எட்டிக்கசப்பில் எஞ்சும் துளித் தேன் – காளீஸ்வரன்

எழுத்தாளர் சு.வேணுகோபால் கருத்தரங்கில் ‘வெண்ணிலை’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட சிற்றுரை

சமீபகாலமாக அடிக்கடி ஒரு காணொளியைக் காண நேர்கிறது. தின்பண்ட பாக்கெட்டுகளால் நிரம்பியுள்ள ஒரு பெரிய இடத்தில், கிரேன் போன்ற அமைப்பின் உதவியுடன் ஒரு மனிதன் உள்ளிறக்கப்பட்டு, சில நிமிட இடைவெளியில் மீண்டும் வெளியெடுக்கப்படுகிறான். கிடைத்த சில நிமிட அவகாசத்தில், தன்னால் இயன்ற அளவுக்கு தின்பண்டங்களைத் திறனுக்கேற்ப சேகரித்துக் கொள்ளலாம். மலை போல குவிந்திருப்பினும், எடுத்து வரக்கூடிய அளவென்பது அவனது திறனைப் பொருத்தது மட்டுமே. மொத்தம் 23 சிறுகதைகள் கொண்ட வெண்ணிலை எனும் இத்தொகுப்பைப் பற்றிய என்னுடைய வாசிப்பனுபவமும் மேற்ச்சொன்ன சம்பவத்துக்கு இணையானதே.

தொகுப்பின் பெரும்பாலான கதைகள், மாறிவரும் காலசூழலினால் விவசாய சூழலில் ஏற்படும் மாறுதல்களைப், அதனூடே மனித மனதின் இருமையை, வாழ்க்கைப்பாடுகளை. எதையுமே செய்யவியலாத கையறு நிலையை, உறவுச்சிக்கல்களை இவை எல்லாவற்றுக்கும் மேலாக மானுடத்தின் மேன்மை வெளிப்படும் தருணங்களை, துளிர்விடும் சிறு நம்பிக்கையின் ஒளிக்கீற்றை பேசுபவை. 

ஒரு நிலப்பரப்பின் தன்மை, நிலவும் தட்பவெப்ப சூழல், வாழ்க்கைமுறை அதில் வாழும் மனிதர்களின் குணாதிசயத்தில் கொஞ்சம் செல்வாக்கு செலுத்தக்கூடும். செழிப்பான காலகட்டத்தில் நாமே மறந்துபோன நம் மனதின் இருண்ட பகுதியை (Grayness) வறுமை வெகு சுலபத்தில் வெளிக்கொண்டுவந்துவிடும். ஓரிரு கதைகள் தவிர எல்லாக் கதைகளுமே தென் தமிழக, குறிப்பாக மதுரை, போடியைச் சுற்றியுள்ள விவசாய கிராமங்களைக் களமாகக் கொண்டவை. போலவே வறண்டு போன பூமியை அதன் வாழ்வைச் சித்தரிப்பவை. குறிப்பாக சில கதைகளின் மையப்பொருளாகவே அவை அமைந்துள்ளன.

தொகுப்பின் முதல் கதையான உயிர்ச்சுனை, மறுபோர் ஓட்டியும், நீர் கிடைக்கப்பெறாத கண்ணப்பரின் ஆற்றாமையைப் பேசுகிறது. கோக கோலா குளிர்பான நிறுவனம் சுற்றுவட்டார வேளாண் நிலங்களின் நீரையும் உறிஞ்சிக்கொண்ட கயமை கூறப்பட்டாலும், கண்ணப்பரின் பேரன் நிதின் குறித்த விவரணைகள், மறைமுகமாக அவனது பங்கு நீரும் சேர்ந்தே களவுபோயிருக்கும் வலியைச் சொல்கின்றன. முதல் மகளிடம் தான் பட்டிருக்கும் கடன், இரண்டாம் மகளின் திருமணம் இவை எல்லாவற்றையும் தாண்டி கண்ணப்பர் “எம் பேரன்” எனச்சொல்லி உடையும் இடம் இக்கதைக்கு இன்னொரு பரிமாணத்தைக் கொடுக்கிறது.

இத்தொகுப்பின் ஆகச்சிறந்த கதைகளுல் ஒன்றான புத்துயிர்ப்பு வறட்சி நேரடியாக சம்சாரியின் வாழ்க்கையில் நிகழ்த்தும் அவலங்களைப் பேசுகிறது.  நல்லவனாகவும் திறமைசாலியாகவும் அறியப்பட்ட கோபால் வீட்டில் இரு நிறைமாத கர்ப்பிணிகள். ஒன்று அவன் மனைவி சாந்தா. இன்னொருவள் அவன் மகளைப் போலக் கருதும் பசுமாடு லட்சுமி. காடு மலை என எங்கு அலைந்தாலும் தீவனம் கிடைக்காத சூழலிலும் மாட்டை விற்க மறுக்கும் கோபால், தன் மனைவியின் வளையல்களை அடமானம் வைத்து பணம் புரட்டிய போதும் எங்கும் தீவனம் வாங்க முடியாமல் போகிறது. வேறுவழியில்லாமல் பக்கத்து வீட்டு ராமசாமி கவுடரின் தொழுவத்திலிருந்து சில கட்டு தீவனங்களைத் திருடும்போது அவர்களிடம் சிக்கிக்கொள்கிறான். அடுத்த நாள் நடக்கவிருக்கும் அவமானமும், எதுவுமே செய்யவியலாத கையறு நிலையும் அவனை தற்கொலை நோக்கித் தள்ளுகின்றன. பணம் புரட்ட முடிந்த பின்னரும் தீவனம் கிடைக்காத கொடுமையை இக்கதை பேசுகிறது. இதைப் போலவே, மெய்பொருள்காண்பதுஅறிவு கதையில், பரமசிவம் வேளாண் கூலி வேலையினால் படும் பாடு வறட்சியின் கோரத்தைச் சுட்டுகிறது.

தன் கதைகளில் திரு.சு.வே. கட்டமைக்கும் பாத்திரங்கள் வலுவான நம்பகத்தன்மை கொண்டிருக்கின்றன. வெகுசுலபமாக நாம் பார்த்திருக்கக்கூடிய ஒரு விவசாயக்கூலியை, வயதான பாட்டியை, தனித்திருக்கும் மாணவனை நம் நினைவில் மீட்டெடுக்க உதவும் வலுவான சித்தரிப்புகள் ஒவ்வொன்றும்.

கூருகெட்டவன் கதையின் உடையாளியும், வயிற்றுப்புருசன் கதையின் பொம்மையாவும் இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்தவர்கள். இருவருமே ஊருக்கென நேர்ந்துவிடப்பட்டவர்கள். ஆனால், உடையாளிக்கு ஒரு குடும்பமும், தான் ஏய்க்கப்படுவது பற்றிய பிரக்ஞையும் இருக்கிறது. ஆனால் அதுவும் அற்றவன் பொம்மையா. அவனைப் பொருத்தமட்டில் அது அவன் ஊர், அவ்வூரின் தோட்டமோ வெள்ளாமையோ எதுவாகிலும் அது அவன் பொறுப்பு. கதையில், பொம்மையா மனம் உடைந்து கண்ணீர் விடுவது ”நீ யாரு?” எனக் கேட்கப்பட்ட பதில் தெரியாத கேள்வியால் மட்டுமே. அதைத் தவிர வேறெந்த வசவுகளும், பேச்சுகளும் அவனைத் தீண்டுவதேயில்லை. மாறாக, உடையாளி தன் மனைவியுடன் ஜெயக்கிருஷ்ணன் கொண்டிருக்கும் உறவினால் பெரிதும் பாதிக்கப்படுகிறான். அடுத்த நாள் அதைக் கடக்கும் மனதோ அல்லது சூழலோ மட்டுமே அவனுக்கு வாய்த்திருக்கிறது. ஒருவகையில் இவ்விருவருக்கும் இடையே நிற்கும் கதாப்பாத்திரமாக திரு. நாஞ்சில் நாடன் அவர்களின் எடலக்குடி ராசாவைச் சொல்லலாம்.

தொகுப்பின் பெரும்பாலான பெண்கள் தாய்மையின் குறியீடாகவே இருக்கிறார்கள். விதிவிலக்கான ஒருவர் பேரிளம்பெண் கதையின் ஈஸ்வரி. கர்ப்பிணியான தன்னுடைய மகள் வீட்டில் இருக்கும்போது, ஈஸ்வரி ஒரு சீர் வீட்டுக்குச் செல்கிறாள். அவ்விசேஷ வீட்டில் அனைவரையும் ஈர்க்கும்படியான ஆடை அலங்காரங்கள், பாவனைகளை மேற்கொள்கிறாள். அதன் தொடர்ச்சியை மண்டபத்திலும் நிகழ்த்தும் ஆசைக்கு ஒரு தடை வருகையில், அந்தத் தடையின் வலியைக் காட்டிலும் பொய்த்துப்போன தன் ஆசை ஈஸ்வரிக்கு துன்பமளிக்கிறது. இதே இடத்தில் ஒரு ஆண் இருப்பின் அவன் சந்திக்க வேண்டியிராத சங்கடங்கள் இவை எனும்போது ஈஸ்வரியின் மீது கொஞ்சம் பரிவு எழுகிறது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவன் வெளிக்காட்ட விரும்பாத அல்லது அவனுக்கே தெரியாத ஒரு முகம் இருக்கும். அதை இக்கட்டான ஒரு சந்தர்ப்பம் எளிதில் வெளியே கொண்டுவந்துவிடும். அப்படி சந்தர்ப்பங்கள் மனிதனை தங்கள் கையில் எடுத்துக்கொள்ளும் கதைகளும், சந்தர்ப்பங்களின் இக்கட்டுகளால் நேரும் உறவுச் சிக்கல்களின் பரிமாணங்களும் இத்தொகுப்பில் உண்டு.

சந்தர்ப்பம் கதையில் இரண்டு விதமான மாணவர்கள் காட்டப்படுகின்றனர். துவக்கம் முதலே கெத்தாக வளையவரும் ஜீவா, நண்பர்களால் புள்ளப்பூச்சி என்றழைக்கப்படும் கதிரேசன். நீச்சல் தெரியாத ஜீவா, படிக்கட்டுகளைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் மிதப்பதும், பேருத்து நிலையத்தில் ஒரு பெண்ணின் மானம் பங்கப்படும்போது கதிரேசன் முதல் எதிர்ப்பைக் காட்டுவதும் இயல்பில் வெளிப்படும் அவர்களின் குணாதிசயத்தின் நேரெதிர் நிலையாகும்.

தங்கைகளுக்காக தன் வாழ்வை அழித்துக்கொண்ட அண்ணன் அவனது தங்கைகளால் தெய்வமாகவே மதிக்கப்படுகிறான். ஒவ்வொரு தங்கைக்கும் திருமணம் முடித்துவைக்கும் அண்ணன் தன் திருமணத்தைப் பற்றிய எண்ணமே இல்லாதிருக்கிறான். இறுதியாய் மிஞ்சும் தங்கையிடம் மூத்தவர்கள் திரும்பத்திரும்பச் சொல்லும் வாக்கியம் அண்ணனை நல்லாப் பாத்துக்க என்பதாகவே இருக்கிறது. நள்ளிரவு சீண்டலில் விழிக்கும் தங்கையை நோக்கி அண்ணன் கேட்கும் ”அக்கா அவுங்க ஒண்ணும் சொல்லலியா?” எனும் கேள்வியில் முடிகிறது கதை. இப்படி சரி / தவறு, முறை / பிறழ்வு எனும் இருமைகளுக்குள் அடக்கிவிட முடியாத கோணங்களைக் கொண்ட கதை உள்ளிருந்துஉடற்றும்பசி.

உறவுச்சிக்கல்களின் இன்னொரு எல்லையில் நிற்கும் கதை கொடிகொம்பு. கணவன் விஜயன், ஒரு குடிகாரன். காமம் மட்டுமல்ல காதலும் அவனிடமிருந்து மறுக்கப்படும் மனைவி வாணி. ஆறுதல் கொள்ள ஏதுமற்ற உறவே வாணியை மாற்றம் தேட வைக்கிறது. ஒன்றுவிட்ட கொழுந்தனார் பாஸ்கர் மீதான அவளது ஈர்ப்பு, “ஹேமாச் சிறுக்கியால்” தடைபடுகிறது. இந்த வயதிலும் ஒயில் கும்மியில் இளவட்டங்களுக்கு சரிக்கு சரியாய் நின்று விளையாடும் மாமனார் பொன்னய்யா, அவரை ரசிக்கும் கனகத்தின் மீது வாணி கொள்ளும் எரிச்சல், என கொஞ்சம் கொஞ்சமாய் தனக்கான மாற்றுப்பாதையைக் கண்டடையும் வாணி தன் ஆசையை வெளிப்படுத்தும் விதம் மிக அருமையாகக் கையாளப்பட்டுள்ளது.  

இவ்விரு கதைகளும், கையாளும் பிரச்சனையின் தீவிரம் உறைக்காத வண்ணம் அடங்கிய குரலில் வெறுமனே சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனாலும், பாத்திரங்களின் செயலுக்கான நியாயம் மிக வலுவாக வெளிப்பட்டிருக்கும் கதைகள் இவை. ஆண்-பெண் உறவுகளுக்குள் இயல்பாக நிகழும் சிக்கல்கள் கிடந்தகோலம் கதையிலும், பெண்களுக்கு இந்த சமூகத்தில் இருக்கும் இடம் புற்று கதையிலும் சொல்லப்பட்டிருக்கின்ற போதிலும் என் மனதில் ஆழ்ந்த பாதிப்பை இக்கதைகள் உருவாக்கவில்லை.   

இத்தனை சிக்கல்களை, வறட்சியை, மனித மனதின் இருமைகளை, வாழ்க்கை நம்மைக் கொண்டு நிறுத்தும் கையறு நிலையை இக்கதைகள் பேசினாலும், வெண்ணிலை எனும் இத்தொகுப்பை மிகமுக்கியமான ஒன்றென நான் கருதும் அம்சம், இத்தொகுப்பின் கதைகள் வாயிலாக திரு. சு.வே. நமக்குக் காட்டும் மானுடத்தின் சின்ன ஒளிக்கீற்று, போலவே வாழ்க்கை மீது சிறு நம்பிக்கை கொள்வதற்கான சாத்தியக்கூறுகள்.

உதாரணமாக, புத்துயிர்ப்பு கதையில் மிகக்கொடும் வறட்சியினால் தற்கொலைக்கு முயற்சிக்கும் கோபால் பிழைக்க இருக்கும் சிறு வாய்ப்பையும், பசியால் தவிக்கும் அவனது பசு லட்சுமிக்கு, கனகராஜின் அம்மா மூலம், குறைந்தபட்சம் அன்றைக்காவது கிடைத்த தீவனத்தையும் சொல்லமுடியும். ஆனால், வாழ்வின் மீதான் நம்பிக்கையின் ஓர் உச்ச தருணம் கோபாலின் மனைவிக்கு பிறக்கும் பெண்குழந்தையை வறட்சியால் தவிக்கும் அக்கிராமமக்கள் “வான் பொழிய மண் செழிக்க வாழையடி வாழையென வந்தது குழந்தை” என வரவேற்பது. இம்முடிவு தரும் மன எழுச்சி அதற்கு முந்தைய கணங்களின் துயரங்களை கடக்கச்செய்வது. தனிப்பட்டமுறையில் எவரையும் தெரியாத நகரத்துக்கு வந்த சில மாதங்களிலேயே, தன் தகப்பனின் மரணத்தை எதிர்கொள்ளும் இளம்பெண்ணுக்கும் ஏதோவொரு ரூபத்தில் மானுடத்தின் கடைப்பார்வை கிடைப்பதற்கான சாத்தியத்தைப் பேசுகிறது வெண்ணிலை கதை. 

இவ்வகைக்கதைகளின் இன்னுமோர் உச்சம் என சொல்லத்தக்க கதை அவதாரம்”. உடல் குறைபாடுள்ள குழந்தையை அவமானத்தின் சின்னமாகக் கருதும் நாகரீகத்துக்கு எதிரிடையாக, அதைபோன்றதொரு குழந்தையை குலதெய்வமென கொண்டாடும் காடர்களைக் காட்டுகிறது இக்கதை. அதன் நீட்சியாக, உப்புச்சப்பில்லாத பிணக்குகளை மறந்து கர்ப்பவதியான தன் மனைவியின் வயிற்றை முத்தமிட என்னும் கணவனின் மனதில் ஏற்படும் மாற்றத்தில் அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்துவிடக்கூடும். 

இறுதியாக, இத்தொகுப்பில் இருந்து நான் எடுத்துக்கொள்வதென்ன எனும் வினாவுக்கு நிரூபணம்கதையிலிருந்து விடை சொல்லமுடியும். தன் மகன் எபி நன்றாகப் படிக்கவேண்டும் என தேவாலயத்துக்கு அழைத்துப்போகிறாள் கிறிஸ்டி. பிராத்தனையில் லயித்திருக்கும் அன்னையிடமிருந்து நழுவி காணிக்கைப் பணத்துக்கு பிஸ்கட் வாங்கி பிச்சைக்காரனுக்குத் தருகிறான் எபி. யாரும் சுலபத்தில் கண்டுகொள்ளமுடியாத மறைவான இடத்தில் இருக்கும் அப்பிச்சைக்காரன் இரு சொற்றொடர்களை ஆங்கிலத்தில் கூறுவான். இரண்டாவது சொற்றொடர் “He Lives with Children”. அவன் கூறும் முதல் சொற்றொடர் நமக்கானது, “Jesus Christ never fails to feed His followers”.

 நன்றி!

வாழ்வெனும் மாயப் புரவி – விக்ரம்

‘களவு போகும் புரவிகள்’ சிறுகதைத் தொகுப்பு குறித்து சொல்முகம் – சு. வேணுகோபால் கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட சிற்றுரை.

நம் அன்றாட வாழ்வில் சற்று அறிந்திருக்கக் கூடிய, கேள்விப்பட்டிருக்கக் கூடிய, மேலோட்டமாக கவனித்திருக்கக் கூடிய அல்லது நம் தீவிர கவனத்தை ஈர்த்திருக்கக் கூடிய மனிதர்கள் என பலதரப்பட்டவர்களை தன் பாத்திரங்களாக உள்ளடக்கியது சு. வேணுகோபால் அவர்களின் களவு போகும் புரவிகள் சிறுகதைத் தொகுப்பு.  அப்பாத்திரங்களில் சிலராக நம்மை நாம் உணரவும் கூடும்.  தன் குழந்தையை தெருவில் மற்ற சிறுவர் சிறுமியரோடு விளையாடக்கூடாது என்று சொல்லும் அம்மா, பூங்காவில் பேருந்து நிலையங்களில் அல்லது வேறு எங்கேனும் தன் வாடிக்கையாளரை கண்டுகொள்ளும் விலைமகள், போதைப் பொருளுக்கு அடிமையாகி வேறொன்றாகி விட்ட இளைஞன், என்ன ஆனபோதும் விடாப்பிடியாக விவசாயத்தைக் காதலிக்கும் விவசாயி, மக்களிடம் எரிச்சல்படுகிற அல்லது சிரித்துக் கொண்டே தம் சக ஊழியர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே வேலை பார்க்கும் வங்கி ஊழியர்கள், காதல் திருமணம் செய்து உறவினர் தொடர்புகள் இன்றி தனித்து வாழும் இளம் தம்பதியர், காவலரின் கடுமையை எதிர்கொள்ளும் எளியவர், செம்பட்டைத் தலையுடன்  கிழிந்த அழுக்கு உடையுடன் காலில் பாலிதீன் கவர்களை செருப்பாக கட்டிக்கொண்டு கடும் வெயிலில் தனக்குத்தானே பேசிக்கொண்டு செல்லும் மனநலம் பாதிக்கப்பட பெண், உங்களுக்கு குத்துமதிப்பாக வைத்தியம் செய்யக்கூடிய பெயர் தெரிந்த டாக்டர், மனிதர்கள் மட்டுமல்ல நீங்கள் பார்த்திருக்கக் கூடிய பெரிய வேப்ப மரம், கால்நடைகள்,  என இத்தொகுப்பின் கதாபாத்திரங்கள் வெவ்வேறு வகையினர்.  வெவ்வேறு வகையினர் எனினும் அவர்களில் பலருக்கும் பொதுவான ஒரு ஒற்றுமையை உணர்த்துகிறது களவு போகும் புரவிகள்.  அவர்கள் தங்கள் புரவிகளை வாழ்வின் மாயங்களுக்கு பறிகொடுத்தவர்கள்.  தம் உண்மையுடனும் தீவிரத்துடனும் மட்டுமல்லாமல் இக்கதைகள் நடையிலும் கூட தேவைக்கு ஏற்ப புரவியைப் போலேவே செல்கின்றன என்று தோன்றுகிறது.

களவு போகும் புரவி கதையில் சௌடம்மன் கோவில் திருவிழாவையொட்டிய ஒரு தொன்மைக் கதை கூறப்படுகிறது.  அரச குதிரை லாய அதிகாரியான கதிரய்யாவிடம் தன் குதிரையை இளைப்பாற்றிக் கொள்ள  ஒருநாள் மட்டும் இடம் கேட்டு வருகிறான் யதுசா என்ற அந்நியன்.  அவன் குதிரைக்கு லாயத்தில் இடம் மறுக்கும் கதிரய்யா தன் எஜமானருக்கு இருக்கும் வழக்கம் ஒன்றைச் சொல்கிறார்.  லாயத்தின் நான்கு மூலைகளிலும் அமைந்திருக்கும் மேடைகளில் எந்த ஒன்றில் ஏறிநின்று பார்த்தாலும் அவர் கண்களுக்கு பன்னிரண்டு குதிரைகள் தெரிய வேண்டும்.  அவ்வாறே தான் வைத்திருப்பதாகச் சொல்கிறார் கதிரய்யா. யதுசா அதைப் பற்றி தான் பார்த்துக் கொள்வதாக கூறுகிறான்.  அவனது மரியாதையான பேச்சிற்காகவும் அவன் தரும் சன்மானத்திற்காகவும் அவன் மீது தோன்றும் பரிவினாலும் அவனது குதிரையை லாயத்தில் இருத்திக்கொள்ள அனுமதி அளிக்கிறார் கதிரய்யா.  தன் குதிரையை லாயத்தில் சேர்க்கும் அவன் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் பன்னிரண்டு குதிரைகள் கண்ணில் தெரியும்படி அமைக்கிறான்.  அவன் மாயவித்தைகளை அறிந்தவனாக இருக்கிறான்.  பின்னர் மலைப்பாதையில் திரும்பிச் செல்லும் யதுசா எட்டு குதிரைகளை கொண்டு செல்கிறான் யதுசா.  கெஞ்சும் கதிரய்யாவிடம் லாயத்தில் சென்று மூலை மேடைகளில் நின்று பார்த்து விட்டு வரச்சொல்கிறான்  அதுவரை தான் காத்திருப்பதாக சொல்கிறான்.  கதிரய்யா சென்று ஒவ்வொரு மூலையில் இருந்தும் பார்க்க பன்னிரண்டு குதிரைகள் தெரிகின்றன.  யதுசாவிடம் சென்று தெரிவிக்கும், அஞ்சும்  கதிரய்யாவிடம் தன் பையிலிருந்து வெள்ளிக் காசுகளை அள்ளி வீசிச் செல்கிறான் யதுசா.  நரிதனை பரியாக்கி தன் அடியவனைக் காத்தருளும் பொருட்டு ஆணவம் நீங்கும் பொருட்டு இறைவன் செய்தது போன்றதல்ல இம்மாயம்.   இடமளித்தவனை, அவன் பலகீனங்களைக் கொண்டு கொள்ளையடித்த அந்நியன் செய்த மாயம்.  

இத்தொகுப்பின் சில கதைகளிலும் அவற்றின் மையக் கதைமாந்தர்களுக்கேயான புரவிகளை மாயம் காட்டி பறித்து செல்ல அவர்களுக்கேயான யதுசா இருக்கிறார்.  அந்த யதுசா ஒவ்வொருவருக்கும் தனி ஒருவனாக அல்லது சில நபர்களாக, உறவுகளாக, தனிப்பட்ட சூழ்நிலைகளாக, தன் முனைப்பாக, சமூக பொருளாதார காரணிகளாக, மொத்தமாக வாழ்வின் மாயமாக இருக்கிறான்.  அவர்கள் பறிகொடுத்த புரவிகள் எங்கோ இருக்கின்றன அல்லது அவர்களுக்கு இறந்துவிட்ட அவை அவர்களது நினைவில் மட்டும் வாழ்கின்றன.  அம்மாவின் விருப்பங்கள் சிறுகதையில் வரும் நவீன் என்ற சிறுவனுக்கு அவன் தன் நண்பர்களுடன் தெருவில் விளையாடும் இன்பத்தைப் பறித்து பொம்மைகள் நிறைத்து வீட்டிலே விளையாடச் சொல்கிறாள் அவன் அம்மா.  அவள்தான் அவனது யதுசா.

மண்ணைத் தின்றவன் கதையில் விவசாயத்தை பெரும் காதலுடன் மேற்கொள்ளும் அதன் நாயகனுக்கு விவசாயம் செய்பவர்களை பெரும்பாலும் நட்டமடையவே செய்யும், இங்குள்ள பொருளியல் சிஸ்டம் யாதுசாவகிறது.  மண்தான் காரணம் என்று அபாண்டம் கூற எனக்கு விருப்பமில்லை.  காரணம் அவன் மண்ணை நேசிப்பதை, விளையும் வெங்காயத் தாள்களை அவன் முத்தமிடுவதை, அவன் காதலை ஆசிரியர் கூறும் விதம் – அவன் படும் பாடுகள் – இடும் உரங்கள், மருந்துகள். பயிரிடும் நுணுக்கங்கள் என விவரிப்பு  எக்காரணம் முன்னிட்டும் மண்ணைப் பழிக்கக் கூடாது என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.  அவன் விவசாய வெற்றிக் கனவுகள் உண்மையில் மாயப் புரவிகளாகி காற்றில் மறைகின்றன.

உருமாற்றம் கதையின் நாயகர் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி.  அந்நாளின் நாட்டுப்பற்றின் அசலான ஒரு மனிதர்.  சில ஆண்டுகள் சிறையில் கழித்தவர்.  காமராசரின் அணுக்கம் பெற்றவர்.  சுத்திரத்தின் பின் வழங்கப்பட்ட தியாகிகளுக்கான சலுகைகைள் அனைத்தையும் மறுத்தவர்.  வயதானபோது  காலத்தின் சூழலின் மாற்றங்களை வெளியே நாட்டின் அரசியலிலும் குடும்பத்தில் மகன் மருமகள் பேரன் பேத்தி என அடுத்த தலைமுறைகளிலும் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பவர்.  அவரது லட்சியங்கள் கடந்த காலத்தவை ஆகிவிட்டன.  அவர்களது ஆர்வங்களும் ஆசைகளும் வேறு.  அவரது நீலவாணன் என்ற பேரன் தன் பெயரை ஸ்டயிலாக இருக்க வேண்டும் என்று ஆகாஷ் என்று மாற்றிக் கொள்கிறான்.  சினிமாவில் சேர்ந்துவிட ஆர்வம் கொண்டிருக்கிறான்.  பேத்தி ஆங்கில உச்சரிப்பு சரியில்லை என்று தன்னை பெண்பார்க்க வரும் பையனை நிராகரிக்கும் அளவிற்கு ஆங்கிலத்தின் மீது அக்கறை கொண்டவளாக இருக்கிறாள்.  அவர் எந்த கட்சியில் இருந்து நாட்டு விடுதலைக்கு பாடுபாட்டாரோ அதே கட்சி அவருக்கு உவப்பில்லாத உலகமயமாக்கலைச் செய்கிறது.  மனத் தவிப்பும் குழப்பமும் என அவர் நாட்கள் செல்கின்றன.  அவர் சுந்தரதினத்தில் தியாகி என்ற முறையில் தொலைகாட்சிக்காக நேர்காணல் செய்யப்படுகிறார்.  அதன் வாயிலாக ஒரு பிரபல சினிமா இயக்குனரின் அறிமுகத்தையும் நன்மதிப்பையும் அவர் பெற நேர்கிறது.  அவரை  அந்த  இயக்குனர் விருந்துக்கு அழைக்கிறார்.  விருந்து முடிந்து புறப்படும் சமயம் ஒரு உதவி வேண்டும் என்று கேட்க, ஆர்வமுடன் முன்வரும் இயக்குனரிடம் அவர் தன் பேரனுக்காக சினிமா வாய்ப்பு கேட்க, இயக்குனரின் முகம் மாறுபடுகிறது.  பல ஆண்டுகளின் லட்சியவாதத்தின், தன்னல மறுப்பின் அவரது புரவியை காலமாற்றத்தின் மாயம் என்னும் யதுசா களவாடிச் செல்கிறது.

போலவே ‘சங்கிலி’ என்னும் கதை அதன் நாயகன் தன் தந்தையின் அதிக பவுன் வேண்டும் என்ற ஆசையால் காலதாமதமான திருமணத்தால் தன் சிற்றின்பத்தை அதற்கான வயதைத் தொலைக்கிறான்.  வட்டத்திற்குள்ளே என்ற கதையின் நாயகி சுரண்டல் புத்தியும் அற்பத்தனமும் கொண்ட அவள் கணவனால் அவள் கைத்திறன் கலைத்திறன் வெளிப்படும் வேலையை கூடுதல் சம்பளத்திற்காக விடுகிறாள்.  அலைச்சலும் சுவாரஸ்யம் இல்லாததுமான வேலைக்கு செல்கிறாள்.  தன் மட்டமான இரக்க மற்ற கணவனையும் வேலையையும் சகித்துத் கொண்டு தன் பழைய வேலையை எண்ணி ஏக்கம் கொள்கிறாள்.  சாப நினைவுகள் கதையின் நாயகி மனநலம் பாதிக்கப்பட்டவளாக எச்சில் இலைகளின் உணவைதின்று தனக்குத்தானே  ஓயாது பேசி சுற்றித் திரியும் ஒரு பெண்.  அவள் மிகவும் திறமையான ஒரு, முன்னாள்  ஆராய்ச்சி படிப்பு மாணவி.  அவளது கல்லூரி நண்பர்கள் அதிர்ச்சியுடன் அவளை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.  ஒரு நண்பனின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்கள்.  பின் அவளது வீட்டை அவளது உறவினரை கண்டுபிடிக்க முடியாமல் மனநல காப்பகத்திற்கு அனுப்புகிறார்கள்.  புத்திசாலி மாணவியான அவளது  எதிர்காலத்தை களவாடியது யார்? அது சொல்லப்படவில்லை யாரோ சிலர் அல்லது அவளது குடும்ப சூழல் அல்லது அவளது தன்னைப்பற்றி எவரிடமும் சொல்லாத தன்முனைப்பு.  

‘மாயக்கல்’ கதை பன்றி வளர்க்கும் மூக்கம்மாவை அவளது மகன் பெத்தண்ணணை போலீசால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் அவர்கள் துயரைச் சொல்கிறது.  தற்கொலை செய்துகொள்ளும் பெத்தண்ணணை மாயக்கல்லாக அவளின் கற்பனைக்குத் தருகிறது. அவன் ஒரு தொன்மமாக அநீதி அழிக்கும் தெய்வமாக எழக்கூடும்.  அது அவளது விருப்பமும்  கூட.  எளிய மக்களின் அன்றாட வாழ்வையும் அபகரித்துச் செல்லும்  ஈவிரக்கமற்றதன்மை எவ்வாறு தோன்றுகிறது.   வேம்பு கதை பேடண்ட் ரைட் மூலமாக வெளிநாடு கவர்ந்து கொள்ளும் உள்ளூர் மக்களின் உரிமையை மெல்லிய அங்கதத்துடன் பேசுகிறது.  அமெரிக்கா இந்தியாவை ஐநா மூலமாக நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுகிறது.  சிறிய அந்த கிராமத்திற்கு தன் அதிகாரிகளை அனுப்புகிறது.

வேம்பு – கீழாநெல்லி மட்டுமல்ல வேறு பலவும் இருக்கலாம்.  யோகாசனங்களும் மூச்சுப் பயிற்சியும் வேறு பெயரில் வெளிநாட்டு பிராண்ட் ஆகலாம்.  இந்தியர்களுக்கு தங்களுக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லத் தெரியவில்லை என்று பழைய பேச்சு ஓன்று உண்டு.  இன்று  இந்தியர்களுக்கு தங்களை உரியமுறையில் உலக சந்தைப்படுத்திக்கொள்ள இன்னும் தெரியவில்லை என்று சொல்லத் தோன்றுகிறது.  

‘வெகுதூரம் விலகி’ ஒரு டாக்டரின் கதையை சுவாரஸ்யமாக சொல்கிறது.  அவர் தன்னளவில் எதையும் தொலைக்கவில்லை.  ஆனால் அக்கதை நாம் அனைவருக்கும் தொலைத்து வெகுதூரம் விலகி வந்துவிட்ட  நமது பழங்குடி மருத்துவ முறைகளைச் சொல்கிறது.  வெற்றிகரமான நமது பூர்விக மருத்துவத்தின் செல்வங்களை இழந்து மூர்க்கமாக திணித்துக் கொண்டுவிட்ட ஆங்கில மருத்துவத்தை – அதன் பேரில் நிறுவப்பட்ட சுரண்டலை சுட்டிக் காண்பிக்கிறது.  அதே சமயம், எளிய பொருளைப் பெற்றுக்கொண்டு அரிய தொண்டினைச் செய்யும் அந்த மலைக்குடி மருத்துவர் மனம் கவர்கிறார்.  இந்த சிறுகதைத் தொகுப்பின் எல்லாக் கதைகளிலும் என் ரசனையின் அடிப்படையில் சொல்வதென்றால் வெகுதூரம் விலகி சிறுகதையைச் சொல்வேன்.  சரி எல்லா கதைகளுமே ஏதோவொரு வகையில் புரவிகளைத் தொலைத்தவர்களுடையது தானா என்றால் அப்படியில்லை. 

இங்கு வேறு இரண்டு அம்சங்களையும் குறிப்பிட வேண்டும்.  மாயமும் நகைச்சுவை உணர்வும்.  தருணம் கதையில் வரும் கஞ்சா அடிமையாகி கோமாவில் இரண்டாண்டுகள் கழிக்கும் இளைஞன் கோமாவில் இருந்து வெளிவந்த பின் தன் அனுபவத்தில் காலத்தின் இரண்டு பக்கங்களில் எட்டிப்பார்க்கிறான் எதிர்காலத்தில் நடக்க இருப்பவற்றின் ஒத்த நிகழ்வுகளை நிகழ்காலத்தில் காண்கிறான்.  பின் ஊரில் மதக்கலவரம் நடந்து கொண்டு இருக்கும் சூழலில் நூற்றாண்டுகள் முந்தைய நிகழ்வுகளில் தன்னைக் காண்கிறான்.  வேம்பு கதையின் வைடூரிய வண்டு தன் அழகின் மாயத்தால் மண்ணை விண்ணுலகுடன் பிணைக்கிறது.

‘உடம்பு’ கதையில் ஜெர்மன் ஊசியால் வயிற்றுக்குள்ளேயே பெரிதாக வளர்ந்துவிட்ட கன்றை பிரசவிக்க முடியாமல் வலியால் துடிக்கும் பசுவை – அதன் வயிற்றிலேயே இறந்துவிடும் கன்றின் காலில் கயிறு கட்டி இழுத்து எடுக்கப்படும் காட்சியை.  அப்பசுவின் வேதனையை வாசிப்பவர்கள் பதறும் விதத்தில் சொல்லும் ஆசிரியர் சங்கிலி கதையில் – அப்பாவின் பொன் ஆசையால் தன் வயதைத் தொலைத்த கதைநாயகன் -அவன் சோகத்திற்குள் அங்கத்ததை இழையோடவிட்டிருக்கிறார்.  கதை முதலிரவின் முயக்கத்தில் தொடங்குகிறது.  தன் தோல்விகரமான அந்த முயக்கத்தின் சோகத்துடன்  பின்னிரவில் மொட்டை மாடியில் மல்லாக்கப்படுத்து விண்மீன்களைப் பார்த்தவாறே எண்ணங்களை அசைபோடுகிறான்.  முன்பு திருணம் முடிந்து பார்ட்டி தந்த நண்பன் ஒருவனை நினைவு கூறுகிறான்.  நண்பர்களுடன் போதையில் அரட்டை அடிக்கும்போது கூட தவறியும் தன் முதலிரவு பற்றி வாய்திறக்காத அவனை எண்ணுகிறான்.  அவர்களது மற்றும் தன்னுடைய சிற்றன்பம் குறித்த பில்டப்கள்.  பிற தருணங்கள் – கடும் வற்புறுத்தலுக்குப்பின் பசுவை கூடிவிட்டு சோர்ந்த வயதான அந்த காளை நினைவுக்கு வருகிறது, கூடவே பசுவை துரத்திச் செல்லும் இளம் காளைகள் இரண்டு.  அவன் நிற்கும் பேருந்து நிறுத்தத்தின் புளியமரம் இலைகள் மிக குறைந்து காய்ந்து வயதானதாக இருக்கிறது.  பேருந்தில் ஏறிய பின் கவனிக்கிறான் அவன் ஏறிய பேருந்து மிகவும் புகை கக்கிக்கொண்டு நிதானமாக பயணிக்கும் தள்ளாத வயதான பேருந்து பிற இளம் பேருந்துகள் அதை சத்தமிட்டு ஒதுக்கி பாய்ந்து கடந்து செல்கின்றன.

வெகுதூரம் விலகி கதையில் தான் உண்மையிலே ஒரு டாக்டர் தானா என்று தனக்கே சந்தேகப்படும் டாக்டர்.  அவரது முதல் அறுவை சிகிச்சை – ஒன்றுமே இல்லாமல் நெஞ்சில் ஏற்பட்ட சாதாரண காயத்திற்காக வந்தவனை இதய வால்வு கோளாறு என்று பலநாள் அட்மிஷன் போட்டு பிறகு நெஞ்சு பிளந்து பிறகு மூடி அவனது உயிர் காத்த கடவுளாக அவர் அவனது உறவினரால் நோக்கப்படுவது.  எக்ஸ்-ரே எடுக்க இரண்டு முறை வேறு வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு எக்ஸ்-ரேயில் நுரையீரலே இல்லாமல் இருக்கும் நோயாளி – ஒருவேளை சிவபெருமான் தான் தன்னை சோதிக்க நோயாளி வடிவில் வந்திருக்கிறாரோ என்று அஞ்சி – தனக்கு அப்படி ஒன்றும் அவ்வளவு பக்தி கிடையாதே என்று அவர் எண்ணுவது என புன்முறுவலுடன் வாசிக்கச் செய்கிறது.  சவாலான கேஸ்களை கையாண்டதன் சுவாரஸ்யங்களை பகிர்ந்துகொள்ளும் டாக்டர் நண்பர்கள் – விபத்தில் வயிறு சற்று கிழிந்து குழந்தையின் நான்கு விரல்கள் வெளியே வந்து நீட்டிக்கொண்டிருக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணி பெண்ணின் சவாலான அந்த கேஸைக் கையாண்ட சம்பவத்தை பற்றி ஒரு டாக்டர் கூறுவது.  குழந்தையை எப்படி விரல்களை உள்ளிழுக்கச் செய்வது என்று பல மருத்துவர்கள் போராடிக்கொண்டிருக்க வெளியே புகை பிடித்துக் கொண்டே சீரியசாக யோசித்தவாறே நடமாடிக்கொண்டிருக்கும் தலைமை மருத்துவர் சட்டென்று உள்ளே வந்து குழந்தையின் விரல்களில் தன் சிகரெட்டால் சூடு வைக்க குழந்தை தன் விரல்களை சட்டென்று உள்ளிழுத்துக் கொண்டு விடுகிறது.  இதை பெருமிதத்துடன் ஒரு மருத்துவர் கூற பிற மருத்துவ நண்பர்கள் எல்லா மருத்துவ தர்க்கங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு வியந்து புல்லரிப்பது என  சிரிக்காமல் இக்கதையைக்  கடக்க முடியாது.

விரைந்தும் தீவிரத்துடனும் உண்மையான உணர்ச்சியுடன் மனிதரின், உயிர்களின்  வலிகளை, பசியை, துயரை சொற்களால் உணர்த்தும் ஆசிரியர் சு.வேணுகோபால் அவர்களின் கதைகள் கருணையின் ஈரநிலத்தில் தம் வேர்களைக் கொண்டவை.  அத்துடன்  மாயாஜாலம் நிகழ்த்தக் கூடிய (யதுசா அல்ல பரிதனை நரியாக்கிய கருணையின் தலைவன் போன்ற) வண்ணமிக்க நகைச்சுவை உணர்வு ததும்பும் அவரது மற்றொரு முகத்தையும் களவுபோகும் புரவிகள் தொகுப்பு வெளிப்படுத்துகிறது.  எங்களுக்கு அவரும் வேண்டும்.  இதை ஒரு வேண்டுகோளாக அவரிடம் வைக்கிறோம்.  களவுபோகும் புரவிகளை பின் தொடர்ந்த இந்த அனுபவத்திற்காகை அவருக்கு நன்றிகள்.

விக்ரம்

     விஷ்ணுபுரம், ஒரு ஆன்மிக அனுபவம் – விக்ரம்

ஒரு நாவல் வாசிப்பு தியான அனுபவத்தை அளிக்க முடியுமா? எல்லா நாவல்களாலும் அல்ல.  அரிதான சிலவற்றால் அவ்வாறு அளிக்க முடியும் விஷ்ணுபுரத்தைப் போல.  கனவுகள் நம்மை மெய்மையின் கரையில் கொண்டு நிறுத்த முடியுமா? ஏன் முடியாது? மொத்த உலகை, வாழ்வை கனவுக்கு ஒப்பிட்டுதானே மெய்மையை சுட்டுகிறார்கள்? ஆனால் எல்லா கனவுகளும் அல்ல விஷ்ணுபுரத்தைப் போல ஒருசில மட்டுமே.  அவை மெய்மைக்கு மிக அருகில் செல்பவை அங்கு தம்மை கலைத்துக் கொள்பவை.  ஞானிகள் கலைஞர்களை, காவியங்கள் படைக்கும்  மகத்தான எழுத்தாளர்களை பெரும் கவிஞர்களை பேணுகிறார்கள்.   ஏனெனின் இக்கனவுகளின் முக்கியத்துவம் அவர்கள் நன்கறிந்தது.  இவை நம் சாதாரண விழிப்புக்கும் உறக்கத்திற்கும் இடையே வரும் கனவுகள் அல்ல, மாறாக நாமறிந்த அனைத்தையும் உறக்கம் எனக்கொண்டு மெய்மையை விழிப்பு எனக்கொண்டு அவ்விரண்டிடையேயான கனவுகள்.  ஒருவேளை விழித்தாலும் விழித்துக்கொள்ளலாம் அல்லது உறங்கிவிடலாம்.  மெய்மையின் எந்தவொரு வாய்ப்பும் இங்கு அங்கீகரிக்கப்படாமல் எவ்வாறேனும் பேணப்படாமல் இருந்ததில்லை.  எந்தவொரு வாய்ப்பிலும் போலவே இதிலும் தவறவிடும் சாத்தியமும் உள்ளது.  அது ஊழ் எனலாம் அல்லது உங்களுக்கான கதவு வேறொரு இடத்திலிருக்கிறது.

விஷ்ணுபுரம் உலகியல் உறக்கத்தைத் திரட்டி ஒரு கனவினை எழுப்புகிறது.  அக்கனவினை மெய்மையை நோக்கி செலுத்துகிறது.  கனவு எப்படியும் கலைய வேண்டியதுதான்.  எனினும் எச்சரிக்கை மேற்கொள்கிறது.  கனவு இடையில் கலைந்து விடக்கூடாது.  அது உரிய திசை சென்று கலைய வேண்டும்.  அது இப்புறம் முற்றிலும் உலகியலில் விழுந்துவிடக் கூடாது அதேசமயம் தானே மெய்மை என்று அது சொல்லவும் கூடாது.  தானும் உலகியலே என்று தனக்கே சொல்லிக்கொண்டு அப்பால் சென்று மறைய வேண்டும்.  கௌஸ்துபம் – முழுவதும் – ஞான சபை விவாதங்கள் அதன் தர்க்கங்கள் – உரத்துப் பேசுவதில்லை.  கௌஸ்துபம் ஆம் இது உலகியல் தான் ஆனால் விஷயம் அதுவல்ல என்கிறது.  ஸ்ரீபாதம், கௌஸ்துபம் – இவ்விரண்டோடு ஒருவேளை நிறுத்தபட்டிருந்தாலும் விஷ்ணுபுரம் மகத்தான நாவல்தான்.  ஸ்ரீபாதத்தில் மலைமீது ஏறிச்சென்று அங்கு காஸ்யபரைக் காண்கிறார் சிற்பி.  அங்கிருந்து அழிக்கப்பட வேண்டிய விஷ்ணுபுரம் சுட்டிக் காண்பிக்கப்படுகிறது.  கௌஸ்துபத்தில் நிலத்தின் அடியில் இருந்து பிரதிபலிப்பாக காட்சிகள் பிறழ்ந்த விஷ்ணுபுரத்தை (ஞான சபையை) சித்தன் தன் சீடன் காஸ்யபனுக்குக் காண்பிக்கிறான்.  அது கடந்த காலத்தின் விஷ்ணுபுரம்.  மணிமுடி மிச்ச மீதம் இன்றி விஷ்ணுபுரத்தை முழுவதுமாக அழிக்கிறது.  அம்மாபெரும் கோபுரங்களை மட்டுமல்ல அனைத்துவிதமான தன்முனைப்பின் கட்டுமானங்களையும்.

பலவிதங்களில் பலகோணங்களில் நோக்க முடியும்.  ஹரிததுங்கா மலைக்காக அதன் முகில்களுக்காக பொன்னிறம் பொழியும் வானுக்காக செந்நிற சோனாவிற்காக அதன் மீன்களுக்காக கோபுரத்தில் மோதிச் சரியும் பறவைகளுக்காக வைஜயந்தி என்னும் வெண்புரவிக்காக விண்ணுலகம் தொடும் கோபுரங்களுக்காக ஆலயத்தின் சிற்பங்களுக்காக மரமல்லி மரத்திற்காக மிருகநயனிக்காக மலர்களுக்காக  – என இதன் அழகியலுக்காக – கவிதைக்காக இசைக்காக அங்கததிற்காக வாசிக்கமுடியும்.  இதன் தத்துவ விவாதத்தின் வழியாக இங்கு கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும், நோக்கப்படுபவற்றிக்காக – மெய்காண் வழிமுறைகளுக்காக என அக்கோணத்தில் நோக்க முடியும்.  உலகின் நிலையாமை கூறுவது எனச் சொல்லமுடியும் அமைப்புகளின் அதிகாரங்களின் தனிமனிதர்களின் அநீதி சுட்டுவது என கூறமுடியும்.  மிக சாதாரணமானவர்கள் அசாதாரணமானவர்கள் ஆக்கப்படும் புராணங்களின் கட்டுடைப்பு எனச் சொல்லமுடியும்.  வைணவம், தொல்குடி சமயம், பௌத்தம் அல்லது அதெல்லாம் அப்படியொன்றுமில்லை இது தாந்த்ரீகம் தாந்த்ரீகமே என முடியும் – நான் அப்படித்தான் சொல்லுவேன் அதுவும் சைவ யோக தாந்த்ரீகம் 

புணர்ச்சியுள் ஆயிழை மேல் அன்பு போல

உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லாருக்கு

உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி

அணைத்தலும் இன்பம் அது இது ஆமே.

பெற்ற சிற்றின்பமே பேரின்பமாம் ஆங்கே

முற்ற வரும் பரிசு உந்தீ பற

முளையாது மாயை என்று உந்தீ பற 

விஷ்ணுபுரத்தின் கதாபாத்திரங்கள் அஜிதன், சுடுகாட்டு சித்தன், காஸ்யபன், பவதத்தர், நீலி, பிங்கலன், பாவகன், யோகாவிரதர், சந்திரகீர்த்தி, சங்கர்ஷ்ணன், லட்சுமி என பலர் அல்லது அவருள் சிலர் நம்மிடம் நம் உள்ளத்தில் தமக்குரிய இடத்தை பெற்று அமரக்கூடும்.  ஏராளம் அப்படி வந்து விட்டார்கள்.  சமீபத்தில் போரும் அமைதியும் பியர் அப்படி வந்து நிரந்தரமாக தங்கிவிட்டார்.  இத்தனைக்கும் அவர் நட்டாஷாவைத் திருமணம் செய்துகொண்டது எனக்கு பிடிக்கவில்லை என்று அவரிடம் நான் சொல்லிவிட்டபோதும்.

ஒன்றுமட்டும் – உலகியலை (காமம் உள்ளிட்ட அனைத்தையும்)  முற்றாக புறக்கணித்து மெய்மையை எட்டமுடியாது.  உலகியலை முற்றாக கடக்காமலும் மெய்மையை எட்டமுடியாது.  விஷ்ணுபுரம் அதன் தியான அனுபவம் என்பது உங்களைப் பொறுத்தது.  ஓஷோவால் மிகவும் புகழ்ந்துரைக்கப்படும் மிக்கேல் நைமியின் “மிர்தாதின் புத்தகம்” – உண்மையில் அது அவ்வாறு தகுந்தது எனினும் என்னளவில் விஷ்ணுபுரம் அதைவிட மேலானது.   நைமியின் மிர்தாத் அற்புதமாக போதனைகளாக கவித்துமாக அன்பை பெருங்கருணையை மெய்மையை உணர்த்தும் விதமாக பேசுகிறார்.  ஆனால் அவர் ஒருவரது பேச்சாக ஒரு ,மகானின் சொற்பெருக்காகவே அது இருக்கிறது.  முற்றிலும் ஏற்புடன் அன்புடன் வாசித்து அதை உணரமுடியும்.  விஷ்ணுபுரத்தில் வாழ்கை இருக்கிறது.  போதனைகள் இல்லை.  ஏற்பு-மறுப்பு, பரிசீலனை என்று சென்று மறுத்து மறுத்து சென்று சொற்களால் தொடமுடியாத அந்த இடத்தை நெருங்கி சொல்ல முற்படாமல் மௌனம் கொள்கிறது.

முதற்கனல் 2 – ஆர். ராகவேந்திரன்

தீச்  சாரல் , தழல் நீலம் ,வேங்கையின் தனிமை, அடியின் ஆழம், வாழிருள் ஆகிய பகுதிகளை முன்வைத்து ஆர். ராகவேந்திரன் ஆற்றிய சிறப்புரை:

“எதனையும் விட வேகம் கொண்டவன் என்று தன்னை ஒளி நினைத்துக் கொள்கிறது.  ஆனால்  அது தவறு. எவ்வளவு விரைவாக ஒளி சென்றாலும் தனக்கு முன்னே அங்கே சென்றடைந்து தனக்காகக் காத்துக்  கொண்டிருக்கும் இருளைக் காண்கிறது.”

டெர்ரி பிரச்சட்டின்  ரிப்பர் மேன் நாவலில்  வரும் இந்த பிரமிப்பூட்டும் வரிகளை முதற்கனலுக்கு முத்தாய்ப்பாகச் சொல்லலாம் 

 முதற்கனலின் அத்தியாயம் 27 முதல் 50 வரையிலான பகுதிகள் அம்பையின் தீப் புகுதலையும்,  பீஷ்மர், வியாசர், சிகண்டியின் நெடும் பயணங்களையும்  திருதராஷ்டிரன், பாண்டு, விதுரரின் பிறப்புகளையும் பேசுகின்றன.

சுருதி, ஸ்மிருதி, புராணங்களின் கலவையாகத் தோன்றுகிறது முதற்கனல் . சாந்தோக்கிய உபநிடத்தின் ஆப்த வாக்கியமாகிய “நீயே அது’ அக்னிவேசரால் சிகண்டிக்கு அளிக்கப் படுகிறது.  காலத்திற்கேற்ப மாறிவரும் அறங்களை எம ஸ்மிருதி , சுக்ர ஸ்ருதி  முதலாய நீதி  நூல்களை வைத்து அரசியல் – உளவியல் சிக்கல்களை   உசாவுகிறது. யயாதி  போன்ற புராணக் கதைகள் மூலம் பீஷ்மரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல்கிறது. 

  குஹ்ய சிரேயஸ் ( மறைக் காப்புத் திறலோன் என்று பொருள் கொள்கிறேன்)  என்னும் கழுதைப்புலி க்ஷத்ரியர்கள்  ஒவ்வொரு குலத்திலும் உருவாகும் விதத்தைச் சொல்கிறது. வைச்வானரன் என்னும் நெருப்பு படைப்பின் உயிரின் ஆற்றலாக பிறவி தோறும் தலைமுறை தோறும் கடந்து வரும் சத்து என்பதை உணர்ந்து கொண்ட சித்ரகர்ணி- கழுதைப்புலிகள் மற்றும் வியாசர் உரையாடல் அழகிய பஞ்ச தந்திரக் கதையாக அமைகிறது.  

சாந்தோக்ய உபநிடததத்தில்  வைச்வானர வித்யை என்னும் தியான முறையை  அஸ்வபதி கைகேயன் என்னும் அரசன்   உத்தாலக  ஆருணி  முதலிய கற்றறிந்த பண்டிதர்களுக்கு உபதேசிக்கிறான். அவர்கள் தியானம் செய்யும் முறையானது பிரபஞ்சத்தின் தனித்தனியான பகுதிகளாக  கவனம் செலுத்தி வந்தது.  அனைத்தும் ஒன்றே என்னும் அறிவை அவர்களுக்கு வழங்குகிறான். வயிற்றில் உறையும் வைச்வானரன் என்னும் செரிக்கும் நெருப்பு எப்படி உணவை உடல் முழுவதும் ஆற்றலாக மாற்றித்  தருகிறதோ  அது போல இந்த அறிவும்  முழு நிறைவை வழக்கும் என்று சொல்லப்படுகிறது. 

அந்த வித்தை யின் பருவடிவமாக இந்த நெருப்பு எப்படி உண்டும் வழங்கியும் உயிர்க்குலங்களின் வழியே கொண்டு செல்லப்படுகிறது என்பதை இறந்து கொண்டே தத்துவம் பேசும் சித்ரகர்ணி என்னும் சிம்மம் சொல்கிறது. பெயர் வைத்தலில் அழகிய பொருத்தம் உள்ளது. க்ஷத்திரியனின் பிரதிநிதியாக குஹ்ய சிரேயஸ் ரகசியத்தின் உருவமாக இருக்கிறது. குலம் காக்கும் – குருதி கொள்ளும் ரகசியம். விநோதச் செவியன் என்று சித்ரகர்ணியை எடுத்துக் கொண்டால் ‘கேட்டலின்’ மூலம் ஞானம் பெற்றவன் அவன். வியாசரின் குடிலை வேவு பார்க்கும் போது எத்தனையோ கேட்டிருப்பான்.

அத்வைதம் தரும் அமைதி நிலையை பல்வேறு பாதைகளின் மூலமாக வியாசருக்கும் பீஷ்மருக்கும் இயற்கையும் சூதர்களும்  வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். 

காலத்திற்கேற்ப ஸ்மிருதிகள் மாறுவதை ஸ்வேதகேது தனது தந்தையை எதிர்த்து தாய்க்கு உதவி செய்யும் பகுதி விளக்குகிறது . சட்டம் நெகிழக்கூடிய பகுதிகளையும் அது நிகழக்கூடிய வகைகளையும் சொல்லி வைத்திருக்கிறது. 

புராணத்தின்   அலகுகளான  காவியம், கண்ணீர், வம்ச  கதை  திரண்டுள்ளன முதற்கனலில். 

பாத்திரங்களின் குண மாற்றம் இதை ஒரு தனிப் புதினமாக ஆக்குகின்றன 

ராஜோ குணத்தின் செயலூக்கத்தில் துவங்கி, பின் தமோ குணத்தில் பித்தியாக அலையும் அம்பை இறுதியில் சத்துவ குணத்தில்  நிறைகிறாள். அன்னையின் நிழலில், உண்பதே வாழ்க்கையாக துவங்கும் சிகண்டினி, பின்னர் பழி என்னும் ஒற்றை இலக்கிற்காக ரஜோ குணத்தில் நிற்கிறாள் . அம்பைக்குப் படகோட்டிய நிருதன் தூய காத்திருத்தலில் அசையாமல் படகில் இருப்பது தமோகுணமாக மயக்கும் சத்வம் தான் பின் அம்பையை விண்ணேற்றவும் ஏற்றியபின் முதல் பூசகனாகவும் உருமாறி ராஜசத்தில் சேருகிறான், பீஷ்மர் வெளித்தோற்றத்தில் ராஜசமும் உள்ளே மாறாத் தேடலில் சத்வத்திலும் உறைகிறார். சத்யவதி மட்டும் குணமாற்றமின்றி இருப்பதாகத் தோன்றுகிறது. 

சுக முனிவரும் பீஷ்மரும் தந்தைக்கு முறையே சொல்லாலும் செயலாலும் மீட்பளிக்கிறார்கள். வியாசர் அறத்தையும் சந்தனு இன்பத்தையும் மகன்களிடம் கொடையாகப் பெறுகிறார்கள். 

யயாதி கதை பீஷ்மருக்கு சொல்லப் படுகிறது. ராஜாஜியின் யயாதியிலிருந்து வெண்முரசின் யயாதி வேறுபாடும் இடம் சிறப்பானது. கால மாற்றத்திற்கேற்ப யதார்த்தமானது. “வியாசர் விருந்தில் ” இச்சையை அடைந்து தணிப்பது என்பது நெருப்பை நெய் விட்டு அணைக்க முயல்வது போன்றது ” என்ற அறிவைப் பெற்று விடுகிறான். முதற்கனலில் வரும் யயாதி மகனுக்கு இளமையை அளித்து விண்ணேகிய பின்னும் அகந்தையால் வீழ்த்தப்படும் யயாதியாக நெருப்பிலும் பயன் பெற உரிமை இன்றி, தனது மகளைக் கண்ட கனிவில் முழுமை அடைகிறான் 

பீஷ்மர் தேர்ந்தெடுத்திருக்கக் கூடிய ஒரு வாய்ப்பை யயாதி கதை மூலம் அவருக்கு சொல்கிறார் சூதர் . 

முதற்கனல் பெண்டிரையும் ஒடுக்கப்பட்டவர்களையும்  பீடத்தில் ஏற்றுகிறது. பீஷ்மரை இழிவு செய்து பாடும் சூதர், சால்வனை தீச்சொல்லிட்டுவிட்டு, நகர் நீங்கும் சூதர், மந்திரங்கள் மூலம் அரசியரின் மனங்களை கட்டுப்படுத்தும் நாகினி, காவியமும் சீர் மொழியும் கற்றுத்தேர்ந்த சிவை போன்ற அடிமைப் பெண்கள் வரவிருக்கும் கால மாற்றத்தைக் குறிக்கிறார்கள். 

குல அறங்கள், கால அறங்கள், தேச அறங்கள் ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தி நிற்கும் சரடுகளின் இறுக்கத்தின் மேல்  மைய அரசின் அரியணை நிற்கிறது. க்ஷத்திரியர் ஆவதற்கு வாள்முனையும் மறைச்சொல்லும் குலங்களுக்குத் தேவைப்படுகின்றன. பிறகு புதிய போட்டியாளர் உருவாகாமல் தடுக்க வேண்டி உள்ளது 

சிறிய நிகழ்வுகளை பெரிய இயக்கங்களுடன் தொடர்புறுத்துவதே வெண்முரசின் பிரம்மாண்டம்.    

நியோக முறையில் குழந்தைகள் பிறக்கும் முன் சொல்லப் படும் கதைகள்  இதற்கு நல்ல உதாரணம். 

நூறு   பறவைகளின் நிழல்களை வீழ்த்திய திருதராஷ்ட்டிரன் என்னும் கந்தர்வன் அதே பெயரில் கண்ணில்லாதவனாக  பிறக்கிறான். அவன் பார்ப்பதெல்லாம் இருளே. அவன் தேடுவதெல்லாம் நிழலாகவே அமையப் போகின்றன . தனது குஞ்சுகளைப்  பிரிந்த ஏக்கத்தில் இறந்த சாதகப் பறவை மீண்டும் பாண்டுவாய்ப் பிறந்து மைந்தரைப் பிரியும் துயரை அடைகிறது. அறத்தின் தலைவனே விதுரனாக வருகிறான். 

வில்வித்தை பிரம்மவித்தையின் ஒரு சிறு பகுதியே என்கிறார் அக்நிவேசர். ஒவ்வொரு சிறு  அறிவும் சொல்லும் ஊழ் வரை, புடவி அளவு காலம் அளவிற்கு விரிந்த ஒன்றின் துளி என்னும் ஞானம் கதை வழியே பயணிக்கிறது. 

பிஷ்மரின் சப்த -சிந்து  சிபி நோக்கிய பயணங்கள் அவருக்கு மனவிரிவை  அளிக்கின்றன. பாலையில் காணும் விதைகளைக் கண்டு  வியக்கிறார். வானும் மண்ணும் கருணை செய்தால் வேறு ஒரு வகை காடு உருவாகி இருக்கும் என்று எண்ணுகிறார். கோடிக்கணக்கான நிகழ்தகவுகளின்  ஒரு தேர்வு தான் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலம் என்றுணரும் இடம் அதிர்ச்சி அளிப்பது      .  ஒரு வேளை  கால – நிகழ்வுகளின்  வேறு வகையான  வாய்ப்பில் அவரும் விதை முளைக்கும் சாதாரண தந்தையாகி இருந்தால், பெண்ணின் கருணை அவருக்கு கிட்டி இருந்தால் தனித்த வேங்கையின் பொறுப்புகள்  அவரிடமிருந்திருக்காது. 

தென் மதுரைச் சாத்தன் வியாசருக்கே வழி காட்டுகிறார். கருமையும் வெண்மையும் இணைந்ததே ஒளி என்கிறார் . 

 மானசாதேவி தன் மகன் ஆஸ்திகனுக்கு ஒரு கடமையை அளித்ததில் துவங்கும் முதற்கனல் அவன் தனது வேசர நாட்டிற்கு திரும்பி வருவதுடன் நிறைகிறது, இருள் என்பது இகழப்  படவேண்டியதில்லை , தமோ குணம் முற்றும் ஒழிக்கப் படவேண்டிதில்லை என்ற அறிவை ஜனமேஜனுக்கு அளித்து பாம்பு வேள்வியை தடுத்த வெற்றியாளன் ஒரு வருடம் கழித்து நாக பஞ்சமி  அன்று தனது குலத்திற்கு வந்து தான் இன்னும் நாகன் தான் என்று அறிவிக்கிறான். 

ஆஸ்திகனால் காக்கப்பட்ட தட்சன் தட்சகியுடன் காரிருள் நீண்ட பெரு வானம் நிறைத்து இணைந்து படைப்பை நிகழ்த்துகிறான். இருள் இணைந்து ஒளியைக் குழவியாகப் பெற்றுத்  தாலாட்டுகிறது. சத்வகுணம் என்னும் முத்து ராஜசம் என்னும் சிப்பிக்குள் தாமசம் என்னும்  ஆழிருள் கடலில் பாதுகாப்பாக இருக்கிறது.  இருளற்ற ஒளியில்லை. இதுவே இந்தியாவின் அனுபவ ஞானம் . 

இருள் ஒளி இரண்டிற்கும் ஒன்றிடம் என்று அருள் தரும் ஆனந்தத்தை அடைய அனைத்திலும் ஒன்றைக் காண்பதே வழி என்கிறது முதற்கனல். பல ஆயிரம் ஆண்டுகளாக  பாரத வர்ஷம் கண்ட வாழ்வனுபவம் புல்லும் புழுவும் நம்பி வாழும் அறத்தை நிலைநிறுத்தச் செய்யும் முயற்சியாக முதற்கனல் எரிகிறது.

உவமைகள் / உருவகங்கள் 

1 செம்புல்  பரவிய குன்று போன்ற சிம்மம் 

2 நெல்மணி பொறுக்கும் சிறு குருவி போல அம்பாலிகையிடம் பதற்றம் இருந்தது 

3 வாய்திறந்த அரக்கக் குழந்தைகள் போல வட்ட   வடிவ இருளுடன் நின்ற செம்புப் பாத்திரங்கள் 

4  வலசைப்  பறவைகளுக்கு வானம் வழி சொல்லும் 

5  பாரத வர்ஷம் ஞானியர் கையில் கிடைத்திருக்கும் விளையாட்டுப் பாவை 

6 வந்தமரும் நாரைகள் சிறகு மடக்குவது போல பாய்  மடக்கும் நாவாய்கள் 

7 சிகண்டி கழுத்தில் குருதி வழியும் குடல் போல காந்தள் மாலை கிடந்தது 

தத்துவங்கள்  

 கருணை கொண்ட செயல்கள் அனைத்தும் ஒழுக்கமே (சுகர் வியாசரிடம் சொல்வது) 

இசை  நுணுக்கங்கள் 

புரவிப்படை மலையிறங்கும் தாளம்.

ஆர்  ராகவேந்திரன் 

கோவை

அசடன், நாவல் அனுபவம் – நவீன் சங்கு

தாஸ்தாவெஸ்கி சொன்ன ‘Beauty Will Save The World’ என்ற மாபெரும் உண்மையை , தூய கிருஸ்து மனம் கொண்ட மிஷ்கின் மூலம் ரஷ்ய மேல்தட்டு மக்கள் மத்தியில் ஆராயும் நாவல் அசடன்.

தாஸ்தாவெஸ்கியின் கண்கள் நேராக நம்மை நோக்கியவாறு இருக்கும் புகைப்படம்


அசடன் நாவல் குற்றமும் தண்டனையும்,கமரசோவ் சகோதரர்கள் நாவல்களின் உணர்ச்சிமிக்க கதை ஓட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. காரணம், அதன் நீண்ட உரையாடல்கள் மற்றும் யதார்த்தமான நாவல் தன்மையிலிருந்து திடீரென நாடக தன்மைக்கு மாறுவது.நாம் வாசித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென(இப்போது பின்னணி இசை உச்சத்தில் கலவரமாக) திரைக்குப் பின்னாலிருந்து ஒரு கூட்டம் வந்து அமர்க்களம் செய்துவிட்டு மொத்தமாக திரைக்குப் பின்னே ஓடிவிடுகிறது. நாம் முகம் சுருங்கி குழப்பத்துடன் மேடையை உற்று நோக்குகிறோம், பிறகு மீண்டும் நீண்ட உரையாடல்கள் தொடங்குகிறது.

நாவல் வடிவத்தின் சட்டகத்திலிருந்து அசடன் முற்றிலும் மீறி செல்கிறது என்கின்றனர் விமர்சகர்கள். கதையாகப் பார்த்தால் ஒரு குறுநாவல் அளவுக்குச் சிறியது. நாவலுக்கே உரித்தான கதாபாத்திரங்களின் பரிணாமம் இங்கே இல்லை, பயணம் இல்லை (கதை நகர்வு) ஆனால் நீண்ட உரையாடல்கள் மட்டுமே. எல்லா கதாபாத்திரங்களும் அதன் தன்மையில் ஏற்கனவே முழுமையாக உள்ளது.

தாஸ்தாவெஸ்கி தான் அடைந்த போலி மரண தண்டனை(Mock Punishment) அனுபவத்தையே, இபோலிட் கதாபாத்திரம் மூலம் மரண தண்டனை பெற்ற ஒருவன் அடையும் மன பிறழ்வை காண்பிக்கிறார். கொடூரமான வன்முறையால் தண்டனை பெற்ற ஒருவன் அல்லது ஒரு கொலைகாரனால் கழுத்து அறுபட்ட நிலையில் இருக்கும் ஒருவனை விட மரண தண்டனை பெற்றவனின் மன வேதனை உச்சமானது என்கிறான் மிஷ்கின். காரணம், மரண தண்டனை பெற்ற ஒருவன் சென்றடையும நம்பிக்கையின்மை, அவன் ஆன்மாவை சுருக்கி பித்தடைய வைக்கிறது.

சுவிட்சர்லாந்தில் மேரி என்ற பெண்ணை கிராம மக்களிடமிருந்து காப்பாற்றுகிறான்.தொடர்ந்து தன்னிடம் மனம் விட்டு பேசுபவர்களை‌ ஆறுதல் வார்த்தை கூறுகிறான், பண உதவி புரிகிறான்.

அசல் ரஷ்யர்களை எங்குமே காணோம், சிறந்த பொறியாளர்கள் இல்லை, இரயில்கள் பாதி வழியிலேயே சிக்கி மாத கணக்கில் நகர முடியாமல், அதில் உள்ள உணவு பொருட்கள் அழுகி வீணாகிறது. ஆனால் எங்கும் போலி பாவனையுடன் தளபதிகள், அரசாங்க ஊழியர்கள். இந்த Materialistic ஆன போலி பாவனையை, இவால்ஜின் கதாபாத்திரம் மூலம் கடுமையாக சாடுகிறார் தாஸ்தாவெஸ்கி.

ரோகோஸின் வீட்டில் மிஷ்கின் காணும் Holbien’s முகம் சிதைந்து சித்திரவதைக்கு உள்ளான வயதான கிருஸ்துவின் படம் அவனை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒரு வகையில் இந்த புகைபடம் புத்துயிர்ப்பை (Ressurection) மறுக்கிறது. தாஸ்தாவெஸ்கி பார்த்த இந்த புகைபடமே, தான் முதலில் எழுத நினைத்த மிஷ்கினிலிருந்து மாற்றி அழகான தூய மிஷ்கினை எழுத தூண்டியிருக்கலாம்.

அழகிற்கு ஒரு வலிமை உள்ளது. உலகத்தை தலைகீழாக மாற்றக் கூடிய வலிமை என நாஸ்டஸியாவின் அழகு குறித்து மிஷ்கின் கூறுகிறான்.
மிஷ்கின் நம்புகிற இந்த தரிசனத்தை, பல்வேறு எதார்த்தங்கள் வழியாக நவீன ரஷ்யாவின் பண்பாட்டு தளத்தில், சிந்தனை தளத்தில் ஏற்பட்ட மாற்றம் மூலம் நிராகரிக்கிறார் தாஸ்தாவெஸ்கி.

சுவிட்சர்லாந்தில் ஒரு மலையைப் பார்த்து தான் அடைந்த பரவசத்தை விவரிக்கிறான் மிஷ்கின். மனிதனை கடந்த ஒன்றை பிரபஞ்சத்தை அல்லது கடவுளை உணர்வதற்கான ஒரு கருவியாக அழகைப் பார்க்கிறான். உலகில் உள்ள அனைத்து அழகிலும் (Authentic Beauty) ஒரு தன்மை உள்ளது, அது மனித இதயத்தை நேரடியாக ஊடுருவி சலனம் ஏற்படுத்தவல்லது, அங்கிருந்து வேறொன்றை நோக்கி மனிதனை நகர்த்துகிறது.

இந்த அழகியலை ஒவ்வொரு கலையும்(Art) தன்னுள் கொண்டதாலே ,Holbien’s painting மக்களிடம் அதிகம் தாக்கம் ஏற்படுத்தும் கிருஸ்துவை நோக்கி அவர்களை நகர்த்தும் என நம்புகிறான் மிஷ்கின்.

இயற்கையிலேயே இந்த அழகுணர்ச்சி(Beauty) தன்னுள் நல்லதையும் (Good), சத்தியத்தையும்(Truth) கொண்டுள்ளது. இதனாலயே ஹெர்மன் ஹெஸ்ஸே “Art by it’s Nature is religious” என்கிறார்.

மிஷ்கின் ஜீஸஸ், புத்தர் போல் வாழ்க்கையின் இக்கட்டுகளை கடந்து ஞானம் பெற்றவன் அல்ல. மாறாக துளி கரையில்லாத ஒரு அழகான மனிதன் (the positively good and beautiful man). இந்த அழகான மனிதனை ஏற்றுக் கொள்ள எது தடுக்கிறது. அது ரஷ்யா தனது வேர்களை இழந்து முழுக்க முழுக்க Materialist ஆன ‌ஐரோப்பா மீது கொண்ட மோகத்தால். ரோமன் கத்தோலிக்க திருச்சபை ரோமா புரி மன்னர் ஆட்சியின் மாறிய வடிவம் என்கிறான் மிஷ்கின். ஆக்டோபஸ் போல தனது கரங்களால் ஐரோப்பா முழுக்க அதிகாரம் செலுத்தி அரசியல் ஆதாயம் அடையும் அமைப்பு அது. அதுவே Atheism, Communism போன்ற சிந்தாந்தங்கள் உருவாகுவதற்கு காரணமாக அமைந்தது என்கிறான் மிஷ்கின்.

உலகிற்கே ஆன்மிக வழி காட்டக் கூடிய தன்மை ரஷ்யாவிற்கு உண்டு, அது எந்தவொரு ரஷ்யாவின் ஏழை விவசாயிடமும் (Peasant Christ) உள்ளது என தாஸ்தாவெஸ்கி நம்பினார்.அதையே தாஸ்தாவெஸ்கியும், டால்ஸ்டாயும் தங்கள் எழுத்திலிருந்து முன்வைத்தனர் (Russian Christ).

தனது பண்பாட்டை இழப்பதால் ஒரு தேசம் அடையும் இழப்பை, அசடன் நாவலிருந்து ரஷ்யாவின் வீழ்ச்சி வரை ஒரு கோடு வரைந்து பார்க்க முடியும்.

‘இடியட்’ வாசிப்பு – ஆர். ராகவேந்திரன்

தஸ்தவ்யாஸ்கியின்   ‘இடியட்’  கதைமாந்தர்களின் உளவியல்  நமக்கு மிகவும் பரிச்சயமாக இருக்கின்றன. சில இடங்களில்  நம் உள  அமைப்பையே காட்டுவதாக மலைப்பை  தருகின்றன. 

 குழந்தைப் பருவ நினைவுகள்  வெளிவரும்போது எப்போதும் நம்  அசலான  ஆளுமையுடன் நெருக்கமாக உணர்கிறோம்.   நம்மையும் உலகையும் அன்பு மயமாக  ஆக்கவல்லவை இந்நினைவுகளைத் தூண்டும் படைப்புகள்.

 உலகின் கண்ணீரை துடைத்து விடுபவன் உலகிற்கு ஒரே நேரத்தில் அன்னையாகவும் குழந்தையாகவும் ஆகிறான். பிறிதின் நோயை  தன்  நோய் போல் போற்றும் அறிவு , முயற்சியினால் அடையப் படுவதல்ல; அது இயல்பான அன்பிலிருந்து வருவது.  அசடனான மிஷ்கின்  தூய அறிவின்மையின் வெளிப்பாடு.  

எம் ஏ சுசீலாவின்  சீரான மொழிபெயர்ப்பில் நாணிக்கோணிக் கொண்டு      நம்முன் வருகிறான் அசடன்.  தனது வலிக்கும் பிறரது வலிக்கும் வேறுபாடு தெரியாத தூய்மை சில  வரலாற்று மாந்தர்களின் நினைவுகளைக் கொண்டுவருகிறது. 

ஒரு பெரிய குழந்தை சிறியதை  அடிக்கும்போது இன்னும் சிறிய குழந்தை ஒன்று அழுகிறது.  புல்வெளி மீது நடக்கும் மனிதனைப் பார்த்த ராமகிருஷ்ணர்  இதயம் பிசையைப்படும் வலியை உணர்கிறார். பிஜி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டு மனிதர்கள் இறந்து கொண்டிருந்த இரவில் விவேகானந்தருக்கு பெரும் துயர் உண்டாகி விடுகிறது. பயிர் வாடும்போது தன்  உயிரும் வாடிய வள்ளலார் அறிவுச்  செயல்பாடாக வோ  சிந்திப்பதன் மூலமாகவோ துயரைப்பெறவில்லை.  விளக்க முடியாத  ஒரு இணைப்பு இங்கே இருக்கிறது.

நஸ்டாஸியாவின் குழந்தை போன்ற முகத்தைக் காணும்போதும் அக்லேயாவின் ஒளிவு மறைவற்ற அக்கறையை  உணரும்போதும் மிஷ்கின் கொள்ளும் பேரன்பு உடல் தளத்தைக் கடந்தது. 

துளித்துளியாக, பொறுமையாக மிஷ்கினின் பாத்திரத்தை வார்த்தெடுக்கும்  ஆசிரியர்  அவனை முழுமையாக்குகிறார். ‘விசுவாத்ம புத்தி’ என்று சொல்லப்படும் ‘உலகில் கரைந்த’ ஆளுமையை இயேசுவின் படிமம் போல செதுக்குவதற்கு இவ்வளவு பெரிய பின்புலமும் நுண்ணிய காட்சி விவரிப்புகளும் தேவைப்பட்டிருக்கின்றன. 

இயல்பான , சிறிது சுயநலமும் சாமானிய ‘நல்ல’ தன்மையும் கொண்ட நாகரிக மனிதன் போன்ற சராசரி வாழ்வை மிஷ்கின் போன்றவர்கள் மேற்கொள்ள முடிவதில்லை. சிறிது சிறிதாக பித்து நிலையை அடைகிறார்கள்.  அல்லது சற்று மூளை  கலங்கியதால் தான் இந்த நேயம் தோன்றுகிறதோ?

மிஷ்கின் பொது இடத்தில் அவை நாகரிகத்தை பின்பற்றுவதில்லை. பூச்சாடிகளை  தனது உணர்ச்சி வசப் பதட்டத்தால் உடைத்து விடக்கூடியவன்.  தஸ்தவ்யாஸ்கியின்   வாழ்வில் அவருக்கு ராணுவ சீருடை பிடிக்கவுமில்லை. பொருந்தவும் இல்லை. அடிக்கடி இழுப்பு வரக்கூடியவர். பழமை வாத  கிறித்துவமும் சோஷலிசமும் ஆசிரியரைக் கவர்ந்திருக்கின்றன.  மிஷ்கின் இந்த குணங்களுடன் வளர்ந்து வருகிறான். 

ஆணவம் கொண்ட பெரிய மனிதர்கள் மிஷ்கின் போன்றவர்களை ஏளனம் செய்கிறார்கள்.  எடை போடும் அறிவாளிகளின் அடிமனதில் கயமை இருட்டில் ஒளிந்து கொண்டு எட்டிப் பார்க்கிறது. மிஷ்கின்கள் பெரும்பாலும் இவர்களை  புரிந்து கொண்டிருக்கிறார்கள். கபடங்களை எளிதில் கடந்து செல்வதன் மூலமும்  அவர்களுக்கு வென்று விட்டோ ம் என்ற  இறுமாப்பை அளிப்பதன் மூலமும் தங்கள் மைய இயல்பை  பாதுகாத்துக் கொள்கிறார்கள்.  மனநிலை பிறழ்ந்தவர்களுக்கு  வாழ்வின் இறுதி கணத்தில் சுய நினைவு திரும்பி விடும் என்ற  நம்பிக்கை உண்டு.   ‘தான் ‘ யார் என்று உண்மையில் ஆரோக்கிய மனம் கொண்டவர்களும் அறிந்து கொள்ளாத நிலையில் ,  நிலையான சுய அறிவு என்பது என்ன என்ற கேள்வியை அசடன் முன்வைக்கிறான். 

மிஷ்கின் போன்ற ‘இளிச்சவாய’ தன்மை கொண்ட தேசங்களும் சமுதாயங்க ளும் கூட இருக்கின்றன .  தான்  ஏமாற்றப்படுவது தெரிந்திருந்தும் பிறருக்கு  மகிழ்ச்சி தருவதற்காக  ஏமாந்தது போல நடிக்கும் ‘அப்பாவிகள் ‘ நின்றிருக்கும் உலகை இலக்கியவாதிகளால் படைக்க முடிகிறது 

மனிதன் இறைத்தன்மையை  பூரணமாக வெளிக்காட்டுவதில் அடையும் தடுமாற்றங்களின்  கதையே அசடன் 

பெரிய கப்பல் ஒன்று முனகலுடன் கிளம்புவது போல கதை துவங்குகிறது. ஒவ்வொரு  இயந்திரமாக சுழலத் துவங்க,  கதைமாந்தர்களி ன்   விவாதங்களின் ஊடே அசைவு நிகழ்கிறது. நகர்வதே தெரியாமல் கதை வெகு தூரம் வந்து விட்டிருக்கிறது. 

சுவிசர்லாந்தின் மன நோய் சிகைச்சை  முடிவதற்கு முன்னரே  தனது தாய்நாடாகிய  ரஷ்யாவிற்கு ஒரு துணி மூட்டையை மட்டும் உடைமையாக எடுத்துக் கொண்டு மிஷ்கின் வருகிறான். திடீர் செல்வந்தனாகி , அன்பை சுற்றிலும் தெளித்து , எல்லோரையும் நம்பி , குறுக்கு மனது கொண்டவர்களையும் ஆட் கொண்டு  அவர்களே  அவனுக்கு செய்த சூழ்ச்சிகளையும் அவனிடமே  சொல்லவைத்து அதையும் மனதில்  ஏற்றிக்  கொள்ளாமல் காதலில் விழுந்து அடிபட்டு, ஒரு கொலை நிகழ்விற்கு தார்மிக காரணமாகவும்  சாட்சியாகவும்   இருந்து, மூளை  மீண்டும் கலங்கி தனது மருத்துவ சிகிச்சைக்கே திரும்புகிறான்.

பெற்றோரை இழந்து குழந்தையாக இருக்கும்போதே எதிர்கால உருவாய் பொலிவின்  அடையாளங்களைக்கொண்ட நஸ்டாசியா,  டாட்ஸ்கி என்னும்  கீழ்மைகொண்ட செல்வந்தனால் வளர்க்கப் பட்டு கையாளப்படுகிறாள்.  தனது நிலைக்கு பொறுப்பாளி தானே என்றும்   தன்னைப் பாவி என்றும் எண்ணிக் கொண்டு சுயவதை செய்து கொள்கிறாள்.  உண்மையான அன்புடன் அவளுக்கு மீட்பை  அளிக்க  மிஷ்கின் முன்வருகிறான். அவனை கீழே இறக்கக் கூடாது என்ற குற்ற உணர்வுடன் தன்னைக் கீழே இறக்கிக் கொண்டு ரோகோஸின் என்னும் தாதாவை மணக்க முடிவு செய்து  ஒவ்வொரு முறையும் திருமண சமயத்தில் ஓடிப் போய்விடுகிறாள். 

அவளைப்போலவே கலைத்திறனும் மென் மனமும் கொண்ட  அக்லேயாவுடன் மிஷ்கினை  மணமுடித்து வைக்க முயற்சி செய்து ஒரு கட்டத்தில்  இரு பெண்களுக்கும் நடைபெறும் ஆதிக்கப் போட்டியில் மிஷ்கினை திருமணம் செய்துகொள்ள நஸ்டாசியா முடிவெடுக்க, மீண்டும் ஓடிப்போதல் நடைபெறுகிறது. அவளை அழைத்துக் கொண்டு செல்லும் ரோகோஸின் அவளைக் கொன்று விடுதலை தந்து விடுகிறான். மிஷ்கினுக்கும் ஆறுதலைத் தந்து  சைபீரிய தண்டனையை பெறுகிறான்.

மிஷ்கின் உலகில் அழகினால் அமைதியைக் கொண்டு வர முடியும் என்று நினைக்கிறான் . அவன் உண்மையில் அன்பைத்தான் அப்படி எண்ணி இருப்பான் போல இருக்கிறது. 

உருண்டு வரும் அழகிய கண்ணாடிக் குடுவையைப் பக்குவமாக எடுக்கத் தெரியாமல் போட்டு உடைத்து விடுவது போல அக்லேயா தனது வாழ்வை குலைத்துக் கொள்கிறாள்.

அசையாத நீரோடை போன்ற நாவலில் சிரிப்பைத் தரும் சுழிகள் தளபதி இபான்சின் வரும் இடங்கள்.  

குடிப்பதற்கு காசில்லாமல் கடன் கேட்பதும் தனது பழம் பெருமையை  பறை சாற்றிக்  கொள்வதும்    பொய்  சொல்லிச் சொல்லியே அதைத் தானே நம்ப ஆரம்பிப்பதும் கிடைத்த புட்டியை   ஊற்றிக்  கொண்டு அதே இடத்தில் உறங்கி விடுவதும்  தனது சாகசக் கதைகளைத் பிறர் நம்பாத  போது  கோபித்துக் கொண்டு சண்டை இடுவதும்  – உணர்ச்சிகளின் உச்சமான இந்த இபான்சின் போன்ற ஆத்மாக்கள் வாசகர் மனதில் பல பரிச்சயமான முகங்களை எழுப்புகின்றன.

நாவலின் உச்சமாகக் கருதுவது  நஸ்தாசியா கொல்லப்பட்ட பின் அந்த இருட்டு அறையில் மிஷ்கின் ரோகோஸின்னுடன் தங்குவது தான் . ஆன்மாவின் இருட்டில் குற்ற உணர்வின் துயரில் இருக்கும் கொலைகாரனுக்கு தேறுதல் தரும் மிஷ்கின் இயேசுவின் வடிவம் ஆகிறான். .

நஸ்டாசியாவின் விருந்தில் கலந்து கொண்டவர்கள்  தாங்கள்  செய்த அவமானம் தரும் குற்றங்களைச்L சொல்லும் இடமும்  மிஷ்கினின் சுழலையும் உடல் நிலையையும் வைத்து அவனது  உளவியலை பாவ்லோவிச் ‘விளக்குவதும்’ ஆய்விற்கு உரியன. 

குழந்தைகள்  ரகசியங்களை விரும்புகின்றன. சத்தம் போடாதே என்று மெதுவாகச் சொல்லிக் கொண்டே    கதவுக்கு இடுக்கில் நின்று கொண்டு  கள் ளச் சிரிப்புடன் வாய்மேல்  ஆள் காட்டி விரலை  வைத்து சிரித்துக் கொண்டிருக்கின்றன .  யாரிடமும் சொல்லாதே என்று மிக மெதுவாக உச்சரிக்கும்போதே அந்த ஒலி பெரிதாகக் கேட்டு விடுகிறது.  நாஸ்டாசியா கொல்லப் பட்டதும் மிஷ்கின் ரகசியமாக ‘எப்படிச் செய்தாய்? பாவ்லோவ்ஸ்க்கிற்கு வரும்போதே கத்தியுடன் தான் வந்தாயா ‘ என்றெல்லாம் கொலை செய்தவனிடம் கேட்க்கிறான்.  தானும் மாட்டிக் கொள்வோம் என்று சிந்திக்காமலேயே ரோகோஸினுக்காக கவலைப் பட ஆரம்பிக்கிறான். பளிங்கு போல அருகில் இருப்பவரைப் பிரதிபலிக்கும் மனம். ஊரைக் கூட்டிவிடாமல் ரோகோஸின் அருகில் படுத்துக் கொள்கிறான். அவனது கண்ணீர் கொலைசெய்தவன் மீது விழுந்து கழுவுகிறது

மிஷ்கின் முன் எல்லோரும் உண்மையையே பேசுகிறார்கள். எதற்கு இவ்வளவு சிக்கலாக வாழ்கிறீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறது  அவன் வாழ்வு 

மிஷ்கின் முன்னால் எல்லோரும் குழந்தைகள் ஆகிவிடுகிறார்கள். குழந்தையால் அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடிவதில்லை. கண்களை மூடிக் கொண்டு தந்தை முன் வந்து நிற்கிறது. தந்தையும் தன் கண்களை மூடிக்கொண்டு  தவிப்பதாகவும் பின் கண்டு பிடிக்கப் படடவராகவும் நடிக்கிறார்.  பின் இறைவன் பதட்டத்துடன் தன்னை வெளிப் படுத்திக்க கொள்கிறார்.  

ஒரே ஒரு தூயவன்   இருந்தான் அவன் கிறிஸ்து என்று சொல்லும் தஸ்தயேவ்ஸ்கி  அவனை  மீண்டும் மனிதர்களில் தேடிச் சலித்து வடிகட்டி எடுத்த கிறித்து நிகர் ஆளுமை  மிஷ்கின் 

அன்பின் தூய்மையை மறந்து விட்ட அசட்டு உலகில் மிஷ்கின் தன்மையை அடையும் முயற்சியே இலக்கியம் என்று தோன்றுகிறது. அந்த நிலையை ஒரு சிலர் அடையும் போது புவியின் பளு குறைகிறது. அப்போது சுகதேவா என்று வியாசர் அழைக்கையில் கானகத்தின் எல்லாப் பறவைகளும் இங்கிருக்கிறேன் தந்தையே என்று பாடுகின்றன.

ஆர் ராகவேந்திரன் 

கோவை

தீராது முளைக்கும் பெருங்கதைகள் – ஆர். ராகவேந்திரன்

பர்வா வாசிப்பனுபவம் – எஸ் எல் பைரப்பாவின் பர்வா, பாவண்ணன் அவர்களால்  மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது (பருவம்) 

தரவு அறிவிலயலின் ஒரு பிரிவான   கொத்து ஆய்வு (CLUSTER ANALYSIS) தகவல் புள்ளிகள் எப்படி குழுக்களாக அமைகின்றன என்று  புரிந்து கொள்ள முயல்கிறது. ஒவ்வொரு புள்ளியையும் சில பரிமாணங்களில் சில குணங்கள்  தன்மைகளின் சேர்க்கைகள்  என்று  அனுமானிக்கிறது.  புள்ளிகளாக மனிதர்களை வைத்துக்  கொண்டால்  மகாபாரதத்தை  ஒரு  ஆதிநிலை க்ளஸ்டர்  பகுப்பாய்வு என்று விரித்துக்  கொள்ள  வாய்ப்பிருக்கிறது.  வரலாற்றின்  போக்கையும் சமுதாயத்தின் தற்கால நிலையையும்  குறித்த புரிதல் முயற்சிகளை மேற்கொள்ள முடிகிறது.  

பல பரிமாண பெட்டியாக சமுதாயத்தை  உருவகித்துக் கொள்ளலாம். புள்ளிகள் இந்த பெட்டிக்குள் நகர்கின்றன. ஒன்றுடன் ஒன்று ஈர்த்துக் கொள்கின்றன. விலக்குகின்றன .பெரிய புள்ளிகள் கருத்தை உருவாக்கி சிறு வடடங்களை கொத்துக்களை  உருவாக்குகின்றன. கொத்துக்களை  உருவாக்குவதற்கு விழுமியங்கள்  தேவைப்படுகின்றன.அதை விட முக்கியமாக அடுத்த வட்டத்தில் உள்ள புள்ளிகள்  தம்மை விட வேறுபட்ட விழுமியங்களை  நம்புவதாகப்  பிரச்சாரம் செய்கின்றன. புள்ளிகளுக்கு அடையாளம் முத்திரை இடப்படுகிறது. வாரிசுகள்  உருவாகின்றன. சில தலைமுறைகள் கழிந்தவுடன்  பழைய புள்ளிகள் விழுமிய அடித்தளமாக வளர்த்தெடுக்கப் படுகின்றன.  

புள்ளிகள்  வடடத்தை விட்டு வெளியேறி விடாமல் இருக்க கேள்விகள் பயன்படுகின்றன. 

“நீ ஒரு வீர …. .அவனா ? ” 

” இந்தப்  பரம்பரையில் வந்தவனா?”  என்பது போன்று.  

இதனால் புள்ளிகள் தம் இடத்தில் ஆணி அடித்து நிறுத்தப் படுகின்றன. 

“நியோக முறையில் பிறந்த பாண்டவர்கள் குரு  வமிசத்தின்  வாரிசுரிமை பெற்றவர்களா ?”, 

“கர்ணன் தன பிறப்பை மறைத்து வில்வித்தை கற்றுக் கொண்டது சரியா?” 

“நீங்கள் மட்டும் அறத்தை மீறி எங்கள் ஆட்களைக்   கொல்ல வில்லையா?”  

” பல்லாண்டுகளாக அரசு உங்களை ஆதரித்ததே  , செஞ்சோற்று க்கடன் தீர்க்கவேண்டாமா ?”  இவை போன்ற கேள்விகள் புள்ளிகளிடம் எழுப்பப் படுகின்றன. 

பல புள்ளிகள் ஏன் இருக்கிறோம் என்ற காரணம் தெரியாமலேயே  தமது வட்டத்திற்குள்  இருக்கின்றன.  சில புள்ளிகள் தம் அடிப்படை இயல்பினால்  வடடம் மாறி  விடுகின்றன.  யுயுத்சு, சல்லியன் போன்றவர்கள் இந்த வகையில்  வருகிறார்கள் (OUTLIER DATA POINTS).

ஆழமான,  அலையற்ற ஆற்று நீரோட்டம் போல செல்லும் பர்வா , பாரத வர்ஷத்தின் வரலாற்றில் நிகழ்ந்த பெரும் போரின்  சமூக, பொருளியல்,  உளவியல் கோணங்களை தொலை தூரப்பார்வையில் ஆராய்கிறது. போர்க்களத்தைக் காட்டாமல் , கண்டவர்கள் , கேட்டவர்கள்    கூற்றுகளை விலகி நின்றும் விரைவாகவும் தருகிறது. பல திறந்த திரிகளை விட்டுச் செல்கிறது. துரியோதனன் கடைசியில் என்ன ஆனான் என்பது வேறுபட்ட பார்வைகளில் யூகமாக ச் சொல்லப் படுகிறது. இறுதிச் சடங்கு செய்ய முடியாமலேயே கர்ணன் உடல் பிற வீரர் பிணங்களுடன் அடையாளமற்றுக் கிடக்கிறது. நிகழ்வுகள் பணிப்பெண்கள் , கொல்லர்கள், சாமானிய சிறு மன்னர்கள் மூலம் சொல்லப் படுகின்றன. 

அரசர், அறிஞர் போன்ற பெரிய புள்ளிகளுக்கும் ,  வீரர், சூதர்  போன்ற சிறிய புள்ளிகளுக்கும் இடையேயான பரிமாற்றங்களை , நகர்வுகளை, திரண்டெழுந்த இரு படைகளின் உருவாக்கத்தை, அணியைத் தெரிவு  செய்ய உருவாக்கிக் கொண்ட தர்க்கங்ககளின்       அபத்தத்தை , இரு பெரும் புள்ளிக் கூட்டங்களின் மோதலை, பேரழிவை  யதார்த்தமான மீள் சிந்தனையாகக் காட்டுகிறது. 

யாருக்காக , எந்தக் கொள்கைக்காகப் போர் செய்கிறோம் என்று அறியாத வீரர்களே அதிகம். இன்றைய வாக்காளர்களும் பெரிதாக முன்னேறி விட்டதாகத் தெரியவில்லை. ஜனநாயகத்தின் அணையா நெருப்பாகக்  கருதப் படும் அமெரிக்கா உட்பட. 

மாயத்திற்கும் இறைத்தன்மைக்கும் சிரமம் கொடுக்காமலே சாமானிய மனிதர்களின் முயற்சிகளாகக் கதையை நகர்த்துகிறார் ஆசிரியர். 

அடிமை இனங்கள் (பணிப்பெண்களுக்கு அரசனிடம் பிறந்த குழந்தைகள் மூலம்) உருவாகும் முறை, அரசர்களின் பலவீனங்கள், தொல் குழுக்களின் இயல்புகள், பேரறிஞர்கள்  தம் வாழ்வின் இறுதியில் முட்டி நிற்கும்  குழப்பங்கள்  (கிருஷ்ண துவைபாயனர்), வஞ்சம் ஒரு பெரும் வலிமையாக உருக்கொள்வது (துரோணர்),  போர்களுக்கான பொருளியல் தேவைகள் (ஆயுதம் செய்ப்பவர்களின்  வேலை வாய்ப்புகள்) இவற்றின் ஊடாக பெருங்காவியத்தின்   மாற்றுக்   கோணத்தை முன்வைக்கிறது.

தனி நபர்  பகடிக்கும் சமூகப்  பகடிக்கும் குறைவில்லை. கிருஷ்ணனின் புகழ் பெற்ற சமாதான தூதின் பேருரையில் கர்ணன் இருக்கையிலே     உறங்கி விடுகிறான். அதைக் கண்ட துரியன் மர்மப் புன்னகை புரிகிறான். அர்ஜுனனுடன் துவாரகைக்கு செல்லும் பயணத்தில் பருமனான சுபத்திரை தேரில் படுத்துத் தூங்கி  விழுந்து கொண்டேஇருக்கிறாள்.   போரின் பொது கௌரவர் படையின் குடில்கள் பின்புறம் தண்ணீர் இல்லாமல் பெரும் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.  போர்  முடியும்போது  திருதராஷ்ட்டிரனின் அரண்மனையில்  உணவிற்குப் பஞ்சம். 

பீமன் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளாத முரட்டு வீரனாகவும் தர்மன் ஆசையை அறச் சொற்களால் அரைகுறையாக மூடி மறைத்துக் கொள்பவனாகவும் காட்டப் படுகிறார்கள்.

உதிர    உறவு  மற்றும் உரிமைகளின் அடிப்படைகள் கேள்விக்கு உள்ளாக்கப் படுகின்றன. நியோக முறையில் பிறந்த குழந்தை மீது பெற்றோருக்கு எவ்வகை உரிமை உள்ளது, என்று தொடங்கும் சிக்கல்களின் உச்சமாக பாஞ்சாலி தன் ஐந்து மகன்கள் கொல்லப் பட்ட போது எழுப்பும் வினா நிற்கிறது. பீமன் மகன் கடோத்கஜன் இறந்த போதும் அர்ஜுனன் மகன் அபிமன்யு இறந்த போதும் தந்தையர்கள் அடைந்த துயரின் ஆழம்  ஐவர் மாண்டபோது வெளிப்படவில்லையே  என்று கதறும் திரௌபதி இறந்த இவர்களுக்கு தான் மட்டுமே உறவு என்று அழுகிறாள்.  துக்கம் கொண்டாடும் முறைகள் குறித்த அடிப்படை வினாக்களைத் தூண்டுகிறது. பெற்றோர் எனும் இரு புள்ளிகளிடையே  குழந்தைகள் மீதான  அன்பு பங்கிடப் பெறும்  முறைமைகள் , பல கணவர் முறையில் இருந்து விலகும் பரிணாமத்தின் வேர்கள்  துலங்குகின்றன.

பீமன் தோளில் ஓங்கி அடிப்பதன் மூலம் தன் அன்பை வெளிப்படுத்தும் சால கடங்கடியம் அவள் கட்டளையை ஏற்று தன்னை விட்டு  நினைவிலாப் பருவத்திலேயே விலகிய தந்தைக்காக ரத்தம் சிந்தும் கடோத்கஜனும் , வேளாண்மை செய்வதற்காக காட்டில் நெருப்பு வைக்கப் பட்டதால்  மரங்களுடன் கருகி விடும் அசுரர் இனத்தவரும் ,  அரசுகளின்  அடித்தளத்துக்குள் புதைக்கப் பட்ட அழிவுகளுக்கு மௌன ஆவணங்கள்  ஆகின்றனர்.

இமயத்தின் உயரத்தில் வாழும் வலிமையும் ஒளியும் கொண்ட தேவர்கள் , காடுகளின்  நாக,அசுர,  ராட்சச குலங்கள் , இவற்றில் மேலுள்ளவரை வணங்கியும் கீழுள்ளவரை ஒழித்தும் நிலை நிறுத்திக் கொண்ட அரச இனங்கள் வியாசரின் ஆதி கதையை நாம் நிற்கும் தரைக்கு இறக்கி அணுக்கமாக செய்கின்றன.  பீமன், அர்ஜுனன், கிருஷ்ணனின் பயணங்கள் , காடுகளின், கடலின் வர்ணனை  மூலமாகவும் நீண்டு கொண்டே செல்லும் நினைவோட்டங்கள்  மூலமாகவும்      பேருருக் கொள்கிறது பர்வா.

கீதை உபதேசம் எல்லோருக்குமாக நிகழ்கிறது. எளிமையான கவுன்சிலிங் ஆக நிற்கிறது. நீதிக்காகவும் வஞ்சிக்கப் பட்டவர்களுக்காகவும் எழும் குரலாக உள்ளது கண்ணன் குரல்

ஊழின் பாதை மாந்தர் அறியாமலேயே தன் திசையை தீர்மானித்து விடுகிறது. பீஷ்மர்  மணம் புரியாவிரதம் எடுத்துக் கொண்டபோதும் நகருக்கு அருகிலேயே கங்கைக் கரையில் தங்கிக் கொண்டது ஏன் என்னும் வினா விடையற்றது. 

மகன் உண்ணா நோன்பில் இறந்த பிறகு கிருஷ்ண துவைபாயனர் அடையும்  சலனங்கள், தாம் வேதத்தை இயற்றியவரா அல்லது தொகுத்தவர் தானா என்பது போன்ற இறுக்கமான சிக்கல்கள்  ஒரு புறம் ;     மறுபுறம் விழியிலா அரசன் எப்படி சிறுநீர் கழிக்கச் செல்வான்,  போர்க்களத்தில் உடைந்த ஆயுதத்தை சேகரித்து உருக்கி தாழ்ப்பாள் நாதாங்கி செய்து விற்கும் கொல்லன் என, மண்ணோடு தவழும் பிரச்சனைகள் பைரப்பாவின் கவனத்தில் இருக்கின்றன.   .  சமுதாயத்தின்  புழக்கடையை கவனம் செய்வதால் மக்கள் இலக்கியமாக மிளிர்கிறது. 

நகர வழி இன்றி தன் மேல் அடிக்கப் பட்ட ஆணியின்  அடியில் தவிக்கும் சிறிய புள்ளிகளின் சிக்கலை இக்கதை பேசுகிறது,  இறைத்தன்மைக்கு வேலை கொடுக்காமல்.

இன்று இந்தியாவில் மக்கள் வாழ்வோடு ஒன்றி விட்ட பாரதக் கதை மாந்தர் பலருக்கு ஆலயங்கள் உள்ளன.  நம் கிராமங்களின் கதைகளுடனும் இயற்கையுடனும் அவர்கள் பெயர்கள் ஒன்றி விட்டன         மேற்குத் தொடர்ச்சி மலையின் குந்திப் புழை , வெள்ளிங்கிரி மலையில் நிற்கும் பீமன் களி  உருண்டை என்று சொல்லப் படும் பெரிய பாறை உருண்டை, கேரளத்தில் நீத்தார் சடங்கிற்கு உகந்த இடமாக நம்பப் படும் ஐவர் மடம்,  பல இடங்களில் திரௌபதி அம்மன் கோயில், சில இடங்களில் காந்தாரி அம்மன் கோயில்களில்  தொடர்ந்து இடறி விழுந்து கொண்டிருக்கிறோம்.  பலவற்றைச் சொல்ல விரும்பி சிலவற்றை மட்டும் அவசரமாக  முன்னோர்கள்  விட்டுச் சென்றுள்ளதாக தோன்றுகிறது. 975 பக்கங்களில் படித்து முடித்ததும் சுமையற்ற பெருமிதம் உருவாகிறது. 

போர் முடிந்ததும் பெருமழை பொழிகிறது. விஷ்ணுபுரத்தை அழிக்க வரும் ஊழி வெள்ளம் நினைவுக்கு வருகிறது.  வரலாற்றின் வயதான பக்கங்களை துடைத்தழித்து புதியவை முளைத்தெழ நீரும் நெருப்பும்  விடடால் சிறந்த தூய்மைப் பணியாளர் யார் இருக்கிறார்கள்? 

காலம் தவறிப் பொழியும் மழையில்  காட்டப் படும் இறுதிக் காட்சி புதிய முளைத்தலுக்கு அழகிய சித்திரம். அர்ஜுனனால் எழுந்து சென்று வாளைக் கூட எடுத்து வைக்க முடியவில்லை. திரௌபதிக்கும் குந்திக்கும் முரண்பாடு ஏற்படுகிறது.  கொட்டும் மழையில்  கூ ண்டு  வண்டிக்குள் கொல்லனின் மனைவிக்கு குழந்தை  பிறக்கிறது. ஆனால் உத்தரைக்கு குழந்தை இறந்து பிறப்பதாகக் காட்டுகிறார்  பைரப்பா.

இந்தப் பகுதியை 2021 ஜனவரி ஆறாம் தேதி இரவு வாசித்துக் கொண்டிருக்கையில் காலம் தவறிப் பெய்து கொண்டிருக்கும் மார்கழி மாத மழை  புவியை ஆவேசத்துடன் அறைந்து கொண்டிருந்தது. சால கடங்கடி நினைவில் துலங்கி எழுகிறாள், தனது பேரனுக்கு மரக்குடிலில்   ஊன்  உணவை ஊட்டியபடி .

வியாசர் முதல் பைரப்பா  வரை சொல்லித் தீராத , முளைத்துக் கொண்டே இருக்கும் பாரதத்தின் பக்கங்கள் போல பெருமழை விழுந்தது.

மீறலின் பெருவிளையாடல் – ராகவேந்திரன்

காப்ரியாலா கார்சியா மார்க்வெஸின் “நூறாண்டுத் தனிமை” வாசிப்பு

நிறுவனமாக்கப் பட்ட மதம், குடும்ப நெறிகள், அறிவியலின் அரசியல், அரசின் அதிகாரம் இவற்றின் அடிப்படை அலகாக மனிதன் பிறன் மீது செலுத்த விரும்பும் ஆதிக்க உணர்வு என்றும் இருக்கிறது. அவற்றை மீறும் ஆதார எழுச்சியும் மனிதர்களை சிறிய, பெரிய கலகங்கள், புரட்சிகளை நோக்கி செலுத்தி இருக்கிறது.  இந்த ஊடாட்டத்தின் இடையே கல்லை இணைக்கும் சிமெட்டிப்பால் போல மானுட அன்பு  ஒழுகி இருப்பதை வரலாறு கண்டு கொண்டிருக்கிறது.  புதியவற்றைத் தேடிப் படைக்க வேண்டும் என்ற உந்துதலும் மனித ஜீன்களை மாற்றம் என்னும் பாதையில் செலுத்திக் கொண்டிருக்கிறது.

ஆதிக்கம், அன்பு, மீறல், தேடல் இவற்றின் அடிப்படை  மானுட விசைகளை மிகைக் கனவு கொண்டு நெய்தெடுத்த நீலத்துணியாக நூறாண்டுத் தனிமை விரிகிறது.

மார்க்வெஸ் பதினெட்டு மாதங்கள் தினமும் தொடர்ந்து எழுதியுள்ள மாய நடப்பு வாதப் புதினம்.  மகோண்டா என்ற கற்பனை ஊரின் ஏழு தலைமுறைகளின் வாழ்வையும் வீழ்வையும் நகை முரண்களுடனும் அதிர்ச்சியூட்டும் விலகலுடனும் கேளிக்கையுடன் சித்தரிக்கிறது.

புரட்டிப் போடல்

மரணம் ஏன் சிரிப்பைத் தருவிக்கக் கூடாது? அழிவை ஏன் எப்போதும் துயரத்துடனே எதிர்கொள்ள வேண்டும்? இவை போன்ற அடிப்படையை அசைக்கும் வினாக்களை எழுப்பினால் அவரை ஒரு ‘மாதிரியாக’ப் பார்ப்பார்கள் அல்லவா? அந்த ஒரு மாதிரியான  மனநிலையை சரியானது என்று வைத்து கொண்டு படைப்பிற்குள் இறங்க வேண்டும்.

ஒவ்வொரு சொல்லும் பழக்கத்தாலும் காரணத்தாலும் ஒரு குறிப்பிட்ட உணர்வு நிலையை எழுப்பும். அந்தச் சொல்லுடன் முற்றிலும் முரண்படும் வேறு ஒரு சொல்லைச் சேர்த்தால் ஒரு திகிலைத் தரும். நாவல் முழுவதும் இது போன்ற ‘குண்டக்க மண்டக்க’ உணர்வுச் சேர்க்கைகளால் கட்டப் பட்டுள்ளது. அதை ஒரு அறிவரின் கலை அழகுடன் கொடுத்துள்ளார் மார்க்வெஸ்.

மிகவும் துயரமான ஒரு நிகழ்வை விவரித்துக் கொண்டே செல்கையில், ஒரு வெடிக்கும் நகைச்சுவையைத் தூக்கிப் போட்டு விடுகிறார். அழுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் வாசகன் திடீரென சிரித்துக் கொண்டிருக்கிறான். அப்படியே ஒரு இரண்டு வயதுக் குழந்தையாக வாசகனை மாற்றி விடுகிறார். அது எதன் பிடியிலும் இல்லை. எப்போதும் கேளிக்கை.

உதாரணமாக, அழகியான ரெமெடியோஸ்  ஒரு விரிப்பை உலர்த்திக் கொண்டிருக்கும்போதே காற்று அவளை விரிப்புடன் தூக்கி விண்ணிற்கு எடுத்துச் சென்று விடுகிறது. மதச் சடங்கும் கட்டுப் பாட்டு வெறியும் கொண்ட பெர்னாண்டோவின் ஒரே கவலை , தனது கம்பளம் பறந்து போய்விட்டது தான். அதைத் திருப்பும்படி கடவுளை வேண்டிக் கொள்கிறாள்.

பாத்திரப்படைப்பும் காலமும்

ஜோஸ் அர்கேடியோ புயின்டியா:

 புதியவற்றைத் தேடுபவன். ஆற்று வழியே பயணித்துக் கடலைக் காணத் துடிப்பவன். நாடோடிகளின் தொடர்பால் புதிய கருவிகளைக் கொண்டு வந்து ஊரை மாற்றுபவன். தான் செய்த கொலையின் குற்ற உணர்ச்சி ஆவியாக வந்து பேசியதால் பித்துப் பிடித்தவன். ஒரு செஸ்ட்நட் மரத்தினடியில் கட்டிப் போடப்படுகிறான். எப்போதும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பித்துப் பிடித்தவன் அறிவியலும் ஒரு வகை மூட நம்பிக்கைதான் என்று காட்டுகிறான். அவனது சிறையை விடுவித்த போதும் மரத்தை விட்டு எங்கும் போகாமல் அமர்ந்திருக்கிறான்

உர்சுலா

கதையின் ஆதாரப் புள்ளி. ஏழு தலைமுறைகளின் வீழ்ச்சிக்கு சாட்சியாக இருப்பவள். சராசரிக்கும் சற்று அதிகமான ஆற்றலுடனும் அன்புடனும் ஒரு வீட்டுத்தலைவி அன்னையாக, மூதாட்டியாக மாறி மூதாதையாக, படிமமாகச் சமைகிறாள். 115 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து அனைத்துத் துயரங்களும் தந்த வடுக்களைத் தாங்கி நிற்கும் பெருமரம். சகுனங்களை குறிப்பாக அப சகுனங்களை நம்புகிறவள். கண் பார்வை போய்விட்டபோதும் பிற புலன்களை வைத்து முழு விழிப்புடன் வாழ்கிறாள். வீடு வறுமையும் கரையானும் பிடுங்க இடிந்து கொண்டிருக்கும் நிலையில் மரணப் படுக்கையிலிருந்து எழுந்து மீண்டும் வீட்டை மறு சீரமைப்பு செய்கிறாள். தன் மகன் செய்யும் புரட்சிக் கொலைகளைத் தட்டிக் கேட்பவள். மகனால் ராணுவ விசாரணை செய்து கொல்லப் படும் கன்சர்வேடிவ் கட்சியின் மேயரை மீட்கக் கடைசி வரை போரிடுபவள். வீடு முழுவதும் விருந்தினரால் நிறையவேண்டும் என்று நினைப்பவள். தன் வம்சத்தின் மீதும் மகோண்டா கிராமத்தின்  மீதும் பற்று கொண்டவள். ஒவ்வொரு குடும்பத்தையும் உளுத்துப் போகாமல் காக்கும் சூரிய ஒளியாக ஒரு உர்சுலா இருக்கிறாள் என்று தோன்றுகிறது.

கர்னல் அவ்ரெலியானோ புயின்டியா

ஜோஸ் – உர்சுலாவின் மூத்த மகன். சாதாரண மனிதன் திடீரென புரட்சியாளனாக மாறும் போது அந்த மாற்றத்தின் உண்மையான காரணங்களைக் கண்டறிவது கடினம். மகோண்டாவில் அரசாங்கம் வருவதற்கு முன் எல்லாம் ஒழுங்காகச் சென்று கொண்டிருந்தது. திடீரென அரசாங்கம் வீடுகளை நீல வண்ணத்தில் பூசவேண்டும் என அறிவிக்கிறது. வெண்மைப் பூச்சு தான் செய்வோம் என்றான் ஜோ.

அரசின் மென்மையான இரும்புக் கரங்களை உணர்ந்த அவ்ரெலியானோ திடீரென்று விடுதலைப் படையில் சேர்கிறான். பல கொலைகள், தோல்விகள், வெற்றிகள், காயங்கள்  பட்டு, இறுதியில் சுடப்படும் தருவாயில் பலமுறை தப்புகிறான். ஒரு கட்டத்தில் தான் போர் செய்ததன் காரணம் சுய ஆணவத்தின் நிறைவுக்காகத்தான் என்று உணர்ந்து அமைதி உடன்படிக்கை செய்துகொள்கிறான். அதனால் அவன் சகாக்களுக்கு அதிகத் துன்பம் வருகிறது. துரோகி பட்டம் பெறுகிறான். வீட்டில் தன் பட்டறையில் மீண்டும் சிறிய தங்க மீன்களை உருவாக்கி, உருவாக்கி அழித்து, முடங்கி விடுகிறான். தனக்குத்தானே விளைவித்துக் கொண்ட தனிமையால் பட்டுப் போன மரம் அவ்ரெலியானோ.

ஜோஸ் அர்கேடியோ

உர்சுலாவின் போக்கிரிப்பிள்ளை. மகோண்டாவில் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பல கொடுமைகளை நிகழ்த்துபவன். ரெபாக்கா இவன் மனைவி. சந்தேகத்திற்கு இடமாக மரிக்கிறான். இவனது சாவின் போது ரத்தத்துளி நகர்ந்து வந்துவீட்டை விட்டு வெளிவந்து சாலையில் ஓடி, அன்னை உர்சுலாவிடம் வந்து நிற்கும் இடம் முக்கியமானது. இவனது குழந்தைப் பருவத் ‘தனிமை’ இவனது திருகிய ஆளுமைக்கு வித்தாக உள்ளது. 

அமரந்தா

ஜோஸ் –உர்சுலாவின் மகள். அன்பிற்கும் கோழைத்தனத்திற்கும் இடையே ஊசலாடி உண்மைக் காதல்களை மறுத்து சிலரின் மரணத்திற்கும் துன்பத்திற்கும் காரணமாகி, தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்பவள். இவளது மரணத் தேதியை முன்பே அறிவித்து விடுகிறாள். அதன் பின் நடப்பது அழகிய இருண்மை நகைச்சுவை. ஊர் மக்கள் இறந்து போன தங்கள் உறவினர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று கடிதங்களைக் கொண்டு வந்து அமரந்தாவிடம் கொடுக்கிறார்கள். எப்போது இறப்பாள் என்று பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். பெட்டி நிறைய கடிதங்கள் சேர்ந்து விடுகின்றன. தானே தயாரித்த அழகிய மரண ஆடையை அணிந்து கொள்கிறாள். உர்சுலாவிற்கு தன் மகளை உயிருடனேயே புதைத்து விடுவார்களோ என்று கவலை. பாதிரியாரும் காலம் வருவதற்கு முன்பே ஒருமுறை வந்து பார்த்து விடுகிறார். ஒரு வேளை பொய்சொல்கிறாளோ என்ற ஐயமும் அவருக்கு வருகிறது. கடைசியில் அமரந்தா குறித்த முகூர்த்த்திலேயே மரணிக்கிறாள். 

பெர்னான்டோ

இறுகிப் போன நிறுவன மதத்தின் பிரதிநிதி. தன்னை அரசி என்று நினைத்துக் கொள்பவள். பிணங்களுக்கு வைக்கும் மலர் வளையங்களைச் செய்து கொண்டிருப்பவள். குழந்தைகளை இரக்கமின்றி நடத்தும் ‘நற்குணம்’ கொண்டவள். சாவைக் கொண்டாடுதல், துக்கம் அனுசரிப்பு, இறுதிச் சடங்குகளில் நிபுணத்துவம் இவையே இவளது வாழ்வியல் நோக்கம். பாவத்தின் உருவமாகத் தான் கருதும்  மானுடத்தின் மீது வெறுப்பை அபிடேகம் செய்பவள்.

 படைப்பில் பொதுவான ஒரு போக்கு ஆர்வமூட்டுவது. பாவிகள் என்று  வரையறுக்கப் படுபவர்கள் முதிர்ந்து கனிந்து கருணை கொள்கிறார்கள். வழி தவறியவர்கள் எல்லாம்  முடிவில்  நிறைவடைகிறார்கள். உதாரணம் , சோதிடம் சொல்லும் பிலர் டெர்னாரா. கடைசி வரை வெடிச் சிரிப்புடன் இருப்பவள். செகுண்டாவின் கள்ளக் காதலி பெட்ரா கோட்ஸ்  இன்னொரு சிறந்த உதாரணம்

ரெனடா ரெமெடியோஸ் (மீமி)

அழகின் உருவான மூத்த ரெமெடியோஸ் பெயர் இவளுக்கும் வைக்கப் படுகிறது. பெர்னான்டோ – அவ்ரிலியானோ செகுன்டோவின் மகள். தனது சடங்கு வெறி பிடித்த அன்னைக்கு ஏற்ற வகையில் தனது தனிமையை சமாளித்து வளர்கிறாள். இசைப் பள்ளிக்கு அனுப்பப் படுகிறாள். யாரையும் கேட்காமல்  ஒரு வார விடுமுறைக்கு மூன்று கன்யாஸ்திரிகளையும்     மாணவிகளையும் வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறாள். அதன் பின் வீடு கலவர பூமியாகிறது. கடைசிப் பெண் சாப்பிட்டு முடிந்ததும் அடுத்த வேளை உணவு தொடங்குகிறது கழிவறை போதாத காரணத்தால் சேம்பர் குப்பிகளை வாங்குகிறார்கள். பிறகு அவற்றைக் கழுவுவதற்காக வரிசையில் நிற்கிறார்கள் மாணவிகள். 

மீமி ஒரு கார் மெகானிக்குடன் காதலில் விழுகிறாள். தாய் பெர்னாண்டோ தொலைதூர தேசத்தின் கன்னிமாடத்தில் மகளை அடைத்து வைக்கிறாள். ஒரு குழந்தை பார்சலில் வருகிறது. அதில் வரும் குடும்பத்தின்  ஆறாவது வாரிசான அவ்ரிலியானோவை பாட்டி பெர்னாண்டோ அறையில் அடைத்து ரகசியமாக வளர்க்கிறாள். அவன் புயின்டியா குடும்பத்தின் கல்யாண குணங்களுடனும் துடுக்குடனும் வளர்கிறான். 

பிய்ட்ரோ க்ரெஸ்டா : 

இத்தாலியிருந்து வந்து புயின்டியா குடும்ப்ப் பெண்களுக்கு இசையும் நடனமும்  கற்றுத் தந்து ரெபக்காவிடம் காதலில் விழுந்து அவள் அர்காடியோவை நாடிவிட, அமர்ந்தாவைக் காதலித்து , அவளாலும் புறக்கணிக்கப் பட்டு, ஒரு நல்ல நாளில் தனது இசைக்கூடத்தில் அனைத்து விளக்குகளும் எரிய, அனைத்துக் கருவிகளும் இசைக்க, இயந்திர பொம்மைகள் ஒலிக்க, விரலை அறுத்துக் கொண்டு உயிர் விடுபவன்

காலம்: 

காலமும் மகோண்டா என்ற ஊரும் படைப்பில் முக்கிய உருவகங்கள். காலம் நேர் கோட்டில் நகர்வதில்லை என்று உணர்கிறாள் உர்சுலா. மீண்டும் மீண்டும் ஒரே சம்பவங்கள் சில தலைமுறைகளின் இடைவெளியில் நடக்கின்றன. இதைக் காணும் துயரம் உர்சுலாவிற்கு நடக்கிறது. பேரக் குழந்தைகளுக்கு தாத்தா/ பாட்டி பெயர் வைப்பதில் ஒரு தர்க்கபூர்வ நம்பிக்கை இருக்கிறது. ஒருவரே மீண்டும் வந்து வாழ்வது போல உள்ளது.

வாழைப்பழப் படுகொலை

லத்தின் அமெரிக்க நாடுகளில் முதலாளித்துவ வல்லரசுகள் நடத்திய படுகொலைகளின் வடு இந்த இலக்கியங்களில் வெளிப்படுகிறது யுனைடட் ஃப்ரூட் கம்பெனி தொழிலாளர்களின் போராட்டங்களை பொம்மை அரசின் ராணுவத்தை  வைத்து முறியடிக்க 3000 ஆயுதமற்ற தொழிலாளிகளையும் சுட்டுத் தள்ளிவிட்டு ரயிலில் எடுத்து அழுகிய பழங்கள் போல கடலில் வீசி விடுகிறது. அப்படி ஒரு நிகழ்வு நடக்கவேயில்லை என்று அரசும், ஊடகமும் சாதித்து விடுகின்றன. வாழைப்பழக் குடியரசு என்று ஓ ஹென்றி ஹோன்டுராஸ், குவாடிமாலா நாடுகளை அழைக்கிறார். அந்த்த் துயரை லத்தின் அமெரிக்கப் பிரதிநிதியாக மார்க்வெஸ் வெளிப்படுத்துகிறார்.

பகடிப் பரப்பு

மகோண்டாவில் முதன் முதலில் ஊருக்குள் ரயில் வரும்போது பயந்து ஓடி வந்த பெண் சொல்கிறாள் “ அதோ வருகிறது, அச்சமூட்டும் ஒன்று; ஒரு சமையலறை ஒரு கிராமத்தையே இழுத்து வருவது போல” ( க சீ சிவக்குமாரின் ஆதி மங்கலத்து விசேஷங்கள் நினைவுக்கு வருகிறது)

அவ்ரலியானோ முன்னாள் புரட்சி தளபதி. அவனைப் பார்க்க வருபவர்கள் மரியாதைக்காக வருவதில்லை. ஒரு வரலாற்றுச் சின்னத்தை ஒரு அருங்காட்சியகப் புதைபடிவத்தைக் காணத்தான் வருகிறார்கள் என்பதை அவனே உணர்ந்து கொள்கிறான்.

  1. வீட்டில் இறந்தவர்களின் ஆவிகளும் உயிர் வாழ்பவர்களின் ஆவிகளும் வளைய வந்து கொண்டிருக்கின்றன
  2. அமரந்தா ஆடை நெய்வது தனிமையை வெல்வதற்காக அல்ல; வளர்த்தெடுப்பதற்காக
  3. அறிவியல் பூர்வமான மூட நம்பிக்கை
  4. புனித ஜோசப்பின் சிலைக்குள் பொற்காசுகளைப் புதைத்து விட்டு புரட்சி காலத்தில் யாரோ உர்சுலாவிடம் கொடுத்துச் செல்கிறார்கள். பொற்காச்களைக் கண்டறிந்த்தும் அதைப் புதைத்து விட்டு , வீட்டுக்கு வரும் எல்லா விருந்தினர்களிடமும் ‘நீங்கள் ஒரு சிலையைக் கொடுத்து வைத்துச் சென்றீர்களா” என்று காலம் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கிறாள். கிழவியிடம் எப்படியாவது புதையலின் இடத்தைக் கறந்து விடவேண்டும் என்று பலவகையில் செகுன்டா நோண்டிக் கொண்டிருக்கிறான். போதம் கெட்டு கால உணர்வை இழந்து விட்ட போதும் கடைசி வரை கிழவி சொல்லவில்லை
  5. “துல்லியமான குழப்பம் “ ;” புதிதாய்ப் பிறந்த கிழவி”
  6. காலத்திற்கும் விபத்து ஏற்படலாம். அது கால் தடுக்கி நிரந்தரமான ஒரு துண்டை ஒரு அறையில் விட்டுச் செல்லலாம்
  7. செகுன்டோ இரட்டையர்கள் சிறு வயதில் தங்கள் அடையாளங்களை மாற்றிக் குழப்பி விளையாடுவார்கள். அவர்கள் ஒரே நாளில் இறக்கிறார்கள். குடிபோதையில் இருந்த நண்பர்கள் சரியாக அவர்களை மாற்றிப் புதைத்து விடுகிறார்கள்
  8. அழகிய முரண்  – Hallucinational Lucidity
  9. சுவரில் எழுதப்பட்ட புனிதமான மடமை
  10. கடைசியாக, ஜோஸ் தவறுதலாக ஒரு கருவியை நகர்த்த, அது பொருத்திக் கொண்டு இசை வெளிவந்த்து
  11. சைவ உணவுக்காரர்களிடம் மட்டும் காணப்படும் அந்த விரக்திப் பார்வை
  12. தனது திருமண நாளில் படபடத்து தனது  மோதிரத்தை கீழே போட்டு உருட்டி, காலால் அமுக்கி எடுத்து அசடு வழியும் அவ்ரலியானோ
  13. பெருமிதம் என்னும் படுகுழியில் இருக்கும் மக்கள்
  14. புகழ் என்னும் சாணக்குவியலில் பன்றி போலப் புரளுதல்
  15. கடும் போர்ச்சூழலின் இடையே தந்தியில் விவாதிக்கும் தளபதி “மகோண்டாவில் மழை பெய்கிறது” என்பான்
  16. வாழ்க்கை சேகரித்து வைத்த ஏக்கக் குப்பைகளின் ஒளி இழக்கும் அடுக்குகள்
  17. போலியான, ஈர்க்கும் நற்குணம்

பெண் சண்டைகள்

குடும்பத் தலைவிகள் அக்கம் பக்கத்தில் , வீட்டுக்குள் பூசலிடுவதை ராஜ் கௌதமன் (சிலுவை ராஜ் சரித்திரம்), S K பொற்றேகாட் (ஒரு கிராமத்தின் கதை) ரசித்து வர்ணித்திருப்பார்கள். மார்க்வெஸின் பெர்னாண்டோ தன் கணவனைத் திட்டுவதை மூன்று பக்கங்களுக்கு கவிதை போலப் படைத்திருக்கிறார். 

மீறல் 

புதினமெங்கும்  தடை மீறலின், ஒழுக்க வீழ்ச்சியின் துடிப்பு காணக் கிடைக்கிறது. அறிவின் வளர்ச்சியும் தடைகளை மீறித்தான் வந்திருக்கிறது. உறவுகளின் பொய் ஒழுக்கங்கள் சில நேரங்களில் அதிர்ச்சியை ஊட்டுகின்றன. அரசு – மதம் – கட்டுப் பாட்டிற்கு எதிரான எளிமையான மாற்றாக ஆசிரியர் மீறலை முன்வைக்கிறார்.  லத்தின் அமெரிக்காவின் சுரண்டப்பட்ட இனத்தின் குரலாக மேற்கத்திய உலகைப்  பார்த்து, விக்டோரியன் அறத்தின் பசப்பைப் பார்த்து “போடா” என்று சொல்லும் குரல். இந்த உடைக்கும் விசையை உருண்டை பிடித்து ஒட்டி வைக்கும் பசையாக உர்சுலா தனித்து நிற்கிறாள்>

உருவகங்கள், படிமங்கள்

 மயக்குடன் காட்டப் படும் உருவகங்களாக மஞ்சள் பட்டாம் பூச்சிகள், மஞ்சள் மலர்கள், மரிக்கும் பறவைகள், சதுப்பு நிலங்கள், பழைய எலும்புக்கூடான கப்பல், அறைக்குள் அடுக்கி வைக்கப்பட்ட சாம்பர் குடுவைகள்,  உருக்கி உருக்கி மீண்டும் உருவாக்கும் தங்க மீன்கள், பழைய சுவடிப் பட்டைகள், வீட்டின் அறைகள், கரையான்கள், எறும்பு இழுத்துச் செல்லும்  குழந்தை , கரப்பான்கள், தேள்கள் என்ற மாய உருவக வெளியைக் காண்கிறோம்

மகோன்டா கிராமம் உலகிற்கும் ஜோசின் குடும்பம் மனித இனத்திற்கும் நூறு ஆண்டு வரலாறு காலத்திற்கும் படிமங்களாக உள்ளன.

நூறாண்டுத்தனிமையை ஒரு நீர்த்துப் போன கவிதை என்று ஒரு மேலை விமர்சகர் சொல்கிறார். அதுவே ஒரு சிறந்த பாராட்டுதான். ஒரு கவிதையை நாவலாக இழுப்பதற்கு அதன் காதுகளை இழுக்க வேண்டும். அதற்கு மாய யதார்த்தம் நல்ல வடிவம்.

இத்தாலியிலிருந்து வந்த இசைக்கருவையை ஜோஸ் பிரித்து மேய்ந்து கெடுத்து விடுகிறான். வாழ்வெனும் இசைக்கருவியை ரசிக்காமல் அழித்து விடும் முட்டாள் தனம் தான் தனிமைப் படுதல். தனிமையின் இசையை மீறலின் துடுக்குடன் உரக்க ஒலிக்கும் பழங்குடியின் குரல் நூறாண்டுத் தனிமை.  

***

ஆர் ராகவேந்திரன்

பள்ளிகொண்டபுரம் வாசிப்பு – காளீஸ்வரன்

உடலிலும் மனதிலும் பலமில்லாத, சாமானியத்தனத்தின் பிரதிநிதியாக விளங்கும் அனந்தன் நாயரின் ஐம்பதாவது பிறந்ததினத்தில் துவங்குகிறது ”பள்ளிகொண்டபுரம்” நாவல். அவரது வாழ்கையின் இறுதி நாற்பத்தி எட்டு மணி நேரங்களில் அனந்தன் நாயரின் மனவோட்டம் மூலமாக, அவரது வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை, அதனூடாக அக்காலகட்டத்தை, சாமானியர்கள் மீது எவ்வித கருணையும் காட்டாத வாழ்க்கையை நாமும் வாழ்ந்து பார்க்க வைத்திருக்கிறார் திரு.நீல.பத்மநாபன்.

பேரழகியான கார்த்தியாயினியை, விருப்பமின்றி மணக்கும் அனந்தன் நாயரின் தாழ்வுணர்ச்சி அதிகரிக்க, அவளது அழகே போதுமானதாக இருக்கிறது. அவர் அஞ்சும், சமயங்களில் ஆராதிக்கும் கார்த்தியாயினியின் அழகே அவர்கள் வாழ்வில் புயல் வீசுவதற்கான களம் அமைக்கிறது. கார்த்தியாயினியின் அழகால் கவரப்படும் “தகஸில்தார்” விக்ரமன் தம்பியால், அனந்தன் நாயருக்கு பதவி உயர்வுகள் கிடைக்க, அதற்கான காரணத்தை அனந்தன் நாயர் எளிதில் யூகிக்கிறார். அலுவலகத்திலோ, அதிகாரத்திடமோ அவர் காட்ட முடியாத கோபம், மனைவி மீது திரும்ப, ஒரு கட்டத்தில் அவர் பயந்தது அல்லது ஆழ்மனதில் விரும்பியது நடந்தே விடுகிறது. 41 நாட்கள் நிர்மால்ய தரிசனம் முடிந்து வரும் அனந்தன் நாயர் நுழைவது கார்த்தியாயினி நீங்கிச்சென்ற வீட்டில். மகன் பிரபாகரன் நாயர் மற்றும் மகள் மாதவிக்குட்டியுடன் தனித்து விடப்படும் அனந்தன் நாயர், தன் முழுவாழ்வையும் அவர்களுக்கெனவே செலவிடுகிறார். வயது வந்த மகள் மற்றும் மகனின் சமீபத்திய நட்புவட்டாரம் குறித்து அவர் கேள்விப்படும், காணும் விசயங்கள் அவருக்கு உவப்பாய் இருப்பதில்லை. தன்னுடைய தனிப்பட்ட வாழ்வைப் பற்றியும், அவர்களுடைய எதிர்காலம் குறித்தும் தன் பிள்ளைகளிடம் அன்ந்தன் நாயர் பேசும் இரவே, அவருடைய இறுதி இரவாய் மாறுவதில் முடிகிறது இந்நாவல்.

*

நாவலின் மையக்கதாப்பாத்திரமாக வரும் அனந்தன் நாயரின் பார்வையிலேயே பெரும்பாலான சம்பவங்கள் கூறப்பட்டுள்ளன. இந்நாவலின் மிகப்பெரிய பலம் இதன் கூறுமுறை. திருவனந்தபுர வீதிகளையும், அதனூடே பிணைக்கப்பட்ட அனந்தன் நாயரின் நினைவுகளையும் மிகக் கச்சிதமான சொற்களால் சொல்லப்பட்டிருக்கும் விதம், திருவனந்தபுரத்தில் நாமும் அலைந்து திரிந்த உணர்வைத்தருகிறது. குறிப்பாக, திருவனந்தபுரம் இந்நாவலில் வெறுமனே நிலப்பரப்பாக காட்டப்படாமல், அவ்வூரின் தெருக்களும், கோவிலும், சிலைகளும் அனந்தன் நாயரின் வாழ்க்கைச் சம்பவங்களை அவர் நினைவிலிருந்து மீட்டெடுக்கும் கண்ணியாக அமைந்திருப்பது, அவருக்கிணையான பாத்திரமாக திருவனந்தபுரத்தையும் கருத வைக்கிறது. 

இயல்பிலேயே நோய் வாய்ப்பட்டு அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் அனந்தன் நாயர், மனதளவிலும் வலுவற்றவர். அவரின் தாழ்வுணர்ச்சியும் தன் மனைவிக்கு தான் எவ்விதத்திலும் தகுதியற்றவன் எனும் அவரது ஆழ்மனவோட்டமுமே, விக்கிரமன் தம்பியின் நோக்கத்தை, ஆரம்பத்திலேயே தெளிவாகப் புரிந்து கொள்ள வைக்கிறது. தொடரும் நாட்களில் இயல்பான அல்லது எப்போதுமிருக்கும் விசயங்களில் கூட குற்றம் கண்டு கார்த்தியாயினியை நோகடிக்கும் அனந்தன் நாயர், அவரைப் பிரிந்து செல்லும் முடிவை நோக்கி அவளைத் தள்ளுகிறார். அவ்வகையில், தன்னுடைய தாழ்வுணர்ச்சி எனும் பள்ளத்தை, தியாகத்தைக் கொண்டு நிரப்ப அவர் முயல்வாதக் கருதுகிறேன். 41 நாள் நிர்மால்ய தரிசனம் முடிந்து வீட்டுக்கு வருகையில், மனைவி இல்லாததை உணரும் போது, முதலில் அவருக்கும் வருத்தம் மேலிட்டாலும், நேரம் செல்லச் செல்ல அதை ஒருவகை விடுதலையாகவே உணர்கிறார். இந்நாவல் முழுவதிலும், அனைவரிடத்தும் அடங்கிய குரலில் பேசிப் பணிந்து செல்லும் அனந்தன் நாயர் தன்னுடைய குரூரத்தை வெளிப்படுத்துவது கார்த்தியாயினியிடம் மட்டுமே. நாவலின் இறுதிப்பகுதியில் அனந்தன் நாயரின் இருவித குணங்களும் அவரது பிள்ளைகளிடம் வெளிப்படுவதைக் காணாலாம்.

நினைவு தெரியுமுன்னே தன்னை நீங்கிப்போன அம்மாவிடம் மாதவிக்குட்டி கேட்ட கேள்விகள், தன் அம்மா மீதான அவளது கோபம், விலக்கம் அனைத்துமே அனந்தன் நாயருக்கு ஒருவித நிம்மதியைத் தருகின்றன. தான் கேட்க முடியாத கேள்விகளை, தன் ஆதங்கத்தை மகளாவது வெளிக்காட்டினாளே என்கிற குறைந்தபட்ச ஆசுவாசம்தான் அது. ஆனால், சற்றே நினைவு தெரியும்வரை அன்னையிடம் இருந்தவனும், நடைமுறைவாதி என தன்னைக் கருதுபவனுமான பிரபாகரன் நாயரின் பார்வை முற்றிலும் மாறானது. தன் அம்மாவின் தவறுக்கு முழுக்காரணம் அவளை அந்நிலையை நோக்கித்தள்ளிய தன் அப்பாதான் என அவனிடமிருந்து ஒலிக்கும் சொற்கள் ஒரு கோணத்தில் அனந்தன் நாயரின் மனசாட்சியின் சொற்களும் கூடத்தான். மகள் மூலம் தன் மனதுக்குக் கிடைத்த நிம்மதியை கொஞ்ச நேரம் கூட தங்கவிடாமல் குலைத்துவிட்ட மகனின் செயல் அவரை மேலும் விசனப்படுத்துகிறது. அவ்விசனத்துடனே அனந்தன் நாயரின் வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது.

அனந்தன் நாயரின் அத்தை குஞ்ஞுல‌ஷ்மி, தன் கணவனான சங்குண்ணி நாயரை நீங்கிச்செல்லும் நிகழ்வு, அனந்தன் நாயரின் சிக்கலுக்கு இன்னுமொரு பரிணாமத்தைத் தருகின்றது. அனந்தன் நாயரைப் போல தாழ்வுணர்ச்சி இல்லாத சங்குண்ணி நாயர், தன் மனைவி தன்னை நீங்கி இன்னொருவனிடம் போவதைத் தடுக்க காலில் கூட விழுகிறார். தான் குஞ்ஞுலஷ்மிக்கான சரியான துணை எனும் நம்பிக்கையில் விழுந்த அடியின் விளைவு அது. அதையும் மீறி கொச்சு கிருஷ்ண கர்த்தாவுடன் செல்லும் குஞ்ஞுலஷ்மிக்கோ தன் கணவன் மீது எவ்வித புகார்களும் இல்லை என்பது இன்னும் துயரமளிப்பது.

அனந்தன் நாயரின் அக்காவாக வரும் கல்யாணி அம்மாவின் பாத்திரப்படைப்பு முற்றிலும் மாறுபட்டது. மணம் முடித்து சில காலம் மட்டுமே வாழ்ந்தபோதும், அரவிந்தாக்‌ஷ குறுப்பு அவள் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகிப்போகிறார். வேதாந்தியான அவரின் மறைவுக்குப் பின், அவரின் மகன் பாஸ்கரன் நாயரும் அவன் தகப்பன் வழியிலேயே பயணிக்கிறான். ஆனால், ”குருவை சோதித்துப் பார்த்து” தன் தகப்பன் செய்த தவறைத் தவிர்த்து, அவன் தன் குருவின் சொல்லுக்கிணங்கி திருமணத்துக்குத் தயாராவதில், அர்த்தப்படுகிறது கல்யாணி அம்மாவின் வாழ்க்கை.

*

இந்நாவலில் ”அணைக்க முடியுமுண்ணா தீய பத்தவைக்கணும்” என அனந்தன் நாயரிடம் கார்த்தியாயினி சொல்லும் இடம் ஒன்றுவரும். அது உண்மைதான். தன் வாழ்வின் முக்கியமான கட்டங்களில் தன்னால் அணைக்க முடியாத தீயைப் பற்றவைப்பவராகவே எனக்கு அனந்தன் நாயர் தெரிகிறார். 

நாவலின் இறுதிப்பகுதியில் வானம் பின்வருமாறு வர்ணிக்கப்பட்டிருக்கும், “பெயருக்குக் கூட ஒரு நட்சத்திரம் கூட இல்லாத இருண்ட சூனியமான ஆனால் பரந்த வானம்”. நாவலைப் படித்து முடித்தபின் அவ்வர்ணனை அப்படியே அனந்தன் நாயரின் வாழ்க்கைக்கும் பொருந்துவதாகவே எனக்குத் தோன்றியது. 

*

பள்ளிகொண்டபுரம்  (நாவல்) – நீல.பத்மநாபன் – காலச்சுவடு பதிப்பகம். 

தாகூரின் கோரா – தேசம், தேசியம், மனிதம்! – நரேன்

https://www.narenin.com

1905 பெங்கால் பிரிவினை இந்திய வரலாற்றில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெரும் நிகழ்வு. அது இந்தியாவெனும் தன்னுணர்வை அசைத்துப் பார்த்தது. பெரும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்தியாவெங்கும் சிந்தனையாளர்களும் விடுதலை போர்களும் துளிர்த்தெழ பெரிதும் வழிகோலியது. இந்தியாவெனும் அரசியல் உடமையையும் அதன் உள்ளுணர்வாகிய கலாச்சார பண்பாட்டையும் சேர்த்து காக்கும் பெரும் பொறுப்பு இந்திய விடுதலை சிந்தனையாளர்கள் மத்தியில் பெருகத் தொடங்கியது. மரபார்ந்த இந்துமத சடங்குகளையும் அது முன் வைக்கும் பிரிவினைகளையும் வகுப்பு நிலைகளையும் ஒதுக்கி வைக்கும் புதிய மரபுகளும் முறைமைகளும் உருவாக வேண்டிய அவசியம் எழுந்தது. இந்தக் கிளர்ச்சிகளுக்கு நடுவே, பெங்காலின் மறுமலர்ச்சி காலகட்டத்தின் பின்புலத்திலிருந்து எழுந்து வந்த தாகூர், ஒரு முக்கிய பண்பாட்டு விவாதமாக ‘கோரா’ நாவலை எழுதுகிறார்.

இந்து மதத்தின் அத்தனை மூடவழக்கங்களையும் பிரிவினைகளையும் உதறி 1828ல் ராஜா ராம் மோகன் ராய் ‘பிரம்மோ சமாஜை’ துவங்குகிறார். இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் இவ்வியக்கத்தினர் தங்களை இந்துகள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. பெங்கால் மறுமலர்ச்சி இயக்கத்தின் ஊற்றுக் கண்ணென விளங்கிய இவ்வமைப்பு இந்திய மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு மரபார்ந்த தளைகளிலிந்து பெரு விடுப்பு அளித்தது. இவ்வமைப்பின் எழுச்சியால் அதிர்ச்சிக்குள்ளான மரபார்ந்த இந்துக்கள் பிரம்ம சமாஜத்திலிருந்தும் கிறித்துவ அமைப்புகளின் தாக்குதல்களிலிருந்தும் இந்து மதத்தை காக்கும் பொருட்டு சீர்திருத்த இயக்கங்களை முன்னெடுக்க வேண்டியிருந்தது. இந்தியச் சுதந்திர போரட்டங்களில் ஒரு பகுதியாக சீர்திருத்தப்பட்ட இந்து அமைப்புகள் இந்துமத பண்பாட்டையும் கையிலெடுக்க, பிரம்ம சமாஜம் இந்து மதத்திலிருந்து இந்தியர்களை விடுவிக்கும் முனைப்புடன் வளர்ந்து வந்தது. இந்த இரண்டு பக்கங்களின் அதீத நோக்கிலிருக்கும் முரண்பாட்டை மையமாக வைத்து ‘கோரா’ வெகுசில கதாப்பாத்திரங்களைக் கொண்டு ஒரு முக்கிய விவாதத்தை நிகழ்த்துகிறது.

இப்புவியின் மீது நிகழ்த்தப்படும் பல்வேறு தாக்குதல்களால், இயற்கையாலும் மனிதனின் ஏதேச்சதிகாரத்தினாலும், மானுடம் தன்னை அசைத்துக் கொடுத்து தன் இருப்பை எப்படியாவது நிறுவிக்கொள்கிறது. ஒவ்வொருமுறையும் அவ்வசைவுகள் ஏற்படும்போது சிந்தனை தரப்பிலிருந்து வெளிப்படும் அறிஞர்களே முன்வடம் பிடிப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு யுகசந்தியின் முனையிலிருக்கும் இளைஞர் குழாமின் சிந்தனை என்னவாக இருக்கும் அதன் விளைவாக எழும் செயல்பாடுகள் எம்மாற்றத்தை கொண்டு வரும் என்பதை இன்றைய சூழலில் புரிந்து கொள்வது இயலாததாகவே இருக்கும். 

அரசியல் காலாச்சார மாற்றங்களை மையப் பொருளாக்கிய ‘ஆரோக்கிய நிகேதனுமும்’ ‘அக்னி நதியும்’ இந்நாவலை வாசிக்கையில் நினைவில் எழுந்துக் கொண்டே இருந்தன.  ‘அக்னி நதி’ இது போன்ற வெவ்வேறு காலச் சுழலில் நிகழும் சரித்திர திருப்புமுனைகளில் நிற்கும் நான்கு இளைஞர்களின் வாழ்வை சொல்கிறது. கோராவிலும் முக்கிய பாத்திரங்களாக நான்கு இளைஞர்கள். அவர்களின் அரசியல் பிடிமானங்களையும் அதனூடாக அலைக்கழியும் காதல் வாழ்வையும் இருசேர பிணைப்பதாலேயே கோரா ஒரு முக்கிய இலக்கிய படைப்பாகவும் ஆகிவிடுகிறது. தாகூர் நீண்ட வசனங்கள் மூலமாக கதாபாத்திரங்களின் ஆழ் மனம் வரை ஒரு கூர் சுழலாக இறங்கி தொட்டு பின் விலகுகிறார். உரையாடல்களின் நீளத்திற்கே கதாபாத்திரங்களின் அவ்வுரையாடலுக்கு முன்னும் பின்னுமான சிந்தனையோட்டத்தை விவரிக்கிறார். இதன் மூலம் அப்பாத்திரங்களுக்குள் நிகழும் அலைக்கழிப்புகளையும் உணர்வுச் சிதைவுகளையும் மிகத் துல்லியமாக அவரால் மீட்டெடுக்க முடிகிறது. பெரும்பாண்மையான தமிழ் நவீன நாவல்களிலிருந்து பெரிதும் விலகி நிற்கும் ஒரு வடிவம் இது. தொடக்கத்தில் வாசிப்பிற்குத் தடையாக இருக்கும் மொழிபெயர்ப்பு சிக்கலிலிருந்தும் கூட பெரிதும் தப்பி நாவலுக்குள் புக இந்நாவலின் உரையாடல்களே துணையாக அமைகிறது.

கோரா எனும் கோர்மோஹன் இந்து மத விழுமியங்களின் மீது பெரும் பிடிப்பு கொண்டவன். அதன் பிற்போக்குத்தனங்களையும் பிரிவினைவாதங்களையும் கூட இம்மதத்தை காக்கும் பொருட்டு பொருத்துக் கொள்ளலாம் எனும் எண்ணம் கொண்டவன். இந்திய விடுதலைக்குப் பிறகு இதெல்லாம் சீர் செய்து கொள்ளலாம். முதலில் ஆங்கிலேயர்களை வெளியே விரட்டுவதும் இந்து மதத்தினரை மாறிவிடாமல் தடுப்பதும்தான் தற்போது தலையாயது என்று எண்ணுபவன். சடங்குகளை தான் பின்பற்றாவிடினும் மதத்தின் ஒருமையை காக்கும் பொருட்டு அவை புழங்குவதில் தவறில்லை என்பவன். பிரம்மோ சமாஜத்தின் ஈர்ப்பிலிருந்து விலகி வந்து அதற்கு எதிராக நின்று வாதிடுபவன். சுற்றத்தினரின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவன். தான் பிறப்பால் ஒரு இந்தியன் அல்ல என்று தெரியவரும்போது ஏற்படும் அவனின் மனமாற்றத்திற்கு முற்றிலும் வேறு திசையில் நாவல் முழுதும் பயணிப்பவன். நேர்மறை எண்ணம் கொண்டிருந்தவன்தான் என்ற போதிலும் இந்திய மண்ணிற்கு தான் யார் என்பதும் இந்த மண் எந்த மனிதர்களின் மீதும் எல்லைக் கோடுகளை வரிப்பதில்லை என்பதும் புரியவரும்போது ஒரு பெரும் திறப்பை அடைகிறான். தன் வாழ்நாள் முழுதும் அவன் நிகழ்த்திய விவாதங்கள், தன் காதல் வாழ்வின் ஊசலாட்டங்கள் என அனைத்தும் ஒற்றைப் புள்ளியில் வந்து இணைவதை உணர்கிறான். அது ஒரு பெரும் விடுதலையுணர்வை அவனுக்கு அளித்திருக்கும் என்பதை ஒரு வாசகனும் உணர்ந்தறிவான்.

பினய் பாபு வாசகனின் மனநிலைக்கு மிக நெருக்கமானவன். கோராவின் எல்லையற்ற நட்பினாலும் – ஒருவகையில் பக்தி நிலையும்கூட, அனந்தமயியின் தாயன்பினாலும், முற்போக்கு சிந்தனைகளாலும், லொலிதா மீதான காதலினாலும், சுசாரிதாவின் அறிவார்ந்த நட்பினாலும் அலைகழியும் ஒருவன். தான் சுயமாக எடுக்கும் எந்த முடிவுகளும் யாரோ ஒருவரை பாதிக்கும் என அறிகையில் ஒரு அடி பின்னே செல்பவன். கோராவின் கோபத்திற்கு ஆட்படாமலிருக்க லொலிதாவின் காதலைக் கூட மறுதலிக்க தயாராக இருக்க கூடியவன். இதனாலேயே எவரின் பகைக்கும் ஆட்படாதவனாகயிருக்கிறான். பிரம்மோஸின் நியாயங்களும் முற்போக்கு சிந்தனைகள் அவர்களின் பெண்களுக்கு அளித்திருக்கும் சுதந்திரத்தையும் கண்டு அதன் அவசியத்தை உணர்கிறான். ஆங்கிலேயருடன் அவர்கள் காட்டும் இணக்கம் கூட அவனுக்கு தொந்தரவுதருவதாயில்லை கோரா சிறையிலடைக்கப்பட்ட செய்தி வரும் வரை. ஒவ்வொரு கட்டத்திலும் ஏதேனும் இரண்டு முனைகளை சீர் நிறுத்தி பார்க்க வேண்டிய இக்கட்டில்தான் வாழ்கிறான். அவனின் பிடிப்பை சிறுவன் சதீஷால் கூட அசைத்துப் பார்த்துவிட முடியும். 

கோராதான் இந்நாவலின் மையம் என்றாலும் முதல் பக்கத்தில் தொடங்கி கடைசி வரை வியாபித்திருக்கும் பாத்திரங்கள் பினய்யும் சுசாரிதாவும்தான். கோராவினால் பெரும் ஈர்ப்புக்குள்ளாவதும் இவர்கள் இருவர்தான் என்பதுவும் காரணமாக இருக்கலாம். பிரம்மோ தனக்களித்த சுதந்திர சிந்தனையை பொரேஷ் பாபுவின் வளர்ப்பினால் தீவிரமாக பற்றி வரும் சுசாரிதாவின் எண்ணங்களை வெவ்வேறு முனையில் நின்று கோராவும் ஹரிமோகினியும் குலைக்கிறார்கள். கோராவின் மீது இவள் ஈர்ப்பு கொள்வதும் ஹரன் பாபுவுடனான திருமண தயாரிப்புகளை ரத்து செய்வதும் கருத்தியல்களின் அடிப்படையிலேயே என்பது இவளை யுவதிகளுக்கான ஒரு லட்சிய உருவமாக ஆக்குகிறது. அனைத்தையும் விவாதத்தின் மூலமாக கடக்க விழைப்பவள். ஆனால் அன்பும் உறவும் அவளை எப்போதும் நெகிழ்த்தும் கண்ணிகளாக இருப்பதால் பினய் பாபுவைப் போல அலைகழிப்புகளுக்கு உள்ளாகுபவளாக ஆகிறாள்.

துணிச்சல்மிக்க பெண்ணாக லொலிதா உருவெழுந்து வருவது நாவலின் நடுப்பகுதியிலிருந்துதான். எவரும் எதிர்பாராவண்ணம் ஒரு திருப்புமுனையில் அவள் ஒரு அலையென எழுந்து பினய் பாபுவை தன்னுடன் இழுத்துக் கொண்டுவிடுகிறாள். பின்ய பாபுவிற்கு ஒரு வகையில் நேர் எதிரான பாத்திரம். தன்னைப் போலவே பினய் பாபுவும் சுயமாக சிந்திக்கவும் தான் நினைத்ததை செயல்படுத்தவும் வேண்டும் என்று விரும்புகிறாள். சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் பினய்யிடம் இதை சுட்டிக் காட்டவும் தவறுவதில்லை. இதுவே கோராவையும் மீறி லொலிதாவுடனான திருமணத்திற்கு சம்மதம் தருமளவிற்கு அவனுக்கு உத்வேகம் கொடுக்கிறது. பிரம்மோஸாக மாறுவதற்கு கூட அவன் தயாராகிவிடுகிறான். 

இந்நான்கு பாத்திரங்களையும் ஒரு நேர்க்கோட்டில் நிறுத்த முடியும். இவர்கள் பிராதான கதைமாந்தர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்வில் எதிர்படும் சந்தர்பங்களினாலும் எதிராளியுடனான விவாதங்களினூடாகவும் ஊசலாடும் தன்மை கொண்டவர்கள். சுசாரிதாவை முதன்முறையாக சந்தித்து உரையாடும்போதுதான் இந்திய கலாச்சாரத்தில் இந்திய சுதந்திர வேட்டையில் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்கிறான். சார்-கோஸ்பரா கிராமத்திற்கு இரண்டாவது முறையாக செல்லும்போதுதான் அக்கிராமத்தின் எளிய மனிதர்களிடமிருந்து தன்னைப் பிரித்த இடைவெளிகளை உணர்கிறான். அவன் கற்பனையிலிருக்கும் பாரதவர்ஷம் அசலில் இல்லை என்பதை உணர்கிறான். சடங்குகளாலும் சாதிப் பிரிவினைகளாலும் தான் கனவு காணும் பாரதம் வெறுமையானது என்பதையும் கண்கூடாக காண்கிறான். அம்மக்களின் சார்பாக நின்று சிறை செல்வதற்கு தயாராகிறான். இறுதியாக அவனுடைய பிறப்பு பற்றிய உண்மை தெரிய வரும்போது ஏற்கனெவே நொறுங்கத் தொடங்கியிருந்த பாரதம் என்ற அவனது கனவுப் பிம்பம் முற்றிலுமாக உடைந்து போகிறது. சடுதியில் அவன் தன்னையும் பாரதத்தையும் வெளியாளின் கண்கொண்டு பார்க்கிறான். அனைத்தையும் ஏற்று அனைத்தின் மீதும் ஊறும் தேசமிது என்பதை புரிந்துகொள்கிறான். இந்நாவல் அவனுக்கு கிடைக்கும் இந்த அதிர்ச்சியுடன் முடிவுற்கிறது. இனி இத்தேசத்தின் விடுதலைக்கு சமூக விடியலுக்கு அவன் எடுக்கப் போகும் ஆயுதம் என்ன என்பதோ அவன் கனவுகளை எவ்வாறு மாற்றியமைத்துக் கொள்ளப்போகிறான் என்பதோ கற்பனைக்கு விடப்படுகிறது. இந்த திருப்பம் வாசகனுக்கு ஏற்கனெவே தெரிந்திந்திருக்கும் என்பதால் கோராவின் அதீத ஆசார விவாதங்கள் பெரும் முரணாக நாவல் முழுதும் அமைகிறது.

ஆனந்தமாயி பாரதமாதாவின் உருவகம். அன்பின் வழியாக ஆனந்த வாழ்வை தனதாக்கிக் கொண்டவர். பாகுபாடுகள் அவரிடம் இல்லை. அவரின் சுதந்திர சிந்தனைகளால் ஒரு கிறித்துவர் என்று கிண்டலடிக்கப்பட்டாலும் அதை கண்டுக் கொள்பவரில்லை. பெரும் ஆசாரவாதியான கணவர் கிருஷ்ணதாயாளுக்கும் இது மத கட்டமைப்பின் மீது புதிய பாரதத்தை உருவாக்க துடிக்கும் கோரவுக்கும் பாசத்தில் உருகும் பினய்ய்க்கும் பொரேஷ் குடும்பாதாருக்கும் ஒரு மைய ஊக்கியாக, அத்தனையையும் இணைக்கும் சரடாக இருப்பவர். இவரின் எதிர் முனையில் பொரேஷ் பாபு. தன் குடும்பத்தினருடன் பினய் கோரா இருவரையும் கொண்டு வந்து சேர்ப்பவர். எதிர் நிலையில் நின்று மற்றுமொரு மையப் புள்ளியாக இருப்பவர். ஆனந்தமயியும் பொரேஷ் பாபுவும் எதிர் நிலையில் இருக்கும் பெருமனம் படைத்த இருவர். அனைவரும் வந்தடையும் நீள் நிழலாக இருப்பவர்கள்.

இந்நாவல் அனைத்து மார்க்கங்களையும் விமர்சனப் பார்வையோடும் அனுகுவதே இதை முக்கிய சமூக விவாதமாக ஆக்குகிறது. நாவல் முழுதும் இந்து மதத்தின் சாதிய அடுக்குமுறைகள் கொணரும் பிரிவினைகளும் எளிய மனிதர்களின் வாழ்வு இதன் பின்னால் நசுக்கப்படுவதும் உரையாடல்களினூடே எடுத்துரைக்கப்படுகிறது. தீண்டாமைகள் மலிந்து தன் வீட்டிற்குள்ளேயே அவை கடைப்பிடிக்கப்படும்போது கூட தான் ஒரு சமூக போரளி என்றபோதும் கூட அதை கேள்விக்குள்ளாக்க் முடியாத சூழ்நிலையே நிலவுகிறது. “பெரிய விஷயங்களை சிறிய கண்ணோட்டத்தில் பார்ப்பதால்தான் நமக்குச் சந்தேகம் வருகிறது” என்று கோரா இதை கடந்து செல்ல முயல்கிறான். இவை எதற்காக தொடங்கப்பட்டது என்பது தெரியாமல் அதை வெட்டி எறிவது முட்டாள்தனம் என்கிறான். இன்றளவும் இவ்விவாதங்களை நம்மால் கேட்க முடிகிறது. “ஹிந்துத்துவம் குறித்து சில விஷயங்களில் சமரசம் செய்து விட்டால் முட்டாள்கள் பெரிய விஷயங்களில் ஒரு மரியாதையற்ற நிலையை உருவாக்கி அதனையே தமது வெற்றியாகவும் கொண்டாடுவர்” என்பான் கோரா. இந்நிலையிலிருந்துதான் “நான் பாரதீயன். இன்று பாரதத்தின் எல்லா ஜாதிகளும் என் ஜாதியே. எல்லோரும் எதைச் சாப்பிட்டாலும், அதுவே என் உணவு” என்ற நிலையை வந்தடைகிறான். இதைப் போலவே புது ஞான சபையான பிரம்ம சமாஜமும் அதன் முரண்பாடுகளை முன்வைத்து விமர்சிக்கப்படுகிறது. ஹரன் பாபுவின் கையில் ஒரு அமைப்பு நிறுவனமாக மாறிவருகிறது. தலைவர்கள் தொண்டர்கள் என்ற நின்றுவனமயமாதல் பொரேஷ் பாபு போன்ற உயர் சிந்தைனையுடையவர்களை வெளியேற்றவும் தயங்குவதில்லை. மற்றொருபுறம் கோராவை ஆன்மிகத் தியாகத் தலைவனாக்கும் சடங்குகளும் தொடங்குகிறது. எஞ்ஞானித்திற்கு தலைப்படினும் நிறுவனப்படுதலிலிருந்து தப்ப முடியாது. 

மிகக்குறைந்த கதாப்பாத்திரங்கள், அனேகமாக பெரும் நிகழ்வுகள் ஏதுமில்லை, நீண்ட சமூக விவாதங்களாக உரையாடல்கள் என இவை அனைத்தையும் மீறி இதுவொரு இலக்கிய படைப்பாக மாறுவது பாத்திரங்களின் மனநிலைகளுக்கு ஊடுறுவிச் செல்லும் தன்மையினால்தான். பாத்திரங்களின் மனவோட்டங்கள் முழுவதும் எழுதிச் செல்லப்படுகிறது. அவர்களின் அகவயமான எண்ணங்களும் புறவயமான செயல்பாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகளையும் இதனால் ஒரு வாசகன் உள்வாங்க முடிகிறது. இது முக்கிய பாத்திரங்களுக்கு மட்டுமல்ல, சிறிய பாத்திரங்களுக்கும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அதுபோலவே காதலர்களின் மன ஆட்டங்களும் அவர்களின் கனத்த மெளனம் உருவாக்கும் சஞ்சலங்களும் கீதாஞ்சலி ஆசிரியனால் மிக அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அற்புதமான பிம்பங்களை அவரால் உருவாக்க முடிகிறது. உதாரணமாக, பினய் பாபுவும் லொலிதாவும் தங்களுக்குள் சூசகமாக காதல் கொண்டிருப்பதை உணர்த்தியபின் ஒரு மெளனம் நிலவுகிறது. “ஒவ்வொரு ஜீவனையும் வானம் தொடர்ந்து அதிசயமாகவும் அமைதியாகவும் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அது வெறும் ஒரு வெட்ட வெளியல்ல” என்பதையும் உணர்கிறார்கள். அவர்களின் அகவிழிப்புணர்வு அண்டம் முழுவதும் பரவியிருக்கும் தெய்வீக விழிப்புணர்வோடு அவர்கள் உடலால் இணைந்திருப்பது போன்றிருந்தது. இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.”

இத்தேசத்தின் மீது அதீத காதலும் கனிவும் அதன் வளர்ச்சியில் கவனமும் கொண்ட தாகூரின் எக்காலத்திற்குமான படைப்பு இது. பாரதவர்ஷத்தை சொந்த கண் கொண்டு காணுங்கள் என்னும் அவரின் அறைகூவல் இன்றளவும் முக்கியமாக இருக்கிறது. இதேசத்திற்கு ஒரு தனிப்பட்ட பண்பு உண்டு, ஒரு தனிப்பட்ட ஆற்றல், ஒரு தனிப்பட்ட உணமை உண்டு. அதன் நிறை குறைகளை மனதில் வைத்தே ஒவ்வொருவருடைய நிலையை முடிவு செய்ய வேண்டும் ஆனால் அது எந்நிலையாகயிருந்தாலும் தீவிரமான போக்கில் அதை கடைபிடிப்பது அத்தனையையும் சூன்யமாக்கவே செய்யும். தேசத்தின் மீது பித்து கொண்ட ஒரு பெருங்கவிஞனின் கூக்குரலுக்கு காது கொடுக்க வேண்டிய நேரமிது.