அபத்தக்  குப்பையின் மேல் ஞான ஒளி – ஆர். ராகவேந்திரன்

போரும் அமைதியும் – பாகம்  1 – வாசிப்பு

விருந்துகளும் போர்களும்

‘அன்னா  பாவ்லவ்னா அளிக்கும் அடம்பரமான விருந்தில் தொடங்குகிறது  படைப்பு.   பல ஆயிரம்  கால்களை  உடைய உயிரி ஒன்று நகரத் தொடங்குவது போல நிதானமான அசைவு .   விருந்துகளில்  உணவும் குடியும் அல்ல  முக்கியமான பதார்த்தங்கள் . மனிதர்களின் அந்தஸ்தும் தொடர்புகளும் தான்  விநியோகம் ஆகின்றன. 

ஆடம்பரமான மனிதர்களின் அபத்தமான திட்டங்கள், போலித்தனங்கள் , ரகசிய ஏற்பாடுகள்,  அரசு என்னும் எண்ண முடியாத  படிக்கட்டுகளில் கள்ளத்தனமாக ஏறுவது இவைதான் அங்கே எல்லோருடைய நோக்கங்களும் .

சரியான விகிதத்தில் ஆரஞ்சுப் பழச்சாறு கலக்கப்பட்ட  வோட்கா போல, நெப்போலியன் மீதான எதிர்ப்பும், மதம், சக்கரவர்த்தி ஜார் மீது நிபந்தனையற்ற விசுவாசமும்  கலந்து  அரசியல் சரி என்னும் கோப்பைகளில் ஊற்றி   ரஷ்ய உயர்குடியினர் அதிகார போதையில் திளைப்பதைக் காட்டும் டால்ஸ்டாய்,  போர் என்னும் அடுத்த கட்ட போதைக்கு  நகர்த்திச் செல்கிறார்.

சீமாட்டி  தாய்மார்கள் தங்கள் வாரிசுகளுக்கு பாதுகாப்பான  ஆனால் போர்ப்பங்களிப்பின் நன்மையைக் கொடுக்கக் கூடிய பதவிகளுக்காக தங்கள் குடிப்பிறப்பு – உறவுகள் – வட்டங்களை விரிவாக்கிக் கொண்டே செல்கிறார்கள். 

அடிமைகள், சேவகர்களின்  இருப்பு இந்த வண்ணமயமான செல்வ வாழ்வின் பின்னால் மங்கலாகக் காட்டப் படுகிறது.  தங்கள் முதலாளிகளுக்கு சட்டைப் பித்தான்களை அணிவித்துக் கொண்டும் யாரும் பார்க்கவில்லை என்று நினைத்து  மிச்சமாகிய மதுவை குடித்துக் கொண்டும் வாழ்கிறார்கள்.  

கதைத்திறன்

சிறிய செய்கைகளை முழு வர்ணனையுடன் அப்பட்டமாகக் காட்டும் டால்ஸ்டாய் மைய விசையான அழுத்தமான  நிகழ்வுகளைப்  போகிற போக்கில் கோடி காட்டுகிறார்.  

போர்க்களத்தில்  மோதல் துவங்கும் முன்னர் முன்னணியில் நின்று வேடிக்கை செய்து வரும் படை வீரர்களைக் காட்சிப்படுத்திடும் ஆசிரியர் திடீரென போர் துவங்கி விடுவதைக் குறிப்பாகக் காட்டுகிறார்.  (வெண்முரசில் போர் துவங்கும் முன்பு இரு புறமும் உள்ள சிறுவர்கள்  ஆயுதங்களை வீசிப்போட்டு விளையாடுவதை விரிவாகத் தீட்டியிருப்பார்  ஜெயமோகன்) . 

ஒரு திணிக்கப்பட்ட விருந்தில் பியர்- ஹெலனுக்கு இடையே  காதலை வலுக்கட்டாயமாக மலர வைப்பதற்காக மொத்தக் குடும்பமும் உறவினர்களும் முயல்வதை விலாவாரியாக விளக்குபவர் , பட்டென்று    “ஆறு வாரங்களுக்குப் பின் அவருக்கு திருமணமாயிற்று.    பீட்டஸ்பர்கில் உள்ள தமது பெரிய, புதிதாய் அலங்கரிக்கப்பட்ட மாளிகையின் வாழ்க்கையை ஆரம்பித்தார் ” என்று தாவுகிறார்.  தொலைவிலும் அருகிலும் நகர்ந்து பல கோணப் பதிவுகளை அனுப்பும் ட்ரோன் உத்தியின் இலக்கிய உச்சம்

  போரை விவரிக்கையில் அதிக ஒளியும், அடிக்க வரும் சிவப்பும் ரத்தமும் பெரிதாக இல்லாமல் மசமசப்பான  மாலை வெயில் போலவே சொல்லப் படுகிறது.  அருவருப்பும் அழுகலும் காட்டப்படும் இடம்  போர்கள் முடிந்து விட்ட பின் தூக்கி எறியப்பட்ட காயம் பட்ட வீரர்களின் மருத்துவ மனையில்  தான் . அங்கு தான் ரஸ்டாவ்  அடிப்படையான கேள்விகளை எழுப்பிக் கொள்கிறான். 

போருக்கு முன்பான படை நகர்வுகளும் ஆலோசனைகளும் உணவு, குதிரை, பீரங்கி விவரங்களும் கடினமான மலைச் சிகரம் மீது  ஏறுவது போல சிறுகச் சிறுக அடுக்கப்   படுகிறது. உச்சியிலிருந்து ஒரே தாவலாக மையப்போர்  கையாளப்படுகிறது. 

உள்ளீடற்ற அபத்தம் 

டால்ஸ்டாயின் போர் வெறுப்பும் போலித்தன வெறுப்பும் அவரை மனிதர்களின்  உள்ள ப் போக்குகளை கவனிக்கச் செய்கின்றன.   அவர் மனிதர்களின் பாசாங்குகளையும் பாவங்களையும் புரிந்து கொள்கிறார். இரக்கத்துடன்  தனது கொந்தளிக்கும் மனத்தைக் கொட்டி அதில் எல்லாருடைய உள்ளங்களையும் ஆதுரத்துடன் அள்ளிக் கொள்கிறார். 

இங்குள்ள எதற்கும்  தர்க்க – நியாயம் இல்லை.   வரலாற்றின் ஒரு கட்டத்தின் போக்கு , ஒரு மனிதனால் அவன் எவ்வளவு ஆற்றலுடன் இருந்தாலும் தீர்மானிக்கப் படுவதில்லை.   சோர புத்திரன் பியருக்கு பெருஞ்செல்வம் கிடைக்கிறது.  உடனே அவன் மிக முக்கிய குடிமகனாக உயர்கிறான். பின்னர் மனைவியை சந்தேகப்பட்டு தனது  சொத்தின் பெரும்பகுதியை அவளுக்கு அளித்து விட்டு ஃபிரி மேசனாக மாறி , அடிமைகளை விடுவிக்க வேண்டும்  என்று கனவு கண்டு, அவற்றை ஒரு எளிய முட்டாள் காரியதரிசி அழகாக வளைத்து தனக்கு ஏற்றவாறு  மாற்றிக் கொள்ள –  எல்லாமே   காலியாக உள்ளீடற்று போகின்றன – அவர் ஏழைகளுக்கு கட்டிய கட்டிடங்களை போல 

புத்துயிர்ப்பில் டால்ஸ்டாய் கட்டி எழுப்பிய நெஹ் லூதவ் பியருக்கு அருகில் நிற்கிறார்.

டுஷின் என்னும் நம்பிக்கை

இந்தச் சிறுமைகளுக்கு  முடிவில் அர்த்தத்துடன் ஒரு பாத்திரம்  எழுந்து வரும் என்று பார்த்தால் அது டுஷின் என்னும் பீரங்கி படைத்தலைவர் தான் 

ஆர்வத்துடன் தனக்குத் தானே பேசிக்கொண்டு தனது வீரர்களை ஊக்குவித்துக் கொண்டு இலக்கு எதுவும் இல்லாதது போல ஆரம்பித்து சுங்கான் புகைத்துக் கொண்டே எதையோ தாக்க வேண்டும் என்பதற்காக எதிர் மலையில் தெரிந்த கிராமம் மீது உற்சாகமாக  சுட்டுத் தள்ளுகிறார் . தனக்கு காப்புப்படையே இல்லை என்பதைக் கூட  உணராதவராக கடைசி வரை சுட்டுக் கொண்டே இருக்கும்  டுஷின் போருக்கு முன்னால் ஒரு விடுதியில்   படை  தயாராக வேண்டும் என்ற ஆணையை மீறி காலணியும் அணியாமல் குடித்துக் கொண்டிருந்ததற்காக   கண்டுபிடிக்கப் பட்ட மாணவன் போல அசடு வழிந்தவர்  தான். 

அந்த  பீரங்கிப்   பூசல் முடிந்ததும் இரண்டு பீரங்கிகளை ஏன் விட்டு விட்டு வந்திர்கள் என்ற மேலதிகாரியின் கேள்விக்கு பதட்டமாகி  கண்கள் தளும்ப தள்ளாடி நின்றவர் டுஷின்.   உண்மையில் போரில் வென்றதே அவரால்  தான் என்று  ஆண்ட்ரூ வாதாடிய போதும் பயந்து போய் தப்பித்தோம் என்று வெளியே வந்தவர். 

போர்களும் நிறுவனங்களும் அரசுகளும் பெயரே வெளிவராத ,  பிறர் தவறுகளையும் சுமக்கின்ற டுஷின் களால்  தான்  நடக்கின்றன 

அமைப்பின் உச்சியில் இருக்கும் ஜார்களும் நெப்போலியன்களும் ஒரு முனைப்படுத்தலைமட்டுமே செய்கிறார்கள் .

அதனால்  தான் ரஸ்டாவுக்கு ஒரு கட்டத்தில் ஜார் பேரரசர் கேலியாகத் தெரிகிறார் .

ஆன்ட்ரு தனது  வீர  நாயகனாக  மனதில்  வளர்த்து  வந்த நெப்போலியனை அருகில் கண்டவுடன் வெறுக்கிறான். 

டுஷினே எனது நாயகன். இந்த நாவல் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தஸ்தாயேவ்ஸ்கி கொண்டு வந்த  “அசடன் “  மிஷ்கின் டூஷினுக்கு இணையான இன்னும் அழுத்தமான பாத்திரம். ஒரு வளை டால்ஸ்டாய்க்கு  தஸ்தாவின் மனச்சாய்வு இருந்திருந்தால் டுஷின் பாத்திரம் இன்னும் விரிவாக மையமாக வளர்ந்திருக்கும். 

சள புள என்று மூன்று விரல்களில் பாதிரியின் ஆசீர்வாதம் போல சல்யூட் அடித்து நின்று கொண்டிருக்கும் டுஷின் மறக்க முடியாத பாத்திரம். 

களத்தின் பாடங்கள்

  போர் உபாயங்களில்  இருந்து வணிக – மேலாண்மை நுணுக்கங்கள் நூற்றாண்டுகளாக வளர்ந்து  வந்துள்ளன. வணிகமும் நிர்வாகமும் கூட ஒரு வகை  போர் தானே.  பக்ரேஷன் தனது படையின் தோல்வியை தள்ளிப் போடவேண்டும் என்பதற்காக படை நகர்வை தாமதப் படுத்துவதும் அதற்காக ஜாரிடமே  வாதிடுவதும் டால்ஸ்டாய் தரும் மேலாண்மைப்  பாடங்கள்.

அபத்தங்களின்  முடிவில்லாத சங்கிலியாகவே வரலாறு தீர்மானமாகிறது.  (சிலர் துப்பாக்கி சுட்டுக் கொண்டிருந்தனர்.  ஆனால்  யாரைப் பார்த்து என்பதைப்  பார்க்க முடியவில்லை. )

காயம் பட்ட ரஸ்டாவ் போன்றவர்களுக்கு தனது பீரங்கி வண்டியில் இடம் தரும் டுஷின் கடைசியில் ரஸ்டாவை ஒரு ராணுவ மருத்துவமனையில் பார்க்கும் போது  ஒரு கையை இழந்து  விட்டிருந்தார். ரஷ்யா தனது கையை இழந்து விட்டிருந்தது 

டால்ஸ்டாயின் பாத்திர அணிவகுப்பில்  பிறர் குற்றமும் தன்னுடையது  தானோ என்று குழம்பும் டுஷின் ஒரு தட்டில் என்றால்  மறு தட்டில் வாசைலி  அழுத்தமாக  உட்கார்ந்திருக்கிறார்.  முகத்துதி, நக்கல், சூழ்ச்சிகள் ஊ றிப்  பெருக்கெடுக்கும் உள்ளம் .

  தூலமான ஆபாசமும் நுண்மையான மெல்லுணர்வும் ஒரே பாத்திரத்தில் இயல்பாக வருவதே ஆசானின் தொடுகையாக உள்ளது .  வாசைலி பியருக்கு நாற்றமெடுக்கும் வாயால் முத்தம் கொடுக்கிறார் என்று சொல்லி விட்டு சில பக்கங்களுக்குள் தனது மக்களின் திருமணம் உறுதியாகும்போது தந்தையாக உண்மையாக கண்ணீர் நிறையும் கண்களுடன் தோன்றுகிறார் வா சைலி. 

சுயநலம் என்னும் மாமிசம் தந்தையன்பு என்னும் ஆன்மாவின் மீது போர்த்தியுள்ளதை டால்ஸ்டாய் தொடும் இடம் இது.

  அழுக்குப் படாத , சீருடை கலையாத ராஜதந்திரி பதவியை தனது அம்மா அன்னா பாவ்லவ்னா மூலம் பெற்று விடும் போரிஸ் உயர் பதவிகளுக்கு தொங்கிப் பிடித்துக் கொண்டு ஏறிவிடும் கலையின் பயனாளி.  ஆட்சி மாறிவிட்டபோதும் போரிஸ் தனது ஆதாயங்களை அழகாகப் பெறக்கூடியவன். 

கனவு காணும் ரஸ்டாவ்  அரசனுக்காக உயிரையும் தரும் உணர்வெழுச்சி கொள்கிறான்.  நாட்டுப்  பற்றுக்கும் நயமான தந்திரத்திற்கும் என்றும் நடைபெறும் போராட்டம்  நாவலின் மைய இழை.  ஒரு போருக்குள் பல போர்கள்.  ஒரே படைக்குள் பல போர்கள் .

பேச்சில்லாப் பேச்சு

உரையாடல்களுக்கு இணையாக மன ஓட்டத்தையும் உடல் மொழியையும்  கையாண்டிருக்கிறார். ஒரு பாத்திரம் ஒரு வாக்கியம் பேசியதென்றால் அப்போது அவர்கள் நின்ற, உட்கார்ந்திருந்த இடம், குரலின் ஏற்ற இறக்கம் , கண்கள், உதடுகளின் இயக்கம் முகம்  இவற்றை விரிவாக அளித்து விட்டு  “போல இருந்தது”, “பாவனை செய்தார் ” என்ற தொடர்களின் வழியாக  உடலின் பேச்சைப் பதிவு செய்கிறார்.  அதன் வழியாக மனதின் ஆழங்களுக்குள் அழைத்துச் சென்று  மனிதர்களின் உள்நோக்கங்களைத் தோலுரிக்கிறார் 

போரின் நொதிகள்

முரண்படும் உணர்வுகளை அபாரமாகச்  சொல்லிச் செல்கிறார். உதாரணமாக ஒரு சொற்றொடர் “இன்பத்தோடு கோபமாக நினைத்தார்” . 

இன்பம் காமத்தைக்  குறிக்கிறது, கோபம் குரோதத்தின் வெளிப்பாடு. மனிதனுக்கு நொதிச் சுரப்பிகளில் ஏற்படும்  தாறுமாறான கசிதலே போருக்கு  காரணம் என்று ஒரு கருத்து உண்டு. போரின் தொடக்கத்தில் சில வீரர்கள்  அடையும் மன எழுச்சி போரின் உளவியல் மீது  டால்ஸ்டாய்க்கு இருந்த ஆழமான பிடிப்பைக் காட்டுகிறது 

 இப்போதைய சுழலில் கூட பியரின் எஸ்டேட் இருந்த அதே கீவ் நரரில் போரின்  முன்னேற்பாடுகள் தொடக்கி விட்டன.  (ஜனவரி 2022) புடின் – நேடோ விளையாடும் கள மாகிறது உக்ரைன்

 தூக்கத்தை டால்ஸ்டாய்  பல வகைகளில் கையாளுகிறார். தோற்கப் போகும் போரில் தனக்கு  விருப்பமே இல்லாததால் ஆலோசனைக் கூட்டத்தில் குட்டஜோ வ் தூங்கி விடுகிறார். மனம் தவிர்க்க முடியாத ஒரு துயரத்தை  எதிர்கொள்ள அது ஒரு வடிகால். ரஸ்டாவ் குதிரைப்படைக்  காவல் முனையில் தூக்கக் கலக்கம் கொள்கிறான் . அவன் கனவுகளும் தூண்டப்பட்ட மனமும் கொண்டவன். பரபரப்பான நிலை தாள முடியாத போது மனம் ஒய்வு கேட்கிறது. 

தலைக்காயம் பட்ட ஆன்ட்ரு  தனக்கு மேலே ஆகாயத்தைக்  காணும்போது மரண அனுபவத்தை ஒரு கணம் பெறுகிறான். அது அவனைப் பேரமைதியில் வைக்கிறது.  

போரின் அரசியல்

போரில் தோற்றவனை நெப்போலியன் புகழ்கிறார். களத்தின்  இறுதியில் காலத்தின் ஓட்டத்தில் நாயகர்களெல்லாம்  அருவருக்கத் தக்கவர்களாகத் தெரிகிறார்கள் .   ஜாரும் நெப்போலியனும் சமாதான உடன்படிக்கை செய்து கொண்ட பின் காயம் பட்ட வீரர்கள் எல்லாவற்றையும் வெறுமையாக நோக்குகிறார்கள்.  

போரில் தோற்றபின்னும் அதை வெற்றி என்று சொல்லி விருந்து நடக்கிறது. புதிய வதந்திகளை, கோழைகளை, நாயகர்களை உருவாக்கிப்  படைக்கிறது விருந்து. டெல்லியின் “ கான் மார்க்கெட் கேங்” உடைய பழைய பாணி. 

முதிர்ந்து கனியும் தரிசனம்

ஆன்ட்ருவின் மரணச் செய்தியைக் கேட்ட மேரி  (இது உண்மையல்ல என்று பின்னால் தெரிய வருகிறது) அழாமல் எதிர் கொண்டுதுணிவு கொள்ளும் இடம் அவளுடைய மனப் போக்கிற்கு பெரிய மாற்றம். அவள் துயரம் அடைவதற்கு பதில் உயர்வான ஒரு மகிழ்ச்சி கூட அடைகிறாள். இங்கு ஆசிரியர்  மெய்ஞானி ஆகிறார். தந்தை பால்கான்ஸ்கியோ செய்தியை உறுதி செய்து கொள்ளாமல் நம்பிவிடும்  நசிவியலாளராக –  ஃபாட்டலிஸ்ட் ஆக இருக்கிறார் 

போர் முனையில் இருந்து ரஸ்டாவ் அனுப்பும்  கடிதத்தை அவன் குடும்பம் எதிர் கொள்ளும் முறை அழகு . குதூகலம் மட்டுமே கொந்தளிக்கும் இடம். பெண்குழந்தைகள் இல்லாத வீடுகளில் இது கிடைக்காது. நேர்  மாறாக இறந்து விட்டதாக நம்பிவிட்ட ஆன்ட்ரு வீடுதிரும்புதல் , கடுமைக்காரரான அவன் தந்தையின் உள்ளத்தில்  வைத்த கடினமான பாறையைப் பிளந்து நீர் பொங்கிய இடம் .

மரணமடையும்போது லிசா ஒரு கேள்வியை   முகத்தில் படர விட்டபடியே இறக்கிறார்கள். அது தீராத   குற்ற உணர்வை அவள் கணவனுக்கு உருவாக்கி விடுகிறது.  “எனக்கு ஏன் இதைச் செய்தீர்கள் ” என்கிறது அவள் முகம். சிறிய பொம்மை  போலவே அவளை  காட்டிக்   கொண்டுவருகிறார். டால்ஸ்டாய்.  அவளுடைய உதடுகள் சேர்வதே இல்லை என்கிறார். முழுமையடையாத வாழ்வின்   துயருக்கு மறக்க முடியாத உருவகம் 

வேறொரு வகையில் தூய இதய சுத்தியின் காரணமாக எளிமையில் “பிதாவே என் என்னை கைவிட்டாய்” என்று கேட்பது போலவும் உள்ளது. 

நடாஷாவின் பாத்திரம் குழந்தைமையிலிருந்து கன்னிமைக்கு மெதுவாகத் துளிர்விடுகிறது. எல்லாவற்றின் மீதும் உணர்ச்சி பூர்வமான  அன்பு, மிகைத் திறமையான நடனம் இவற்றை மட்டுமே முதல் பாகத்தில் நடாஷா வெளிப்படுத்துகிறாள். 

மொழிபெயர்ப்பாளர் டி எஸ் சொக்கலிங்கம் அவர்கள் இந்திய மனதிற்கு பொருத்தமான பதங்களைப் பயன்படுத்தி பண்பாட்டு மேடு பள்ளங்களை நிரவி விடுகிறார். 

உதாரணம் – துப்பாக்கி சனியன், “அவளுக்கு சாதகம் போதாது; குரல் அற்புதமானது”, ” எங்கள் சத்சங்கம்”, ‘வேதாந்த விஷயம்” “மனோராஜ்யம்” , தர்மம், தியானம், தீட்சை போன்றவை 

ஆன்ட்ருவிற்கு போர்க்களத்தில் காயம்பட்ட நிலையில் முதல் தீட்சை கிடைக்கிறது. பிறகு ஃ பிரிமேசன் பியருடன் பேசும்போது   இரண்டாம் முறை உள்ளம் விரிவு  கொள்கிறது.

தத்துவ ரீதியாக டால்ஸ்டாய்க்கு ஃபிரி மேசன்கள் மீது பரிதாபம் தான்  இருந்தது.   இருப்பினும் அவர்கள் மீது பரிவு இருந்திருக்கிறது. 

கருவி ஒரு வேளை பிழையானதாக இருந்தாலும் கதவு திறந்தால் போதும் என்று நினைத்திருக்கலாம்  .

 ஏனென்றால் தூய ஒளிக்கு டால்ஸ்டாய் நம்மை அழைத்துச் செல்லும் பாதை அபத்தம் என்ற குப்பைமேட்டின் வழியாகத்தான் செல்கிறது.  

ஆர் ராகவேந்திரன் 

கோவை

மழைப்பாடல் 1 – ஆர். ராகவேந்திரன்

மழைப்பாடல் வாசிப்பு ( 1 முதல் 25 அத்தியாயங்கள்)

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட-பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்-களித்
தாடுங் காளீ! சாமுண்டீ! கங் காளீ!

  • பாரதியார் (ஊழிக்கூத்து)

அன்னையும் அத்தனும் ஆடும் பகடைகள் தான் யுகங்கள் எனக் காலக்கடலில் விரிகின்றன.
பகடையின் வீச்சில் பகை கொள்ளும் இந்திரனும் கதிரவனும் தங்கள் விளையாட்டை மண்ணில் தொடர முடிவு செய்கிறார்கள். மரணமும் உதிரமும் வலியும் துயரும் விளையாட்டின் பகுதிகளே புவியின் சுமையைக் குறைக்க இயற்கை நிகழ்த்தும் .தூய்மைப்பணி

பீஷ்மர் வடமேற்குப் பாலையில் தொடர்ந்து அலைகிறார். காந்தாரி திருதராஷ்ட்ரனை மணந்து
ஹஸ்தினாபுரம் வருகையில் உதிர மழை பொழிகிறது. சிரவண மாதத்தில் கடைசி வரும் மழை
ஜூலை மாதத்தில் வட இந்தியாவில் பொழியும் தென்மேற்குப் பருவக் காற்றின் கொடையாகி
வருகிறது

வேழாம்பல் பறவை மழை நீருக்குக் காத்திருப்பது போல அஸ்தினபுரி பீஷ்மரின் கருணைக்கு
வாய்பிளந்து நிற்கிறது. பதினெட்டு ஆண்டுகள் கழித்து நகர் புகும் மாமழையாக பீஷ்மர். அந்த
மழையில் நனைந்து மதர்த்து நிற்பவன் திருதராஷ்ட்ரன். உடலாகவே வாழ்ந்தவன் பீஷ்மரிடம்
மற்போரில் தோற்றவுடன் உருகிப் பணிகிறான். விழி தவிர அனைத்துப் புலன்களாலும்
இசையைத் துய்ப்பவன். அவனுடன் மற்போரில் அவன் உடலை அறியும் பீஷ்மர் அவனுள்
ஓடும் அதிர்வை அறிகிறார். விதுரன் சொற்கள் மூலம் திருதனை அறிகிறான்.

விதுரன் உற்சாகம் நிறைந்த ராஜ தந்திர – சட்ட – அயலுறவு நிபுணனாகத் தன்னை
ஆர்வத்துடன் தயார் செய்து கொள்கிறான். அவனது பிறப்பு அவனுக்கு பெரும் தடையாக
இருப்பதை உணர்ந்து அறிவாலும் சொற்களாலும் தனது இடத்தை உருவாக்கிக் கொள்கிறான். விதுரன் ஆயுதங்களை மேற்பார்வையிட்டு கோட்டைத் தலைவனிடம் உரையாடுவது அமைச்சருக்கும் ராணுவத்தலைவருக்கும் எல்லா நவீன அரசுகளிலும் தொடரும் பூசலை குறிக்கிறது. ராணுவத்தை ஒரு ஐயத்துடன்தான் ஜனநாயக நாடுகளிலும் ஆட்சியாளர்கள் வைத்திருக்கின்றனர். நேரு – திம்மையா உறவு வரை வரலாறு பதிவு செய்துள்ளது. விதுரன் கோட்டை மேல் தயாராக நிறுத்தியுள்ள ஆயுதங்களை ஏன் துடைக்கவில்லை என்கிறான். பகலில் விபத்து ஏற்படலாம் என்கிறான் கோட்டைத் தலைவன். இரவில் செய்யலாமே என்கிறான் விதுரன். முறுமுனையில் பதில் ஏதும் வருவதில்லை. விதுரரின் துணிவு பீஷ்மர் என்னும் கார்மேகம் அஸ்தினபுரியை கவிந்து கொண்டிருப்பதால் வருகிறதோ?

போர் மழை போன்றது. பல முனைப் பூசல்களை அடித்துச் சென்று புதிய விதைப்புக்கு
புவியைத் தயார் செய்கிறது. போர் குறித்த பொருளியல் உரையாடல்கள் மெதுவாகத்
துவங்குகின்றன.

பீஷ்மர் கருணை மிகுந்து வடமேற்கே மாறி வீசிய மாரியாக காந்தாரம் செல்கிறார்.பாரத
வர்ஷத்தின் பசுமையான வரலாறெனும் வயலில் வடமேற்கு ரத்தம் கலக்க வழி செய்கிறார்.

எதிர்கால அரசியல் கணக்குகள் நிறைந்த சத்யவதி பீஷ்மரை காந்தாரம் அனுப்பி வைக்க
முயல்கிறாள் . அதற்கு விருப்பமில்லாத பீஷ்மரை பேருரு கொண்ட விழியிலா மன்னன் தாள்
பணிந்து விழும்போது மனம் மாறுகிறார் . இன்னொரு மனமாற்றம் சகுனியிடம் நிகழ்கிறது.
பீஷ்மரை அளக்க முடிந்து தோற்றபோது தனது ஆணவமும் கணக்குகளும் இழுக்க,
காந்தாரியை மகற்கொடை மறுக்கிறான் சகுனி. ஆனால் காந்தாரியின் நிமிர்வும் கனிவும்
நிறைந்த பேச்சு சகுனியின் மனதை மாற்றுகிறது.

சிறு சிறு நிகழ்வுகள் உலக நடப்பை மாற்றி விடுகின்றன. மகதத்தில் இருந்து சமாதான ஓலை
சகுனிக்கு வருகிறது. அதைக் கொண்டு வந்த செங்கழுகை ஒரு பசித்த ஓநாய் பிடித்துத் தின்று
விடுகிறது. அந்தக் கழுகை அம்பால் அடித்தது சகுனி. இரவில் துயிலாது இருந்த சகுனியை
தனது ஓலத்தின் மூலம் வெளியே வரச் செய்தது அந்த ஓநாய் . சகுனிக்கு துயில் வராமல் இருந்த
காரணம் பீஷ்மரின் மண வேட்பு தூது. ஒருவேளை கழுகின் செய்தி கிடைத்திருந்தால் காந்தாரம்
மகதத்துடன் மண உறவு கொண்டிருக்கும். மகாபாரதம் வேறு மாதிரி இருந்திருக்கும்

வேறு மாதிரி போகக் கூடிய பல்வேறு சாத்தியங்களின் விதைகள் காலமெனும் மணல் பரப்பில்
கொட்டிக் கிட க்கின்றன.

பாலைப் பயணத்தில் பீஷ்மர் கண்ட எண்ணற்ற விதைகள் ஒவ்வொன்றும் ஒரு நிகழ்தகவு.
தொடர் நிகழ்வில் ஒரு கண்ணி மாறினாலும் உருவாகும் காடு முற்றிலும் வேறாக இருக்கும்.

சத்தியவதி பீஷ்மரை தூது அனுப்பும் பகுதி கானல் வெள்ளி . காந்தாரி வெண்மணல் அனுப்பும்
அரிய வெள்ளி. அல்லது இந்த மொத்த நிகழ்வும் மயக்கும் பொய்த் தேர்.

பருவ மழையின் பரிசுதான் பாரதத்தின் வாழ்வும் பண்பாடும். புயல் உருவாக
பாலைவனங்களும் பங்களிக்கின்றன என்கிறார்கள் புவியியல் அறிஞர்கள்.
நிலத்தைக் காய்த்து காற்றை இலேசாக்கி அழுத்தத்தில் பேதமிட்டு விளையாடி கடல் நீரை
உறிஞ்சி முகிலில் நிரப்பி வீசிப் பொழிகின்றன தென் மேற்குக் காற்றுகள். மணலைக்
காற்றில் ஏற்றி விளையாடுகின்றன நெருப்பு தெய்வங்கள் . சகுனி என்னும் வெந்த காற்று
பாரதத்தின் மீது மழையைப் பொழிவிக்க காந்தாரம் தொட்டிலாக உள்ளது. ஆனால்
பொழிவது உதிரமழை .

பீலிப்பனையில் காந்தாரிக்கு தாலிச்சுருள் செய்ய பாலை எங்கும் அலைகிறார்கள், இறுதியில்
வெம்மையின் அனைத்து வீச்சுகளையும் தாங்கிய பேரன்னையான தனித்து நிற்கும் பூத்த
பனையைக் காண்கிறார்கள் கடினமான சூழலில் பெருகும் உயிர்த்தொகையின் அடையாளம்
பனை. காந்தாரியின் தங்கைகள் விழியிலா வேந்தனை மணக்கத் தயார் ஆகிறார்கள்.

திருதனின் உள்ளே ஓடிக் கொண்டிருந்த இசையைத் தானும் கேட்கிறாள் காந்தாரி . அந்த
இசைக்கணம் மிகக் குறுகிய மின்னல் அந்தக் கணத்தைப் பிடித்து வைத்துக் கொள்ளக்
கண்களைக் கட்டிக் கொண்டு விடுகிறாள். திருதன் வாழ்வில் முதல் முறையாக மழையில்
நனைகிறான்.

திருதராஷ்ட்டிரன் காற்றின் இசையில் மந்திர ஸ்தாயில் ஒலிக்கும் செவ்வழிப் பண்ணைக்
கேட்கிறான். அவனுக்கு என்றோ ஒருநாள் திருவிடத்து கலைஞர் இசைத்த சாமவேத பாடல்
இசை மட்டும் நினைவுக்கு வருகிறது. சொற்களை விதுரன் எடுத்துத் தருகிறான்

சாமவேதம் ஐந்தாம் காண்டம் ஒன்றாம் பாகம் ஐந்தாம் பாடல் பவமானன் என்னும் சோமனுக்கு
உரியது. பொங்கும் நதிகள்போல, கூரம்புகள்போல துள்ளி வரும் நெருப்பின் மகன் –
கதிரவனின் நண்பன். இந்திரன் வயிற்றில் சோமச் சாற்றை நிறைப்பவன். இரு பெரும்
சக்திகளின் மோதல் இனிய கல்லாக இசையாக ஆவியாக திருதனின் செவிக்குள் காற்றும்
நெருப்பும் போலக் கரைகின்றன.

அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச் செய்தாள் என்னை.

ஆர் ராகவேந்திரன்
கோவை

முதற்கனல் 2 – ஆர். ராகவேந்திரன்

தீச்  சாரல் , தழல் நீலம் ,வேங்கையின் தனிமை, அடியின் ஆழம், வாழிருள் ஆகிய பகுதிகளை முன்வைத்து ஆர். ராகவேந்திரன் ஆற்றிய சிறப்புரை:

“எதனையும் விட வேகம் கொண்டவன் என்று தன்னை ஒளி நினைத்துக் கொள்கிறது.  ஆனால்  அது தவறு. எவ்வளவு விரைவாக ஒளி சென்றாலும் தனக்கு முன்னே அங்கே சென்றடைந்து தனக்காகக் காத்துக்  கொண்டிருக்கும் இருளைக் காண்கிறது.”

டெர்ரி பிரச்சட்டின்  ரிப்பர் மேன் நாவலில்  வரும் இந்த பிரமிப்பூட்டும் வரிகளை முதற்கனலுக்கு முத்தாய்ப்பாகச் சொல்லலாம் 

 முதற்கனலின் அத்தியாயம் 27 முதல் 50 வரையிலான பகுதிகள் அம்பையின் தீப் புகுதலையும்,  பீஷ்மர், வியாசர், சிகண்டியின் நெடும் பயணங்களையும்  திருதராஷ்டிரன், பாண்டு, விதுரரின் பிறப்புகளையும் பேசுகின்றன.

சுருதி, ஸ்மிருதி, புராணங்களின் கலவையாகத் தோன்றுகிறது முதற்கனல் . சாந்தோக்கிய உபநிடத்தின் ஆப்த வாக்கியமாகிய “நீயே அது’ அக்னிவேசரால் சிகண்டிக்கு அளிக்கப் படுகிறது.  காலத்திற்கேற்ப மாறிவரும் அறங்களை எம ஸ்மிருதி , சுக்ர ஸ்ருதி  முதலாய நீதி  நூல்களை வைத்து அரசியல் – உளவியல் சிக்கல்களை   உசாவுகிறது. யயாதி  போன்ற புராணக் கதைகள் மூலம் பீஷ்மரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல்கிறது. 

  குஹ்ய சிரேயஸ் ( மறைக் காப்புத் திறலோன் என்று பொருள் கொள்கிறேன்)  என்னும் கழுதைப்புலி க்ஷத்ரியர்கள்  ஒவ்வொரு குலத்திலும் உருவாகும் விதத்தைச் சொல்கிறது. வைச்வானரன் என்னும் நெருப்பு படைப்பின் உயிரின் ஆற்றலாக பிறவி தோறும் தலைமுறை தோறும் கடந்து வரும் சத்து என்பதை உணர்ந்து கொண்ட சித்ரகர்ணி- கழுதைப்புலிகள் மற்றும் வியாசர் உரையாடல் அழகிய பஞ்ச தந்திரக் கதையாக அமைகிறது.  

சாந்தோக்ய உபநிடததத்தில்  வைச்வானர வித்யை என்னும் தியான முறையை  அஸ்வபதி கைகேயன் என்னும் அரசன்   உத்தாலக  ஆருணி  முதலிய கற்றறிந்த பண்டிதர்களுக்கு உபதேசிக்கிறான். அவர்கள் தியானம் செய்யும் முறையானது பிரபஞ்சத்தின் தனித்தனியான பகுதிகளாக  கவனம் செலுத்தி வந்தது.  அனைத்தும் ஒன்றே என்னும் அறிவை அவர்களுக்கு வழங்குகிறான். வயிற்றில் உறையும் வைச்வானரன் என்னும் செரிக்கும் நெருப்பு எப்படி உணவை உடல் முழுவதும் ஆற்றலாக மாற்றித்  தருகிறதோ  அது போல இந்த அறிவும்  முழு நிறைவை வழக்கும் என்று சொல்லப்படுகிறது. 

அந்த வித்தை யின் பருவடிவமாக இந்த நெருப்பு எப்படி உண்டும் வழங்கியும் உயிர்க்குலங்களின் வழியே கொண்டு செல்லப்படுகிறது என்பதை இறந்து கொண்டே தத்துவம் பேசும் சித்ரகர்ணி என்னும் சிம்மம் சொல்கிறது. பெயர் வைத்தலில் அழகிய பொருத்தம் உள்ளது. க்ஷத்திரியனின் பிரதிநிதியாக குஹ்ய சிரேயஸ் ரகசியத்தின் உருவமாக இருக்கிறது. குலம் காக்கும் – குருதி கொள்ளும் ரகசியம். விநோதச் செவியன் என்று சித்ரகர்ணியை எடுத்துக் கொண்டால் ‘கேட்டலின்’ மூலம் ஞானம் பெற்றவன் அவன். வியாசரின் குடிலை வேவு பார்க்கும் போது எத்தனையோ கேட்டிருப்பான்.

அத்வைதம் தரும் அமைதி நிலையை பல்வேறு பாதைகளின் மூலமாக வியாசருக்கும் பீஷ்மருக்கும் இயற்கையும் சூதர்களும்  வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். 

காலத்திற்கேற்ப ஸ்மிருதிகள் மாறுவதை ஸ்வேதகேது தனது தந்தையை எதிர்த்து தாய்க்கு உதவி செய்யும் பகுதி விளக்குகிறது . சட்டம் நெகிழக்கூடிய பகுதிகளையும் அது நிகழக்கூடிய வகைகளையும் சொல்லி வைத்திருக்கிறது. 

புராணத்தின்   அலகுகளான  காவியம், கண்ணீர், வம்ச  கதை  திரண்டுள்ளன முதற்கனலில். 

பாத்திரங்களின் குண மாற்றம் இதை ஒரு தனிப் புதினமாக ஆக்குகின்றன 

ராஜோ குணத்தின் செயலூக்கத்தில் துவங்கி, பின் தமோ குணத்தில் பித்தியாக அலையும் அம்பை இறுதியில் சத்துவ குணத்தில்  நிறைகிறாள். அன்னையின் நிழலில், உண்பதே வாழ்க்கையாக துவங்கும் சிகண்டினி, பின்னர் பழி என்னும் ஒற்றை இலக்கிற்காக ரஜோ குணத்தில் நிற்கிறாள் . அம்பைக்குப் படகோட்டிய நிருதன் தூய காத்திருத்தலில் அசையாமல் படகில் இருப்பது தமோகுணமாக மயக்கும் சத்வம் தான் பின் அம்பையை விண்ணேற்றவும் ஏற்றியபின் முதல் பூசகனாகவும் உருமாறி ராஜசத்தில் சேருகிறான், பீஷ்மர் வெளித்தோற்றத்தில் ராஜசமும் உள்ளே மாறாத் தேடலில் சத்வத்திலும் உறைகிறார். சத்யவதி மட்டும் குணமாற்றமின்றி இருப்பதாகத் தோன்றுகிறது. 

சுக முனிவரும் பீஷ்மரும் தந்தைக்கு முறையே சொல்லாலும் செயலாலும் மீட்பளிக்கிறார்கள். வியாசர் அறத்தையும் சந்தனு இன்பத்தையும் மகன்களிடம் கொடையாகப் பெறுகிறார்கள். 

யயாதி கதை பீஷ்மருக்கு சொல்லப் படுகிறது. ராஜாஜியின் யயாதியிலிருந்து வெண்முரசின் யயாதி வேறுபாடும் இடம் சிறப்பானது. கால மாற்றத்திற்கேற்ப யதார்த்தமானது. “வியாசர் விருந்தில் ” இச்சையை அடைந்து தணிப்பது என்பது நெருப்பை நெய் விட்டு அணைக்க முயல்வது போன்றது ” என்ற அறிவைப் பெற்று விடுகிறான். முதற்கனலில் வரும் யயாதி மகனுக்கு இளமையை அளித்து விண்ணேகிய பின்னும் அகந்தையால் வீழ்த்தப்படும் யயாதியாக நெருப்பிலும் பயன் பெற உரிமை இன்றி, தனது மகளைக் கண்ட கனிவில் முழுமை அடைகிறான் 

பீஷ்மர் தேர்ந்தெடுத்திருக்கக் கூடிய ஒரு வாய்ப்பை யயாதி கதை மூலம் அவருக்கு சொல்கிறார் சூதர் . 

முதற்கனல் பெண்டிரையும் ஒடுக்கப்பட்டவர்களையும்  பீடத்தில் ஏற்றுகிறது. பீஷ்மரை இழிவு செய்து பாடும் சூதர், சால்வனை தீச்சொல்லிட்டுவிட்டு, நகர் நீங்கும் சூதர், மந்திரங்கள் மூலம் அரசியரின் மனங்களை கட்டுப்படுத்தும் நாகினி, காவியமும் சீர் மொழியும் கற்றுத்தேர்ந்த சிவை போன்ற அடிமைப் பெண்கள் வரவிருக்கும் கால மாற்றத்தைக் குறிக்கிறார்கள். 

குல அறங்கள், கால அறங்கள், தேச அறங்கள் ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தி நிற்கும் சரடுகளின் இறுக்கத்தின் மேல்  மைய அரசின் அரியணை நிற்கிறது. க்ஷத்திரியர் ஆவதற்கு வாள்முனையும் மறைச்சொல்லும் குலங்களுக்குத் தேவைப்படுகின்றன. பிறகு புதிய போட்டியாளர் உருவாகாமல் தடுக்க வேண்டி உள்ளது 

சிறிய நிகழ்வுகளை பெரிய இயக்கங்களுடன் தொடர்புறுத்துவதே வெண்முரசின் பிரம்மாண்டம்.    

நியோக முறையில் குழந்தைகள் பிறக்கும் முன் சொல்லப் படும் கதைகள்  இதற்கு நல்ல உதாரணம். 

நூறு   பறவைகளின் நிழல்களை வீழ்த்திய திருதராஷ்ட்டிரன் என்னும் கந்தர்வன் அதே பெயரில் கண்ணில்லாதவனாக  பிறக்கிறான். அவன் பார்ப்பதெல்லாம் இருளே. அவன் தேடுவதெல்லாம் நிழலாகவே அமையப் போகின்றன . தனது குஞ்சுகளைப்  பிரிந்த ஏக்கத்தில் இறந்த சாதகப் பறவை மீண்டும் பாண்டுவாய்ப் பிறந்து மைந்தரைப் பிரியும் துயரை அடைகிறது. அறத்தின் தலைவனே விதுரனாக வருகிறான். 

வில்வித்தை பிரம்மவித்தையின் ஒரு சிறு பகுதியே என்கிறார் அக்நிவேசர். ஒவ்வொரு சிறு  அறிவும் சொல்லும் ஊழ் வரை, புடவி அளவு காலம் அளவிற்கு விரிந்த ஒன்றின் துளி என்னும் ஞானம் கதை வழியே பயணிக்கிறது. 

பிஷ்மரின் சப்த -சிந்து  சிபி நோக்கிய பயணங்கள் அவருக்கு மனவிரிவை  அளிக்கின்றன. பாலையில் காணும் விதைகளைக் கண்டு  வியக்கிறார். வானும் மண்ணும் கருணை செய்தால் வேறு ஒரு வகை காடு உருவாகி இருக்கும் என்று எண்ணுகிறார். கோடிக்கணக்கான நிகழ்தகவுகளின்  ஒரு தேர்வு தான் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலம் என்றுணரும் இடம் அதிர்ச்சி அளிப்பது      .  ஒரு வேளை  கால – நிகழ்வுகளின்  வேறு வகையான  வாய்ப்பில் அவரும் விதை முளைக்கும் சாதாரண தந்தையாகி இருந்தால், பெண்ணின் கருணை அவருக்கு கிட்டி இருந்தால் தனித்த வேங்கையின் பொறுப்புகள்  அவரிடமிருந்திருக்காது. 

தென் மதுரைச் சாத்தன் வியாசருக்கே வழி காட்டுகிறார். கருமையும் வெண்மையும் இணைந்ததே ஒளி என்கிறார் . 

 மானசாதேவி தன் மகன் ஆஸ்திகனுக்கு ஒரு கடமையை அளித்ததில் துவங்கும் முதற்கனல் அவன் தனது வேசர நாட்டிற்கு திரும்பி வருவதுடன் நிறைகிறது, இருள் என்பது இகழப்  படவேண்டியதில்லை , தமோ குணம் முற்றும் ஒழிக்கப் படவேண்டிதில்லை என்ற அறிவை ஜனமேஜனுக்கு அளித்து பாம்பு வேள்வியை தடுத்த வெற்றியாளன் ஒரு வருடம் கழித்து நாக பஞ்சமி  அன்று தனது குலத்திற்கு வந்து தான் இன்னும் நாகன் தான் என்று அறிவிக்கிறான். 

ஆஸ்திகனால் காக்கப்பட்ட தட்சன் தட்சகியுடன் காரிருள் நீண்ட பெரு வானம் நிறைத்து இணைந்து படைப்பை நிகழ்த்துகிறான். இருள் இணைந்து ஒளியைக் குழவியாகப் பெற்றுத்  தாலாட்டுகிறது. சத்வகுணம் என்னும் முத்து ராஜசம் என்னும் சிப்பிக்குள் தாமசம் என்னும்  ஆழிருள் கடலில் பாதுகாப்பாக இருக்கிறது.  இருளற்ற ஒளியில்லை. இதுவே இந்தியாவின் அனுபவ ஞானம் . 

இருள் ஒளி இரண்டிற்கும் ஒன்றிடம் என்று அருள் தரும் ஆனந்தத்தை அடைய அனைத்திலும் ஒன்றைக் காண்பதே வழி என்கிறது முதற்கனல். பல ஆயிரம் ஆண்டுகளாக  பாரத வர்ஷம் கண்ட வாழ்வனுபவம் புல்லும் புழுவும் நம்பி வாழும் அறத்தை நிலைநிறுத்தச் செய்யும் முயற்சியாக முதற்கனல் எரிகிறது.

உவமைகள் / உருவகங்கள் 

1 செம்புல்  பரவிய குன்று போன்ற சிம்மம் 

2 நெல்மணி பொறுக்கும் சிறு குருவி போல அம்பாலிகையிடம் பதற்றம் இருந்தது 

3 வாய்திறந்த அரக்கக் குழந்தைகள் போல வட்ட   வடிவ இருளுடன் நின்ற செம்புப் பாத்திரங்கள் 

4  வலசைப்  பறவைகளுக்கு வானம் வழி சொல்லும் 

5  பாரத வர்ஷம் ஞானியர் கையில் கிடைத்திருக்கும் விளையாட்டுப் பாவை 

6 வந்தமரும் நாரைகள் சிறகு மடக்குவது போல பாய்  மடக்கும் நாவாய்கள் 

7 சிகண்டி கழுத்தில் குருதி வழியும் குடல் போல காந்தள் மாலை கிடந்தது 

தத்துவங்கள்  

 கருணை கொண்ட செயல்கள் அனைத்தும் ஒழுக்கமே (சுகர் வியாசரிடம் சொல்வது) 

இசை  நுணுக்கங்கள் 

புரவிப்படை மலையிறங்கும் தாளம்.

ஆர்  ராகவேந்திரன் 

கோவை

‘இடியட்’ வாசிப்பு – ஆர். ராகவேந்திரன்

தஸ்தவ்யாஸ்கியின்   ‘இடியட்’  கதைமாந்தர்களின் உளவியல்  நமக்கு மிகவும் பரிச்சயமாக இருக்கின்றன. சில இடங்களில்  நம் உள  அமைப்பையே காட்டுவதாக மலைப்பை  தருகின்றன. 

 குழந்தைப் பருவ நினைவுகள்  வெளிவரும்போது எப்போதும் நம்  அசலான  ஆளுமையுடன் நெருக்கமாக உணர்கிறோம்.   நம்மையும் உலகையும் அன்பு மயமாக  ஆக்கவல்லவை இந்நினைவுகளைத் தூண்டும் படைப்புகள்.

 உலகின் கண்ணீரை துடைத்து விடுபவன் உலகிற்கு ஒரே நேரத்தில் அன்னையாகவும் குழந்தையாகவும் ஆகிறான். பிறிதின் நோயை  தன்  நோய் போல் போற்றும் அறிவு , முயற்சியினால் அடையப் படுவதல்ல; அது இயல்பான அன்பிலிருந்து வருவது.  அசடனான மிஷ்கின்  தூய அறிவின்மையின் வெளிப்பாடு.  

எம் ஏ சுசீலாவின்  சீரான மொழிபெயர்ப்பில் நாணிக்கோணிக் கொண்டு      நம்முன் வருகிறான் அசடன்.  தனது வலிக்கும் பிறரது வலிக்கும் வேறுபாடு தெரியாத தூய்மை சில  வரலாற்று மாந்தர்களின் நினைவுகளைக் கொண்டுவருகிறது. 

ஒரு பெரிய குழந்தை சிறியதை  அடிக்கும்போது இன்னும் சிறிய குழந்தை ஒன்று அழுகிறது.  புல்வெளி மீது நடக்கும் மனிதனைப் பார்த்த ராமகிருஷ்ணர்  இதயம் பிசையைப்படும் வலியை உணர்கிறார். பிஜி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டு மனிதர்கள் இறந்து கொண்டிருந்த இரவில் விவேகானந்தருக்கு பெரும் துயர் உண்டாகி விடுகிறது. பயிர் வாடும்போது தன்  உயிரும் வாடிய வள்ளலார் அறிவுச்  செயல்பாடாக வோ  சிந்திப்பதன் மூலமாகவோ துயரைப்பெறவில்லை.  விளக்க முடியாத  ஒரு இணைப்பு இங்கே இருக்கிறது.

நஸ்டாஸியாவின் குழந்தை போன்ற முகத்தைக் காணும்போதும் அக்லேயாவின் ஒளிவு மறைவற்ற அக்கறையை  உணரும்போதும் மிஷ்கின் கொள்ளும் பேரன்பு உடல் தளத்தைக் கடந்தது. 

துளித்துளியாக, பொறுமையாக மிஷ்கினின் பாத்திரத்தை வார்த்தெடுக்கும்  ஆசிரியர்  அவனை முழுமையாக்குகிறார். ‘விசுவாத்ம புத்தி’ என்று சொல்லப்படும் ‘உலகில் கரைந்த’ ஆளுமையை இயேசுவின் படிமம் போல செதுக்குவதற்கு இவ்வளவு பெரிய பின்புலமும் நுண்ணிய காட்சி விவரிப்புகளும் தேவைப்பட்டிருக்கின்றன. 

இயல்பான , சிறிது சுயநலமும் சாமானிய ‘நல்ல’ தன்மையும் கொண்ட நாகரிக மனிதன் போன்ற சராசரி வாழ்வை மிஷ்கின் போன்றவர்கள் மேற்கொள்ள முடிவதில்லை. சிறிது சிறிதாக பித்து நிலையை அடைகிறார்கள்.  அல்லது சற்று மூளை  கலங்கியதால் தான் இந்த நேயம் தோன்றுகிறதோ?

மிஷ்கின் பொது இடத்தில் அவை நாகரிகத்தை பின்பற்றுவதில்லை. பூச்சாடிகளை  தனது உணர்ச்சி வசப் பதட்டத்தால் உடைத்து விடக்கூடியவன்.  தஸ்தவ்யாஸ்கியின்   வாழ்வில் அவருக்கு ராணுவ சீருடை பிடிக்கவுமில்லை. பொருந்தவும் இல்லை. அடிக்கடி இழுப்பு வரக்கூடியவர். பழமை வாத  கிறித்துவமும் சோஷலிசமும் ஆசிரியரைக் கவர்ந்திருக்கின்றன.  மிஷ்கின் இந்த குணங்களுடன் வளர்ந்து வருகிறான். 

ஆணவம் கொண்ட பெரிய மனிதர்கள் மிஷ்கின் போன்றவர்களை ஏளனம் செய்கிறார்கள்.  எடை போடும் அறிவாளிகளின் அடிமனதில் கயமை இருட்டில் ஒளிந்து கொண்டு எட்டிப் பார்க்கிறது. மிஷ்கின்கள் பெரும்பாலும் இவர்களை  புரிந்து கொண்டிருக்கிறார்கள். கபடங்களை எளிதில் கடந்து செல்வதன் மூலமும்  அவர்களுக்கு வென்று விட்டோ ம் என்ற  இறுமாப்பை அளிப்பதன் மூலமும் தங்கள் மைய இயல்பை  பாதுகாத்துக் கொள்கிறார்கள்.  மனநிலை பிறழ்ந்தவர்களுக்கு  வாழ்வின் இறுதி கணத்தில் சுய நினைவு திரும்பி விடும் என்ற  நம்பிக்கை உண்டு.   ‘தான் ‘ யார் என்று உண்மையில் ஆரோக்கிய மனம் கொண்டவர்களும் அறிந்து கொள்ளாத நிலையில் ,  நிலையான சுய அறிவு என்பது என்ன என்ற கேள்வியை அசடன் முன்வைக்கிறான். 

மிஷ்கின் போன்ற ‘இளிச்சவாய’ தன்மை கொண்ட தேசங்களும் சமுதாயங்க ளும் கூட இருக்கின்றன .  தான்  ஏமாற்றப்படுவது தெரிந்திருந்தும் பிறருக்கு  மகிழ்ச்சி தருவதற்காக  ஏமாந்தது போல நடிக்கும் ‘அப்பாவிகள் ‘ நின்றிருக்கும் உலகை இலக்கியவாதிகளால் படைக்க முடிகிறது 

மனிதன் இறைத்தன்மையை  பூரணமாக வெளிக்காட்டுவதில் அடையும் தடுமாற்றங்களின்  கதையே அசடன் 

பெரிய கப்பல் ஒன்று முனகலுடன் கிளம்புவது போல கதை துவங்குகிறது. ஒவ்வொரு  இயந்திரமாக சுழலத் துவங்க,  கதைமாந்தர்களி ன்   விவாதங்களின் ஊடே அசைவு நிகழ்கிறது. நகர்வதே தெரியாமல் கதை வெகு தூரம் வந்து விட்டிருக்கிறது. 

சுவிசர்லாந்தின் மன நோய் சிகைச்சை  முடிவதற்கு முன்னரே  தனது தாய்நாடாகிய  ரஷ்யாவிற்கு ஒரு துணி மூட்டையை மட்டும் உடைமையாக எடுத்துக் கொண்டு மிஷ்கின் வருகிறான். திடீர் செல்வந்தனாகி , அன்பை சுற்றிலும் தெளித்து , எல்லோரையும் நம்பி , குறுக்கு மனது கொண்டவர்களையும் ஆட் கொண்டு  அவர்களே  அவனுக்கு செய்த சூழ்ச்சிகளையும் அவனிடமே  சொல்லவைத்து அதையும் மனதில்  ஏற்றிக்  கொள்ளாமல் காதலில் விழுந்து அடிபட்டு, ஒரு கொலை நிகழ்விற்கு தார்மிக காரணமாகவும்  சாட்சியாகவும்   இருந்து, மூளை  மீண்டும் கலங்கி தனது மருத்துவ சிகிச்சைக்கே திரும்புகிறான்.

பெற்றோரை இழந்து குழந்தையாக இருக்கும்போதே எதிர்கால உருவாய் பொலிவின்  அடையாளங்களைக்கொண்ட நஸ்டாசியா,  டாட்ஸ்கி என்னும்  கீழ்மைகொண்ட செல்வந்தனால் வளர்க்கப் பட்டு கையாளப்படுகிறாள்.  தனது நிலைக்கு பொறுப்பாளி தானே என்றும்   தன்னைப் பாவி என்றும் எண்ணிக் கொண்டு சுயவதை செய்து கொள்கிறாள்.  உண்மையான அன்புடன் அவளுக்கு மீட்பை  அளிக்க  மிஷ்கின் முன்வருகிறான். அவனை கீழே இறக்கக் கூடாது என்ற குற்ற உணர்வுடன் தன்னைக் கீழே இறக்கிக் கொண்டு ரோகோஸின் என்னும் தாதாவை மணக்க முடிவு செய்து  ஒவ்வொரு முறையும் திருமண சமயத்தில் ஓடிப் போய்விடுகிறாள். 

அவளைப்போலவே கலைத்திறனும் மென் மனமும் கொண்ட  அக்லேயாவுடன் மிஷ்கினை  மணமுடித்து வைக்க முயற்சி செய்து ஒரு கட்டத்தில்  இரு பெண்களுக்கும் நடைபெறும் ஆதிக்கப் போட்டியில் மிஷ்கினை திருமணம் செய்துகொள்ள நஸ்டாசியா முடிவெடுக்க, மீண்டும் ஓடிப்போதல் நடைபெறுகிறது. அவளை அழைத்துக் கொண்டு செல்லும் ரோகோஸின் அவளைக் கொன்று விடுதலை தந்து விடுகிறான். மிஷ்கினுக்கும் ஆறுதலைத் தந்து  சைபீரிய தண்டனையை பெறுகிறான்.

மிஷ்கின் உலகில் அழகினால் அமைதியைக் கொண்டு வர முடியும் என்று நினைக்கிறான் . அவன் உண்மையில் அன்பைத்தான் அப்படி எண்ணி இருப்பான் போல இருக்கிறது. 

உருண்டு வரும் அழகிய கண்ணாடிக் குடுவையைப் பக்குவமாக எடுக்கத் தெரியாமல் போட்டு உடைத்து விடுவது போல அக்லேயா தனது வாழ்வை குலைத்துக் கொள்கிறாள்.

அசையாத நீரோடை போன்ற நாவலில் சிரிப்பைத் தரும் சுழிகள் தளபதி இபான்சின் வரும் இடங்கள்.  

குடிப்பதற்கு காசில்லாமல் கடன் கேட்பதும் தனது பழம் பெருமையை  பறை சாற்றிக்  கொள்வதும்    பொய்  சொல்லிச் சொல்லியே அதைத் தானே நம்ப ஆரம்பிப்பதும் கிடைத்த புட்டியை   ஊற்றிக்  கொண்டு அதே இடத்தில் உறங்கி விடுவதும்  தனது சாகசக் கதைகளைத் பிறர் நம்பாத  போது  கோபித்துக் கொண்டு சண்டை இடுவதும்  – உணர்ச்சிகளின் உச்சமான இந்த இபான்சின் போன்ற ஆத்மாக்கள் வாசகர் மனதில் பல பரிச்சயமான முகங்களை எழுப்புகின்றன.

நாவலின் உச்சமாகக் கருதுவது  நஸ்தாசியா கொல்லப்பட்ட பின் அந்த இருட்டு அறையில் மிஷ்கின் ரோகோஸின்னுடன் தங்குவது தான் . ஆன்மாவின் இருட்டில் குற்ற உணர்வின் துயரில் இருக்கும் கொலைகாரனுக்கு தேறுதல் தரும் மிஷ்கின் இயேசுவின் வடிவம் ஆகிறான். .

நஸ்டாசியாவின் விருந்தில் கலந்து கொண்டவர்கள்  தாங்கள்  செய்த அவமானம் தரும் குற்றங்களைச்L சொல்லும் இடமும்  மிஷ்கினின் சுழலையும் உடல் நிலையையும் வைத்து அவனது  உளவியலை பாவ்லோவிச் ‘விளக்குவதும்’ ஆய்விற்கு உரியன. 

குழந்தைகள்  ரகசியங்களை விரும்புகின்றன. சத்தம் போடாதே என்று மெதுவாகச் சொல்லிக் கொண்டே    கதவுக்கு இடுக்கில் நின்று கொண்டு  கள் ளச் சிரிப்புடன் வாய்மேல்  ஆள் காட்டி விரலை  வைத்து சிரித்துக் கொண்டிருக்கின்றன .  யாரிடமும் சொல்லாதே என்று மிக மெதுவாக உச்சரிக்கும்போதே அந்த ஒலி பெரிதாகக் கேட்டு விடுகிறது.  நாஸ்டாசியா கொல்லப் பட்டதும் மிஷ்கின் ரகசியமாக ‘எப்படிச் செய்தாய்? பாவ்லோவ்ஸ்க்கிற்கு வரும்போதே கத்தியுடன் தான் வந்தாயா ‘ என்றெல்லாம் கொலை செய்தவனிடம் கேட்க்கிறான்.  தானும் மாட்டிக் கொள்வோம் என்று சிந்திக்காமலேயே ரோகோஸினுக்காக கவலைப் பட ஆரம்பிக்கிறான். பளிங்கு போல அருகில் இருப்பவரைப் பிரதிபலிக்கும் மனம். ஊரைக் கூட்டிவிடாமல் ரோகோஸின் அருகில் படுத்துக் கொள்கிறான். அவனது கண்ணீர் கொலைசெய்தவன் மீது விழுந்து கழுவுகிறது

மிஷ்கின் முன் எல்லோரும் உண்மையையே பேசுகிறார்கள். எதற்கு இவ்வளவு சிக்கலாக வாழ்கிறீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறது  அவன் வாழ்வு 

மிஷ்கின் முன்னால் எல்லோரும் குழந்தைகள் ஆகிவிடுகிறார்கள். குழந்தையால் அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடிவதில்லை. கண்களை மூடிக் கொண்டு தந்தை முன் வந்து நிற்கிறது. தந்தையும் தன் கண்களை மூடிக்கொண்டு  தவிப்பதாகவும் பின் கண்டு பிடிக்கப் படடவராகவும் நடிக்கிறார்.  பின் இறைவன் பதட்டத்துடன் தன்னை வெளிப் படுத்திக்க கொள்கிறார்.  

ஒரே ஒரு தூயவன்   இருந்தான் அவன் கிறிஸ்து என்று சொல்லும் தஸ்தயேவ்ஸ்கி  அவனை  மீண்டும் மனிதர்களில் தேடிச் சலித்து வடிகட்டி எடுத்த கிறித்து நிகர் ஆளுமை  மிஷ்கின் 

அன்பின் தூய்மையை மறந்து விட்ட அசட்டு உலகில் மிஷ்கின் தன்மையை அடையும் முயற்சியே இலக்கியம் என்று தோன்றுகிறது. அந்த நிலையை ஒரு சிலர் அடையும் போது புவியின் பளு குறைகிறது. அப்போது சுகதேவா என்று வியாசர் அழைக்கையில் கானகத்தின் எல்லாப் பறவைகளும் இங்கிருக்கிறேன் தந்தையே என்று பாடுகின்றன.

ஆர் ராகவேந்திரன் 

கோவை

முதற்கனலின் முதல் உரசல் – ஆர். ராகவேந்திரன்

வெண்முரசு முதற்கனல் வாசிப்பு -வேள்விமுகம் முதல் மணிச்சங்கம் வரை

வெண்முரசு நூற் தொகையின் முதல் புத்தகமான முதற்கனல் வேசர  நாட்டில்  தொடங்குகிறது. நாக அன்னையான  மானசா தேவி தனது மகன் ஆஸ்திகனுக்கு  படைப்பின் துவக்கத்தை சொல்லி  அவனுக்கு ஒரு கடமையை சொல்லாமல் சொல்கிறாள். குழந்தைப் பருவத்தை  இன்னும் கடந்திராத நைஷ்டிக பிரம்மச்சாரியான ஆஸ்திகன்  வடக்கை நோக்கி நடக்கத் துவங்குகிறான். 

நாகங்கள் 

இந்தியா முழுவதும் நாகங்களுக்கு கோயில்கள் இருக்கின்றன. ஹரித்வாரில்  மலை மேல் மானசா அன்னைக்கு அமைந்துள்ள கோயில் புதருக்குள் புற்று போல வான் நோக்கி நிற்கிறது.   இவ்வன்னையின் வழிபாடு இந்தியாவில் எங்கும் பரவி உள்ளது. குறிப்பாக வங்கத்திலும் இன்றைய ஆந்திரத்திலும் . ஏன் பிற விலங்குகளை விட  நாகத்திற்கு அதிக வழிபாடு ? ஆதியில் தந்த அச்சம் மட்டும்தானா காரணம்  ?

 பொழுதிணைவு  வணக்கம் என்று ஜெயமோகன் குறிக்கும் சந்தியா வந்தனத்தின் ஒரு பிரார்த்தனை  நர்மதை நதியிடம் வேண்டுகிறது.  நாகங்களை ஜனமேஜய வேள்வியிலிருந்து காத்த ஆஸ்திகன் என்னை நச்சரவங்களில் இருந்து காக்கட்டும் என்கிறது.  நாகங்கள் இந்திய  மனத்தில் ஏற்படுத்திய தாக்கம் வரலாற்றின் அறியாத பக்கங்களில் இருக்கிறது.  அதை எளிய  மானுட ,உளவியல்  கொள்கைகளால் முழுதறிய முடியவில்லை.

குகையில் சொட்டும் தென் 

ஜரத்காரு முனிவர் குகையின் மேலிருந்து சொட்டும் தேனை மட்டும் பருகி தவம் புரிந்தார் என்பது மிக அழகிய உவமை . யோகத்தில் கேசரி முத்திரை செய்து நாவை உள்மடித்து கபாலத்தை தொடும்போது உள்ளே சொட்டும் தேனை குதம்பை  சித்தர்  

“ மாங்காய் ப் பாலுண்டு மலை மேல் இருப்பார்க்கு தேங்காய்ப் பால் ஏதுக்கடி” என்கிறார் 

நாகம்  – அகந்தை, காமத்தின் பரு உரு 

சர்ப்ப சத்ர யாகத்தில் ஜனமேஜயன்  ,போருக்கு அடிப்படையாக இருக்கும்  அகந்தை மற்றும் காமத்தை மொத்தமாக அழிக்கும் நோக்கம்  சொல்லப் பட்டிருக்கிறது .  வேள்விக்கு ஒரு காவலன், ஒரு ஹோதா, ஒரு எஜமான் , கார்மிகர்  தேவை.  பிற்காலத்த்தில் வேதாந்தம் உருவாகி வந்தபோது வேள்வி என்பதே மனிதன் புரியும் செயல்கள் என்று பரிணாமம் அடைகிறது. ஜனமேஜய னின்  யாகத்தில்  வேதம் புரிபவர்கள் தங்கள்  இச்சைகளையும்  அவியாக்க  கையால் சைகை செய்யும்போது அவை பாம்பின் அசைவுகளை   ஒத்திருப்பதாக  கற்பனை செய்கிறார். வெண்முரசின் சடங்கியல்   பற்றி அறிய ஒரு தனி வாசிப்பு வேண்டும்.  வாழ்நாள் பணியாகும் அது

அதர்வ வேதம் 

இந்து மதம் தன்னை ‘தூய்மை’ செய்து  கொண்டே வளர்ந்த போது  , நூற்றாண்டுகளில்  வழக்கு  ஒழிந்து போய்விட் ட  முறைமைகளை அவற்றின் அக்காலத்  தேவையைப் புரிந்து  கொள்ள முயற்சிப்பது  வெண்முரசின் ஒரு முக்கிய இழையாக  இருந்து வருகிறது. அதர்வ வேதத்தின் மந்திரங்களைக் கொண்டு யாகம் இயற்றப் படுகிறது.  ஒன்பது துளைகளையும் முறைப்படி அடைத்துக் கொல்லப் பட விலங்குகள் பலி  கொடுக்கப் படுகின்றன. வெண்முரசின் சடங்கியல் பற்றி தனியே ஒரு வாசிப்பு தேவைப்படுகிறது

  காசி இளவரசிகள் –   முக்குணங்கள்  

அம்பை, அம்பிகை, அம்பாலிகை மூவரும் சத்வ , ரஜஸ் , தமோ குணங்களின்  வெளிப்பாடாக  காட்டப்   படுகிறார்கள். அம்பை ரஜோ  குணத்தின் வடிவம். அவள் செந்நிறமாக உடையணிந்து பின்னர்  வாராஹி வாகனத்தில் பிடாரியாக உருவெடுப்பதன் அனைத்து உளவியல் விசை களையும்  துவக்கத்தில் கொண்டிருக்கிறாள். ஆயினும் பிற இளவரசிகளுக்கு சத்வ , தாமஸ குணங்கள் பொருந்துவது புரியவில்லை. தாமச குணத்தை புரிந்து கொள்வது கடினம் தான் . தமோ குண வடிவு கொண்ட அம்பிகை இசையிலும்  சத்வ குணம் மீதுற்ற  அம்பாலிகை  ஓவியத்திலும் திறன் கொண்டவர்கள் 

வேள்வியில் தடைகள் 

தொழில் பிரிவுகள் அவற்றுக்குரிய முழு அறிவில் செறிந்திருந்தன. பந்தல் சமைக்கும் வினைஞர்  தனது துறைசார் அறிவை காலம் கடந்த தேடலுடன் இணைத்துக் கொள்கிறார். வெண்முரசின் சூதர்கள் பணிப்பெண்கள் சமையல் புரிவோர், முடி திருத்துவோர் , கொல்லர், மருத்துவர்   காட்டும் அனுபவ அறமும் அதன் வழி வந்த  ஞானமும்  பாரத தேசத்தின் செயல்முறை வேதாந்தத்தின்  தரிசனத்தில் விளைந்தவை. காசி அரசனின் வினவிற்கு வேள்விப் பந்தல் அமைத்த முது கலைஞர்  சொல்லும் மறுமொழி தனது தன்னறத்தில்  தோய்ந்த எளிய பாரதியனி ன் அறிவுச்சுடர்.

பெயர்ச் சூடுதல் 

ஜெயமோகன் கோடடை மணிக்கு, கோடடைச் சுவருக்கு , விலங்குகளுக்கு உச்சமாக கங்கையின் சுழிக்கே பெயர் சூட்டுகிறார்.  வெண்முரசின் இசைக்கருவிகளுக்கே தனி ஆய்வு தேவை. படங்களுடன்  செவ்வியல்,  பண்ணியல் இசை  அறி வாண ர்கள்  இதை  முயல வேண்டும். 

தரிசனம்

நாகக்  கொலை வேள்வியைத் தடுத்து தட்சனைக் காக்கும்   ஆஸ்திகன் மூன்று குணங்களும் வாழ்விற்குத் தேவை  என்று நிறுவுகிறான் . அதை வியாசமுனி அனுமதித்து    அருள்கிறார். தந்தை வாக் கினாலும்  தேசியக் கடமையாலும்  மணத்துறவு கொண்ட பீஷ்மர் பாரதக் கதையின் சிக்கலின்  மைய முடிச்சாக அமைகிறார்.   முழுவதும் இச்சையை விட்டிருந்தால்  பிற முனிவர்களைப் போல   வனமே கி இருப்பார்.   ஆனால் அஸ்தினபுரியைக் காக்கவேண்டும் என்ற மெல்லிய சரடு அவரைக் கட்டி இருக்கிறது.

அடி மனத்தில் அவருக்கு ஆசை இருக்கிறதோ   என்ற அச்சம் அவருக்கும் உள்ளது. அம்பையுடன் அவர் புரியும் உரையாடல் இந்திய மனத்தால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடியது. 

ஆப்பிரிக்காவில் கிளம்பி அலை அலையாகப் புவியை நிறைத்துக் கொண்டு விரிந்த ஹோமோ  பேரினத்தின்   மத்திய ஆசியாவின் கங்கைச் சமவெளியில்  வந்து சேர்ந்த இந்தப் பிரிவினரில் , வேட் டையாடி வேளாண்மை ஆற்றி  துவக்க நிலை சமூகமாக பரிணாமம் அடைந்த  இந்தக் கூட்டம் காலத்தின் எந்தத் துளியில் “உள்ளது ஒன்றே” ‘நீயே அது” என்ற தாவலை  அடைந்தது என்பது ஒரு புதிர்  . சுவாமி விவேகானந்தர் இதை வியந்து பேசுகிறார்.  இச்சையைப்  பதங்கமாக்கி   பெண்ணுருவை அன்னையாக்கியது  இந்தியாவின்  இணையற்ற உளவியல் கண்டுபிடிப்பு  

அவமானம் அடைந்த அம்பை கொற்றவையாக கொதிக்கிறாள். பீஷ்மரின் உதிரம் வாங்காமல் அடங்காது இந்தப்  பிடாரி . இங்கே ஜெயமோகன் கொற்றவையை, இளங்கோவடிகளின்  கண்ணகியைக் காட்டுகிறார். பெயரில்லாது எரிந்தழிந்து போன பாரத தேசத்தின் வெயிலுகந்த, தீப்பாஞ்ச , சீ லைக்காரி , மா சாணி அம்மன்கள் வடிவில் அம்பை நெருப்பாகிறாள்

உடல் நமக்கு சொந்தமில்லை ; ஆன்மாவுக்கு சொதம் என்கிறாள் அம்பை.. பெண் என்பவள் வெறும் கருப்பை மட்டும்  தானா என்ற வினா இந்திய பெண்களின்   வினா. 

அழகியல் 

அம்பை தற்கொலை செய்யும் முடிவை எடுக்கும்போது ஆவலுடன் அவள் உள்ளத்தின் மூன்று அன்னையர்  பேசும் இடம் அற்புதமான து

மலரில்  தேன் நிறைக்கும்  , பெண் குழந்தைகள் கனவில் மலர் காட்டி சிரிக்க வைக்கும் சுவர்ணை ; 

அவள் சற்று அறியத் தொடங்கும் போது இசையில் துயரையும் கவிதையில் கனவையும்    நிறைக்கும்  சோபை ,

 அவளில் முதற் காதல் மலரும்போது  படைப்பின் இனிய கடனை ஆற்றும் விருஷடி    என்னும் தேவியர் அம்பையை பீஷ்மரை நோக்கி திரும்புகின்றனர். வெண்முரசின் தனிதத்துவத்தின் அதிசய இடம் இது.

அம்பையின் உணர்வு நிலையைச் சொல்லுமிடம்  :

அம்பை நிருதனின் படகில் பீஷ்மரை க் காண செல்கையில் அருகில் வீ ணை யை வைத்தால் அது தானாகவே இசைத்திருக்கும். விரல் பட்டால் கங்கை அதிரும் 

அம்பை படகில் செல்கையில் சூ ரியனுடன் கிழக்கு   முனையில் உதித்து  எழுகிறாள் 

 இரு தடைகள் 

கீதை , ஒரு செயலுக்கு மூன்று தடைகள் வரலாம் என்று பேசுகிறது. ஆதி பௌதிகம், ஆதி தைவிகம் மற்றும்  அத்யாத்மிகம் .  முறையே இயற்கையால், இறையால், தன்னால் வருவன. காசி அரசனின் கேள்விக்கு அமைச்சர்  தரும் பதிலில் வேள்விக்கு இரு தடைகள்  பற்றி உரைக்கிறார் . அத்யாத்மீகம் இதில் சேரவில்லை. காசி மன்னன்  தானே வருவித்துக் கொண்ட  தடை தானே இந்த வேள்வி முயற்சியே  என்று தோன்றுகிறது.

தமிழின் புதிய சொற்கள் 

இயல்பாக நாவிற்கு இசைந்து வரும் தமிழ் ச்  சொல்லிணைவுகளை உருவாக்குபவர்கள் சிந்தனையில் புதிய பாதைகளைத் துவங்குகிறார்கள்.

விசுவநாதன் – விசும்புக்கு அதிபன் 

விசாலாட்சி – அகல்விழி அன்னை 

உவமைகள் 

1அர்க்கியமிடக்  குவிந்த கரங்கள் போன்ற ….

2 பல்லக்கில் பிணம் இருப்பது போல என்னெஞ்சில்  நீயா இருந்தாய் 

3 கருப்பை எனும் நங் கூ ரம் 

4  சிதையில் இதயம் வேகும்  போது எழுந்தமரும் பிணம் போல (பீஷ்மர் மெல்ல அசைந்தார் )

5 அழு க்கு மீது குடியேறும்  மூதேவி என 

6 எய்யப் படும் அம்புக்குப் பின் அதிரும் நாண்  போல 

7 வெவ்வேறு சந்தஸ் களில்  இசைக்கும் பறவைகள் 

வடக்கு  தெற்கு ஒற்றுமை  

““ இந்தியா செக்கோஸ்லாவாகியாவைப் போல பல நாடுகளாக உடையும் ;  “

   “ பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன “ 

என்று இங்கு ஒரு அரசியல் தரப்பு உண்டு .

 எந்த நாடும் அப்படியே ஒரு தேசமாக புவியில் தோன்றவில்லை.  மனிதர்களின் ஒற்றுமையும் வாழ்க்கை முறைகளும் விழுமியங்களும் பரிணமித்து உருவாகின்றன தேசங்கள்.  பெரும் தலைவர்களும் இந்த நதியின் போக்கை அணைக்கட்டிடவோ   திசை  மாற்றவோ செய்தவர்கள் மட்டுமே.    எல்லா தரப்பினருக்கும் இடமிருக்கும் பண்பாடு சார்ந்த தேசிய  சிந்தனையில்  ஒரு தேசத்தின் அனைத்து உயிர்களும் பெரும் பரிணாமம் அடைந்து வந்திருக்கின்றன

 வரலாற்றில் பின் சென்று நீதியை நிலைநாட்டுபவன் கவியாசிரியன் . அவன் காலத்திற்கு மேலே இருந்து பார்க்கிறான் 

வெண்முரசு வட -தென் சமன்பாட்டை சரி செய்கிறது . சங்கரர்  தொடங்கி நாராயண குரு வரையிலான படிவ ர் ஞானத்தை பயன் படுத்திக் கொள்கிறது 

நாம் மறந்து விட்ட இந்தியாவின் கலாச்சார தேசியத்தை செயற்கையாக இல்லாமல் நினைவூட்டுகிறது 

அத்தககைய சில இடங்கள் 

1 வியாசர் குமரி முனையில் வழிபடுகிறரர் 

2 திருவிடத்தில் இருந்து அகத்தியரையே வரவழைக்கிறேன் (சத்தியவதி சொல்வது)

3 சோழம் , பாண்டியம் ,  கொங்கணம்  அரசர்கள் காசி மணத்தன்னேற்பில் கலந்து கொள்வது 

4 வேசரத்திலும்  அப்பால் திருவிடத்திலும் அம்பைக்கு ஆலயங்கள் 

5 கடலோர திராவிட நாடு சண்ட கர் ப்பர்  அதர்வ வேத அறிஞர் 

புனைவு      கொடுக்கும் கற்பனைச் சுதந்திரம் மட்டுமல்ல இக் கூற்றுக்கள்  .

வரலாறு  கனவுக்குள் புகுந்து எடு க்கப் பட வேண்டிய இடங்கள் சில உண்டு. எந்த அரசியல் நோக்கம் இல்லாமல் அதை உரிய செவிகள் இழுத்துக் கொள்ளும்.  இந்தியப் பெருநிலத்தில் எங்கோ நெடுந்தூரம் நடந்து    செல்லும்  பயணி இசைக்கும் பழம்பாடல்கள் இந்த தேசத்தைக் கட்டி வைத்திருக்கும் இழைகள் . முடியாது வளரும் இந்தச் சரடில் வெண்முரசு வலிமையான பொற்பட்டு நூலாடை . முதற்கனல் அதற்கு முதல் நூல்.

ஆர் ராகவேந்திரன் 

கோவை