அபத்தக்  குப்பையின் மேல் ஞான ஒளி – ஆர். ராகவேந்திரன்

போரும் அமைதியும் – பாகம்  1 – வாசிப்பு

விருந்துகளும் போர்களும்

‘அன்னா  பாவ்லவ்னா அளிக்கும் அடம்பரமான விருந்தில் தொடங்குகிறது  படைப்பு.   பல ஆயிரம்  கால்களை  உடைய உயிரி ஒன்று நகரத் தொடங்குவது போல நிதானமான அசைவு .   விருந்துகளில்  உணவும் குடியும் அல்ல  முக்கியமான பதார்த்தங்கள் . மனிதர்களின் அந்தஸ்தும் தொடர்புகளும் தான்  விநியோகம் ஆகின்றன. 

ஆடம்பரமான மனிதர்களின் அபத்தமான திட்டங்கள், போலித்தனங்கள் , ரகசிய ஏற்பாடுகள்,  அரசு என்னும் எண்ண முடியாத  படிக்கட்டுகளில் கள்ளத்தனமாக ஏறுவது இவைதான் அங்கே எல்லோருடைய நோக்கங்களும் .

சரியான விகிதத்தில் ஆரஞ்சுப் பழச்சாறு கலக்கப்பட்ட  வோட்கா போல, நெப்போலியன் மீதான எதிர்ப்பும், மதம், சக்கரவர்த்தி ஜார் மீது நிபந்தனையற்ற விசுவாசமும்  கலந்து  அரசியல் சரி என்னும் கோப்பைகளில் ஊற்றி   ரஷ்ய உயர்குடியினர் அதிகார போதையில் திளைப்பதைக் காட்டும் டால்ஸ்டாய்,  போர் என்னும் அடுத்த கட்ட போதைக்கு  நகர்த்திச் செல்கிறார்.

சீமாட்டி  தாய்மார்கள் தங்கள் வாரிசுகளுக்கு பாதுகாப்பான  ஆனால் போர்ப்பங்களிப்பின் நன்மையைக் கொடுக்கக் கூடிய பதவிகளுக்காக தங்கள் குடிப்பிறப்பு – உறவுகள் – வட்டங்களை விரிவாக்கிக் கொண்டே செல்கிறார்கள். 

அடிமைகள், சேவகர்களின்  இருப்பு இந்த வண்ணமயமான செல்வ வாழ்வின் பின்னால் மங்கலாகக் காட்டப் படுகிறது.  தங்கள் முதலாளிகளுக்கு சட்டைப் பித்தான்களை அணிவித்துக் கொண்டும் யாரும் பார்க்கவில்லை என்று நினைத்து  மிச்சமாகிய மதுவை குடித்துக் கொண்டும் வாழ்கிறார்கள்.  

கதைத்திறன்

சிறிய செய்கைகளை முழு வர்ணனையுடன் அப்பட்டமாகக் காட்டும் டால்ஸ்டாய் மைய விசையான அழுத்தமான  நிகழ்வுகளைப்  போகிற போக்கில் கோடி காட்டுகிறார்.  

போர்க்களத்தில்  மோதல் துவங்கும் முன்னர் முன்னணியில் நின்று வேடிக்கை செய்து வரும் படை வீரர்களைக் காட்சிப்படுத்திடும் ஆசிரியர் திடீரென போர் துவங்கி விடுவதைக் குறிப்பாகக் காட்டுகிறார்.  (வெண்முரசில் போர் துவங்கும் முன்பு இரு புறமும் உள்ள சிறுவர்கள்  ஆயுதங்களை வீசிப்போட்டு விளையாடுவதை விரிவாகத் தீட்டியிருப்பார்  ஜெயமோகன்) . 

ஒரு திணிக்கப்பட்ட விருந்தில் பியர்- ஹெலனுக்கு இடையே  காதலை வலுக்கட்டாயமாக மலர வைப்பதற்காக மொத்தக் குடும்பமும் உறவினர்களும் முயல்வதை விலாவாரியாக விளக்குபவர் , பட்டென்று    “ஆறு வாரங்களுக்குப் பின் அவருக்கு திருமணமாயிற்று.    பீட்டஸ்பர்கில் உள்ள தமது பெரிய, புதிதாய் அலங்கரிக்கப்பட்ட மாளிகையின் வாழ்க்கையை ஆரம்பித்தார் ” என்று தாவுகிறார்.  தொலைவிலும் அருகிலும் நகர்ந்து பல கோணப் பதிவுகளை அனுப்பும் ட்ரோன் உத்தியின் இலக்கிய உச்சம்

  போரை விவரிக்கையில் அதிக ஒளியும், அடிக்க வரும் சிவப்பும் ரத்தமும் பெரிதாக இல்லாமல் மசமசப்பான  மாலை வெயில் போலவே சொல்லப் படுகிறது.  அருவருப்பும் அழுகலும் காட்டப்படும் இடம்  போர்கள் முடிந்து விட்ட பின் தூக்கி எறியப்பட்ட காயம் பட்ட வீரர்களின் மருத்துவ மனையில்  தான் . அங்கு தான் ரஸ்டாவ்  அடிப்படையான கேள்விகளை எழுப்பிக் கொள்கிறான். 

போருக்கு முன்பான படை நகர்வுகளும் ஆலோசனைகளும் உணவு, குதிரை, பீரங்கி விவரங்களும் கடினமான மலைச் சிகரம் மீது  ஏறுவது போல சிறுகச் சிறுக அடுக்கப்   படுகிறது. உச்சியிலிருந்து ஒரே தாவலாக மையப்போர்  கையாளப்படுகிறது. 

உள்ளீடற்ற அபத்தம் 

டால்ஸ்டாயின் போர் வெறுப்பும் போலித்தன வெறுப்பும் அவரை மனிதர்களின்  உள்ள ப் போக்குகளை கவனிக்கச் செய்கின்றன.   அவர் மனிதர்களின் பாசாங்குகளையும் பாவங்களையும் புரிந்து கொள்கிறார். இரக்கத்துடன்  தனது கொந்தளிக்கும் மனத்தைக் கொட்டி அதில் எல்லாருடைய உள்ளங்களையும் ஆதுரத்துடன் அள்ளிக் கொள்கிறார். 

இங்குள்ள எதற்கும்  தர்க்க – நியாயம் இல்லை.   வரலாற்றின் ஒரு கட்டத்தின் போக்கு , ஒரு மனிதனால் அவன் எவ்வளவு ஆற்றலுடன் இருந்தாலும் தீர்மானிக்கப் படுவதில்லை.   சோர புத்திரன் பியருக்கு பெருஞ்செல்வம் கிடைக்கிறது.  உடனே அவன் மிக முக்கிய குடிமகனாக உயர்கிறான். பின்னர் மனைவியை சந்தேகப்பட்டு தனது  சொத்தின் பெரும்பகுதியை அவளுக்கு அளித்து விட்டு ஃபிரி மேசனாக மாறி , அடிமைகளை விடுவிக்க வேண்டும்  என்று கனவு கண்டு, அவற்றை ஒரு எளிய முட்டாள் காரியதரிசி அழகாக வளைத்து தனக்கு ஏற்றவாறு  மாற்றிக் கொள்ள –  எல்லாமே   காலியாக உள்ளீடற்று போகின்றன – அவர் ஏழைகளுக்கு கட்டிய கட்டிடங்களை போல 

புத்துயிர்ப்பில் டால்ஸ்டாய் கட்டி எழுப்பிய நெஹ் லூதவ் பியருக்கு அருகில் நிற்கிறார்.

டுஷின் என்னும் நம்பிக்கை

இந்தச் சிறுமைகளுக்கு  முடிவில் அர்த்தத்துடன் ஒரு பாத்திரம்  எழுந்து வரும் என்று பார்த்தால் அது டுஷின் என்னும் பீரங்கி படைத்தலைவர் தான் 

ஆர்வத்துடன் தனக்குத் தானே பேசிக்கொண்டு தனது வீரர்களை ஊக்குவித்துக் கொண்டு இலக்கு எதுவும் இல்லாதது போல ஆரம்பித்து சுங்கான் புகைத்துக் கொண்டே எதையோ தாக்க வேண்டும் என்பதற்காக எதிர் மலையில் தெரிந்த கிராமம் மீது உற்சாகமாக  சுட்டுத் தள்ளுகிறார் . தனக்கு காப்புப்படையே இல்லை என்பதைக் கூட  உணராதவராக கடைசி வரை சுட்டுக் கொண்டே இருக்கும்  டுஷின் போருக்கு முன்னால் ஒரு விடுதியில்   படை  தயாராக வேண்டும் என்ற ஆணையை மீறி காலணியும் அணியாமல் குடித்துக் கொண்டிருந்ததற்காக   கண்டுபிடிக்கப் பட்ட மாணவன் போல அசடு வழிந்தவர்  தான். 

அந்த  பீரங்கிப்   பூசல் முடிந்ததும் இரண்டு பீரங்கிகளை ஏன் விட்டு விட்டு வந்திர்கள் என்ற மேலதிகாரியின் கேள்விக்கு பதட்டமாகி  கண்கள் தளும்ப தள்ளாடி நின்றவர் டுஷின்.   உண்மையில் போரில் வென்றதே அவரால்  தான் என்று  ஆண்ட்ரூ வாதாடிய போதும் பயந்து போய் தப்பித்தோம் என்று வெளியே வந்தவர். 

போர்களும் நிறுவனங்களும் அரசுகளும் பெயரே வெளிவராத ,  பிறர் தவறுகளையும் சுமக்கின்ற டுஷின் களால்  தான்  நடக்கின்றன 

அமைப்பின் உச்சியில் இருக்கும் ஜார்களும் நெப்போலியன்களும் ஒரு முனைப்படுத்தலைமட்டுமே செய்கிறார்கள் .

அதனால்  தான் ரஸ்டாவுக்கு ஒரு கட்டத்தில் ஜார் பேரரசர் கேலியாகத் தெரிகிறார் .

ஆன்ட்ரு தனது  வீர  நாயகனாக  மனதில்  வளர்த்து  வந்த நெப்போலியனை அருகில் கண்டவுடன் வெறுக்கிறான். 

டுஷினே எனது நாயகன். இந்த நாவல் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தஸ்தாயேவ்ஸ்கி கொண்டு வந்த  “அசடன் “  மிஷ்கின் டூஷினுக்கு இணையான இன்னும் அழுத்தமான பாத்திரம். ஒரு வளை டால்ஸ்டாய்க்கு  தஸ்தாவின் மனச்சாய்வு இருந்திருந்தால் டுஷின் பாத்திரம் இன்னும் விரிவாக மையமாக வளர்ந்திருக்கும். 

சள புள என்று மூன்று விரல்களில் பாதிரியின் ஆசீர்வாதம் போல சல்யூட் அடித்து நின்று கொண்டிருக்கும் டுஷின் மறக்க முடியாத பாத்திரம். 

களத்தின் பாடங்கள்

  போர் உபாயங்களில்  இருந்து வணிக – மேலாண்மை நுணுக்கங்கள் நூற்றாண்டுகளாக வளர்ந்து  வந்துள்ளன. வணிகமும் நிர்வாகமும் கூட ஒரு வகை  போர் தானே.  பக்ரேஷன் தனது படையின் தோல்வியை தள்ளிப் போடவேண்டும் என்பதற்காக படை நகர்வை தாமதப் படுத்துவதும் அதற்காக ஜாரிடமே  வாதிடுவதும் டால்ஸ்டாய் தரும் மேலாண்மைப்  பாடங்கள்.

அபத்தங்களின்  முடிவில்லாத சங்கிலியாகவே வரலாறு தீர்மானமாகிறது.  (சிலர் துப்பாக்கி சுட்டுக் கொண்டிருந்தனர்.  ஆனால்  யாரைப் பார்த்து என்பதைப்  பார்க்க முடியவில்லை. )

காயம் பட்ட ரஸ்டாவ் போன்றவர்களுக்கு தனது பீரங்கி வண்டியில் இடம் தரும் டுஷின் கடைசியில் ரஸ்டாவை ஒரு ராணுவ மருத்துவமனையில் பார்க்கும் போது  ஒரு கையை இழந்து  விட்டிருந்தார். ரஷ்யா தனது கையை இழந்து விட்டிருந்தது 

டால்ஸ்டாயின் பாத்திர அணிவகுப்பில்  பிறர் குற்றமும் தன்னுடையது  தானோ என்று குழம்பும் டுஷின் ஒரு தட்டில் என்றால்  மறு தட்டில் வாசைலி  அழுத்தமாக  உட்கார்ந்திருக்கிறார்.  முகத்துதி, நக்கல், சூழ்ச்சிகள் ஊ றிப்  பெருக்கெடுக்கும் உள்ளம் .

  தூலமான ஆபாசமும் நுண்மையான மெல்லுணர்வும் ஒரே பாத்திரத்தில் இயல்பாக வருவதே ஆசானின் தொடுகையாக உள்ளது .  வாசைலி பியருக்கு நாற்றமெடுக்கும் வாயால் முத்தம் கொடுக்கிறார் என்று சொல்லி விட்டு சில பக்கங்களுக்குள் தனது மக்களின் திருமணம் உறுதியாகும்போது தந்தையாக உண்மையாக கண்ணீர் நிறையும் கண்களுடன் தோன்றுகிறார் வா சைலி. 

சுயநலம் என்னும் மாமிசம் தந்தையன்பு என்னும் ஆன்மாவின் மீது போர்த்தியுள்ளதை டால்ஸ்டாய் தொடும் இடம் இது.

  அழுக்குப் படாத , சீருடை கலையாத ராஜதந்திரி பதவியை தனது அம்மா அன்னா பாவ்லவ்னா மூலம் பெற்று விடும் போரிஸ் உயர் பதவிகளுக்கு தொங்கிப் பிடித்துக் கொண்டு ஏறிவிடும் கலையின் பயனாளி.  ஆட்சி மாறிவிட்டபோதும் போரிஸ் தனது ஆதாயங்களை அழகாகப் பெறக்கூடியவன். 

கனவு காணும் ரஸ்டாவ்  அரசனுக்காக உயிரையும் தரும் உணர்வெழுச்சி கொள்கிறான்.  நாட்டுப்  பற்றுக்கும் நயமான தந்திரத்திற்கும் என்றும் நடைபெறும் போராட்டம்  நாவலின் மைய இழை.  ஒரு போருக்குள் பல போர்கள்.  ஒரே படைக்குள் பல போர்கள் .

பேச்சில்லாப் பேச்சு

உரையாடல்களுக்கு இணையாக மன ஓட்டத்தையும் உடல் மொழியையும்  கையாண்டிருக்கிறார். ஒரு பாத்திரம் ஒரு வாக்கியம் பேசியதென்றால் அப்போது அவர்கள் நின்ற, உட்கார்ந்திருந்த இடம், குரலின் ஏற்ற இறக்கம் , கண்கள், உதடுகளின் இயக்கம் முகம்  இவற்றை விரிவாக அளித்து விட்டு  “போல இருந்தது”, “பாவனை செய்தார் ” என்ற தொடர்களின் வழியாக  உடலின் பேச்சைப் பதிவு செய்கிறார்.  அதன் வழியாக மனதின் ஆழங்களுக்குள் அழைத்துச் சென்று  மனிதர்களின் உள்நோக்கங்களைத் தோலுரிக்கிறார் 

போரின் நொதிகள்

முரண்படும் உணர்வுகளை அபாரமாகச்  சொல்லிச் செல்கிறார். உதாரணமாக ஒரு சொற்றொடர் “இன்பத்தோடு கோபமாக நினைத்தார்” . 

இன்பம் காமத்தைக்  குறிக்கிறது, கோபம் குரோதத்தின் வெளிப்பாடு. மனிதனுக்கு நொதிச் சுரப்பிகளில் ஏற்படும்  தாறுமாறான கசிதலே போருக்கு  காரணம் என்று ஒரு கருத்து உண்டு. போரின் தொடக்கத்தில் சில வீரர்கள்  அடையும் மன எழுச்சி போரின் உளவியல் மீது  டால்ஸ்டாய்க்கு இருந்த ஆழமான பிடிப்பைக் காட்டுகிறது 

 இப்போதைய சுழலில் கூட பியரின் எஸ்டேட் இருந்த அதே கீவ் நரரில் போரின்  முன்னேற்பாடுகள் தொடக்கி விட்டன.  (ஜனவரி 2022) புடின் – நேடோ விளையாடும் கள மாகிறது உக்ரைன்

 தூக்கத்தை டால்ஸ்டாய்  பல வகைகளில் கையாளுகிறார். தோற்கப் போகும் போரில் தனக்கு  விருப்பமே இல்லாததால் ஆலோசனைக் கூட்டத்தில் குட்டஜோ வ் தூங்கி விடுகிறார். மனம் தவிர்க்க முடியாத ஒரு துயரத்தை  எதிர்கொள்ள அது ஒரு வடிகால். ரஸ்டாவ் குதிரைப்படைக்  காவல் முனையில் தூக்கக் கலக்கம் கொள்கிறான் . அவன் கனவுகளும் தூண்டப்பட்ட மனமும் கொண்டவன். பரபரப்பான நிலை தாள முடியாத போது மனம் ஒய்வு கேட்கிறது. 

தலைக்காயம் பட்ட ஆன்ட்ரு  தனக்கு மேலே ஆகாயத்தைக்  காணும்போது மரண அனுபவத்தை ஒரு கணம் பெறுகிறான். அது அவனைப் பேரமைதியில் வைக்கிறது.  

போரின் அரசியல்

போரில் தோற்றவனை நெப்போலியன் புகழ்கிறார். களத்தின்  இறுதியில் காலத்தின் ஓட்டத்தில் நாயகர்களெல்லாம்  அருவருக்கத் தக்கவர்களாகத் தெரிகிறார்கள் .   ஜாரும் நெப்போலியனும் சமாதான உடன்படிக்கை செய்து கொண்ட பின் காயம் பட்ட வீரர்கள் எல்லாவற்றையும் வெறுமையாக நோக்குகிறார்கள்.  

போரில் தோற்றபின்னும் அதை வெற்றி என்று சொல்லி விருந்து நடக்கிறது. புதிய வதந்திகளை, கோழைகளை, நாயகர்களை உருவாக்கிப்  படைக்கிறது விருந்து. டெல்லியின் “ கான் மார்க்கெட் கேங்” உடைய பழைய பாணி. 

முதிர்ந்து கனியும் தரிசனம்

ஆன்ட்ருவின் மரணச் செய்தியைக் கேட்ட மேரி  (இது உண்மையல்ல என்று பின்னால் தெரிய வருகிறது) அழாமல் எதிர் கொண்டுதுணிவு கொள்ளும் இடம் அவளுடைய மனப் போக்கிற்கு பெரிய மாற்றம். அவள் துயரம் அடைவதற்கு பதில் உயர்வான ஒரு மகிழ்ச்சி கூட அடைகிறாள். இங்கு ஆசிரியர்  மெய்ஞானி ஆகிறார். தந்தை பால்கான்ஸ்கியோ செய்தியை உறுதி செய்து கொள்ளாமல் நம்பிவிடும்  நசிவியலாளராக –  ஃபாட்டலிஸ்ட் ஆக இருக்கிறார் 

போர் முனையில் இருந்து ரஸ்டாவ் அனுப்பும்  கடிதத்தை அவன் குடும்பம் எதிர் கொள்ளும் முறை அழகு . குதூகலம் மட்டுமே கொந்தளிக்கும் இடம். பெண்குழந்தைகள் இல்லாத வீடுகளில் இது கிடைக்காது. நேர்  மாறாக இறந்து விட்டதாக நம்பிவிட்ட ஆன்ட்ரு வீடுதிரும்புதல் , கடுமைக்காரரான அவன் தந்தையின் உள்ளத்தில்  வைத்த கடினமான பாறையைப் பிளந்து நீர் பொங்கிய இடம் .

மரணமடையும்போது லிசா ஒரு கேள்வியை   முகத்தில் படர விட்டபடியே இறக்கிறார்கள். அது தீராத   குற்ற உணர்வை அவள் கணவனுக்கு உருவாக்கி விடுகிறது.  “எனக்கு ஏன் இதைச் செய்தீர்கள் ” என்கிறது அவள் முகம். சிறிய பொம்மை  போலவே அவளை  காட்டிக்   கொண்டுவருகிறார். டால்ஸ்டாய்.  அவளுடைய உதடுகள் சேர்வதே இல்லை என்கிறார். முழுமையடையாத வாழ்வின்   துயருக்கு மறக்க முடியாத உருவகம் 

வேறொரு வகையில் தூய இதய சுத்தியின் காரணமாக எளிமையில் “பிதாவே என் என்னை கைவிட்டாய்” என்று கேட்பது போலவும் உள்ளது. 

நடாஷாவின் பாத்திரம் குழந்தைமையிலிருந்து கன்னிமைக்கு மெதுவாகத் துளிர்விடுகிறது. எல்லாவற்றின் மீதும் உணர்ச்சி பூர்வமான  அன்பு, மிகைத் திறமையான நடனம் இவற்றை மட்டுமே முதல் பாகத்தில் நடாஷா வெளிப்படுத்துகிறாள். 

மொழிபெயர்ப்பாளர் டி எஸ் சொக்கலிங்கம் அவர்கள் இந்திய மனதிற்கு பொருத்தமான பதங்களைப் பயன்படுத்தி பண்பாட்டு மேடு பள்ளங்களை நிரவி விடுகிறார். 

உதாரணம் – துப்பாக்கி சனியன், “அவளுக்கு சாதகம் போதாது; குரல் அற்புதமானது”, ” எங்கள் சத்சங்கம்”, ‘வேதாந்த விஷயம்” “மனோராஜ்யம்” , தர்மம், தியானம், தீட்சை போன்றவை 

ஆன்ட்ருவிற்கு போர்க்களத்தில் காயம்பட்ட நிலையில் முதல் தீட்சை கிடைக்கிறது. பிறகு ஃ பிரிமேசன் பியருடன் பேசும்போது   இரண்டாம் முறை உள்ளம் விரிவு  கொள்கிறது.

தத்துவ ரீதியாக டால்ஸ்டாய்க்கு ஃபிரி மேசன்கள் மீது பரிதாபம் தான்  இருந்தது.   இருப்பினும் அவர்கள் மீது பரிவு இருந்திருக்கிறது. 

கருவி ஒரு வேளை பிழையானதாக இருந்தாலும் கதவு திறந்தால் போதும் என்று நினைத்திருக்கலாம்  .

 ஏனென்றால் தூய ஒளிக்கு டால்ஸ்டாய் நம்மை அழைத்துச் செல்லும் பாதை அபத்தம் என்ற குப்பைமேட்டின் வழியாகத்தான் செல்கிறது.  

ஆர் ராகவேந்திரன் 

கோவை

ஆறாவது வார்டு வாசிப்பனுபவம் – காளீஸ்வரன்

மனநோயாளிகள் மற்றும் நரம்பு நோயாளிகளின் மனம் மிக மிக ஆற்றல் கொண்டது. ஏனென்றால் அதற்கு பரவலும் சிதறலும் இல்லை. மிகவும் குவிதல் கொண்டது அது. மாபெரும் யோகிகளுக்குரிய குவிதல். ஒன்றிலேயே ஒற்றைப் புள்ளியிலேயே அது பல மாதங்கள், ஏன் பற்பல ஆண்டுகள் நிலைகொள்ளும். அலைபாயும் தன்மைகொண்ட சாதாரண மனங்கள் அந்த ஆற்றலை எதிர்கொள்ளவே முடியாது. அவை மனநோயாளியின் மனங்களுக்கு முன் அடிபணிந்துவிடுவதே வழக்கம்” 

–.திரு.ஜெயமோகன். (”ஓநாயின் மூக்கு” சிறுகதையில்)

*

பத்தென்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிகளில், ரஷ்யாவில் கடும் கொள்ளை நோயாகப் பரவிய காலராவைக் கட்டுப்படுத்த பல மருத்துவர்கள் பெருமுயற்சி எடுத்தனர். அரசாங்கத்திடமிருந்து, போதுமான உபகரணங்களோ அல்லது பண உதவியோ கிடைக்கப் பெறாத போதும், தன்னுடைய சொந்தப் பணத்தை, சொத்துக்களைக் கொண்டு கடமையாற்றிய பல மருத்துவர்களுல் ஒருவர் அந்தோன் செகாவ். மற்ற மருத்துவர்களின் பெயரை நாம் அறியாதபோதும் செகாவின் பெயர் நமக்குத் தெரியக் காரணம் அவர் ”காக்கும்” மருத்துவர் மட்டுமல்ல, “படைக்கும்” கலைஞனும் கூட என்பதே. செகாவ்வைப் போல தன்னால் சிறுகதை எழுதமுடியவில்லையே என தல்ஸ்தோய் வருந்துமளவுக்கு மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர் செகாவ். அவரது முக்கியமான கதைகளுல் ஒன்று என “ஆறாவது வார்டு” எனும் குறுநாவலைச் சொல்லலாம்.

*

ருஷ்ய ஆட்சி மன்றமான “சேம்ஸ்த்வோ”வினால் நடத்தப்படுகிறது ஒரு மருத்துவமனை. அரசு / ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்படும் அமைப்புகளுக்கே உண்டான அலட்சியங்களிலும் அரைகுறை வசதிகளாலும் நிரம்பிய மருத்துவமனைக்கு மருத்துவராக வருகிறார் டாக்டர் ஆந்திரேய் எமீபிச். அம்மருத்துவமனையின் ஆறாவது வார்டில், இருக்கும் மனநோயாளிகளுடனான அவரது உறவும், அது அவரது வாழ்வில் நிகழ்த்தும் சிக்கல்களுமே இக்கதை. 

ஆறாவது வார்டில் இருக்கும் ஐந்து நோயாளிகளில் இவான் மிகவும் தனித்துவமானவர். நல்ல வாசிப்பும், கூடவே பொறுப்புடன் தன் கடமையை ஆற்றிவரும் வாழ்க்கையும் அமைந்த இவானுக்கு, “தன்னை காவலர்கள் கைது செய்யப்போகிறார்கள்” என விபரீத எண்ணம் தோன்றுகிறது. தொடரும் அவ்வெண்ணத்தின் சிக்கல்களால் மனநலக் காப்பகத்தில் அடைக்கப்படுகிறான் இவான். ஆனால், காப்பகத்தில் இருப்பவர்களிலேயே வெகு தெளிவுடன் சிந்திப்பவனாகவும் அவனே இருக்கிறான். மறுபுறம் மருத்துவமனை செயல்படும் விதத்தில் கடும் அதிருப்தி இருந்தபோதும் தன் எல்லைக்குட்பட்டு, தன்னால் இயன்ற மருத்துவத்தை செய்ய முற்படுகிறார் டாக்டர் ஆந்திரேய் எபீமிச். தற்செயலாக இவானுடனான துவங்கும் ஒரு உரையாடல், எபீமிச்சுக்குள் பலவித கேள்விகளை எழுப்புகிறது. இவானுடனான தொடர் உரையாடல்களும், மருத்துவமனையின் அமைப்புக்குள் பொருந்திப்போகாத எபீமிச்சின் இயல்பும், அலைக்கழிக்கும் கேள்விகளால் தடுமாற்றத்துக்கு உள்ளாகும் அவருடைய நடவடிக்கைகளும் என எல்லாமும் சேர்ந்து கொள்ள, ஒரு கட்டத்தில் மருத்துவர் எபீமிச், மன நோயாளி எனகருதப்பட்டு அடைக்கப்படுகிறார். மீள முடியாத ஒரு கூண்டாக அம்மருத்துவமனை அவருக்கு அமைந்து விட, எபீமிச்சின் மரணத்தில் முடிகிறது “ஆறாவது வார்டு”.

*

எந்த வாழ்க்கையிலும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செல்வதற்கு வாய்ப்புள்ள ஒரு இடமாகவே ஆறாவது வார்டைக் கருத முடிகிறது.  மிக மெல்லிய கோட்டுக்கு இந்தப் பக்கம் நாம் வாழ விதிக்கப்பட்டிருப்பதும், திரும்பத் திரும்ப நம்மை அலைக்கழிக்கும் கேள்விகள் நம்முன் எழாதிருப்பதும், அல்லது நாம் அதைக் காண மறுப்பதும், குற்றவுணர்வின் சாயல் கொஞ்சமும் இன்றி நம்மால் ஒவ்வொரு நாளையும் வெற்றிகரமான கழிக்க முடிவதும், முற்றிலும் தற்செயலான ஒன்றாகவே அமைந்திருக்க வாய்ப்புள்ளதுதானே. அப்படிப்பட்ட ஒரு நல்வாய்ப்பைத் தவற விட்டவன் என்றுதான் இவானைக் கருதத் தோன்றுகிறது. இயல்பானது என நாம் வரையறுத்து வைத்திருக்கும் உலகில் இவானுக்கு வாய்க்காத தெளிவு, ஆறாவது வார்டில் கிடைத்திருக்கிறது. ஆனால், அங்குமே அது ஊரோடு ஒத்து வாழாத குணமாகவே கருதப்படுகிறது. மருத்துவர் எபீமிச்சுடனாக ஆரம்ப உரையாடல்களில், வெளிப்படும் இவானின் அகம் அவனை ஒரு லட்சிய மனிதன் என்று எண்ணவைக்கிறது. அவனது லட்சிய நோக்குக்கு பதிலாக எபீமிச்சினால் கூற முடிந்ததெல்லாம் நடைமுறை வாழ்க்கை சார்ந்த நெறிகளும், உலகியல் தத்துவங்களும் மட்டுமே. தன்னுடைய சக நோயாளியாக எபீமிச் ஆனதும், தனக்கு அருளப்பட்ட தத்துவங்களை இவான் நினைவூட்டும் விதம் அருமை.

அருமை நண்பரே, உள்ளம் குலைந்துவிட்டேன் – எபீமிச் 

தத்துவ ஞானம் பேசிப்பார்ப்பதுதானே – இவான் 

*

இவானிடம் எபீமிச் பேசும் நடைமுறை வாதங்கள் அனைத்துமே தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ளத்தான். முற்றிலும் லட்சிய வேட்கையில் மூழ்க முடியாமல், அதே சமயம் பிழைப்புவாதியாகவும் வாழ முடியாமல் எபீமிச் தடுமாறுவது, சீரழிந்த நிலையிலிருக்கும் மருத்துவமனைக்கு அவர் வரும் துவக்க அத்தியாயங்களிலேயே காட்டப்படுகிறது. ”உலகிலுள்ள நல்லவை யாவும் ஆதியில் தீமையிலிருந்து உதித்தவையே” எனும் சமாதானம் சகித்துக்கொள்ள முடியாத நிலையிலிருக்கும் மருத்துவமனைக்கு மட்டுமானதல்ல. ஆயிரம் சமாதானம் சொன்னபோதும் எபீமிச்சுக்கு நிதர்சனம் புரிந்துதான் இருக்கிறது. இவானுடனான ஒரு உரையாடலில் “நீங்கள் உளநோயாளியாகவும் நான் டாக்டராகவும் இருப்பதில் ஒழுக்க நெறிக்கோ தர்க்க நியாயத்துக்கோ இடமில்லை, முற்றிலும் சந்தர்ப்பவசத்தால் நிகழ்ந்தது இது” எனவும் எபீமிச் கூறுகிறார். அடிக்கடி ஆறாவது வார்டுக்கு வருவதும், வந்தாலும் சரிவர நோயாளிகளைக் கவனிக்காமல் போவதும், இவானுடனான தொடர் உரையாடல்களும், ஏற்கனவே எபீமிச் மீது காழ்ப்பில் இருப்பவர்களுக்கு, அவரது மனநிலை குறித்து சந்தேகிப்பதற்கு வசதியான காரணங்களாக அமைந்துவிடுகின்றன.

ஒரு வகையில் ஆறாவது வார்டில் தனக்கான இடத்தை எபீமிச் அவைகளே தேர்வு செய்துகொண்டதாகக் கருதவும் இடமுள்ளது. மருத்துவமனையிலோ அல்லது வெளி இடங்களிலோ யாரிடமும் எவ்வித நல்லுறவும் வாய்க்கப் பெறாதவராக காட்டப்படும் ”எபீமிச்”சின் ஒரேயொரு நண்பராக இருக்கிறார் அஞ்சலகத் தலைவரான “மிகயில் அவெரியானிச்”. எபீமிச்சின் மனநிலை மாற்றம் பற்றிய மருத்துவர்களின் அவதானிப்பை அவரிடமே கூறுபவராகவும், அம்மனநிலை மேலும் சீரழிந்து போகாமலிருக்க ஒரு ஓய்வைப் பரிந்துரைப்பவராகவும் “மிகயில் அவெரியானிச்” அமைவது எபீமிச்சுக்கும் அவருக்குமான நட்புபின் சான்று. ஆனால், மாலை நேரங்களில் செறிவான உரையாடல்கள், சேர்ந்து அருந்தும் பியர்கள் என வளர்ந்து வந்த அந்த நட்பும் கூட இவானுடனான சகவாசத்தால் தடைபட்டுவிடுவது எபீமிச் மிக விரைவாக ஆறாவது வார்டை அடைய ஒரு காரணமாக அமைகிறது. மருத்துவமனைச் சுழலில் ஒட்டாமலிருக்கும் எபீமீச் ஒரு பக்கம் என்றால் அதற்கிணையான இன்னொரு பக்கம் நோயாளிகளின் வார்டில் கூட தனித்தே தெரியும் இவான்னுடையது. உண்மையில் இந்நாவலில் எபீமிச் மனதார உரையாடுவது இவான் ஒருவனிடம் மட்டுமே, அவ்வகையில் “மிகயில் அவெரியானிச்”சுடனான அவரது பெரும்பான்மையான உரையாடல்கள் எபீமிச் பேச அதை “மிகயில் அவெரியானிச்” ஆமோதிப்பது என்றவகையிலேயே நின்றுவிடுகின்றன. ஒரு இணைநட்புக்கான அல்லது ஒரு சீண்டலுக்கான காலியிடம் எபீமிச்சிடம் இருந்திருக்கவும் அது இவானால் நிரப்பப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.

*

இந்நாவல் வெறுமனே மன நோயாளிகளைப் பற்றியோ, மருத்துவர் எபீமிச்சைப் பற்றியோ அல்லது மனநிலை பிறழ்வுகளைப் பற்றியோ பேசுகிறது எனச் சுருக்க முடியாது. நம்முடைய சமூகம் அதன் கூட்டியல்புக்கு பொருந்திவராத மனிதர்களை பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. அந்த மனஅழுத்தம் எவ்வகையிலும் எபீமிச்சின் மன அழுத்தத்துக்குக் குறைந்ததல்ல. தன்னுடைய தரப்பு நியாயத்தை கேட்பதற்கு சுற்றம் அமைந்திராத, தன் மனது ஏற்றுக்கொள்ளும் சொற்களைக் கூறிடுவதற்கும் யாரும் இல்லாத வாழ்க்கை விதிக்கப்பட்ட எவரும் எத்தருணத்திலும் சென்று சேரக்கூடும் இடமாக இன்னுமொரு ”ஆறாவது வார்டு”தான் இருக்கமுடியும்.

*

ஆறாவது வார்டு – குறுநாவல் – அந்தோன் செகாவ் (தமிழில்:ரா. கிருஷ்ணையா) – பாரதி புத்தகாலயம்.

அசடன், நாவல் அனுபவம் – நவீன் சங்கு

தாஸ்தாவெஸ்கி சொன்ன ‘Beauty Will Save The World’ என்ற மாபெரும் உண்மையை , தூய கிருஸ்து மனம் கொண்ட மிஷ்கின் மூலம் ரஷ்ய மேல்தட்டு மக்கள் மத்தியில் ஆராயும் நாவல் அசடன்.

தாஸ்தாவெஸ்கியின் கண்கள் நேராக நம்மை நோக்கியவாறு இருக்கும் புகைப்படம்


அசடன் நாவல் குற்றமும் தண்டனையும்,கமரசோவ் சகோதரர்கள் நாவல்களின் உணர்ச்சிமிக்க கதை ஓட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. காரணம், அதன் நீண்ட உரையாடல்கள் மற்றும் யதார்த்தமான நாவல் தன்மையிலிருந்து திடீரென நாடக தன்மைக்கு மாறுவது.நாம் வாசித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென(இப்போது பின்னணி இசை உச்சத்தில் கலவரமாக) திரைக்குப் பின்னாலிருந்து ஒரு கூட்டம் வந்து அமர்க்களம் செய்துவிட்டு மொத்தமாக திரைக்குப் பின்னே ஓடிவிடுகிறது. நாம் முகம் சுருங்கி குழப்பத்துடன் மேடையை உற்று நோக்குகிறோம், பிறகு மீண்டும் நீண்ட உரையாடல்கள் தொடங்குகிறது.

நாவல் வடிவத்தின் சட்டகத்திலிருந்து அசடன் முற்றிலும் மீறி செல்கிறது என்கின்றனர் விமர்சகர்கள். கதையாகப் பார்த்தால் ஒரு குறுநாவல் அளவுக்குச் சிறியது. நாவலுக்கே உரித்தான கதாபாத்திரங்களின் பரிணாமம் இங்கே இல்லை, பயணம் இல்லை (கதை நகர்வு) ஆனால் நீண்ட உரையாடல்கள் மட்டுமே. எல்லா கதாபாத்திரங்களும் அதன் தன்மையில் ஏற்கனவே முழுமையாக உள்ளது.

தாஸ்தாவெஸ்கி தான் அடைந்த போலி மரண தண்டனை(Mock Punishment) அனுபவத்தையே, இபோலிட் கதாபாத்திரம் மூலம் மரண தண்டனை பெற்ற ஒருவன் அடையும் மன பிறழ்வை காண்பிக்கிறார். கொடூரமான வன்முறையால் தண்டனை பெற்ற ஒருவன் அல்லது ஒரு கொலைகாரனால் கழுத்து அறுபட்ட நிலையில் இருக்கும் ஒருவனை விட மரண தண்டனை பெற்றவனின் மன வேதனை உச்சமானது என்கிறான் மிஷ்கின். காரணம், மரண தண்டனை பெற்ற ஒருவன் சென்றடையும நம்பிக்கையின்மை, அவன் ஆன்மாவை சுருக்கி பித்தடைய வைக்கிறது.

சுவிட்சர்லாந்தில் மேரி என்ற பெண்ணை கிராம மக்களிடமிருந்து காப்பாற்றுகிறான்.தொடர்ந்து தன்னிடம் மனம் விட்டு பேசுபவர்களை‌ ஆறுதல் வார்த்தை கூறுகிறான், பண உதவி புரிகிறான்.

அசல் ரஷ்யர்களை எங்குமே காணோம், சிறந்த பொறியாளர்கள் இல்லை, இரயில்கள் பாதி வழியிலேயே சிக்கி மாத கணக்கில் நகர முடியாமல், அதில் உள்ள உணவு பொருட்கள் அழுகி வீணாகிறது. ஆனால் எங்கும் போலி பாவனையுடன் தளபதிகள், அரசாங்க ஊழியர்கள். இந்த Materialistic ஆன போலி பாவனையை, இவால்ஜின் கதாபாத்திரம் மூலம் கடுமையாக சாடுகிறார் தாஸ்தாவெஸ்கி.

ரோகோஸின் வீட்டில் மிஷ்கின் காணும் Holbien’s முகம் சிதைந்து சித்திரவதைக்கு உள்ளான வயதான கிருஸ்துவின் படம் அவனை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒரு வகையில் இந்த புகைபடம் புத்துயிர்ப்பை (Ressurection) மறுக்கிறது. தாஸ்தாவெஸ்கி பார்த்த இந்த புகைபடமே, தான் முதலில் எழுத நினைத்த மிஷ்கினிலிருந்து மாற்றி அழகான தூய மிஷ்கினை எழுத தூண்டியிருக்கலாம்.

அழகிற்கு ஒரு வலிமை உள்ளது. உலகத்தை தலைகீழாக மாற்றக் கூடிய வலிமை என நாஸ்டஸியாவின் அழகு குறித்து மிஷ்கின் கூறுகிறான்.
மிஷ்கின் நம்புகிற இந்த தரிசனத்தை, பல்வேறு எதார்த்தங்கள் வழியாக நவீன ரஷ்யாவின் பண்பாட்டு தளத்தில், சிந்தனை தளத்தில் ஏற்பட்ட மாற்றம் மூலம் நிராகரிக்கிறார் தாஸ்தாவெஸ்கி.

சுவிட்சர்லாந்தில் ஒரு மலையைப் பார்த்து தான் அடைந்த பரவசத்தை விவரிக்கிறான் மிஷ்கின். மனிதனை கடந்த ஒன்றை பிரபஞ்சத்தை அல்லது கடவுளை உணர்வதற்கான ஒரு கருவியாக அழகைப் பார்க்கிறான். உலகில் உள்ள அனைத்து அழகிலும் (Authentic Beauty) ஒரு தன்மை உள்ளது, அது மனித இதயத்தை நேரடியாக ஊடுருவி சலனம் ஏற்படுத்தவல்லது, அங்கிருந்து வேறொன்றை நோக்கி மனிதனை நகர்த்துகிறது.

இந்த அழகியலை ஒவ்வொரு கலையும்(Art) தன்னுள் கொண்டதாலே ,Holbien’s painting மக்களிடம் அதிகம் தாக்கம் ஏற்படுத்தும் கிருஸ்துவை நோக்கி அவர்களை நகர்த்தும் என நம்புகிறான் மிஷ்கின்.

இயற்கையிலேயே இந்த அழகுணர்ச்சி(Beauty) தன்னுள் நல்லதையும் (Good), சத்தியத்தையும்(Truth) கொண்டுள்ளது. இதனாலயே ஹெர்மன் ஹெஸ்ஸே “Art by it’s Nature is religious” என்கிறார்.

மிஷ்கின் ஜீஸஸ், புத்தர் போல் வாழ்க்கையின் இக்கட்டுகளை கடந்து ஞானம் பெற்றவன் அல்ல. மாறாக துளி கரையில்லாத ஒரு அழகான மனிதன் (the positively good and beautiful man). இந்த அழகான மனிதனை ஏற்றுக் கொள்ள எது தடுக்கிறது. அது ரஷ்யா தனது வேர்களை இழந்து முழுக்க முழுக்க Materialist ஆன ‌ஐரோப்பா மீது கொண்ட மோகத்தால். ரோமன் கத்தோலிக்க திருச்சபை ரோமா புரி மன்னர் ஆட்சியின் மாறிய வடிவம் என்கிறான் மிஷ்கின். ஆக்டோபஸ் போல தனது கரங்களால் ஐரோப்பா முழுக்க அதிகாரம் செலுத்தி அரசியல் ஆதாயம் அடையும் அமைப்பு அது. அதுவே Atheism, Communism போன்ற சிந்தாந்தங்கள் உருவாகுவதற்கு காரணமாக அமைந்தது என்கிறான் மிஷ்கின்.

உலகிற்கே ஆன்மிக வழி காட்டக் கூடிய தன்மை ரஷ்யாவிற்கு உண்டு, அது எந்தவொரு ரஷ்யாவின் ஏழை விவசாயிடமும் (Peasant Christ) உள்ளது என தாஸ்தாவெஸ்கி நம்பினார்.அதையே தாஸ்தாவெஸ்கியும், டால்ஸ்டாயும் தங்கள் எழுத்திலிருந்து முன்வைத்தனர் (Russian Christ).

தனது பண்பாட்டை இழப்பதால் ஒரு தேசம் அடையும் இழப்பை, அசடன் நாவலிருந்து ரஷ்யாவின் வீழ்ச்சி வரை ஒரு கோடு வரைந்து பார்க்க முடியும்.

‘இடியட்’ வாசிப்பு – ஆர். ராகவேந்திரன்

தஸ்தவ்யாஸ்கியின்   ‘இடியட்’  கதைமாந்தர்களின் உளவியல்  நமக்கு மிகவும் பரிச்சயமாக இருக்கின்றன. சில இடங்களில்  நம் உள  அமைப்பையே காட்டுவதாக மலைப்பை  தருகின்றன. 

 குழந்தைப் பருவ நினைவுகள்  வெளிவரும்போது எப்போதும் நம்  அசலான  ஆளுமையுடன் நெருக்கமாக உணர்கிறோம்.   நம்மையும் உலகையும் அன்பு மயமாக  ஆக்கவல்லவை இந்நினைவுகளைத் தூண்டும் படைப்புகள்.

 உலகின் கண்ணீரை துடைத்து விடுபவன் உலகிற்கு ஒரே நேரத்தில் அன்னையாகவும் குழந்தையாகவும் ஆகிறான். பிறிதின் நோயை  தன்  நோய் போல் போற்றும் அறிவு , முயற்சியினால் அடையப் படுவதல்ல; அது இயல்பான அன்பிலிருந்து வருவது.  அசடனான மிஷ்கின்  தூய அறிவின்மையின் வெளிப்பாடு.  

எம் ஏ சுசீலாவின்  சீரான மொழிபெயர்ப்பில் நாணிக்கோணிக் கொண்டு      நம்முன் வருகிறான் அசடன்.  தனது வலிக்கும் பிறரது வலிக்கும் வேறுபாடு தெரியாத தூய்மை சில  வரலாற்று மாந்தர்களின் நினைவுகளைக் கொண்டுவருகிறது. 

ஒரு பெரிய குழந்தை சிறியதை  அடிக்கும்போது இன்னும் சிறிய குழந்தை ஒன்று அழுகிறது.  புல்வெளி மீது நடக்கும் மனிதனைப் பார்த்த ராமகிருஷ்ணர்  இதயம் பிசையைப்படும் வலியை உணர்கிறார். பிஜி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டு மனிதர்கள் இறந்து கொண்டிருந்த இரவில் விவேகானந்தருக்கு பெரும் துயர் உண்டாகி விடுகிறது. பயிர் வாடும்போது தன்  உயிரும் வாடிய வள்ளலார் அறிவுச்  செயல்பாடாக வோ  சிந்திப்பதன் மூலமாகவோ துயரைப்பெறவில்லை.  விளக்க முடியாத  ஒரு இணைப்பு இங்கே இருக்கிறது.

நஸ்டாஸியாவின் குழந்தை போன்ற முகத்தைக் காணும்போதும் அக்லேயாவின் ஒளிவு மறைவற்ற அக்கறையை  உணரும்போதும் மிஷ்கின் கொள்ளும் பேரன்பு உடல் தளத்தைக் கடந்தது. 

துளித்துளியாக, பொறுமையாக மிஷ்கினின் பாத்திரத்தை வார்த்தெடுக்கும்  ஆசிரியர்  அவனை முழுமையாக்குகிறார். ‘விசுவாத்ம புத்தி’ என்று சொல்லப்படும் ‘உலகில் கரைந்த’ ஆளுமையை இயேசுவின் படிமம் போல செதுக்குவதற்கு இவ்வளவு பெரிய பின்புலமும் நுண்ணிய காட்சி விவரிப்புகளும் தேவைப்பட்டிருக்கின்றன. 

இயல்பான , சிறிது சுயநலமும் சாமானிய ‘நல்ல’ தன்மையும் கொண்ட நாகரிக மனிதன் போன்ற சராசரி வாழ்வை மிஷ்கின் போன்றவர்கள் மேற்கொள்ள முடிவதில்லை. சிறிது சிறிதாக பித்து நிலையை அடைகிறார்கள்.  அல்லது சற்று மூளை  கலங்கியதால் தான் இந்த நேயம் தோன்றுகிறதோ?

மிஷ்கின் பொது இடத்தில் அவை நாகரிகத்தை பின்பற்றுவதில்லை. பூச்சாடிகளை  தனது உணர்ச்சி வசப் பதட்டத்தால் உடைத்து விடக்கூடியவன்.  தஸ்தவ்யாஸ்கியின்   வாழ்வில் அவருக்கு ராணுவ சீருடை பிடிக்கவுமில்லை. பொருந்தவும் இல்லை. அடிக்கடி இழுப்பு வரக்கூடியவர். பழமை வாத  கிறித்துவமும் சோஷலிசமும் ஆசிரியரைக் கவர்ந்திருக்கின்றன.  மிஷ்கின் இந்த குணங்களுடன் வளர்ந்து வருகிறான். 

ஆணவம் கொண்ட பெரிய மனிதர்கள் மிஷ்கின் போன்றவர்களை ஏளனம் செய்கிறார்கள்.  எடை போடும் அறிவாளிகளின் அடிமனதில் கயமை இருட்டில் ஒளிந்து கொண்டு எட்டிப் பார்க்கிறது. மிஷ்கின்கள் பெரும்பாலும் இவர்களை  புரிந்து கொண்டிருக்கிறார்கள். கபடங்களை எளிதில் கடந்து செல்வதன் மூலமும்  அவர்களுக்கு வென்று விட்டோ ம் என்ற  இறுமாப்பை அளிப்பதன் மூலமும் தங்கள் மைய இயல்பை  பாதுகாத்துக் கொள்கிறார்கள்.  மனநிலை பிறழ்ந்தவர்களுக்கு  வாழ்வின் இறுதி கணத்தில் சுய நினைவு திரும்பி விடும் என்ற  நம்பிக்கை உண்டு.   ‘தான் ‘ யார் என்று உண்மையில் ஆரோக்கிய மனம் கொண்டவர்களும் அறிந்து கொள்ளாத நிலையில் ,  நிலையான சுய அறிவு என்பது என்ன என்ற கேள்வியை அசடன் முன்வைக்கிறான். 

மிஷ்கின் போன்ற ‘இளிச்சவாய’ தன்மை கொண்ட தேசங்களும் சமுதாயங்க ளும் கூட இருக்கின்றன .  தான்  ஏமாற்றப்படுவது தெரிந்திருந்தும் பிறருக்கு  மகிழ்ச்சி தருவதற்காக  ஏமாந்தது போல நடிக்கும் ‘அப்பாவிகள் ‘ நின்றிருக்கும் உலகை இலக்கியவாதிகளால் படைக்க முடிகிறது 

மனிதன் இறைத்தன்மையை  பூரணமாக வெளிக்காட்டுவதில் அடையும் தடுமாற்றங்களின்  கதையே அசடன் 

பெரிய கப்பல் ஒன்று முனகலுடன் கிளம்புவது போல கதை துவங்குகிறது. ஒவ்வொரு  இயந்திரமாக சுழலத் துவங்க,  கதைமாந்தர்களி ன்   விவாதங்களின் ஊடே அசைவு நிகழ்கிறது. நகர்வதே தெரியாமல் கதை வெகு தூரம் வந்து விட்டிருக்கிறது. 

சுவிசர்லாந்தின் மன நோய் சிகைச்சை  முடிவதற்கு முன்னரே  தனது தாய்நாடாகிய  ரஷ்யாவிற்கு ஒரு துணி மூட்டையை மட்டும் உடைமையாக எடுத்துக் கொண்டு மிஷ்கின் வருகிறான். திடீர் செல்வந்தனாகி , அன்பை சுற்றிலும் தெளித்து , எல்லோரையும் நம்பி , குறுக்கு மனது கொண்டவர்களையும் ஆட் கொண்டு  அவர்களே  அவனுக்கு செய்த சூழ்ச்சிகளையும் அவனிடமே  சொல்லவைத்து அதையும் மனதில்  ஏற்றிக்  கொள்ளாமல் காதலில் விழுந்து அடிபட்டு, ஒரு கொலை நிகழ்விற்கு தார்மிக காரணமாகவும்  சாட்சியாகவும்   இருந்து, மூளை  மீண்டும் கலங்கி தனது மருத்துவ சிகிச்சைக்கே திரும்புகிறான்.

பெற்றோரை இழந்து குழந்தையாக இருக்கும்போதே எதிர்கால உருவாய் பொலிவின்  அடையாளங்களைக்கொண்ட நஸ்டாசியா,  டாட்ஸ்கி என்னும்  கீழ்மைகொண்ட செல்வந்தனால் வளர்க்கப் பட்டு கையாளப்படுகிறாள்.  தனது நிலைக்கு பொறுப்பாளி தானே என்றும்   தன்னைப் பாவி என்றும் எண்ணிக் கொண்டு சுயவதை செய்து கொள்கிறாள்.  உண்மையான அன்புடன் அவளுக்கு மீட்பை  அளிக்க  மிஷ்கின் முன்வருகிறான். அவனை கீழே இறக்கக் கூடாது என்ற குற்ற உணர்வுடன் தன்னைக் கீழே இறக்கிக் கொண்டு ரோகோஸின் என்னும் தாதாவை மணக்க முடிவு செய்து  ஒவ்வொரு முறையும் திருமண சமயத்தில் ஓடிப் போய்விடுகிறாள். 

அவளைப்போலவே கலைத்திறனும் மென் மனமும் கொண்ட  அக்லேயாவுடன் மிஷ்கினை  மணமுடித்து வைக்க முயற்சி செய்து ஒரு கட்டத்தில்  இரு பெண்களுக்கும் நடைபெறும் ஆதிக்கப் போட்டியில் மிஷ்கினை திருமணம் செய்துகொள்ள நஸ்டாசியா முடிவெடுக்க, மீண்டும் ஓடிப்போதல் நடைபெறுகிறது. அவளை அழைத்துக் கொண்டு செல்லும் ரோகோஸின் அவளைக் கொன்று விடுதலை தந்து விடுகிறான். மிஷ்கினுக்கும் ஆறுதலைத் தந்து  சைபீரிய தண்டனையை பெறுகிறான்.

மிஷ்கின் உலகில் அழகினால் அமைதியைக் கொண்டு வர முடியும் என்று நினைக்கிறான் . அவன் உண்மையில் அன்பைத்தான் அப்படி எண்ணி இருப்பான் போல இருக்கிறது. 

உருண்டு வரும் அழகிய கண்ணாடிக் குடுவையைப் பக்குவமாக எடுக்கத் தெரியாமல் போட்டு உடைத்து விடுவது போல அக்லேயா தனது வாழ்வை குலைத்துக் கொள்கிறாள்.

அசையாத நீரோடை போன்ற நாவலில் சிரிப்பைத் தரும் சுழிகள் தளபதி இபான்சின் வரும் இடங்கள்.  

குடிப்பதற்கு காசில்லாமல் கடன் கேட்பதும் தனது பழம் பெருமையை  பறை சாற்றிக்  கொள்வதும்    பொய்  சொல்லிச் சொல்லியே அதைத் தானே நம்ப ஆரம்பிப்பதும் கிடைத்த புட்டியை   ஊற்றிக்  கொண்டு அதே இடத்தில் உறங்கி விடுவதும்  தனது சாகசக் கதைகளைத் பிறர் நம்பாத  போது  கோபித்துக் கொண்டு சண்டை இடுவதும்  – உணர்ச்சிகளின் உச்சமான இந்த இபான்சின் போன்ற ஆத்மாக்கள் வாசகர் மனதில் பல பரிச்சயமான முகங்களை எழுப்புகின்றன.

நாவலின் உச்சமாகக் கருதுவது  நஸ்தாசியா கொல்லப்பட்ட பின் அந்த இருட்டு அறையில் மிஷ்கின் ரோகோஸின்னுடன் தங்குவது தான் . ஆன்மாவின் இருட்டில் குற்ற உணர்வின் துயரில் இருக்கும் கொலைகாரனுக்கு தேறுதல் தரும் மிஷ்கின் இயேசுவின் வடிவம் ஆகிறான். .

நஸ்டாசியாவின் விருந்தில் கலந்து கொண்டவர்கள்  தாங்கள்  செய்த அவமானம் தரும் குற்றங்களைச்L சொல்லும் இடமும்  மிஷ்கினின் சுழலையும் உடல் நிலையையும் வைத்து அவனது  உளவியலை பாவ்லோவிச் ‘விளக்குவதும்’ ஆய்விற்கு உரியன. 

குழந்தைகள்  ரகசியங்களை விரும்புகின்றன. சத்தம் போடாதே என்று மெதுவாகச் சொல்லிக் கொண்டே    கதவுக்கு இடுக்கில் நின்று கொண்டு  கள் ளச் சிரிப்புடன் வாய்மேல்  ஆள் காட்டி விரலை  வைத்து சிரித்துக் கொண்டிருக்கின்றன .  யாரிடமும் சொல்லாதே என்று மிக மெதுவாக உச்சரிக்கும்போதே அந்த ஒலி பெரிதாகக் கேட்டு விடுகிறது.  நாஸ்டாசியா கொல்லப் பட்டதும் மிஷ்கின் ரகசியமாக ‘எப்படிச் செய்தாய்? பாவ்லோவ்ஸ்க்கிற்கு வரும்போதே கத்தியுடன் தான் வந்தாயா ‘ என்றெல்லாம் கொலை செய்தவனிடம் கேட்க்கிறான்.  தானும் மாட்டிக் கொள்வோம் என்று சிந்திக்காமலேயே ரோகோஸினுக்காக கவலைப் பட ஆரம்பிக்கிறான். பளிங்கு போல அருகில் இருப்பவரைப் பிரதிபலிக்கும் மனம். ஊரைக் கூட்டிவிடாமல் ரோகோஸின் அருகில் படுத்துக் கொள்கிறான். அவனது கண்ணீர் கொலைசெய்தவன் மீது விழுந்து கழுவுகிறது

மிஷ்கின் முன் எல்லோரும் உண்மையையே பேசுகிறார்கள். எதற்கு இவ்வளவு சிக்கலாக வாழ்கிறீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறது  அவன் வாழ்வு 

மிஷ்கின் முன்னால் எல்லோரும் குழந்தைகள் ஆகிவிடுகிறார்கள். குழந்தையால் அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடிவதில்லை. கண்களை மூடிக் கொண்டு தந்தை முன் வந்து நிற்கிறது. தந்தையும் தன் கண்களை மூடிக்கொண்டு  தவிப்பதாகவும் பின் கண்டு பிடிக்கப் படடவராகவும் நடிக்கிறார்.  பின் இறைவன் பதட்டத்துடன் தன்னை வெளிப் படுத்திக்க கொள்கிறார்.  

ஒரே ஒரு தூயவன்   இருந்தான் அவன் கிறிஸ்து என்று சொல்லும் தஸ்தயேவ்ஸ்கி  அவனை  மீண்டும் மனிதர்களில் தேடிச் சலித்து வடிகட்டி எடுத்த கிறித்து நிகர் ஆளுமை  மிஷ்கின் 

அன்பின் தூய்மையை மறந்து விட்ட அசட்டு உலகில் மிஷ்கின் தன்மையை அடையும் முயற்சியே இலக்கியம் என்று தோன்றுகிறது. அந்த நிலையை ஒரு சிலர் அடையும் போது புவியின் பளு குறைகிறது. அப்போது சுகதேவா என்று வியாசர் அழைக்கையில் கானகத்தின் எல்லாப் பறவைகளும் இங்கிருக்கிறேன் தந்தையே என்று பாடுகின்றன.

ஆர் ராகவேந்திரன் 

கோவை

மீறலின் பெருவிளையாடல் – ராகவேந்திரன்

காப்ரியாலா கார்சியா மார்க்வெஸின் “நூறாண்டுத் தனிமை” வாசிப்பு

நிறுவனமாக்கப் பட்ட மதம், குடும்ப நெறிகள், அறிவியலின் அரசியல், அரசின் அதிகாரம் இவற்றின் அடிப்படை அலகாக மனிதன் பிறன் மீது செலுத்த விரும்பும் ஆதிக்க உணர்வு என்றும் இருக்கிறது. அவற்றை மீறும் ஆதார எழுச்சியும் மனிதர்களை சிறிய, பெரிய கலகங்கள், புரட்சிகளை நோக்கி செலுத்தி இருக்கிறது.  இந்த ஊடாட்டத்தின் இடையே கல்லை இணைக்கும் சிமெட்டிப்பால் போல மானுட அன்பு  ஒழுகி இருப்பதை வரலாறு கண்டு கொண்டிருக்கிறது.  புதியவற்றைத் தேடிப் படைக்க வேண்டும் என்ற உந்துதலும் மனித ஜீன்களை மாற்றம் என்னும் பாதையில் செலுத்திக் கொண்டிருக்கிறது.

ஆதிக்கம், அன்பு, மீறல், தேடல் இவற்றின் அடிப்படை  மானுட விசைகளை மிகைக் கனவு கொண்டு நெய்தெடுத்த நீலத்துணியாக நூறாண்டுத் தனிமை விரிகிறது.

மார்க்வெஸ் பதினெட்டு மாதங்கள் தினமும் தொடர்ந்து எழுதியுள்ள மாய நடப்பு வாதப் புதினம்.  மகோண்டா என்ற கற்பனை ஊரின் ஏழு தலைமுறைகளின் வாழ்வையும் வீழ்வையும் நகை முரண்களுடனும் அதிர்ச்சியூட்டும் விலகலுடனும் கேளிக்கையுடன் சித்தரிக்கிறது.

புரட்டிப் போடல்

மரணம் ஏன் சிரிப்பைத் தருவிக்கக் கூடாது? அழிவை ஏன் எப்போதும் துயரத்துடனே எதிர்கொள்ள வேண்டும்? இவை போன்ற அடிப்படையை அசைக்கும் வினாக்களை எழுப்பினால் அவரை ஒரு ‘மாதிரியாக’ப் பார்ப்பார்கள் அல்லவா? அந்த ஒரு மாதிரியான  மனநிலையை சரியானது என்று வைத்து கொண்டு படைப்பிற்குள் இறங்க வேண்டும்.

ஒவ்வொரு சொல்லும் பழக்கத்தாலும் காரணத்தாலும் ஒரு குறிப்பிட்ட உணர்வு நிலையை எழுப்பும். அந்தச் சொல்லுடன் முற்றிலும் முரண்படும் வேறு ஒரு சொல்லைச் சேர்த்தால் ஒரு திகிலைத் தரும். நாவல் முழுவதும் இது போன்ற ‘குண்டக்க மண்டக்க’ உணர்வுச் சேர்க்கைகளால் கட்டப் பட்டுள்ளது. அதை ஒரு அறிவரின் கலை அழகுடன் கொடுத்துள்ளார் மார்க்வெஸ்.

மிகவும் துயரமான ஒரு நிகழ்வை விவரித்துக் கொண்டே செல்கையில், ஒரு வெடிக்கும் நகைச்சுவையைத் தூக்கிப் போட்டு விடுகிறார். அழுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் வாசகன் திடீரென சிரித்துக் கொண்டிருக்கிறான். அப்படியே ஒரு இரண்டு வயதுக் குழந்தையாக வாசகனை மாற்றி விடுகிறார். அது எதன் பிடியிலும் இல்லை. எப்போதும் கேளிக்கை.

உதாரணமாக, அழகியான ரெமெடியோஸ்  ஒரு விரிப்பை உலர்த்திக் கொண்டிருக்கும்போதே காற்று அவளை விரிப்புடன் தூக்கி விண்ணிற்கு எடுத்துச் சென்று விடுகிறது. மதச் சடங்கும் கட்டுப் பாட்டு வெறியும் கொண்ட பெர்னாண்டோவின் ஒரே கவலை , தனது கம்பளம் பறந்து போய்விட்டது தான். அதைத் திருப்பும்படி கடவுளை வேண்டிக் கொள்கிறாள்.

பாத்திரப்படைப்பும் காலமும்

ஜோஸ் அர்கேடியோ புயின்டியா:

 புதியவற்றைத் தேடுபவன். ஆற்று வழியே பயணித்துக் கடலைக் காணத் துடிப்பவன். நாடோடிகளின் தொடர்பால் புதிய கருவிகளைக் கொண்டு வந்து ஊரை மாற்றுபவன். தான் செய்த கொலையின் குற்ற உணர்ச்சி ஆவியாக வந்து பேசியதால் பித்துப் பிடித்தவன். ஒரு செஸ்ட்நட் மரத்தினடியில் கட்டிப் போடப்படுகிறான். எப்போதும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பித்துப் பிடித்தவன் அறிவியலும் ஒரு வகை மூட நம்பிக்கைதான் என்று காட்டுகிறான். அவனது சிறையை விடுவித்த போதும் மரத்தை விட்டு எங்கும் போகாமல் அமர்ந்திருக்கிறான்

உர்சுலா

கதையின் ஆதாரப் புள்ளி. ஏழு தலைமுறைகளின் வீழ்ச்சிக்கு சாட்சியாக இருப்பவள். சராசரிக்கும் சற்று அதிகமான ஆற்றலுடனும் அன்புடனும் ஒரு வீட்டுத்தலைவி அன்னையாக, மூதாட்டியாக மாறி மூதாதையாக, படிமமாகச் சமைகிறாள். 115 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து அனைத்துத் துயரங்களும் தந்த வடுக்களைத் தாங்கி நிற்கும் பெருமரம். சகுனங்களை குறிப்பாக அப சகுனங்களை நம்புகிறவள். கண் பார்வை போய்விட்டபோதும் பிற புலன்களை வைத்து முழு விழிப்புடன் வாழ்கிறாள். வீடு வறுமையும் கரையானும் பிடுங்க இடிந்து கொண்டிருக்கும் நிலையில் மரணப் படுக்கையிலிருந்து எழுந்து மீண்டும் வீட்டை மறு சீரமைப்பு செய்கிறாள். தன் மகன் செய்யும் புரட்சிக் கொலைகளைத் தட்டிக் கேட்பவள். மகனால் ராணுவ விசாரணை செய்து கொல்லப் படும் கன்சர்வேடிவ் கட்சியின் மேயரை மீட்கக் கடைசி வரை போரிடுபவள். வீடு முழுவதும் விருந்தினரால் நிறையவேண்டும் என்று நினைப்பவள். தன் வம்சத்தின் மீதும் மகோண்டா கிராமத்தின்  மீதும் பற்று கொண்டவள். ஒவ்வொரு குடும்பத்தையும் உளுத்துப் போகாமல் காக்கும் சூரிய ஒளியாக ஒரு உர்சுலா இருக்கிறாள் என்று தோன்றுகிறது.

கர்னல் அவ்ரெலியானோ புயின்டியா

ஜோஸ் – உர்சுலாவின் மூத்த மகன். சாதாரண மனிதன் திடீரென புரட்சியாளனாக மாறும் போது அந்த மாற்றத்தின் உண்மையான காரணங்களைக் கண்டறிவது கடினம். மகோண்டாவில் அரசாங்கம் வருவதற்கு முன் எல்லாம் ஒழுங்காகச் சென்று கொண்டிருந்தது. திடீரென அரசாங்கம் வீடுகளை நீல வண்ணத்தில் பூசவேண்டும் என அறிவிக்கிறது. வெண்மைப் பூச்சு தான் செய்வோம் என்றான் ஜோ.

அரசின் மென்மையான இரும்புக் கரங்களை உணர்ந்த அவ்ரெலியானோ திடீரென்று விடுதலைப் படையில் சேர்கிறான். பல கொலைகள், தோல்விகள், வெற்றிகள், காயங்கள்  பட்டு, இறுதியில் சுடப்படும் தருவாயில் பலமுறை தப்புகிறான். ஒரு கட்டத்தில் தான் போர் செய்ததன் காரணம் சுய ஆணவத்தின் நிறைவுக்காகத்தான் என்று உணர்ந்து அமைதி உடன்படிக்கை செய்துகொள்கிறான். அதனால் அவன் சகாக்களுக்கு அதிகத் துன்பம் வருகிறது. துரோகி பட்டம் பெறுகிறான். வீட்டில் தன் பட்டறையில் மீண்டும் சிறிய தங்க மீன்களை உருவாக்கி, உருவாக்கி அழித்து, முடங்கி விடுகிறான். தனக்குத்தானே விளைவித்துக் கொண்ட தனிமையால் பட்டுப் போன மரம் அவ்ரெலியானோ.

ஜோஸ் அர்கேடியோ

உர்சுலாவின் போக்கிரிப்பிள்ளை. மகோண்டாவில் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பல கொடுமைகளை நிகழ்த்துபவன். ரெபாக்கா இவன் மனைவி. சந்தேகத்திற்கு இடமாக மரிக்கிறான். இவனது சாவின் போது ரத்தத்துளி நகர்ந்து வந்துவீட்டை விட்டு வெளிவந்து சாலையில் ஓடி, அன்னை உர்சுலாவிடம் வந்து நிற்கும் இடம் முக்கியமானது. இவனது குழந்தைப் பருவத் ‘தனிமை’ இவனது திருகிய ஆளுமைக்கு வித்தாக உள்ளது. 

அமரந்தா

ஜோஸ் –உர்சுலாவின் மகள். அன்பிற்கும் கோழைத்தனத்திற்கும் இடையே ஊசலாடி உண்மைக் காதல்களை மறுத்து சிலரின் மரணத்திற்கும் துன்பத்திற்கும் காரணமாகி, தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்பவள். இவளது மரணத் தேதியை முன்பே அறிவித்து விடுகிறாள். அதன் பின் நடப்பது அழகிய இருண்மை நகைச்சுவை. ஊர் மக்கள் இறந்து போன தங்கள் உறவினர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று கடிதங்களைக் கொண்டு வந்து அமரந்தாவிடம் கொடுக்கிறார்கள். எப்போது இறப்பாள் என்று பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். பெட்டி நிறைய கடிதங்கள் சேர்ந்து விடுகின்றன. தானே தயாரித்த அழகிய மரண ஆடையை அணிந்து கொள்கிறாள். உர்சுலாவிற்கு தன் மகளை உயிருடனேயே புதைத்து விடுவார்களோ என்று கவலை. பாதிரியாரும் காலம் வருவதற்கு முன்பே ஒருமுறை வந்து பார்த்து விடுகிறார். ஒரு வேளை பொய்சொல்கிறாளோ என்ற ஐயமும் அவருக்கு வருகிறது. கடைசியில் அமரந்தா குறித்த முகூர்த்த்திலேயே மரணிக்கிறாள். 

பெர்னான்டோ

இறுகிப் போன நிறுவன மதத்தின் பிரதிநிதி. தன்னை அரசி என்று நினைத்துக் கொள்பவள். பிணங்களுக்கு வைக்கும் மலர் வளையங்களைச் செய்து கொண்டிருப்பவள். குழந்தைகளை இரக்கமின்றி நடத்தும் ‘நற்குணம்’ கொண்டவள். சாவைக் கொண்டாடுதல், துக்கம் அனுசரிப்பு, இறுதிச் சடங்குகளில் நிபுணத்துவம் இவையே இவளது வாழ்வியல் நோக்கம். பாவத்தின் உருவமாகத் தான் கருதும்  மானுடத்தின் மீது வெறுப்பை அபிடேகம் செய்பவள்.

 படைப்பில் பொதுவான ஒரு போக்கு ஆர்வமூட்டுவது. பாவிகள் என்று  வரையறுக்கப் படுபவர்கள் முதிர்ந்து கனிந்து கருணை கொள்கிறார்கள். வழி தவறியவர்கள் எல்லாம்  முடிவில்  நிறைவடைகிறார்கள். உதாரணம் , சோதிடம் சொல்லும் பிலர் டெர்னாரா. கடைசி வரை வெடிச் சிரிப்புடன் இருப்பவள். செகுண்டாவின் கள்ளக் காதலி பெட்ரா கோட்ஸ்  இன்னொரு சிறந்த உதாரணம்

ரெனடா ரெமெடியோஸ் (மீமி)

அழகின் உருவான மூத்த ரெமெடியோஸ் பெயர் இவளுக்கும் வைக்கப் படுகிறது. பெர்னான்டோ – அவ்ரிலியானோ செகுன்டோவின் மகள். தனது சடங்கு வெறி பிடித்த அன்னைக்கு ஏற்ற வகையில் தனது தனிமையை சமாளித்து வளர்கிறாள். இசைப் பள்ளிக்கு அனுப்பப் படுகிறாள். யாரையும் கேட்காமல்  ஒரு வார விடுமுறைக்கு மூன்று கன்யாஸ்திரிகளையும்     மாணவிகளையும் வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறாள். அதன் பின் வீடு கலவர பூமியாகிறது. கடைசிப் பெண் சாப்பிட்டு முடிந்ததும் அடுத்த வேளை உணவு தொடங்குகிறது கழிவறை போதாத காரணத்தால் சேம்பர் குப்பிகளை வாங்குகிறார்கள். பிறகு அவற்றைக் கழுவுவதற்காக வரிசையில் நிற்கிறார்கள் மாணவிகள். 

மீமி ஒரு கார் மெகானிக்குடன் காதலில் விழுகிறாள். தாய் பெர்னாண்டோ தொலைதூர தேசத்தின் கன்னிமாடத்தில் மகளை அடைத்து வைக்கிறாள். ஒரு குழந்தை பார்சலில் வருகிறது. அதில் வரும் குடும்பத்தின்  ஆறாவது வாரிசான அவ்ரிலியானோவை பாட்டி பெர்னாண்டோ அறையில் அடைத்து ரகசியமாக வளர்க்கிறாள். அவன் புயின்டியா குடும்பத்தின் கல்யாண குணங்களுடனும் துடுக்குடனும் வளர்கிறான். 

பிய்ட்ரோ க்ரெஸ்டா : 

இத்தாலியிருந்து வந்து புயின்டியா குடும்ப்ப் பெண்களுக்கு இசையும் நடனமும்  கற்றுத் தந்து ரெபக்காவிடம் காதலில் விழுந்து அவள் அர்காடியோவை நாடிவிட, அமர்ந்தாவைக் காதலித்து , அவளாலும் புறக்கணிக்கப் பட்டு, ஒரு நல்ல நாளில் தனது இசைக்கூடத்தில் அனைத்து விளக்குகளும் எரிய, அனைத்துக் கருவிகளும் இசைக்க, இயந்திர பொம்மைகள் ஒலிக்க, விரலை அறுத்துக் கொண்டு உயிர் விடுபவன்

காலம்: 

காலமும் மகோண்டா என்ற ஊரும் படைப்பில் முக்கிய உருவகங்கள். காலம் நேர் கோட்டில் நகர்வதில்லை என்று உணர்கிறாள் உர்சுலா. மீண்டும் மீண்டும் ஒரே சம்பவங்கள் சில தலைமுறைகளின் இடைவெளியில் நடக்கின்றன. இதைக் காணும் துயரம் உர்சுலாவிற்கு நடக்கிறது. பேரக் குழந்தைகளுக்கு தாத்தா/ பாட்டி பெயர் வைப்பதில் ஒரு தர்க்கபூர்வ நம்பிக்கை இருக்கிறது. ஒருவரே மீண்டும் வந்து வாழ்வது போல உள்ளது.

வாழைப்பழப் படுகொலை

லத்தின் அமெரிக்க நாடுகளில் முதலாளித்துவ வல்லரசுகள் நடத்திய படுகொலைகளின் வடு இந்த இலக்கியங்களில் வெளிப்படுகிறது யுனைடட் ஃப்ரூட் கம்பெனி தொழிலாளர்களின் போராட்டங்களை பொம்மை அரசின் ராணுவத்தை  வைத்து முறியடிக்க 3000 ஆயுதமற்ற தொழிலாளிகளையும் சுட்டுத் தள்ளிவிட்டு ரயிலில் எடுத்து அழுகிய பழங்கள் போல கடலில் வீசி விடுகிறது. அப்படி ஒரு நிகழ்வு நடக்கவேயில்லை என்று அரசும், ஊடகமும் சாதித்து விடுகின்றன. வாழைப்பழக் குடியரசு என்று ஓ ஹென்றி ஹோன்டுராஸ், குவாடிமாலா நாடுகளை அழைக்கிறார். அந்த்த் துயரை லத்தின் அமெரிக்கப் பிரதிநிதியாக மார்க்வெஸ் வெளிப்படுத்துகிறார்.

பகடிப் பரப்பு

மகோண்டாவில் முதன் முதலில் ஊருக்குள் ரயில் வரும்போது பயந்து ஓடி வந்த பெண் சொல்கிறாள் “ அதோ வருகிறது, அச்சமூட்டும் ஒன்று; ஒரு சமையலறை ஒரு கிராமத்தையே இழுத்து வருவது போல” ( க சீ சிவக்குமாரின் ஆதி மங்கலத்து விசேஷங்கள் நினைவுக்கு வருகிறது)

அவ்ரலியானோ முன்னாள் புரட்சி தளபதி. அவனைப் பார்க்க வருபவர்கள் மரியாதைக்காக வருவதில்லை. ஒரு வரலாற்றுச் சின்னத்தை ஒரு அருங்காட்சியகப் புதைபடிவத்தைக் காணத்தான் வருகிறார்கள் என்பதை அவனே உணர்ந்து கொள்கிறான்.

  1. வீட்டில் இறந்தவர்களின் ஆவிகளும் உயிர் வாழ்பவர்களின் ஆவிகளும் வளைய வந்து கொண்டிருக்கின்றன
  2. அமரந்தா ஆடை நெய்வது தனிமையை வெல்வதற்காக அல்ல; வளர்த்தெடுப்பதற்காக
  3. அறிவியல் பூர்வமான மூட நம்பிக்கை
  4. புனித ஜோசப்பின் சிலைக்குள் பொற்காசுகளைப் புதைத்து விட்டு புரட்சி காலத்தில் யாரோ உர்சுலாவிடம் கொடுத்துச் செல்கிறார்கள். பொற்காச்களைக் கண்டறிந்த்தும் அதைப் புதைத்து விட்டு , வீட்டுக்கு வரும் எல்லா விருந்தினர்களிடமும் ‘நீங்கள் ஒரு சிலையைக் கொடுத்து வைத்துச் சென்றீர்களா” என்று காலம் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கிறாள். கிழவியிடம் எப்படியாவது புதையலின் இடத்தைக் கறந்து விடவேண்டும் என்று பலவகையில் செகுன்டா நோண்டிக் கொண்டிருக்கிறான். போதம் கெட்டு கால உணர்வை இழந்து விட்ட போதும் கடைசி வரை கிழவி சொல்லவில்லை
  5. “துல்லியமான குழப்பம் “ ;” புதிதாய்ப் பிறந்த கிழவி”
  6. காலத்திற்கும் விபத்து ஏற்படலாம். அது கால் தடுக்கி நிரந்தரமான ஒரு துண்டை ஒரு அறையில் விட்டுச் செல்லலாம்
  7. செகுன்டோ இரட்டையர்கள் சிறு வயதில் தங்கள் அடையாளங்களை மாற்றிக் குழப்பி விளையாடுவார்கள். அவர்கள் ஒரே நாளில் இறக்கிறார்கள். குடிபோதையில் இருந்த நண்பர்கள் சரியாக அவர்களை மாற்றிப் புதைத்து விடுகிறார்கள்
  8. அழகிய முரண்  – Hallucinational Lucidity
  9. சுவரில் எழுதப்பட்ட புனிதமான மடமை
  10. கடைசியாக, ஜோஸ் தவறுதலாக ஒரு கருவியை நகர்த்த, அது பொருத்திக் கொண்டு இசை வெளிவந்த்து
  11. சைவ உணவுக்காரர்களிடம் மட்டும் காணப்படும் அந்த விரக்திப் பார்வை
  12. தனது திருமண நாளில் படபடத்து தனது  மோதிரத்தை கீழே போட்டு உருட்டி, காலால் அமுக்கி எடுத்து அசடு வழியும் அவ்ரலியானோ
  13. பெருமிதம் என்னும் படுகுழியில் இருக்கும் மக்கள்
  14. புகழ் என்னும் சாணக்குவியலில் பன்றி போலப் புரளுதல்
  15. கடும் போர்ச்சூழலின் இடையே தந்தியில் விவாதிக்கும் தளபதி “மகோண்டாவில் மழை பெய்கிறது” என்பான்
  16. வாழ்க்கை சேகரித்து வைத்த ஏக்கக் குப்பைகளின் ஒளி இழக்கும் அடுக்குகள்
  17. போலியான, ஈர்க்கும் நற்குணம்

பெண் சண்டைகள்

குடும்பத் தலைவிகள் அக்கம் பக்கத்தில் , வீட்டுக்குள் பூசலிடுவதை ராஜ் கௌதமன் (சிலுவை ராஜ் சரித்திரம்), S K பொற்றேகாட் (ஒரு கிராமத்தின் கதை) ரசித்து வர்ணித்திருப்பார்கள். மார்க்வெஸின் பெர்னாண்டோ தன் கணவனைத் திட்டுவதை மூன்று பக்கங்களுக்கு கவிதை போலப் படைத்திருக்கிறார். 

மீறல் 

புதினமெங்கும்  தடை மீறலின், ஒழுக்க வீழ்ச்சியின் துடிப்பு காணக் கிடைக்கிறது. அறிவின் வளர்ச்சியும் தடைகளை மீறித்தான் வந்திருக்கிறது. உறவுகளின் பொய் ஒழுக்கங்கள் சில நேரங்களில் அதிர்ச்சியை ஊட்டுகின்றன. அரசு – மதம் – கட்டுப் பாட்டிற்கு எதிரான எளிமையான மாற்றாக ஆசிரியர் மீறலை முன்வைக்கிறார்.  லத்தின் அமெரிக்காவின் சுரண்டப்பட்ட இனத்தின் குரலாக மேற்கத்திய உலகைப்  பார்த்து, விக்டோரியன் அறத்தின் பசப்பைப் பார்த்து “போடா” என்று சொல்லும் குரல். இந்த உடைக்கும் விசையை உருண்டை பிடித்து ஒட்டி வைக்கும் பசையாக உர்சுலா தனித்து நிற்கிறாள்>

உருவகங்கள், படிமங்கள்

 மயக்குடன் காட்டப் படும் உருவகங்களாக மஞ்சள் பட்டாம் பூச்சிகள், மஞ்சள் மலர்கள், மரிக்கும் பறவைகள், சதுப்பு நிலங்கள், பழைய எலும்புக்கூடான கப்பல், அறைக்குள் அடுக்கி வைக்கப்பட்ட சாம்பர் குடுவைகள்,  உருக்கி உருக்கி மீண்டும் உருவாக்கும் தங்க மீன்கள், பழைய சுவடிப் பட்டைகள், வீட்டின் அறைகள், கரையான்கள், எறும்பு இழுத்துச் செல்லும்  குழந்தை , கரப்பான்கள், தேள்கள் என்ற மாய உருவக வெளியைக் காண்கிறோம்

மகோன்டா கிராமம் உலகிற்கும் ஜோசின் குடும்பம் மனித இனத்திற்கும் நூறு ஆண்டு வரலாறு காலத்திற்கும் படிமங்களாக உள்ளன.

நூறாண்டுத்தனிமையை ஒரு நீர்த்துப் போன கவிதை என்று ஒரு மேலை விமர்சகர் சொல்கிறார். அதுவே ஒரு சிறந்த பாராட்டுதான். ஒரு கவிதையை நாவலாக இழுப்பதற்கு அதன் காதுகளை இழுக்க வேண்டும். அதற்கு மாய யதார்த்தம் நல்ல வடிவம்.

இத்தாலியிலிருந்து வந்த இசைக்கருவையை ஜோஸ் பிரித்து மேய்ந்து கெடுத்து விடுகிறான். வாழ்வெனும் இசைக்கருவியை ரசிக்காமல் அழித்து விடும் முட்டாள் தனம் தான் தனிமைப் படுதல். தனிமையின் இசையை மீறலின் துடுக்குடன் உரக்க ஒலிக்கும் பழங்குடியின் குரல் நூறாண்டுத் தனிமை.  

***

ஆர் ராகவேந்திரன்