எட்டிக்கசப்பில் எஞ்சும் துளித் தேன் – காளீஸ்வரன்

எழுத்தாளர் சு.வேணுகோபால் கருத்தரங்கில் ‘வெண்ணிலை’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட சிற்றுரை

சமீபகாலமாக அடிக்கடி ஒரு காணொளியைக் காண நேர்கிறது. தின்பண்ட பாக்கெட்டுகளால் நிரம்பியுள்ள ஒரு பெரிய இடத்தில், கிரேன் போன்ற அமைப்பின் உதவியுடன் ஒரு மனிதன் உள்ளிறக்கப்பட்டு, சில நிமிட இடைவெளியில் மீண்டும் வெளியெடுக்கப்படுகிறான். கிடைத்த சில நிமிட அவகாசத்தில், தன்னால் இயன்ற அளவுக்கு தின்பண்டங்களைத் திறனுக்கேற்ப சேகரித்துக் கொள்ளலாம். மலை போல குவிந்திருப்பினும், எடுத்து வரக்கூடிய அளவென்பது அவனது திறனைப் பொருத்தது மட்டுமே. மொத்தம் 23 சிறுகதைகள் கொண்ட வெண்ணிலை எனும் இத்தொகுப்பைப் பற்றிய என்னுடைய வாசிப்பனுபவமும் மேற்ச்சொன்ன சம்பவத்துக்கு இணையானதே.

தொகுப்பின் பெரும்பாலான கதைகள், மாறிவரும் காலசூழலினால் விவசாய சூழலில் ஏற்படும் மாறுதல்களைப், அதனூடே மனித மனதின் இருமையை, வாழ்க்கைப்பாடுகளை. எதையுமே செய்யவியலாத கையறு நிலையை, உறவுச்சிக்கல்களை இவை எல்லாவற்றுக்கும் மேலாக மானுடத்தின் மேன்மை வெளிப்படும் தருணங்களை, துளிர்விடும் சிறு நம்பிக்கையின் ஒளிக்கீற்றை பேசுபவை. 

ஒரு நிலப்பரப்பின் தன்மை, நிலவும் தட்பவெப்ப சூழல், வாழ்க்கைமுறை அதில் வாழும் மனிதர்களின் குணாதிசயத்தில் கொஞ்சம் செல்வாக்கு செலுத்தக்கூடும். செழிப்பான காலகட்டத்தில் நாமே மறந்துபோன நம் மனதின் இருண்ட பகுதியை (Grayness) வறுமை வெகு சுலபத்தில் வெளிக்கொண்டுவந்துவிடும். ஓரிரு கதைகள் தவிர எல்லாக் கதைகளுமே தென் தமிழக, குறிப்பாக மதுரை, போடியைச் சுற்றியுள்ள விவசாய கிராமங்களைக் களமாகக் கொண்டவை. போலவே வறண்டு போன பூமியை அதன் வாழ்வைச் சித்தரிப்பவை. குறிப்பாக சில கதைகளின் மையப்பொருளாகவே அவை அமைந்துள்ளன.

தொகுப்பின் முதல் கதையான உயிர்ச்சுனை, மறுபோர் ஓட்டியும், நீர் கிடைக்கப்பெறாத கண்ணப்பரின் ஆற்றாமையைப் பேசுகிறது. கோக கோலா குளிர்பான நிறுவனம் சுற்றுவட்டார வேளாண் நிலங்களின் நீரையும் உறிஞ்சிக்கொண்ட கயமை கூறப்பட்டாலும், கண்ணப்பரின் பேரன் நிதின் குறித்த விவரணைகள், மறைமுகமாக அவனது பங்கு நீரும் சேர்ந்தே களவுபோயிருக்கும் வலியைச் சொல்கின்றன. முதல் மகளிடம் தான் பட்டிருக்கும் கடன், இரண்டாம் மகளின் திருமணம் இவை எல்லாவற்றையும் தாண்டி கண்ணப்பர் “எம் பேரன்” எனச்சொல்லி உடையும் இடம் இக்கதைக்கு இன்னொரு பரிமாணத்தைக் கொடுக்கிறது.

இத்தொகுப்பின் ஆகச்சிறந்த கதைகளுல் ஒன்றான புத்துயிர்ப்பு வறட்சி நேரடியாக சம்சாரியின் வாழ்க்கையில் நிகழ்த்தும் அவலங்களைப் பேசுகிறது.  நல்லவனாகவும் திறமைசாலியாகவும் அறியப்பட்ட கோபால் வீட்டில் இரு நிறைமாத கர்ப்பிணிகள். ஒன்று அவன் மனைவி சாந்தா. இன்னொருவள் அவன் மகளைப் போலக் கருதும் பசுமாடு லட்சுமி. காடு மலை என எங்கு அலைந்தாலும் தீவனம் கிடைக்காத சூழலிலும் மாட்டை விற்க மறுக்கும் கோபால், தன் மனைவியின் வளையல்களை அடமானம் வைத்து பணம் புரட்டிய போதும் எங்கும் தீவனம் வாங்க முடியாமல் போகிறது. வேறுவழியில்லாமல் பக்கத்து வீட்டு ராமசாமி கவுடரின் தொழுவத்திலிருந்து சில கட்டு தீவனங்களைத் திருடும்போது அவர்களிடம் சிக்கிக்கொள்கிறான். அடுத்த நாள் நடக்கவிருக்கும் அவமானமும், எதுவுமே செய்யவியலாத கையறு நிலையும் அவனை தற்கொலை நோக்கித் தள்ளுகின்றன. பணம் புரட்ட முடிந்த பின்னரும் தீவனம் கிடைக்காத கொடுமையை இக்கதை பேசுகிறது. இதைப் போலவே, மெய்பொருள்காண்பதுஅறிவு கதையில், பரமசிவம் வேளாண் கூலி வேலையினால் படும் பாடு வறட்சியின் கோரத்தைச் சுட்டுகிறது.

தன் கதைகளில் திரு.சு.வே. கட்டமைக்கும் பாத்திரங்கள் வலுவான நம்பகத்தன்மை கொண்டிருக்கின்றன. வெகுசுலபமாக நாம் பார்த்திருக்கக்கூடிய ஒரு விவசாயக்கூலியை, வயதான பாட்டியை, தனித்திருக்கும் மாணவனை நம் நினைவில் மீட்டெடுக்க உதவும் வலுவான சித்தரிப்புகள் ஒவ்வொன்றும்.

கூருகெட்டவன் கதையின் உடையாளியும், வயிற்றுப்புருசன் கதையின் பொம்மையாவும் இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்தவர்கள். இருவருமே ஊருக்கென நேர்ந்துவிடப்பட்டவர்கள். ஆனால், உடையாளிக்கு ஒரு குடும்பமும், தான் ஏய்க்கப்படுவது பற்றிய பிரக்ஞையும் இருக்கிறது. ஆனால் அதுவும் அற்றவன் பொம்மையா. அவனைப் பொருத்தமட்டில் அது அவன் ஊர், அவ்வூரின் தோட்டமோ வெள்ளாமையோ எதுவாகிலும் அது அவன் பொறுப்பு. கதையில், பொம்மையா மனம் உடைந்து கண்ணீர் விடுவது ”நீ யாரு?” எனக் கேட்கப்பட்ட பதில் தெரியாத கேள்வியால் மட்டுமே. அதைத் தவிர வேறெந்த வசவுகளும், பேச்சுகளும் அவனைத் தீண்டுவதேயில்லை. மாறாக, உடையாளி தன் மனைவியுடன் ஜெயக்கிருஷ்ணன் கொண்டிருக்கும் உறவினால் பெரிதும் பாதிக்கப்படுகிறான். அடுத்த நாள் அதைக் கடக்கும் மனதோ அல்லது சூழலோ மட்டுமே அவனுக்கு வாய்த்திருக்கிறது. ஒருவகையில் இவ்விருவருக்கும் இடையே நிற்கும் கதாப்பாத்திரமாக திரு. நாஞ்சில் நாடன் அவர்களின் எடலக்குடி ராசாவைச் சொல்லலாம்.

தொகுப்பின் பெரும்பாலான பெண்கள் தாய்மையின் குறியீடாகவே இருக்கிறார்கள். விதிவிலக்கான ஒருவர் பேரிளம்பெண் கதையின் ஈஸ்வரி. கர்ப்பிணியான தன்னுடைய மகள் வீட்டில் இருக்கும்போது, ஈஸ்வரி ஒரு சீர் வீட்டுக்குச் செல்கிறாள். அவ்விசேஷ வீட்டில் அனைவரையும் ஈர்க்கும்படியான ஆடை அலங்காரங்கள், பாவனைகளை மேற்கொள்கிறாள். அதன் தொடர்ச்சியை மண்டபத்திலும் நிகழ்த்தும் ஆசைக்கு ஒரு தடை வருகையில், அந்தத் தடையின் வலியைக் காட்டிலும் பொய்த்துப்போன தன் ஆசை ஈஸ்வரிக்கு துன்பமளிக்கிறது. இதே இடத்தில் ஒரு ஆண் இருப்பின் அவன் சந்திக்க வேண்டியிராத சங்கடங்கள் இவை எனும்போது ஈஸ்வரியின் மீது கொஞ்சம் பரிவு எழுகிறது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவன் வெளிக்காட்ட விரும்பாத அல்லது அவனுக்கே தெரியாத ஒரு முகம் இருக்கும். அதை இக்கட்டான ஒரு சந்தர்ப்பம் எளிதில் வெளியே கொண்டுவந்துவிடும். அப்படி சந்தர்ப்பங்கள் மனிதனை தங்கள் கையில் எடுத்துக்கொள்ளும் கதைகளும், சந்தர்ப்பங்களின் இக்கட்டுகளால் நேரும் உறவுச் சிக்கல்களின் பரிமாணங்களும் இத்தொகுப்பில் உண்டு.

சந்தர்ப்பம் கதையில் இரண்டு விதமான மாணவர்கள் காட்டப்படுகின்றனர். துவக்கம் முதலே கெத்தாக வளையவரும் ஜீவா, நண்பர்களால் புள்ளப்பூச்சி என்றழைக்கப்படும் கதிரேசன். நீச்சல் தெரியாத ஜீவா, படிக்கட்டுகளைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் மிதப்பதும், பேருத்து நிலையத்தில் ஒரு பெண்ணின் மானம் பங்கப்படும்போது கதிரேசன் முதல் எதிர்ப்பைக் காட்டுவதும் இயல்பில் வெளிப்படும் அவர்களின் குணாதிசயத்தின் நேரெதிர் நிலையாகும்.

தங்கைகளுக்காக தன் வாழ்வை அழித்துக்கொண்ட அண்ணன் அவனது தங்கைகளால் தெய்வமாகவே மதிக்கப்படுகிறான். ஒவ்வொரு தங்கைக்கும் திருமணம் முடித்துவைக்கும் அண்ணன் தன் திருமணத்தைப் பற்றிய எண்ணமே இல்லாதிருக்கிறான். இறுதியாய் மிஞ்சும் தங்கையிடம் மூத்தவர்கள் திரும்பத்திரும்பச் சொல்லும் வாக்கியம் அண்ணனை நல்லாப் பாத்துக்க என்பதாகவே இருக்கிறது. நள்ளிரவு சீண்டலில் விழிக்கும் தங்கையை நோக்கி அண்ணன் கேட்கும் ”அக்கா அவுங்க ஒண்ணும் சொல்லலியா?” எனும் கேள்வியில் முடிகிறது கதை. இப்படி சரி / தவறு, முறை / பிறழ்வு எனும் இருமைகளுக்குள் அடக்கிவிட முடியாத கோணங்களைக் கொண்ட கதை உள்ளிருந்துஉடற்றும்பசி.

உறவுச்சிக்கல்களின் இன்னொரு எல்லையில் நிற்கும் கதை கொடிகொம்பு. கணவன் விஜயன், ஒரு குடிகாரன். காமம் மட்டுமல்ல காதலும் அவனிடமிருந்து மறுக்கப்படும் மனைவி வாணி. ஆறுதல் கொள்ள ஏதுமற்ற உறவே வாணியை மாற்றம் தேட வைக்கிறது. ஒன்றுவிட்ட கொழுந்தனார் பாஸ்கர் மீதான அவளது ஈர்ப்பு, “ஹேமாச் சிறுக்கியால்” தடைபடுகிறது. இந்த வயதிலும் ஒயில் கும்மியில் இளவட்டங்களுக்கு சரிக்கு சரியாய் நின்று விளையாடும் மாமனார் பொன்னய்யா, அவரை ரசிக்கும் கனகத்தின் மீது வாணி கொள்ளும் எரிச்சல், என கொஞ்சம் கொஞ்சமாய் தனக்கான மாற்றுப்பாதையைக் கண்டடையும் வாணி தன் ஆசையை வெளிப்படுத்தும் விதம் மிக அருமையாகக் கையாளப்பட்டுள்ளது.  

இவ்விரு கதைகளும், கையாளும் பிரச்சனையின் தீவிரம் உறைக்காத வண்ணம் அடங்கிய குரலில் வெறுமனே சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனாலும், பாத்திரங்களின் செயலுக்கான நியாயம் மிக வலுவாக வெளிப்பட்டிருக்கும் கதைகள் இவை. ஆண்-பெண் உறவுகளுக்குள் இயல்பாக நிகழும் சிக்கல்கள் கிடந்தகோலம் கதையிலும், பெண்களுக்கு இந்த சமூகத்தில் இருக்கும் இடம் புற்று கதையிலும் சொல்லப்பட்டிருக்கின்ற போதிலும் என் மனதில் ஆழ்ந்த பாதிப்பை இக்கதைகள் உருவாக்கவில்லை.   

இத்தனை சிக்கல்களை, வறட்சியை, மனித மனதின் இருமைகளை, வாழ்க்கை நம்மைக் கொண்டு நிறுத்தும் கையறு நிலையை இக்கதைகள் பேசினாலும், வெண்ணிலை எனும் இத்தொகுப்பை மிகமுக்கியமான ஒன்றென நான் கருதும் அம்சம், இத்தொகுப்பின் கதைகள் வாயிலாக திரு. சு.வே. நமக்குக் காட்டும் மானுடத்தின் சின்ன ஒளிக்கீற்று, போலவே வாழ்க்கை மீது சிறு நம்பிக்கை கொள்வதற்கான சாத்தியக்கூறுகள்.

உதாரணமாக, புத்துயிர்ப்பு கதையில் மிகக்கொடும் வறட்சியினால் தற்கொலைக்கு முயற்சிக்கும் கோபால் பிழைக்க இருக்கும் சிறு வாய்ப்பையும், பசியால் தவிக்கும் அவனது பசு லட்சுமிக்கு, கனகராஜின் அம்மா மூலம், குறைந்தபட்சம் அன்றைக்காவது கிடைத்த தீவனத்தையும் சொல்லமுடியும். ஆனால், வாழ்வின் மீதான் நம்பிக்கையின் ஓர் உச்ச தருணம் கோபாலின் மனைவிக்கு பிறக்கும் பெண்குழந்தையை வறட்சியால் தவிக்கும் அக்கிராமமக்கள் “வான் பொழிய மண் செழிக்க வாழையடி வாழையென வந்தது குழந்தை” என வரவேற்பது. இம்முடிவு தரும் மன எழுச்சி அதற்கு முந்தைய கணங்களின் துயரங்களை கடக்கச்செய்வது. தனிப்பட்டமுறையில் எவரையும் தெரியாத நகரத்துக்கு வந்த சில மாதங்களிலேயே, தன் தகப்பனின் மரணத்தை எதிர்கொள்ளும் இளம்பெண்ணுக்கும் ஏதோவொரு ரூபத்தில் மானுடத்தின் கடைப்பார்வை கிடைப்பதற்கான சாத்தியத்தைப் பேசுகிறது வெண்ணிலை கதை. 

இவ்வகைக்கதைகளின் இன்னுமோர் உச்சம் என சொல்லத்தக்க கதை அவதாரம்”. உடல் குறைபாடுள்ள குழந்தையை அவமானத்தின் சின்னமாகக் கருதும் நாகரீகத்துக்கு எதிரிடையாக, அதைபோன்றதொரு குழந்தையை குலதெய்வமென கொண்டாடும் காடர்களைக் காட்டுகிறது இக்கதை. அதன் நீட்சியாக, உப்புச்சப்பில்லாத பிணக்குகளை மறந்து கர்ப்பவதியான தன் மனைவியின் வயிற்றை முத்தமிட என்னும் கணவனின் மனதில் ஏற்படும் மாற்றத்தில் அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்துவிடக்கூடும். 

இறுதியாக, இத்தொகுப்பில் இருந்து நான் எடுத்துக்கொள்வதென்ன எனும் வினாவுக்கு நிரூபணம்கதையிலிருந்து விடை சொல்லமுடியும். தன் மகன் எபி நன்றாகப் படிக்கவேண்டும் என தேவாலயத்துக்கு அழைத்துப்போகிறாள் கிறிஸ்டி. பிராத்தனையில் லயித்திருக்கும் அன்னையிடமிருந்து நழுவி காணிக்கைப் பணத்துக்கு பிஸ்கட் வாங்கி பிச்சைக்காரனுக்குத் தருகிறான் எபி. யாரும் சுலபத்தில் கண்டுகொள்ளமுடியாத மறைவான இடத்தில் இருக்கும் அப்பிச்சைக்காரன் இரு சொற்றொடர்களை ஆங்கிலத்தில் கூறுவான். இரண்டாவது சொற்றொடர் “He Lives with Children”. அவன் கூறும் முதல் சொற்றொடர் நமக்கானது, “Jesus Christ never fails to feed His followers”.

 நன்றி!

ஆறாவது வார்டு வாசிப்பனுபவம் – காளீஸ்வரன்

மனநோயாளிகள் மற்றும் நரம்பு நோயாளிகளின் மனம் மிக மிக ஆற்றல் கொண்டது. ஏனென்றால் அதற்கு பரவலும் சிதறலும் இல்லை. மிகவும் குவிதல் கொண்டது அது. மாபெரும் யோகிகளுக்குரிய குவிதல். ஒன்றிலேயே ஒற்றைப் புள்ளியிலேயே அது பல மாதங்கள், ஏன் பற்பல ஆண்டுகள் நிலைகொள்ளும். அலைபாயும் தன்மைகொண்ட சாதாரண மனங்கள் அந்த ஆற்றலை எதிர்கொள்ளவே முடியாது. அவை மனநோயாளியின் மனங்களுக்கு முன் அடிபணிந்துவிடுவதே வழக்கம்” 

–.திரு.ஜெயமோகன். (”ஓநாயின் மூக்கு” சிறுகதையில்)

*

பத்தென்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிகளில், ரஷ்யாவில் கடும் கொள்ளை நோயாகப் பரவிய காலராவைக் கட்டுப்படுத்த பல மருத்துவர்கள் பெருமுயற்சி எடுத்தனர். அரசாங்கத்திடமிருந்து, போதுமான உபகரணங்களோ அல்லது பண உதவியோ கிடைக்கப் பெறாத போதும், தன்னுடைய சொந்தப் பணத்தை, சொத்துக்களைக் கொண்டு கடமையாற்றிய பல மருத்துவர்களுல் ஒருவர் அந்தோன் செகாவ். மற்ற மருத்துவர்களின் பெயரை நாம் அறியாதபோதும் செகாவின் பெயர் நமக்குத் தெரியக் காரணம் அவர் ”காக்கும்” மருத்துவர் மட்டுமல்ல, “படைக்கும்” கலைஞனும் கூட என்பதே. செகாவ்வைப் போல தன்னால் சிறுகதை எழுதமுடியவில்லையே என தல்ஸ்தோய் வருந்துமளவுக்கு மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர் செகாவ். அவரது முக்கியமான கதைகளுல் ஒன்று என “ஆறாவது வார்டு” எனும் குறுநாவலைச் சொல்லலாம்.

*

ருஷ்ய ஆட்சி மன்றமான “சேம்ஸ்த்வோ”வினால் நடத்தப்படுகிறது ஒரு மருத்துவமனை. அரசு / ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்படும் அமைப்புகளுக்கே உண்டான அலட்சியங்களிலும் அரைகுறை வசதிகளாலும் நிரம்பிய மருத்துவமனைக்கு மருத்துவராக வருகிறார் டாக்டர் ஆந்திரேய் எமீபிச். அம்மருத்துவமனையின் ஆறாவது வார்டில், இருக்கும் மனநோயாளிகளுடனான அவரது உறவும், அது அவரது வாழ்வில் நிகழ்த்தும் சிக்கல்களுமே இக்கதை. 

ஆறாவது வார்டில் இருக்கும் ஐந்து நோயாளிகளில் இவான் மிகவும் தனித்துவமானவர். நல்ல வாசிப்பும், கூடவே பொறுப்புடன் தன் கடமையை ஆற்றிவரும் வாழ்க்கையும் அமைந்த இவானுக்கு, “தன்னை காவலர்கள் கைது செய்யப்போகிறார்கள்” என விபரீத எண்ணம் தோன்றுகிறது. தொடரும் அவ்வெண்ணத்தின் சிக்கல்களால் மனநலக் காப்பகத்தில் அடைக்கப்படுகிறான் இவான். ஆனால், காப்பகத்தில் இருப்பவர்களிலேயே வெகு தெளிவுடன் சிந்திப்பவனாகவும் அவனே இருக்கிறான். மறுபுறம் மருத்துவமனை செயல்படும் விதத்தில் கடும் அதிருப்தி இருந்தபோதும் தன் எல்லைக்குட்பட்டு, தன்னால் இயன்ற மருத்துவத்தை செய்ய முற்படுகிறார் டாக்டர் ஆந்திரேய் எபீமிச். தற்செயலாக இவானுடனான துவங்கும் ஒரு உரையாடல், எபீமிச்சுக்குள் பலவித கேள்விகளை எழுப்புகிறது. இவானுடனான தொடர் உரையாடல்களும், மருத்துவமனையின் அமைப்புக்குள் பொருந்திப்போகாத எபீமிச்சின் இயல்பும், அலைக்கழிக்கும் கேள்விகளால் தடுமாற்றத்துக்கு உள்ளாகும் அவருடைய நடவடிக்கைகளும் என எல்லாமும் சேர்ந்து கொள்ள, ஒரு கட்டத்தில் மருத்துவர் எபீமிச், மன நோயாளி எனகருதப்பட்டு அடைக்கப்படுகிறார். மீள முடியாத ஒரு கூண்டாக அம்மருத்துவமனை அவருக்கு அமைந்து விட, எபீமிச்சின் மரணத்தில் முடிகிறது “ஆறாவது வார்டு”.

*

எந்த வாழ்க்கையிலும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செல்வதற்கு வாய்ப்புள்ள ஒரு இடமாகவே ஆறாவது வார்டைக் கருத முடிகிறது.  மிக மெல்லிய கோட்டுக்கு இந்தப் பக்கம் நாம் வாழ விதிக்கப்பட்டிருப்பதும், திரும்பத் திரும்ப நம்மை அலைக்கழிக்கும் கேள்விகள் நம்முன் எழாதிருப்பதும், அல்லது நாம் அதைக் காண மறுப்பதும், குற்றவுணர்வின் சாயல் கொஞ்சமும் இன்றி நம்மால் ஒவ்வொரு நாளையும் வெற்றிகரமான கழிக்க முடிவதும், முற்றிலும் தற்செயலான ஒன்றாகவே அமைந்திருக்க வாய்ப்புள்ளதுதானே. அப்படிப்பட்ட ஒரு நல்வாய்ப்பைத் தவற விட்டவன் என்றுதான் இவானைக் கருதத் தோன்றுகிறது. இயல்பானது என நாம் வரையறுத்து வைத்திருக்கும் உலகில் இவானுக்கு வாய்க்காத தெளிவு, ஆறாவது வார்டில் கிடைத்திருக்கிறது. ஆனால், அங்குமே அது ஊரோடு ஒத்து வாழாத குணமாகவே கருதப்படுகிறது. மருத்துவர் எபீமிச்சுடனாக ஆரம்ப உரையாடல்களில், வெளிப்படும் இவானின் அகம் அவனை ஒரு லட்சிய மனிதன் என்று எண்ணவைக்கிறது. அவனது லட்சிய நோக்குக்கு பதிலாக எபீமிச்சினால் கூற முடிந்ததெல்லாம் நடைமுறை வாழ்க்கை சார்ந்த நெறிகளும், உலகியல் தத்துவங்களும் மட்டுமே. தன்னுடைய சக நோயாளியாக எபீமிச் ஆனதும், தனக்கு அருளப்பட்ட தத்துவங்களை இவான் நினைவூட்டும் விதம் அருமை.

அருமை நண்பரே, உள்ளம் குலைந்துவிட்டேன் – எபீமிச் 

தத்துவ ஞானம் பேசிப்பார்ப்பதுதானே – இவான் 

*

இவானிடம் எபீமிச் பேசும் நடைமுறை வாதங்கள் அனைத்துமே தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ளத்தான். முற்றிலும் லட்சிய வேட்கையில் மூழ்க முடியாமல், அதே சமயம் பிழைப்புவாதியாகவும் வாழ முடியாமல் எபீமிச் தடுமாறுவது, சீரழிந்த நிலையிலிருக்கும் மருத்துவமனைக்கு அவர் வரும் துவக்க அத்தியாயங்களிலேயே காட்டப்படுகிறது. ”உலகிலுள்ள நல்லவை யாவும் ஆதியில் தீமையிலிருந்து உதித்தவையே” எனும் சமாதானம் சகித்துக்கொள்ள முடியாத நிலையிலிருக்கும் மருத்துவமனைக்கு மட்டுமானதல்ல. ஆயிரம் சமாதானம் சொன்னபோதும் எபீமிச்சுக்கு நிதர்சனம் புரிந்துதான் இருக்கிறது. இவானுடனான ஒரு உரையாடலில் “நீங்கள் உளநோயாளியாகவும் நான் டாக்டராகவும் இருப்பதில் ஒழுக்க நெறிக்கோ தர்க்க நியாயத்துக்கோ இடமில்லை, முற்றிலும் சந்தர்ப்பவசத்தால் நிகழ்ந்தது இது” எனவும் எபீமிச் கூறுகிறார். அடிக்கடி ஆறாவது வார்டுக்கு வருவதும், வந்தாலும் சரிவர நோயாளிகளைக் கவனிக்காமல் போவதும், இவானுடனான தொடர் உரையாடல்களும், ஏற்கனவே எபீமிச் மீது காழ்ப்பில் இருப்பவர்களுக்கு, அவரது மனநிலை குறித்து சந்தேகிப்பதற்கு வசதியான காரணங்களாக அமைந்துவிடுகின்றன.

ஒரு வகையில் ஆறாவது வார்டில் தனக்கான இடத்தை எபீமிச் அவைகளே தேர்வு செய்துகொண்டதாகக் கருதவும் இடமுள்ளது. மருத்துவமனையிலோ அல்லது வெளி இடங்களிலோ யாரிடமும் எவ்வித நல்லுறவும் வாய்க்கப் பெறாதவராக காட்டப்படும் ”எபீமிச்”சின் ஒரேயொரு நண்பராக இருக்கிறார் அஞ்சலகத் தலைவரான “மிகயில் அவெரியானிச்”. எபீமிச்சின் மனநிலை மாற்றம் பற்றிய மருத்துவர்களின் அவதானிப்பை அவரிடமே கூறுபவராகவும், அம்மனநிலை மேலும் சீரழிந்து போகாமலிருக்க ஒரு ஓய்வைப் பரிந்துரைப்பவராகவும் “மிகயில் அவெரியானிச்” அமைவது எபீமிச்சுக்கும் அவருக்குமான நட்புபின் சான்று. ஆனால், மாலை நேரங்களில் செறிவான உரையாடல்கள், சேர்ந்து அருந்தும் பியர்கள் என வளர்ந்து வந்த அந்த நட்பும் கூட இவானுடனான சகவாசத்தால் தடைபட்டுவிடுவது எபீமிச் மிக விரைவாக ஆறாவது வார்டை அடைய ஒரு காரணமாக அமைகிறது. மருத்துவமனைச் சுழலில் ஒட்டாமலிருக்கும் எபீமீச் ஒரு பக்கம் என்றால் அதற்கிணையான இன்னொரு பக்கம் நோயாளிகளின் வார்டில் கூட தனித்தே தெரியும் இவான்னுடையது. உண்மையில் இந்நாவலில் எபீமிச் மனதார உரையாடுவது இவான் ஒருவனிடம் மட்டுமே, அவ்வகையில் “மிகயில் அவெரியானிச்”சுடனான அவரது பெரும்பான்மையான உரையாடல்கள் எபீமிச் பேச அதை “மிகயில் அவெரியானிச்” ஆமோதிப்பது என்றவகையிலேயே நின்றுவிடுகின்றன. ஒரு இணைநட்புக்கான அல்லது ஒரு சீண்டலுக்கான காலியிடம் எபீமிச்சிடம் இருந்திருக்கவும் அது இவானால் நிரப்பப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.

*

இந்நாவல் வெறுமனே மன நோயாளிகளைப் பற்றியோ, மருத்துவர் எபீமிச்சைப் பற்றியோ அல்லது மனநிலை பிறழ்வுகளைப் பற்றியோ பேசுகிறது எனச் சுருக்க முடியாது. நம்முடைய சமூகம் அதன் கூட்டியல்புக்கு பொருந்திவராத மனிதர்களை பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. அந்த மனஅழுத்தம் எவ்வகையிலும் எபீமிச்சின் மன அழுத்தத்துக்குக் குறைந்ததல்ல. தன்னுடைய தரப்பு நியாயத்தை கேட்பதற்கு சுற்றம் அமைந்திராத, தன் மனது ஏற்றுக்கொள்ளும் சொற்களைக் கூறிடுவதற்கும் யாரும் இல்லாத வாழ்க்கை விதிக்கப்பட்ட எவரும் எத்தருணத்திலும் சென்று சேரக்கூடும் இடமாக இன்னுமொரு ”ஆறாவது வார்டு”தான் இருக்கமுடியும்.

*

ஆறாவது வார்டு – குறுநாவல் – அந்தோன் செகாவ் (தமிழில்:ரா. கிருஷ்ணையா) – பாரதி புத்தகாலயம்.

நெடுங்குருதி வாசிப்பனுபவம் – காளீஸ்வரன்

2007 ஜுலை மாதம், நள்ளிரவு, டெல்லிக்கருகில் நொய்டாவில் ஒரு விடுதியறையில் நான் படித்துக் கொண்டிருந்தேன். வெய்யிலோ மழையோ நானறிந்த அதிகபட்சம் என்பது நான் அங்கிருந்த இரண்டு மாதங்களில் கண்டதுதான். பெருமழை பொழிந்துகொண்டிருந்த அந்த நள்ளிரவில், நான் மட்டும் கடும் வெப்பத்தை உணர்ந்தேன். மட்டுமல்ல, மனதளவில் மிகவும் தனியனாக உணர்ந்திருந்த நாட்கள் அவை. அத்தனிமை உணர்ச்சியின் வலி அவ்விரவில் மென்மேலும் பெருகியது. இவ்விரண்டுக்கும் காரணம் ஒன்றே, அது நான் படித்துக்கொண்டிருந்த புத்தகம் “நெடுங்குருதி”. கதையின் இயல்பாலும், என்னுடைய அப்போதைய மனநிலையினாலும், எப்போது வேண்டுமானாலும் நான் அப்புத்தகத்தை விலக்கி விடுவதற்கான சாத்தியங்கள் அதிகமிருந்தது. ஆனால், படிக்கத்துவங்கிய பின்னர் கூறுமுறையிலிருந்த வசீகரம் என்னை கட்டிப்போட்டது. பகலில் IT நிறுவனத்தின் ஆரம்பநிலை ஊழியனாக நொய்டாவிலும், பின்னிரவுகளில், நாகுவாக, ரத்னாவதியாக, ஆதிலட்சுமியாக ”வேம்பலை”யின் தெருக்களிலும் வாழ்ந்துகொண்டிருந்த நாட்கள் அவை. இம்முறை மறுவாசிப்பு சொல்முகம் வாசகர் கூடுகைக்காக.

*

நாகு, அவனது பெற்றோர், நாகுவின் அடுத்த தலைமுறை என ஒரு குடும்பத்தின் கதையையும், அதனூடே, அதற்கிணையாக வெய்யிலுடன் நிரந்தர உறவேற்படுத்திக் கொண்ட வேம்பலை கிராமத்து மக்களின் வாழ்க்கையையும் பிண்ணிச் சொல்லப்பட்ட கதை “நெடுங்குருதி”. இந்நாவல், கோடை, காற்று, மழை, குளிர் என நான்கு பருவ காலங்களாக பிரிக்கப்பட்டிருந்தாலும், என்னைப் பொருத்தமட்டில், இந்நாவலின் களமும் காலமும் கோடை மட்டுமே. வேறு பருவ காலங்களில் சொல்லப்படும் கதையில் கூட, கதாப்பாத்திரங்களின் வாழ்வில் நாம் காண்பது கோடையின் வறட்சியையே. 

*

நாகுவின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் துவக்க அத்தியாயங்களிலே உண்டாகும் சண்டை கடும் கோடை ஏற்படுத்தும் எரிச்சல் அன்றாட வாழ்வில் நிகழ்த்தும் வன்முறைக்கான சரியான உதாரணம். நாகுவின் அப்பா உப்பை மிதித்ததால் உண்டான எரிச்சலாலும் கூடவே அதைக் கழுவக்கூட நீரில்லாத சூழலில் மீதான வெறுப்பினாலும் விளைகிறது அந்தச் சண்டை. நாவலின் பெரும்பாலான மாந்தர்களின் இயல்பிலேயே வெளிப்படும் எரிச்சல் வெயில் காயும் பூமியின் ஒரு கொடைதான்.

*

நாவலின் / வேம்பலையின் பெரும்பாலான ஆண்கள் சுயநலமிகளாக, சூல்நிலைக் கைதிகளாக காட்சிப்படுத்தப்பட்ட போதும், பெண்கள் எந்நிலையிலும் கருணையைக் கைக்கொள்பவர்களாகவே உள்ளனர். கோவிலின் வாசலின் வெள்ளரிப்பிஞ்சு விற்கும் தன் அண்ணியிடம் நாகுவின் அம்மா தன்னிடமுள்ள பணத்தை தருமிடம் அதற்கொரு உதாரணம். அந்த சந்தர்ப்ப்பத்தில் எழும் அவளது அண்ணியின் அழுகையை சுற்றிலுமிருப்பவர்கள் ஒரு பொருட்டாகவே கருதாமலிருப்பது அந்நில மக்கள் ஒவ்வொருவருக்குமே அப்படி அழுவதற்கான வாழ்க்கையே விதிக்கப்பட்டிருப்பதற்கான ஒரு அடையாளம். அடுத்தவர்களால் கவனிக்கப்படாமல் போகும் கண்ணீர்தான் பெரும் துரதிர்ஷ்டம் மிக்கது.

வெவ்வேறு சந்தர்ப்பங்களில், வாழ்வின் அலைக்கழிப்புக்கு ஆளாகி, ஊரை விட்டு வேறு ஊர் தேடிப்போகும் தன் மக்களை, விதியின் மாயக்கரங்களால் மீண்டும் மீண்டும் தன்னுள் இழுத்துக்கொள்கிறது வேம்பலை. நாகுவுக்குள், இறந்துபோன அவனுடைய இரண்டாவது அக்கா நீலாவின் நினைவுகள் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. போலவே அவனது அப்பாவுக்கும் நீலா மீது இருப்பது பெரும் வாஞ்சை. ரேகை சட்டத்தின் விதிகளுக்குட்பட்டு மீண்டும் வேம்பலைக்குத் திரும்பிய பின்னர் நாகுவின் அப்பா செய்யும் முதல் வேலை தன் மகளைப் புதைத்த இடத்தைத் திருத்துவதே. ஒரு மழைக்காலத்தில் மகளின் புதைகுழியிலிருந்து வரும் மண்புழுவை தன் வீட்டில் சேர்ப்பித்து கொஞ்சம் ஆறுதலடைகிறார் அவர்.

*

பகலில் வெய்யிலின் ஆளுமைக்கு சற்றும் குறைவில்லாதது வேம்பலையின் இரவுகள். இருளன்றி வேறெதுவும் அறியா இரவுகள் அவை. ஒருவகையில் பகலெல்லாம் வாட்டி வதக்கிய வெய்யிலுக்கான (வெளிச்சத்துக்கான) ஒரு பெரும் ஆசுவாசமே அவ்விருள். களவுக்குப் போகும் வேம்பர்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமானது என இருளையே சொல்ல முடியும். காயாம்பு அக்கிராமத்துக்கு முதன்முறையாக மின்சாரத்தை கொண்டுவரும் போது அக்கிராமமே அதை எதிர்ப்பதற்க்கு இவ்விரண்டும் காரணமாக அமையந்திருக்கக்கூடும் எனவும் எண்ணத் தோன்றுகிறது. மரித்துப்போனவர்கள் மீண்டும் வாழ்வதான ஒரு சாத்தியக்கூறை தன்னுள் கொண்டிருப்பது இருள் மட்டும்தான். இரவில் அப்பாவும் அவனும் மட்டும் உணவுண்ணும் போது, நாகு தன்னைச் சுற்றிலும் தன்னுடைய அம்மா, அக்கா என அனைவரையும் உணர நேர்வதும் இருளின் கருணையினால்தான்.

இந்நாவலின், முக்கியமான இன்னொரு அம்சம் நாவலின் போக்கிலேயே கலந்துள்ள நாட்டார் தன்மை. நடக்க முடியாத ஆதிலட்சுமி நாகுவிடம் கூறும் கதைகள், குறிப்பாக இறந்தவர்கள் பறந்து போனதை தான் கண்டதாக ஆதிலட்சுமி கூறுவது, தாழியில் வைத்து மூடப்பட்ட சென்னம்மாவின் தாகம் அவ்வூர் மக்கள் எடுத்து வரும் குடத்து நீரைக் காலி செய்வது, இறந்து போனவர்கள் வாழும் இன்னொரு வேம்பலை கிராமம், சிங்கிக் கிழவன் இறந்துபோன குருவனுடன் ஆடு-புலி ஆட்டம் ஆடுவது என விரித்தெடுக்க சாத்தியமுள்ள நாட்டார் கதைகள் நாவலினூடே நிறைந்துள்ளன.

வேம்பலை கிராமம் பற்றிய சித்திரங்களும், வேம்பர்களின் வாழ்க்கைமுறையும் மிகவும் குறைவாக, அதே சமயம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன். வெல்சி துரையால் 42 வேம்பர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போதிலும், அவர்களில் கூட்டத்திலிருந்து எவ்வித உணர்ச்சிகளும் வெளிப்படாதிருப்பது, தேடிவரும் காவலர்களிடமிருந்து தப்பிக்க நீர் நிரம்பிய கிணற்றுள் மறைந்திருப்பது, ரேகை சட்டம் அமுலுக்கு வந்த பின்னர் ஊரில் அமைக்கப்பட்ட காவல் நிலையத்தை எரிப்பது என பல சம்பவங்கள் வேம்பர்களின் மன உறுதியைக் காட்டுகின்றன. ஒருவகையில், வேம்பர்களின் அழுத்தமான பாத்திரப்படைப்பு எனக்கு நாவலில் கூறப்படும் ஊமைவேம்பினை நினைவூட்டியது.

வெய்யிலின் உக்கிரத்தை, வறட்சியை, கண்ணீரை, வலியைப் பேசும் நாவலின் ஒரே ஒரு இடம் மட்டும் கொஞ்சம் சிரிக்க வைத்தது. அது சிங்கிக்கிழவன் தன் வாலிபத்தில் மாட்டுவண்டியை மறித்து களவு செய்ய முயலுமிடம். சிறுமிகளிடமிருந்து அவன் களவு செய்வதில்லை என்பதைத் தெரிந்துகொண்ட வண்டிக்காரர்கள், தங்கள் நகைகளை வண்டியிலிருக்கும் சிறுமி கழுத்தில் அணிவிப்பதும் அதை தொடர்ந்து நடக்கும் சிறு உரையாடலும் கடும் வெய்யில் பயணத்தில் வாய்க்கப்பெற்ற சிறு நிழல் போன்றவை .(இதற்கிணையான காட்சி எஸ்.ரா. வசனமெழுதிய அவன் இவன் திரைப்படத்திலும் இருக்கும்)

நாவலின் கதை மாந்தருக்கிணையாக இன்னுமொரு பாத்திரமாக வெயில் வார்க்கப்பட்டுள்ள இடங்களும், வெய்யில் குறித்த வர்ணிப்புகளும் இந்நாவலின் கவித்துவம் மிளிருமிடங்கள். உதாரணங்களாக

  • கத்தியை சாணை பிடிப்பது போல, தெருவை வெயில் தீட்டிக் கொண்டிருந்தது.
  • கழுத்தடியில் ஒரு கையைக் கொடுத்து நெறிப்பதுபோல், வெயில் இறுக்கத்துவங்கியது.
  • விரியன் பாம்பைப் போல உடலை அசைத்து அசைத்து சீறியபடி போய்க் கொண்டிருந்தது வெயில்.
  • வகுந்துருவேன் வகுந்து. சூரியன்னா பெரிய மசிரா ? சங்கை அறுத்துப்புடுவேன் (சிங்கிக்கிழவன்)
  • கிணற்றுத் தண்ணீரில், வெயில் ஊர்ந்து ஊர்ந்து ஏதோ எழுதுவதும் அழிப்பதுமாக இருந்தது.

ஆகிய இடங்களைச் சொல்லலாம்.

வெயிலுக்கு நிரந்தரமாய் வாக்கப்பட்டு, நீரின்றி சபிக்கப்பட்ட எந்தவொரு இந்திய கிராமத்தின் சித்திரமும் வேம்பலை கிராமத்துக்கும் பொருந்தும். வரலாற்றின் கொடூரப் பக்கங்களில், கால சூழ்நிலைகளால் மைய மக்கள் கூட்டத்திலிருந்து விலக் நேர்ந்துவிட்ட இனக்குழுக்களுல் வேம்பர்களும் உண்டு. 

*

கடும் கோடையில் ஓரிரு குடங்கள் நீருக்காக சில கிலோமீட்டர்கள் அலைய நேரிட்ட என்னுடைய பாட்டிமார்கள், கடும் வெயிலில் புழுதி பறக்க விளையாடிய வடுகபாளையம், மணியம்பாளையம் கிராமத்து காடுகள், சூடு பிடித்துக் கொண்டு தூக்கம் தொலைத்த கோடைகால இரவுகள் என என் பால்யத்தின் நினைவுகளை கிளர்த்தெழச் செய்தது “நெடுங்குருதி”.

பள்ளிகொண்டபுரம் வாசிப்பு – காளீஸ்வரன்

உடலிலும் மனதிலும் பலமில்லாத, சாமானியத்தனத்தின் பிரதிநிதியாக விளங்கும் அனந்தன் நாயரின் ஐம்பதாவது பிறந்ததினத்தில் துவங்குகிறது ”பள்ளிகொண்டபுரம்” நாவல். அவரது வாழ்கையின் இறுதி நாற்பத்தி எட்டு மணி நேரங்களில் அனந்தன் நாயரின் மனவோட்டம் மூலமாக, அவரது வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை, அதனூடாக அக்காலகட்டத்தை, சாமானியர்கள் மீது எவ்வித கருணையும் காட்டாத வாழ்க்கையை நாமும் வாழ்ந்து பார்க்க வைத்திருக்கிறார் திரு.நீல.பத்மநாபன்.

பேரழகியான கார்த்தியாயினியை, விருப்பமின்றி மணக்கும் அனந்தன் நாயரின் தாழ்வுணர்ச்சி அதிகரிக்க, அவளது அழகே போதுமானதாக இருக்கிறது. அவர் அஞ்சும், சமயங்களில் ஆராதிக்கும் கார்த்தியாயினியின் அழகே அவர்கள் வாழ்வில் புயல் வீசுவதற்கான களம் அமைக்கிறது. கார்த்தியாயினியின் அழகால் கவரப்படும் “தகஸில்தார்” விக்ரமன் தம்பியால், அனந்தன் நாயருக்கு பதவி உயர்வுகள் கிடைக்க, அதற்கான காரணத்தை அனந்தன் நாயர் எளிதில் யூகிக்கிறார். அலுவலகத்திலோ, அதிகாரத்திடமோ அவர் காட்ட முடியாத கோபம், மனைவி மீது திரும்ப, ஒரு கட்டத்தில் அவர் பயந்தது அல்லது ஆழ்மனதில் விரும்பியது நடந்தே விடுகிறது. 41 நாட்கள் நிர்மால்ய தரிசனம் முடிந்து வரும் அனந்தன் நாயர் நுழைவது கார்த்தியாயினி நீங்கிச்சென்ற வீட்டில். மகன் பிரபாகரன் நாயர் மற்றும் மகள் மாதவிக்குட்டியுடன் தனித்து விடப்படும் அனந்தன் நாயர், தன் முழுவாழ்வையும் அவர்களுக்கெனவே செலவிடுகிறார். வயது வந்த மகள் மற்றும் மகனின் சமீபத்திய நட்புவட்டாரம் குறித்து அவர் கேள்விப்படும், காணும் விசயங்கள் அவருக்கு உவப்பாய் இருப்பதில்லை. தன்னுடைய தனிப்பட்ட வாழ்வைப் பற்றியும், அவர்களுடைய எதிர்காலம் குறித்தும் தன் பிள்ளைகளிடம் அன்ந்தன் நாயர் பேசும் இரவே, அவருடைய இறுதி இரவாய் மாறுவதில் முடிகிறது இந்நாவல்.

*

நாவலின் மையக்கதாப்பாத்திரமாக வரும் அனந்தன் நாயரின் பார்வையிலேயே பெரும்பாலான சம்பவங்கள் கூறப்பட்டுள்ளன. இந்நாவலின் மிகப்பெரிய பலம் இதன் கூறுமுறை. திருவனந்தபுர வீதிகளையும், அதனூடே பிணைக்கப்பட்ட அனந்தன் நாயரின் நினைவுகளையும் மிகக் கச்சிதமான சொற்களால் சொல்லப்பட்டிருக்கும் விதம், திருவனந்தபுரத்தில் நாமும் அலைந்து திரிந்த உணர்வைத்தருகிறது. குறிப்பாக, திருவனந்தபுரம் இந்நாவலில் வெறுமனே நிலப்பரப்பாக காட்டப்படாமல், அவ்வூரின் தெருக்களும், கோவிலும், சிலைகளும் அனந்தன் நாயரின் வாழ்க்கைச் சம்பவங்களை அவர் நினைவிலிருந்து மீட்டெடுக்கும் கண்ணியாக அமைந்திருப்பது, அவருக்கிணையான பாத்திரமாக திருவனந்தபுரத்தையும் கருத வைக்கிறது. 

இயல்பிலேயே நோய் வாய்ப்பட்டு அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் அனந்தன் நாயர், மனதளவிலும் வலுவற்றவர். அவரின் தாழ்வுணர்ச்சியும் தன் மனைவிக்கு தான் எவ்விதத்திலும் தகுதியற்றவன் எனும் அவரது ஆழ்மனவோட்டமுமே, விக்கிரமன் தம்பியின் நோக்கத்தை, ஆரம்பத்திலேயே தெளிவாகப் புரிந்து கொள்ள வைக்கிறது. தொடரும் நாட்களில் இயல்பான அல்லது எப்போதுமிருக்கும் விசயங்களில் கூட குற்றம் கண்டு கார்த்தியாயினியை நோகடிக்கும் அனந்தன் நாயர், அவரைப் பிரிந்து செல்லும் முடிவை நோக்கி அவளைத் தள்ளுகிறார். அவ்வகையில், தன்னுடைய தாழ்வுணர்ச்சி எனும் பள்ளத்தை, தியாகத்தைக் கொண்டு நிரப்ப அவர் முயல்வாதக் கருதுகிறேன். 41 நாள் நிர்மால்ய தரிசனம் முடிந்து வீட்டுக்கு வருகையில், மனைவி இல்லாததை உணரும் போது, முதலில் அவருக்கும் வருத்தம் மேலிட்டாலும், நேரம் செல்லச் செல்ல அதை ஒருவகை விடுதலையாகவே உணர்கிறார். இந்நாவல் முழுவதிலும், அனைவரிடத்தும் அடங்கிய குரலில் பேசிப் பணிந்து செல்லும் அனந்தன் நாயர் தன்னுடைய குரூரத்தை வெளிப்படுத்துவது கார்த்தியாயினியிடம் மட்டுமே. நாவலின் இறுதிப்பகுதியில் அனந்தன் நாயரின் இருவித குணங்களும் அவரது பிள்ளைகளிடம் வெளிப்படுவதைக் காணாலாம்.

நினைவு தெரியுமுன்னே தன்னை நீங்கிப்போன அம்மாவிடம் மாதவிக்குட்டி கேட்ட கேள்விகள், தன் அம்மா மீதான அவளது கோபம், விலக்கம் அனைத்துமே அனந்தன் நாயருக்கு ஒருவித நிம்மதியைத் தருகின்றன. தான் கேட்க முடியாத கேள்விகளை, தன் ஆதங்கத்தை மகளாவது வெளிக்காட்டினாளே என்கிற குறைந்தபட்ச ஆசுவாசம்தான் அது. ஆனால், சற்றே நினைவு தெரியும்வரை அன்னையிடம் இருந்தவனும், நடைமுறைவாதி என தன்னைக் கருதுபவனுமான பிரபாகரன் நாயரின் பார்வை முற்றிலும் மாறானது. தன் அம்மாவின் தவறுக்கு முழுக்காரணம் அவளை அந்நிலையை நோக்கித்தள்ளிய தன் அப்பாதான் என அவனிடமிருந்து ஒலிக்கும் சொற்கள் ஒரு கோணத்தில் அனந்தன் நாயரின் மனசாட்சியின் சொற்களும் கூடத்தான். மகள் மூலம் தன் மனதுக்குக் கிடைத்த நிம்மதியை கொஞ்ச நேரம் கூட தங்கவிடாமல் குலைத்துவிட்ட மகனின் செயல் அவரை மேலும் விசனப்படுத்துகிறது. அவ்விசனத்துடனே அனந்தன் நாயரின் வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது.

அனந்தன் நாயரின் அத்தை குஞ்ஞுல‌ஷ்மி, தன் கணவனான சங்குண்ணி நாயரை நீங்கிச்செல்லும் நிகழ்வு, அனந்தன் நாயரின் சிக்கலுக்கு இன்னுமொரு பரிணாமத்தைத் தருகின்றது. அனந்தன் நாயரைப் போல தாழ்வுணர்ச்சி இல்லாத சங்குண்ணி நாயர், தன் மனைவி தன்னை நீங்கி இன்னொருவனிடம் போவதைத் தடுக்க காலில் கூட விழுகிறார். தான் குஞ்ஞுலஷ்மிக்கான சரியான துணை எனும் நம்பிக்கையில் விழுந்த அடியின் விளைவு அது. அதையும் மீறி கொச்சு கிருஷ்ண கர்த்தாவுடன் செல்லும் குஞ்ஞுலஷ்மிக்கோ தன் கணவன் மீது எவ்வித புகார்களும் இல்லை என்பது இன்னும் துயரமளிப்பது.

அனந்தன் நாயரின் அக்காவாக வரும் கல்யாணி அம்மாவின் பாத்திரப்படைப்பு முற்றிலும் மாறுபட்டது. மணம் முடித்து சில காலம் மட்டுமே வாழ்ந்தபோதும், அரவிந்தாக்‌ஷ குறுப்பு அவள் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகிப்போகிறார். வேதாந்தியான அவரின் மறைவுக்குப் பின், அவரின் மகன் பாஸ்கரன் நாயரும் அவன் தகப்பன் வழியிலேயே பயணிக்கிறான். ஆனால், ”குருவை சோதித்துப் பார்த்து” தன் தகப்பன் செய்த தவறைத் தவிர்த்து, அவன் தன் குருவின் சொல்லுக்கிணங்கி திருமணத்துக்குத் தயாராவதில், அர்த்தப்படுகிறது கல்யாணி அம்மாவின் வாழ்க்கை.

*

இந்நாவலில் ”அணைக்க முடியுமுண்ணா தீய பத்தவைக்கணும்” என அனந்தன் நாயரிடம் கார்த்தியாயினி சொல்லும் இடம் ஒன்றுவரும். அது உண்மைதான். தன் வாழ்வின் முக்கியமான கட்டங்களில் தன்னால் அணைக்க முடியாத தீயைப் பற்றவைப்பவராகவே எனக்கு அனந்தன் நாயர் தெரிகிறார். 

நாவலின் இறுதிப்பகுதியில் வானம் பின்வருமாறு வர்ணிக்கப்பட்டிருக்கும், “பெயருக்குக் கூட ஒரு நட்சத்திரம் கூட இல்லாத இருண்ட சூனியமான ஆனால் பரந்த வானம்”. நாவலைப் படித்து முடித்தபின் அவ்வர்ணனை அப்படியே அனந்தன் நாயரின் வாழ்க்கைக்கும் பொருந்துவதாகவே எனக்குத் தோன்றியது. 

*

பள்ளிகொண்டபுரம்  (நாவல்) – நீல.பத்மநாபன் – காலச்சுவடு பதிப்பகம். 

நீலகண்டப் பறவையைத் தேடி, வாசிப்பனுபவம் – காளீஸ்வரன்

எதிரிலிருந்த பெரிய வேப்பமரத்தின் இலைகள் அனைத்துமே, ஒரு நொடியில் பறவைகளாக உருமாற்றமடைந்தன. மறுநொடியில் மீண்டும் இலைகளாக. இம்முறை இலைகளின் இடைவெளியில் போர்வீரர்கள் தோன்றலாயினர். தொடர்ந்து சம்பந்தமில்லாத மனிதர்களும் சம்பவங்களும். ஒரு மாபெரும் மந்திரவெளியில் இருப்பதான பயம் பீடித்தது. நல்லவேளையாக அம்மா என் எண்ணவோட்டத்தைக் கலைத்தாள். கடும் காய்ச்சலால் முணங்கிக்கொண்டிருந்த எனக்கு அப்போது 13-14 வயதிருக்கும். காய்ச்சலுக்கு மந்திரிக்க (கொங்கு வட்டார மொழியில் சொல்வதானால் ”செரவடிக்க”), நந்தகுமார் அண்ணன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தபோது கிடைத்த அனுபவம் மேற்சொன்னது. பால்யத்தின் எண்ணற்ற அனுபவங்களுக்கு மத்தியில் இவ்வனுபவம் நிலைத்து நிற்க தன் அமானுஷ்த்தன்மையும் அந்தக் கனவுவெளியும் ஒரு முக்கியமான காரணம் என இப்போது தோன்றுகிறது. 

அவ்வனுபவத்துக்கிணையான கனவுத்தன்மையில் சஞ்சரிக்க வைத்தது “நீலகண்டப் பறவைத் தேடி” நாவல் (வங்க மூலம் : அதீன் பந்த்யோபாத்யாய; தமிழாக்கம்:சு.கிருஷ்ணமூர்த்தி; நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு). 1971ல் எழுதப்பட்ட இந்நாவல், சுதந்திரத்துக்கு முந்தைய, தேசப் பிரிவினை எண்ணம் துளிர்விடத் துவங்கிய காலகட்டத்தைச் சித்தரிக்கின்றது. ஒரு குடும்பத்தையோ அல்லது தனி நபரையோ மையப்படுத்தாமல், கிழக்கு வங்காளத்தில் பாயும் “ஸோனாலி பாலி” நதியையும், அதன் கரையிலிருக்கும் கிராம மக்களின் வாழ்க்கையையும் இந்நாவல் பேசு பொருளாகக் கொண்டுள்ளது. நதிக்கரையில் வாழும் வசதி மிக்க இந்துக்கள், அவர்களிடம் பணி செய்யும் ஏழைகளான இஸ்லாமியர்கள். இவ்விரு மக்களிடையே நிலவும் இணக்கமும் பிணைப்பும், மாறிவரும் அரசியல் சூழல், அது அம்மக்களின் வாழ்வில் நிகழ்த்தும் தாக்கம் என ஒரு தளத்தில் கதை கூறப்பட்டாலும், மற்றொரு தளத்தில் இந்நாவல் காட்டும் விவரணைகள் நம்மை அந்நிலப்பரப்புக்குள், அந்த நதியில், வானில் திளைக்கச்செய்கின்றன.

*

இந்நாவலின் முக்கியக் கதாப்பாத்திரம், ஊரின் மிகப் பெரிய டாகூர் குடும்பத்தின் மூத்த பிள்ளை மணீந்தரநாத். உடலளவிலும் மனதளவிலும் பழுதற அமைந்தவர். எவரும் சுட்டிக் காட்டுவதற்கான ஒரு குறை கூட இல்லாதவர். அப்படியொரு முழுமையான மனிதர், நம்மைப் போல சாதாரணமாக உண்டு, களித்து, உறங்கி மடிந்தால் பின்னர் ”விதி” என்ற சொல்லுக்கு என்ன மரியாதை இருக்கமுடியும்? சிறுவயதிலேயே மணீந்தரநாத்தின் கண்ணைப் பார்த்து அவர் பைத்தியமாவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கிறது எனக் கூறிகிறார் ஒரு பீர். அவர் வாக்கு பொய்த்துப்போகாமல் காத்த பெருமை வெளிநாட்டுப் பெண் ”பாலின்” உடனான மணீந்தரநாத்தின் காதலுக்குக் கிடைக்கிறது. கூடவே, மகனின் ஆசையை நிறைவேற்றாமல், அவன் மனப்பிறழவுக்கு தானே காரணம் என மகேந்திரநாத் வருந்தவும் அதுவே வழிவகுக்கிறது. இந்நாவல் முழுவதிலும் தான் இழந்தவொன்றை தேடி அலையும் மணீந்தரநாத்தின் சித்தரிப்புகள் அனைத்துமே கனவுத்தன்மை கொண்டவை. மணீந்தரநாத்தின், சாயலுள்ளவன் என நாவலில் சொல்லப்படும் சோனா, அவரது தம்பி மகன். தன் பெரியப்பா உடனான சோனாவின் நெருக்கமும், அவனது அலைக்கழிப்புகளும் அவன் இன்னொரு “பைத்தியகார டாகூராக” மாறுவதற்கான சாத்தியங்களைக் காட்டுகின்றன. இதை மணீந்தரநாத்தே, சோனாவிடம் கூறும் காட்சி, இந்நாவலின் உச்சதருணங்களுல் ஒன்று.   

*

ஊரில் இருக்கும் வயதான முஸ்லீம்கள் பெரும்பாலும் தங்கள் இந்து எஜமானர்கள் மீது எவ்வித வருத்தமுமற்றவர்கள். நிலச்சொந்தக்காரங்கள் பசியின் சுவடே அறியாதிருக்க, விளைச்சலைக் காவல் காத்துக்கொண்டு கொடும் பசியை எதிர்கொள்ள நேரும் போதும் தங்கள் எஜமானர்களின் பெருந்தன்மை மீது எவ்வித சந்தேகமும் அற்றவர்கள். மாறிவரும் அரசியல் களம், பிரிவினையை ஏற்படுத்தும் பிரச்சாரங்கள் இவை எதுவும், இக்கிராம மக்களை பெரிதும் பாதிப்பதில்லை. இந்நாவல் காட்சிப்படுத்தும் காலகட்டம் பிரிவினை எண்ணம் முளைவிட்ட சமயம் என்பதால், இவ்விரிசல் பொது மக்களிடையே பெரிதாகத் தென்படுவதில்லை என எண்ணுகிறேன். என்னதான் மதத்தின் பெயரிலான வேறுபாடுகளை பரப்பினாலும், தானறிந்த சமூகத்தைக் கொண்டே அதைக் கடக்கும் மனநிலை இருபக்கத்திலும் இருக்கிறது. டாக்கா கலவரத்தில் மாண்டுபோன மனிதர்கள் (குறிப்பாக இஸ்லாமியர்கள்), குறித்து மனம் வருந்தும் ஆபேத் அலி, தன் உள்ளூர் இந்து மக்களின் தாராள மனப்பான்மையை எண்ணி அமைதியடைகிறார். கிட்டத்தட்ட இதைப்போன்ற ஒரு அணுகுமுறையே, அவ்வூரின் முந்தைய தலைமுறை முஸ்லீம் பெரியவர்களிடமும் இருக்கிறது. அதைப்போலவே, தன்னுடைய கணவனை டாக்கா கலவரத்தில் பலிகொடுத்த இந்துப் பெண் மாலதி, தன் பால்ய சிநேகிதர்களான உள்ளூர் இஸ்லாமிய நண்பர்கள் மீது எவ்வித காழ்ப்பும் கொள்வதில்லை. 

பொதுவில் வைக்கப்படும் பிரச்சாரங்களை, தானறிந்த சமூகம் மூலம் எதிர்கொள்ளும் இம்மனநிலைக்கான உச்சகட்ட உதாரணமாக கொள்ளத்தக்கவர் ஆசம். டாகூர் குடும்பம் மீதான அவருடைய விசுவாசத்தை, எஜமான் குடும்ப உறுப்பினர்கள் மீது அவர் கொண்டுள்ள உரிமையை எந்தப் பிரச்சாரமும் சிதைப்பதில்லை. வீட்டில் உள்ளோர் பேச்சையும் மீறி சோனாவை திருவிழாவுக்கு அழைத்துப் போவதில் அவர் காட்டும் உரிமையும், எதிர்பாராத கலவரத்தால் குழந்தைகளைத் தொலைத்துவிடும் சமயத்தில் ஈசத்தின் தவிப்பும் அவரது மனநிலைக்கான சான்றுகள். ஈசத்தின் இந்தப் பதைபதைப்பு, பீரின் தர்க்காவில் சோனாவைத் தவறவிட்டு பின்னர் கண்டுபிடித்த மணீந்தரநாத்தின் பதைபதைப்புக்கு சற்றும் சளைத்தில்லை என எண்ணத் தோன்றுகிறது.

விரிசல் விடத்தொடங்கிவிட்டால், சாதாரண நிகழ்வுகள் கூட அசாதாரண விளைவுகளை ஏற்படுத்தமுடியும். உதாரணங்களாக, இந்நாவலில் வரும் இரு சம்பவங்களைக் கூறமுடியும். டாக்காவிலிருந்து ”ஷாஹாபுத்தீன் சாகேப்” வருவதை முன்னிட்டு, லீக் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் யானையில் பவனி வரும் பெரிய டாகுர் ”மணீந்தரநாத்தால்” குளறுபடி உண்டாகிறது. இதை திட்டமிட்ட சதியாக எண்ணும் சாம்சுதீன் சின்ன டாகுர் ஏற்பாடு செய்யும் காங்கிரஸ் கூட்டத்தில், தாங்களும் இதைப்போலவே பிரச்சனை செய்யலாம் என எண்ணுகிறான். இது தற்செயலான ஒரு விபத்தை திட்டமிட்ட சதியாக பார்க்கும் மனநிலையைக் காட்டுகிறது. இத்தனைக்கும் பெரிய டாகூரின் மனநிலைப்பிறழ்வு அந்த ஊருக்கே நன்றாக தெரிந்த ஒன்றுதான். இதைப்போலவே தனி நபர் பிரச்சனைகளால் பெரும் கலவரம் உண்டாகும் நிகழ்வையும் சொல்லலாம். இந்துப் பெண்களை வேற்று சமூக ஆண்கள் கிண்டல் செய்ய, அதைத் தட்டிக்கேட்டதால் திருவிழாவில் கலவரம் வெடிக்கிறது. விளைவாக, பிரச்சனையில் எவ்வித தொடர்பும் அற்ற இருதரப்பினருக்கும் அப்பாவிகளுக்கும் சேதாரம் விளைகிறது.

இந்நாவலின் முக்கியமான இணைகதாப்பாத்திரங்கள் இஸ்லாமியப் பெண்ணான ஜோட்டனும், இந்துப் பெண்ணான மாலதியும். நான்காவது திருமணத்துக்கு காத்திருக்கும் இஸ்லாமியப்பெண் ஜோட்டனும், கணவனை டாக்கா கலவரத்தில் இழந்த இந்துப்பெண் மாலதியும் சந்திப்பது உடல் சார்ந்த தேவையை. ஜோட்டனைப் பொருத்தமட்டில் உடலென்பது நிலம் போல அதில் அல்லாவுக்கு வரி தருவதே தனக்கு விதிக்கப்பட்ட கடன் என எண்ணுகிறாள். அதன் பொருட்டு அவள் செய்துகொள்ளும் மறுமணங்களை மிக இயல்பான ஒன்றாக அவளால் கடக்க முடிகிறது. மறுபுறம் மாலதி, தான் வளர்ந்த கலாச்சாரப் பின்னணியால், தன்னுடைய ஆசைகளை மறுதலிக்க, சமூகத்தால் மறைமுகமாக நிர்பந்திக்கப்படுகிறாள். மட்டுமல்ல, அவளது தேவைகள் கூட வெளிப்படையாக பெரிய அளவில் காட்டப்படுவதில்லை. பழைய நினைவுகளாகவோ, கனவாகவோதான் மாலதியின் எண்ணவோட்டத்தை நாம் காணமுடிகிறது. 

இரண்டு எதிரெதிர் கலாச்சாரப் பிண்ணனி கொண்டவர்கள் என்றபோதும், மக்களின் ஆழ்மனதில் இம்மண்ணின் மரபின் ஒரு துளியாவது தங்கிவிடுகிறது. பக்கிரி சாயிபு, ஜோட்டனை அழைத்துக்கொண்டு தன்னுடைய குடிசைக்கு முதன்முறை செல்லும் போது, ”பாபா லோக்நாத் பிரம்மச்சாரி”யின் ஆசிரமத்துக்குச் சென்று அவரை தரிசிக்க எண்ணும் சம்பவம் அத்தகைய ஒன்று. போலவே, மானபங்கப்படுத்தப்பட்ட, மாலதியை ஜோட்டனும் பக்கிரி சாயிபும் காணும்போது, மாலதியின் கால் அவர்களுக்கு துர்க்கையம்மனைத்தான் நினைவுறுத்துகிறது. லீக்கில் சேரவிருக்கும் ஜப்பாரால், மாலதிக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து, தன் கையறு நிலையை நொந்துகொண்டு, ஊரை விட்டுக்கிளம்பும் சாம்சுத்தீனுக்கு கூட, கார்த்திக் விழாவுக்கு அம்மனுக்குப் படைப்பதற்கு சிறிய கதிர்கள் போதாது எனும் எண்ணம் எழுகிறது. “லட்சுமி அம்மனுக்கு இத்தணூண்டு கறிதானா” என தன் அதிருப்தியை வெளிப்படுத்தி பெரிய கதிர்களை பறித்துக்கொடுக்கும் மனநிலையே அவனுக்கும் வாய்க்கிறது. 

*

சுதேசி இயக்கத்துக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ரஞ்சித்துக்கும், லீக்குக்கு ஆதரவான பிரச்சாரத்தை முன்னெடுக்கும் சாம்சுத்தீனுக்கும் ஆற்றங்கரையில் நிலவொளியில் நடக்கும் உரையாடல் மிகச்சிக்கனமான வார்த்தைகளில் சொல்லப்பட்ட ஒன்று. அவர்கள் இருவரும், தங்கள் முரண்களை மறந்து பால்ய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் காட்சி துயர்மிக்கதாக இருந்தது. தன் மகனின் பிறழ்வு தான் எதிர்பாரா ஒன்று எனவும், தெரிந்தே, அவளது வாழ்க்கையை தான் சிதைக்கவில்லை என்றும் மகேந்திரநாத் தன் மருமகளிடம் சொல்லும் இடமும், மிகப்பெரிய உணர்வுகள், மிகக் குறைவான வார்த்தைகளால் காட்சிப்படுத்தப்பட்டதன் இன்னொரு உதாரணம். 

*

நாவலில் ஒரு காட்சியில், யானை மீது ஏறி ஊரைப் பவனி வரும் பெரிய டாகூர் பற்றிய சித்திரம் வருகிறது, சொல்லப்போனால், மானசீகமாக, அந்த யானையை சவாரி போலத்தான் பெரிய டாகூரின் அலைக்கழிப்புகள் இருக்கின்றன. தனக்கு கீழிருப்பவர்கள் எவரையும் அவர் பொருட்படுத்துவதில்லை. அல்லிக்கிழங்கு பறிக்கப்போய் தண்ணீரில் மூழ்கி இறக்கும் ஜாலாலியை அனைவரும் தேடிக்கொண்டிருக்க, ஆற்றில் குதித்து அவள் சடலத்தை மீட்டெடுக்கும் சந்தர்ப்பம் உட்பட மணீந்தரநாத்தின் செயல்களில் பெரும்பாலும் ஒரு நாட்டார்கதைத்தன்மை காணக்கிடைக்கிறது.

*

ஒட்டுமொத்தமாக ”நீலகண்டப் பறவையைத் தேடி” நாவலை, அதன் பரப்பை நான் அதன் கதாப்பாத்திரங்களுடன் இணைத்து பின்வருமாறு தொகுத்துக்கொள்கிறேன்.

பெருகியோடும் ஆற்றின் கரையில் நின்று அதை ஏங்கிப் பார்க்கும் மாலதி. அவளுக்கு தன் வாழ்வும் தேவையும் அந்த ஆறாகவும், அதை அவள் வெறுமனே வேடிக்கை பார்ப்பதாகவும் அமைகிறது. மாலதி இறங்கத் தயங்கும், சமூகத்தின் பெயரில் அவளுக்கு மறுக்கப்படும் ஆற்றில் அதே சலுகையால் நீந்தித் திளைக்கும் ஜோட்டன். இன்னொருபுறம் ஆற்றில் மூழ்கி மடியும் ஜாலாலி போன்றவர்களுக்கு மீளமுடியாத சுழலாக அமையும் பசி. இவை அனைத்தையும் கடந்து, கரையோரங்களிலும், நதியின் ஆழத்திலும், வான் நோக்கியும் தனக்காக தேடலை நிகழ்த்திக்கொண்டே இருக்கும் “மணீந்தரநாத்”க்கோ அனைத்தும் ஒன்றே ”கேத்சோரத்சாலா” 

புத்துயிர்ப்பு வாசிப்பனுபவம் – காளீஸ்வரன்

அன்னா கரீனினா, போரும் அமைதியும் என மாபெரும் இரண்டு செவ்வியல் படைப்புகளுக்குப்
பிறகு, ஏறத்தாழ பத்தாண்டுகள் இடைவெளிக்கு பின்னர், தன்னுடைய 78 ஆவது வயதில்
“புத்துயிர்ப்பு” நாவலை தல்ஸ்தோய் எழுத நேர்ந்த சந்தர்ப்பமே ஒரு புனைவாக
எழுதப்படக்கூடிய சாத்தியம் கொண்டது. ரஷ்யாவில், மதத்தின் வெற்றுச் சடங்குகள், மூட
நம்பிக்கை, பழமைவாதங்களைக் கடந்து, அறத்தின் பால் நிற்கும் பிரிவினர் ”டுகோபார்ஸ்”.
அரசாங்கமும், ருஷ்ய சமூகமும் தந்த அழுத்தத்தால், 1898ல் 12000 ”டுகோபார்ஸ்” குடும்பங்கள்,
ரஷ்யாவிலிருந்து கனடாவுக்கு அகதிகளாக பயணப்படுகின்றனர். கிட்டத்தட்ட 6000 மைல்
தொலைவு கொண்ட அப்பயணத்துக்கு உதவும் பொருட்டு தல்ஸ்தோய் அவர்களால், 1899 இல்
எழுதப்பட்டது “புத்துயிர்ப்பு”. தல்ஸ்தோயின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவமும்,
வழக்கறிஞராய் இருக்கும் அவருடைய நண்பர் சொன்ன ஒரு உண்மைச் சம்பவமும்,
இந்நாவலுக்கான தூண்டுதல்கள். இந்நாவலின் பேசுபொருளினாலும், “டுகோபார்ஸ்” மீதான
தல்ஸ்தோயின் பரிவினாலும் சமூகத்தின் அழுத்தங்கள், வழக்குகள் இவற்றுக்கிடையேதான்
இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.
*
ஒரு குற்றவழக்கு விசாரணைக்காக, சான்றாயர்களுள் ஒருவராக வரும் கோமகன்
நெஹ்லூதவ், கொலைக்குற்றம் சாட்டப்பட்ட வேசை மாஸ்லவாவின் வாழ்க்கை தடம்
மாறிப்போக தன்னுடைய இளவயதில் தான் செய்த காரியமே காரணம் என எண்ணுகிறார்.
அவரது குற்றத்துக்கான விசாரணையையும், அதற்கான பரிகாரத்தையும் அவரது மனமே
தேடுகிறது. அத்தேடலின் நீட்சியாக, கொலைக் குற்றத்துக்காக சைபீரிய குற்றத்தண்டனை
விதிக்கப்படும் மாஸ்லவாவுக்காகப் பரிந்து, மேல்முறையீடு உள்ளிட்ட வாய்ப்புகளை
பயன்படுத்தும் நெஹ்லூதவ், ஒரு கட்டத்தில், அவளைத் தொடர்ந்து சைபீரியாவுக்குச்
செல்கிறார். இதற்கிடையே, தன்னுடைய நிலங்களை விவசாயிகளுக்கே குத்தகைக்கு
விடுகிறார், அவற்றின் மீதான தன் உரிமையையும் துறக்கிறார், வாய்ப்புக் கிடைப்பின்
மாஸ்லவாவை மணந்து கொள்ளவும் எண்ணுகிறார். இவற்றின் மூலமாக, இளவயதில் லட்சிய
வேட்கை கொண்டிருந்து, பின்னர் ராணுவ வேலையால் அதிகார நிழலின் கருமை படிந்து
போன தன்னுடைய ஆளுமையை சீர்படுத்திக்கொள்ள முயல்கிறார் நெஹ்லூதாவ். தொடர்ந்து
நாவல் முழுவதிலும் நெஹ்லூதாவின் எண்ணங்களும் மனமாற்றங்களும் சொல்லப்பட்டுக்
கொண்டே வர, உயிர்த்தெழுதலை நோக்கிய நெஹ்லூதாவின் பயணம் என்பதாகவும்
இந்நாவல் எனக்குப் பொருள்படுகிறது.


இப்பெரும் படைப்பு, ஒட்டுமொத்த சமூகத்தின், நீதி/அதிகார அமைப்புகளின் பார்வைகள்,
செயல்பாடுகளை ஒருபுறமாகவும், அதற்கிணையான மறுபுறமாக தனிமனிதனின்
மனசாட்சியை, அவனது அந்தரங்க தன்விசாரணையையும் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
சந்தர்ப்ப சூழ்நிலைகள், புற அழுத்தங்கள், அலட்சியங்கள் என பற்பல காரணிகளால்தான்
விடுதலையோ தண்டனையோ விதிக்கப்படுகின்றது. ஒரு கொலைக் குற்றம், அதன்மீதான விசாரணை, முறையற்ற தீர்ப்பு, சிறை, கைதிகள், அவர்களது வாழ்க்கை,
குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டவர்களை அதிகார வர்க்கம் நடத்தும் விதம் என சமூகத்தின், நீதி மற்றும்
அதிகார மையங்களின் இருண்ட பக்கம் மிக வலுவாகக் காட்டப்படுகிறது. அதே சமயம்,
மாஸ்லவாவின் வாழ்வு பிறழ்ந்துபோக தான் ஒரு முதன்மைக் காரணம் என எண்ணும்
நெஹ்லூதவ் தன் ஆன்மவிசாரணையிலிருந்து அவ்வளவு எளிதாகத் தப்பிவிட முடிவதில்லை.
தன் மனசாட்சியின் உந்துதலால், தன்னுள் புதைந்துபோன இளவயது, லட்சியவாத
நெஹ்லூதவை மீட்டெடுக்க, சாமனிய மனிதனுக்கே உரிய அலைக்கழிப்புகளுடனே தனக்கான
உயிர்த்தெழுதலை நோக்கி அவர் பயணப்படுகிறார். வெளிப்புற விசாரணைகள் அனைத்துமே
தர்க்கம் மற்றும் திறமையின் அடிப்படையில் அமைய, ஆத்மவிசாரணை முழுவதும் அறத்தை
அச்சாகக் கொண்டு அமைகின்றது.
*
நாவலின் துவக்க அத்தியாயங்களில் காட்சிப்படுத்தப்படும் நீதிமன்றமும் அதன்
செயல்பாடுகளும் விசாரணையின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றன.
தலைமை நீதிபதி முதற்கொண்டு அங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான சொந்த
அலுவல்களும் அதற்பொருட்டு விரைவிலேயே வழக்கை முடிக்க வேண்டிய எண்ணமும்
விசாரணையில் செலுத்தும் ஆதிக்கம் மாஸ்லவாவுக்கு எதிராகவே முடிகிறது. பிராசிக்யூட்டர்
அசுவாரஸ்யத்துடன் இவ்வழக்கு விசாரணைக்கு தயாராதல், தன்னுடைய தரப்பை மாஸ்லவா
சொல்லிக் கொண்டிருக்கும்போது தலைமை நீதிபதி தன்னருகே இருக்கும் இரண்டாம்
நீதிபதியுடன் பேசிக்கொண்டிருப்பது, விசாரணையின் வாதங்களை அலட்சியத்துடன் கேட்கும்
நீதிபதிகள் என விசாரணையில் நிலவும் முறையின்மை காட்டப்படுகின்றது. சான்றாயர்களின்
கவனக்குறைவால் விடுபட்டுப்போகும் ஓரிரு சொற்களால் மாஸ்லவாவுக்கு எதிராக
தீர்ப்பளிக்கப்படுவது வரை இத்தவறுகள் நீள்கின்றன. முடிவில், விசாரணையால் அல்ல,
சந்தர்ப்பத்தினாலேயே ஒரு வழக்கின்/தீர்ப்பின் போக்கே மாறுவதைக் காண்கிறோம்.
நெஹ்லூதாவின் இளமைக்காலத்தில் இருக்கும் லட்சிய வேட்கை தன்னுடைய சொத்துக்களை
விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் அளவுக்கு ஆழமானது. அவனுடைய தனிப்பட்ட
ஆளுமையில் பெரும்பகுதி அவரது வாசிப்பினால் விளைந்தது. ஆரம்ப காலத்தில்
மாஸ்லவாவுடனான அவனது நெருக்கம் அவன் சுற்றத்துக்கு கவலை அளிப்பதும் அந்த
லட்சிய வேட்கையின் நீட்சியே. மூன்றாண்டு கால ராணுவ சேவையும் அதிகார தோரணையும்
தன்னை நம்பும் நெஹ்லோதவ்வை பிறரை நம்பும் நிலைக்கு “உயர்த்துகின்றன”. நாவலின்
பிற்பாதியில் சைபீரிய சிறைக்கு கைதிகளை அழைத்துச் செல்லும் வழியில், ஒரு கர்ப்பிணிக்
கைதி நடத்தப்படும் விதமும், தகப்பனிடமிருந்து ஒரு பெண் குழந்தை பிரிக்கப்படும் விதமும்,
சாமானிய மக்களிடையே பெரும் சஞ்சலத்தை உண்டாக்குகின்றன. அதே விசயங்களைக்
கண்ணுறும் அதிகாரிகள் அதை எளிதாகக் கடந்து போவதும் இதே வகையான தரம்
உயர்த்தப்பட்டதன் விளைவுகளே.

இப்படி நீதிபதிகள் முதற்கொண்டு, அதிகாரிகள் வரை தத்தம் எல்லைக்களுக்குற்பட்ட
நெறிமீறல்களைக் கைக்கொள்ளும்போது, தன்னில் ஒருவனை குற்றவாளி என தண்டிக்கும்
உரிமையை ஒரு சமூகம் தானாகவே இழக்கிறது. இதே கருத்தை சான்றாயர்களில் ஒருவராக
வருபவரும், குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் அனைத்துக் குற்றங்களிலிருந்தும் விடுதலைத்
தீர்ப்பை நாடுபவருமான “அர்த்தேல்ஷிக்” முன்வைக்கிறார். நாவலில் பலதரப்பட்ட
சந்தர்ப்பங்களில் நாம் காண நேரிடும் பலதரப்பட்ட மக்களும் அவர்தம் செயல்பாடுகளும்,
அவர்களை வெளியிலிருக்கும் குற்றவாளிகள் என எண்ணவைக்கின்றன. அதேபோல ஒரு
வலுவான சிபாரிசுக் கடிதம் பல நாட்களாக சிறையில் வாடிய கைதியை
விடுவிக்கப்போதுமானதாக இருக்கும்போது, கைதிகள் அனுபவிக்கும் தண்டனை என்பது
அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்காகவா அல்லது அவர்களுக்கு சரியான சிபாரிசு
கிடைக்காத குற்றத்துக்காகவா எனும் எண்ணம் எழுகிறது.


மனிதரில் நிலவும் கீழ்மை, அதிகார வர்க்கத்தில் மட்டுமல்ல எல்லாவிடங்களிலும் நீக்கமற
நிறைந்திருக்கின்றது. சாதாரண குற்றத்தண்டனைக் கைதிகளைப் போலன்றி, வஞ்சிக்கப்படும்
மக்கள் பக்கம் நின்று அதிகாரத்தை எதிர்க்கும் அரசியல் கைதிகளுக்குள்ளும் தன்னையும் தன்
நலத்தையும் மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கும் ”நவதுவோரவ்” வகையினரும் இருப்பது
அதற்கொரு நல்ல உதாரணம்.


நெஹ்லூதவ்வைக் காட்டிலும் மிக வலுவான பாத்திரமாக மாஸ்லவா விளங்குகிறாள்.
இத்தனைக்கும், நாவல் முழுவதிலும் தன் தரப்பை சரி தவறுகளுடன் நெஹ்லூதவ்
முன்வைத்துக் கொண்டே இருக்க, மாஸ்லவாவின் மனக்குரல் எங்கும் பெரிய அளவில்
ஒலிப்பதில்லை. தன்னை தேடிவந்த கோமகன் யாரென தெரிந்து கொள்ளும் ஆரம்ப
சிறைச்சாலை சந்திப்புகளும், மருத்துவமனையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட தன்னை
நெஹ்லூதவ் சந்திக்கும் தருணமும் என மிகச்சில சந்தர்ப்பங்களில் மட்டுமே சற்றே
தன்னிலையை இழக்கிறாள் மாஸ்லவா. தனக்கு உதவக்காத்திருக்கும் நெஹ்லூதவ்விடம் பிற
சிறைக்கைதிகளின் சிக்கல்களைச் சொல்லி அவற்றுக்குத் தீர்வுகாண முயற்சிப்பதும், தனக்கு
விடுதலை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் நெஹ்லூதவ்வை மணக்கும் ஆசையை கைவிட்டு
அரசியல் கைதி “சிமன்சனுடன்” செல்ல எண்ணுவதும், மாஸ்லவாவை ஒரு வலுவான
பாத்திரப் படைப்பாக மாற்றுகின்றது.


நாவலில் வரும் இடங்களைக் குறித்த சித்தரிப்புகளும், துணைக் கதாப்பாத்திரங்களைப் பற்றிய
விவரணைகள், அவற்றை ஒரு புனைவாகக் கூட விரித்தெழுதக்கூடிய சாத்தியங்களைக்
கொண்டிருப்பதும், இந்நாவலுடன் நம்மைப் பிணைத்துக்கொள்ள, நம்முள் விரித்தெடுக்க
உதவியாய் இருக்கின்றன.


ஒட்டுமொத்தமாக இந்நாவல் நமக்குச் சித்தரித்துக்காட்டும் உலகம் வேறொரு நாட்டிலோ,
பழைய காலகட்டத்திலோ இருப்பதாகவோ என்னால் எண்ண முடியவில்லை. இந்நாவல்
கேள்விக்குட்படுத்தும் தண்டனை vs ஆத்ம விசாரணை என்னும் கருத்து எங்கும் என்றும்இ ருப்பதுவே. அவ்வெண்ணமே, காலத்தைக் கடந்து எப்போதைக்குமான ஒரு செவ்வியல்
படைப்பாக “புத்துயிர்ப்பு” நாவலைக் கருத வைக்கின்றது.

பின்குறிப்பு:
இந்நாவல் உருவான பின்புலத்தைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரை,
அவருடைய “எனதருமை டால்ஸ்டாய்” புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அக்கட்டுரை, அவரது
வலைத்தளத்திலும் வாசிக்கக்கிடைக்கின்றது. சுட்டி : https://www.sramakrishnan.com/?p=2135