அபத்தக்  குப்பையின் மேல் ஞான ஒளி – ஆர். ராகவேந்திரன்

போரும் அமைதியும் – பாகம்  1 – வாசிப்பு

விருந்துகளும் போர்களும்

‘அன்னா  பாவ்லவ்னா அளிக்கும் அடம்பரமான விருந்தில் தொடங்குகிறது  படைப்பு.   பல ஆயிரம்  கால்களை  உடைய உயிரி ஒன்று நகரத் தொடங்குவது போல நிதானமான அசைவு .   விருந்துகளில்  உணவும் குடியும் அல்ல  முக்கியமான பதார்த்தங்கள் . மனிதர்களின் அந்தஸ்தும் தொடர்புகளும் தான்  விநியோகம் ஆகின்றன. 

ஆடம்பரமான மனிதர்களின் அபத்தமான திட்டங்கள், போலித்தனங்கள் , ரகசிய ஏற்பாடுகள்,  அரசு என்னும் எண்ண முடியாத  படிக்கட்டுகளில் கள்ளத்தனமாக ஏறுவது இவைதான் அங்கே எல்லோருடைய நோக்கங்களும் .

சரியான விகிதத்தில் ஆரஞ்சுப் பழச்சாறு கலக்கப்பட்ட  வோட்கா போல, நெப்போலியன் மீதான எதிர்ப்பும், மதம், சக்கரவர்த்தி ஜார் மீது நிபந்தனையற்ற விசுவாசமும்  கலந்து  அரசியல் சரி என்னும் கோப்பைகளில் ஊற்றி   ரஷ்ய உயர்குடியினர் அதிகார போதையில் திளைப்பதைக் காட்டும் டால்ஸ்டாய்,  போர் என்னும் அடுத்த கட்ட போதைக்கு  நகர்த்திச் செல்கிறார்.

சீமாட்டி  தாய்மார்கள் தங்கள் வாரிசுகளுக்கு பாதுகாப்பான  ஆனால் போர்ப்பங்களிப்பின் நன்மையைக் கொடுக்கக் கூடிய பதவிகளுக்காக தங்கள் குடிப்பிறப்பு – உறவுகள் – வட்டங்களை விரிவாக்கிக் கொண்டே செல்கிறார்கள். 

அடிமைகள், சேவகர்களின்  இருப்பு இந்த வண்ணமயமான செல்வ வாழ்வின் பின்னால் மங்கலாகக் காட்டப் படுகிறது.  தங்கள் முதலாளிகளுக்கு சட்டைப் பித்தான்களை அணிவித்துக் கொண்டும் யாரும் பார்க்கவில்லை என்று நினைத்து  மிச்சமாகிய மதுவை குடித்துக் கொண்டும் வாழ்கிறார்கள்.  

கதைத்திறன்

சிறிய செய்கைகளை முழு வர்ணனையுடன் அப்பட்டமாகக் காட்டும் டால்ஸ்டாய் மைய விசையான அழுத்தமான  நிகழ்வுகளைப்  போகிற போக்கில் கோடி காட்டுகிறார்.  

போர்க்களத்தில்  மோதல் துவங்கும் முன்னர் முன்னணியில் நின்று வேடிக்கை செய்து வரும் படை வீரர்களைக் காட்சிப்படுத்திடும் ஆசிரியர் திடீரென போர் துவங்கி விடுவதைக் குறிப்பாகக் காட்டுகிறார்.  (வெண்முரசில் போர் துவங்கும் முன்பு இரு புறமும் உள்ள சிறுவர்கள்  ஆயுதங்களை வீசிப்போட்டு விளையாடுவதை விரிவாகத் தீட்டியிருப்பார்  ஜெயமோகன்) . 

ஒரு திணிக்கப்பட்ட விருந்தில் பியர்- ஹெலனுக்கு இடையே  காதலை வலுக்கட்டாயமாக மலர வைப்பதற்காக மொத்தக் குடும்பமும் உறவினர்களும் முயல்வதை விலாவாரியாக விளக்குபவர் , பட்டென்று    “ஆறு வாரங்களுக்குப் பின் அவருக்கு திருமணமாயிற்று.    பீட்டஸ்பர்கில் உள்ள தமது பெரிய, புதிதாய் அலங்கரிக்கப்பட்ட மாளிகையின் வாழ்க்கையை ஆரம்பித்தார் ” என்று தாவுகிறார்.  தொலைவிலும் அருகிலும் நகர்ந்து பல கோணப் பதிவுகளை அனுப்பும் ட்ரோன் உத்தியின் இலக்கிய உச்சம்

  போரை விவரிக்கையில் அதிக ஒளியும், அடிக்க வரும் சிவப்பும் ரத்தமும் பெரிதாக இல்லாமல் மசமசப்பான  மாலை வெயில் போலவே சொல்லப் படுகிறது.  அருவருப்பும் அழுகலும் காட்டப்படும் இடம்  போர்கள் முடிந்து விட்ட பின் தூக்கி எறியப்பட்ட காயம் பட்ட வீரர்களின் மருத்துவ மனையில்  தான் . அங்கு தான் ரஸ்டாவ்  அடிப்படையான கேள்விகளை எழுப்பிக் கொள்கிறான். 

போருக்கு முன்பான படை நகர்வுகளும் ஆலோசனைகளும் உணவு, குதிரை, பீரங்கி விவரங்களும் கடினமான மலைச் சிகரம் மீது  ஏறுவது போல சிறுகச் சிறுக அடுக்கப்   படுகிறது. உச்சியிலிருந்து ஒரே தாவலாக மையப்போர்  கையாளப்படுகிறது. 

உள்ளீடற்ற அபத்தம் 

டால்ஸ்டாயின் போர் வெறுப்பும் போலித்தன வெறுப்பும் அவரை மனிதர்களின்  உள்ள ப் போக்குகளை கவனிக்கச் செய்கின்றன.   அவர் மனிதர்களின் பாசாங்குகளையும் பாவங்களையும் புரிந்து கொள்கிறார். இரக்கத்துடன்  தனது கொந்தளிக்கும் மனத்தைக் கொட்டி அதில் எல்லாருடைய உள்ளங்களையும் ஆதுரத்துடன் அள்ளிக் கொள்கிறார். 

இங்குள்ள எதற்கும்  தர்க்க – நியாயம் இல்லை.   வரலாற்றின் ஒரு கட்டத்தின் போக்கு , ஒரு மனிதனால் அவன் எவ்வளவு ஆற்றலுடன் இருந்தாலும் தீர்மானிக்கப் படுவதில்லை.   சோர புத்திரன் பியருக்கு பெருஞ்செல்வம் கிடைக்கிறது.  உடனே அவன் மிக முக்கிய குடிமகனாக உயர்கிறான். பின்னர் மனைவியை சந்தேகப்பட்டு தனது  சொத்தின் பெரும்பகுதியை அவளுக்கு அளித்து விட்டு ஃபிரி மேசனாக மாறி , அடிமைகளை விடுவிக்க வேண்டும்  என்று கனவு கண்டு, அவற்றை ஒரு எளிய முட்டாள் காரியதரிசி அழகாக வளைத்து தனக்கு ஏற்றவாறு  மாற்றிக் கொள்ள –  எல்லாமே   காலியாக உள்ளீடற்று போகின்றன – அவர் ஏழைகளுக்கு கட்டிய கட்டிடங்களை போல 

புத்துயிர்ப்பில் டால்ஸ்டாய் கட்டி எழுப்பிய நெஹ் லூதவ் பியருக்கு அருகில் நிற்கிறார்.

டுஷின் என்னும் நம்பிக்கை

இந்தச் சிறுமைகளுக்கு  முடிவில் அர்த்தத்துடன் ஒரு பாத்திரம்  எழுந்து வரும் என்று பார்த்தால் அது டுஷின் என்னும் பீரங்கி படைத்தலைவர் தான் 

ஆர்வத்துடன் தனக்குத் தானே பேசிக்கொண்டு தனது வீரர்களை ஊக்குவித்துக் கொண்டு இலக்கு எதுவும் இல்லாதது போல ஆரம்பித்து சுங்கான் புகைத்துக் கொண்டே எதையோ தாக்க வேண்டும் என்பதற்காக எதிர் மலையில் தெரிந்த கிராமம் மீது உற்சாகமாக  சுட்டுத் தள்ளுகிறார் . தனக்கு காப்புப்படையே இல்லை என்பதைக் கூட  உணராதவராக கடைசி வரை சுட்டுக் கொண்டே இருக்கும்  டுஷின் போருக்கு முன்னால் ஒரு விடுதியில்   படை  தயாராக வேண்டும் என்ற ஆணையை மீறி காலணியும் அணியாமல் குடித்துக் கொண்டிருந்ததற்காக   கண்டுபிடிக்கப் பட்ட மாணவன் போல அசடு வழிந்தவர்  தான். 

அந்த  பீரங்கிப்   பூசல் முடிந்ததும் இரண்டு பீரங்கிகளை ஏன் விட்டு விட்டு வந்திர்கள் என்ற மேலதிகாரியின் கேள்விக்கு பதட்டமாகி  கண்கள் தளும்ப தள்ளாடி நின்றவர் டுஷின்.   உண்மையில் போரில் வென்றதே அவரால்  தான் என்று  ஆண்ட்ரூ வாதாடிய போதும் பயந்து போய் தப்பித்தோம் என்று வெளியே வந்தவர். 

போர்களும் நிறுவனங்களும் அரசுகளும் பெயரே வெளிவராத ,  பிறர் தவறுகளையும் சுமக்கின்ற டுஷின் களால்  தான்  நடக்கின்றன 

அமைப்பின் உச்சியில் இருக்கும் ஜார்களும் நெப்போலியன்களும் ஒரு முனைப்படுத்தலைமட்டுமே செய்கிறார்கள் .

அதனால்  தான் ரஸ்டாவுக்கு ஒரு கட்டத்தில் ஜார் பேரரசர் கேலியாகத் தெரிகிறார் .

ஆன்ட்ரு தனது  வீர  நாயகனாக  மனதில்  வளர்த்து  வந்த நெப்போலியனை அருகில் கண்டவுடன் வெறுக்கிறான். 

டுஷினே எனது நாயகன். இந்த நாவல் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தஸ்தாயேவ்ஸ்கி கொண்டு வந்த  “அசடன் “  மிஷ்கின் டூஷினுக்கு இணையான இன்னும் அழுத்தமான பாத்திரம். ஒரு வளை டால்ஸ்டாய்க்கு  தஸ்தாவின் மனச்சாய்வு இருந்திருந்தால் டுஷின் பாத்திரம் இன்னும் விரிவாக மையமாக வளர்ந்திருக்கும். 

சள புள என்று மூன்று விரல்களில் பாதிரியின் ஆசீர்வாதம் போல சல்யூட் அடித்து நின்று கொண்டிருக்கும் டுஷின் மறக்க முடியாத பாத்திரம். 

களத்தின் பாடங்கள்

  போர் உபாயங்களில்  இருந்து வணிக – மேலாண்மை நுணுக்கங்கள் நூற்றாண்டுகளாக வளர்ந்து  வந்துள்ளன. வணிகமும் நிர்வாகமும் கூட ஒரு வகை  போர் தானே.  பக்ரேஷன் தனது படையின் தோல்வியை தள்ளிப் போடவேண்டும் என்பதற்காக படை நகர்வை தாமதப் படுத்துவதும் அதற்காக ஜாரிடமே  வாதிடுவதும் டால்ஸ்டாய் தரும் மேலாண்மைப்  பாடங்கள்.

அபத்தங்களின்  முடிவில்லாத சங்கிலியாகவே வரலாறு தீர்மானமாகிறது.  (சிலர் துப்பாக்கி சுட்டுக் கொண்டிருந்தனர்.  ஆனால்  யாரைப் பார்த்து என்பதைப்  பார்க்க முடியவில்லை. )

காயம் பட்ட ரஸ்டாவ் போன்றவர்களுக்கு தனது பீரங்கி வண்டியில் இடம் தரும் டுஷின் கடைசியில் ரஸ்டாவை ஒரு ராணுவ மருத்துவமனையில் பார்க்கும் போது  ஒரு கையை இழந்து  விட்டிருந்தார். ரஷ்யா தனது கையை இழந்து விட்டிருந்தது 

டால்ஸ்டாயின் பாத்திர அணிவகுப்பில்  பிறர் குற்றமும் தன்னுடையது  தானோ என்று குழம்பும் டுஷின் ஒரு தட்டில் என்றால்  மறு தட்டில் வாசைலி  அழுத்தமாக  உட்கார்ந்திருக்கிறார்.  முகத்துதி, நக்கல், சூழ்ச்சிகள் ஊ றிப்  பெருக்கெடுக்கும் உள்ளம் .

  தூலமான ஆபாசமும் நுண்மையான மெல்லுணர்வும் ஒரே பாத்திரத்தில் இயல்பாக வருவதே ஆசானின் தொடுகையாக உள்ளது .  வாசைலி பியருக்கு நாற்றமெடுக்கும் வாயால் முத்தம் கொடுக்கிறார் என்று சொல்லி விட்டு சில பக்கங்களுக்குள் தனது மக்களின் திருமணம் உறுதியாகும்போது தந்தையாக உண்மையாக கண்ணீர் நிறையும் கண்களுடன் தோன்றுகிறார் வா சைலி. 

சுயநலம் என்னும் மாமிசம் தந்தையன்பு என்னும் ஆன்மாவின் மீது போர்த்தியுள்ளதை டால்ஸ்டாய் தொடும் இடம் இது.

  அழுக்குப் படாத , சீருடை கலையாத ராஜதந்திரி பதவியை தனது அம்மா அன்னா பாவ்லவ்னா மூலம் பெற்று விடும் போரிஸ் உயர் பதவிகளுக்கு தொங்கிப் பிடித்துக் கொண்டு ஏறிவிடும் கலையின் பயனாளி.  ஆட்சி மாறிவிட்டபோதும் போரிஸ் தனது ஆதாயங்களை அழகாகப் பெறக்கூடியவன். 

கனவு காணும் ரஸ்டாவ்  அரசனுக்காக உயிரையும் தரும் உணர்வெழுச்சி கொள்கிறான்.  நாட்டுப்  பற்றுக்கும் நயமான தந்திரத்திற்கும் என்றும் நடைபெறும் போராட்டம்  நாவலின் மைய இழை.  ஒரு போருக்குள் பல போர்கள்.  ஒரே படைக்குள் பல போர்கள் .

பேச்சில்லாப் பேச்சு

உரையாடல்களுக்கு இணையாக மன ஓட்டத்தையும் உடல் மொழியையும்  கையாண்டிருக்கிறார். ஒரு பாத்திரம் ஒரு வாக்கியம் பேசியதென்றால் அப்போது அவர்கள் நின்ற, உட்கார்ந்திருந்த இடம், குரலின் ஏற்ற இறக்கம் , கண்கள், உதடுகளின் இயக்கம் முகம்  இவற்றை விரிவாக அளித்து விட்டு  “போல இருந்தது”, “பாவனை செய்தார் ” என்ற தொடர்களின் வழியாக  உடலின் பேச்சைப் பதிவு செய்கிறார்.  அதன் வழியாக மனதின் ஆழங்களுக்குள் அழைத்துச் சென்று  மனிதர்களின் உள்நோக்கங்களைத் தோலுரிக்கிறார் 

போரின் நொதிகள்

முரண்படும் உணர்வுகளை அபாரமாகச்  சொல்லிச் செல்கிறார். உதாரணமாக ஒரு சொற்றொடர் “இன்பத்தோடு கோபமாக நினைத்தார்” . 

இன்பம் காமத்தைக்  குறிக்கிறது, கோபம் குரோதத்தின் வெளிப்பாடு. மனிதனுக்கு நொதிச் சுரப்பிகளில் ஏற்படும்  தாறுமாறான கசிதலே போருக்கு  காரணம் என்று ஒரு கருத்து உண்டு. போரின் தொடக்கத்தில் சில வீரர்கள்  அடையும் மன எழுச்சி போரின் உளவியல் மீது  டால்ஸ்டாய்க்கு இருந்த ஆழமான பிடிப்பைக் காட்டுகிறது 

 இப்போதைய சுழலில் கூட பியரின் எஸ்டேட் இருந்த அதே கீவ் நரரில் போரின்  முன்னேற்பாடுகள் தொடக்கி விட்டன.  (ஜனவரி 2022) புடின் – நேடோ விளையாடும் கள மாகிறது உக்ரைன்

 தூக்கத்தை டால்ஸ்டாய்  பல வகைகளில் கையாளுகிறார். தோற்கப் போகும் போரில் தனக்கு  விருப்பமே இல்லாததால் ஆலோசனைக் கூட்டத்தில் குட்டஜோ வ் தூங்கி விடுகிறார். மனம் தவிர்க்க முடியாத ஒரு துயரத்தை  எதிர்கொள்ள அது ஒரு வடிகால். ரஸ்டாவ் குதிரைப்படைக்  காவல் முனையில் தூக்கக் கலக்கம் கொள்கிறான் . அவன் கனவுகளும் தூண்டப்பட்ட மனமும் கொண்டவன். பரபரப்பான நிலை தாள முடியாத போது மனம் ஒய்வு கேட்கிறது. 

தலைக்காயம் பட்ட ஆன்ட்ரு  தனக்கு மேலே ஆகாயத்தைக்  காணும்போது மரண அனுபவத்தை ஒரு கணம் பெறுகிறான். அது அவனைப் பேரமைதியில் வைக்கிறது.  

போரின் அரசியல்

போரில் தோற்றவனை நெப்போலியன் புகழ்கிறார். களத்தின்  இறுதியில் காலத்தின் ஓட்டத்தில் நாயகர்களெல்லாம்  அருவருக்கத் தக்கவர்களாகத் தெரிகிறார்கள் .   ஜாரும் நெப்போலியனும் சமாதான உடன்படிக்கை செய்து கொண்ட பின் காயம் பட்ட வீரர்கள் எல்லாவற்றையும் வெறுமையாக நோக்குகிறார்கள்.  

போரில் தோற்றபின்னும் அதை வெற்றி என்று சொல்லி விருந்து நடக்கிறது. புதிய வதந்திகளை, கோழைகளை, நாயகர்களை உருவாக்கிப்  படைக்கிறது விருந்து. டெல்லியின் “ கான் மார்க்கெட் கேங்” உடைய பழைய பாணி. 

முதிர்ந்து கனியும் தரிசனம்

ஆன்ட்ருவின் மரணச் செய்தியைக் கேட்ட மேரி  (இது உண்மையல்ல என்று பின்னால் தெரிய வருகிறது) அழாமல் எதிர் கொண்டுதுணிவு கொள்ளும் இடம் அவளுடைய மனப் போக்கிற்கு பெரிய மாற்றம். அவள் துயரம் அடைவதற்கு பதில் உயர்வான ஒரு மகிழ்ச்சி கூட அடைகிறாள். இங்கு ஆசிரியர்  மெய்ஞானி ஆகிறார். தந்தை பால்கான்ஸ்கியோ செய்தியை உறுதி செய்து கொள்ளாமல் நம்பிவிடும்  நசிவியலாளராக –  ஃபாட்டலிஸ்ட் ஆக இருக்கிறார் 

போர் முனையில் இருந்து ரஸ்டாவ் அனுப்பும்  கடிதத்தை அவன் குடும்பம் எதிர் கொள்ளும் முறை அழகு . குதூகலம் மட்டுமே கொந்தளிக்கும் இடம். பெண்குழந்தைகள் இல்லாத வீடுகளில் இது கிடைக்காது. நேர்  மாறாக இறந்து விட்டதாக நம்பிவிட்ட ஆன்ட்ரு வீடுதிரும்புதல் , கடுமைக்காரரான அவன் தந்தையின் உள்ளத்தில்  வைத்த கடினமான பாறையைப் பிளந்து நீர் பொங்கிய இடம் .

மரணமடையும்போது லிசா ஒரு கேள்வியை   முகத்தில் படர விட்டபடியே இறக்கிறார்கள். அது தீராத   குற்ற உணர்வை அவள் கணவனுக்கு உருவாக்கி விடுகிறது.  “எனக்கு ஏன் இதைச் செய்தீர்கள் ” என்கிறது அவள் முகம். சிறிய பொம்மை  போலவே அவளை  காட்டிக்   கொண்டுவருகிறார். டால்ஸ்டாய்.  அவளுடைய உதடுகள் சேர்வதே இல்லை என்கிறார். முழுமையடையாத வாழ்வின்   துயருக்கு மறக்க முடியாத உருவகம் 

வேறொரு வகையில் தூய இதய சுத்தியின் காரணமாக எளிமையில் “பிதாவே என் என்னை கைவிட்டாய்” என்று கேட்பது போலவும் உள்ளது. 

நடாஷாவின் பாத்திரம் குழந்தைமையிலிருந்து கன்னிமைக்கு மெதுவாகத் துளிர்விடுகிறது. எல்லாவற்றின் மீதும் உணர்ச்சி பூர்வமான  அன்பு, மிகைத் திறமையான நடனம் இவற்றை மட்டுமே முதல் பாகத்தில் நடாஷா வெளிப்படுத்துகிறாள். 

மொழிபெயர்ப்பாளர் டி எஸ் சொக்கலிங்கம் அவர்கள் இந்திய மனதிற்கு பொருத்தமான பதங்களைப் பயன்படுத்தி பண்பாட்டு மேடு பள்ளங்களை நிரவி விடுகிறார். 

உதாரணம் – துப்பாக்கி சனியன், “அவளுக்கு சாதகம் போதாது; குரல் அற்புதமானது”, ” எங்கள் சத்சங்கம்”, ‘வேதாந்த விஷயம்” “மனோராஜ்யம்” , தர்மம், தியானம், தீட்சை போன்றவை 

ஆன்ட்ருவிற்கு போர்க்களத்தில் காயம்பட்ட நிலையில் முதல் தீட்சை கிடைக்கிறது. பிறகு ஃ பிரிமேசன் பியருடன் பேசும்போது   இரண்டாம் முறை உள்ளம் விரிவு  கொள்கிறது.

தத்துவ ரீதியாக டால்ஸ்டாய்க்கு ஃபிரி மேசன்கள் மீது பரிதாபம் தான்  இருந்தது.   இருப்பினும் அவர்கள் மீது பரிவு இருந்திருக்கிறது. 

கருவி ஒரு வேளை பிழையானதாக இருந்தாலும் கதவு திறந்தால் போதும் என்று நினைத்திருக்கலாம்  .

 ஏனென்றால் தூய ஒளிக்கு டால்ஸ்டாய் நம்மை அழைத்துச் செல்லும் பாதை அபத்தம் என்ற குப்பைமேட்டின் வழியாகத்தான் செல்கிறது.  

ஆர் ராகவேந்திரன் 

கோவை

புத்துயிர்ப்பு வாசிப்பு – ராகவேந்திரன்

1908 இல் டால்ஸ்டாய் “ஒரு இந்துவிற்கு ஒரு கடிதம்’ என்ற கட்டுரையை எழுதுகிறார்.  அதை காந்தி அவருடைய அனுமதியுடன் மொழிபெயர்த்து அகிம்சையின் மூலம் விழிப்படையும் வழியை தென் அமெரிக்காவில்  பரப்புகிறார். காந்தியுடன் ஒரே ஆண்டு கடிதத் தொடர்பு கொண்ட டால்ஸ்டாய் 1910 இல் காலமாகி விடுகிறார். அன்பின் மூலம் விடுதலை என்னும் செய்தியை அனைத்து சமயங்களிலிருந்தும் சாரமாக்கித்  தந்த டால்ஸ்டாய் மிகச் சரியான பக்குவ நிலையிலிருந்த காந்தியிடம் பெரிய மாயத்தைச் செய்து விடுகிறார். சில நாடுகள் விடுதலை அடைகின்றன.   வரலாறு மென்மையான உக்கிரத்துடன் திரும்பி  நகர்கிறது.

இந்த உலகத்தின் முட்டாள் தனங்களை வைத்துக் கொண்டு  என்ன பண்ணுவது என்ற அறக் கேள்வியால் தனது செல்வத்தை ஈகைக்குத் தந்த செயல்பாட்டாளராக இருந்த டால்ஸ்டாய் லட்சியவாதத்தாலும் இதயத்தின் தூய சோகத்தாலும் தனது இலக்கியங்களை நிரப்பி வைக்கிறார். காந்திக்கு அவரது ஆன்மிகம்  உலகளாவிய அன்பு குறித்த நூல்களில்  தான் ஈடுபாடு இருந்தது. 

நாவலின் பயணமும் நாவலாசிரியரின் பயணம் போலவே உள்ளது. நாவல் எழுதிய 11 ஆண்டுகள் கழித்து டால்ஸ்டய் உயிர் துறக்கிறார். ப தீர்க்கதரிசிகள் , சிந்தனையாளர்கள் போலவே குடும்பத்தால் புரிந்து கொள்ளப் படாதவர்- இறுதி நாளில் வீட்டை விட்டு வெளியேறும் டால்ஸ்டாய் அஸ்டாபாவ் ரயில் நிலையத்தில் படுத்துக் கொள்கிறார். ரயிலில் பயணிகளிடம் தான் மிகவும் நம்பிய ஜார்ஜிய பொருளியல் கொள்கைகளை எடுத்துச் சொல்லி வருகிறார். சிறுமை கண்டு பொங்கிய அந்த ரஷ்ய பிதாமகனின் உள்ளக் குமுறல் புத்துயிர்ப்பு.

புத்துயிர்ப்பை வாசிக்கும்போது ஒரு அழகியல் பார்வையுடனோ இலக்கியக் கோட்பாட்டு விமர்சனமாகவோ அணுக  முடியவில்லை. ஒரு குருநிலையில் வாய்பொத்தி அமர்ந்திருக்கும் சீடனின் மனநிலையையே கொள்ள முடிகிறது.

சக மனிதருக்கு அநீதி, கொடுமை இழைத்தல் அவற்றை நியாயப்படுத்த சமயம் மற்றும் அறிவியலைத் துணைக்கொள்ளும் அரசு இயந்திர முறைமைகளும் ஆன்மின் குரலைச் செவி மடுக்கும் ஒரு பிரபு குலத்தவர் அடையும் உள்ளக் கொந்தளிப்புகளும் ருஷ்ய நிலத்தின் மீது உயிர்ப்புடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

மனிதன் புரியும் பாவம் – அதன் பின் வரும் மன அழுத்தம் – ,செய்ய வேண்டிய பிழை நிகர் இவையே புத்தியிர்ப்பின் மைய அச்சு

நெஹ்லூதவ்  என்னும் கோமகன் இதன் நாயகன். கத்யுஷா என்னும் பணிப்பெண்ணுக்கு தான் இழைத்த கொடுமைக்கு மனம் குமைபவன். தனக்கு நேர்ந்த அவலத்துக்குப் பின் பிறழ் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் கத்யுஷா செய்யாத கொலைக்கு விசாரிக்கப் படுகிறாள். ஜூரிகளில் ஒருவராக பல ஆண்டுகளுக்குப் பின்  நெஹ்லூதவ் வருகிறார். குற்ற உணர்ச்சியால் தூண்டப்படுகிறார். அவளுக்கு உதவ விரும்புகிறார். நீதிபதிகள் மற்றும் ஜூரிகளின் கவனமற்ற தன்மையால் அவளுக்கு சைபீரிய கடின உழைப்புத் தண்டனை கிடைத்து விடுகிறது.  அவளை சந்திக்க அடிக்கடி சிறைக்குச் செல்கிறார். சிறையில் அற்புதமான மனிதர்களையும் அனுபவங்களையும் சந்திக்கிறார். சைபிரியா செல்லும் ரயிலில்  உடன் செல்கிறார். கத்யுஷாவிற்கு வாழ்க்கை தரப் பார்க்கிறார். அவள் வேற ஒரு புரட்சியாளரை  விரும்பும்போது, வாழ்த்தி விலகிவிடுகிறார்.

ஒரு ஈஸ்டர் திருநாளின் உயிர்த்தெழும் கொண்டாட்டம் முடிந்த 2நாளில் கத்யுஷாவிற்கு தீங்கிழைத்து விடும் நெஹ்லூதவ், அவளுக்கு ஒரு புதிய 100 ரூபிள் நோட்டைக் கசக்கித் தரும்போது கத்யுஷா அறத்தின் வீழ்ச்சியை உணர்கிறாள்.

குற்றவியல், தத்துவத் தேடல், இறையியல் குறித்த அறிஞர்களின் அடிப்படை நூல்கள் நூலில் அலசப்படுகின்றன.

சிமன்சன் என்ற புரட்சிக் கைதி மூலம் தனக்குப் பிடித்த, காந்தியைக் கவர்ந்த புல்லுணவு வாதத்தை முன்வைக்கிறார். 

தனி நபர்22நில உடைமையை  ஆதரிக்கும் ஹெர்பர்ட் ஸ்பென்சருக்கும் நிலத்தை நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்ற கொள்கையை முன்வைத்த அமெரிக்க  பொருளியலறிஞர் ஹென்றி ஜார்ஜ்க்குமான கருத்தியல் பரிணாம வளர்ச்சியை நாவலில் விவரிக்கிறார். 

சோஷலிசம் –ஜார் மன்னரைக் கொன்ற நரோத்னிக்குகள் – விவசாயிகள் மூலம் புரட்சி – கம்யூனிசபுரட்சி வாதம் – மக்களுக்கு வழி காட்டி எப்படி வாழவேண்டும் என்று ஆதிக்கம் செலுத்த வரும் புரட்சியின் தலைவர்கள் – என்று பல  கிளைப்பட்ட – அடுத்த பத்து ஆண்டுகளில் வரவிருக்கும் நவம்பர் புரட்சி     கால கட்ட அரசியல் வரலாற்று விவாதம் ஆழமாக இருக்கிறது. 

நீதிமன்ற முறைமைகள் மிக அப்பட்டமாகச் சொல்லப் ப்டுகின்றன. ஒவ்வொரு நீதிபதியின் நோக்கங்கள், மன அமைப்புகள் அன்றாட அலுவலாக வழக்கை அணுகும் விதம்,  நவீன சமூக அமைப்பின் மீதான விமர்சனமாக அமைகிறது.

நீதிபதிகளில்  மனைவிற்கு பயந்தவர் ஒருவர், அயல் பெண் தொடர்பு கொண்டவர்  ஒருவர், நிரந்தர வயிற்றுக் கடுப்பும் அதைப் போக்கும் புதிய புதிய சிகிச்சைகளும் முட்டாள் தனமான விளையாட்டு நம்பிக்கைகளும் கொண்ட நீதிபதி ஒருவர்.  

முந்திய 2நாள் அதிக போதை அருந்தி விட்டு வழக்கைப் படிக்காமலேயே தனது ‘குற்றம் நிரூபிக்கும்’ வேலையை பெருமையுடன் செய்யும் அரசு வழக்கறிஞர்;  தனது அரிய சேவையை எண்ணி வியந்து கொள்ளும் உறுதிமொழி ஏற்கவைக்கும் பாதிரியார். இவர்களால் ஆனது நீதிமன்றம்.  

மிக நுட்பமான நையாண்டியை நீதிமன்றக் காட்சியில் சமுதாயத்தின் மீது தெளித்துள்ளார் டால்ஸ்டாய் (உதாரணம் : பாதிரியார் மிகத் தீவிரமாக சபதம் செய்ய அறிவுறுத்தும்போது விரலை ஒரு சிட்டிகையைப் பிடித்துக் கொள்வது போலவும் அது விழுந்து விடக்கூடாது என்று கவனம் செலுத்துவது போலவும் சாட்சியாளர்கள் வைத்துக் கொள்கிறார்கள். விரல்களுக்குள் பத்திரமாக எல்லோரும் பாவனை செய்யும் பொருள் எளிமை, நீதி அல்லது குழந்தைமை என்று எடுத்துக் கொள்ளலாம்.  இல்லாத ஒன்றைப் பொத்தி வைத்துக் கொள்ளும் கூட்டம்.     துயரப் பகடியாக விரிகிறது நாவல் 

நீதி மன்றச் செயல்பாடுகள்  எண்பது பக்கங்களுக்கு மேலாக விவரிக்கப் பட்டுள்ளன. முழுக் குற்றப் பத்திரிகையும் எழுதப் பட்டுள்ளது. மரண ஆய்வு மருத்துவ  அறிக்கையும் முழுவதுமாக தரப்பட்டுள்ளது. 

பெண்கள் சிறையின் காட்சிகள் அனுதாபமும் நகைச்சுவையும் கொள்ள வைப்பவை. அங்கே நோயாளிகள், ரகசியமாகக் குடிப்பவர்கள், பித்திகள், குழந்தைகள் உண்டு. சண்டை போட்டுக் கொள்பவர்கள் உண்டு. சிறைச்சாலைக்குள்ளே இருக்கும்  தேவாலயத்தில் ஒரு கைதிச் சிறுவனை சிறைக் கண்காணிப்பாளர் நெகிழ்வதாக நினைத்துக் கொண்டு தூக்கிப் பிடித்துக் கொள்வதும்    சங்கிலியால் பிணைக்கப் பட்ட கைதிகள் ஆண்டவர் முன் வணங்குவதும் நாவலின் உச்சமான கட்டங்கள். 

வறுமையை எழுதும்போது தரையில் பணிந்த உணர்வும் நுண்மையும் கொள்கிறார் ஆசிரியர். .  நெஹ்லுதவின் குழந்தையின் இறப்பை டால்ஸ்டாய்   மிக எதார்த்தமாக ஒரு கிழவியின் குரலில்  எழுதுகிறார். வாசிப்பவர் இதயத்தில் ஈரம் கசிகிறது.  அதை மொழிபெயர்ப்பாளர் தமிழ்ச்சூழலுக்கு அற்புதமாக மாற்றியுள்ளார். 

மத்ரியானாவின் குடிசைக்கு நெஹ்லூதவ் செல்கிறார் அவருக்கு கத்யுஷாவிடம் பிறந்த குழந்தை அங்கேதான் இருந்தது. குழந்தைகளை எடுத்துக் கொண்டு இல்லத்தில் விடும் ஒரு பெண்ணிடம் குழந்தையைக் கொடுத்து விட்டிருக்கிறாள் கிழவி.  குழந்தை செத்துப் போச்சு. ஒரே தொட்டிலில் தலை இடித்துக் கொள்ளாமல் நான்கு குழந்தைகளைப் படுக்க வைத்திருப்பாள் அந்த ஏஜன்ட்.  துணியில் சப்புக் காம்பு செஞ்சு தருவாள். அமைதியாய் அவை சப்பிக்கிட்டு இருக்கும்  .  தங்கக் குட்டிகள். .

பயணங்களில் பலவகைகள். விடுதலையைத் தேடிச் சுற்றும் மென்டிகன்ட்களில் டால்ஸ்டாய் பக்தி கொண்டவர். சிறைப் பிடிக்கப்பட்டவர்களின் சைபீரியப் பயணம் அவரை உலுக்குகிறது. அவரது ஆன்மாவின் தேடல் பயணத்திற்கு அதுவே ஒரு உந்துதலாக இருக்கும் 

படைப்பாளனின் சமகால சமூக நிகழ்வுப் பதிவு அவரது உண்மைத்தன்மையைக் காட்டுகிறது . 1880களில் மாஸ்கோ புத்தீர்ஸ்கயா சிறையிலிருந்து நீழ்னி நோவ்கரத் ரயில் நிலையத்திற்கு சிறைக் கைதிகளை சங்கிலி பிணைத்து வெயிலில் ஊர்வலமாக்க் கொண்டு செல்லும் நிகழ்வும் அதில் கைதிகள் இறந்து போவதும் காவியத்துயருடன் சொல்லப் படுகிறது.

கடத்தல் பயணம் என்ற நூலில் (உண்மை நிகழ்வு) ஒரு கைதியின் சிறுமி அழுவதையும் அதன் தந்தையை காவலர் அடிப்பதையும் நாவலில் கொண்டு வருகிறார் ஆசிரியர். அந்தக் குழந்தையை அரசியல் கைதி மரியா பாவ்லன்னா வாங்கிக் கொள்கிறாள். அவளுடன் செய்யும் சைபிரியப் பயணம் கத்யுஷாவிற்கு ஒரு புத்துயிர்ப்பு

நெஹ்லூதவும் சைபீரியப் பயணத்தில் மன மாற்றம் அடைந்து கொண்டே வருகிறார். எந்நேரமும் அவருள் இரக்கமும் கருணையும் நிறைந்திருந்தன. அவளுக்காக மட்டுமில்லாமல் எல்லோருக்காகவும் அவர் நெஞ்சினுள் இந்த இரக்கமும் கருணையும் பெருகிய வண்ணமிருந்தன.  

மதமின்மை வாதத்தின் பிரதிநிதியாகிய கிழவர் “கிறிஸ்துவைக் கொடுமை செய்தது மாதிரி என்னையும் கொடுமை செய்கிறார்கள் “ என்கிறார். நாடு , இடம் , கடவுள் என்று எதுவும் இல்லாத சர்வதேச பிரஜையின் குரலில் கிழவர் கூறுகிறாட்  “ஜார் வேந்தனை ஏன் அங்கீகரிக்கவில்லை? அவர் அவரது ஜார் வேந்தன். நான் எனது ஜார் வேந்தன்” 

கிடைக்கிற போது வேலை செய்கிறேன், கிடைக்காத போது கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறேன்.  என்கிற கிழவர், மன்னிக்க ஒன்றும் இல்லை; மனம் புண்படும்படி ஒன்றும் செய்யப்பட்டு விடவில்லை;  என் மனத்தைப் புண்படச் செய்வது முடியாத காரியம் என்கிறார். 

இறைவனின் பெயரால் இறைவடிவங்களை வதைப்பதும் அறிவியலாளர்கள் என்று சொல்லிக்கொண்டு அறிவுத் தேடலைச் சிதைப்பதும் “ மக்கள் இயக்கம் “ என்ற அடைமொழியுடன் மக்களைக் கொல்வதும் மானுட வரலாறு முழுவதும் உள்ளது. கிழவர் மிகக் குறுகிய பகுதியில் வருகிறார். மனசாட்சியின் குரலாக  வருகிறார் . “அஞ்சுதல் யார்க்கும் இல்ல;  அஞ்சவருவதும் இல்லை” என்ற ஒலியாக; “நாமார்க்கும் குடியல்லோம் “ என்பதன் பொருளாக. 

கிரிலித்சோவ் என்ற சைபிரிய தண்டனைக்  கைதி காசநோயால் சிறிது சிறிதாக மரணம் அடைவது பயணத்தின் முக்கிய இழை . அவரது இறப்பைப் பார்த்துக் கொண்டே வரும் நெஹ்லூதவிற்கும் உள்ளே ஏதோ ஒன்று செத்து விடுகிறது.     கத்யுஷா – பெரும் போராட்டத்திற்குப் பின் தன் மரியாதையையும் செல்வத்தையும் விட்டு அவரால் தண்டனைக் குறைப்பு பெற்றவள் – தியாகம் செய்வதற்காக சிமன்சனுடன் வாழ முடிவு செய்கிறாள். நெஹ்லூதவின் காதல் செத்து விடுகிறது ஆனால் மானுட அறம் என்னும் பரலோகத்தில் விழித்தெழுகிறார். 

பைபிளை கைதிகளுக்கு வினியோகம் செய்யவரும் ஆங்கிலேயர் கந்தலுக்காக அடித்துக் கொள்ளும் கைதிகளிடம் ஆண்டவர் பற்றிச் சொல்வதும் அதற்கு கைதிகளின் பதிலுரையும் துன்பச் சிரிப்பை உண்டாக்குபவை. 

கைதிகளை ‘சீர்திருத்த’ வந்த பாதிரியார் சிறைக் கொடூரங்களைக் கண்டு கடும் சோர்வடைகிறார். அவர் அரசின் – மத அதிகாரத்தின் பிரதிநிதி. ஆனால் அவருடன் பார்வையாளாராக வந்த நெஹ்லூதவ், தன் குற்றம் களையும் செயல்களின் பயனாக விவிலியத்தின் உண்மையை உணர்ந்து விடுகிறார். டால்ஸ்டாய்க்குப் பிடித்த மலைப் பிரசங்கம் நெஹ்லூதவின் உள்ளத்திலிருந்து புத்துணர்ச்சியை வெளிக்கொண்டு வருகிறது. 

எளிமையான உள்ளம் படைத்தவர்கள் ,  பாலகனைப் போன்றர்கள் –இவர்களுக்கான இடத்தை அடைகிறார் நெஹ்லூதவ். மதத்திலிருந்து இறைத்தன்மையை வடிகட்டும் வழியைக் கண்டடைகிறார். அவருக்கான கிறிஸ்து புத்துயிர்க்கிறார். 

நாவலில் டால்ஸ்டாயின் கையில் ஏசு வந்து எழுதிய இடம் : 

சாராயம் விற்றுச் சிறையில் இருக்கும் பெண்ணிடம் “ஏன் சாராயம் விற்றாய் நீ? என்று விசாரிக்கிறார்கள். அவள் பதில் – நல்லாயிருக்கே கேள்வி !- பிறகு நான் எப்படி என் பிள்ளைகளுக்குச் சோறு போடுவேனாம்? என்று அவள் தனது சிறுமியின் தலையில் பேன் எடுத்துச் சென்றாள்.

சிறைச்சாலையில் நடைபெறும்  மத வழிபாடு குறித்த டால்ஸ்டாயின் விமர்சனம் ஏசுவின் வழியிலிருந்து விலகி அவரை வழிபடும் குருமார் – சடங்குகள் – அர்த்தமற்ற பேச்சு முறைகளைக் கண்டிக்கிறது. இந்த இடத்தில் ஆசிரியர் தனது அங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு  அனார்க்கியவாதத்தை முழங்குகிறார். 

சிறையில் பெருங்கூச்சலுக்கு இடையில் நெஹ்லூதவ் – கத்யுஷா இருவரும் பேசிக்கொள்வது அழகிய பகடி ஒரே நேரத்தில் பல உரையாடல்கள் முயங்கி குழப்பமாகும் இடம்.  . இது சொந்த அனுபவத்தில் ஒரு முறை நிகழ்ந்திருக்கிறது. தவறுதலாக கைது செய்யப்பட்ட ஒரு நண்பரைப் பார்க்கச் சென்றபோது. முதன் முதலில் பார்வையாளரைக் காணும் ‘கைதி’யின் மன ஓட்டத்தை நினைத்தால் பதறுகிறது. 

வேரா போகதூஹவ்ஸ்கயாவின் புரட்சிக் கட்சிச் செயல்பாடுகள், ஷூஸ்தவாவின் தியாகம், இவர்களுடன் தொடர்பு கொள்ளும் கத்யுஷாவிற்கு புதிய மறுமலர்ச்சி ஏற்படுகிறது. நெஹ்லூதவிடம் கொண்ட உயரிய அன்பினால் அவரது கரத்தைத் தட்டி விடும் அவள்    சிமன்சனின் அன்பை ஏற்றுக்கொள்கிறாள். எந்த நிலையிலிருந்தாலும் அவள் உலகத்தின் கள்ளமற்ற குழந்தைதான். 

ஆசிரியரின் ஆளுமையை நெஹ்லூதவில் விரவி விட்டிருக்கிறார்.  தனது நிலத்தை பண்ணைத் தொழிலாளர்களின் கவனிப்பில் விட்டு லாபம் பகிர்ந்து கொள்ளும் கொள்கையை முன்வைக்கும்  முடிவை மிகுந்த ஊசலாட்டங்களுப்பின் எடுக்கிறார் நெஹ்லூதவ். கத்யுஷாவிற்கு உதவுவது அவள் புறக்கணிக்கும்போது சினம் கொள்வது, அவள் பற்றி தவறான தகவல்கள் வரும்போது வெறுப்பது, அதையும் மீறி அவளுக்கு உதவி செய்வதை தனது பெரும் கடமை என்று மனதிற்குப் பதிய வைப்பது என்று நெஹ்லுதவின் மனப் பாய்ச்சல்களைக் காட்சிப் படுத்தி உள்ளது அழகு

கத்யுஷாவை இறைவனின் தூய காதலியாகவே நிறுத்திவைத்துள்ளார் டால்ஸ்டாய் (அவளது ஜீவன் அனைத்துமே தூய்மை, கன்னித்தன்மையதான காதல் ஆகிய தலையாய இரு பண்புகளைக் கொண்டிருந்தன –அந்தக் காதல் அவரிடம் (நெஹ்லூதவ்) அவளுக்கு இருந்த காதல் மட்டுமல்ல – அவருக்கு இது தெரிந்தது – யாவரிடமும் யாவற்றிடமும் அவளுக்கிருந்த காதலுமாகும். )

டால்ஸ்டாயின் ‘ஒரு ஹிந்துவுக்கான ஒரு கடிதம்’ புத்தர், விவேகானந்தர்  கிருஷ்ணரின் மேற்கோள்களை முன்வைக்கிறது. குறளையும் எடுத்தாள்கிறார். ஆறு குறள்களைக் குறிப்பிடுகிறார். 

இன்னா செய்தாரை ஒறுத்தல், பிறர்க்கின்னா முற்பகல், இன்னா செய்தார்க்கும் இனியவை ,  அறிவினால் ஆகுவதுண்டோ முதலிய குறட்பாக்கள். மன்னிப்பை – மானுட அன்பை வலியுறுத்தும் பாக்கள் – விவிலியம் சொல்லும் அன்பு – கீதை தரும் அன்பு – 

 ஏழு முறை அல்ல, எழுபது முறையும் உன் சகோதரனை மன்னிப்பாய் என்னும் விவிலியச் சொற்றொடர் நெஹ்லூதவிற்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. 

கத்யுஷாவின் மன்னிப்பு, நெஹ்லூதவின் மன்னிப்பு, சிறையில் பாலுக்காக அழும் குழந்தைகளின் மன்னிப்பு. பெரும் மாளிகையை விட்டு மனித அன்பின் ஊற்றைத் தேடி இரவில் ரயில் நீத்த மாமனிதன் இந்த உலகத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டே அளிக்கும் மன்னிப்பு.

புத்துயிர்ப்பு தரும்   செய்தி – மன்னித்து விடு தேவன் உன்னை மன்னித்தது  போலவே.

ஆர் ராகவேந்திரன்

கோவை

புத்துயிர்ப்பு வாசிப்பனுபவம் – காளீஸ்வரன்

அன்னா கரீனினா, போரும் அமைதியும் என மாபெரும் இரண்டு செவ்வியல் படைப்புகளுக்குப்
பிறகு, ஏறத்தாழ பத்தாண்டுகள் இடைவெளிக்கு பின்னர், தன்னுடைய 78 ஆவது வயதில்
“புத்துயிர்ப்பு” நாவலை தல்ஸ்தோய் எழுத நேர்ந்த சந்தர்ப்பமே ஒரு புனைவாக
எழுதப்படக்கூடிய சாத்தியம் கொண்டது. ரஷ்யாவில், மதத்தின் வெற்றுச் சடங்குகள், மூட
நம்பிக்கை, பழமைவாதங்களைக் கடந்து, அறத்தின் பால் நிற்கும் பிரிவினர் ”டுகோபார்ஸ்”.
அரசாங்கமும், ருஷ்ய சமூகமும் தந்த அழுத்தத்தால், 1898ல் 12000 ”டுகோபார்ஸ்” குடும்பங்கள்,
ரஷ்யாவிலிருந்து கனடாவுக்கு அகதிகளாக பயணப்படுகின்றனர். கிட்டத்தட்ட 6000 மைல்
தொலைவு கொண்ட அப்பயணத்துக்கு உதவும் பொருட்டு தல்ஸ்தோய் அவர்களால், 1899 இல்
எழுதப்பட்டது “புத்துயிர்ப்பு”. தல்ஸ்தோயின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவமும்,
வழக்கறிஞராய் இருக்கும் அவருடைய நண்பர் சொன்ன ஒரு உண்மைச் சம்பவமும்,
இந்நாவலுக்கான தூண்டுதல்கள். இந்நாவலின் பேசுபொருளினாலும், “டுகோபார்ஸ்” மீதான
தல்ஸ்தோயின் பரிவினாலும் சமூகத்தின் அழுத்தங்கள், வழக்குகள் இவற்றுக்கிடையேதான்
இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.
*
ஒரு குற்றவழக்கு விசாரணைக்காக, சான்றாயர்களுள் ஒருவராக வரும் கோமகன்
நெஹ்லூதவ், கொலைக்குற்றம் சாட்டப்பட்ட வேசை மாஸ்லவாவின் வாழ்க்கை தடம்
மாறிப்போக தன்னுடைய இளவயதில் தான் செய்த காரியமே காரணம் என எண்ணுகிறார்.
அவரது குற்றத்துக்கான விசாரணையையும், அதற்கான பரிகாரத்தையும் அவரது மனமே
தேடுகிறது. அத்தேடலின் நீட்சியாக, கொலைக் குற்றத்துக்காக சைபீரிய குற்றத்தண்டனை
விதிக்கப்படும் மாஸ்லவாவுக்காகப் பரிந்து, மேல்முறையீடு உள்ளிட்ட வாய்ப்புகளை
பயன்படுத்தும் நெஹ்லூதவ், ஒரு கட்டத்தில், அவளைத் தொடர்ந்து சைபீரியாவுக்குச்
செல்கிறார். இதற்கிடையே, தன்னுடைய நிலங்களை விவசாயிகளுக்கே குத்தகைக்கு
விடுகிறார், அவற்றின் மீதான தன் உரிமையையும் துறக்கிறார், வாய்ப்புக் கிடைப்பின்
மாஸ்லவாவை மணந்து கொள்ளவும் எண்ணுகிறார். இவற்றின் மூலமாக, இளவயதில் லட்சிய
வேட்கை கொண்டிருந்து, பின்னர் ராணுவ வேலையால் அதிகார நிழலின் கருமை படிந்து
போன தன்னுடைய ஆளுமையை சீர்படுத்திக்கொள்ள முயல்கிறார் நெஹ்லூதாவ். தொடர்ந்து
நாவல் முழுவதிலும் நெஹ்லூதாவின் எண்ணங்களும் மனமாற்றங்களும் சொல்லப்பட்டுக்
கொண்டே வர, உயிர்த்தெழுதலை நோக்கிய நெஹ்லூதாவின் பயணம் என்பதாகவும்
இந்நாவல் எனக்குப் பொருள்படுகிறது.


இப்பெரும் படைப்பு, ஒட்டுமொத்த சமூகத்தின், நீதி/அதிகார அமைப்புகளின் பார்வைகள்,
செயல்பாடுகளை ஒருபுறமாகவும், அதற்கிணையான மறுபுறமாக தனிமனிதனின்
மனசாட்சியை, அவனது அந்தரங்க தன்விசாரணையையும் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
சந்தர்ப்ப சூழ்நிலைகள், புற அழுத்தங்கள், அலட்சியங்கள் என பற்பல காரணிகளால்தான்
விடுதலையோ தண்டனையோ விதிக்கப்படுகின்றது. ஒரு கொலைக் குற்றம், அதன்மீதான விசாரணை, முறையற்ற தீர்ப்பு, சிறை, கைதிகள், அவர்களது வாழ்க்கை,
குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டவர்களை அதிகார வர்க்கம் நடத்தும் விதம் என சமூகத்தின், நீதி மற்றும்
அதிகார மையங்களின் இருண்ட பக்கம் மிக வலுவாகக் காட்டப்படுகிறது. அதே சமயம்,
மாஸ்லவாவின் வாழ்வு பிறழ்ந்துபோக தான் ஒரு முதன்மைக் காரணம் என எண்ணும்
நெஹ்லூதவ் தன் ஆன்மவிசாரணையிலிருந்து அவ்வளவு எளிதாகத் தப்பிவிட முடிவதில்லை.
தன் மனசாட்சியின் உந்துதலால், தன்னுள் புதைந்துபோன இளவயது, லட்சியவாத
நெஹ்லூதவை மீட்டெடுக்க, சாமனிய மனிதனுக்கே உரிய அலைக்கழிப்புகளுடனே தனக்கான
உயிர்த்தெழுதலை நோக்கி அவர் பயணப்படுகிறார். வெளிப்புற விசாரணைகள் அனைத்துமே
தர்க்கம் மற்றும் திறமையின் அடிப்படையில் அமைய, ஆத்மவிசாரணை முழுவதும் அறத்தை
அச்சாகக் கொண்டு அமைகின்றது.
*
நாவலின் துவக்க அத்தியாயங்களில் காட்சிப்படுத்தப்படும் நீதிமன்றமும் அதன்
செயல்பாடுகளும் விசாரணையின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றன.
தலைமை நீதிபதி முதற்கொண்டு அங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான சொந்த
அலுவல்களும் அதற்பொருட்டு விரைவிலேயே வழக்கை முடிக்க வேண்டிய எண்ணமும்
விசாரணையில் செலுத்தும் ஆதிக்கம் மாஸ்லவாவுக்கு எதிராகவே முடிகிறது. பிராசிக்யூட்டர்
அசுவாரஸ்யத்துடன் இவ்வழக்கு விசாரணைக்கு தயாராதல், தன்னுடைய தரப்பை மாஸ்லவா
சொல்லிக் கொண்டிருக்கும்போது தலைமை நீதிபதி தன்னருகே இருக்கும் இரண்டாம்
நீதிபதியுடன் பேசிக்கொண்டிருப்பது, விசாரணையின் வாதங்களை அலட்சியத்துடன் கேட்கும்
நீதிபதிகள் என விசாரணையில் நிலவும் முறையின்மை காட்டப்படுகின்றது. சான்றாயர்களின்
கவனக்குறைவால் விடுபட்டுப்போகும் ஓரிரு சொற்களால் மாஸ்லவாவுக்கு எதிராக
தீர்ப்பளிக்கப்படுவது வரை இத்தவறுகள் நீள்கின்றன. முடிவில், விசாரணையால் அல்ல,
சந்தர்ப்பத்தினாலேயே ஒரு வழக்கின்/தீர்ப்பின் போக்கே மாறுவதைக் காண்கிறோம்.
நெஹ்லூதாவின் இளமைக்காலத்தில் இருக்கும் லட்சிய வேட்கை தன்னுடைய சொத்துக்களை
விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் அளவுக்கு ஆழமானது. அவனுடைய தனிப்பட்ட
ஆளுமையில் பெரும்பகுதி அவரது வாசிப்பினால் விளைந்தது. ஆரம்ப காலத்தில்
மாஸ்லவாவுடனான அவனது நெருக்கம் அவன் சுற்றத்துக்கு கவலை அளிப்பதும் அந்த
லட்சிய வேட்கையின் நீட்சியே. மூன்றாண்டு கால ராணுவ சேவையும் அதிகார தோரணையும்
தன்னை நம்பும் நெஹ்லோதவ்வை பிறரை நம்பும் நிலைக்கு “உயர்த்துகின்றன”. நாவலின்
பிற்பாதியில் சைபீரிய சிறைக்கு கைதிகளை அழைத்துச் செல்லும் வழியில், ஒரு கர்ப்பிணிக்
கைதி நடத்தப்படும் விதமும், தகப்பனிடமிருந்து ஒரு பெண் குழந்தை பிரிக்கப்படும் விதமும்,
சாமானிய மக்களிடையே பெரும் சஞ்சலத்தை உண்டாக்குகின்றன. அதே விசயங்களைக்
கண்ணுறும் அதிகாரிகள் அதை எளிதாகக் கடந்து போவதும் இதே வகையான தரம்
உயர்த்தப்பட்டதன் விளைவுகளே.

இப்படி நீதிபதிகள் முதற்கொண்டு, அதிகாரிகள் வரை தத்தம் எல்லைக்களுக்குற்பட்ட
நெறிமீறல்களைக் கைக்கொள்ளும்போது, தன்னில் ஒருவனை குற்றவாளி என தண்டிக்கும்
உரிமையை ஒரு சமூகம் தானாகவே இழக்கிறது. இதே கருத்தை சான்றாயர்களில் ஒருவராக
வருபவரும், குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் அனைத்துக் குற்றங்களிலிருந்தும் விடுதலைத்
தீர்ப்பை நாடுபவருமான “அர்த்தேல்ஷிக்” முன்வைக்கிறார். நாவலில் பலதரப்பட்ட
சந்தர்ப்பங்களில் நாம் காண நேரிடும் பலதரப்பட்ட மக்களும் அவர்தம் செயல்பாடுகளும்,
அவர்களை வெளியிலிருக்கும் குற்றவாளிகள் என எண்ணவைக்கின்றன. அதேபோல ஒரு
வலுவான சிபாரிசுக் கடிதம் பல நாட்களாக சிறையில் வாடிய கைதியை
விடுவிக்கப்போதுமானதாக இருக்கும்போது, கைதிகள் அனுபவிக்கும் தண்டனை என்பது
அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்காகவா அல்லது அவர்களுக்கு சரியான சிபாரிசு
கிடைக்காத குற்றத்துக்காகவா எனும் எண்ணம் எழுகிறது.


மனிதரில் நிலவும் கீழ்மை, அதிகார வர்க்கத்தில் மட்டுமல்ல எல்லாவிடங்களிலும் நீக்கமற
நிறைந்திருக்கின்றது. சாதாரண குற்றத்தண்டனைக் கைதிகளைப் போலன்றி, வஞ்சிக்கப்படும்
மக்கள் பக்கம் நின்று அதிகாரத்தை எதிர்க்கும் அரசியல் கைதிகளுக்குள்ளும் தன்னையும் தன்
நலத்தையும் மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கும் ”நவதுவோரவ்” வகையினரும் இருப்பது
அதற்கொரு நல்ல உதாரணம்.


நெஹ்லூதவ்வைக் காட்டிலும் மிக வலுவான பாத்திரமாக மாஸ்லவா விளங்குகிறாள்.
இத்தனைக்கும், நாவல் முழுவதிலும் தன் தரப்பை சரி தவறுகளுடன் நெஹ்லூதவ்
முன்வைத்துக் கொண்டே இருக்க, மாஸ்லவாவின் மனக்குரல் எங்கும் பெரிய அளவில்
ஒலிப்பதில்லை. தன்னை தேடிவந்த கோமகன் யாரென தெரிந்து கொள்ளும் ஆரம்ப
சிறைச்சாலை சந்திப்புகளும், மருத்துவமனையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட தன்னை
நெஹ்லூதவ் சந்திக்கும் தருணமும் என மிகச்சில சந்தர்ப்பங்களில் மட்டுமே சற்றே
தன்னிலையை இழக்கிறாள் மாஸ்லவா. தனக்கு உதவக்காத்திருக்கும் நெஹ்லூதவ்விடம் பிற
சிறைக்கைதிகளின் சிக்கல்களைச் சொல்லி அவற்றுக்குத் தீர்வுகாண முயற்சிப்பதும், தனக்கு
விடுதலை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் நெஹ்லூதவ்வை மணக்கும் ஆசையை கைவிட்டு
அரசியல் கைதி “சிமன்சனுடன்” செல்ல எண்ணுவதும், மாஸ்லவாவை ஒரு வலுவான
பாத்திரப் படைப்பாக மாற்றுகின்றது.


நாவலில் வரும் இடங்களைக் குறித்த சித்தரிப்புகளும், துணைக் கதாப்பாத்திரங்களைப் பற்றிய
விவரணைகள், அவற்றை ஒரு புனைவாகக் கூட விரித்தெழுதக்கூடிய சாத்தியங்களைக்
கொண்டிருப்பதும், இந்நாவலுடன் நம்மைப் பிணைத்துக்கொள்ள, நம்முள் விரித்தெடுக்க
உதவியாய் இருக்கின்றன.


ஒட்டுமொத்தமாக இந்நாவல் நமக்குச் சித்தரித்துக்காட்டும் உலகம் வேறொரு நாட்டிலோ,
பழைய காலகட்டத்திலோ இருப்பதாகவோ என்னால் எண்ண முடியவில்லை. இந்நாவல்
கேள்விக்குட்படுத்தும் தண்டனை vs ஆத்ம விசாரணை என்னும் கருத்து எங்கும் என்றும்இ ருப்பதுவே. அவ்வெண்ணமே, காலத்தைக் கடந்து எப்போதைக்குமான ஒரு செவ்வியல்
படைப்பாக “புத்துயிர்ப்பு” நாவலைக் கருத வைக்கின்றது.

பின்குறிப்பு:
இந்நாவல் உருவான பின்புலத்தைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரை,
அவருடைய “எனதருமை டால்ஸ்டாய்” புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அக்கட்டுரை, அவரது
வலைத்தளத்திலும் வாசிக்கக்கிடைக்கின்றது. சுட்டி : https://www.sramakrishnan.com/?p=2135