன் பேரழகியான காந்தாரியுடன் திருதிராஷ்டிரரின் திருமணம் நிறைவேற பீஷ்மர் மீதான மதிப்பு, காந்தாரியின் கனிவு, சகுனியின் அரசியல் கணக்குகளுக்கு ஒத்து அமைவது எனப்பல காரணங்கள் இருப்பினும் திருதிராஷ்டிரரை பலரது பரிவுக்கு உரியவர் என்பதல்லாமல் ஒரு தகுதிமிக்க மாவீரராகவே நிறுத்துகிறது மழைப்பாடல்.  காந்தாரியைக் கைப்பற்றும் பொருட்டு லாஷ்கர்களுடன் ஒரு ஆக்ரோஷமான சண்டைக்காட்சி அவருக்கு வழங்கப்படுகிறது.  பொதுவாக வெண்முரசின் போர்காட்சிகள் ஒன்றை ஒன்று விஞ்சுபவை, ஒவ்வொரு நாயகருக்கும் எனப் பல அமைந்திருப்பினும் ஒவ்வொன்றும் தனித்தன்மையும் கொண்டவை.  திருதிராஷ்டிரரின் இவ்வெளிப்பாட்டில் திறனில் ஒரு சில நிமிடங்களுக்கு அவரை கம்பனின் சுந்தரகாண்டத்தின் அனுமனுக்கே நிகர்த்துகிறார் ஜெயமோகன்.

ஒடிந்தன உருண்டன உலந்தன புலந்த;

இடிந்தன எரிந்தன நெரிந்தன எழுந்த;

மடிந்தன மறிந்தன முறிந்தன மலைபோல்

படிந்தன முடிந்தன கிடந்தன பரிமா.

வெருண்டனர் வியந்தனர் விழுந்தனர் எழுந்தார்

மருண்டனர் மயங்கினர் மறிந்தனர் இறந்தார்;

உருண்டனர் உலைந்தனர் உழைத்தனர் பிழைத்தார்

சுருண்டனர் புரண்டனர் தொலைந்தனர் மலைந்தார்.

(அனுமன் நாற்படைகளையும் அழித்தல் – சம்புமாலி வதைப்படலம்)

விழிப்புலனுக்கு நல்அனுபவம் அளிப்பது பெருமழையை பெய்யக் காண்பது, பெய்யலினூடே விசைந்தாடும் மரங்கள், அதன் தழுவிப்படர்ந்து சிலிர்க்கும் கொடிகள், நனைந்த புற்கள்.  ஒரு பெருமழையின் அழகைக் காண்கையிலும் கொள்வன பல எனில் விழிகள் கொள்ளாமல் தவறவிடுவனவும் பல.  எனவேதான் ஒவ்வொரு மழையும் புதுமழை, காணதன காணப் பெறல் கண்டன புதுமை பெறல் என.  கொள்திறனுக்கு ஏற்ப முடிவிலி என தன்னை விரித்துக்கொண்டே செல்கிறது இயற்கை.  வெண்முரசின் வாசிப்பு –மழைப்பாடல் வாசிப்பும் அது போன்றதுதான்.

மழைப்பாடல் வாசிப்பு 2 – விக்ரம்

அம்பிகையும் அம்பாலிகையும் தம் குழந்தைகளை முதன்மைப்படுத்த விரும்பும் அன்னையர் மட்டுமே.  அரசியல் ஆடல்களில் கூர்மையும் நுட்பமும் கொண்டவர்கள் அல்ல.  அம்பிகையின் விருப்பம் திருதிராஷ்டிரனுக்கு செலுத்தப்பட்டது போல அம்பாலிகையின் விருப்பம் பாண்டுவிற்குள் செலுத்தப்படவில்லை.  அம்பிகை அம்பாலிகையின் அடுத்தநிலை என காந்தாரியும் குந்தியும் எனில் தன் கணவனின் இசைக்குள் நுழைந்துவிட்ட காந்தாரியை குந்திக்கு சமன்செய்ய முடியாது.  என்றபோதும் சகுனி அதை ஈடுசெய்கிறார்.  வேழம் நிகர்த்த துரியோதனனின் பிறப்பின் போதே வேழத்தை மத்தகம் பிளந்து கொல்லும் அனுமனின் கதையும் அகழ்ந்தெடுக்கப்படுகிறது.  பீமனின் பிறப்பு நிகழ்கிறது.  ஒவ்வொன்றும் எதிர்விசையால் சமன்செய்யப்பட்டு கூர்கொள்கிறது.  பாலையின் விழைவினை எதிர்கொள்ளத் தயாராகிறது கங்கைச் சமவெளியின் விழைவு.

பாரதப்பெருநிலத்தின் மீதான காந்தாரப் பாலையின் விசை இன்றுவரை மீள நிகழும் ஒன்றாகவே தோன்றுகிறது.  பாண்டவப்பிரஸ்தம் என்னும் பெயர் பின்னாளில் பானிபட் என ஆனது இங்கு வரலாற்றுக்கு புவியியல் வகுத்தளித்த பாதையை உணர்த்துகிறது.  நிலம், நீர் – கடல் என்பது கடந்து காற்றிலேறி விண்ணில் என இனி மனிதரை வைத்தாடும் விசைகள் புதிய களங்கள் வகுக்கும்போலும்.  மீண்டும் தொடங்கிய இடத்திலேயே தம் ஆடலை முடிப்பார்கள் போலும் இந்திரனும் சூரியனும்.

கர்ணனின் பிறப்பை பாண்டுவிடம் சொல்லிவிடப் போவதாக சொல்லும் குந்தி பாண்டு அதை ஏற்கும் மனநிலையில் இல்லை என்பதை அறிந்தவுடன் அதை மறைத்துவிடுகிறார்.  பின்னாளில் கான்வாழ்வில் தந்தையாகும் விருப்பத்துடன் பாண்டவரின் பிறப்பை ஏற்கும் பாண்டுவிடம், பின்னர் அவர்களிடம் பேரன்பு கொண்டவராக விளங்கும் பாண்டுவிடம் கர்ணனைப் பற்றி குந்தி சொல்லியிருக்க முடியும்.  அதை அவர் மகிழ்வுடன் ஏற்பவராகவே இருந்திருப்பார்.  எனினும் குந்தி அவ்வாறு செய்வதில்லை அதற்கான அரசியல் காரணங்கள் குந்தியிடம் உள்ளன.

குந்தியிடம் திருமணம் நிகழ்ந்த பின்னான முதல் இரவிலேயே பாண்டு தன்னுள் இருக்கும் ஆறு பாண்டுக்களைப் பற்றி சொல்கிறார்.  பாண்டுவின் ஏக்கத்தின் விழைவான அக்கனவை நிறைவேற்றி வைத்தவர் ஆகிறார் குந்தி.  எனினும் பாண்டவர் பிறப்பில் விசித்திரவீரியனைப் ஒத்தவரான பாண்டுவின் ஏக்கத்தின் விழைவிற்கும் குந்தியின் பெரும் அரசியல் விழைவிற்கும் வேறுபாடு உள்ளது.  பாண்டவர்களை அரசியல் திட்டத்திற்கான ஆற்றல்களாக பார்க்கிறார் குந்தி.  உயிர் ஏக்கத்திற்கு அருள்கிறது வான் அவ்வருளின் வரங்களைப் பெருவிழைவு தன் கரங்களில் கொள்ளும் நேரம் யாவும் திரிபடையத் துவங்கின்றன என்று தோன்றுகிறது.

பாண்டு அரசியல் விழைவுகள் அற்றவரா என்றால் ஆம் அவர் அரசியல் விழைவுகள் அற்றவர்தான்.  ஆனால் முற்றிலும் அரசியலே அற்றவரா என்றால் அவ்வாறல்ல என்று எண்ணுகிறேன.  எப்போதும் தருமனைத் தன் தோளில் சுமந்தலையும் பாண்டு குந்தியின் அரசியலில் நோக்கற்றவர் போலத் தோன்றியபோதும் அதை அறிந்தே இருந்தார் என்று தோன்றுகிறது.  பின்னாளில் குந்தியே அச்சமடையும் தருமன் பாண்டுவின் தயாரிப்புதானே? ஒருவகையில் அதில் குந்திக்கான பாண்டுவின் செய்தி பொதிந்துள்ளது என்று தோன்றுகிறது.

இளைய வியாசரெனத் தோற்றம் கொண்ட விதுரர் பீஷ்மருக்கு பிடித்தமானவர்.  திருதிராஷ்டரனின் பேரன்பைப் பெற்றவர்.  சத்தியவதியால் வளர்க்கப்பட்டவர், நகையாடலில் அவர்தன் பேரரசியென்னும் வேடம் கலைத்து சிறுமியென உணரச்செய்பவர்.  விதுரருடனான சந்திப்பின் போது தான் கவலையற்றிருப்பதாகச் சொல்கிறார் சத்தியவதி.  பாட்டிக்கும் பேரனுக்குமான உறவு இவ்வாறிருக்க விதுரர் எவ்வகையிலும் தன் அன்னை சிவையைக் பொருட்டெனக் கருதியவர் அல்ல.  அம்பிகை அம்பாலிகை சிவை என்னும் வரிசையில் முன்னிருவரும் தம் கனவு கலைத்து கான்புகுகிறார்கள் எனில் சிவை விதுரரின் பொருட்டு தன் நிறைவேறாக் கனவினால் தன்னைத்தானே ஒடுக்கி சுருக்கி தனிமை கொள்கிறார்.  சத்தியவதிக்கும் சிவை ஒரு பொருட்டல்ல.  தன்னால் கவர்ந்துவரச் செய்யப்பட்ட அம்பிகை அம்பாலிகையின்பால் கொண்ட அளவிற்கு சிவையின் மீது அவர் கருத்து கொள்வதில்லை.

குந்தியும் தன் அன்னையின் மீது அணுக்கம் அற்றவர்.  அவ்வகையில் விதுரரை ஒத்தவர்.  விதுரருக்கும் குந்திக்குமான உறவு நுட்பமான ஒன்று.  நடுவுநிலை என்றபோதும் குந்திக்கு இசைவானதாகவே அஸ்தினபுரியில் அவரது அரசியலாடல்கள் இருக்கின்றன என்று எண்ணுகிறேன்.  விதுரர் புதிரானவராகவே தோன்றுகிறார்..  பீஷ்மருடனான தன் உரையாடலில் எதிர்காலத்தில் புதிதாக எழுச்சி பெறக்கூடிய மக்கள், எழக்கூடிய மௌரியப் பேரரசு உள்ளிட்ட அரசுகள் பற்றி கூறும் அவரது கணிப்பு, தீர்க்கதரினம் அவரது அறிவுத் திறனைக் காட்டுகிறது.  எனினும் சூதர் என்னும் தன் எல்லைக்குள் நிற்பவர் அவர்.

மழைப்பாடல் 1 – ஆர். ராகவேந்திரன்

மழைப்பாடல் வாசிப்பு ( 1 முதல் 25 அத்தியாயங்கள்)

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட-பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்-களித்
தாடுங் காளீ! சாமுண்டீ! கங் காளீ!

  • பாரதியார் (ஊழிக்கூத்து)

அன்னையும் அத்தனும் ஆடும் பகடைகள் தான் யுகங்கள் எனக் காலக்கடலில் விரிகின்றன.
பகடையின் வீச்சில் பகை கொள்ளும் இந்திரனும் கதிரவனும் தங்கள் விளையாட்டை மண்ணில் தொடர முடிவு செய்கிறார்கள். மரணமும் உதிரமும் வலியும் துயரும் விளையாட்டின் பகுதிகளே புவியின் சுமையைக் குறைக்க இயற்கை நிகழ்த்தும் .தூய்மைப்பணி

பீஷ்மர் வடமேற்குப் பாலையில் தொடர்ந்து அலைகிறார். காந்தாரி திருதராஷ்ட்ரனை மணந்து
ஹஸ்தினாபுரம் வருகையில் உதிர மழை பொழிகிறது. சிரவண மாதத்தில் கடைசி வரும் மழை
ஜூலை மாதத்தில் வட இந்தியாவில் பொழியும் தென்மேற்குப் பருவக் காற்றின் கொடையாகி
வருகிறது

வேழாம்பல் பறவை மழை நீருக்குக் காத்திருப்பது போல அஸ்தினபுரி பீஷ்மரின் கருணைக்கு
வாய்பிளந்து நிற்கிறது. பதினெட்டு ஆண்டுகள் கழித்து நகர் புகும் மாமழையாக பீஷ்மர். அந்த
மழையில் நனைந்து மதர்த்து நிற்பவன் திருதராஷ்ட்ரன். உடலாகவே வாழ்ந்தவன் பீஷ்மரிடம்
மற்போரில் தோற்றவுடன் உருகிப் பணிகிறான். விழி தவிர அனைத்துப் புலன்களாலும்
இசையைத் துய்ப்பவன். அவனுடன் மற்போரில் அவன் உடலை அறியும் பீஷ்மர் அவனுள்
ஓடும் அதிர்வை அறிகிறார். விதுரன் சொற்கள் மூலம் திருதனை அறிகிறான்.

விதுரன் உற்சாகம் நிறைந்த ராஜ தந்திர – சட்ட – அயலுறவு நிபுணனாகத் தன்னை
ஆர்வத்துடன் தயார் செய்து கொள்கிறான். அவனது பிறப்பு அவனுக்கு பெரும் தடையாக
இருப்பதை உணர்ந்து அறிவாலும் சொற்களாலும் தனது இடத்தை உருவாக்கிக் கொள்கிறான். விதுரன் ஆயுதங்களை மேற்பார்வையிட்டு கோட்டைத் தலைவனிடம் உரையாடுவது அமைச்சருக்கும் ராணுவத்தலைவருக்கும் எல்லா நவீன அரசுகளிலும் தொடரும் பூசலை குறிக்கிறது. ராணுவத்தை ஒரு ஐயத்துடன்தான் ஜனநாயக நாடுகளிலும் ஆட்சியாளர்கள் வைத்திருக்கின்றனர். நேரு – திம்மையா உறவு வரை வரலாறு பதிவு செய்துள்ளது. விதுரன் கோட்டை மேல் தயாராக நிறுத்தியுள்ள ஆயுதங்களை ஏன் துடைக்கவில்லை என்கிறான். பகலில் விபத்து ஏற்படலாம் என்கிறான் கோட்டைத் தலைவன். இரவில் செய்யலாமே என்கிறான் விதுரன். முறுமுனையில் பதில் ஏதும் வருவதில்லை. விதுரரின் துணிவு பீஷ்மர் என்னும் கார்மேகம் அஸ்தினபுரியை கவிந்து கொண்டிருப்பதால் வருகிறதோ?

போர் மழை போன்றது. பல முனைப் பூசல்களை அடித்துச் சென்று புதிய விதைப்புக்கு
புவியைத் தயார் செய்கிறது. போர் குறித்த பொருளியல் உரையாடல்கள் மெதுவாகத்
துவங்குகின்றன.

பீஷ்மர் கருணை மிகுந்து வடமேற்கே மாறி வீசிய மாரியாக காந்தாரம் செல்கிறார்.பாரத
வர்ஷத்தின் பசுமையான வரலாறெனும் வயலில் வடமேற்கு ரத்தம் கலக்க வழி செய்கிறார்.

எதிர்கால அரசியல் கணக்குகள் நிறைந்த சத்யவதி பீஷ்மரை காந்தாரம் அனுப்பி வைக்க
முயல்கிறாள் . அதற்கு விருப்பமில்லாத பீஷ்மரை பேருரு கொண்ட விழியிலா மன்னன் தாள்
பணிந்து விழும்போது மனம் மாறுகிறார் . இன்னொரு மனமாற்றம் சகுனியிடம் நிகழ்கிறது.
பீஷ்மரை அளக்க முடிந்து தோற்றபோது தனது ஆணவமும் கணக்குகளும் இழுக்க,
காந்தாரியை மகற்கொடை மறுக்கிறான் சகுனி. ஆனால் காந்தாரியின் நிமிர்வும் கனிவும்
நிறைந்த பேச்சு சகுனியின் மனதை மாற்றுகிறது.

சிறு சிறு நிகழ்வுகள் உலக நடப்பை மாற்றி விடுகின்றன. மகதத்தில் இருந்து சமாதான ஓலை
சகுனிக்கு வருகிறது. அதைக் கொண்டு வந்த செங்கழுகை ஒரு பசித்த ஓநாய் பிடித்துத் தின்று
விடுகிறது. அந்தக் கழுகை அம்பால் அடித்தது சகுனி. இரவில் துயிலாது இருந்த சகுனியை
தனது ஓலத்தின் மூலம் வெளியே வரச் செய்தது அந்த ஓநாய் . சகுனிக்கு துயில் வராமல் இருந்த
காரணம் பீஷ்மரின் மண வேட்பு தூது. ஒருவேளை கழுகின் செய்தி கிடைத்திருந்தால் காந்தாரம்
மகதத்துடன் மண உறவு கொண்டிருக்கும். மகாபாரதம் வேறு மாதிரி இருந்திருக்கும்

வேறு மாதிரி போகக் கூடிய பல்வேறு சாத்தியங்களின் விதைகள் காலமெனும் மணல் பரப்பில்
கொட்டிக் கிட க்கின்றன.

பாலைப் பயணத்தில் பீஷ்மர் கண்ட எண்ணற்ற விதைகள் ஒவ்வொன்றும் ஒரு நிகழ்தகவு.
தொடர் நிகழ்வில் ஒரு கண்ணி மாறினாலும் உருவாகும் காடு முற்றிலும் வேறாக இருக்கும்.

சத்தியவதி பீஷ்மரை தூது அனுப்பும் பகுதி கானல் வெள்ளி . காந்தாரி வெண்மணல் அனுப்பும்
அரிய வெள்ளி. அல்லது இந்த மொத்த நிகழ்வும் மயக்கும் பொய்த் தேர்.

பருவ மழையின் பரிசுதான் பாரதத்தின் வாழ்வும் பண்பாடும். புயல் உருவாக
பாலைவனங்களும் பங்களிக்கின்றன என்கிறார்கள் புவியியல் அறிஞர்கள்.
நிலத்தைக் காய்த்து காற்றை இலேசாக்கி அழுத்தத்தில் பேதமிட்டு விளையாடி கடல் நீரை
உறிஞ்சி முகிலில் நிரப்பி வீசிப் பொழிகின்றன தென் மேற்குக் காற்றுகள். மணலைக்
காற்றில் ஏற்றி விளையாடுகின்றன நெருப்பு தெய்வங்கள் . சகுனி என்னும் வெந்த காற்று
பாரதத்தின் மீது மழையைப் பொழிவிக்க காந்தாரம் தொட்டிலாக உள்ளது. ஆனால்
பொழிவது உதிரமழை .

பீலிப்பனையில் காந்தாரிக்கு தாலிச்சுருள் செய்ய பாலை எங்கும் அலைகிறார்கள், இறுதியில்
வெம்மையின் அனைத்து வீச்சுகளையும் தாங்கிய பேரன்னையான தனித்து நிற்கும் பூத்த
பனையைக் காண்கிறார்கள் கடினமான சூழலில் பெருகும் உயிர்த்தொகையின் அடையாளம்
பனை. காந்தாரியின் தங்கைகள் விழியிலா வேந்தனை மணக்கத் தயார் ஆகிறார்கள்.

திருதனின் உள்ளே ஓடிக் கொண்டிருந்த இசையைத் தானும் கேட்கிறாள் காந்தாரி . அந்த
இசைக்கணம் மிகக் குறுகிய மின்னல் அந்தக் கணத்தைப் பிடித்து வைத்துக் கொள்ளக்
கண்களைக் கட்டிக் கொண்டு விடுகிறாள். திருதன் வாழ்வில் முதல் முறையாக மழையில்
நனைகிறான்.

திருதராஷ்ட்டிரன் காற்றின் இசையில் மந்திர ஸ்தாயில் ஒலிக்கும் செவ்வழிப் பண்ணைக்
கேட்கிறான். அவனுக்கு என்றோ ஒருநாள் திருவிடத்து கலைஞர் இசைத்த சாமவேத பாடல்
இசை மட்டும் நினைவுக்கு வருகிறது. சொற்களை விதுரன் எடுத்துத் தருகிறான்

சாமவேதம் ஐந்தாம் காண்டம் ஒன்றாம் பாகம் ஐந்தாம் பாடல் பவமானன் என்னும் சோமனுக்கு
உரியது. பொங்கும் நதிகள்போல, கூரம்புகள்போல துள்ளி வரும் நெருப்பின் மகன் –
கதிரவனின் நண்பன். இந்திரன் வயிற்றில் சோமச் சாற்றை நிறைப்பவன். இரு பெரும்
சக்திகளின் மோதல் இனிய கல்லாக இசையாக ஆவியாக திருதனின் செவிக்குள் காற்றும்
நெருப்பும் போலக் கரைகின்றன.

அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச் செய்தாள் என்னை.

ஆர் ராகவேந்திரன்
கோவை